Reading view

பூச்சிகளின் தேசம்

பூச்சி இனங்கள் குறித்துத் தெரியாத பல தகவல்களைச் சொல்லும் இந்நூலுக்குச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அதில் “இவ்வுலகில் அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சியினம் தான்.  ஒரு தோராயமான கணக்கில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுமார் 10 லட்சம் பூச்சிகள் இருக்கின்றன. பூச்சிகளைத் தோழமையோடு பார்க்கச் சொல்லித் தரும் ஒரு தனி நூலைப் ‘பூச்சிகளின் தேசம்’ என்ற தலைப்பில் தந்திருக்கிறார் கோவை சதாசிவம்.  தமிழின் பசுமை இலக்கியத்தில், இது ஒரு முதன்மை முயற்சியாகும்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

உலக வனப்பாதுகாப்பு ஆண்டையொட்டி மாணவிகள் சிறப்பு கானுலா செல்வது போலவும், பயண வழியில் உரையாடல் வழியே பூச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்வது போலவும் இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரையாக இல்லாமல் கேள்வி பதிலாகவும், உரையாடலாகவும் இந்நூல் அமைந்திருப்பதால் வாசிக்க எளிதாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. கானுலா குழுவினரோடு வேட்டை தடுப்புக் காவலராகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மான்பன் என்பவரும் இணைந்து கொள்கிறார். இடையிடையே பூச்சிகள் பற்றிய பழங்குடி மக்களின் அனுபவ அறிவை அவர் பகிர்ந்து கொள்வது சிறப்பு.

கரையான் பற்றிய கட்டுரையில், மலைவாழ் மக்களின் வீடுகட்டும் முறையைப் பற்றி இவர் விளக்குவது ஓர் எடுத்துக்காட்டு:-

“மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் கட்டும் வீடுகளில் மூங்கில் தப்பைகள் தான் சுவர்.  மூங்கில் தப்பைகளின் மீது கரையான் புற்றிலிருந்து எடுத்து வரும் மண்ணைத் தப்பைகள் மறைய பூசி விடுவார்கள். சின்ன சந்து கூட இருக்காது. ஆனால் காற்றோட்டமும் மித வெப்பமும் சமச் சீராக இருக்கும்..”

17ஆம் நூற்றாண்டில் டார்வினுக்கு முன்பாகவே பூச்சிகள் பற்றியறிய தென்னமெரிக்காவுக்குப் கப்பல் பயணம் மேற்கொண்ட ‘மரியா சிபெல்லா மேரியான்’(Maria Sibylla Merian) என்ற பெண்மணி தாம் ‘பூச்சியியலின் மூதாய்’ என்று கருதப்படுகிறார்.

கரையான் புற்று பற்றியும், கரையான்களின் வாழ்வியல் பற்றியும் மழைக்காலத்தில் கரையான் புற்றைச் சுற்றிக் காளான் முளைப்பதற்கான காரணம் பற்றியும் பல வியப்பான செய்திகள் இந்நூலில் உள்ளன.   கரையான்கள் காய்ந்த புற்களைத் துண்டுகளாக்கிப் புற்றிலுள்ள சுரங்கத்தில் அடுக்குமாம். அப்புற்கள் சில நாட்களில் பூஞ்சையடைந்து, கரையானின் விருப்ப உணவான காளானாய் மாறிவிடுமாம். இந்த நிகழ்வை ஆசிரியர் ‘பூஞ்சைத் தோட்டமாகவும், எறும்புகள் நேராக ஊர்ந்து போவதை உயிருள்ள வாக்கியமாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்.

கரையான் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தை நம்மிடையே புழங்கும் நாட்டுப்புறக்கதையோடு இணைத்துச் சொன்னது ரசிக்க வைக்கிறது. பணிக் கரையான்கள் மிதமான வெப்பம், மிதமான குளிர் நிலவும் சூழலைக் கண்டறிந்து தம் வாழ்விடங்களைத் தீர்மானிக்கும் என்பதும், 4000 ஆண்டுகளாக ஓரு கரையான் புற்று நீடித்து நிலைத்திருக்கிறது என்பதும் இயற்கையின் அதிசயங்கள்.    

மழை, வெள்ளம் வரப்போவதை எறும்புகள் முன்பே அறிந்து தற்காத்துக் கொள்ளும் என்பதும், எறும்புகள் மண்ணிலுள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற மணற்சத்துக்களைச் சிதைத்துப் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை என்பதும், உலகில் கிட்டத்தட்ட 22000 எறும்பு இனங்கள் இருக்கின்றன என்பதும் வியப்பான அறிவியல் உண்மைகள். “பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களின் எண்ணிக்கையை விடக் கரையான்களின், எறும்புகளின் எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகம்” என்கிறது ஓர் அறிவியல் உண்மை.  

