Reading view
தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)
பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)
ஐஎம்எஃப்-இல் வாக்களிக்கும் அதிகாரம் அதிகமிருப்பது யாருக்கு? ஏன்? எப்படி?
புல்டோசர் இடிப்புகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? (கட்டுரை – 7)
முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள்
எரியும் வீடுகள்
காஷ்மீர் மக்களின் வீடுகளை இடித்துத்தள்ளுவது யாருக்குத் தண்டனை?
வாடகை வீட்டையும் விட்டுவைக்காத புல்டோசர் இடிப்பாளர்கள் (கட்டுரை – 6)
வெளிவரும் ரகசியங்கள்: கென்னடியைக் கொன்றது யார்?
குடும்பத்தினர் வீட்டினுள் இருக்கையிலேயே முகமது பிலாலின் வீடு இடிக்கப்பட்டது (கட்டுரை – 5)
குக்ரைலும் சட்டப்பூர்வ புல்டோசர் இடிப்புகளும் (கட்டுரை – 4)
தேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.
ஊழலற்ற தேசிய அரசுகள் – உபயம் உலக முதலாண்மை நிறுவனங்கள்.
”அரசு என்ன செய்தது என்று கேட்காதீர்கள், அரசு உங்களுக்கு என்ன செய்தது என்று கேளுங்கள்.” இது மக்களை ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு அழைக்கும் ஒரு சரியான பரஸ்பர இடையீட்டிற்கான ஒருவகை தந்திரமான சூத்திரம், எல்லா பிரச்சனைகளையும் இறுதியாக பெறுபவருக்கு மாற்றிவிடும் ஒன்று. ஒருவரது சொந்த விதியை மறுஒதுக்கீடு செய்வதற்கான கருத்தியல் பற்றிய நையாண்டியே இது.” - [1]ழான் போத்ரியார்
மீண்டும் இங்கு, திரும்பவருகிறது நவீனத்துவத்தின் துயரமான கோட்பாட்டுச்சொல்லின் எதிர்பார்ப்பு – அந்த கோட்பாட்டுச்சொல் வளர்ச்சி மற்றும் நலவாழ்வு. ஆதிக்கம் வகிக்கும் தாரளவாத-சந்தைப் பொருளாதாரத்தின் பார்வையில் நுகர்வை எதிர்ப்பது ஒரு திருத்தல்வாதம், ஒரு சமூகரீதியான ராஜதுரோகம். ஒரு புதிய வர்க்கப்போராட்டம் துவங்கியுள்ளது. (ஆட்டு மந்தை புல் வேண்டாம் என்றால், எப்படி ஒருவன் தனக்கான வெண்ணையைப் பெறமுடியும்?) – [2]ழான் போத்ரியார்.
சொற்பாடு-1: ”நாயை கொல்வது என்றால்கூட நாங்கள் சட்டப்படித்தான கொல்வோம்” என்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு கோட்பாட்டு வாக்கியம் ஒன்று உண்டு. ஏனென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற 17-ஆம்நூற்றாண்டு ஜனநாயக வாதத்தின் அடிப்படையில் உருவான பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகை தனது காலனிகளாக பிடித்து ஓர் உலகாக மாற்றியபோது முன்வைத்து இயங்கிய ஒரு சொற்பாடு இது. இதனை அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்றால், ஒரு நாயை கொல்ல முடிவெடுத்தால் முதலில் அந்த நாயை எல்லோரையும் தாறுமாறா கடிக்கும்படி தூண்டுவது. அதன் பின் அந்த நாய் சமூகத்திற்கு கேடானது என்ற கருத்தை உருவாக்குவது. அந்த நாய் பற்றிய பல புகார்களையும், ஆய்வுறிக்கைகளையும் உருவாக்கும்படி சமூகத்தின் பொதுமனநிலையை கட்டமைப்பது. சமூகமனசாட்சியின் முன் அந்த நாயை குற்றவாளியாக உருவாக்குவது. இறுதியாக அந்த நாய்க்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ஒரு மருத்துவ அறிக்கை தயாரித்தளிப்பது. சட்டரீதியான வாதாடல்கள் மூலம் அந்த நாயை கொல்ல அனுமதி பெற்று பிறகு அந்த நாயை கொல்வது. இதுதான் சட்டரீதியானதாக சொல்லிக் கொள்ளும் ஒரு அரசின் சமூக நடவடிக்கை. சிவில் சமூகம் என்று சொல்லக்கூடிய குடியாண்மை சமூகத்தின் மனசாட்சிகள் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஊடகங்கள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள் போன்றவர்களின் பங்களிப்பு எப்படி நாயை குற்றவாளியாக்குகிறது என்பதும், அப்படி மாற்றுவதற்கான பின்னணியில் அரசு என்கிற பெரும் எந்திரத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதும் இதில் கவனிக்கப்படுவதில்லை.
சொற்பாடு-2: ”நாடு நமக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.” என்ற கென்னடியின் பிரபலமான வாசகம். இந்த வாசகம் 1972-ல் தமிழகத்தின் ”புரட்சித் தலைவர்” எம்ஜியாரின் ”நான் ஏன் பிறந்தேன்” என்ற படத்தில் புலமைபித்தன் அவர்களால் பாடலாக எழுதப்பெற்று டி.எம்.எஸ். குரலில் பிரபலமான பாடல். ”நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு, நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு. நான் ஏன் பிறந்தேன் இந்த நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்று வாழும்வரையில் கேட்டிடு என் தோழா, உடனே செயல்படு என் தோழா” அதே ஆண்டு உடனடியாக செயல்பட்டு எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்து தனது பாடலுக்கு ஏற்ப தமிழகத்தை தொடர்ந்து ஆச்சி செய்து பதிலாக ஜெயலலிதா என்கிற முதல்வரை தந்துவிட்டு போய் உள்ளார். நாடு அவருக்கு தந்தது முதல்வர் பதவி. நாட்டுக்கு அவர் தந்திருப்பது வருங்கால பிரதமபதவி(?). இதன் பின்னணி அரசியல் இங்கு முக்கியமல்ல. அதன் பின்னுள்ள வலைப்பின்னல்பற்றி விரிவாக பேசப்பட வேண்டி உள்ளது. தற்போது அது நமது நோக்கமும் அல்ல. நமது நோக்கம் மேற்கண்ட அமேரிக்க ஏகாதிபத்திய உருவாக்கத்தின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரான ஜான் எப். கென்னடி கூறிய வாசகத்தின் உந்துதலாக எம்ஜியாருக்கு இப்பாடல் இயற்றப்பட்டுதும் அது எம்ஜியாரின் அரசியலுக்கு ஒரு முன்னறிவிப்பாக அமைந்ததுமே முக்கியம்.
இந்த இரண்டு சொற்பாடுகளின் ஊடாக இந்த கட்டுரை நகர்ந்து இன்றைய அரசியல் போக்குகள் பற்றிய சில வர்ணிப்புகளை செய்ய முயல்கிறது.
முதல் சொற்பாடு, அரசியல் போக்கு ஏகாதிபத்தியங்கள் தனக்கான குடியாண்மை சமூகத்தை உருவாக்குவதற்காக உலக அளவில் செலவிடப்படும் அரசுசாரா நிறுவன நிதிகள். அந்த நிதிகளைப்பெற்ற தன்னார்வ நிறுவனங்கள் உள்ளுர் அளவில் உருவாக்கும் வேர்க்கால்மட்ட சமூக சேவை மையங்கள் தற்போது ஒரு புதிய அரசியல் பரிணாமத்தை பெற்று உள்ளது. அதாவது சட்டரீதியான ஆட்சி. சட்டத்தின் உரிமைகளை அளிக்கும் ஆட்சி. தொண்டு மற்றும் சேவை என்பதிலிருந்து இந்த அரசுசாரா நிறுவனங்கள் எப்படி அரசியல் அதிகாரம் பெறும் கட்சிகளாக மாறியது என்பதை சொல்வது. அந்த பரிணாமத்தின் கருத்தியல் மற்றும் கோட்பாட்டு பின்புலத்தை தருவதே இரண்டாவது சொற்பாடு. அதாவது சட்டரீதியான உரிமைகளைப்பெற அரசில் பங்குபெறுவது மக்கள் உரிமை.
இதைதான் சுருக்கமாக போத்ரியாவின் முதல் இரண்டு குறிப்புகள் சுட்டுகின்றன. மக்களுக்கான அரசு என்ற இடத்தில் மக்களின் அரசு என்பதை முன்வைத்து ஜனநாயகத்தின் மக்கள் உரிமை என்பதை மக்கள் பங்குபெறுதல் என்பதாக மாற்றுவது. அரசு என்பது கள்ளமற்றது என்பதாகவும், அதில் மக்கள் பங்குபெறவதற்கான உரிமையை முன்னிலைப்படுத்துவது போன்ற கவர்ச்சியான கோஷங்களை முன்வைத்து அரசு அதிகாரத்தை பெறுவது. முதலாண்மையின் முகவர்களாக இருந்துவந்த அரசியல்வாதிகள், முதலாண்மையின் தொண்டுநிறுவன அறிவுஜீவிகள் மற்றும் அதிகாரிகளால் பதிலீடு செய்யப்படுவது. இதனால் திரைமறைவில் உள்ள முதலாண்மை நிறுவனங்கள், அதன் தாராளவாத பொருளியல் நலன்கள் மூடி மறைக்கப்படுகிறது. அவை தங்களது நலன்பேணும் அரசுகளை உருவாக்குகின்றன. அதாவது ஊழலற்ற அரசுகளை உருவாக்கும் உபாயமாக அந் நிறுவனங்களை பயன்படுத்தி தற்போது ஒரு நாட்டின் அரசாங்கத்தையே உபயம் செய்கின்றன.
அரசில் மக்களின் பங்களிப்பை அறிவித்த ஜான் எப் கென்னடி அமேரிக்க முதலாண்மை (கார்பரேட்) நிறுவன உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். உலகை ஆண்ட பிரத்தானிய ஏகாதிபத்தியத்தை இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகத்தின் மீப்பெரு அரங்கிலிருந்து நீக்கி, ஐ.ந., உலக வங்கி, உலக செலாவனி நிதியம் (ஐ.எம்.எஃப்) போன்ற உலக அமைப்புகள் வழியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நாடகத்தை துவங்கி நடத்தவும் காரணமாக அமைந்தவர்களில் ஒருவர். இவர் காலத்தில் உருவாக்கப்பட்டதே ராக்பெல்லர் பவுண்டேஷன் என்கிற ஒரு சமூகநலநிதி அமைப்பு. இந்த அமைப்பு தோன்றிய வரலாற்றில் கென்னடியின் பங்கு முக்கியமானது. இந்நிறுவனம் மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு எதிரானவர்கள் எல்லோரும் அமேரிக்க எதிர்ப்பாளர்கள் என்றும், அதனை மாற்ற ”அறிவு வலைப்பின்னல்” (Knowledge Network) ஒன்றை பல்கலைக்கழக அறிவுஜீவிகள், சிந்தனை செம்மல்கள் (think tanks), அரசு முகாமை நிறுவனங்கள், மற்றும் ஊடக வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்குவது. இவர்கள் நிலவும் உலகின் படிநிலை வரிசைளை நிர்வகித்துக்கொண்டே நிறுவனங்களின் அதிகார மையங்களை உருவாக்குவதே அடிப்படை. இந்த ராக்பெல்லர் நிறுவனத்தின் முதல் செயலாளர் அமெரிக்க அரசுச் செயலாளரான டீன் ரஸ்க் என்பரே. இவர் போருக்கு பிறகு ஜப்பானால் அழிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதாக கொரியாவை பிரித்து அமேரிக்க சார்பாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியவர். சோவியத் சார்பான கம்யுனிஸ நாடுகளக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றிற்கு காரணமாக அமைந்தவர்[3].
இந்த தொண்டு நிறுவனங்கள் அமேரிக்க ஏகாதிபத்தியங்களின் நிதியில் உலகெங்கிலும் பரவலாக்கப்படுவது என்பது அடிப்படையில் கம்யுனிஸ சிந்தனைக்கு பலியாகிவிடாமல், மக்களை முதலாளித்துவ தொண்டுகளில் தக்கவைப்பதே. குறிப்பாக 1950 முதல் போர்ட் பவுண்டேஷனும், இந்நிறுவனமும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இப்பணியை செவ்வனே செய்துவருகின்றன. சீனாவின் கம்யுனிஸம் பக்கத்து நாடுகளுக்கு பரவிவிடும் அயாயத்தை தடுப்பதே இவற்றின் நோக்கம் என்பதை விவரிக்கிறார் பாபு சி.டி. சுனில் என்கிற ஆய்வாளர்[4]. இந்த நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டன. அவற்றில் கட்டுப்பாடுகள் உள்ளுர் தேசிய அரசுகளாலும், மற்றும் இடதுசாரி அமைப்புகளாலும் அம்பலப்படுத்தப்படுவதால் இப்போது சில அரசியல் சார்ந்த அமைப்புகளுக்கு அந்த நிதிகள் இத்தகைய நிறுவனங்களால் விருதுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ராக்பெல்லர் பவுண்டேஷன்தான் பிலிப்பைன்ஸ் அரசு வழியாக வருடாவருடம் ஆசிய நோபல் பரிசு எனப்படும் ரோமன் மகாசேசே விருதை வழங்கிவருகிறது. இது ஆசிய நாட்டைச் சேர்ந்த தங்களது துறையில் சாதனைப் புரிந்தவர்களுக்கும், இயக்கங்களுக்கும் தரப்படுகிறது. போதுவாக தொண்டு நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர்கள் என குடியாண்மை சமூகத்தினை மேம்படுத்தும் அரசுசாரா நிறுவனங்கள், அல்லது அந்த நிறுவனங்களினை வழிநடத்தப்படுபவர்களுக்கு தரப்படுகிறது. 2001 முதல் தலைவராக உருவாகும் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தரப்படுகிறது. ஒருவகையில் இந்நிறுவனம் ஆசியாவிற்கு மட்டும் வழங்குவதும், அதுவும் குடியாண்மை சமூக மேம்பாட்டிற்கு பாடுபடுபவர்களுக்கு தருவதும் இதன் அடிப்படை அரசியலை தெரிவிப்பதாக உள்ளது. ஆசிய நாடுகளின் அரசியலில் தலையிடுவதும், தனக்கு ஏற்புடைய நிறுவனங்கள் வழியாக தனக்கான கருத்தியலை பரப்புவதும் இதன் அரசியல். இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னணி என்பது ஆசிய சமூகங்களுக்கு அமெரிக்க நிதியமைப்பு மறைமுக வருவதற்கான வழிமுறையாகவே தெரிகிறது.
இந்நிறுவன விருதுகளைப் பெறுபவர்கள் தங்கள் கையை அந்நிய நிதிபெற்றதாக காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம் விருது என்பதன்மூலம் அத்தகைய நிறுவனங்களை ஒரு பரவலான அமைப்பாக நிறுவனப்படுத்தமுடியும் என்பதே. ஊடக விளம்பரம் வழியாக அவர்கள் விருதுபெற்ற புகழைவைத்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிடுவது. ஆகவே அவர்களை எப்போதும் தனிமனிதர்கள் அல்லாமல் ஒரு நிறுவனம் என்பதாக கவனத்தில் கொண்டே அணுகவேண்டும். ஆக அரசுசாரா நிறுவனம் என்பது அடிப்படையில் அந்நிய நிதியை பெற்று உள்ளுர் மக்களிடம் ஒரு மேற்கத்திய குடியாண்மை சமூகத்தை நிறுவுவதே. (இதற்கு முன்பு அடவியில் இது குறித்து விரிவாக எழுதி உள்ளேன்.) அந்த சமூகத்தை மேற்சொன்ன அமேரிக்க ஆதரவாக மாற்றுவதே. அல்லது உலக முதலாண்மை நிறுவனங்களுக்கான மன அமைப்பை உருவாக்குவதே. இந்த முயற்சியை செய்வதே அரசுசாரா நிறுவனங்களின் அடிப்படை.
உலகமயமாதலுக்கு முன்பு இத்தகைய அமைப்புகள் வேர்க்கால்மட்ட கிராமங்களினை சீர்திருத்தக்கூடிய தொண்டுநிறுவனங்களாக, அரசின் உதவிகளை பெற்றுதருவதும், கிராமங்களை நாகரீகப்படுத்துவது என்பதாக செயல்பட்டன. அதாவது, அடிப்படையில் தொண்டு நிறுவனங்களாக செயல்பட்டன. இவற்றில் ஒரு அடிப்படை மாற்றத்தை நிகழ்த்தியது உலகமயமாதல். காரணம் உலகமயமாதல் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியில் கிராமங்கள் ஓரளவு நாகரீகமடைந்தன ஆனால் மற்றொரு புறம், தேசிய அரசுகள் முழுக்க அந்நிய மூலதனத்தை அண்டி பிழைக்கும் நிலைக்கு ஆளானபோது, உலகமயமாதலின் உள்ளுர் முகவர்கள், அவர்களால் வளர்க்கப்பட்ட அரசியல்வாதிகள் பெரும் ஊழல்கள் செய்பவர்களாக மாறினார்கள். முதலாண்மை நிறுவனம் இப்படி உலகெங்கிலும் உள்ளுர் அரசியலை பெரும் ஊழல்கொண்டதாக மாற்றியது. அது காலூன்ற அரசையும், அரசு அதிகாரிகளையும் ஊழல் மயப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சுதேசியம் பேசும் இவர்களிடம் கையூட்டும், கமிஷனும் இல்லாமல் அவர்களது “தேசபக்தியை” விலைபேசமுடியாது என்பதால்.
இந்த ஊழலால் உடனடியாக பாதிக்கப்பட்ட உள்ளுர் ஏழைகள், கூலி உழைப்பாளர்கள், சிறு வியபாரிகள், மத்தியதரவரக்கத்தைச் சேர்ந்தவர்கள், சிறுமுதலாளிகள் என அனைவரும் வாழ வழியற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். தங்களது வாழ்வுரிமை பரிக்க காரணம் முதலாண்மை நிறுவனங்ளின் வருகையும் அவற்றினால் கட்டுண்ட அரசுகளின் புதிய தாராளவாத பொருளாதராக் கொள்கையும், அதன் உலமயமாதல் அரசியலுமே என்பதை புரிந்துகொள்ள முடியாமல் திசைதிருப்ப எல்லாவற்றிற்கும் ஊழலே காரணம் என்பதான பொதுஜன அரசியல் மனநிலை கட்டமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது. அதை ஒட்டி உலகின் பல தொண்டு நிறுவனங்கள் ஊழல் எதிர்ப்பு உள்ளுர் அரசியல் கோஷத்தை முன்வைத்து அரசியல் இயக்கங்களாக மாறின.
கடந்த சில ஆண்டுகளாக உலக அரசியலில் இந்த உள்ளுர் ஊழல் என்பது ஒரு பெருந்தீமையாக காட்டப்படுகிறது. இது சந்தேகத்திற்கிடமின்றி பெருந்தீமைதான். இதைக்களைய இதன் வேர்களை வெட்டி எறிய வேண்டும். மாறாக ஆட்சிமாற்றத்தை முன்வைப்பது தீர்வாகாது. 1982-ல் மகாசேசே விருது வாங்கிய அருண்ஷோரிதான் அப்துல் ரஹ்மான் அந்துலே என்கிற மஹாராஸ்டிர முதல்வர் ஊழலை அம்பலப்படுத்தி பதவி இறக்கம் செய்தார். ராஜிவ் காந்தியின் போர்பர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தி அதை ஒட்டி ஆட்சிமாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர் என்பதையும் பிறகு பிஜேபி அமைச்சராக ஆக்கப்பட்டார் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சம்பவம்-1: 2002-ல் கோத்ராவில் கரசேவர்களின் ரயில் பெட்டி எரிக்கப்பட்டதை வைத்து குஜராத்தில் மிகப்பெரும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தின்மூலம் ஒரு பேரச்சம் இஸ்லாமியரிடம் கட்டமைக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் பொருளாதாரம் பெருமளவில் அழிக்கப்பட்டன. ஒரே நாளில் அனைத்து இஸ்லாமியார்களும் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டார்கள். எண்ணற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள் என்பதைவிட நாடெங்கிலும் பயந்து நடுங்கும் அளவிற்கு மூர்க்கமான கொடூரமான தாக்குதலாக அது நடத்தப்பட்டது. கருவில் உள்ள குழுந்தையை வயிற்றைக்கிழித்து பொது இடத்தில் தீயில் கருக்கியது போன்ற கொடுரங்கள் ஒரு குறியீட்டு நிகழ்வாக மறக்கமுடியாத ஒரு பேரச்சமாக இஸ்லாமியர்கள் மனதில் படியும்படி நிகழ்த்தப்பட்டது. வரலாற்றில் ஒரு நிர்கதியற்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை நிகழ்த்தி காட்டியது. அதற்கு எதிராக கிளர்ந்த சமூகமனசாட்சி என்பது சட்டவழியானதாகவும், தனிமனித இஸ்லாமிய பங்கரவாத வெடிகுண்டு தாக்ககுதலாகவும் இருந்தது.
