Reading view

குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா

கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.

ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்

ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.

“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.

அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.

சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.

புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.

திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.

ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.

“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.

இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.

அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.

அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.

அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.

செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.

••

  •  

குற்றமுகங்கள்- 13 பச்சைஅங்கி பிஸ்வாஸ்

அந்த வழக்கு 1879ம் ஆண்டுக் கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நாகோஜி என்ற சாமியாரைக் கொலை செய்ததாகப் பச்சை அங்கி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிறவி ஊமை என்றும் நாகோஜியின் சீடராகப் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொன்னார்கள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸ் நீதிமன்றத்தில் பேசினார். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார். ஆகவே அவர் யார். எதற்காக இப்படி ஒளிந்து வாழ்கிறார் என்பதைக் கண்டறியும் படியாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்சை அங்கி பிஸ்வாஸிற்கு நாற்பது வயதிருக்கும். ஆறடிக்கும் மேலான உயரம். தீர்க்கமான கண்கள். தோள்பட்டை வரை புரண்ட சுருண்ட கேசம். கீழ் உதட்டில் ஒரு மச்சம்.

ஒரு மனிதனின் கடந்தகாலத்தைப் போன்ற புதிர்பாதை வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை மறைந்துக் கொள்ள விரும்புகிறவன் தனது கடந்தகாலத்தை அழிப்பதில்லை. பல்வேறு கடந்தகாலங்களை உருவாக்கி விடுகிறான். இதில் எது உண்மை என யாராலும் கண்டறிய முடியாது.

பச்சை அங்கி பிஸ்வாஸ் என்பது இறந்துவிட்டதாகக் கருதப்படும் நீலாம்பூர் ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் ஷியாம் சௌத்ரியின் இடது கையில் இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அது போலவே பச்சை அங்கி பிஸ்வாஸிற்கும் விரல்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தார்கள்.

அந்த உண்மை வெளிப்பட்டவுடன் ஷியாம் சௌத்ரியின் மனைவி பார்கவி மற்றும் மாமனார் ரதீஷ் பாபு  எவ்வளவு செலவு செய்தாவது பிஸ்வாஸை வழக்கிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரோலன் ஸ்மித்தை நியமித்தார்கள்.

ஷியாம் சௌத்ரியின் வீட்டுபணியாளர்கள். கணக்கர், மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் பச்சை அங்கி பிஸ்வாஸ் தான் ஷியாம் சௌத்ரி இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைக் குடும்பத்தினர் நம்பவில்லை. ஷியாம் சௌத்ரி ஏன் வீட்டை விட்டு ஒடினார். அவர்கள் குடும்பத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்குச் சௌத்ரி குடும்பம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பணியாளர்களில் ஒருவர் மட்டும் அது ஷியாம் சௌத்ரியில்லை. அவரைக் கொல்வதற்கு ஷியாம் சௌத்ரியின் மனைவியே ஆள் அனுப்பிவைத்தார். அதை நேரில் கண்டிருக்கிறேன் என்றார்.

அந்தப் பணியாளர் பித்துபிடித்தவர் என்று சொல்லி சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார். ஷியாம் சௌத்ரியை ஏன் அவரது மனைவியே கொல்ல முயன்றார் என நீதிமன்றம் விசாரிக்க முற்படவில்லை.

அதே நேரம் பர்த்வானில் உள்ள கோவில்பூசாரி கங்காராம் அது தனது இளைய மகன் ராதாநாத் என்று அடையாளம் காட்டினார். அவன் கோவில்பணிகளில் தனக்கு உதவியாக இருந்த நாட்களில் மங்கள் தேப்பின் மனைவி சாரதாவோடு பழக்கம் ஏற்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஒடிப்போனான் என்று அடையாளம் காட்டினார்.

நீதிமன்றம் சாரதாவைக் கண்டறிந்து சாட்சியம் சொல்ல அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். காசியின் படித்துறை ஒன்றில் பிச்சைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த சாரதாவை அவர்கள் கண்டறிந்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு ஒன்பது மாதங்களானது.

அவள் பச்சைஅங்கி பிஸ்வாஸைப் பார்த்த மாத்திரம் அது தனது காதலன் ராதாநாத் இல்லை. அவன் என் முன்னே நின்றிருந்தால் வெறும் கையால் கொன்றுவிடுவேன் என்று சொன்னாள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸை தான் காசியில் படகோட்டியாகப் பார்த்திருக்கிறேன். தங்க கருடன் கொடியுடன் படகில் சுற்றியலைந்த திருடன் துலால் என்றாள். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கங்கையில் படகோட்டுகிறவர்கள் மற்றும் வாரணாசியின் காவல் அதிகாரி இருவர் சாட்சியம் சொல்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் பச்சை அங்கி பிஸ்வாஸை பார்த்த மாத்திரம் அது துலால் தான் என்று உறுதியாகச் சொன்னார்கள். கங்கை நதித் திருடன் துலால் கர்ணனைப் போல நதியில் மிதக்கவிடப்பட்ட குழந்தை என்றார்கள். அவனைப் படகோட்டி விஸ்வன் வளர்த்தான். இளைஞனான துலால் படகில் செல்லும் பயணிகளைத் தாக்கி அவர்களின் நகை பொருட்களைக் கொள்ளையடித்தான். நதியில் அவனைத் துரத்திச் சென்று எவராலும் பிடிக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணின் காதலில் விழுந்தான். அவள் சென்ற படகு நதியில் மூழ்கியதில் அவள் இறந்துவிட்டாள்.  அதன்பிறகு  துலாலை கங்கையில் காணமுடியவில்லை.  . அவனுக்கு என்ன ஆனது, எதற்காக இப்படி ஊமை போல ஒளிந்து வாழ்ந்து சாமியாரைக் கொலை செய்தான் என அவர்களுக்குப் புரியவில்லை.

பச்சை அங்கி பிஸ்வாஸ் தனக்குப் படகோட்டத் தெரியாது என்பதோடு தான் வாழ்நாளில் காசிக்கு சென்றதேயில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தார். அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது எளிதானதில்லை என நீதிமன்றம் உணர்ந்து கொண்டது.