நத்தை பற்றிய கட்டுரையில் நத்தைகள் உடல் பருமனுக்கேற்ப ஓடுகளைப் பெரிதாக்கி கொள்வதால் மேல் ஓட்டில் வளையங்கள் தோன்றுகின்றன; வெள்ளை மற்றும் மரப்பட்டை நிறத்தில் இருக்கும் ஓட்டின் மேல் வரிகள் நம் உள்ளங்கை ரேகை போல ஒவ்வொரு நத்தைக்கும் வேறுபடும் என்பவை பலருக்கும் தெரியாத செய்திகள்.

கண் கொத்திப்பாம்பு என்று சொல்லப்படும் பச்சைப் பாம்பு பற்றி மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் விளக்கத்தை ஓர் அத்தியாயம் பேசுகிறது. எல்லாப் பாம்புகளைப் போலவே பச்சைப் பாம்புக்கும் காதுகளில்லை என்கிறார் ஆசிரியர். மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவதாகப்  பாம்பாட்டிகள் காட்டும் பித்தலாட்ட வித்தைக்கும் வேட்டு வைத்துள்ளார். பாம்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு உதவும் விதமாக ‘ரோமுலஸ் விட்டேகர்’ எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ புத்தகத்தை ஆசிரியர் பரிந்துரை செய்துள்ளது சிறப்பு! 

தொட்டாச்சுருங்கி செடியை அடிப்படையாகக் கொண்டு எந்திர மனிதர்களின் தொடுதிறனை அதிகப்படுத்த மேலை நாடுகளில் நடக்கும் அறிவியல் ஆய்வு பற்றிய சிறு குறிப்பையும் ஆசிரியர் ஒரு கட்டுரையில் குறிப்பிடத் தவறவில்லை.

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் முதன் முதலாகப் பறந்த பூச்சியினங்களில் தும்பியும் ஒன்று. சுமார் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படிநிலை வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தும்பி என்ற வியத்தகு செய்திகளைத் தும்பி பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

“தும்பியின் தலைமுழுதும் அதன் கண்கள் பரவியுள்ளன; பறக்கும் போது பல திசைகளிலும் பார்வையைச் செலுத்த முடியும்; பூச்சி இனங்களில் தும்பிக்குத் தான் கூர்மையான பார்வை; அதன் இரண்டு பெரிய கண்ணுக்குள் 30000 சிறிய கண்கள் உள்ளன” என்ற அறிவியல் தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை.

‘அடர்வனமும் ஒளிரும் பூச்சிகளும்’ என்ற அத்தியாயத்தில் மின்மினியை ‘வன நட்சத்திரம்’ என்று ஆசிரியர் சிலாகித்துச் சொல்வது, அழகான பொருத்தமான உவமை! இப்பூச்சிகள் பற்றிப் பல தெரியாத செய்திகள்  இக்கட்டுரையில் உள்ளன. மின்மினிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் தன்மை கொண்டவை; மண்புழுவும் நத்தையும் வளர்ந்த மின்மினியின் விருப்ப உணவு; மின்மினி அரிவாள் போன்ற கொடுக்கால் குத்தி இரையை மயக்கமடையச் செய்து செரிமான நொதிகளைச் சேர்த்துக் கூழாக மாற்றி ஜூஸ் குடிப்பது போலக் குடிக்கும்; மின்மினி உடல் நச்சுத்தன்மை வாய்ந்தது போன்ற பல தகவல்கள் வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும், வியப்பாகவும் இருந்தன.

அது போல ‘உயிருடன் ஓர் வானவில்!’ என்ற பொருத்தமான தலைப்பில் அறிமுகம் செய்யப்படும் வண்ணத்துப்பூச்சி குறித்த அத்தியாயத்தில்    

“உதிர்ந்த இலை

கிளைக்குத் திரும்புகிறதோ

வண்ணத்துப்பூச்சி”

என்ற அருமையான ஜப்பானிய ஹைக்கூ கவிதையும் இடம்பெற்று, வாசிப்பை ரசிக்க வைக்கிறது.   

மருத்துவத் துறையில் மிக நுண்ணிய பகுதியில் போடும் தையலுக்கும் பேண்டேஜ் துணி தயாரிப்புக்கும் சிலந்தியின் நூலிழை பயன்படுத்தப்படுகின்றது; நவீன தொழில் நுட்பத்தில் சிலந்தியின் நூலிழையைக் கொண்டு செயற்கைத் தோல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது என்ற அறிவியல் செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக உள்ளன. தேனியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் சொன்னதை ஆசிரியர் தேனீக்கள் பற்றிய கட்டுரையில் கொடுத்திருக்கிறார்:-

“உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்காண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும்; செடி,கொடிகள் மறையும்; மனிதனும் மறைந்து விடுவான்.”