தனிமனித பயங்கரவாத தாக்குதலும், கோத்ரா கொடூரமும் ஒன்றிற்கு ஒன்று சளைக்காத வன்முறையின் வெளிப்பாடாக இருந்தது. வன்முறை பற்றிய ஒரு பேச்சுக்களன் கட்டமைக்கப்பட்டது. அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் இத நிகழத்தப்பட்டது என்பது மற்றொரு குறியீட்டு நிகழ்வு. இதன் குறிப்பீடு என்னவென்றால், காந்தியம் என்பது இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதான செய்தியே. எந்த மதத்திற்கு சார்பாக இருக்கிறார் என்று கா்நதி படுகொலை செய்யப்பட்டாரோ அந்த மதத்தினரை அவரது மண்ணிலே ரத்தப்பலி எடுத்தார்கள். இந்நிலையில்தான் காந்தியம், அஹிம்சை அதன் தேவைகள் மறுபடியும் உணரப்பட்ட ஒரு தளம் சொல்லாடல்களில் மீண்டெழுந்து வருகிறது.
2009-ல் இந்து சுவராஜ் என்கிற காந்தியின் முக்கியமான சித்தாந்த நூலின் நூற்றாண்டு விழா தலாய் லாமாவால் துவக்கி வைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. காந்தி மீள்வாசிப்பிற்கு உள்ளாகும் அறிவுச் செயல்பாடுகள் நிறைய நடைபெறுகிறது. காந்தியின் அஹிம்சைவழியின் வழியாக காங்கிரஸ் பேரியக்கத்தின் ஊழல் என்பது சமூகத்தீமை என்பதாக வடிவம் கொள்கிறது. ஊடகங்களால் காந்தி காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இடதுசாரிவாதம் அதாவது மாற்று அரசியல் காந்தியவாதமாக அதாவது இடது வலது அற்ற மையவாதமாக மாறுகிறது. அதை ஒட்டி காந்தியை தனது குறியீடாகக் கொண்டு இந்திய ஊழல் ஒழிப்பு இயக்கம் உருவாகுகிறது அரசுசாரா நிறுவனமாக.
சம்பவம்-2: 2011-ல் அன்னா ஹசாரே லோக்பால் பில் எனப்படும் ஊழலுக்கு எதிரான மன்றத்தை அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்கிறார். காந்தியம் பற்றி உருவாக்கப்பட்ட கருத்தமைவுகளின் விழிப்புணரச்சியில் ஹசாரே காந்திக்கு திரும்புதல் என்பதை நினைவூட்டுகிறார். அவரோடு ஊழல் எதிர்ப்பில் பங்குபெற்ற அரசுசாரா நிறுவனத்தைச் சேர்ந்த மகாசேசே விருதுபெற்ற அறிவஜீவிகள், அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் நடத்திய தலைவர்களான அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்ட குழுவினர் இணைகின்றனர். டீம் அன்னா எனப்படும் அன்னா குழுவினர் காந்தியின் சுயராஜ்ஜியம் என்கிற தன்னாட்சிக் கொள்கையை ஏற்று ஊழலை ஒழிப்பதற்கு, அதை கண்காணிப்பதுற்கும், ஊழல் செய்தவரை தண்டிப்பதற்குமான லோக்பால் பில்லை பாராளுமன்றம் என்ற அமைப்பிற்குமேல் அதிகாரம் செலுத்தும் ஒன்றாக உருவாக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதாவது ஒரு இணைஅரசாக, சட்டத்தை கண்காணிப்பதாக செயல்படும் அமைப்பாக அவர்களால் முன்வைக்கப்படுகிறது. இதன் உட்பொருள் அரசு அதிகாரத்தை தாண்டிய ஒரு அதிகாரத்தை பெற முனைவதே அவர்களது நோக்கம் என்பது. அதிகாரத்தை மையமற்றதாக ஆக்குவதாகக்கூறி, ஒரு பலம் பொருந்திய அதிகார அமைப்பை உருவாக்குவதே. இதை ஒட்டி நாடெங்கிலும் ஊழல் ஒழிப்பு என்கிற கருத்தாக்கம் அரசியல் வடிவம் கொள்கிறது.
சம்பவம்-2: 2012-ல் டெல்லியில் ஒரு மாணவி ஆறுபேர்கொண்ட குழுவால் கடுமையான பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு பிறகு இறந்து போகிறார். அந்த பெண்மீது செலுத்தப்பட்ட வன்முறை கோத்ராவிற்கு பிறகான குஜராத்தில் கர்ப்பினி வயிறு கிழிக்கப்பட்டதைப்போல, பேண்குறியில் கம்பிகளை விட்டு கிழிப்பது என்கிற கொடூரமாக நடக்கிறது. மனிதமனம் இம்சை என்கிற வன்முறைக் கொண்டதான ஒரு மனப்படிவம் வெளிப்பாடு கொள்வதே இந்த நிகழ்வின் குறிப்பீடு, காந்தியின் அஹிம்சையும், பெண்ணிற்கான பாதுகாப்பும் அவசியம் என்பதை உறுதிபடுத்தும் ஒன்றாக மாறுகிறது. இதில் அந்த வன்முறையை நடத்தியவன் பெண்கள் இந்தியப் பண்பாட்டு உடை அணியவில்லை என்பதை சொல்லி அதற்கான தண்டனையே அது என்று பேசியது முக்கியமானது. அந்த வாக்குமூலத்திற்குள் உள்ள இந்தியப்பண்பாடு என்ற சொல் முக்கியமானது. இந்தியப்பண்பாட்டை காப்பதன் பின்னணியில் உள்ள கொடுர வன்முறையாக அது வெளிப்பட்டது என்கிற செயல் ஊடகங்களால் பெரிதுபடுத்தவில்லை.
இந்தியாவில் இதுதான் முதல் சம்பவம் என்பதைப்போல ஊடகங்கள் இதை தேசம் தழுவிய பிரச்சனையாக்குகின்றன. நாடெங்கிலும் எதிர்ப்பலை கிளம்புகிறது. ஆனாலும் இந்தியாவில் இதைவிடவும் நடந்த கொடுமையான பாலியல் பலாத்காரங்கள் எதுவும் இத்தனை வெளிச்சம் பாய்ச்சப்படவில்லை ஊடகங்களால். இது காந்தியின் நள்ளிரவில்கூட பெண் பாதுகாப்பாக செல்வதே சுதந்திரம் என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான ஒன்றாக எங்கும் வாசிக்கப்பட்டது. காந்தி தேசமே உனக்கு காவல் இல்லையா? என்ற தமிழ் சினிமாப்பாடலைப்போல இது பிரபலமானது. இவ்வாசிப்பின் வழியாக காந்தியம் என்பது அரசியல் தளத்தில் இருந்து சமூகத்தளத்திற்கும், மக்களின் பொது மனத்தளத்திற்கும் மாறுகிறது.
சம்பவம்-3: 2013-ல் ஊழல் மலிந்த இந்திய அரசின் குறிப்பாக காங்கிரஸிற்கு எதிராக காந்தியம் உருவாக்கிய மனத்தளத்தின் அரசியல் வடிவத்தை அரவிந்த் கேஜ்ரிவால் கையகப்படுத்தி அன்னாவிடமிருந்து விலகி ஆம் ஆத்மி அதாவது பொதுஜனம் என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சியை துவக்குகிறார். இக்கட்சி டில்லியின் எல்லா சேரிகள், அடித்தட்டு மக்களிடம் ஊழற்ற ஆட்சி பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. முழு ஆம் ஆத்மி (கேஜ்ரிவாலின் என்ஜிவோ) தொண்டர்களும் அதில் இறங்கி பணியாற்றுகின்றனர். இவர்களது காந்திய குல்லா என்பது மற்றொரு குறியீடு. இதன்வழியாக காந்தியின் அமைதிப்புரட்சியை நிகழ்த்துவதான பாவனையில் இக்கட்சி டெல்லி சட்டமன்றத்தை 2013-இறுதியில் பிடித்து அதிகாரத்தை பெறுகிறது. இக்கட்சி மக்களுக்கான அரசை மக்கள் அரசு என்கிற வாதத்தின் வழியாக தனதானதாக ஆக்குகிறது.
இந்தப்பின்னணிகளை புரிந்துகொள்ள உலக அரசுசாரா நிறுவனங்கள் எப்படி உருவாகிவரும் உலகப்பேரரசு ஒன்றிற்கான குடிமக்களை உருவாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இந்த உலகப் பேரரசு தேச எல்லைகள் அற்றது. அதன் அரசியில் எல்லைதாண்டிய ஜனநாயகம், அரசியல் பங்கேற்பு என்பதாக, நேருக்கடிக்குள்ளான உலக முதலாளித்துவ முதலாண்மை நிறுவனங்களை அரசு அதிகாரத்தில் பங்கேற்ப வைப்பதே. அதற்கான அரசுசார செயல்பாட்டாளர்களாக பங்களிப்பதே இந்த அரசுசார நிறுவனங்களின் பணி. இது இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு 1950-களில் இந்தியாவின் கிராமப்புறங்களை ஆராய்வது என்கிற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் முதலில் துவங்கப்படுகிறது.
இந்திய கிராமங்கள் குறித்த இந்த ஆராய்ச்சியில், கிராமங்களை நாகரிகப் படுத்தப்படுதல், நவீனப்படுத்தப்படுதல் என்கிற முடிவுகளாக இந்த ஆய்வுகள் ஒரு அறிவுப்புலத்தை கட்டமைக்கின்றன. 1950 முதல் 1970 வரை போர்ட் பவுண்டேஷன் இந்தியாவில் கம்யுனிட்டி டெவலப்மெண்ட் புரோகிராம் எனப்படும் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தை இந்திய மண்ணில் ஊன்றியதாக பாபு சி.டி. சுனில் என்கிற ஆய்வாளர் விரிவாக விவரிக்கிறார்.[5]போர்ட் பவுண்டேஷன் இந்தியாவில் நுழைந்த முக்கிய காரணம் அமேரிக்க மேலாண்மையை சோவியத் கம்யுனிஷத்திற்கு எதிராக நிறுவுவதே போர்டு பவுண்டேஷனின் அரசியல் என்கிறார் பலரது நூல்களையும், அவர்களது திட்டவரைவு, ஆய்வுமுடிவுகளை ஆராய்ந்து. இந்நிறுவனம் எப்படி அரசு, வியபார மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் திறமையானவர்களை தனது பணியாட்களாக் கொண்டு செயல்படுகிறது என்பதை விவரிக்கிறார்.
அமேரிக்காவின் சுதந்திரம் பற்றி ஆதரவாக எழுதி கேட்டு அதற்கு நிறைய பணம் தருவதாக ஒரு அமேரிக்க அதிகாரி தன்னிடம் பேசியதை சதாத் ஹசன் மாண்டோ தனது அங்கிள் சாம் கடிதங்களில் குறிப்பிடுகிறார். இப்படி இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், கல்லூரி பேராசிரியர்கள், பொதுநலத் தொண்டர்கள் என அறிவார்ந்த தளத்தில் மற்றும் செயல்தளத்தில் உள்ளவர்கள் வழியாக கருத்துப் பரவலை உருவாக்குவதே இத்தகைய நிறுவனங்களின் முக்கியப்பணி. ஒருபுறம் ஆசிய நாடுகளின் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களதேஷ் போன்ற நாடுகளின் மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் அறிவை சேகரித்து உலக முதலாண்மை நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்வதும் இதன் மற்றொரு பணி எனலாம். அதாவது ஒருவிதமான அறிவை கட்டமைப்பதும் கையகப்படுத்துவம் இத்தகைய நிறுவனங்களின் அறிவுமட்டத்திலான செயல் என்றால், பொதுமக்களிடம் வளர்ச்சி, நலவாழ்வு. சுகாதாரம் என்ற பெயரில் அவர்களை தங்கள் நிதியில் பயிற்றுவிப்பது மற்றொரு செயலாகும்.
இந்த வளர்ச்சி என்கிற நிலையிலிருந்து குடியாண்மை சமூகத்தின் வாக்களிப்பில் தேர்தல் பங்கேற்பில் பயிற்றுவித்தல் என்கிற நிலையை உலக என்ஜிஓ நிறுவனங்கள் தங்களது செயல்பாடாக தற்சமயம் மாற்றி உள்ளன. அதாவது அரசியலற்ற இயக்கமாக தொண்டு நிறுவனங்களாக இருந்த அவை, அரசியலில் பங்குபெறும் ஒன்றாக மாறுகின்றன. அதன் ஒரு சோதனைச்சாலையாக உருவாக்கப்பட்டதே டில்லி ஆம் ஆத்மியின் அரசியல் தலையீடு. ஆம் ஆத்மி நேரடியாக உலக நிதி நிறுவனங்களின் நிதியை பெறவில்லை என்று கூறினாலும், அதன் செயல்பாடு அத்தகைய நிறுவனங்களின் செயலை ஒட்டியதே. முதலாண்மை நிறுவனங்களுக்கு எதிராகவோ, பெருமுதலாளி அமைப்புகளுக்கு எதிராகவோ அது பேசுவதில்லை. அரசை சீரமைப்பது மட்டுமே தனது பணி என்பதாகவும், அதை பயன்படுத்தி மக்களநலனை பேணுவது என்பதுமே அதன் அரசியலாக உள்ளது. இங்கு குறிப்பாக அந்த அமைப்பின் 3 முக்கியமான தலைவர்கள் முன்பு நாம் சொன்ன ராக்பெல்லர் பவுண்டேஷனின் மகாசேசே விருது வாங்கியவர்கள் என்பது முக்கியம். பிரபல எழுத்தாளரும், சமூக சேகவரமான அருந்ததிராய் தனது கட்டுரை[6] ஒன்றில் 400,000 அமேரிக்கன் டாலர் போர்ட் பவுண்டேஸனில் இவர்கள் பெற்றதாக முன்வைக்கும் சந்தேகங்களை நிராகரித்துவிட முடியாது. இந்திய அரசும்கூட அவர்கள் அந்நியநிதி பெறுவதாக அறிவித்து, அதில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
இந்நிலையில்தான் சமீபத்தில் நடந்த டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிக்கு வழக்கத்திற்கு விரோதமாக ஊடகங்கள் இந்திய அளவில் ஒரு மூன்றாவது சக்தியாக வர்ணித்து இக்கட்சியை உருவாக்கி வருவதன் பின்னணியை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. தொடர்ந்து இக்கட்சியின் செயலை அறிவிப்புகளை ஊதிப் பெருக்குகின்றன. ஊடகங்களின் இச்செயலுக்கு உதாரணம், இத்தேர்தல் முடிவுகள் வழியாக மோடி அலை வீசுகிறது என்பதை கட்டியமைத்து காட்டியதைக் கூறலாம். இப்போதோ டில்லிக்கு தாவி ஆம் ஆத்மி அலைவீசகிறதாக மாற்றி வாசிக்கின்றன. சமூக வலைத்தளமான முகநூல், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் பல அலசல்கள், விவாதங்கள் எழுதப்பட்டு வருகிறது. இப்படி எழுதும் அனைவரும் ஒன்றை நன்றாக அறிந்தவர்கள். அது காங்கிரஸ் எதிர்ப்புதான் இந்த தேர்தலினை நடத்திய காரணி என்பது.
காரணம், காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திய விளைவுகள் எல்லோரும் அறிந்ததே. மக்களிடம் அது அதிருப்தியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப் பின்னணியில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பலை சுணாமி போன்று வீசிக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மீதான மக்கள் அதிருப்தியை பிரதிபலிப்பதாக அக்கட்சியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள சோனியா காந்தியே சொல்லி உள்ளார். ஆக, எல்லோருக்கும் தெரிந்த உள்ளங்கை நெல்லிக்கனி காங்கிரஸ் எதிர்ப்பலை வீசுகிறது என்பது. ஆனால் இந்த பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப்போல மோடியின் அலை வீசுகிறது என்று எழுதினார்கள்.
இந்திய தேர்தல்களில் அலைவீச்சு என்பது எப்போதும் எதிர்மறையாவே நிகழ்ந்து உள்ளது. இந்திராவின் எமர்ஜென்சி, ராஜிவ் கொலை போன்றவற்றில் அலை என்பது பிரதமர் யார் என்று அறியாமலே வீசியது. அந்த இரண்டு அலையிலும், எந்த தனிநபர் அலையும் வீசவில்லை. அலை என்பது ஒரு தனிமனிதனை முன்வைத்து வீசுவது என்பதே மாயை. காரணம், மோடியை பிஜேபி இறக்கியிருப்பதே, அதனிடம் சரியான ஒரு பாரம்பரிய தலமை இல்லை என்பதால்தான். அக்கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி மோடியை முன்வைக்க இரண்டு காரணம். 1. காங்கிரஸீக்கு எதிராக வீசும் இந்த பேரலையில் மீன் பிடித்தால்தான் உண்டு. 2. காங்கிரஸிடம் சரியான தலைமையோ, பிரதம வேட்பாளரோ இல்லை என்பதால், ஓரளவு பிரபலமான (இதுகூட ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உருவானதே) மோடியை முன்வைக்கின்றன. இதன்மூலம், பிரதம வேட்பாளரை களத்தில் நிறுத்தி முண்டா தட்டும் மல்யுத்த அரசியலை செய்ய முனைகிறது பிஜேபி. எது எப்படி இருந்தாலும், இது பிஜேபிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்பதால் தங்களது ரஜகததுரகபதாதிகளுடன் (ரஜம், கதம் எல்லாமே ஊடகங்கள்தான்.. அரசியல் மெய் உலகிலிருந்து நகர்ந்து ஊடகங்களின் மெய்நிகர் உலகில்தான் நடக்கிறது.) களம் இறங்கி உள்ளனர். ஆனால், ஊடகங்களோ டில்லியில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றியை இப்போது ஊதிப் பெருக்குகின்றன. காரணம் ஆம் ஆத்மி பெறும் வாக்குகள் அதிகம் காங்கிரஸ் அதிருப்தி குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளே. அவை காங்கிரஸிடமிருந்து பிரிந்தால் பிஜேபி சாதரணமாக நிறைய தொகுதிகள பிடித்துவிடலாம் என்பதே ஒரு அரசியல் கணக்கு. இப்போ முதலாண்மை நிறுவனங்களுக்கு, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பின்னணி தேவைப்படுகிறது. காரணம் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்திருப்பதே. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக அது பிஜேபியை முன்வைக்கிறது. அதற்கான மறைமுக ஆதரவாகவே ஆம் ஆத்மியின் வருகை அமைந்து உள்ளது.
ஆம் ஆத்மி வெற்றிபற்றி பேசுபவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். முதலில் அது காங்கிரஸ் வாக்குகளை பிரித்ததுள்ளது என்பதை. இதன்மூலம் அது தனது பிஜேபி விசுவாசத்தைக் காட்டி உள்ளது. காங்கிரஸ் வலுவாக உள்ளதாக நம்பப்படும் இடங்களில் இதுபோன்ற கட்சிகள் தேர்தலில் பங்குபெற்று, வாக்குகளை பிரிப்பது என்பது சாதரண வாக்கு-கணக்கு அரசியலில் சகஜமானது. ஆம்-ஆத்மி இரண்டு புதிய வாக்காளர்களை கவர்ந்து உள்ளது. குறிப்பாக நகர்ப்புற படித்த இளைஞர்களை. அல்லது காங்கிரஸ் மற்றும் பிஜேபியிற்கு வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்காளர்களை. இந்திய அளவில் வர இருக்கும் தேர்தலில் இந்த வாக்குகள் கணிசமாக உள்ளன. ஆனால் அந்த வாக்குகளைப்பெறும் ஒரு தேசியக்கட்சியும் இன்று இல்லை. காங்கிரஸ் மற்றும் பிஜேபி என்பது "Deep and Devil sea" என்பார்கள். மேலே பூதம், கிழே ஆழ்கடல் நடுவில் தொங்கும் இந்திய மக்கள். இரண்டு கட்சிகளும் ஒரே கொள்கை நோக்கம் செயல்பாடுகளைக் கொண்டவை. ஒன்று வெளிப்படையாக பேசுகிறது. மற்றது மௌனம் சாதித்து அதை செயல்படுத்துகிறது. காரணம் இரண்டும் கார்பரேட் என்கிற முதலாண்மை நிறுவனங்களின் நலனை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. அவற்றின் போட்டி தொழில்போட்டியைப் போன்றதே தவிர அதில் பெரிய மக்கள்நல அரசியல் எதுவுமில்லை. இவ்விரண்டின் மீதும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு தற்காலிக ஆறுதல் தரக்கூட ஒரு 3-வது அமைப்பு இல்லை என்பதுதான் சோகக்கதை.
இந்திய அரசியலின் மிகப்பெரும் கேடும் தோல்வியும் இடதுசாரிகளின் வீழ்ச்சியும் சரிவும்தான். இடதுசாரி இயக்கம் இத்தகைய நிலையை அடைவதற்கான திட்டம் சுதந்திர போராட்டத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதன் விளைவே இன்று மக்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். நாம் மேலே விவரித்த என்ஜிவோ வலைபின்னல் அமைப்புகள் அமேரிக்காவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அது காளான்களாக கிராமங்களில் முளைத்து, அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் திருப்பி, அவர்களை தன்னுணர்வு அற்ற, தன்மானமற்ற கையேந்தி யாசிக்கும் நிலைக்கு, உதவி கேட்டு ஒப்பாரி வைக்கும் நிலைக்கு ஆளாக்கி உள்ளது. உண்மையில் தனது இருப்பை அழித்து, தனது வாழ்வை சூறையாடிய அரசு மற்றும் முதலாண்மை நிறுவனங்ளுக்கு எதிரான கிளர்ச்சியை, வெறும் நலவாழ்விற்கான உதவி கேட்டு கையேந்தி நிற்கும் அவலநிலையாக மாற்றியுள்ளது இந்த என்ஜிவோ நிறுவனங்கள். அரசுகளும் பல இலவச திட்டங்கள் மூலம் இலவசங்களை வழங்கி அந்த என்ஜிவோக்கள் உருவாக்கிய பிசசைமனநிலையை பயன்படுத்தி மக்களுக்கு தீனிபோடுகின்றன. உரிமைகள் என்பது யாசித்துப் பெறுவதாக மாற்றியுள்ளன.