அதே நேரம் வீட்டைவிட்டு ஒடிய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரிக்கு, கோவில் பூசாரி ராதாநாத்திற்கு, திருடன் துலாலிற்கு என்ன ஆனது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, எங்கே ஒளிந்து வாழுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் குறித்த தனி வழக்கு நீதிமன்றத்திற்கு வராதவரை அதை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது.

வழக்கின் புதிய திருப்பமாகப் பச்சை அங்கி பிஸ்வாஸைப் போலவே கொல்லப்பட்ட துறவி ஏகோஜிக்கு இரண்டுவிரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன என்று அவரது சீடர்களில் ஒருவன் சாட்சியம் அளித்தான்.

துறவி நாகோஜி தான் பழைய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி எனத் தெரிந்தவுடன் பச்சை அங்கி பிஸ்வாஸைத் தூக்கிலிட வேண்டும் என ஷியாம் சௌத்ரியின் மாமனார் கூக்குரலிட்டார். தான் நியமித்திருந்த வழக்கறிஞரை பிஸ்வாஸிற்கு எதிராக வழக்காடும்படி உத்தரவிட்டார்.  

ஒரு நட்சத்திரம் வானில் ஒளிந்து கொள்ள முடிவு செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் பிஸ்வாஸ் வாழ்க்கையும் ஆனது.

நாலரை ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது, முடிவில் பச்சை அங்கி பிஸ்வாஸ் கொலை செய்ததற்கான சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை என விடுதலை செய்யப்பட்டார். அவர் யார் என்ற உண்மை கண்டறியப்படவேயில்லை. வானில் செல்லும் பறவைகள் தனது தடயம் எதையும் விட்டுச் செல்வதில்லை. சில மனிதர்களின் வாழ்க்கையும் அது போலத் தான்.

இதன் நான்கு மாதங்களுக்குப் பிறகு மிர்சாபூர் படித்துறையில் ஒருவர் இறந்துகிடந்தார். யாரோ அவரை அடித்துக் கொன்றிருந்தார்கள். இறந்துகிடந்தவர் அணிந்திருந்த பச்சை அங்கியை வைத்து அவர் பிஸ்வாஸ் தானா எனச் சந்தேகம் வந்தது. ஆனால் அதையும் எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

••

  •  

குற்றமுகங்கள் -12 கண்துஞ்சார்

கண்துஞ்சார் மனிதர்களிடம் எதையும் திருடவில்லை. அவர் கடவுளிடம் மட்டுமே திருடினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் முப்பத்தியாறு கோவில்களில் திருடியிருக்கிறார். அதில் நகைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில் மணிகள் அடக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் ராஜஸ்தானியில் இருந்த பல கோவில்களில் மூன்று காலப் பூஜைகள் நடக்கவில்லை. கோவிலுக்கென இருந்த நிலமும் சொத்துகளும் பிறரால் அனுபவிக்கபட்டன. அது போலவே கோவிலின் நகைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கோவில் நிர்வாகியாக இருந்த நிலச்சுவான்தார் வசமே இருந்தன. அவர்கள் விழா நாட்களின் போது மட்டுமே கோவிலுக்குரிய நகைகளைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதற்குப் பெரிய பாதுகாப்பு வசதிகளோ, காவலோ கிடையாது.

கோவில் நகைகள் அடக்கிய பெட்டகம் ஒன்றை நான்கு பேர் மாட்டுவண்டியில் கொண்டு வந்த போது அதைக் கண்துஞ்சார் ஒற்றை ஆளாகக் கொள்ளையடித்திருக்கிறார். இந்த வண்டிக்கு பாதுகாவலாக வந்தவர்கள் நாலு பேர். அவர்கள் கையில் குத்தீட்டி வைத்திருந்தார்கள். அவர்களைத் தாக்கி வண்டியோடு பெட்டகத்தைக் கண்துஞ்சார் கொண்டு போய்விட்டார்.

கண்துஞ்சாருக்கு கடவுள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கோவிலில் மட்டுமே திருடினார். கண்துஞ்சாருக்கு என்ன வயது என்றோ, எப்படி இருப்பார் என்றோ யாருக்கும் தெரியாது. அவரது உண்மையான பெயர் கண்துஞ்சார் தானா என்றும் தெரியாது.

கடவுளின் மீது கோபம் கொள்ளாதவர் யார் இருக்கக் கூடும். கடவுளிடம் போடுகிற சண்டை என்பது தண்ணீருக்குள் கைதட்டுவது போன்றது. யாரும் கேட்க முடியாது.

கண்துஞ்சார் வந்துவிடப்போகிறார் என்று பயந்து பல்வேறு கோவில்களில் இராக்காவல் போட்டார்கள். கண்துஞ்சார் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகிகளே கொஞ்சம் நகைகளைத் திருடிக் கொண்டார்கள்.

வேப்பங்குடியில் இருந்த வேஷக்காரன் முனுசாமி சயனநாதர் கோவில் திருவிழாவின் போது கண்துஞ்சார் வேஷம் கட்டிக் கொண்டு களவு ஆட்டம் என்ற வேடிக்கை நிகழ்ச்சியை ஆடிக்காட்டிய போது தான் மக்கள் இப்படித் தான் கண்துஞ்சார் இருப்பார் என்று கண்டார்கள்.

உண்மையில் கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உருவாக்கியது முனுசாமியே. தனக்கு அவரை நேரில் தெரியும் என்றும். அவர் வெள்ளைக்காரர்களால் நாடுகடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை வாழ வைப்பதற்காகவே கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். கடவுளால் கைவிடப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொள்கிறார் என்றார் முனுசாமி.

அந்தக் கதையைப் பலர் நம்பாத போதும் கண்துஞ்சாரைப் பற்றிய களவு ஆட்டம் மிகவும் புகழ்பெறத் துவங்கியது. முனுசாமியைப் போலவே தென்மாவட்டங்களிலும் சில கூத்துக்கலைஞர்கள் கண்துஞ்சார் வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள்.