இன்னும் 86 விழுக்காடு உயிரினங்கள் உலகில் கண்டறியாமல் இருக்கின்றன என்கிறார்கள் உயிரியியலாளர்கள்.  இவைகளைக் கண்டறிந்து பெயரிட பல ஆண்டுகள் ஆகும்….அடர்ந்த காடுகள், ஆழ்கடல் போன்ற இடங்களில் என்னென்ன விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத ஒரு வியப்பூட்டும் ரகசியம்” என்கிறார் ஆசிரியர். அப்படியென்றால் வெறும் 14% உயிரினம் மட்டுமே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் உண்மை!

வண்ணத்துப்பூச்சி முதல் கரப்பான் பூச்சி வரை பூச்சிகளைப் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகள் இந்நூலில் உள்ளன. உயிரியல் மாணவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்க்கும், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்க்கும் பெரிதும் பயன்படும் நூல்.

வகைசூழலியல் கட்டுரைகள்
ஆசிரியர்கோவை சதாசிவம்
வெளியீடு:-குறிஞ்சி பதிப்பகம், திருப்பூர். +91 99650 75221
விலை:-ரூ 120/-.

The post பூச்சிகளின் தேசம் first appeared on சுட்டி உலகம்.

  •  

புதிய வானம்! புதிய பறவைகள்!

 

புதிய வானம்! புதிய பறவைகள்!

உதயசங்கர்



நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் ஒரு புதிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது. சிறார் இலக்கியத்தின் வகைமைகளான பெரியவர்கள் சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களே சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதுகிற இலக்கியம் என்று பொதுவாகப் பிரிக்கலாம். அதில் குழந்தைகளே குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியிருக்கும் மிகச் சிறப்பான காலமிது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. குழந்தைகள் ஒரு புதிய வானத்தை வரைந்து புதிய சிறகுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் உச்சி முகர்ந்து நம்முடைய குழந்தைகளைப் பாராட்ட வேண்டும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை குழந்தைகளுக்கென்று முகிழ் என்ற அமைப்பை உருவாக்கி அதில் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகளே பங்கு பெறும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகள் இப்போது ஜில் ஜங் ஜக் என்ற கதைத்தொகுப்புடன் தங்கள் சிறகுகளை விரித்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் கற்பனைக்கு நம்முடைய நடைமுறை வாழ்வின் தர்க்கம் கிடையாது. கவித்துவத்தர்க்கம் மட்டுமே உண்டு. கவித்துவத் தர்க்கமென்றால் மண்ணும் மரமும் டி வி. யும் பிரிட்ஜும் நாயும் நரியும் குருவியும் கோழியும் பேசும். பாடும். ஆடும். ஓடும். காரணகாரியம் கிடையாது. கதை எப்போது தொடங்கி எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் முடியலாம்.

 சுயமான கருத்துகளோ சிந்தனைகளோ உருவாகாத குழந்தைப்பருவத்தில் அவர்கள் எப்படி கதை எழுதுவார்கள்? பெரியவர்கள் எழுதுவதைப் போல ஒரு கருத்தை வலியுறுத்தியா? அறநெறியைச் சொல்லியா? நீதி நன்னெறிக்கதைகளையா? அவர்கள் வாசித்ததை, கண்டதை, கேட்டதை, கற்பனையை, அந்தக் கணநேரத்தில் தோன்றுவதைக் கதையாக்குகிறார்கள். கதை என்று கூட அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படி வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி தான் அவர்களுடைய கலையின் சாராம்சம். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் கதைகளுக்குள் கருத்தைத் திணிக்கவோ தேடவோ கூடாது. ஆனால் நுட்பமாக வாசிப்பவர்களுக்கு குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் யதார்த்த உலகத்தைத் தங்கள் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணர முடியும்.

அப்படித்தான் ” ஜில் ஜங் ஜக் “ தொகுப்பிலுள்ள 22 கதைகளிலும் குழந்தைகலின் தங்களுடைய படைப்பூக்கத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் சுதந்திரமான அவர்களுடைய புனைவுத்திறனின் தெறிப்புகளாக மின்னுகின்றன.

இளநிலாவின் மரப்பாச்சி கதையில் பகையை மன்னிக்கச் சொல்லும் மரப்பாச்சிப்பொம்மை வருகிறது. பட்டாசு வெடிக்காத தீபாவளியைக் கொண்டாடச் சொல்கிறார் தன்னுடைய கதையான ராமு கொண்டாடிய தீபாவளி கதையில் தீரன். ஜடை பறக்குமா? பறக்குமென்கிறார் சுபவர்ஷனி. அதே போல சிவப்புக்கரடி பொம்மை பேசும்போது என்ன நடக்கிறதென்றும் சொல்கிறார் சுபவர்ஷனி.

குட்டைநிலா, பந்தாடு, பந்தாடு. சமையலறையில் மாயப்பெட்டி, தொட்டால் சிவக்கும் என்று நான்கு கதைகளையும் நான்குவிதமாக எழுதிப்பார்த்திருக்கிறார் பிரணவ். நிவேதிதாவின் நண்பர்களான சிட்டுக்குருவியும் எழிலும் கதை நட்பைச் சொல்கிறது. அபியும் புலியும் கதையில் அபி புலியிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்றும் ஒரு மரம் ஒரு நபர் கதையில் மரத்தின் முக்கியத்துவதை எளிய நிகழ்வின் வழியே சொல்கிறார் அக்‌ஷலீணா.