மக்களிடம் கிளர்ச்சி உணர்வை, அவர்களது தன்னுணர்வை,. உண்மைநிலையை உணர்த்திய இடதுசாரி இயக்கங்களை, கடந்த 60 ஆண்டுகளாக என்ஜிவோ அமைப்புகள் செயல்பட்டு சுத்தமாக துடைத்தெறிந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. அதாவது இந்திய மையநீரோட்ட அரசியலில் 3 போக்குகள் கொண்ட கட்சிகள் மட்டுமே செயல்படும்படி ஆக்கி உள்ளன. 1. தீவிர வலதுசாரிகள். 2. வலதுசாரிகள் 3. வலதுசாரியை நோக்கி நகர்பவர்கள். உண்மையில் இடதுசாரி இயக்கம் இந்தியாவில் காலவதியாகிவிட்டது என்று சொல்வதை தவிர வேறுவழியற்று உள்ளது. இடதுசாரிகளாக இருப்பவர்கள் சிந்தனைத்துறை, மற்றும் மாவோயிஸம் பேசும் அமைப்புகள், தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம் பேசும் தனிப்பட்ட குழுக்கள் என சிதறுண்டு உள்ளது. இவர்கள் ஒரு தேசிய இயக்கமாக பிரதிநித்துவம் செய்வதற்கான வாய்ப்பற்றவர்கள். இந்த உருவாக்கப்பட்ட வெற்றிடத்தில் தன்னை நிரப்புகிறது ஆம் ஆத்மி. இந்நிலையில் ஆம் ஆத்மி போன்ற அமைப்புகள் மத்தியதரவர்க்க கோபங்களுக்கான ஒரு தற்காலிக தீர்வாக அமைகின்றன.
உண்மையில் அரசியல்வாதிகளை நம்பலாம். ஆனால் அரசியலற்றதாக கூறும் நடுநிலைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். குறிப்பாக ஆம் ஆத்மி போன்ற கட்சிகள். காரணம். உலகில் உருவாகிவரும் பேரரசு என்கிற அரசியல் அமைப்பின் முக்கியமான முகவர்களாக உள்ள என்.ஜி.ஓ.க்கள் அமைப்பின் ஒரு அங்கம்தான் ஆம் ஆத்மி. இவர்கள் உலகெங்கும் சிவில் சொஷைட்டி எனப்படும் குடியாண்மை சமூகத்தை, நல்லதொரு உலகக் குடிமகனை உருவாக்கும் நோக்கம் கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உள்ளுரில் சரியான இடதுசாரி அமைப்புகள் உருவாகவிடாமல் தடுப்பவர்கள். இவர்கள் ஒரு மாற்று கிடையாது. மாற்றுகளை இல்லாமல் செய்பவர்கள். இவர்களது நோக்கம் மக்கள் நலன் அல்ல. ஒரு சர்வதேச முதலாண்மை நிறுவனங்களின் ஆளுகைக்கும், உள்ளுர் மக்களுக்கும் ஒரு பாலமாக அமைவது மட்டுமே. நுட்பமாக சொன்னால், சர்வதேச கருத்தியல் பண்டங்களான ஊழற்ற அரசியல், ஜனநாயகம், மனித உரிமை, மனிதநேயம், நாகரீகம், சார்பின்மை, நடுநிலமை, மக்கள் நலன் உள்ளிட்ட பலவற்றை இறக்குமதி செய்து அதை பரவலாக மக்களிடம் விநியோகம் செய்வது.
ஆம் ஆத்மி வழியாக உலக என்ஜிவோ நிறுவனம் ஒரு புதிய செய்தியை சொல்கிறது. அரேபிய வசந்தம் எனப்படும் உள்ளுர் கலகங்கள் வழியாக புரட்சிப் புயலை வீசிய என்ஜிவோக்கள், இந்தியா போன்ற நாடுகளில் அரசியலில் நேரடியாக ஈடுபடும் நிலைக்கு மாறுகிறார்கள் என்பதுதான். ஜனநாயகமற்ற அரேபியாவில் தெருமுனைக்கிளர்ச்சி, ஜனநாயக இந்தியாவில் ஓட்டுப்பெட்டியின் அமைதிப்புரட்சி. உலகப் பேரரசின் முகவர்களின் முதல் தேர்தல் பங்கேற்பு என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வெற்றி என்பது ஒரு பெரும் தோல்விக்கு நம்மைத் தள்ளிச் சென்றுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை அவசியம்.
ஆம் ஆத்மி ஊழல் என்பது அரசுக்கு வெளியில் நடப்பதான மாயையை உருவாக்குகிறது. அரசு என்பது பரிசுத்தமான ஒரு அமைப்பு என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அரசு என்பது அதிகாரவர்க்கம். அந்த அதிகாரவர்க்கத்தை கடிவாளமிட்ட அரசியல் வாதிகளை அதாவது மக்கள் பிரதிநிதிகளை நீக்கிவிட்டு அதையும் அதிகார வர்க்கம், நிர்வாகத் துறையினர் பிடிக்க முயல்வதே ஆம் ஆத்மியின் அரசியல். அதனால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு ஊழலை ஒழிப்பதாக சொல்வது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் அரசு எந்திரம் ஊழலை தனது பற்றசக்கர இயக்கமாகக் கொண்டதே. அது முதலாண்மையால் ஊழல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஊழல் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. அது ஒரு நிர்வாகப்பிரச்சனை. அதை அரசியல் பிரச்சனையாக குழப்புகிறார்கள். அரசில் மக்கள் பங்குபெறுவது என்பதை மாற்றி மக்களை பங்குதாரர்களாக மாற்றுவதாகக்கூறி ஆட்சியை பிடிக்கும் அதிகார வர்க்கமே ஆம் ஆத்மி.
முதலில் கூறிய இரண்டு சொற்பாடகளின் பொருத்தப்பாட்டுடன் இதை முடிக்கலாம். பல ஆண்டுகள் முதல் சொற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்து, இடதுசாரி இயக்கத்தை பயனற்றதாக மாற்றி, அதை கொல்வதற்கான அதிகாரத்தை பெற்றுவிட்டார்கள். இப்போ மக்களை பிரதிநித்துவ அரசியலில் இருந்து பங்கேற்கும் அரசியல் அதாவது நாட்டிற்கு செய், நாடு செய்யும் என எதிர்பார்க்காதே என்று மக்களிடம் போக்கு காட்டி ஆட்சியை பிடிக்கிறார்கள். ஊடகங்கள் எம்ஜியார் தானே உருவாக்கியது போன்ற ஒரு கவர்ச்சியை கேஜ்ரிவாலுக்கு உருவாக்குகிறது. அதற்கு சமூக வலைத்தள அறிவாளிகள் வழக்கமான தங்களது விர்ச்சுவல் (கற்பணார்த்த) ஆதரவை தருகிறார்கள். உண்மையில் கேஜ்ரிவால் குழுவினர் அணிந்திருப்பது காந்தியின் கதர் குல்லா அல்ல எம்ஜியாரின் கவர்ச்சிக் குல்லா என்பதை எதிர்காலம் உணர்த்தும் போது, நமது தலைகளில் அங்கிள் சாமின் கௌபாய் குல்லாய் மாட்டப்பட்டிருக்கலாம்.
- ஜமாலன் 04-01-2014 ([email protected])
அடவி – பிப்ரவரி 2014 இதழில் வெளிவந்த கட்டுரை.
அடிக்குறிப்புகள்
[1] “Don't ask what the State can do for you, ask what you can do for the State”. The perfect formula for interactivity as a strategy for calling the population to order, for transferring all problems on to those on the receiving end. Parody of the ideal of the reappropriation of one's own destiny. - Jean Baudrillard
[2] Here' again, an agonizing revision of the watchwords of modernity is in prospect – the watchwords of growth and welfare. It's a revisionism, this refusal to consume, a social treason in the eyes of the dominant free-market liberalism. A new class struggle is beginning" (if the herd doesn't want to graze, how is one to make one's butter?) (Volume 5, Number 1 (January, 2008). International journal of Baudrillard study). Present Considerations: The Uncertainty of All Value Systems - Jean Baudrillard)
[3] மேலதிக விளக்கத்திற்கு இந்த வலைத்தளத்தை வாசிக்கவும் http://dissidentvoice.org/2013/10/jfk-americas-admired-corporatist-imperialist-and-interventionist/
[4] Sociology, Village Studies and the Ford Foundation – Babu C T Sunil, Econamic and Political Weekly – December 28, 2013 – Vol XLVIII No52.
[5] Sociology, Village Studies and the Ford Foundation – Babu C T Sunil, Econamic and Political Weekly – December 28, 2013 – Vol XLVIII No52.
[6] I'd rather not be Anna - Arundhati Roy – The Hindu - October 2, 2011. http://www.thehindu.com/opinion/lead/id-rather-not-be-anna/article2379704.ece
விசயகாந்த் எனும் திரைப்புலி..
திமுக கருணாநிதி பேரியக்கம் குடும்ப சூழலில் சிக்கிவிட்டது என்கிற ஆதங்கத்தில் பல கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. சமஸ் என்பவர் தி ஹிந்து-வில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவற்றிற்குள் ஒருவித திமுக அழிவை எதிர்பார்க்கும் ஆதங்க மனநிலைதான் உள்ளது. அதாவது திமுக சரிந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்க விரும்பும் மனநிலைதான். அழகிரி கட்சியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர்கள், அவர் நீக்கப்பட்ட பின்னும் விமர்சிப்பதும் முழுவதுமாக புலம்பவதும், திமுக உறுதி பெறுவதையே காட்டுகிறது.
திமுக-வில் அழகிரியின் வருகை என்பது அதன் தொடர் தோல்விக்கே வழிவகுத்து உள்ளது. இந்நடவடிக்கை அடிப்படை திமுக தொண்டனை பாதிப்பதாக தெரியவில்லை. திமுக ஆதரவாளர்களையும் இது பாதிப்பதாகத் தெரியவில்லை. குடும்ப அரசியல் என்பதெல்லாம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயுதம் அல்ல. அது மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை எத்தனை ஊதினாலும் திமுக சென்றமுறை அடைந்த பெருந்தோல்வியைவிட பிறிதொரு தோல்வியை சந்தித்துவிடப் போவதில்லை. இருந்தாலும் இப்படி எழுதப்படுவதன் நோக்கம் திமுக-வை ஒழிப்பதும் அந்த வெற்றிடத்தை தமிழரல்லாத மற்றும் இந்துத்துவ சக்திகள் கையில் கொடுப்பதுமே. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ ”நடுநிலையாளர்கள்” பலியாகிவிடுகிறார்கள்.
பெரியார் என்பது ஆதிக்க சாதியினருக்கு ஒரு கொடுங்கனவு. அக்கனவை அழிப்பதற்கான அத்துனை முயற்சிகளையும் எந்த ஒரு சிறுதுரும்பு என்றாலும் அதை பயன்படுத்தி அழிக்க முயற்சிப்பதையே தொடர் அரசியல் நிகழ்வாக நடத்தி வருகின்றனர். இதற்கு ஊடகங்கள் பெரிதும் பங்களிக்கிறது என்பதே உண்மை. அதன் காரணம் அனைவரும் அறிந்ததே.
பெரியாருக்கு எதிரான யுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. அறிந்தோ அறியாமலோ திமுக எத்தனை மோசமான கட்சியாக ஆனாலும் அதை தலைமை ஏற்று உள்ளது என்பதே யதார்த்தம். ஈழத்தமிழரின் அழிவிற்கும் இந்த பெரியார் எதிர்ப்பியக்க ஆழ்மன அரசியல் எதிர்ப்பாளர்களே காரணமாக அமைந்தனர் என்பது வெளிப்படை.
இப்போ இந்த யுத்தம் அழகிரி வெளியேற்றப்பட்டதில் வெளிப்பட்டு உள்ளது. அழகிரிக்கு பரிந்து பேசுவதைப்போன்ற குரலை முன்வைக்கும் இத்தகையவர்கள்தான் அழகிரியை முன்வைத்து திமுக வை கடுமையாக விமர்சித்தவர்கள். ஊர் எங்கும் தூற்றிவாரியவர்கள். இப்போ கலைஞரின் இச்செயலை நடுநிலைக்குரலாக கண்டிக்கிறார்கள். தேர்தல் வியுகத்தில் திமுக-வை பலவீனப்படுத்துவதுதான் இதன் பின்னணி. எப்படியாவது விஜயகாந்தை ஏற்றிவிடத்துடிக்கின்றன இச்சக்திகள்.
ஆனால், தமிழக அரசியல் சூழலில் திமுகிற்கும் அதிமுகவிற்கும் உள்ள வாக்கு சதவீதம் 5 முதல் 10 சதவீதத்திற்குள்தான். அதை பெறுவதற்கான கூட்டணி தந்திரமே அவற்றின் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கிறது. இதில் பெரிய கோட்பாட்டு அரசியல் புள்ளிவிபரங்கள் ஒன்றுமில்லை. ஊடகங்கள் கட்டமைத்த தேமுதிக போன்ற எந்த பலமுமற்ற கட்சிகள் இந்த திமுக அதிமுக போட்டியில் தங்கள் அறுவடைகளை சரிவர செய்கின்றன. சென்றமுறை ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு விரோதமாக இச்சக்திகளின் முயற்சியில் தேமுதிக, அதிமுக கூட்டணி உருவாகி அழியவேண்டிய தேமுதிக-வை வளர்த்து விட்டார்கள். எப்போதும் இப்படி திராவிட இயக்கத்திற்குள் அதை அழிக்க என உருவாக்கப்படும் கட்சிகள் பிறகு நேரம் பார்த்து இப்படி வளர்த்து விடப்படுகிறது. அதிமுக வை உருவாக்கி வளர்த்தார்கள். அதற்கு எம்ஜியாரின் 20 ஆண்டுகால சினிமா உழைப்பு பயன்பட்டது. எந்த அடிப்படையுமில்லாமல் விஜயகாந்தை இப்போ வளர்க்க விரும்புகிறது அந்த திராவிட எதிர்ப்புக் கும்பல்.
இதே அழகிரி ஒரு பெரிய பிளவை திமுக-வில் உருவாக்கினால் அவரை ஒரு தியாகச் செம்மலாக்கி அவருக்கு கட்சி பட்டம் பதவி என எல்லா பத்திரிக்கைகளும் முறைவாசல் செய்வார்கள். அப்போது அவரது ரவுடியசிம் எல்லாம் அதிகார எதிர்ப்பு கலகமாகத் தெரியும். தினகரன் அலுவலகத்தில் கொல்லப்பட்டவர்கள் யுத்தத்தில் அழிந்தவர்களாக காட்சி தருவார்கள். அதற்கு அழகிரி சக்தியற்று ஒரு பிளவை உருவாக்காமல் இருப்பதால், இப்போ கருணாநிதி பற்றிய விமர்சனமாக எழுதுகிறார்கள்.
திமுக ஒழிவதற்கான இரண்டு கட்ட வேலைகள் அவர்கள் செய்வது. ஒன்று உள்ளிருந்து அதை ஒழிப்பது. மாறன் சகோதரர்கள் அதில் முதலிடம் வகிப்பவர்கள். வெளியிலிருந்து அதை ஒழிப்பது. எம்ஜியார், வைகோ, இப்போ அழகிரி.
சென்றுமுறை ஜெ வின் விருப்பமின்றியே விஜயகாந்தை அதிமுகவில் இணைத்து வளர்த்து விட்டார்கள். வரும் தேர்தலில் விஜயகாந்துதான் பெரும் சக்தி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இதர தேசியகட்சிகள் கூட்டணிக்கு முயல்வதாகவும் ஒரு செய்தியை பரவ விடுகிறார்கள். உண்மையில் விஜயகாந்த கட்சி தனித்து போட்டியிட்டு அதன் பலம் நிருபிக்கப்பட்டு ஒருமுறை வெளியேற்றப்பட்டால் பிறகு சரியாகிவிடும் அதன் லட்சணம்.
வைகோ என்கிற போர்வாள் தொடர்ந்து துருப்பிடித்து இந்துத்துவாவில் போய் முடங்கியதைப்போல விஜயகாந்த் என்கிற திரைப்புலி கிளம்பி உள்ளது. இது வைகோ போன்ற ஒரு அழுத்தக்குழு. அவ்வளவுதான். அதை வளர்த்தாலும் அதன் இறுதி முடிவு.. வைகோ போன்று பயனற்று போய் முடங்குவதுதான்.
http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf
அரசின் சென்ற தேர்தல் புள்ளிவிபரங்களை ஆராய்ந்தால் தேமுதிக வின் லட்சணம் புரியும். அது பாமக வைவிட 2 சதவீதமே அதிக வாக்கு பெற்று உள்ளது. இத்தனைக்கும் அது அதிமுகவின் வாக்கும் இணைந்து பெற்றது. காங்கிரஸ் தேமுதிக வைவிட அதிக வாக்கு சதவிதம் கொண்ட கட்சி என்பதை மறைத்து காங்கிரஸை கீழிறக்கி எழுதுவதும் ஒரு பிரச்சாரமே. காங்கிரஸ் பெற்ற வாக்கு 9.3 சதவீதம் தேமுதிகவைவிட அதிகம் திமுக வாக்குகள் இணைந்து உள்ளது இதில். சுயேட்சைகள் தமிழக அளவில் 4.45 சதவீதம் வாக்கு பெற்றுள்ளதைப்போலததான் தேமுதிக வின் வாக்கும். அக்கட்சி தனித்து நின்றால் அது திமுக கூட்டணிக்கு சாதகமே. எப்படியிருந்தாலும் தேமுதிக வை ஏற்றிவிட எண்ணும் பெரியாரிய எதிர்ப்பு சக்திகள் கண்டிப்பாக அக்கடசியை எதாவது ஒரு கூட்டணியில் சேர்த்து அதை பலம் கொண்டதாகவே காட்டும். இப்பொழுது அவர்களுக்கு தேவை வைகோ போன்ற ஒரு ஆள் ஒரு கட்சி அது தேமுதிக-தான். இத்தகைய கட்சிகளிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- ஜமாலன். 01-02-2014 – [email protected]
முற்றுமுடிவானது அல்ல தேடலுக்கான துவக்கம்
பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு” நூல் பற்றிய கருத்துரை
(காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு பற்றிய நூலாய்வரங்கம் 7-12-2013 சனிக்கிழமை மதுரையில் நடந்தது. ஒருநாள் நிகழ்ச்சியாக அமைந்திருந்த இக்கருத்தரங்கை மாற்றுப்பண்பாட்டுச்சிந்தனைக் களம் ஏற்பாடு செய்திருந்தது. நண்பர் பெரியசாமிராஜா நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளைச் செய்திருந்தார். அந்நிகழ்ச்சியல் வாசிக்கப்பட்ட கட்டுரை)
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.
நண்பர் பிரேமின் காந்தியைக் கடந்த காந்தியம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த நூலினை முன்வைத்து நடத்தப்படும் இந்த நூலாய்வரங்கில் நேரில் கலந்துகொள்ளமுடியாத நிலைக்காக எனது வருத்தங்களை பதிய வைக்கிறேன்.
“இயேசுவும் முகமதும் கலை பற்றி எதுவும் எழுதவில்லை. இந்த வகையான உண்மையையும் அழகையுமே நான் தேடுகிறேன். அதற்காகத்தான் வாழ்கிறேன். அதற்காக உயிரைவிடவும் செய்வேன்.” (A Morning with Gandhiji, Young India, 13-11-1924, 20-11-1924) இந்த நூலின் 40-ம் பக்கத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள காந்தியின் இந்த வாசகங்களைத் திறப்பு வாக்கியமாகக் கொண்டு பிரேமின் காந்தியைக் கடந்த காந்தியம் என்கிற இந்த நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறேன். இதை ஏன் திறப்பு வாக்கியமாகக் கொள்கிறேன் என்பதை இந்த வாசிப்பினூடாக நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
இந்நூலுக்குள் நுழைவதற்கு முன்பு, இதன் ஆசிரியர் பிரேம் பற்றிய எனது மனப் பதிவுகளாகச் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
பிரேம் பற்றியும் பிரேமின் எழுத்துக்கள் பற்றியும் அறிமுகம் தேவை இல்லை. குறிப்பாகத் தொடர்ந்து அவரை வாசிக்கும் நமக்கு இந்த அறிமுகம் தேவையற்றதும்கூட. ஆனாலும் பிரேமுடனான கால் நூற்றாண்டு பழக்கத்தை முன்வைத்துச் சிலவற்றைச் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதென்ன கால் நூற்றாண்டு என்று நீங்கள் யோசிக்கலாம். நூற்றாண்டுகளாக வரலாற்றைக் கதையாடுவது தமிழர்களான நமக்கு மிகவும் சுவராஸ்யமும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஒன்று என்பதால்தான் 25 ஆண்டுகளை கால் நூற்றாண்டு என்று குறிக்கிறேன். நூற்றாண்டுகளுக்குக் குறைவான எந்த ஒரு நிகழ்வையும் நாம் வரலாறாகக் கருதுவதில்லை என்பதால், பிரேமின் நட்பு ஒரு வரலாற்றுத் தன்மைக் கொண்டது என்று சொல்வதற்கான முயற்சியாக. “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்கிற புலிகேசி வடிவேலுவின் வசனம் நினைவிற்கு வருகிறது. தமிழ்ச் சமூகம் தன்னைக் கண்டடைந்த, கண்டடைந்து கொண்டிருக்கிற ஒரு கண்ணாடி வரலாறு என்பது.