அதன்பிறகான வருஷங்களில் கோவில் திருவிழா தோறும் கண்துஞ்சார் ஆட்டம் தவறாமல் நடைபெற்றது. இந்த வருஷம் கண்துஞ்சாராக யார் வேஷம் கட்டப்போகிறார்கள் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததை உண்மையான கண்துஞ்சார் அறிந்திருக்கக் கூடும். அவர் தனது திருட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தார்

கோவில்கொள்ளைகளைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட காவல்பிரிவின் தலைவராக நியமிக்கபட்ட டக்ளஸ் ஹாமில்டன் கண்துஞ்சாரைப் பிடிப்பதற்காகக் கோவில் தோறும் மாறுவேஷத்தில் ஆட்களை உலவ விட்டிருந்தார்.

ஒராண்டிற்குப் பிறகு பெருமல்லபாடு கோவிலில் திருட முயன்றபோது கண்துஞ்சார் ஹாமில்டனின் ஆட்களால் கைது செய்யப்பட்டார். அது கண்துஞ்சார் தானா என அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கைது செய்யப்பட்ட நபருக்கு நாற்பது வயதிருந்தது. மீசையில்லாத முகம். ஏறு நெற்றி. வழுக்கை தலை. ஒரு கண்ணில் பூ விழுந்திருந்தது. சாய வேஷ்டி கட்டியிருந்தார். உறுதியான உடற்கட்டு. இவரால் எப்படி இத்தனை கோவில்களைக் கொள்ளையடிக்க முடிந்தது என ஹாமில்டனுக்கு வியப்பாக இருந்த்து.

இது உண்மையான கண்துஞ்சாரில்லை. அவரது நகல். அவர் இப்போது வெளியே வருவதில்லை என்று பலரும் சொன்னார்கள். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடந்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஹாமில்டனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

ஒருவேளை கண்துஞ்சார் தன்னைத் தேடும் நாடகத்தை முடித்து வைக்க இப்படி ஒரு ஆளை அனுப்பியிருக்கிறாரோ என்றும் நினைத்தார்.

கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துப் போய்ப் பிடிபட்ட கரடியை வேடிக்கை காட்டுவது போலச் செய்தார்கள். சில ஊர்களில் மக்கள் விரும்பும் தண்டனையை அவருக்கு அளிக்கலாம் என்று சொன்னார்கள். கல்லெறிவது முதல் சாணத்தைக் கரைத்து ஊற்றுவது வரை பல்வேறு தண்டனைகளை மக்கள் அளித்தார்கள். கண்துஞ்சார் தனது வலியை தாங்கிக் கொண்டார்.

முடிவில் பெருமல்லபாடு கோவிலின் முன்பாக நரிக்கூண்டு போலப் பெரிய இரும்புக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதற்குள் கண்துஞ்சாரை அடைத்தார்கள். கடவுளின் கருணை இருந்தால் நீ உயிர்வாழ்வதற்காக உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. நாவுலர்ந்து பட்டினி கிடந்து எலும்புகள் துருத்திக் கொண்டு புடைத்த நேரத்தில் கூடக் கண்துஞ்சார் ஒரு வார்த்தை பேசவில்லை. எவரிடமும் மன்றாடவில்லை. அது தான் அவர் கண்துஞ்சார் என்பதை அடையாளப்படுத்தியது.

ஹாமில்டன் கண்துஞ்சார் ஆட்டத்தை எங்கும் இனி நிகழ்த்தக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்

கண்துஞ்சார் தண்ணீரும் உணவும் இன்றி மரணத்துடன் போராடிய போது ஒரு நாள் இடியுடன் கூடி பெருமழை பெய்தது. வாயைத் திறந்து மழைத்தண்ணீரை குடித்தபடி கண்துஞ்சார் சிரித்துக் கொண்டார். கடவுளுடன் அவரது கோபம் தீர்க்கபட்டது போலிருந்தது. மறுநாள் சிரித்தமுகத்துடன் கண்துஞ்சார் இறந்து கிடந்தார்.

••

  •  

குற்றமுகங்கள் 11 பட்லர் லெஸ்லீ

பட்லர் லெஸ்லீ என்று அழைக்கப்பட்ட ராமேந்திரன் மதராஸ் ராஜஸ்தானியின் பகுதியாக இருந்த கண்ணனூரில் வாழ்ந்தவர். கல்கத்தாவிற்குச் செல்லும் போது அவரது பெயர் லெஸ்லீ. மதராஸில் அறை எடுத்து தங்கும் போது அவரது பெயர் சுகுமார். மூன்று பெயர்களில் வாழ்ந்த அவர் இறந்த போது வயது 39.

ஜேனி என்ற ஆங்கிலோ இந்தியத் தாயிற்கும் வணிகரான வி.வி.சந்திரனுக்கும் பிறந்த மகன் என்கிறார்கள். விவிசியின் குடும்பத்தினர் இதனை ஏற்கவில்லை. காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விதை எங்கே விழுந்து முளைத்தாலும் அதற்கு மரம் பொறுப்பாகாது என்றார்கள்.

ராமேந்திரனுக்குச் சிறுவயது முதலே சரியாகப் பேச்சுவரவில்லை. ஆகவே எதையும் எழுதிக்காட்டச் செய்தார். இதற்காக எப்போதும் பென்சிலும் காகிதமும் வைத்திருந்தார். எட்டு வயதில் தந்தையால் பாரக்பூர் அழைத்துச் செல்லப்பட்ட ராமேந்திரன் அங்கே ராணுவ அதிகாரி வீட்டில் சில ஆண்டுகள் பட்லராகப் பணியாற்றியிருக்கிறார்.  அதனால் பட்லர் லெஸ்லீயாக மாறினார்.

1886 ஆம் ஆண்டு ராமேந்திரன் மீது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடுக்கபட்டது. அதன்படி அவர் ஆங்கிலேயர்களிடம் சாராயம் மற்றும் கள் விற்பதற்கான உரிமை பெற்றதாகவும் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக் கள்ளவணிகம் செய்ததோடு அரசிற்குச் செலுத்த வேண்டிய இருபத்திமூன்றாயிரம் ரூபாயைச் செலுத்தமாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு வாதடுவதற்காகப் ராமேந்திரன் மும்பையிலிருந்து வழக்கறிஞர் கே.சி.மசானியை வரவழைத்தார். நாலரை ஆண்டுகள் நடைபெற்ற அந்த வழக்கில் ராமேந்திரன் மீது தவறில்லை என்றும் அவர் அபாரதமாக ஆயிரம் ரூபாய்க் கட்டினால் போதும் என்று தீர்ப்பளிக்கபட்டது கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. அத்தோடு ராமேந்திரன் கவர்னர் வரை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதையும் தெளிவாக்கியது.

