Reading view

ரோஜா முள் துரோகம் – Crime Novel

கல்யாண மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பித்த விஷயம் நீண்ட நேரத்திற்கு பிறகே அவளுடைய மாமா சிகாமணிக்கு தெரிய வந்தது. பெற்றோரை சிறு வயதிலேயே இழந்திருந்த வைஜெயந்தியை தாய்மாமா தான் வளர்த்து படிக்க வைத்திருந்தார். ஆனால், வைஜெயந்திக்கு அவர் பாத்திருந்த மாப்பிள்ளைக்கோ வயது நாப்பத்திரெண்டு.

புகழ்பெற்ற கம்பெனியில் ஜி.எம் ஆக இருந்த யதுநந்தன் தான் மாப்பிள்ளை. எப்பாடு பட்டாவது வைஜெயந்தியைத் திருமணம் செய்ய பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்த யதுநந்தன் போலீசிற்கு பணம் கொடுத்து அவளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறார்.

அடுத்த நாள் காலை கல்யாணம் நடக்க இருந்த வேளையில், திட்டம் போட்டு வைஜெயந்தி நள்ளிரவு நேரத்தில் மண்டபத்தில் இருந்து தப்பிக்கிறாள். வைஜெயந்தி தப்பிக்க மாப்பிள்ளையின் வயது மட்டும் காரணம் இல்லை. அவள் ப்ரணேஷைக் காதலித்துக் கொண்டிருந்தாள்.

ப்ரணேஷ் – பணக்கார வீட்டு பையன், தாய் வள்ளியம்மைக்குத் தெரியாமல் தன்னுடைய காதலை வளர்த்து வருபவன். திட்டப்படி ப்ரணேஷின் நண்பன் பாண்டியுடன் மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பிக்க வேண்டியது. அதற்குப் பிறகு ப்ரணேஷும் வைஜெயந்தியும் கல்யாணம் செய்து கொள்வது.

எதிர்பாராத விதமாக, போலீஸ் விசாரணையில் வைஜெயந்தி மாருதி காரில் தப்பித்த விஷயம் தெரிய வருகிறது. மேற்கொண்டு விசாரித்ததில் ஒரு திடுக்கிடும் தகவல் போலீசிற்கு கிடைக்கிறது. வைஜெயந்தியைத் தான் காதலிப்பதாகச் சொல்லிய பாண்டி, மெக்கானிக்கல் ஷாப் நண்பனிடம் இருந்து, ஒரு காரை இரவல் வாங்கிச் சென்றதாக நண்பன் சொல்கிறான்.

இதற்கிடையில் ப்ரணேஷின் காதல் விஷயம் அவனுடைய அம்மா வள்ளியம்மைக்குத் தெரியவர, மேனேஜர் மற்றும் குடும்ப வக்கீலுடன் சேர்ந்து வைஜெயந்தியை விரட்ட திட்டம் போடுகின்றனர் மூவரும்.

யதுநந்தனிடம் பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டர், பாண்டி வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவனும் வைஜெயந்தியும் வீட்டில் இல்லை. மேற்கொண்டு போலீஸ் வீட்டை அலச, வைஜெயந்தி எழுதிய டைரி அங்கு கிடைக்கிறது. டைரி முழுக்க காதல் கவிதைகள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அக்கம்பக்கத்து ஆட்களை எழுப்பி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென இன்ஸ்பெக்டரின் பார்வை பாண்டி வீட்டு பரண் மேலே செல்ல, அதிர்ந்தார் அவர். அங்கு கொலுசு அணிந்த ஒரு பெண்ணின் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண் வைஜெயந்தி இல்லை. வைஜெயந்தியின் காதலன் ப்ரணேஷிடம் போலீஸ் விசாரித்த போது, வைஜெயந்தியைக் கூட்டி வரும்படி அவன் தான் பாண்டியிடம் கூறியதாகவும், ஆனால் இதுவரை தன்னிடம் அவளை அழைத்து வரவில்லை எனவும், பாண்டி வீட்டு பரண் மேல் இறந்து கிடந்த பெண் வைஜெயந்தியின் தோழி மோகினி எனவும் ப்ரணேஷ் கூற..

பாண்டி எதற்காக வைஜெயந்தியைக் கடத்தினான்..? யதுநந்தன்-வைஜெயந்தி திருமணம் நடந்ததா..? வைஜெயந்தி காணாமல் போனதற்கு காரணம் ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மையா..? பரண் மேல் இறந்து கிடந்த மோகினியைக் கொலை செய்தது யார்..? வைஜெயந்தி உயிருடன் இருக்கிறாளா..?