பிரேமுடன் ஆன எனது தன்வரலாற்றுக் கதையாடலை கொஞ்சம் சொல்லி நூலுக்குள் நுழையலாம்.
1988 அல்லது 1989-லிருந்து பிரேமை எனக்கு தெரியும். அதற்கு முன்பாக பிரேம் அல்லது பிரேதா-பிரேதனை சந்திக்கும் ஆர்வம் கிரணம் வாசிப்பில் எனக்கு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது 83-ல் ஈழப்போர் ஆதரவில் துவங்கிய எனது அரசியல் ஈடுபாடுகள் மூன்றாவது அணி ஆதரவு அரசியலாக மாறி மார்க்சிய-லெனினிய-மாவோயிஸ வாசிப்புகளின் வழி அமைப்பியல், பின்-அமைப்பியல் என விரிந்துகொண்டிருந்த காலம். 88-ல் எனது முதுநிலை அறிவியல் படிப்பு முடிவதோடு அரசியல் இயக்கச் செயல்பாடுகள் நின்று அறிவுத்துறை ஈடுபாடுகளில் கவனம் குவித்த நேரத்தில்தான் ஒரு மதியவேளையில் பிரேமை குடந்தையில் சந்திக்கிறேன். முதல் சந்திப்பிலேயே எனது நீண்டநாள் தேடுதலாக அல்லது ஒரு கனவாக இருந்த ஒரு அனுக்கமான மனிதரைச் சந்தித்த நினைவு தட்டியது எனக்குள்.
இதை எழுதும் இந்தக்கணம் பிரேம் ஒரு சாம்பல்நிற பெரிய ஜீன்ஸ் சர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து குடந்தை காந்திப் பூங்கா முனையில் ஒரு டீக்கடையில் தேநிர் அருந்தியபடி விவாதிக்கத் துவங்கியது காட்சியாகிறது. அக்காட்சியின் பசுமை மனதில் என்றும் நிழலாட தொடர்ந்து பார்க்கும் நேரங்களில் எல்லாம் அல்லது வாய்க்கும் நேரங்களில் எல்லாம் விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். ஆம், இன்றுவரை எங்களது உரையாடல்கள் ஓய்ந்தபாடில்லை.
பிரேம் பார்ப்பதற்கு இறுக்கமாகத் தெரிந்தாலும் மிகவும் அழகாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். தனது கருத்துக்களைத் தெளிவாகவும் சரியாகவும் முன்வைக்கத் தெரிந்தவர். பல நாட்கள் இரவுகள் விடிவது தெரியாமல் டீ சிகரெட் இல்லாதபோது பீடி எனப் பேசிக்கழித்திருக்கிறோம். எப்போதும் ஒரே அலைவரிசையில் அமையக் கூடியவை எங்கள் பேச்சு. சந்தித்த சில நாட்களிலேயே நான் அவரை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பேசிக்கொண்டே 6 கி.மீ. உள்ள எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கும் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல உரையாடல்கள் வழியாக நான் அவரிடம் கற்றவை ஏராளம். எப்போதும் எங்களுக்குள் ஒரு கருத்து உரையாடல் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
அவரது எல்லா நூல்களையும் எழுத்துக்களையும் ஒரு முதல்வாசகனின் ஆர்வத்துடன் வாசித்துவிடுவேன். ஆரம்பத்தில் பிரேமின் எழுத்துக்கள் என்னை வசீகரித்து அவரைப்போலவே எழுதும்படியாகப் பழக நேர்ந்துவிட்டது என்று சில இலக்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இப்படிக் கூறுவது என்னை உயர்த்த அல்ல. பிரேமின் எழுத்து அத்தனை வசீகரமானது என்பதை சொல்லவே. வசீகரம் என்ற வார்த்தையை அதன் ஆழ்ந்த அடர்ந்த இலக்கியப் பொருளில் புரிந்துகொள்ளவேண்டும். அது மௌனி தனது கதைகளில் பயன்படுத்தும் வசீகரம் என்பதைப் போன்றதே. அது ஒரு ஆழ்ந்த பாதிப்பு, பிரேமின் எழுத்துக்கள் எழுத்தை உருவாக்குபவை என்பதைச் சொல்லவே இதை இங்கு சுட்டிக்காட்டினேன்.
அவரது எழுத்துகள் வாசிப்பவரிடம் ஒரு எழுத்தை உற்பத்தி செய்தபடி இருக்கும். சில எழுத்துக்கள் வாசிப்பவரிடம் பேச்சை மட்டுமே உற்பத்தி செய்யும். பிரேமின் எழுத்துகள் எழுத்தை உற்பத்தி செய்யும் ஒரு ஆழந்த மற்றும் அகன்ற மொழிப்புலத்தைக் கொண்டவை. அவரது மொழி ஒருவகை நிகழ்த்துதல் தன்மை கொண்டது. உருவகங்கள் காட்சிப்படிமங்கள் என எழுத்து ஒரு பிம்பத்தைக் கட்டி எழுப்பும் தன்மை கொண்டது.
காந்தியைக் கடந்த காந்தியம் என்கிற நூலும் காந்தி பற்றிய ஒரு புதிய பிம்பத்தை நம்மிடம் கட்டமைக்கிறது. பிரேம் அடிப்படையில் ஒரு படைப்பாளியாக, கோட்பாட்டளராக, அரசியல் செயல்பாட்டாளராக, திறனாய்வாளராக, இலக்கிய வாசிப்பாளராக இருப்பதால் தனது பன்முக வாசிப்பால் இத்தகைய பிம்பத்தை நம்மிடம் உருவாக்க முடிகிறது. அவரது எழுத்தில் படைப்பின் தெறிப்புகள் ஒருங்கு கூடிவிடும்.
அரசியல், வரலாறு, தத்துவம், மானுடவியல் எல்லாம் பிணைந்த ஒரு சமூக-உளவியல் தளத்திலான பன்முக ஆய்வாக பன்மெய்களை உள்ளடக்கிய ஆய்வாக வெளிப்படக் கூடியதாக இருப்பதே அவரது எழுத்தின் தனித்தன்மை. சில புதிய சொல்லாக்கங்களை அவர் உருவாக்கி வெளிப்படுத்தும்போது அது புதியதொரு மொழிப்புலத்தில் பயணிக்கும் துகளைப்போன்று ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கும் சொல்லாட்சியாக இருக்கும். தமிழில் எண்ணற்ற புதிய வார்த்தைகளை, புதிய வாக்கிய அமைப்புகளை அவரது எழுத்தில் கண்டுணர முடியும்.
உதாரணமாக உருவகப்பெருக்கம், முற்றொருமை, உருவழிதல், நிகழ்த்துநிலை ஆன்மீகம், மீயுயர் மெய்மை, வல்லாற்றல், மெய்நிகர் போன்ற சொல்லாட்சிகள். வெறுமனே அர்த்தங்கள் செறிந்தவையாக மட்டமில்லாமல் அந்த மொழி ஒரு இயக்கத்தன்மை கொண்டதாக இருக்கும். இதுவரை அவரது நூல்களில், குறிப்பாக நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைத் தொகுப்பு, இசை உள்ளிட்ட பலவற்றைப்பற்றிய கோட்பாட்டுக் கட்டுரைகள் என எழுதப்பட்ட நூல்களில் இந்த “காந்தியைக் கடந்த காந்தியம்” என்பது வேறொரு புலத்தைச் சேர்ந்தது. அதாவது கணிப்பொறியில் வலைப்பின்னல் எனப்படும் கம்யுட்டர் நெட்வொர்க்கில் பயன்படும் டொமைன் போன்றது. அதாவது இதுவரையிலான அவரது எழுத்துக்களில் இந்த நூல் ஒரு புதிய டொமைனை உருவாக்கி உள்ளது. பிரேமின் எழுத்துக்கள் எப்போதும் புதிய டொமைன்களை உருவாக்கும் தன்மை கொண்டவைதான். நாம் அந்த டொமைனுக்குள் இணைக்கப்பட்டால், உடனடியாக நமது அறிவும் உணர்வும் செயல்படத்துவங்கும். அதற்குள் உள்ள மொழிப்புலத்தில் இயக்கம் கொள்ளும்போது ஒரு புதிய உணர்வுநிலையை, அறிதலைப் பெற்றுவிடுவோம். அப்படித்தான் காந்தி பற்றிய ஒரு புதிய அறிதலை இந்நூல் முன்வைக்கிறது.
காந்தி ஒரு மரபுவாதி என்கிற பழகிய அறிதலைக் கவிழ்த்து அவரை ஒரு நவீனத்துவத்தின் விளைபொருளாக முன்வைக்கிறது இந்நூல். காந்தி ஒரு இந்து மதவாதி என்று நம்பப்பட்டு வந்த கருத்தாக்கத்தைக் கொட்டிக் கவிழ்த்து அதற்குள் அவர் எப்படி கிறித்தவ, சமண, பௌத்த மதங்களின் அறிதலைப் பெற்று ஒரு புதிய இந்திய-இந்து மதம் ஒன்றைக் கட்ட முயன்றார் என்பதை விவரிக்கிறது. காதி என்பது அவரது உலுத்துப்போன கிராமிய மீட்டெடுப்புப் பழமைவாதம் என்பதை சிதைத்து அது எப்படி ஒரு உயிரோட்டமுள்ள தனிமனிதனை உழைப்பு என்கிற படைப்பிற்குள் நிறுத்தும் அந்நியமாதல் அற்ற பொருளாதாரம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பசுமை அரசியல், பெண்மைய அரசியல், தன்னுருவாக்க அரசியல், கூட்டுருவாக்க அரசியல், தலித் அரசியல், மதச்சார்பின்மை அரசியல் எனப் பலதளங்களில் காந்தி இந்திய அரசியல் சொல்லாடலை வெகுமக்கள் அரசியல் உளவியலாக மாற்றிய பாங்கை எடுத்துரைக்கிறது. காந்தியின் நன்நெறி அரிசியலை காந்திய விடுதலைக்கருத்தியலுக்கான மாற்று அரசியலாக, இடையீட்டு உரையாடலாகக் கண்டு விளக்குகிறது. காந்தியன் பெண்மையவாதம், பாலியல்நோக்கு, தீண்டாமைக்கு எதிரான நிலைபாடுகள் என அனைத்து பரிமாணங்களையும் கணக்கில் எடுத்து காந்தியம் என்பது இந்திய-மாற்று-அரசியலுக்கான உளவியலைக் கட்டமைத்ததை விவரிக்கிறது.
காந்தி அம்பேத்கர் முரணை அலசி காந்தியின் மீதான விமர்சனத்தை முன்வைத்து, காந்தியம் அம்பேத்கரை உள்வாங்கவேண்டுமே ஒழிய அம்பேத்கர் காந்தியை உள்வாங்க வேண்டியதில்லை என்கிற அரிதான ஒரு இணைவுநிலை கருத்தை முன்வைக்கிறது. காந்தியம் உருவாகக் காரணமான காந்தி என்கிற தன்னுருவாக்கம் பற்றி விவரிக்கிறது.
பின்நவீனம் விமர்சனமாக முன்வைக்கும் நோஸ்டலாஜியா என்கிற தாய்மண் ஏக்கம், பழமைக்கு திரும்பும் ஏக்கமாக, தாய்நாட்டுக் கலாச்சாரத்தை விமர்சனமற்று ஏற்கும் ஒரு உணர்வாக காந்தியிடம் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி அதுவே இறுதிவரை அவரது ஆழ்மனமாகக் கட்டமைகிறது. இந்துமதத்தின்மீது கடும் விமர்சனங்களைக் கொண்ட காந்தி இறுதிவரை இந்துமத குறியமைப்பை விட்டு வெளியேராமல் அதன் உள்ளடக்கங்களை மட்டும் மாற்ற முயன்றார். தான் போதிப்பது ஒரு “புதிய இந்துமதம்” என்பதைக்கூட வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும், இந்து சனாதன தர்மத்தை, வர்ணாசிரமத்தை, சாதியத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறையில் சாத்தியப்படாத விளக்கங்களைத் தந்துகொண்டிருந்தார் என்பதை விளக்குகிறது இந்நூல். உண்மையில் ஒரு இலட்சிய இந்துமதமே அவரது ஆழ்மன உளவியலாக இருந்தது. அதை இந்தியச் சமூகத்தின் ஆழ்தள உளவியலாக மாற்றியதில் காந்தியின் பங்கு கணிசமானது என்பதை விமர்சனத்துடன் அணுகவேண்டும். இந்த ஆழ்தளம் காந்தியைப் புனிதக் குறியீடாக மாற்றியது. இதற்கு எதிரான தன்முனைப்பு காந்தி என்கிற புனித பிம்பத்தைச் சுட்டு கொன்றுவிட்டு காந்தி கட்டிய ஆழ்தள உளவியலைத் தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது.
25 ஆண்டுகளாக ஒரு அந்நிய மண்ணில் இருக்கும் என்னால் அந்த நோஸ்டாலஜியா என்கிற பழமை அல்லது மரபு ஏக்க உணர்வின் தீவிரத்தை, வேகத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம் அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் மத உணர்வால் அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். காரணம் மதம் என்பது தாய்மண் பற்றிய ஒரு கலாச்சார ஏக்கம், தாய்நாட்டு அடையாளம், அல்லது தனது குடும்ப உணர்விற்கான ஒரு பதிலீடு. அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் இரண்டு விஷயங்களைப் பெரும்பான்மையாகக் காணலாம். ஒன்று தங்கள் மத அடையாளத்தை உறுதிப்படுத்துவது. விளையாட்டாக சொன்னால், தமிழர்கள் இந்துவாக இருந்தால் பிஜேபி-யிலும், முஸ்லிம்களாக இருந்தால் பி.ஜே (பி. ஜெயுனாலாபுதின்) குழவிலும் இணைந்து விடுவார்கள். இவர்களுக்கு மதம் என்பது ஒரு அறிவாக, அறிதலாக, புலனாக மாறிவிடுகிறது. காரணம் தாய்மண் குறித்த ஏக்கம். குடும்பமற்ற தன்மையின் ஏக்கம். தனது சொந்தநிலத்துடன் ஏற்பட்ட பிணைப்பு. தனது தனிமை. அந்நியனாக உணர்வதால் வரும் அடையாளச்சிக்கல். இதனைத் தேசபக்தி சிண்ட்ரோம் அல்லது தேசபக்தி நோய்ககுறி அல்லது தாய்ஏக்கம் அதாவது பிறந்தமண் ஏக்க இடிபலாக்க நோய்ககுறி என்றும் சொல்லலாம். காந்தி இதிலிருந்து மீண்டு தன்னை ஒரு மகா “ஆத்மாவாக” பதிலீடு செய்ததில்தான் தனது வெற்றியையும் தோல்வியையும் அடைகிறார்.
காந்தி என்ற குறியீடு புனித இந்து மதவாத தீர்க்கதரிசன பிம்பமாகவும், பயனற்ற காங்கிரஸ் அரசியல் பேரமாகவும் (சூப்பர் ஈகோ) மாற்றப்பட்டுவிட்டதால். காந்தியை விட்டுவிட்டு காந்தியத்தை மறுவாசிப்பு செய்து புத்தாக்கம் செய்யும் பணியை இந்நூல் செய்கிறது.
பிரேம் முன்னுரையில் சொல்வதைப்போல ஓவர் இண்டர்பிரட்டேஷனாக சில இடங்களில் தோன்றினாலும், வாசிப்பின் சுதந்திரம், பிரதியை மறுகட்டமைப்பு செய்வது விடுதலைக்கான அரசியலின் பகுதி என்றவகையில் சரியானதும் ஏற்புடையுதுமான ஒன்றே.
காந்தி தன்னுருவாக்க முனைப்பிலிருந்து கூட்டுருவாக்க நிலைக்கு நகர்ந்து செல்லும் வினையைப் பற்றிய ஒரு சமூக,அரசியல், உளவியல் ஆய்வு இது. இதில் காந்தியின் தன்னுருவாக்கம் காந்தியம் என்கிற கூட்டுருவாக்கமாக மாறிச்செல்லும் புள்ளிகள் நுணுக்கமாக, காந்தியின் வாழ்நிலையை ஆராய்ந்து மிகவும் கவனமாகவும், சமூக,அரசியல்,பொறுப்புணர்வுடனும் விடுதலை ஏற்பு அரசியல் அறிவுச் செயல்பாட்டுடனும் எழுதப்பட்டுள்ளது. இதில் விடுதலை ஏற்பு அரசியல் அறிவுச்செயல்பாடு என்பது முக்கியமானது, கவனத்தில் இருத்த வேண்டிய ஒன்று. இந்த நூல் அத்தகைய ஒரு செயல்பாட்டை முன்வைக்கிறது.
காந்தியை மகாத்மாவாகவோ அல்லது புனிதராகவோ அல்லது மத தீர்க்கதரிசியாகவோ முன்வைக்காமல் அவரது கோட்பாட்டுக் கருத்தாக்கங்கள் எப்படி எதிர்காலத்திற்கானதாக முன் அனுமானிக்கப்பட்டுள்ளது என்பதை நுட்பமாக வாசித்துக் காட்டும் நூல் இது. பிரேமின் மொழிப்புலம் காந்தியை மகாத்மாவாக ஏற்க மறுப்பதையும் இந்த நூலில் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
காந்தியின் ஆகப்பெரும் கனவாக நான் கருதுவது அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக தனக்குள் உருவாக்கிக் கொண்ட வேட்கை பிம்பமே. அதாவது, காந்தி தனக்குள் தன்னை உருவகித்துக்கொண்ட பிம்பம். தான் ஒரு ஏசு அல்லது முகமதுநபி போன்று இந்தியாவிற்கான ஒரு தீர்க்கதரிசியாக மாறிவிட வேண்டும் என்பதே. இப்படி எண்ணுவது சுயநலம் சார்ந்த வேட்கை அல்ல. சகமனிதர்களின் துயரம் தாங்கமுடியாத மனதின் உக்கிரம் கொள்ளும் ஒரு பிம்பம். தானற்று பிறராகுதலால் உருவாகும் ஒரு சொல்லொன்னாத் துன்பநிலை. புத்தனுக்கு ஏற்பட்டதைப்போல, தன்னறிவு அற்ற நிலையில் உருவாகிப் படியும் வேட்கை. அந்த வேட்கை கொள்ளும் ஒரு பெருங்கனவு. அதில் உருவாகும் தன்னமைவு சமூகத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடியது. அது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. தனது உள்மன அவசத்தில் ஒரு பேரமைதி கொண்ட மனதை உருவாக்கிக் கொள்ள முனைவது. காந்தியின் தன்னுருவாக்கம் பற்றி முதற்பகுதிகளில் விவரிக்கும் பிரேமின் இந்த நூல் இப்புள்ளிகளைத் தடம்காண முனைகிறது, அல்லது தடமாக விட்டுச்செல்கிறது.
நவீனத்துவச் சொல்லாடலில் காலாவதியாகிப்போன தீர்க்கதரிசி என்கிற பிம்பத்தை ஒரு அரசியல் செயல்பாட்டுக்களத்தில் நவீன சிந்தனைகளுடன் புத்தாக்கம் செய்ய முயன்றவர் காந்தி என்பதே எனது கருத்து. எனது “புராதனத்தாயாக விரும்பிய நவீனத் தந்தை- காந்தியின் உடலரசியல் பற்றி.” என்ற கட்டுரையில் இந்தக் கருத்தாக்கத்தைதான் தொட்டுச்செல்ல முயன்றிருக்கிறேன். இந்த நூலை வாசித்தபின் அந்தக் கருத்து எனக்குள் உறுதிப்பட்டது மட்டுமின்றி, அது ஒரு மதிப்புக்கூடிய சொல்லாடலாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு மார்க்சிய இடதுசாரி என்ற வகையில் காந்தியின்மீது இருந்து ஒருவித குறைவான பார்வை (அதை ஏளனப்பார்வை என்றுக்கூடச் சொல்லலாம்) முற்றிலும் தகர்ந்துபோய்விட்டது.