ராமேந்திரன் மாதம் ஒருமுறை வங்காளத்திற்குப் பயணம் செய்துவந்தார். அவர் கிழக்கு இந்திய கம்பெனியின் அபின் வணிகத்திற்கு ரகசியமாக உதவினார், அதன் காரணமாகவே அவருக்கு நிறையப் பணம் கிடைத்தது என்று சொல்கிறார்கள். கல்கத்தாவில் அவரது பெயர் லெஸ்லீ. பத்திரிக்கையாளர். ஒரே விடுதியில் ஒரே அறையில் தான் எப்போதும் தங்குவது வழக்கம்.

ராமேந்திரன் தனது வாழ்நாள் முழுவதும் நிலம் வாங்கிக் கொண்டேயிருந்தார். எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலங்களை வாங்கினார் என்று முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இவ்வளவு வாங்க எப்படிப் பணம் கிடைத்தது. யாரை வைத்து எப்படி வாங்கினார் என்பது குறித்த விவாதங்கள் வழக்கின் போது பேசப்பட்டன. அவரது குடும்பத்திற்கே அந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.

ராமேந்திரன் நிலம் மற்றும் வீடுகள் வாங்குவதற்கென்றே பனிரெண்டு பேர் கொண்ட குழுவை வைத்திருந்தார். அவர்கள் அபயகாரிகள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யாருக்கு கடன் கொடுத்தால் எளிதாக நிலத்தைக் கைப்பற்ற முடியும் என அறிந்திருந்தார்கள். பழைய திவான்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள். கோவில் நிலத்தினைப் பெயர் மாற்றித் தனதாக்கிக் கொண்டார்கள். கணவனை இழந்த பெண்களுக்குச் சொந்தமான நிலத்தைச் சொற்ப பணத்தில் பெற்றார்கள். ஒரு பசுவை விலைக்கு வாங்கிவிட்டுப் பசு கட்டப்பட்டிருந்த நிலமே தங்களுடையது எனப் பத்திரம் பதிந்து கொண்டார்கள். இப்படியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாகியது.

ராமேந்திரனுக்குச் சொந்தமாக 121 வீடுகள் இருந்தன என்கிறார்கள். தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதே நேரம் உள்ளூரில் மரியாதை வேண்டும் என்பதற்காகத் தாணுப்பிள்ளை குடும்பத்து பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தம் 32 படுக்கைகளுடன் 20 குளியலறைகள் கொண்ட பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தார்.

இரண்டு மனைவிகள் மூலமாக அவருக்குப் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் நால்வர் பிறந்த சில மாதங்களில் இறந்து போனார்கள். ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் ராமேந்திரன் வாழ்ந்து வந்தார். அதிகமாக நிலமுள்ளவன் ஆயிரம் கைகள் கொண்டவனாகப் பலம் பெறுகிறான் என்று ராமேந்திரன் நம்பினார். எந்த ஊரில் இடம் வாங்குகிறாரோ அதன் பெயரை தனது உடம்பில் பச்சைகுத்திக் கொண்டார். அவரது முதுகு, கைகள், தொடை, கழுத்து என எங்கும் எழுத்துக்களாக இருந்தன.

இவ்வளவு சொத்திற்கு அதிபதியாக இருந்த ராமேந்திரனுக்குத் திடீரென ஒரு நாள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. எதைச் சாப்பிட்டாலும் குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. அவரால் வாழைப்பழத்தைக் கூடச் சாப்பிட முடியவில்லை. இதற்கான வைத்தியம் செய்வதற்காக அவர் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களிடம் சென்றார். அவர்கள் கொடுத்த மருந்தால் சற்று குணமானது. ஆனால் காகம் சாப்பிடுகிற அளவைப் போல உணவைக் கொறிக்க முடிந்ததேயன்றி வயிறு நிறையச் சாப்பிட முடியவில்லை.

ஆங்கில வைத்தியம் செய்து கொள்வதற்காக அவர் மதராஸிற்குச் சென்றார். டாக்டர் டெகார்ட்டிடம் சிகிட்சை எடுத்துக் கொண்டார். இரண்டரை மாத சிகிட்சைக்குப் பிறகு நலமடைந்து சொந்த ஊர் திரும்பினார்.

அதன் மறுநாள் அவரது வீட்டில் பெரிய விருந்து நடைபெற்றது. நூற்றியெட்டு வகைப் பதார்த்தங்கள் அதில் இடம்பெற்றன. இலையின் முன்னால் அமர்ந்த போது ராமேந்திரனுக்குத் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அவர் ஒரு வாய்ச் சோறு சாப்பிட்டிருப்பார். அப்படியே மயங்கி இலையில் விழுந்து இறந்து போனார்.

ராமேந்திரன் சொத்துக்கு அவரது இரண்டு மனைவியர் மற்றும் உறவினர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். வழக்கு தொடுத்தார்கள். கோர்ட் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலம் அவரது பெயரில் இருந்த்து எனக் கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டது. அந்தக் கணக்கெடுப்பிற்கு முன்பாகவே அவரது அபயகாரிகள் பத்திரங்களைத் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள். பல வீடுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கே சொந்தமானது.

ராமேந்திரன் பலரையும் ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்திய விபரம் வழக்கின் போது தெரிய வந்தது. அதில் மூன்று கொலைகளும் சம்பந்தப்பட்டிருந்தன ஆகவே அவரது சொத்து முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது.

நூறு வீடுகளின் அதிபதியாக இருந்த ராமேந்திரனின் பிள்ளைகள் குடியிருக்க வீடின்றி வீதிக்கு வந்தார்கள். அதில் ஒரு பையன் மனநிலை பாதிக்கபட்டு கிழிந்த சட்டையோடு பஜாரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ராமேந்திரனுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. அவர் ஆடம்பரமாக வாழ்ந்த வாழ்க்கையை விடவும் கையில் சோற்றோடு இறந்த நிகழ்வு தான் மக்கள் மனதில் அழியாமலிருந்தது.