பூங்காவில் நிலா என்றவுடன் நாம் நினைப்பதற்கு மாறாக யார் அந்த நிலா என்று சொல்கிறார் ரித்விக். அத்துடன் உண்டிகோல் சிறுவன் கதையில் எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட வேண்டுமென்றும் சொல்கிறார் ரித்விக். விங்குகளைக் காப்பாற்றும் சகோதரர்களைப் பற்றி குணதீப் எழுதுகிறார். ஜில் ஜங் ஜக் கதையில் மூன்று நண்பர்களைப்பற்றியும் எதையும் செய்யாமல் சாப்பிடுவதற்கு ஆசைப்படும் நண்பனைப் பற்றியும் சொல்கிறார் கீர்த்தனா. வானவில்லின் கதையில் எப்படி வானவில்லுக்கு இத்தனை நிறங்கள் ஒன்றாய் சேர்ந்தன என்று சொல்லும் கீர்த்தனா. டியானும் கியானும் கதையில் அவர்களுடைய நண்பனான பூபாவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடினார்கள் என்றும் எழுதியிருக்கிறார். யானைக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கதையில் நண்பர்கள் சேர்ந்து எப்படி யானைக்குச் சர்ப்ரைஸ் கொடுத்தார்களென்றும் உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும் கதையில் காய்கறிகள் மட்டுமே வாழும் உலகத்தைப் பற்ரியும் எழுதியிருக்கிறார் கீர்த்தனா. சாய் பாக்கியவாவின் சிறு காட்டு நண்பர்கள் கதையில், யானையின் அட்டகாசத்தை சிறுவிலங்குகள் எப்படி அடக்குகின்றன என்று எழுதியிருக்கிறார். ரோஸ் டீ கதையில் அனு எப்படி ரோஸ் டீ போட்டாள் என்றும் டீக்கடையே வைத்து நடத்துமளவுக்கு எப்படி மாற்றம் நிகழ்ந்ததென்றும் சொல்கிறார்.

எல்லாக்கதைகளிலும் உள்ள மிக முக்கியமான அம்சமாகக் கருதுவது, குழந்தைமையின் கற்பனை சிறகுகள் விரித்து ஒரு புதிய இதுவரை யாரும் யோசித்திராத ஒரு உலகத்தை நமக்குக் காட்டுகின்றன. அந்த உலகத்தைக் கண்டு களிப்பதும் முக்கியம். அதை விட முக்கியம் குழந்தைகளின் படைப்பூக்கத்தின் உயிர்த்துடிப்புகளை உணர்வது என்று நினைக்கிறேன். இந்தக் கதைகள் குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் நம்முடைய அறிவை இன்னும் விரிவடையச் செய்து மேலும் உயர்வாக்கும் என்று நம்புகிறேன்.

. கதைகளை எழுதியுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

கதைகளுக்கு மிகச்சிறப்பாகப் படங்களை வரைந்திருக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்!

புதிய வானத்தில் புதிய பறவைகளின் பயணம் தொடங்கிவிட்டது. இன்னும் இன்னும் உயரத்திற்குச் செல்லட்டும்.!

( ஜில் ஜங் ஜக் நூலுக்கு எழுதிய முன்னுரை )


 

  •  

வண்ண வண்ணக்கதைகள் சிறகடிக்கும் வானம்.

 

வண்ண வண்ணக்கதைகள் சிறகடிக்கும் வானம்.

உதயசங்கர்



சிறார் இலக்கியம் இலக்கிய வானில் சிறகுகள் விரித்து பறக்கத் தொடங்கியிருக்கிற காலமிது. இதுவரை சொல்லப்பட கதைகளையே மறுபிரதியோ, மலிவான பிரதியோ எடுத்து இதுதான் சிறார் இலக்கியம் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்த காலத்தில் புதிய காற்றென பல எழுத்தாளர்கள் புதிய கதைகளை எழுத வந்தார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளுக்குச் சொந்தக்காரர் ஞா.கலையரசி. தன்னுடைய தனித்துவமான கதைகளால் சிறார்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.

அவருடைய சூரியனைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதை சமகாலச் சூழலியலைப் பேசுகின்றன. பழங்காலக் கதையை சமகாலத்துக்கேற்ப மறுவாசிப்பு செய்து அவசியமான வழிகாட்டுதலைச் செய்கின்றன. எது அழகு? எது உயர்வு? என்பதைக் குறித்து விவாதிக்கின்றன. உருவத்தில் சிறியதாயினும் செய்யும் காரியத்தில் பெரியதாவதைக் குறித்துப் பேசுகின்றன. தனக்குக் கிடைத்த சிறப்பை மற்றவர்களுக்கும் பகிர்வதைப் பற்றிப் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதீதபுனைவையும் சமகால அறிவியலையும்  இணைத்துப் பேசுகின்றன. கானுயிர் நலன் குறித்து, வலசை வரும் பறவைகளின் சரணாலயம் அழிவதைக் குறித்துப் பேசுகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் வானவில்லின் வண்ணங்களைப் போல குழந்தைகளின் மனதில் பல உணர்வுகளைத் தூண்டும். அவை ஆனந்தம் தரும். அறிவூட்டும். ஆற்றுப்படுத்தும். நம்பிக்கையளிக்கும். குதூகலப்படுத்தும்.