காந்தி ஒரு இந்திய மதத்தைக் கட்டமைக்க முயன்றதைப் பற்றி பிரேம் இதில் விவரிக்கிறார். இந்துமதம் என்று காந்தி முன்வைத்தது இன்று நாம் புரிந்துகொண்டிருக்கும் மரபான இந்துமதம் அல்ல என்று தனது பின்நவீனத்துவ வாசிப்பில் சிதைவாக்கம் செய்து முன்வைக்கிறார். காந்தி ஒருவகையில் பிராமண மேலாதிக்க இந்துமதத்தைத் தனது தந்திர மொழியில் கீழ்நிலையாக்கி, தலைகீழாக தாழ்த்தப்பட்டவர்களை உள்ளடக்கிய ஒரு இந்து சமதர்ம மதத்தை உருவாக்க முயன்றார். சமதர்மம் என்பதை சோசலிஷம் என்கிற ஆங்கிலச் சொல்லிற்கானதாக நான் இங்கு ஆளவில்லை. பிராமண இந்துமதத்தின் அடிப்படையான “தர்மா” வில் இல்லாத சமநிலை என்பதை இணைத்து சம “தர்மம்” என்கிறேன். காந்தியின் இந்து மதம் அதாவது இந்திய மதம் நுட்பமாக பழமைவாத பிராமண இந்துமதத்தை ஒழித்துவிடும் என்றுணர்ந்த இந்துத்துவ அடிப்படைவாதச் சக்திகள் காந்தியைக் கொன்று தங்கள் தர்மத்தையும் மகாத்மாவையும் காத்தன என்பது வரலாறு. மகாத்மாவாகத் தொடர தான் இயற்கையாக இறக்கக்கூடாது என்று தனது மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் காந்தி.
நண்பர் பிரேம் முன்வைக்கும் காந்தி பற்றிய பிம்பம் இந்தப் புள்ளியை வெட்டிச் சென்று காந்தியின் செயல்படு அரசியலான காந்தியம் என்கிற கோட்பாடு பற்றிய வரையறையைச் செய்ய முனைந்துள்ளது. அந்த வரையறையினை இந்திய அரசியல் எப்படித் தந்திரமாகக் காந்தியைப் புனித பிம்பமாக்கி காந்தியத்தை நிராகரித்துவிட்டது என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய இந்திய அரசியலுக்குக் காந்தி என்ற பிம்பம் தேவை, ஆனால் காந்தியம் தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பிரேம். ஆனால் விடுதலை ஏற்பு மாற்று அரசியல்வாதிகளுக்கோ காந்தியம் தேவை , காந்தி தேவையில்லை.
முன்னுரையில் பிரேம் “பின்நவீன, பெண்ணிய, மார்க்சிய உளப்பாங்கு உள்ளவன்” என்று தன்னை முன்வைக்கிறார். இதில் உளப்பாங்கு என்ற சொல்லாட்சி முக்கியமானது. ஒரு சிந்தனைமுறையை வழிகாட்டுதல் முறையாகக் கொண்டு ஒன்றை ஆராய்வது இயல்பானது. ஆனால் அந்த சிந்தனைகளைத் தனது உளப்பாங்காக கொள்வது என்பதே முக்கியமானது. இது ஒருவகையில் ஆதல் என்கிற “பிக்கமிங்” என்ற நிலை. பிரேமின் இந்த ஆதல் என்கிற நிலைதான் அவரது எழுத்துக்களின் ஒரு தனிச்சிறப்பான தன்மை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இன்று உலகமய குப்பைக் கூடங்களாக, கழிவுகளாக மாற்றப்பட்ட மூன்றாம் உலகில் காந்தியத்தின் பசுமை அரசியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதை முதன்மைப் படுத்திக்காட்டுகிறார் பிரேம். இயந்திரங்கள் அற்ற சமூகத்தில் காந்தியத்தின் தேவைப்பற்றி பேசும் பகுதிகள் கொஞ்சம் கற்பனாவாதமாகத் தோன்றலாம். ஆனால், உலகம் அந்த நிலைக்கு நகரும் என்கிற ஊகத்தின் அடிப்படையில் அந்த கருத்தாக்கத்தை கவனத்துடன் பரிசீலிப்பது அவசியம் என்கிறார்.
நூல் பற்றிய அறிமுகத்தில் காந்தியம்-மார்க்சியம்-அம்பேத்கரியம் என்கிற இந்தியாவின் மூன்று முக்கிய முரண்கள் பற்றிப் பேசுகிறார். இன்று அம்பேத்கரியம் பொதுச்சிந்தனையில் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியம் புனிதப் பெருஞ்சொல்லாடலாக மூடப்பட்டுவிட்டது. மார்க்சியம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு உள்ளது என்கிற அவதானிப்பு முக்கியமானது. இந்த முப்பெரும் கோட்பாடுகளை இணைத்து ஒரு புதிய வழிகாட்டும் அரசியல் நெறிமுறையை, வாழ்தலுக்கான கோட்பாட்டை உருவாக்க முனையும் மாற்றுச் சிந்தனையாளர்கள் கவனம் குவிக்க வேண்டிய பகுதி இது. பெரியார், காந்தி, அம்பேத்கர் இணைப்பு பற்றிப் பேசுவதில் உள்ள சிக்கல்கள் கூட ஆராயப்படவேண்டிய முக்கியப் புள்ளிகள்.
நூலின் முக்கியமான பகுதியான காந்தியின் தன்னுருவாக்க அரசியல் பகுதிகள் மிகவும் கவனத்துடன் உள்வாங்கப்பட்டு எழுதப்பட்டு உள்ளது. காந்தி உருவான வரலாற்றைச் சொல்லும் இந்த முதல் பகுதியில் ஒரு சமூக-அரசியல்-உளவியல் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தின் முற்றுப் பெற்ற நிலைபற்றிய வர்ணனையில் துவங்கி, தனிமனிதர்கள் தேவையில்லை என்ற நிலைக்கு நகர்ந்து, கூட்டுநினைவு என்பதாக மாறும் காந்திய உளவியல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்திய தனிமனித உருவாக்க அரசியலில் காந்தி மற்றும் காந்தியத்தின் பங்களிப்புகள் பற்றிப் பிரேம் முன்வைக்கும் பார்வைகள் அசாத்தியமானவை. இந்தியாவில் அத்வைதம் கண்டுணர்ந்த தனிமனிதன் என்பதைக் காந்தி நவீன அரசியலில் மீட்டுருவாக்கம் செய்கிறார். சாமான்யர்களை சுதந்திர, சமஉரிமை, ஜனநாயக உணர்வுகொண்ட நவீனத்துவத்தின் தனிமனிதர்களாக கொள்கை, கோட்பாடு கொண்ட வரலாற்று அரசியல் தன்னிலைகளாக மாற்றியது காந்தியே.
காந்தி மிகைமனிதராக, அதிமனிதராக பல முரண்கொண்டவராக இருப்பதற்கான அவரது உளவியல் பின்னணிகளை விவரிக்கும் பிரேம் அதிலிருந்து அவர் தன்னை உருவாக்கிக்கொண்ட வரலாற்றை நுட்பமாக விவரித்துச் செல்கிறார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி “காந்தியாக” மாறிய அந்த தன்னுருவாக்க வரலாறு மிகவும் சுவராஸ்யமாகவும் அதே நேரத்தில் அதிக கவனத்துடனும் முன்வைக்கப்பட்டு உள்ளது.
நான் வாசித்த காந்தி பற்றிய நூல்களில் அதிகம் கவனம் கொள்ளாத ஒரு முக்கிய தடம் ஒன்றை சரியாகக் கண்டுணர்ந்து விவரிக்கிறார் பிரேம். இது அவரது அசாத்தியமான அறிவின், வாசிப்பின், சுயச்சிந்தனையின் பின்புலத்தில் உருவான ஒன்று. நவீனத்துவம் உருவாக்கிய தனிமனிதன் குற்றம் மற்றும் குற்றம் பற்றிய உணர்வு, அதாவது குற்றஉணர்வு என்பதின்மேல்தான் கட்டப்பட்டு உள்ளான். இதன் பின்புலம் மேற்கத்திய கிறித்துவத்தின் பாவமன்னிப்பு கருதுகோளே. மனிதப் பிறப்பே பாவத்தில்தான் உருவாகிறது என்பதே அதன் அடிப்படை. இந்தியச் சமூகத்தில் பாவமன்னிப்பு இல்லை, பரிகாரம் உண்டு. பாவமன்னிப்பு தனிமனித உணர்வோடு சேர்ந்தது என்றால், பரிகாரம் அந்த அமைப்பின் விதிகளோடு சேர்ந்தது. பரிகாரத்தில் அமைப்பு உளவியலே முதன்மையானது. காந்தி இந்த பரிகாரவாதத்தை நீக்கி உண்மையின் முன் நிர்வாணமாக நிற்பது என்கிற தனிமனித உளவியலை முன்வைக்கிறார். இது இந்திய மனிதனின் நவீன மனசாட்சியாக உருவமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உண்மை உள்ளது, அதைக் கண்டுணர்வதே காந்தி முன்வைத்த சத்தியம்.
பிரேம் கூறும் இந்தியா போன்ற முற்றுப் பெற்றுவிட்டதான எண்ணத்தில் உள்ளஇ முழுமையடைந்துவிட்டதான மூடுண்ட ஒரு அமைப்பில் காந்திதான் குற்றஉணர்வு என்ற ஒரு புதிய மனப்புலத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார். இதுதான் தனிமனிதனை அவனது எல்லாவித அமைப்புப் பாதுகாப்பிலிருந்தும் விலக்கித் தனியனாக ஆக்கி அச்சம் கொள்ள வைக்கும் ஒன்று. அந்த அச்சத்தின்முன் கடவுளும் அருகதையற்றவனாகிவிடுவான். அந்தத் தனிமையில் உணர்வது உண்மை, சத்தியம் மட்டுமே. காந்தி இந்த மனப்புலத்தைத் தனது வாழ்தலின்மூலம் இந்தியச் சமூகத்தில் கட்டமைத்தவர் என்பதே முக்கியம்.
காந்தியம் உருப்பெற்ற தளம் விளிம்பை மையத்திற்கும் மையத்தை விளிம்பிற்கும் நகர்த்தியது, இந்தக் குற்றணர்வுத் தளத்தை காந்தி மாற்றியமைத்தார். இதுவே அரசுமையவாதிகள், அடிப்படைவாதிகள் காந்தியை எதிர்க்கக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.
காந்தி குறித்த எனது தனிப்பட்ட வாசிப்பில் காந்தி உண்மையைத் தேடும் தனது பயணத்தில் தனக்குள் இருந்த ஒரு நவீன மனிதனுடன் போராடிக் கொண்டேயிருந்தார். அவரது ஆளுமை ஒரு பிளவாளுமைத் தன்மை கொண்டது. அதாவது சீசாய்ட் தன்மை கொண்டது. தனக்குள் ஒரு தீர்க்கதரிசியை ஒரு மதபோதகரை பிம்பமாகக் கொண்டு சிந்தித்தவர் என்பதால் எப்போதும் மனிதனாக இருப்பதின் வாதையை உணர்ந்தவராக இருந்தார். மனிதனும் தீர்க்கதரிசியும் அரசியல்வாதியும் ராஜதந்திரியும் சாமான்யனும் எனச் சூழலின் ஆளுமைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பிம்பம் முன்னிலை வகிப்பதை அவரது வாழ்வின் பல செயல்பாடுகள் முன்பின் முரணாக அமைந்ததிலிருந்து புரிந்துகொள்ளலாம். பிரேம் இந்நூலில் இந்த முரண்பட்ட நிகழ்வுகளைச் சமூக-உளவியல் பின்னணியில் விவரிக்கிறார். ஒரு இடத்தில் காந்தியிடம் இருந்த இந்த மனப்பிறழ்ச்சித் தன்மையைக்கூடச் சுட்டிக்காட்டுகிறார்.
காந்தி இந்திய மரபிற்கு வெளியே தனிமனிதத் தேடல் அதாவது இறைவனை நேருக்கு நேராக அறிதல் என்கிற புதிய வழியை முன்வைத்தார். அதாவது நவீனத்துவ வழியை முன்வைத்தார். இந்தியக் குழு, சாதி அமைப்பிலிருந்து தனிமனிதனை பிரித்தெடுக்க முயன்றார். ஆனால் இந்திய மரபை அவர் மீறினாரா? என்பது விவாதத்திற்கு உரியது. பிரேமின் இந்த வாசிப்பில் இந்திய மரபை அவர் பல இடங்களில் மீறியதைச் சுட்டிக்காட்டி உள்ளார். அவை இன்னும் ஆழ்ந்த உரையாடலுக்கு உரியவையாக உள்ளன.
காரணம், காந்தி ஒரு புதிய சிக்கலை அடைந்தார். அதாவது நவீனமனிதனை இந்திய மரபிற்குள் மறுவரையரை செய்வதன்மூலம் ஒரு புதிய தீர்க்கதரிசனத்தை ஒரு புதிய நவீன மதத்தை (புதிய என்பதும் நவீன என்பதும் ஒன்றல்ல. நவீன கருத்தியலுக்கான புதியமதம் என்பதே) உருவாக்க முயன்றார். அதன் உள்ளுரையாகவும் வெளிச்செயலாகவும் அவருக்கு ஆசிரமும் அரசியலும் அமைந்தன. இந்த இரண்டிற்குள்ளும் ஒரு இணக்கமின்மை இருப்பது அவருக்குள் ஒரு இன்மையை போதாமையை உருவாக்கிக்கொண்டே இருந்தது. இந்தப் போதாமையைக் காந்தி எப்படித் தனது செயல்களின் வழியாக பதிலீடு செய்தார் என்பதை இந்நூலில் நுட்பமாக விவரிக்கிறார் பிரேம்.
பிரேம் காந்தியின் நிகழ்த்துநிலை ஆன்மீகம் என்ற ஒன்றை விவரிக்கிறார். அதை ஒரு முன்நவீனத்துவ மதம் சார்ந்த சொல்லாடலுக்குள் வைக்காமல் நவீனத்துவ பகுத்தறிவுச் சொல்லாடலுக்குள்ளும் வைக்கமுடியாமல் பின்நவீன சொல்லாடலாக்க முனைகிறார். இது விரிவாக நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது, வாசகர்கள் இதனை வாசித்து அறிந்து கொள்ளலாம்.
காந்தியை நவீனத்திற்குள் வைத்து ஆராய்ந்து அவரது பின்நவீன நிலைக்கான தயாரிப்புகளாக இந்திய மரபை இணைக்க முயன்றதின் ஒரு வரைபடமாகவே துவங்குகிறது இந்நூல்.
“இறைமறுப்பாளருக்கு கடவுள் இறைமறுப்பாளராக இருக்கிறார்” என்ற காந்தியின் இவ்வாசகம் முக்கியமானது. கடவுளின் நீக்கமற நிறைந்த தன்மையை முன்வைப்பதன் மூலம் போதாமை என்பதை நிறைவு செய்யமுயல்கிறார். காந்தி தனது மதமாக அறிவித்தது உண்மையையே என்பதை அவரது குறிப்புடன் சுட்டுகிறார் பிரேம். ஆனால் உண்மை என்று காந்தி முன்வைப்பது சத்தியம் என்கிற இந்திய மரபில் உள்ள நித்தியம் அல்லது நிரந்தரம் சார்ந்த ஒரு கருத்தாக்கமே. உண்மை என்பது ஒரு சார்பியல் சார்ந்த நவீனச் சொல்லாடல் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காந்தி சொன்னது நித்தியமான ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள சத்தியம். அல்லது அதன் நவீன வடிவமாக உள்ள மனசாட்சி என்பதே. தனக்கு ஒருவன் உண்மையாக இருப்பதன்மூலம் மொத்த சமூகத்திற்கும் உண்மையானவனாக இருக்க முடியும் என்பதே. இந்த புள்ளிகளில் இன்னும் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். காந்தியின் மனித பிம்பம் நவீனத்துவ மனதும் மரபான உடலும் கொண்டது. மனது விகசிக்கவும் உடல் ஒடுங்கவுமானது.
காந்தி குற்ற உணர்வையும் போதாமையையும் இந்தியச் சமூகத்தில் முன்வைத்தார் என்பது ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளி என்றால், நவீனநிலையை இந்தியவயமாக்குவது காந்தியின் செயல்திட்டம் என்பதைக் கண்டறிந்தது பிரேமின் மற்றொரு முக்கிய ஆய்வுப்புள்ளி. அதாவது காந்தி தன்னையறியாமல் ஒரு இந்திய நவீனத்துவத்தை கட்டமைக்க முயன்றார் என்பதே. இங்குதான் காந்தியை முழுமையாக தலைகீழாக்குகிறார் பிரேம். அதாவது காந்தியைச் சிதைவாக்கம் செய்து, வெளியில் மரபாக தோன்றுவதற்குள் உள்ள நவீனத்துவ வேட்கை நிலையை வெளிப்படுத்திவிடுகிறார். ஆக காந்தி நவீனத்துவத்தின் எதிரி அல்ல. அல்லது ஒரு மரபான மதவாதி அல்ல. நவீனத்துவத்தின் மேற்கத்தியவாதத்தை அதன் பகுத்தறிவுக் கருத்தியலை நீக்கி இந்திய நவீனத்துவத்தை மரபான சிந்தனைகளிலிருந்து கட்ட முயன்றவர். இதில்தான் அவரது தேசியம் என்பதும் உள்ளது. இது விரிவான ஆய்விற்கு உரியது என்பதை மட்டும் பதிய வைப்போம்.
காந்திக்கும் அவரது தந்தைக்குமான உறவு பற்றிய அலசல். இதனைப் பல உளவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர் என்ற போதிலும் இதனை பிரேம் காந்தியின் இணைமுரணாக முன்வைக்கிறார். இதில் பரவலாகப் பேசப்படும் பிராய்டை பயன்படுத்தி காயடிப்பு மனநிலை என்று ஆராயும் பணியைத் தவிர்த்திருப்பது ஆறுதலானது. காந்தியின் தந்தைக்கும் தாய்க்கும் இடையிலான உறவு காந்தியின் தன்னுருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது என்பதைக் கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
காந்தி “ஆங்கில கல்விபெற்ற பிரிட்டிஷ்-இந்திய அறிவுத்திட்டத்தின் உற்பத்தி” என்பதைச் சொல்லும் பிரேமின் கருத்து முக்கியமானது. காந்தியின் தந்திர உத்திகள் மரபு-நவீனம் இரண்டிலும் இயங்க உருவானது பற்றிய விவரிப்பும் முக்கியமானவை. குழந்தை மன இயல்பில் உருவாகும் பிறழ்ச்சி பற்றிய விவரணைகளும் கூட.
பக்கம்–40-ல் காந்தி மரபு மீறலையும் மாற்று வழக்குகளையும் தெரிவு செய்பவராக இருந்தார் என்று சொல்லும் பிரேம் காந்திக்கு ஒரு சலுகை அளிப்பதாகவே தோன்றுகிறது. மாற்று வழக்குகளைத் தெரிவு செய்தவர் மரபை மீறினாரா? காந்தி ஒரு அத்வைதி சனாதனத்தில் நம்பிக்கை கொண்டவர். வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொண்டவர் என அவரே அறிவித்து உள்ளார். பிரேமின் இந்த அறிவுச் சட்டகத்திற்குள் இவற்றையும் உள்ளடக்கிக் கூறுவதன் மூலமே காந்தியை முழுமையாக இந்த சட்டகத்திற்குள் அடக்க முடியும். நூலின் இறுதியில் குறிப்பாக அம்பேத்கர் பற்றிய ஆய்வில் இதனை விவாதிக்கிறார். காந்தியின் மீதான விமர்சனமாக முன்வைக்கும் அதே வேளையில், வளர்ந்து வந்த பேரபாயமான இந்துத்தவ மதவாத சக்திகளுக்கு இது ஒருவகை ஊக்கமளித்தலாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனது வாழ்வே எனது செய்தி என்கிற காந்தியின் வாசகத்தை பிரேம் தலைகீழாக்குகிறார், செய்தி சொல்வதே வாழ்க்கை என்பதாக. ஒருவகையில் இந்தப் புள்ளி முக்கியமானது. தனது வாழ்வை ஒரு அரசியல், சமூக, மத ஆன்மீகச் செய்தியாக முன்வைப்பது. இதனை முகமது நபிகள் தனது இறுதிப் பேருரையில் அறிவித்த சுன்னா எனப்படும் “எனது வாழ்வே உங்களுக்கு வழிகாட்டி” என்பதோடு ஒப்பிடலாம். தன்னை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் ஒரு வழிகாட்டும்முறை என்பது தன்னுணர்வுமிக்க தீர்க்கதரிசிகளுக்குச் சாத்தியமானதே. தீர்க்கதரிசிகள் வாழ்தல் புலத்தை கட்டமைப்பவர்கள் என்பதால் தமது வாழ்வை ஒரு செய்தியாக முன்னுதாரணமாக மாற்றி விடுகிறார்கள். அல்லது அவரது வழித்தோன்றல்களால் மாற்றப்பட்டு விடுகிறார்கள்.
நான் மிகவும் ரசித்த வரிகள் பிரேமின் படைப்புணர்விற்கு ஒரு சான்றாக இதை சுட்டலாம். பக்.80–ல் “காந்தியின் பரிசோதனை முடிந்து காந்தியின் மீதான பரிசோதனை தொடங்கும் இடம்” என்று சத்தியசோதனை முடிந்தவுடன் துவங்கும் அவரது அரசியல் வாழ்வு பற்றி சொல்லப்பட்டுள்ள வாசகம். காந்தியின் வரலாறு முடிந்து, வரலாற்றில் காந்தி உருவாகும் புள்ளியை அற்புதமாக, ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுகிறது. இது போன்ற இயங்கியல் முரணாக அமைந்த பல வாக்கியங்கள் இந்நூலில் மொழியழகை விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கு விரவிக் கிடக்கிறது.