  •  

குற்றமுகங்கள் 10 பூச்சா ஜக்காரி

1871ம் ஆண்டு மதராஸின் கார்டன் சாலையில் வசித்த பூச்சா ஜக்காரி கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் 1650 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. அத்தனையும் திருட்டுச் செருப்புகள். இத்தனை செருப்புகளைத் திருடிய போதும் ஜக்காரி தன் வாழ்நாளில் செருப்பு அணிந்ததில்லை.

ராபர்ட் லோகன் துரையின் குதிரை மீது வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டதற்காகவே அவரைக் கைது செய்தார்கள். அதன் பிறகே அவர் பதினெட்டு வருஷங்களாகச் செருப்பு திருடி வந்தவர் என்பது தெரிய வந்தது

கைக்குழந்தையை வைத்திருக்கும் பெண்ணைப் போல எப்போது தனது கையில் பூனையொன்றை வைத்திருப்பார் ஜக்காரி. அதனாலே அவரைப் பூச்சா ஜக்காரி என்று அழைத்தார்கள். எழுபது வயதிருக்கும் அடர்ந்த வெள்ளைதாடி வயிறு வரை விழுந்திருக்கும். வட்ட தலைக்குல்லா. இடது கையில் சிறிய மரப்பெட்டி, வலது கையில் பூனை. தூக்கத்தில் நடப்பவர் போன்ற மெதுவான நடை.

மதராஸின் எம்பயர் லாட்ஜ் வாசலில் அமர்ந்தபடி காதில் குரும்பு எடுக்கும் வேலையைச் செய்து வந்தார். இதற்காக ஒரு மரப்பலகையை வைத்திருப்பார். காது சுத்தம் செய்ய வருபவரை அந்தப் பலகையில் உட்காரச் சொல்லி தனது மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த மூன்று விதமான காது குடைப்பானை வெளியே எடுப்பார். எதிரிலிருப்பவர் காதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிணற்றில் எட்டிப் பார்ப்பது போலப் பார்ப்பார். காது சுத்தம் செய்வதற்கு முன்பாக அவரது கையில் இரண்டு அணா காசினைக்  கொடுத்துவிட வேண்டும்.

அதன்பிறகே தனது குடைப்பானைக் கொண்டு காதிலுள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்துவார். காதின் தோற்றம் தாயின் கர்ப்பத்திலுள்ள சிசுவைப் போன்றது. ஆகவே அதைப் பிறந்த குழந்தையைப் போலக் கையாள வேண்டும் என்பார்.

சில நேரம் குழந்தைகள் காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிடும். வலியில் துடித்துப் போய்விடுவார்கள். அப்போது சிறிய புட்டியில் வைத்திருந்த மஞ்சள் தைலத்தில் ஒரு சொட்டு விட்டு அந்த எறும்பை வெளியே எடுத்துவிடுவார். இதற்காக அவர் கட்டணம் வாங்குவதில்லை.

திருமணம் செய்து கொள்ளாத ஜக்காரி வைத்திருந்த பூனையின் பெயர் லோலி. அதன் கழுத்தில் சிவப்பு நிற துணிப்பட்டை ஒன்றை கட்டியிருப்பார். பூனைகளுக்கு ரகசிய வழிகள் யாவும் தெரியும். அவை ஒரு நாள் தன்னை சொர்க்க லோகத்திற்கு அழைத்துப் போய்விடும் என நம்பினார்.

பூச்சா ஜக்காரிக்கென நண்பர்களோ, உறவினர்களோ எவருமில்லை. அவரைத் திருடினாக்கியது பூனையே. தனக்குத் தேவையில்லாத ஜரிகைத்துணி, சோப் டப்பா, கிழிந்த தொப்பி, முட்டை ஒடு, மரக்கரண்டியை லோலி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டது. தனக்குத் தேவையில்லாத ஒன்றை கொண்டு வருவதில் பூனை காட்டிய ஆர்வமே அவரைச் செருப்புத் திருடனாக்கியது.

கோவில்வாசலில் கழட்டிவிடப்பட்ட செருப்புகளில் விருப்பமானதைத் திருடிக் கொண்டு போய்விடுவார். அந்தப் பழக்கம் மெல்ல வளர்ந்து மக்கள் கூடும் இடங்களில் தனக்கு விருப்பமான செருப்பினைத் தேர்வு செய்து அதைத் திருடுவதைச் சவாலாகக் கருதினார். அப்படி ராலே துரையின் மனைவி செருப்பைத் திருடியிருக்கிறார். பார்சி வணிகரான ருஸ்தம் அணியும் வெள்ளைச் செருப்பைத் திருடியிருக்கிறார். கப்பல் மாலுமிகள் அணியும் விசேச தோல்செருப்புகளைக் கூட திருடியிருக்கிறார்.

தனது வீட்டில் திருடிய செருப்புகளைத் துணி காயப்போடுவது போல ஒரு கொடிக்கயிற்றில் தொங்க விடுவார். செருப்புகளின் எண்ணிக்கை அதிகமானவுடன் மரப்பெட்டி ஒன்றை செய்து அதில் போட்டு வைக்கத் துவங்கினார். சில நாட்கள் அந்தக் காலணிகளை வைத்து விசித்திரமான விளையாட்டுகளை விளையாடினார்.

பெண்கள் அணியும் ரோஜா நிறக் காலணியில் ஒன்றையும் கறுப்பு நிறமுள்ள ஆண்கள் அணியும் காலணி ஒன்றையும் சேர்த்து நடனமாடச் செய்வார். இரண்டு காலணிகளுக்குள் திருமணம் செய்து வைப்பார். ஒன்றின்மீது ஒன்றாகக் காலணியை அடுக்கிக் கோபுரம் செய்வார். தனக்கு மிகவும் பிடித்த காலணிகளுக்குச் செல்லப் பெயர் கூட வைத்துக் கொண்டிருந்தார். இந்த வேடிக்கைகள் அவரை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தன.

செருப்புத் திருடுவதைப் பெரிய குற்றமாக அவர் நினைக்கவில்லை. பெரும்பாலும் செருப்பைத் திருட்டு கொடுத்தவர்கள் தன்னைவிட்டுப் பாவம் நீங்கிவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் வெள்ளைக்கார நீதிபதிகளும் ராணுவ அதிகாரிகளும் அப்படி நினைக்கவில்லை. அதிலும் வெள்ளைக்காரச் சீமாட்டிகள் தங்கள் செருப்பு திருடு போனதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதினார்கள்.