மனிதகுலத்திற்கு குழந்தைகளின் மகிழ்ச்சியைத் தவிர வேறு என்ன வேண்டும்?

இந்தக் கதைகள் குழந்தைகளிடம் மகிழ்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துமென்று சொல்லி முடிக்கலாம்.

( சூரியனைத்தேடி சிறார் நூலுக்கு எழுதிய முன்னுரை )

  •  

இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் ராஜா ராணி கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்தானே? ஆம் என்றால் ஒரு ஹை ஃபைவ் கொடுங்கள்.  என்னது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் வீர தீர சாகசங்கள் நிறைந்த ராஜா கதையைவிட 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் இம்சை அரசரனின் கதைதான் உங்களுக்கும் அதிகம் பிடிக்குமா? அப்படி என்றால் இன்னொரு ஹை ஃபைவ் கொடுங்கள். மாயக் கண்ணாடி, அண்டாமழை, சூரியனின் கோபம், சுண்டெலியின் சிரிப்பு ஆகிய நூல்களின் வரிசையில் இதோ இன்னொரு புத்தகத்தைத் தந்துள்ளார் நமது உதயசங்கர் தாத்தா (எழுத்தாளர் உதயசங்கர்). தினம் […]
  •  

நெருங்கிப் பேசும் எடையற்ற சொற்கள்


நாம் சொல்ல நினைப்பதையே சொற்கள் பொதியெனச் சுமக்கின்றன. சமயங்களில் சொல்லாதவையுங்கூட கேட்பவர் அல்லது வாசிப்பவர் உபயத்தில் இதில் ஏறிக் கொள்கிறதும் நடப்பதுதான். சொல்வதைச் சொல்ல சொல்பவர் தேரும் சொற்கள் எப்படிப்பட்டவை என்பதில் நாம் கவனங்கொள்கையில் அது அந்த எழுத்தாளுமை குறித்தும் நிறையவே சொல்லத் துவங்குகிறது. புத்தம் வீடு புதினத்தில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அவர்கள் கையாண்டிருக்கும் எழுத்தை அப்படியாக அணுகுவது புதினத்தின் வாசிப்புச்சுவையை இன்னும் கூட்டுகிறது. 

வாழ்ந்து கெட்ட ‘பெரிய’ குடும்பங்களின் கதையை – சரிவின் விளிம்பிலிருந்து மெதுவாக புதைமணலில் இறங்கிக் கொண்டிருக்கும் அதன் சித்திரங்களை – நாம் பலவிதங்களில் வாசித்திருக்கலாம். மிகை சோகமும், கடந்த காலம் குறித்த நினைவுகளில் மட்டுமே படிந்திருக்கும், உருகியழிந்துவிட்ட, மீண்டும் உயிர்ப்பிக்கவியலாத அவர்களின் கனவுகளும் பகட்டுகளும் நம் முன்னால் வரிசைகட்டும். அதிகாரத்தின் கொம்புத்தேனை சுவைத்துப் பழகிய அக்குடும்பங்களின் ஆண்களினுடைய நாவுகள் இன்னும் அதனை அசைபோடுகிற, அதற்கு ஏங்கியே காலம் கழிக்கிற கதைகளும் அதனுள் நிறைந்திருக்கும். 

அதிகாரச் சண்டை பெரும்பான்மையாக ஆணுலகிற்குள் இருக்கிற ஒரு சிறுபான்மை விகிதத்தினரின் வஸ்து. அதனைக் கைக்கொள்வதற்கான பிரயத்தனங்களிலும், கிடைத்ததைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பெருமுயற்சிகளிலுமே அவர்களுடைய வாழ்காலத்தின் பெரும்பகுதி கரைந்துவிடுகிறது. காலவோட்டத்தில் நீர்த்துப் போய்விட்ட தமது அதிகாரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை என்று தத்தமது ஆணவங்களை நம்பச் செய்திடும் பொருட்டு அதனை தம் வீட்டுப் பெண்களிடமே பிரயோகித்து, அவர்களை உழற்றியெடுக்கிற ஒரு கோட்டுச் சித்திரம் இக்கதைக்குள் இருக்கிறது. 