பக். 87-ல் காந்தி உண்மையுடன் நடத்திய சோதனைகள் முடிந்து உண்மை காந்திக்கு வைக்கப்போகும் சோதனைகள் இங்கு தொடடங்கின என்கிறார் பிரேம். இதுவும் இலக்கிய ரசனையுடன் சொல்லப்பட்ட இயங்கியல் முரணை உள்ளடக்கிய ஒரு வாசகம். இத்தகைய வாக்கியங்களை திறப்பு வாக்கியங்கள் (key statement) எனலாம்.
“தேசபக்தி என்பது என்னைப் பொறுத்தவரை அனைத்து மக்களுக்குமான நல்வாழ்வு. அது ஆங்கில ஆட்சிவழியாகக் கிடைக்குமெனில் அதை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.” இதுபோன்ற காந்தியின் வாசகங்களை பொறுத்தமான இடங்களில் பயன்படுத்தி அதை விவரிக்கும் பகுதிகள் முக்கியமானவை. காந்தி விடுதலை, தேசபக்தி பற்றி கொண்டிருந்த கருத்து இன்று சொல்லப்படும் இந்திய தேசபக்தி என்கிற மட்டைப்பந்தாட்ட தேசபக்தியோ, மாட்டை வெட்டாதே மனிதனை வெட்டு என்கிற இந்துத்துவ பாசிச தேசபக்தியோ அல்ல. சுயநலமற்ற மக்கள் நலத்தில் அக்கறைக் கொண்ட தன்முனைப்புவாதமற்ற தேசபக்தி. சகமனிதனின் துயரத்தை தனதானதாக ஆக்கிக்கொள்ளும் ஒரு வேட்கைப் பரவசநிலை.
காந்தியம் என்றால் என்ன என்பதை விவரிக்கும் பிரேம் “காந்தி வறுமை, அடித்தளமக்கள் வாழ்வாதாரம் என்பதை அரசியல் சொல்லாடலில் இணைக்கிறார் ” (பக்.98) என்றும் காந்தியம் என்பது அடிப்படை ஆன்மீகவிடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, ஏழ்மையிலிருந்து விடுதலை, மனமும் உடலும் ஆன்மாவும் இணைந்த சத்தியாக்கிரகம் என்று ஒரு கோட்பாட்டு சட்டகத்தைத் தருகிறார். இதன் அரசியல் சமூக விளைவாக அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை எழுத காந்தியம் களம் அமைத்துக் கொடுத்தது என்கிறார்.
காந்தியம் என்பது காந்தியின் உடல்மைய அரசியல், மனிதமைய ஆன்மீகம், அறமைய இறையியல், இயற்கைமையப் பொருளாதாரம் என்கிற நான்கு மையங்களைக் கொண்டது என்றும் விவரித்துச் செல்கிறது இந்நூல்.
பக்-136-ல் காந்தியும் மார்க்சும் வரலாற்றை வேறுவிதமாகப்பார்த்தாலும் இரண்டும் போரற்ற அமைதியான உலகம் என்ற ஒன்றையே முன்வைத்தனர் என்கிறார். மார்க்சின் வர்க்கமாதல் என்ற செயலின் முதல் நிலையாகக் காந்தியை முன்வைக்கிறார். அதாவது வர்க்கமயமாதல், வர்க்க அறமாதல் என்ற போக்கில். மார்க்ஸ் சொன்ன தத்துவவாதிகள் பற்றிய குறிப்பில் உலகை விளக்குதலும் மாற்றுதலும் ஒன்றாகிவிடுகிறது காந்திக்கு. விடுதலையை தேர்ந்தெடுத்தவருக்கு அடிமைநிலை ஒன்றும் செய்யாது என்கிற காந்தியத்தின் நிலை அது.
இந்திய சுயராச்சியம் என்ற காந்தியின் மிக முக்கியமான நூல் ஒரு கோட்பாட்டு நூலாக முன்வைக்கப்படுகிறது. சமீபத்தில் செம்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது என்பது முக்கியம். காந்தியத்தை இந்த நூலைச் சிதைத்து வாசிப்பதன்மூலம் வெளிப்படுத்துகிறார் பிரேம். குறிப்பாக இந்த நூல் விவாதத்தை விரிவாக செய்து உள்ளார். காந்தியின் தன்னுருவாக்க வினையை சத்திய சோதனை நூலையும் கூட்டுருவாக்க வினையை ஹிந்த் சுவராஜ் என்கிற இந்தியத் தன்னாட்சி என்கிற நூலையும் கொண்டு விவரிக்கிறது இந்நூல்.
வளர்ச்சி குறித்த அரசியல் கருத்தாக்கம் மற்றும் உயர்தொழில்நுட்ப எதிர்ப்பில் காந்தியம் பின்நவீன வாசிப்பு செய்யப்பட்டுள்ளது. பகுத்தறிவின், நவீனத்துவத்தின், நவீன அறிவியலின், அதன் விளைபொருளான தொழில் நுட்பத்தின் கொடுங்கோன்மை, ஒற்றை உலகமான உலகமயப் பொருளாதாரத்தில் இந்த நூல் எதிர்த்து பாய்ச்சம் வெளிச்சம் பற்றி விவாதிக்கப்படுகிறது.
மனித உடலின் எல்லைகளை விரிவுபடுத்தியதால் வந்தகேடு. கால் என்பதை பல வாகனங்களாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக போர் பொறியமைவுகள் கட்டமைக்கப்பட்டன. மனித உடல் ஒரு போர் எந்திரமாக கட்டமைக்கப்பட்டது. இந்த கேட்டை காந்தி முன்னுணர்ந்ததை விவரிக்கிறது இந்நூல். ஒருவன் தனது அருகில் உள்ள மனிதனுக்கு உதவிசெய்தால் போதும். ஆணவமே உலகம் முழுவதும் உதவி செய்வதான எண்ணத்தை உருவாக்குகிறது என்கிறார் காந்தி. பொதுநலம் என்பதன் பிம்பத்தையும் தன்மதிப்பு சுகத்தையும் கேள்விக்கு உட்படுத்தி உலகின் ஓரமைவாக்க கருத்தியலை அதன் பிம்பத்தை போட்டு உடைக்கிறார் காந்தி.
குறிப்பாக இந்த நூலின் வாசிப்பில் நாம் அல்லது நான் இடர்ப்படும் இடம், ஒரு காந்திய சார்புநிலை அல்லது காந்தியை விடுதலைக் கருத்தியலுடன் இணைத்துப் பார்த்து அவரது கோட்பாடுகளை ஆதரவாக அரவணைத்து செல்லும் ஒருபார்வை நூல்முழுவதிலும் இழையோடுகிறது என்பதே. அம்பேத்கர் பற்றிய பகுதிகளில் மட்டுமே இந்த நிலை மாறி விழிப்புக்குள்ளாகிறது பிரதி. மற்ற பகுதிகளில் காந்திய நிலையின் நியாயப்பாடுகளை முன்வைக்கிறது. சில இடங்கள் இயல்பாகவும், சில இடங்களில் இயல்புகடந்த வலிந்தேற்றலாகவும். காந்தியை பின்நவீன வாசிப்பின்மூலம் முன்நவீனச் சிந்தனைகளை பிரேம் மறுஉரை செய்கிறாரோ என்கிற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.
விஞ்ஞானம் பேரழிவை உருவாக்கியது என்பதும் இயற்கையை அழித்தது என்பதும் பிரேம் சொல்வதைப்போல போக்குவரத்து தொழில்நுட்பம் 100 ஆண்டுகளில் 3000 ஆண்டுகளுக்கான அழிவை சாதித்துவிட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதை எந்த அளவிற்கு மறுக்கமுடியாதோ அதே அளவிற்கு இதற்கான மாற்று வாழ்தல் என்ன என்கிற கேள்வியும் உள்ளது. மாற்று வாழ்தல் என்பது இயற்கையோடு இணைந்து காலால் நடக்க முடிந்த எல்லைவரை நடந்து தொடர்புகொள்ளும் சிறுசூழல் அமைப்புகளில் மட்டுமே வாழ்வது. இது சாத்தியமா? என்கிற கேள்வி அர்த்தமற்றது. சாத்தியப்படுத்த முடியுமா? என்கிற கேள்வியும் அனர்த்தமானதே. காரணம் உலகம் உருவாகிவிட்டபின், அதற்கான குறியமைப்புகளில் இயங்கத் துவங்கியபின், மறுபடியும் புராதன வாழ்க்கமுறைக்கு செல்வது என்பது முற்றிலுமான மனப்பிறழ்ச்சிக்கு மொத்த சமூகமும் மாறி நினைவழிக்கப்பட்ட நிலையில் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.
நாடோடிகள்கூட இடப்பெயர்ந்து அலைதலைத்தான் தங்கள் வாழ்புலமாகக் கொண்டார்கள். இன்றைய சமூகத்தில் நாடோடிகளுக்கான ஒரு தன்னிலை அமைப்பாக காந்தியின் இந்த தன்னாட்சிக் கோட்பாட்டை மறுஉரை செய்து பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்பாக காந்தியிடம் உள்ளடங்கியருந்த மதச்சார்புநிலையை குறிப்பாக இந்துமத உணர்வையும் இந்துமதம் என்று அவர் இன்றை இந்திய பெருமதத்தை குறிக்கவில்லை என்றாலும், அது இந்துத்துவா சக்திகள் வளர எந்த அளவிற்கு ஆழ்தள அமைப்பில் அல்லது மத நினைவூட்டலில் துணைபோய் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். காந்தியைப் பற்றிய எந்த ஒரு மறுவாசிப்பிலும் இதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இன்றைய பேரழிவு எந்திரமான இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் கோரும் இந்தியனும் இந்து மதமும் ஒன்று என்பதுவே காந்தியின் நோக்கமாக இருந்தது. ஆனால் காந்தி இந்து என்பதை பன்மய நோக்கில் புத்தாக்கம் செய்தார். அவர்கள் அதை பிராமண மேலாதிக்க ஒற்றைமைய ஓரமைவாக்குகிறார்கள். குறிப்பாக பிராமண மேலாதிக்கமற்ற ஒரு இந்துமதமே காந்தியின் நோக்கமும் செயல்பாடும். அதுதான் அவரது உயிர் பறிக்க காரணமாக பிராமண சக்திகள் அமையும்படி வரலாறு நிகழ்த்திக்காட்டியது.
வாழ்நாள் முழுக்க இந்துமதத்தின் மேன்மைக்காக அதை நவீனப்படுத்தி அதன் கசடுகளைக் களைந்து புத்தாக்கம் செய்ய பாடுபட்ட காந்தி தனது மரணத்தின்மூலம் அதன் இந்துத்துவ கோரத்தை வெளிப்படுத்திக் காட்டிச் சென்றார். அந்தவகையில் காந்தி என்றும் வாசிப்பிற்கும் மறுவாசிப்பிற்கும் ஒரு மதச்சார்பற்ற உயரிய மதிப்பிற்கும் உரியவர்தான்.
காந்தியைக் கடந்த காந்தியம் என்ற தலைப்பிலேயே ஒரு விமர்சனம் உள்ளது. அது காந்தியம் காந்தியை கடந்த ஒன்று என்பதே. காந்தியின் இந்து மத உணர்வுகளை, இந்துமத ஆன்மீகப்பார்வையை, இந்துமதம்-இந்தியமதம் என்கிற இந்து உயர்நவிற்ச்சிப் பார்வையைக் கடந்து காந்தியம் என்கிற கோட்பாட்டை உரையாட இந்நூல் ஒரு துவக்கத்தை முன்வைத்துள்ளது.
நவீன உலகக்கட்டமைப்பின் அடிப்படையிலேயே அடிமைப்படுத்தலும் அழிவும் படிந்து கிடக்கிறது. ( பக். 153). அதனால் இயற்கையுடன் இணைந்த வாழ்வு இறைமையுடன் இணைந்த வாழ்வு என்கிற புராதன வாழ்முறையை அனுமானிக்கிறது காந்தியம். ”இந்தியா இந்த நவீன நாகரீகத்தை மறுத்துவிட்டு மெய்யான அறநெறிகளைக் கொண்டிருந்த தனது தொன்மையான வாழ்வியலுக்குத் ( ancient way of life ) திரும்பிச் செல்லுமென்றால் அந்த நொடியிலேயே அது விடுதலையடைந்து விடும்” என்கிறார் காந்தி.
நவீன நாகரிகத்தைச் சமயத்தன்மையற்ற நாகரிகம் என்கிறார் காந்தி. சமயத்தன்மை என்பதே காந்தியின் அடிப்படைக் கருத்தியலாக இருந்துள்ளது. இயற்கை இறைமை இரண்டையும் இணைப்பது அதனால்தான். அவர் பகுத்தறிவை எதிர்த்து அதன் இருமை எதிர்வான சமயவாதத்தில் புகுந்துவிடுகிறார். சமயம் சரியா? தவறா? கடவுள் உண்டா இல்லையா? ஆன்மீகம், இறைமை போன்ற சொல்லாடல்களின் அரசியல் ஆகியவற்றின் கவனக்குவிப்புகள் இன்றி இவற்றைக் கையாளமுடியாது. இவை எல்லாம் முன்-நவீனக்கால சொல்லாடல்கள். காந்தி நவீனத்தை எதிர்க்க முன்நவீனக்கால கருவியான சமயத்தை கையில் எடுக்கிறார் என்கிற புள்ளியை கவனத்தில் கொள்ள வேண்டும். பின்நவீனம் மதம்போன்ற பெருங்கதையாடல்களை விமர்சிக்கிறது. அவ்வகையில் காந்தி ஒரு பின்நவீனத்துவர் அல்ல. ஆனால், இன்றை மையவாத கொடுங்கோன்மைக்கு எதிரான ஒரு பின்நவீனத்துவ வாசிப்பின் வழியாக காந்தியத்தை ஒரு சிறுசொல்லாடல் அமைப்பிற்குள் நிறுத்த முனைகிறது இந்நூல். அதனால் காந்தியத்தை ஒரு பின்நவீன ஆரம்பநிலைச் சொல்லாடலாக முன்வைக்கிறது.
நாடோடித்தன்மையும் குழுவாக வாழ்ந்த ஒரு பொற்கால நம்பிக்கையும் இணைக்கமுடியாது. வரலாற்றை மறுத்த காந்தி பண்டைய வரலாற்றை ஏற்கும் முரண்பாட்டை எப்படி பொருத்திப்பார்ப்பது? அதை உருவகம் என்பதாகச் சலுகை வழங்கிவிட முடியுமா? அது உண்மையில் உருவகமா? விடுதலை என்பது ஒவ்வொரு சமூகத்திலும் அன்றைய வரலாற்றுச் சொல்லாடலால் கட்டமைக்கப்படுவது. விடுதலை என்பதை எல்லா சமூகஅமைப்பிற்குமான ஒரு சொல்லாடலாக கொள்ளலாம். ஆனால் அதன் வடிவம், பொருள், இயக்கம், செயல்பாடு எல்லாம் ஒன்றாக இருப்பதில்லை.
இந்நூலின் குறிப்பான சில கவனக்குவிப்புப் பகுதிகளைப் பார்க்கலாம்.
பக். 157 ல் இந்தியாவில் தேசியவாதம் உருவானபோது அதில் இந்து மதவாதம் உள்ளடக்கமாக இருந்ததை சுட்டும் பகுதி முக்கியமானது.
பக்.158 ல் ஹிந்து சுவராஜ் புத்தகம் இந்துத்துவ வன்முறை இந்திய தேசியவாதத்திற்கு எதிரானதாகக் காந்தியால் முன்வைக்கப்பட்டது. காந்தி இந்துத்துவாவிற்கு எதிரான ஒரு கலாச்சார அடையாளமாக இந்திய சுயராச்சியத்தை முன்வைத்தார்.
பக்-160 அம்பேத்கர், காந்தி இருவருக்கும் பயன்மதிப்பு மற்றும் நீதி குறித்து இருந்த வேறுபாடு முக்கியமானது. அம்பேத்கர் இந்து மதத்தை பார்த்த விதமும் காந்தி பார்த்த விதமும் முக்கியமானவை. காந்தியின்நிலை இந்த இடத்தில்தான் சிக்கலடைகிறது என்கிற புள்ளியை சரியாகத் தொட்ட பிரேம் அதை விவரிக்காமல் காந்தியின் நிலைபாடுகளின் நியாயப்பாடுகளை அடுத்து விவரிக்கிறார். இந்த இடம் பிரேம் தனது அடுத்த பதிப்பிலாவது விரிவாக விவரிக்க வேண்டிய ஒன்று.
பக். 180-ல் 3 கேள்விகள் எழுப்பி பதில் சொல்லும் பகுதி மேற்கண்ட நாம் எழுப்பிய கேள்விகளை விவாதத்திற்கு உட்படுத்துகிறது. என்றாலும் அவை எல்லாவற்றையும் நவீன அறிவுவாதம் என்று ஒதுக்கிவிடுதல் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
காந்தியின் ஆத்மா பற்றிய விவாதத்தில் தர்க்கமுறையில் சொல்லுதலுக்கான சிக்கல்கள் உள்ளது. அதை பிரேம் இன்னும் ஆழமாக விளக்கவேண்டும். காந்தியின் ஆன்மா உடல் இணைமுரண்களை முரண்களற்றதாகக் காட்டும் பகுதிகளில் விடுபடுதல்கள் உள்ளது, அல்லது அப்பகுதிகள் முழுமையடையவில்லை. மீண்டும் ஆத்மா பற்றிய விளக்கத்தை மௌனமாக்கிச் செல்லும் ஒரு ஆன்மிகநிலையே உள்ளது. பகுத்தறிவால் அதை விளக்க வேண்டியதில்லை. அல்லது விஞ்ஞான சோஷலிஸத்தால் விளக்க வேண்யதில்லை. காந்தியக் கோட்பாடுகள் கொண்டே அதை விளக்க முயலலாம். அவற்றை உருவகமாகப் புரிந்து அழகியல், அரசியல் சொல்லாடலாக மாற்றுவது மீண்டும் ஒரு நம்பிக்கை அல்லது உணர்வு சார்ந்த ஒன்றாகவே எஞ்சுகிறது. மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை, காந்தியின்மீது வைக்கப்பட்டவை. அவற்றை நவீன அறிவியல் கொண்டு விளக்க வேண்டியதில்லை. மாறாக அறம் நீதி போன்ற கருத்தமைப்புகளால் செய்யப்பட்டுள்ள விளக்கம் இன்னும் தர்க்கம்கூடியதாக இருக்க வேண்டும்.
பக். 192 – காந்தி இலங்கை உரைதான் மிகமிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். அதில்தான் காந்தி நேரடியாக இந்துத்துவ பழமை மீட்புவாதத்தை எதிர்த்து தனது குரலைப் பதியவைக்கிறார். அவர் மதமாக முன்வைப்பதை ஒரு தந்திர உத்தியாக பயன்படுத்துகிறார் எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே அவனைத்தாக்கி குழப்பமடைய வைக்கிறார். தான் ஒரு இந்து என்பதற்கான அறமதிப்பீட்டை உருவாக்குகிறார். அதன்பின் இந்து என்ற பெயரில் வரும் பழமைவாதத்தை மறுத்து சரியானது எனபதாக ஒரு புதிய இந்த தர்மத்தை முன்வைக்க முனைகிறார். அதில் தீண்டாமை இல்லை, பன்மையான மதங்களின் சமாதான சகவாழ்வு உண்டு. நவீனத்துவக் கேடுகளைக் களைவதற்கான பொருளாதார அமைப்பு உண்டு. ஆனால் அவை எல்லாம் எந்திரங்களற்ற தேவைக்கானதை உடல் உழைப்பில் மட்டும் அடைவது. சமூகத்தின் வளர்ச்சி என்ற குறியின் மேல்நோக்கிய அல்ல கீழ்நோக்கிய கோட்டை நேர்க்கோடாக்கி சமநிலையில் நிறுத்த முயல்வது. இவைதான் காந்தியம் என்றால் இந்துமத தாக்கம் கொண்ட அல்லது ஒரு உருவகமாக முன்வைத்த காந்தி என்பவரது வாழ்வை அது கடந்து சென்றுவிட்டது. இன்று நமக்கும் தேவை காந்தி அல்ல காந்தியமே. அல்லது பிரேம் முன்வைக்கும் உத்தியான காந்தியாதல் என்பது.
பக். 204 மாயவரம் பொதுக்கூட்டத்தில் பேசியது 1915. இந்துமதம் என்பதை வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வை இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பக். 206 சாதி, வர்ணப்பிரிவினை பற்றிய காந்தியின் விளக்கம் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் இருந்ததால் காந்தியச் செயல்திட்டம் என்பது தலித் விடுதலைக்கான அரசியலில் போதிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்கிற பிரேமின் வாதம் முக்கியமானது.
பக் 211 இந்த நூலின் மிக முக்கியமான ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. அது அம்பேத்கர் எப்படி காந்தியன் ஆன்மிக-அற-அரசியலை உள்வாங்கி தனது கருத்துக்களை வடிவமைத்துள்ளார் என்பது. காந்தியின் அரசியலில் ஏற்பட்ட பிழைகள் பற்றிய விமர்சனம் குறிப்பாக பூனா ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் நடந்துகொண்டவிதம் ஆகியவை பற்றிய விமர்சனத்தை காந்தியம் உள்வாங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் காந்தியையும் அம்பேத்கரையும் இணைப்பதற்கான முக்கிய தடையாக உள்ள அந்த இருள் பகுதிகள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு விமர்சன, சுயவிமர்சனப் பாங்கில் ஒரு ஒத்திசைவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒரு கருத்தாக்கம்.