விறுவிறுப்புடன் நகரும் அடுத்தடுத்த நிமிடங்கள்..இன்றே வாசியுங்கள் ரோஜா முள் துரோகம்.

Casting : வைஜெயந்தி, தாய்மாமா சிகாமணி, மாப்பிள்ளை யதுநந்தன், ப்ரணேஷ், பாண்டி, மோகினி, மெக்கானிக் ஜோசப், ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மை.

  •  

எனி டைம் MONEY மர்டர் – Crime Novel

போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து, கவசம் பத்திரிக்கையில் கடந்த வாரம் வெளிவந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்திருந்தார் ஏ.சி. டேனியல் மாணிக்கம். அவரது மிரட்டலைப் பொருட்படுத்தாத ஆடலரசும் அருணாவும் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார் ஏ.சி டேனியல் மாணிக்கம்.

கவசம் பத்திரிக்கையைத் தரைமட்டம் ஆக்குவதற்காக எதிராளிகளிடம் காசு வாங்கிய உதவியாசிரியர் கமலப்பித்தன், யாரும் அறியாத நேரத்தில் பிரிண்டிங் அறையில் டைனமைட்டைப் பொறுத்துகிறார். கமலப்பித்தனின் உண்மையான ரூபத்தை அறியாமல் முக்கியஸ்தர் ஒருவரை பேட்டி எடுக்க வெளியில் அனுப்புகிறார் ஆடலரசு. இதை சாக்காக வைத்து வெளியில் இருந்து டைனமைட்டை இயக்க முடிவு செய்கிறார் கமலப்பித்தன்.

மறுபக்கம், மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலை அமோகமாக செய்து வருகிறார் மாஜி மந்திரி ராஜாங்கம். அவருக்கு பின்னணியில் உதவியாக ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, வார்டன் சண்முகராஜன் மற்றும் சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர் உள்ளனர். மேலும் சிறையில் அவருக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.

ராஜாங்கத்தின் சுயரூபத்தை அறிந்த அருணா, அவரைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கேட்கிறாள். அவரோ பேட்டி கொடுக்க மறுப்பு தெரிவிக்க, சிறையில் அவருக்கு கிடைக்கும் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் கூறி பேட்டிக்கு அவரை சம்மதிக்க வைக்கிறாள் அருணா.

இதற்கிடையில் உபயதுல்லா – சண்முகராஜன் இருவரும் கைதிகளுடன் கல் குவாரிக்கு கைதிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் சாக்கில் போதைப் பொருளைக் கடத்த, மறைந்திருந்து அவர்களை போட்டோ எடுக்கிறாள் அருணா. இதையறிந்த இருவரும் அவளைக் கொலை செய்து அங்கிருக்கும் கல் குழிக்குள் அருணாவைத் தள்ளுகின்றனர்.

அருணாவைத் தேடி அவளுடைய அண்ணன் விக்னேஷ், ஆடலரசுக்கு போன் செய்கிறான். அருணாவை முக்கியமான ஒரு வேலைக்கு அனுப்பியிருப்பதாக ஆடலரசு கூற, சமாதானமடைந்த அவன் அருணாவிற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். நேரம் நாட்களாக மாற ஆரம்பிக்க அருணா வீடு திரும்பவேயில்லை.

நிலைமை இவ்வாறிருக்க மாஜி மந்திரி ராஜாங்கம், ஏ.சி டேனியல் மாணிக்கம் என வரிசையாக ஒவ்வொருவராக இருதயத்தில் ஓட்டை போடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அடுத்ததாக உபயதுல்லா & சண்முகராஜன் கொலை செய்யப்பட போவதாக மிரட்டல் கடிதம் வருகிறது.

கொலையாளி யார்..? டைனமைட் வைக்கப்பட்ட கவசம் பத்திரிக்கை அலுவலகத்தின் நிலை என்ன..? இருதயத்தில் ஓட்டை போட்டு கொலை செய்யப்பட காரணம் என்ன..? பரபரப்பு திருப்பங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது எனி டைம் மர்டர்.

One Minute One Book-இன் புதிய முயற்சியாக கதையில் வரும் கதாப்பாத்திரங்களைத் தனியாக கொடுத்துள்ளோம்.

Casting : கவசம் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடலரசு, உதவியாசிரியர் கமலப்பித்தன், பத்திரிக்கையின் சீஃப் ரிப்போர்ட்டர் அருணா, அருணாவின் அண்ணன் விக்னேஷ், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் டேனியல் மாணிக்கம், மத்திய சிறைச்சாலையின் ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, ஜெயில் வார்டன் சண்முகராஜன், மாஜி மந்திரி ராஜாங்கம், சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர்.

  •