ஒரு நாள் எம்பயர் லாட்ஜ் வாசலில் வேலையில்லாமல் பூச்சா ஜக்காரி வெற்றிலை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எச்சிலைத் துப்புவதற்காக எழுந்து கொள்ள முயன்ற போது கால்தடுமாறவே. பக்கத்தில் நின்றிருந்த லோகன் துரையின் குதிரை மீது எச்சிலைத் துப்பிவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனாலும் அவருக்குக் கைகால்கள் நடுங்கியது. அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. அவசரமாகத் தனது வீட்டிற்கு நடக்கத் துவங்கினார். அன்று மாலையே இரண்டு காவலர்கள் அவரைக் கைது செய்ய வந்திருந்தார்கள். அப்போது தான் அவர் ஒரு செருப்புத் திருடர் என்பது கண்டுபிடிக்கபட்டது

நீதிமன்றத்தில் பூச்சா ஜக்காரி தனது திருட்டை ஒத்துக் கொண்டதோடு சிறையில் தன்னோடு பூனையை வைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி கேட்டார். நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. பூச்சா ஜக்காரி சிறையில் அடைக்கபட்டார்.

ஆனால் அதன்பிறகு விசித்திரமான நிகழ்வு உருவானது. தங்கள் துரதிருஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக மக்கள் பழைய செருப்புகளைப் பூச்சா ஜக்காரி வீட்டு ஜன்னல் வழியாகவும், கூரையின் மீதும் எறிய துவங்கினார்கள். அந்த வீடு பழைய செருப்புகளால் நிறைந்து போனது. பாவம் அந்தப்பூனை, வீசி எறியப்படும் செருப்புகளுக்குப் பயந்து அந்த வீட்டிற்குத் திரும்ப வரவேயில்லை.

••

  •  

குற்றமுகங்கள் 9 மகரன் காண்டீபன்

புகையால் எழுதப்படும் பெயர்கள் நிலைப்பதில்லை. ஆனால் அதன் வசீகரம் அபூர்வமானது. அப்படிச் சிகரெட் புகையைக் கொண்டு தனது பெயரை எழுதிக் காட்டத் தெரிந்தவன் மகரன் காண்டீபன். ஐந்தரை அடி உயரம். வயது முப்பதுக்குள்ளிருக்கும். கட்டை மீசை. மஞ்சள் படிந்த கண்கள். உரிந்த தோல் கொண்ட உதடுகள். தன்னை எரித்துக் கொள்ளும் போதும் சிகரெட் மௌனமாக இருக்கிறது என்பதாலே அதை மகரனுக்குப் பிடித்துப் போனது.  

இங்கிலீஷ் கிளப்பில் நடக்கும் குத்துசண்டை போட்டிகளின் போது சிகரெட் விற்பனை செய்வது மகரனின் வேலை. இதற்கான உரிமையை அவன் கர்னல் மார்டினிடமிருந்து பெற்றிருந்தான். அந்த நாட்களில் இங்கிலீஷ் கிளப்பிற்குள் இந்தியர்கள் அனுமதிக்கபடவில்லை.

கிளப்பின் பந்தாட்ட மைதானத்தையும் சூதாட்ட அரங்கினையும் சுத்தம் செய்வதற்காகத் தினமும் வரும் பணியாளர்கள் கூடப் பின்வாசல் வழியாகக் காலில் துணிகளைக் கட்டிக் கொண்டே உள்ளே வர வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

மகரன் காண்டீபன் சிகரெட் விற்பனை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு முன்பாகப் புகைக் கலைஞனாக வேலை செய்தான்.

மதராஸின் எழும்பூரில் 1854ல் புதிதாகத் துவங்கப்பட்ட அருங்காட்சியகத்தினைக் காண மக்களைக் குறைவாக வந்தார்கள். கூட்டத்தை ஈர்க்கும் விதமாக அதன் இயக்குநராக இருந்த எட்வர்ட் கிரீன் பல்பர் பல புதுமைகளை மேற்கொண்டார். அதன்படி ஒட்டகம், சிறுத்தை கரடி. வரிக்குதிரை போன்ற உயிருள்ள விலங்குகளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தினார். அவற்றை மக்கள் நெருங்கிப் பார்வையிடவும் அனுமதித்தார்.

அப்படியும் கூட்டம் திரளாத போது தனிநபர் வேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். மணலைக் கயிறாகத் திரித்துக் காட்டும் நிகழ்ச்சி. ஆறடி நீளமுள்ள வாளை விழுங்கி காட்டும் நிகழ்ச்சி. பாம்பு மனிதன் ஷோ எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக மகரன் காண்டீபனின் புகைவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மரமேஜை ஒன்றின் மீது ஏறிக் கொண்டு மகரன் காண்டீபன் ஒரே நேரத்தில் வாயில் ஆறு சிகரெட்டுகளைப் பற்ற வைத்துப் புகைவிடுவான். வளைய வளையமாக அந்தப் புகை வெளியேறுவதைக் கண்டு மக்கள் ரசித்துக் கைதட்டுவார்கள். அது போலவே புகையால் தனது பெயரை எழுதிக் காட்டுவான். இது மட்டுமின்றிக் காது வழியாகச் சிகரெட் புகையைவிடுவது, எரியும் சிகரெட்டினை வாயினுள் விழுங்கிக்காட்டுவது போன்ற வேடிக்கைகளையும் செய்து வந்தான்.

எட்வர்ட் கிரீன் பல்பர் அவனது உடையே சிகரெட் போல இருந்தால் நன்றாக இருக்கக் கூடும் என நினைத்து பொன்னிற மேல் சட்டையும் வெள்ளை பேண்டும் பரிசாக வழங்கினார். அத்தோடு அவன் ஒரு நடமாடும் சிகரெட் என்ற பட்டத்தையும் வழங்கினார்.