இது குறித்துப் பலரும் சுட்டிக்காட்டிய போதும் இந்துத்துவாவின் தாக்குதல் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ள ஜனநாயகவாதிகள் பெரும்பான்மையான தாராளவாத இந்துக்கள், தலித் மற்றும் சிறுபான்மையினத்தவர்களான சீக்கியர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், நாத்திகர்கள், மார்கசியர்கள், இடதுசாரிகள் அனைவரும் வலதுசாரியாக கருதிக்கொண்டிருந்த காந்தியத்தை இடதுசாரி சிந்தனை தளத்திற்குள் வைத்து ஒருங்கிணைப்பதன்மூலம் இந்துத்துவா முன்வைக்கும் இந்துமதக் குறியீடுகளை அதற்கான திரட்டல்களை வலுவிழக்கச் செய்துவிடமுடியும். அவர்களது ”இந்துமதப் பொற்காலம்” என்ற கருத்தின் பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து தூளாக்கி சரியானதொரு இந்தியப் பொற்காலக் கனவை உருவாக்க முடியும். அதற்கு மார்க்சிய, அம்பேத்கரிய, காந்திய கருத்தியல் ஒன்றை உருவாக்கும் செயல்திட்டத்திற்கான அடிப்படைகளை இந்த நூல் அறைகூவுகிறது. காந்தியை நிராகரிக்கலாம் ஆனால் காந்தியத்தை ஏற்கலாம் என்கிற நிலைபாடே இந்தப் புத்தகம் முன்வைக்கும் புதிய செய்தி. காந்தி என்பது புனித பிம்பம். காந்தியம் என்பது எதிர்காலத்திற்கான மாற்று அரசியலை முன்வைக்கும் விடுதலைக்கருத்தியல். இதுதான் காந்தி பற்றிய பிரேமின் பின்நவீன வாசிப்பு முன்வைக்கும் கருத்தாக்கம்.
நண்பர்கள் இந்நூலை பொறுப்புடனும் கவனமாகவும் வாசிப்பதன்மூலமும் தொடர்ந்து உரையாடுவதன் மூலமும் விடுதலைக்கான அந்தப் புள்ளியை நோக்கி நகரலாம். அந்தவகையில் ஒரு செயல்திறன்மிக்க நூலாக இது உருவாகி உள்ளது. இதுவே இன்றைக்கான மாற்று அரசியலுக்கான தேடலின் முதல் புள்ளியாக இருக்கும். இது முற்றுமுடிவானது அல்ல. தேடலுக்கான துவக்கம் என்பதைச் சொல்லி வாய்ப்பினை தந்த அனைவருக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி முடிக்கிறேன்.
கட்டுரை வெளியான பன்மெய் வலை இதழின் சுட்டி.
http://panmey.com/content/?p=420
-ஜமாலன் - 05-12-2013. [email protected]
ஆம் ஆத்மிகளும் அலையில் கூத்தாடும் ஆமாஞ்சாமி அரசியலும்.

கதவைத் திற, காற்று வரட்டும்
பாடப் புத்தகங்கள் சொல்லாத பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்று மிகச் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முதல் பிரதமருக்கும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவருக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி, ‘இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் சொல்கிற அளவிற்குச் சென்றது என்பதும் ஒன்று. இன்னொரு புறம், அதே கால கட்டத்தில், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், ‘பிரதமரிடம் நேர்மை இருக்கிறது ஆனால் துணிவு இல்லை’ எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது இன்னொரு நிகழ்வு.
இங்கு குறிப்பிடப்படும் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேட்கர். குறிப்பிடப்படும் சட்டம், ஹிந்து கோட் பில் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஹிந்து சட்ட முன்வடிவு. இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களின் மீதான உரிமை, திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல் போன்றவற்றில் பெரும் திருத்தங்களை முன் மொழிந்தது இந்தச் சட்ட முன்வடிவு.
துல்லியமாகச் சொல்வதானால் இந்த முன்வடிவு குறித்து ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்குமிடையேயான மோதல், ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே, இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே, தொடங்கி விட்டது. இந்த சட்ட முன்வடிவு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அவையின் முன் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வைக்கப்பட்டது. அதை முன் மொழிந்தவர் நேரு. அப்போது சுதந்திரமடைந்து ஓராண்டு கூட ஆகியிருக்கவில்லை. அந்த சமயத்தில் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த, ராஜேந்திர பிரசாத். இது குறித்த விவாதங்களின் போது அவையைத் தானே தலைமையேற்று நடத்துவது என்பதில் உறுதியாக இருந்தார். சட்டம் நிறைவேறவில்லை. மாறாக அது செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. நேரு ஏமாற்றமடைந்தார்
அதன்பின் நேரு ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக விரும்பவில்லை. மாறாக ராஜாஜியை குடியரசுத் தலைவராக்க விரும்பினார். அதற்காக நேரு உண்மையை மறைத்து அதற்கு மாறாகவும் செயல்பட்டார்.1949ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, நேரு ராஜேந்திர பிரசாத்திற்கு எழுதிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துத் தான் படேலிடம் பேசிவிட்டதாகவும், ராஜாஜியை வேட்பாளராகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். ராஜேந்திர பிரசாத் இதற்குக் கடுமையான மறுமொழி அளித்து அதன் நகலை படேலுக்கும் அனுப்பினார். இதைச் சற்றும் எதிர்பாராத நேரு திகைத்துப் போனார். உடனடியாக பிரசாத்திற்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் நான் எழுதியதற்கும் படேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பற்றி படேலுக்கு எதுவும் தெரியாது” என்று அதில் கூறினார்.
அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த 489 இடங்களுக்கு நடைபெற்ற 1952 தேர்தலில், காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலங்களிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. அதையடுத்து நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திர பிரசாத் நிறுத்தப்பட்டார். ராஜாஜியை கட்சி ஏற்கவில்லை பிரசாத் மிகச் சுலபமாக வென்றார். நேருவிற்கு இரண்டாம் முறையாக ஏமாற்றம் அந்தத் தேர்தலில் 65 எம்.பிக்களும், 479 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மீண்டும் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரசாத் நிற்பதற்கு முட்டுக்கட்டை போட முயன்றார் நேரு.அந்தத் தேர்தலில் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணனை ஜனாதிபதியாக்க முனைந்தார், ஆனால் மெளலானா ஆசாத் போன்றவர்கள் அந்த யோசனையை ஆதரிக்கவில்லை. கட்சியும் அதை ஏற்கவில்லை. ஏமாற்றமடைந்த ராதாகிருஷ்ணன், தன் ராஜினாமாவை சமர்ப்பித்தார். அந்தத் தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் மீண்டும், ஜனாதிபதியானார். நேருவிற்கு மீண்டும் ஏமாற்றம். ராதாகிருஷ்ணனை மறுபடியும் துணை ஜனாதிபதியாக்கி அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.
ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்கும் ஏற்பட்ட மோதல்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அம்பேட்கருக்கும் நேருவிற்கும் இடையே முரண் ஏற்பட்டு, அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி காணும் நிலையும் இந்தச் சட்ட முன்வடிவால் ஏற்பட்டது. ராஜேந்திரப் பிரசாத்தைப் போலன்றி அம்பேத்கரும் நேருவும் கருத்தியல் ரீதியாகப் பெரிதும் முரண்பட்டவர்கள் அல்ல.நவீனமான, முற்போக்கான, இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குக் கருத்தொற்றுமை இருந்தது. ஆனால் அவர்கள் முரண்பட்டுப் பிரிவதும் நடந்தது.
அரசமைப்புச் சட்ட அவையின் செலக்ட் கமிட்டிக்கு சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டதல்லவா, அந்தக் குழுவின் தலைவராக அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேட்கர் நியமிக்கப்பட்டார். அவர் அதில் பல திருத்தங்களை முன்மொழிந்திருந்தார். பலதார மணத்திற்குத் தடை, பாரம்பரியச் சொத்தில் மகனுக்கு உள்ளதைப் போன்றே விதவையான அவன் மனைவிக்கும் உரிமை, கலப்புத் திருமணம், மணவிலக்கு போன்ற திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன.
மசோதா கடும் எதிர்ப்பிற்குள்ளாயிற்று. இந்தத் திருத்தங்களை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்றத்திற்கு முன் கூடி, அடையாள பூர்வ எதிர்ப்பாக நேரு அணிவதைப் போன்ற காந்திக் குல்லாய் அணிந்து சென்று, அதை எரித்தனர். காங்கிரசின் பெண் தலைவர்களும் கூட இதை ஆதரிக்கவில்லை. இந்த மசோதாவைத் திரும்பப் பெறவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சரோஜினி நாயுடு அறிவித்தார். அரை மனதான மசோதா, இதனால் பிரயோசனமில்லை என்றார் சுசேதா கிருபளானி. ராஜேந்திரப் பிரசாத், “ புதிய கருத்தியல்கள், புதிய எண்ணங்கள், இந்துச் சட்டத்திற்கு அன்னியமானவை மட்டுமல்ல, அவை ஒவ்வொரு குடும்பத்தையும் சீர் குலைத்துவிடும். நான் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன், இந்தச் சட்டம் குறித்து கட்சியின் காரியக்கமிட்டியிலோ, பொதுக்குழுவிலோ விவாதிக்கப்படவில்லை. இது போன்ற பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் முன் அவற்றை மக்கள் முன் வைத்து அவர்களின் ஆணையைப் பெற வேண்டும். அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இதை தேர்தல் அறிக்கையில் வைத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பின் பரிசீலிக்கலாம்” என்று கடுமையான கடிதம் ஒன்றை 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி எழுதினார்.
சட்டம் நிறைவேறுவதற்கான சூழல் இல்லை என்பதாலும் தேர்தல் வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்று கருதிய நேரு சட்டம் நிறைவேறுவதைத் தள்ளிப் போட்டார்.
அதில் அம்பேட்கர் கடும் கோபமடைந்தார். அவர் தான் எழுதிய அரசமைப்புச் சட்டங்களுக்கு நிகரானவை இந்தச் சீர்திருத்தங்கள் என்று கருதினார். அவற்றைச் சட்டமாக நிறைவேற்றிக் கொடுப்பது நேருவின் கடமை, பொறுப்பு என்று எண்ணினார். “இதில் நான் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், இதை நிறைவேற்ற என் சக்திக்குட்பட்டது அனைத்தையும் செய்வேன்” என்று 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேரு கடிதம் மூலம் அவருக்கு உறுதி அளித்திருந்ததால் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அதில் நேரு போதிய அக்கறை காட்டவில்லை என்பது அவருக்கு சினமூட்டியது. இது, ”நகைப்பிற்குரியது,கோழைத்தனமானது, அவமானப்படுத்துவது” என்று சாடிய அவர், “சாணிக் குவியலின் மேல் மாளிகை எழுப்ப முடியாது!” என்று சொல்லி, 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் சொன்னது: “பிரதமர் நேர்மையானவர். ஆனால் போதுமான துணிவு இல்லாதவர்”.
நேருவின் துணிவை கேள்வி கேட்ட இன்னொருவர், நிர்மல் குமார் சட்டர்ஜி. ஹிந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவர் (இவர் மகன் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று) நிர்மல் குமார் சட்டர்ஜி கேட்டார், “பொது சிவில் சட்டம் இயற்றலாம் என அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருக்கிறதே, அப்படியிருக்க ஏன் இந்து மதத்தை மட்டும் குறி வைத்து இந்தச் சட்டம்? இந்த அரசுக்கு முஸ்லீம் சமூகச் சட்டங்களைத் தொடத் துணிவுண்டா?”
நேருவின் துணிவின்மையையோ, அல்லது பலவீனங்களையோ அல்லது அவரே படலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல, ‘நான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன், நம் எம்.பிகளே என்னுடன் இல்லை” என்ற ஆற்றாமையையோ மட்டும் ஹிந்து சட்ட முன்வடிவு வெளிப்படுத்தியதாக நான் கருதவில்லை. அரசியல் நெருக்கடி காரணங்களாலோ அவரது- இன்னும் சொல்லப்போனால் நம் மதிப்பிற்குரிய பல தலைவர்களின் -இரட்டை நிலையை அது வெளிப்படுத்தியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அரசமைப்புச் சட்ட அவை 1948ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியே “இந்தியா முழுவதுமுள்ள குடிமக்களுக்காக பொது சிவில் சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும்” என்ற அரசமைப்புச் சட்டத்தின் 35ஆவது பிரிவை நிறைவேற்றி விட்டது. அது நேரு அரசிற்கு பொது சிவில் சட்டம் இயற்றும் வாய்ப்பைக் கொடுத்தது. எனினும் எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்றும் முயற்சியில் அவர் இறங்கவில்லை. மாறாக அதன் பின்னும் 1951 வரையிலும் இந்துக்களுக்கான சட்டத்தில் மட்டும். திருத்தங்கள் செய்வதில் தீவிரமாக இருந்தார்
அரசமைப்புச் சட்ட அவையில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய முஸ்லீம் உறுப்பினர்கள், முஸ்லீம் தனிச் சட்டம் (Muslim Personal Law) நாடு முழுக்க ஒரே சீராக இருக்கிறதென்றும், நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அதைச் செயலற்றதாக்க முடியாதென்றும் பேசினார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய அம்பேட்கர், 1935 வரை வடமேற்கு எல்லை மாகாணத்தில் முஸ்லீம் தனிச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்துச் சட்டமே நடைமுறையில் இருந்தது என்றும், அங்கு மட்டுமல்ல, மத்திய மாகாணம், ஐக்கிய மாகாணம், மும்பை மாகாணம் ஆகிய மாகாணங்களிலும் வாரிசுரிமை விஷயத்தில் 1935வரை இந்துச் சட்டமே பின்பற்றப்பட்டதென்றும் ஷரியத் சட்டம் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார். வடக்கு மலபாரில் அமலில் உள்ள மருமக்கள்தாயம் என்ற சட்டம் இந்துக்கள் முஸ்லீம்கள் எல்லோருக்குமானது என்றும் அங்கு முஸ்லீம்கள் மருமக்கள்தாயத்தையே பின்பற்றி வருவதாக கருணாகர மேனன் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டினார். எனவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்ற கூற்று ஏற்கத்தக்கதல்ல என்றும் சொன்னார். அதை விட அவர் சொன்ன இன்னொரு கருத்து முக்கியமானது. “ ஒருவேளை, அவர்கள் மதம் எதுவாக இருப்பினும், எல்லாக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சிவில் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்திற்குத் தேவைப்படுமெனில், இந்துச் சட்டத்தின் சில பகுதிகள் அதில் சேர்க்கப்படும். அதற்குக் காரணம் அவை இந்துச் சட்டம் என்பதால் அல்ல, அவை மிகப் பொருத்தமானவை என்பதால்” என்றார் அம்பேட்கர்.
இது 1948 நவம்பர் 23ஆம் தேதி.
ஆனால் அதே அம்பேட்கர், அதே அவையில், பத்து நாட்களுக்குப் பிறகு. அதாவது 1948ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, பேசுகிற போது,”முஸ்லீம் சமூகம் கிளர்ந்தெழும் வகையில் எந்த ஓர் அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது. அப்படிச் செய்தால் அது ஓர் பைத்தியக்கார அரசாங்கமாகத்தான் இருக்கும்.” என்றார்.
ஹிந்துச் சட்டமுன்படிவு நிறைவேற்றப்பட்டால் அதற்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன்,என்று சொன்ன ராஜேந்திர பிரசாத், 1956-57ல், அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை நான்காகப் பிரித்து நான்கு சட்டங்களாக நாடாளுமன்றம் இயற்றிய போது அதற்கு ஒப்புதல் அளித்தார்
**
அண்மையில் போபாலில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோதி எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சீரான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசியிருப்பதால் இப்போது அது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. அந்த விவாதத்தில் முன்பு, இந்து சட்ட முன்வடிவு விவாதத்தில் கேட்ட அதே வாதங்கள் மீண்டும் ஒலிப்பதைக் கேட்ட போது ஞாபகத்தில் எழுந்த வரலாற்றை மேலே நினைவு கூர்ந்திருக்கிறேன். அதே வாதங்கள், அதே குரல்கள், ஆனால் பாத்திரங்கள்தான் வேறு. ஹிந்து சட்ட முன்வடிவு விவாதத்தில், மதம் மனிதர்களுடைய தனிப்பட்ட விஷயம், அதில் அரசு தலையிடக் கூடாது, பல நூறாண்டு காலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்களை மாற்றக் கூடாது, இது சட்டமாக இயற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற வாதங்கள் இந்து அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன. அதே வாதங்கள் இப்போது முஸ்லீம் அமைப்புகளால் வைக்கப்படுகின்றன.
வாதங்கள் எதுவாக இருப்பினும் ஒரேசீரான சிவில் சட்டம் நிறைவேற்றப்படுமானால் அது வரவேற்கத் தக்கது. ராஜேந்திர பிரசாத் சொன்னதைப் போல இது மக்கள் முன்னால் தேர்தல் அறிக்கையில் வைத்து அவர்களது ஆணை பெறப்பட்டுள்ளது.பாஜக 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தனது தேர்தல் அறிக்கையில் இதை முன்வைத்துள்ளது. எனவே அது இதை நிறைவேற்றக் கடமைப்பட்டது.
இதன் பின்னுள்ள அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இது பாலின சமத்துவத்திற்கு வழிகோலும் என்ற ஒரு காரணமே இதை வரவேற்க எனக்குப் போதுமானது.
அனேகமாக மதங்கள் எல்லாமும் பெண்களை உயர்வாகப் பேசுகின்றன, ஆனால் குழந்தை மணம், சதி, பலதார மணம், விதவைகளை அலங்கோலப்படுத்தல், வரதடசிணை, பாரம்பரியச் சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு,, முத்தலாக், மணவிலக்கு மறுப்பு, பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்று பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் யாவும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்டன என்பதும் வரலாறு.
இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. என்னுடைய தில்லி நண்பர் சொன்னது இது:
பர்வீனுக்கு இரண்டு சகோதரிகள். உடன் பிறந்த சகோதரர் யாரும் இல்லை. அவரது பெற்றோர் பெற்றெடுத்தது மூன்று மகள்களை மட்டுமே. உயில் ஏதும் எழுதி வைக்காமல், அவரது தந்தை இறந்து போனார்.பணத் தேவைகளுக்காகப் பர்வீன் தனது பூர்வீக வீட்டை விற்க ஆனால் முடியவில்லை. காரணம், அவர் அந்தப் பூர்வீக வீட்டை, அவர் ஆண் வாரிசு இல்லாததால், அவரது தந்தையின் சகோதரர்களின் சம்மதம் இல்லாமல் விற்கமுடியாது எனச் இஸ்லாமியச் சட்டம் கூறுகிறதாம். “அவர் ஆணாகவோ அல்லது வேறு மதத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு இந்தப் பிரசினை இருந்திருக்காதல்லவா? அவர் எந்த மதத்தில் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை அவரா தீர்மானித்தார்?” என்று நண்பர் கேட்டார். என்னிடம் பதில் இல்லை.
இன்னொரு சம்பவம்: ‘வீட்டை விட்டு வெளியே போ, உனக்கு சொத்தெல்லாம் தரமுடியாது’ எனச் சகோதரர் சொன்னபோது, மேரிக்குத் திகைப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் கணவனை இழந்திருந்த அவர் தனது மகள் அருந்ததி, மகன் லலித் ஆகியோருடன் ஊட்டியிலிருந்த அவரது பூர்விக வீட்டிலிருந்து வெளியேறினார். அப்போது அவர் ஒரு சட்டப் புரடசிக்கு வித்திடப் போகிறோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.
கோட்டயத்தில் உள்ள தங்கள் குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் தனக்குப் பங்குதர வேண்டும் என அவர் கோரினார். சட்டப்படி கொடுக்க வேண்டியது ஏதும் இல்லை என்றார் அவர் சகோதரர். அவர் சொன்னது சட்டப்படி சரிதான். 1911ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருவாங்கூர் கிறிஸ்துவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் உயிலெழுதி வைக்காமல் இறந்து போனால், அவரது சொத்து முழுவதும் மகனுக்குரியது. பெண்களுக்கு சீதனம் கொடுத்து விட்டால் அவர்களுக்கு உரிமை கிடையாது. சீதனம் ரூ 5000க்கு மேல் இருக்கக் கூடாது
இந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் மேரி.1986ஆம் ஆண்டு நீதிபதி பகவதி தலைமையிலான அமர்வு திருவாங்கூர் கிறிஸ்துவ வாரிசுரிமைச் சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.அப்போதும் கூட ஆணும் பெண்ணும் சமம் என அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு சொல்கிறதே, அந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியாவுடன் இணைந்த பின்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற தொழில்நுட்பக் காரணத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு அது அளிக்கப்பட்ட முந்தைய காலங்களுக்கும் பொருந்தும் எனச் சொல்லிற்று. அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் இருந்த இந்த அம்சத்தைச் செயலற்றுப் போகும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பி.ஜே. குரியன் ஒரு மசோதா கொண்டு வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர் இதே விஷயத்தை முன்னிறுத்தி கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. அதை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அங்கு அது தள்ளுபடியானது.