பனைவிளை கிராமத்தின் புத்தம் வீட்டின் தலைவராக இருக்கிற கண்ணப்பச்சி, முடிந்த தலைமுறையின் மீதம். புத்தம் வீட்டின் அடிச்சுக் கூட்டில்தான் அவரது அரசவை. ஒரு காலத்தில் ஊர் கோவிலின் டீக்கனராக இருந்தவரின் அதிகார எல்லை நாளடைவில் அவ்வீட்டோடு சுருங்கிப் போகிறது. இரண்டு புதல்வர்களின் குடும்பசகிதமாக அங்கு வாழும் கூட்டுக் குடும்பமே அவரது பிரஜைகள். மூத்தவர் பொன்னுமுத்து கள்ளுக்கடையில் குடித்தனம் நடத்துவது வீட்டின் துருவேறி ‘அழிந்து கொண்டிருக்கிற’ பெருமையின் குறியீடு போல துருத்திக் கொண்டிருக்க அவரது மகள் லிஸியை மையமிட்டே கதைப்பின்னல் இருக்கிறது. முன்னோரின் சொத்துகளில் குளிர்காயும் அவர்களது வீட்டின் ஒரே உத்தியோகஸ்த புத்திரன் இளையபிள்ளை பொன்னுத்தம்பி. அவரது மகள் லில்லியுடன் சேர்த்து அவ்வீட்டில் லிஸியின் பாட்டி கண்ணம்மை, லிசியின் தாயார், அவளது சித்தி என ஐந்து பெண்கள். 

நாவலின் மையச்சரடு முன்சொன்னது போல மதிப்புமிக்க ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியையே தீட்டிச் செல்கிறது எனினும், அதனாழத்தில் ஒரு பெண் பார்வை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிகழுகிற அத்தனையையும் அது தனது கண்கள் வழியே பார்த்து மிகச் சிக்கனமான மொழியில் அதனை விரித்துக் காட்டுகிறது.  

உலகையையே ஒரு விளையாட்டுப் பொருளென கையாண்ட ஒரு சிறுமிக்கு, பூப்பெய்திய பின்னர் தலைகீழாகும் வாழ்க்கையில் கசப்பின் முதல் மிடறை அருந்துகையில் எப்படி இருக்குமவளுக்கு என்பதாகட்டும், சடுதியில் அவளைச் சூழ்ந்து கொள்கிற கடைபிடிக்க வேண்டியவைகள் அடங்கிய பெரும்பட்டியலை அவள் எதிர்கொள்ள நேர்கையில் அவளுள் எழுகிற குழப்பங்களாகட்டும், படிப்போ பள்ளிக்கூடமோ கனவத்தனையும் துடைத்தெறிந்துவிட்டு, அவளின் கரங்களுக்குக் கைமாற்றப்படும் குலப்பெருமை காக்கும் பொறுப்பு தருகிற அயற்சியாகட்டும், அத்தனையும் மிகச் சிக்கனமான மொழியிலேயே வெளிப்படுகிறது. எந்த இடத்திலும் எச்சொல்லும் எரிவதில்லை; ஒரு மெல்லிய பெருமூச்சோடு அயர்ந்து உதிர்கிறது. 

“…கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப்பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்துவிடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!” [பக்:34]

“… அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சக்கூடத்தகாது…” எனச்சொல்லிச் செல்கிற எழுத்து தொடர்ந்து “அது அவள் விலையைக் குறைப்பதாகும்…” [ப: 35] என நமுட்டுச் சிரிப்பும் சிரிக்கிறது. இப்படியான சிறிய விசயங்களுக்குள் ஆசிரியர் நுட்பாக பகடியை வைக்கிறார். 

எல்லா அத்தியாயங்களும் தனித்தலைப்புகளிடப்பட்டுள்ளன. மேற்சொன்ன யாவும் வருகிற ஐந்தாவது அத்தியாயத்தின் பெயர் சிறைவாசம். வெளியேற வழியற்ற ஒரு சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட கதாபாத்திரங்கள் பகடியின் நிழலில் ஒதுங்குகின்றன. ஒரு வகையில் பார்த்தால் விரக்தியின் உச்சிக்கு அப்பாலிருக்கும் மறுபக்கத்தின் சரிவு தான் அப்பகடி.

பொதுவாக கதை சமைத்தலின் இலக்கணங்களில் உச்ச தருணங்களை ஒத்த திருப்பங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கதையோட்டத்தின் சுழிப்பு மாறும் போதெல்லாம் எழுத்தின் வன்மையும் அதிகரிப்பது வழமையான எழுத்து முறைமை. ஆனால் ஹெப்சிபாவின் நடை நாடகியமான தருணங்களைக் கூட அலைகள் அடித்தெழாது அமைதிகாக்கிற நீர்ப்பரப்பின் குணம் கொள்கிறது.  புத்தம்வீட்டின் பனைகளில் ஏற வருகிற பனையேறியின் மகன் தங்கராசு துணிந்து லிஸியின் மீதான தனது காதலைத் தெரிவிக்கையில், அதனை உள்ளூற விரும்பி மனந்துள்ளும் லிஸியின் எதிர்வினைகள் அவிழும் தருணங்களில், ஒரு கட்டத்தில் இதனை அறிந்து கொள்ளும் சித்தப்பாவின் மகள் லில்லியின் சாடல் லிஸியைத் துளைக்கும் தருணமென எதுவும் – ஏன் கதையோட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக நிகழுகிற ஒரு கொலையும் கூட – ஆர்ப்பாட்டமற்ற மிகை மொழி துறந்த எளிமையோடேதான் மொழிப்படுகிறது.

 காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்த இப்பதிப்பிற்கு (மூன்றாம் பதிப்பு, 2014) அம்பை அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியுள்ள முன்னுரையில் சுட்டியிருப்பதைப் போல இதனை ஒரு பனையேறிகளின் வாழ்வியல் குறித்த புதினம் என்றோ, இன்னுமொரு காதல் கதை மட்டுமென்றோ சுருக்கிவிட இயலாது. மாறாக ஹெப்சிபாவின் எழுத்தாழம், அதிகார ஆண்களின் புடைசூழ பெண்ணடிமைத்தனத்தின் நுண்ணிய வலைப்பின்னலுக்குள் இருந்து சன்னமான முணங்கலாய் வெளிப்படும் பெண் குரல்கள் பேசுகிற மிகக் குறைவான, மிக எளிய சொற்களின் வழியாகவே நயமாய் நமக்கு அவர்தம் வலியைக் கடத்திவிடுகிறது. ஒரு வாசகராய், படைப்பை வாசித்து முடித்து அசைபோடுகையில், ஏதோ ஒரு வகையில், அந்த எளிமைதான் நம்மை மிகவும் தொந்தரவு செய்கிறது. வெளியாகி அறுபது ஆண்டுகளாகியும், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திப் போகிற ஆக்கமாகவே புத்தம் வீடு புதினத்தின் கதை இருக்கிறது. அதன் கூறுமுறையும் புத்திளமையுடன் மிளிர்கிறது. 


நூல் தகவல்:

நூல் : புத்தம் வீடு

வகை : நாவல்

ஆசிரியர் : ஹெப்ஸிபா ஜேசுதாசன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு:  2014

பக்கங்கள் : 160

விலை:  ₹  200

  

The post நெருங்கிப் பேசும் எடையற்ற சொற்கள் appeared first on Vimarsanam Web.

  •  

இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை


நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

The post இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

  •  

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்


பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

  •  

இடமும் இருப்பிடமும்

Pa Raghavan

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

இன்னொரு கனவு – ஓர் ஆங்கிலப் பதிப்பகம்

Manasa Publications Website

சில நாட்களுக்கு முன் சைதன்யாவுடன் வழக்கமான உணவுமேஜை இலக்கிய விவாதம். சைதன்யாவுக்கு ஒரு பிரியமான கொள்கை – நம்பிக்கை உண்டு. Pet theory என்று சொல்லப்படுவன இளம் அறிவுஜீவிகளின் ஊக்கவிசைகளும்கூட.

’ஐரோப்பிய இலக்கியத்தில் 18 -19 ஆம் நூற்றாண்டின் பெண் இலக்கிய மேதைகள் பலர் அன்றைய ஆண்நோக்கு கொண்ட விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டு, பட்டியல்களில் தவிர்க்கப்பட்டு, காலப்போக்கில் மறைந்தனர்’ என்பது சைதன்யாவின் தரப்பு.

இந்த நிராகரிப்பு ஒரு சிக்கலான முறையில் நிகழ்கிறது. பெண்களின் சிறப்பியல்பு என ஒன்று ஆண் அறிவுஜீவிகளால் வகுக்கப்படுகிறது. அது வெளிப்படும் படைப்புகளை எழுதிய பெண்கள் மட்டும் கொண்டாடப்படுகிறார்கள். எஞ்சியோர் வெவ்வேறு முத்திரைகள் குத்தப்பட்டு ’பரிவுடன்’ நிராகரிக்கப்படுகிறார்கள்.

அந்த எதிர்பார்ப்பு காலத்துக்கேற்ப மாறுபடுகிறது. நூறாண்டுகளுக்கு முன்புவரை பெண்களின் எழுத்தில்  ‘கள்ளமற்ற இளமை’யின் வெளிப்பாடு இருந்தால் அது கலை என கொண்டாடப்பட்டது. அதன்பின் ’பெண்ணியச் சீற்றம்’ இருந்தால் பாராட்டப்பட்டது. இன்று ‘பெண்களின் தனி உலகம்’ எழுதப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மானுடம் தழுவிய நோக்கை முன்வைத்த பெண் படைப்பாளிகள், தத்துவப் பார்வையும், கவித்துவமும், மெய்யியல் தரிசனமும் கொண்ட பெண் எழுத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. பெண் படைப்பாளிகள் முன்வைக்கும் இலட்சியவாதம் பலசமயம் மிகையானதும் பெண்களுக்கே உரிய பரிவு என்னும் பலவீனம் கொண்டதுமான பார்வையாக கருதப்படுகின்றது. பெண்கள் உருவாக்கும் உணர்ச்சிகரம் மெல்லுணர்ச்சியாக மதிப்பிடப்படுகிறது.