மகரன் காண்டீபன் விசேச உடையினை அணிந்து கொண்டு தனது புகைவிடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி புகழ்பெற்றான். அதிலும் ஒருமுறை இரண்டு குரங்குகளைச் சிகரெட் புகைக்க வைத்துக் காட்டியது பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக மார்க் அண்ட் கோ வழியாக இங்கிலாந்திலிருந்து பல்வேறு விதமான சிகரெட் ரகங்களை வரவழைத்து விற்பனை செய்ய ஆரம்பித்த மகரன் சிப்பாய்களுக்குள் சிகரெட் பிடிக்கும் போட்டி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினான்.

இந்தப் புகழின் காரணமாகவே அவன் இங்கிலிஷ் கிளப்பில் சிகரெட் விற்பனை செய்வதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே வாரம் சனிக்கிழமை மாலை குத்துசண்டை நடப்பது வழக்கம்.

ராணுவ அதிகாரிகளும் கப்பல் மாலுமிகளும் கம்பெனி வணிகர்களும் அதைக் காண ஒன்று கூடுவார்கள். அந்தக் குத்துசண்டையில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். குத்துசண்டை அரங்கிலே மதுவும் சிகரெட்டும் விற்கபடும்.

இங்கிலிஷ் கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பெண்பித்துக் கொண்ட வெள்ளைக்கார அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆண் உடையில் பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் சரசமாடச் செய்தான் . இதனால் கம்பெனி அதிகாரிகளிடம் நிறையச் சலுகைகளைப் பெற முடிந்தது.

குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் ஒரு நாள் மகரக் கண்டியனை அழைத்துக் கப்பலின் மேற்தளத்தில் ஒரு குத்துசண்டை போட்டியினை ஏற்பாடு செய்தால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னான். கிடைக்கும் வருவாயில் பாதிப்பாதியாகப் பிரித்துக் கொள்வோம் என மகரக் கண்டியன் அன்றே ஒப்பந்தம் செய்து கொண்டான்.

கோல்டன் டவர் கப்பலில் முதன்முறையாகக் குத்துசண்டை ஏற்பாடானது. இதனைக் காணுவதற்காக ஐந்து ஸ்டார் பகோடா நாணயங்கள் கட்டணமாக வைக்கப்பட்டிருந்தது.

கப்பலின் மேற்தளத்தில் நடைபெற்ற போட்டியினைக் காண ஆங்கிலேயர்கள் திரளாக வந்திருந்தார்கள். போட்டியின் போது மதுவும் சிற்றுண்டிகளும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அந்தப் போட்டி மகரன் காண்டீபனின் வாழ்க்கையைத் திசைமாற்றியது. இவ்வளவு பணத்தை எளிதாக சம்பாதிக்க முடியும் என்பது வியப்பளித்தது

தனது போட்டிகளுக்காகவே அவன் ஒரு பழைய கப்பலை விலைக்கு வாங்கினான். அதில் குத்துச்சண்டை போட்டிகளைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தான். அவனிடம் பணம் குவிய ஆரம்பித்தது.

குத்துசண்டையில் வெள்ளைக்காரர்களுடன் இந்தியர்களும் மோதுவதற்கு ஏற்பாடு செய்தான். அந்தப் போட்டியில் வெள்ளைக்கார வீரன் தோற்றால் கூட ஐம்பது பொற்காசுகள் வழங்கப்படுமென அறிவித்தான். தனது கப்பலில் குத்துசண்டையிடுவதற்காக அவனே வீர்ர்களைத் தயார் செய்யவும் ஆரம்பித்தான்.

குத்துச் சண்டை போட்டிகளின் போது தானே சொந்தமாகத் தயாரித்த சிகரெட்டுகளை நேவி கட் சிகரெட் டின்னில் அடைத்து 88 பிராண்ட் சிகரெட் என விற்பனை செய்ய ஆரம்பித்தான். புதிய சிகரெட்டின் வாசனை வெள்ளைக்காரர்களுக்குப் பிடித்துப் போனது.  

கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியும் புகையும் மதுவும் ஆங்கிலேயர்களை மிகவும் உற்சாகம் கொள்ள வைத்தது.

அதன்பிறகு மதராஸின் முக்கிய நபராக மகரன் காண்டீபன் உருமாறினான்.

ராணுவ அதிகாரிகள் தரும் விருந்தில் அவனும் கையில் ஒயின் கோப்பையை ஏந்தினான். நடனம் ஆடினான். ஆறு குதிரைகள் கொண்ட சாரட் ஒன்றை சொந்தமாக வைத்துக் கொண்டான். கப்பலிலே வசிக்கத் துவங்கிய காண்டீபன் தனது பணியாளர்களாக வெள்ளைக்கார பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தான்

போலி சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்காக வேப்பேரியில் இருந்த பழைய நாடக கொட்டகை ஒன்றை விலைக்கு வாங்கினான். அதனுள் ரகசியமாகச் சிகரெட் தயாரிக்கும் பணி நடந்தது. கம்பெனி ராணுவ அதிகாரிகளில் சிலர் இங்கிலாந்து செல்லும் போது 88 சிகரெட் டின்களைக் கையோடு கொண்டு சென்றார்கள்.

லண்டனிலும் மகரன் காண்டீபனின் சிகரெட்டிற்கு வரவேற்பு அதிகமானது. கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான சார்லஸ் எட்வர்ட் இந்தச் சிகரெட்டுகளை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் உரிமையைப் பெற்றுக் கொண்டார். இப்படியாக மகரனிற்குப் பல்வேறு வழிகளிலும் பணம் கொட்ட ஆரம்பித்தது

குத்துச்சண்டை போட்டிகளை மட்டும் கப்பலில் நடத்தாமல் சூதாட்டம், நிர்வாண நடனம். துப்பாக்கி சுடும் போட்டி எனப் பல்வேறு கேளிக்கைகளையும் ஏற்பாடு செய்தான். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அவனது கப்பலில் இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அன்று கரையில் இருந்தபடியே ஒளிரும் கப்பலையும் அதில் இசைக்கப்படும் சங்கீதத்தையும் மக்கள் ரசித்தார்கள்.

மதராஸின் புதிய கவர்னராக ஜார்ஜ் ஹாரிஸ் நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவரது கையைக் குலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டான் காண்டீபன். முதற்சந்திப்பிலே அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என ஜார்ஜ் ஹாரிஸ் உணர்ந்து கொண்டுவிட்டார். அதன் சில நாட்களில் அவர் கப்பலில் நடைபெறும் குத்துசண்டை போட்டிகளுக்குத் தடைவிதித்ததோடு கம்பெனி அதிகாரிகள் எவரும் அதில் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவும் பிறப்பித்தார்.