இந்த மேரி ராய்தான் அருந்ததிராயின் தாய். அவரது சட்டப் போராட்டத்தின் காரணமாக கேரள கிறிஸ்துவப் பெண்களுக்கு இருந்த ஒரு தடை தகர்ந்தது.
சாதிகளின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அதே நியாயம், மதங்களின் அடிப்படையிலும், பாலினங்களின் அடிப்படையிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதிலும் உண்டு. எல்லாம் சரி, ஆனால் சீரான பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் மட்டும், மறுநாளே பாலின சமத்துவம் ஏற்பட்டுவிடுமா எனக் கேட்டால், சட்டம் மட்டும் சமூகத்தைத் திருத்திவிட முடியாது என்பதுதான் பதில். ஆனால் சட்டம் நீதி கோர வழி வகுக்கும். அதுவுமில்லையேல் அந்த வாய்ப்புக் கூட இராது.
19 Sep, 2023
The post கதவைத் திற, காற்று வரட்டும் appeared first on Maalan.
கணபதி வழிபாடும் வரலாறும்
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து வரும் வழக்கம். யானை முகமுடைய கணேசத் திருவுரு இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகவும் சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.
இந்த கணேசக் கடவுள் உருவான வரலாறு சுவாரசியம் மிக்கது. சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் என்கிற புராணக் கதைகளுடன் நாட்டார் கதைகளும் கணபதிக்கு உண்டு. பெருந்தெய்வம், சிறு தெய்வம் ஆகிய இரு வழிபாடுகளிலும் கணேசர் இருந்திருக்கிறார். பக்திக்கு அப்பாற்பட்ட பண்பாட்டு அடையாளமுமாக முன்னிறுத்தப்படுகிறது. தாண்டவம் ஆடும் புகழ்பெற்ற நடராஜரைப் போல் கணேசக் கடவுளின் சிலைகளும் இந்திய அடையாளமாகப் பிரசித்தி பெற்றவை. நிஷ்கலங்கமான ஆனை முகமும் குள்ள உருவமும் இதற்குக் காரணம் எனலாம்.
பெளத்த சமயத்தைப் பின்பற்றிய குஷாணப் பேரரசுக் காலகட்டத்தைச் சேர்ந்த தாமிர நாணயங்களில் கணேசக் கடவுளின் உருவம் கண்டறியப்பட்டுள்ளது. பொது ஆண்டின் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் அவை.
குப்தப் பேரரசு காலகட்டத்தைச் சேர்ந்த உதயகிரி சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் விநாயகரின் சிற்பம் இந்திய அளவில் கணேசக் கடவுளின் முதல் கற்சிற்பம் எனச் சொல்லப்படுகிறது. இது பொ.ஆ.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதற்கு முன்பே வேதத்திலேயே இந்தக் கடவுளைக் குறித்துப் பெயரளவில் குறிப்புகள் உள்ளதாகச் சொல்லப்பட்டாலும், இன்றைக்குப் பிரம்மாண்டமான அளவில் வளர்ந்துள்ள கணபதியின் தெய்விகத் திருவுரு பெளத்த, சமண விநாயகரை ஒத்தது எனலாம்.
இனவியல் பேராசிரியர் பி.ஏ.குப்தே, கணேசர் உழவர்களின் கடவுள் என்றும் அவரது உருவமே அதன் அடிப்படையில் உருவானது என்றும் ஆராய்ந்து கூறியிருக்கிறார். உழவர்கள் சுமந்து செல்லும் சோளத்தட்டைதான் கணபதி உருவக் கற்பனைக்கு வித்திட்டது என்பது அவரது துணிபு. வேளாண் நிலத்தில் உள்ள எலியே அவரது வாகனமாகவும் ஆனது என்கிறார் அவர்.கணபதி வழிபாடு குப்தப் பேரரசு காலத்தில் பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக இந்திய வரலாற்றறிஞர் எம்.கே. தவாலிகர் குறிப்பிடுகிறார். மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய தனது ‘லோகாயுத’ நூலில் திராவிடப் பழங்குடியின் சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டுக்குத் தொடர்புண்டு எனச் சொல்கிறார். இதே கருத்தை இந்தியக் கலை தத்துவவியலாளரான ஆனந்த குமாரசாமியும் வலியுறுத்துகிறார்.
பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பொ.ஆ. ஏழாம் நூற்றாண்டில் நடந்த போர் வழியாக இங்கே இந்தப் புதிய விநாயகர் வடிவம் வந்ததாகக் கருதப்படுகிறது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி பரஞ்சோதி சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் வெற்றிகொண்டார். இந்தப் படையெடுப்பில் விநாயகர் சிலையை அவர் தனது ஊரான திருச்செங்கட்டான்குடியில் நிறுவினார். இவர்தான் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரானார். கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் ‘வாதாபி கணபதிம்’ என்கிற கீர்த்தனையின் ஆதாரம் இந்த வரலாறுதான்.
தமிழில் திருமுறைகளில்தான் விநாயகர் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. சம்பந்தரும் நாவுக்கரசரும் விநாயகக் கடவுளைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறார்கள். புராணக் கதைகளை ஒட்டியே இந்தக் கருத்துகள் இருக்கின்றன. பாண்டியர், முத்தரையர் காலகட்டத்துக் குடைவரைக் கோயில்களில் விநாயகர் சிற்பங்களைக் காண முடிகிறது.
பாண்டியர் காலகட்டத்தைய பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் சுற்றுப் பிரகாரத் தெய்வமாக விநாயகர் உருவம் இருக்கிறது. இந்தக் கோயில் தொடக்கத்தில் சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோகர்ணம், குன்றக்குடி, திருக்கோளக்குடி போன்ற குடைவரைகளில் விநாயகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.பல்லவ, பாண்டிய, முத்தரையர் கால கட்டத்தில் சுற்றுப் பிரகார தெய்வமாக இருந்த விநாயகர், சோழர் ஆட்சிக் காலத்தில் அஷ்டப் பரிவாரத் தெய்வமானதாக வரலாற்றாய்வாளர் இரா.கலைகோவன் தன் கட்டுரையில் சொல்கிறார்.
கணேசக் கடவுளைப் பிற்காலத்தில் பிரபலப்படுத்தியதில் பொ.ஆ.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரியா கோசாவி என்னும் துறவிக்கு முக்கியப் பங்குண்டு. விஷ்ணு, சிவன், சக்தி, சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டையும் ஓர் அம்சமாகப் பிரச்சாரம் செய்தார். இன்றைக்கும் வட இந்திய பிள்ளையார் சதுர்த்தி வழிபாட்டில் ‘கணபதி பாபா மோரியா’ எனப் பக்தி கோஷம் எழுப்பப்படுவதைக் கேட்கலாம். புனேக்கு அருகில் சிஞ்ச்வாத் என்னுமிடத்தில் கணேசக் கடவுளுக்கு இவர் கோயில் அமைத்தார். இவருக்கு முன்பே பொ.ஆ.எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் நெறிப்படுத்திய இந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் காணபத்யம் எனப்படும் விநாயகர் வழிபாடும் ஒன்றாக இருந்தது. ஆதி சங்கரர் ‘கணேச பஞ்சரத்தினம்’ என்னும் துதிப் பாடலையும் எழுதியுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், 1893இல் மிகப் பெரிய மக்கள் திரளுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டம் எழுச்சியாகப் பரவியது. ‘சர்வஜன கணேச உற்சவம்’ என இந்த எழுச்சியைத் திலகர் அழைத்தார். மராட்டிய மன்னன் சிவாஜி காலகட்டத்தில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதாகச் சான்று இருந்தாலும் திலகரின் இந்த இயக்கம் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தின்வழி பரப்பப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் வட இந்திய கணேசக் கடவுள் வழிபாட்டுப் பண்பாடு பிரபலம் அடைவதற்கு முன்பே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது. என்றாலும் இந்தக் காலகட்டத்தில் கணேசர் வழிபாடு பரவலானது. இது இயக்கமாகவும் நம்பிக்கையாகவும் வளர்க்கப்பட்டு பெரும் வழிபாடாக இன்று அச்சமூட்டும் இடத்துக்கு நகர்ந்திருக்கிறது.
-மண்குதிரை (இந்து தமிழ் திசை, 25.08.2022)
மலேயா கணபதி
முதுபெரும் பொதுவுடமைக் கட்சித் தோழர் கே.டி.கே.தங்கமணி மலேசியாவில் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்குக் கப்பல் ஏறுகிறார். கப்பல் ஏறுகிற நேரத்தில் அவர் முன்னே ஆயுதம் தாங்கிய தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தி விடை தருகின்றனர். செவ்வணக்கத்தை ஏற்றுக் கெண்டு “நீங்கள் யார்” எனக் கேட்கிறார் கே.டி.கே. அதற்கு அவர்கள் பதில் “தங்கள் பாதுகாப்புப் பணிக்காக, மலேயா கம்யூனிஸ்டு கட்சி நியமித்த கொரில்லாக்கள்".
ஒரு தோழரின் உயிர், உடல் அகில உலகத்துக்கு மட்டுமல்ல, நான்கு கோடித் தமிழர்களுக்கும் பத்திரமாக திருப்பி ஒப்படைக்கிற, இந்த பாதுகாப்புக் கவசத்தின் சூத்ரதாரி கணபதி.
தீண்டாமை என்பது ஓட்டுவார் ஒட்டி நோய். காசம் (சயரோகம்), சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு இந்தக் குணம் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து மலேயா, சிங்கப்புர், ரங்கூன் சென்ற தமிழர்கள், தங்களுடன் இந்த தீண்டாமை நோயையும் இடுக்கி கொண்டு சென்றார்கள். தமிழகத் தேநீர்க் கடைகளில் தனித் தம்ளர்கள் என்றால் மலேயாவில் தனித் தகர டப்பாக்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரின் உப்பு, கடல் கடந்த பின்னும் அந்த தகர டப்பாக்களில் கரைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை தன்னுடன் தேநீர்க்கடை அழைத்துச் சென்று மற்றவர்க்குச் சரி சமமாக பெஞ்சுகளில் உட்கார வைத்து, தேநீர் அருந்த செய்து, தானும் அருந்துவார் கணபதி.
1936 - 38 ல் மலேயாவில் தீண்டாமை எதிர்ப்புக் கனலை உச்ச நிலைக்கு எடுத்துச் சென்றார் கணபதி. தீண்டாமைப் பிரச்சனையை எப்போதும் பிற இன சமுதாய மக்களின் முற்போக்கு சக்திகளை இணைத்துக் கொண்டே முற்றிலும் ஒழிக்கும் போரட்டத்தினை வெற்றி பெறச் செய்ய இயலும் என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டினார்.
அக்காலத்தில் மலேயத் தமிழர்களை 'ஒராங்கிள்ளேங்' என மிக இழிவாக அழைத்தார்கள். மலேய மொழியில் அந்த ஒரு சொல்லுக்கு திருடன், கொலைகாரன், தாழ்ந்தவர் என்று பல அர்த்தங்கள். புதுப்புது அர்த்தங்களை உருவாக்கி, தமிழர்களை குற்றப் பரம்பரை போல் கருதிய எண்ண ஓட்டத்தை எதிர்த்து உலகிற்குத் தொன்மையான நாகரிக நீரோட்டத்தை தந்தவர்கள் தமிழர்கள் என்ற கருத்தாக்கத்தை பதிய வைத்தார் கணபதி.
மலேயா முழுவதும் எதிப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சில இடங்களில் சட்டத்தின் துணையோடு எதிர்த்து இடையறாத போரட்டத்தை நடத்தி அந்தப் பழிச் சாயத்தை துடைத்து மலேயா சரிதத்தின் பக்கங்களை வெண்மைப்படுத்தினார் கணபதி.
ஒவ்வொரு போராளியும், ஒவ்வொரு இலட்சியத்தை தலையில் தூக்கிச் சுமந்து, அதை நிவைற்றத் தேவைப்படும் மற்ற இலட்சியங்களை சுமையாகக் கருதி தரையில் இறக்கி விடுவார்கள். அவரவர் எல்லைக் கோடுகளில் அவரவர்க்குச் சுகம். கத்தரிக்கப்ட்ட சிறகுகள் அந்த எல்லைக் கோடுகள் வரை மட்டும் செல்லும்.
கணபதி ஒரு மார்க்சியப் போராளி. எல்லாத் திசைகளையும் உள்ளடக்கி எல்லாப் பிரச்சனைகளையும் உள்செறித்து, நடைமுறைகளின் ஆயிரம் கைகளை விரிக்கச் சொல்கிறது மார்க்சியம். மலேயா பல இன மக்களின் கூட்டுத் தீபகற்பம், அங்கு தேசிய இனங்களை இணைத்துப் போராடுவது, வரலாற்றின் கட்டாயம். போரட்டங்களை இணைத்தார்கள். இணைத்தவர்கள் பின்னாளில், கம்யூனிஸ்டாக மாறினார்கள்.
மலேயா கம்யூனிஸ்களின் போராட்டம், காங்கிரசின் தேசியப் போராட்டம், தமிழ் மொழிப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு போர், மலேயா விடுதலைப் போர், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர், வர்க்கப் போரட்டம் என்ற அனைத்திலும் தலைமை ஏற்றிருந்தார் கணபதி. பன்முகங்களிலும் கருக் கொண்டு அவர் போர்க் குணம் உயிர்த்தது. அவர் தலைமையேற்றும் உறுதுணையாய் இருந்தும் பங்களித்த அமைப்புகள் ஏராளம்.
- தமிழர் சீர்திருத்தச் சங்கம்
- விளையாட்டரங்கம்
- இந்திய இளைஞர் கழகம்
- பகத்சிங் உடற்பயிற்சி மன்றம்
- இந்துஸ்தான் சோசலிசப் படை
- பல்வேறு தொழிற்சங்கங்கள்
- மகளிர் உரிமை அமைப்பு
- தீண்டாமை ஒழிப்பு இயக்கம்
- மக்கள் சனநாயகக் கழகம்
- அகில மலேயா கம்யூனிஸ்ட் கட்சி
- நேதாஜி இந்திய தேசிய ராணுவம்
பன்முகப் பணிகளில் தோள்கொடுத்தவர்கள் பலர், அவர்களில் வாழும் நிஜம் குருதேவன். கணபதியை குரு இயக்கினாரா, குருவை கணபதி இயக்கினாரா என்று சொல்ல முடியாது. யார், யாருக்கு ஆதாரம் என்று அறுதியிடுவது சுலபமல்ல. தோழர்களாய்த் தொடங்கி அகில மலேயா விடுதலைப் படை, கொரில்லாப் படை வரை அது தொடர்கிறது. இன்குலாப் குறிப்பிடுவது போல தோழர் குருதேவன் வெறுந் தாத்தவாக மட்டுமே இங்கே மா.லே கட்சியால் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அவரது வாழ்க்கையின் சொல்லப்படாத புரட்சிப் பகுதிகள் எத்தனையோ உண்டு.
கணபதி போலவே தூக்குமேடையைச் சந்தித்த வீரசேனன், கீழக்காடு சுப்பிரமணியம், சிந்தனையாளர் அ.மார்க்ஸின் தந்தை பாப்பா நாடு அந்தோணிசாமி, மலேசிய பழனி, தியாகி சாம்பசிவம், திருமாக் கோட்டை இரத்தின சபாபதி, ராஜமாணிக்கம், வாட்டாகுடி இரணியன், செட்டிநாடு வீரசிம்மன், புரட்சிப் பித்தன், மயில் ராவணன், முத்தையா, அருப்புக்கோட்டை ஜீவானந்தம், அத்திப்பட்டு வீரசோழன் என்று பலராலும் தலையால் முட்டுக்கொடுத்து தோள்களால் தாங்கித் தொடர்ந்த எழுச்சி வரலாறு, தமிழர்களுக்குப் புதிய செய்தி.
பட்டுக்கோட்டைப் பக்கமுள்ள தம்பிக்கோட்டையிலிருந்து நெல் குவியும் தஞ்சை பூமியில் வயிற்றுக்கு ஒரு பிடி நெல்கூட கிடைக்காமல் ஒன்பது வயதில் கணபதி மலேயா பயணமாகிறார்.
"கருங்கல் கணபதிக்கு சுடச் சுடச் சுட அதிரசமும் அக்காரவடிசலும், ஆனால் தம்பிக் கோட்டை கணபதிக்கோ தாங்காத விடுதலைப் பசி” என்று கலைஞர் கருணாநிதி எழுதுவார். 'கயிற்றில் தொங்கிய கணபதி' என 1952-ல் எழுதிய நூலில் குறிப்பிடுவார். அது நாடகமாகவும் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப் பெற்றது.
கடல் கடந்து சென்றதெல்லாம் குடல்பசி தணிப்பதற்காக மட்டுமல்ல. தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மையை வளர்த்தெடுக்க - பொதுவுடமைத் தீயை மூட்டிப் பெரு நெருப்பாக்க என்பது, கணபதியின் பின்னாளைய வரலாற்றுப் பக்கங்கள் வெளிச்சப்படுத்துகின்றன. மலேசியாவின் விடுதலை வரலாறு கணபதியின் பன்முகப் போரட்டங்ளினூடாக தோள்மேல் போட்டு தொடர்ச்சியாக நடந்து போகிறது.
கணபதி 1915-ல் பிறந்தார், 1949-ல் தூக்குக் கயிறு அவரை இறுக்கியபோது வயது 34. வாழ்வின் ஒரு சிறிய இடம்தான் அவருக்கு அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட அந்த சின்ன சந்தில் அவர் எத்தனை 'சாகசங்கள்' செய்திருக்கிறார்.
உலகின் மாபெரும் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்திற்கு இணையாக பான்-மலேயா தொழிற்சங்க சம்மேளனம் உருவாக்கப்படுகிறது. அகில மலேயா தொழிற்சங்கங்கள் சம்மேளனம், மலேயா அய்க்கிய முன்னனி, மலேயா அய்க்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள், இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மலேயா விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் அவசர நிலைப் பிரகடனம் செய்து, பான்-மலேயா தொழிற்சங்கங்கள் மேல் பாசிச வெறிகொண்டு தாக்குகிறது. போராளிகள் கொரில்லாப் போரை முன்னெடுக்கிறார்கள். அது ஒரு மக்கள் சனநாயகப் புரட்சி.
மக்கள் சனநாயகப் புரட்சி வெற்றி பெற்றிருந்தால், மலேசியாவின் சித்திரம் மட்டுமல்ல, இந்தியாவின் முகம் கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும். இந்திய முகத்திற்கு ஒரு முகவரி கிடைத்திருக்கும்.
மாவீரன் மலேயா கணபதியின் வரலாறு போலவே மலேயா விடுதலைப் போரை முன்னெடுத்த அக்னிக் குஞ்சுகளின் வரலாறும் சொல்லப்படாமலே போயிருக்கக் கூடும். மணிகள் மண்ணில் கிடக்கையில் உமிகள் ஊர்வலம் போகின்றன. அப்படி அப்படித்தானே நடை முறை அரசியல் நிகழ்வுகளும் நடந்தவாறுள்ளன. தமிழனின் பழைய முன்மாதிரிகளை அகழ்ந்தெடுக்கும் ஆர்வமின்மை, உழைப்புச் சோம்பல் இன்னும் எத்தனை போராளிகளின் வாழ்க்கை சரிதத்தை காவு கொள்ள போகிறதோ?
இந்த ரீதியில் அல்லாமல் மாவீரன் கணபதியின் மறைக்கப்பட்ட வரலாற்றை நம் முன் வைத்து வரலாற்றுக் கடமையை நிறைவு செய்திருக்கிறார் இரா.உதயபாசுகர்,
ஒரு தேசத்தின் திசையை மாற்றியமைத்த புரட்சியாளர்களின் சரிதத்தை எழுதிட முதலில் அவர்களைப் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட வேண்டும். செய்திகள், உண்மைகளாக இருப்பது, உண்மைகளைக் காலவரிசைப்டி இயக்கவரிசைப்படி கோர்த்து அடுக்குவது, இவ்வளவும் செய்து முடித்த பிறகு இப்போது ஒரு சுயமான படைப்பாளியின் வேலை விரிகிறது. படைப்பாற்றலை இழைத்து, ஓட்டம் குறையாமல் எடுத்துச் செல்வது லேசுப்பட்ட காரியம்மல்ல. ஒரு சுய படைப்பாளியை விட கூடுதலான கைகளும், ஆற்றலும் கொண்டவனாய் ஒரு வரலாற்றாசிரியன் மாறுகிறான்
பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திடப் பிறந்த பாரதிக்கு மரணம் தீண்டியபோது வயது 38. மலேயா கணபதி தூக்கு மேடையில் நின்றபோது வயது 34 தான். பன்முகக் கவிதைத் திறத்தாலே பாரதி இன்றும் வாழ்கின்றார். பாரதியின் வாழ்க்கை விவரணைப் படமாகவும் (டாகுமெண்டரி) வந்து, நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. இதுபோல் பன்முகப் போராட்ட பரிமாணங் கொண்ட மாவீரன் மலேயா கணபதியின வாரலறும் டாகுமெண்டரியாக வரவேண்டிய கட்டம். தமிழ் அன்பர்கள் முயல்வார்களாக.