நான் மதிக்கும் சில பெண் படைப்பாளிகள் உண்டு. மேரி கொரெல்லி, ஃபானி பர்னி, ஜார்ஜ் எலியட், இசக் டெனிஸன், எடித் வார்ட்டன். அனேகமாக அவர்களைப் பற்றி தமிழில் நான் மட்டுமே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். இங்குள்ள பல பெண் அறிவுஜீவிகளுக்கு அவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன்.உலக அளவிலேயே கூட அவர்களை மதித்து எழுதிய நவீன விமர்சகர்கள் மிகமிகக் குறைவு. அண்மையில் அமெரிக்க இலக்கியச் சூழலில் செயல்படுபவர்களிடம் பேசும்போது அவர்களும் அப்பெயர்களில் பலவற்றை அறிந்ததே இல்லை என்பதையே காண்கிறேன்.

ஆனால் சைதன்யா தொடர்ச்சியாக முன்வைத்துவரும் பெண் படைப்பாளிகள் மற்றும் தத்துவஞானிகளின் பட்டியலில் பலரும் நான் கேள்விகூடப்படாதவர்கள். நீலி இதழில்  பெண்படைப்பாளிகள் பற்றி சைதன்யா எழுதிவரும் தொடரில் உள்ள பல ஆசிரியர்களில் பெயர்கள் தமிழில் ஒருமுறைகூட எழுதப்பட்டவையோ பேசப்பட்டவையோ அல்ல . ( நீலி இணைய இதழ்)

சைதன்யா பேச்சின் போக்கில் தமிழிலும் தென்னிந்திய மொழிகளிலுமுள்ள பெண்களின் எழுத்துக்களை இந்திய அளவில் அறிமுகம் செய்யும்பொருட்டு ஓர் ஆங்கிலப்பதிப்பகம் தொடங்கும் எண்ணத்தை சொன்னாள். பெண்களின் எழுத்துக்களை முன்வைப்பது முதன்மை நோக்கம். பெண்களைப் பற்றிய, பெண்கள் சார்பான நூல்கள் அடுத்தபடியாக. தொடர்ந்து விரிவான அளவுகோலுடன் பண்பாடு, கலை, இலக்கிய நூல்கள்.

சைதன்யாவுடன் அவளுடைய தோழி கிருபாலட்சுமியும் இணைந்துகொண்டார். ஓரளவு முதலீட்டுடன் ஒரு தீவிரமான பெரிய பதிப்பகம்தான். பதிப்பகத்துக்கு கிருபாலட்சுமியின் மகளும் 9 மாதம் அகவை கொண்டவருமான மானஸாவின் பெயர் சூட்டப்பட்டது.

மானஸாதேவி வெண்முரசின் தொடக்கத்தில் வரும் அன்னை. நாகர்களின் அன்னை தெய்வம், இந்தியத் தொன்மத்திலுள்ள பேரன்னைகளில் ஒருவர். அரவரசியின் பெயர் பதிவு செய்யப்பட்டு இணையப்பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. வெளிவரவிருக்கும் நூல்களுக்கான பணிகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக நிகழ்கின்றன. சென்னையை மையமாக்கி செயல்படவிருக்கும் இந்த ஆங்கிலப்பதிப்பகத்திற்கு அங்கே ஓர் அலுவலகம் மட்டும் இன்னும் அமையவில்லை – இடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் அப்பார்ட்மெண்ட் தேவையாகிறது.

மானஸா பதிப்பகம் சார்பில் சைதன்யாவும் கிருபாவும் பெங்களூர், கோழிக்கோடு இலக்கியவிழாக்களில் அழைப்புபெற்று பங்கெடுத்து விரிவான அறிமுகவலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் நூல்களை கொண்டுசென்று சேர்க்க அவை அவசியமானவை. அவர்களின் இணையப்பக்கத்திலேயே தொடர்ச்சியான இலக்கிய கருத்துருவாக்கமும் நிகழுமென்று தெரிகிறது. (Blog)

ஆங்கிலத்தில் எழுதப்படும் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களும் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர்.

மானஸா பதிப்பகம் சார்பில் நாவல்போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பெண்களால் எழுதப்படும் நாவல்களுக்காக. ஏதேனும் கல்விநிறுவனங்களில் கல்விபயில்பவர்களுக்கான போட்டி ஒன்று. பொதுவாக எழுதும் பெண்களுக்காக இன்னொருபோட்டி. (Manasa Lit Prize)

வழக்கம்போல நம் நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்குமென நம்புகிறேன். (தொடர்புக்கு [email protected])

எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா
ஹன்னா அரென்ட் – சைதன்யா
வேர்கள் – சைதன்யா
அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா
  •