மகரன் காண்டீபனின் செல்வாக்கு இங்கிலாந்து வரை இருந்த்து. அவன் இங்கிலாந்திற்குச் சென்று விக்டோரியா ராணியை நேரில் சந்தித்து விசேச அனுமதிக் கடிதம் பெற்றுவந்தான். அதனை கவர்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தங்களுக்குள் இருந்த நட்பை உறவாக்கிக் கொள்ளவும் காண்டீபனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காகவும் குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் தனது சகோதரி கிளாராவை மகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினான்.

காண்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அடுத்தச் சில நாட்களில் அவன் மதம் மாறி கிளாரன்ஸ் ஆஷ்லேயாக மாறினான். மதராஸ் தேவாலயத்தில் கிளாராவைத் திருமணம் செய்து கொண்டான்.

திருமணம் நடந்த மூன்றாம் நாளிரவு கிளாரா படுக்கையில் இறந்துகிடந்தாள். அவளைக் கொன்றது கிளாரன்ஸ் எனக் கைது செய்தார்கள். தான் அப்போது கப்பலில் இருந்ததாக அவன் கூச்சலிட்டான். ஆனால் பிராங்க் நம்பவில்லை.

போலி சிகரெட் தயாரித்தது. கம்பெனி அதிகாரிகளை மதுவால் மயக்கி காரியம் சாதித்துக் கொண்டது, மனைவியைத் தாக்கி கொன்றது என மகரன் காண்டீபன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

கவர்னர் அவன் தூக்கிலிடப்பட வேண்டும் என விரும்பினார். அவனுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக குற்ற விசாரணை ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. அதன் தீர்ப்பு வருவதற்குள் மகரன் மதராஸை விட்டு தலைமறைவாகி விட்டான். எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.

1879ல் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் தீவில் ஒரு வசித்த ஒரு கிழவன் ஒரே நேரத்தில் ஆறு சிகரெட்டுகளைப் பிடிப்பதையும் அவன் காற்றில் தனது பெயரை புகையால் எழுதிக் காட்டுவதையும் கண்டதாக ஜெர்மன் பயணி ஃபிரடெரிக் ஷாஃபர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது மகரன் காண்டீபனாக இருக்கவும் கூடும். அவனது மனைவி கிளாராவை யார் கொன்றார்கள் என்ற புதிர் மட்டும் கடைசிவரை தீர்க்கப்படவேயில்லை

••

  •  

குற்றமுகங்கள் -8 லாந்தம் எனும் இரட்டை தழும்பன்

1838ம் ஆண்டின் கிறிஸ்துமஸிற்கு முந்திய நாள் காலையில் ஜோசப் லாந்தம் ஹோல்போர்னின் கேரி தெருவில் இருந்த தி செவன் ஸ்டார்ஸ் பப்பிற்குக் குடிப்பதற்காகச் சென்றான். அப்போது அவனுக்கு வயது முப்பத்திரெண்டு.

அவன் குட்டையாகவும், தடிமனாகவும், செம்பட்டை தாடியுடனும், சதைப்பற்றுள்ள முகத்துடனும் இருந்தான். லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிய ஒரே பப் அதுவே.

அந்த மதுவிடுதி போட்டிகளுக்குப் பெயர் போனது. குடிகாரர்களின் புதைகுழி என்று அதனை அழைத்தார்கள்.

ஜோசப் லாந்தம் நாய்களுக்கான கழுத்துபட்டிகளை விற்கும் தெருவோர விற்பனையாளன். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் குடிப்பதிலே செலவழித்துவிடுவான். அவனுக்கு ஆறு குழந்தைகள் இருந்தார்கள். அவரது மனைவி கிளாராவுக்குக் கண்பார்வை கிடையாது. அவனை விடவும் ஐந்து வயது மூத்தவள். அவளது அண்ணன் துணிகளுக்குச் சாயமிடும் பட்டறை வைத்திருந்தார். சாயமிட்ட துணிகளை அலசிப் போடும் வேலையைக் கிளாரா செய்து வந்தாள். கிளாராவின் அண்ணன் உதவியால் தான் லாந்தமின் குடும்பம் நடந்து வந்தது.

ஜோசப் லாந்தம் சேணம் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவன். ஆகவே சிறுவயதிலே தோல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தான். பதினாறு வயதில் அவனுக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. தினந்தோறும் மயங்கி விழும் வரை குடிப்பான். ஓட்டகச்சிவிங்கிகள் நின்று கொண்டு உறங்குவதைப் போதை மிகுதியில் விளக்குக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு லாந்தம் உறங்கிவிடுவதுண்டு.

ஐரீஷ் மதுவிடுதிகளில் பியர் குடிக்கும் போட்டி நடப்பது வழக்கம். அந்தப் போட்டியில் எப்போதும் லாந்தம் தான் வெல்லுவான்.

மணற்கடிகாரத்தினுள் மேலிருந்து கீழாக விழுந்து கொண்டிருக்கும் மணல்துகளின் விதியைப் போன்றதே அவனது வாழ்க்கை.

ஒரு நாள் குடிச்சண்டை ஒன்றில் அவனது இடது புருவத்தில் ஒருவன் கத்தியால் வெட்டினான். அந்தக் காயம் ஆழமானது. பெரிய வடுவை உருவாக்கியது. லாந்தம் தனது புருவத்தைத் துண்டித்த ஆளுடன் சமரசம் செய்து கொண்டு அவனது தயவிலே குடிக்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் போதை மிகுதியில் ஒரு பாட்டில் மதுவிற்காகத் தனது வலது புருவத்தையும் வெட்டிக் கொள்ள லாந்தம் சம்மதம் தெரிவித்தான்.

இடது புருவத்தைத் துண்டித்தவனே வலது புருவத்தினையும் குறுவாளால் வெட்டினான். தனது காயத்தை மறந்து போட்டியில் வென்ற மதுவை லாந்தம் ஆசையாகக் குடித்துவிட்டு நடனமாடினான்.

போதை முற்றியபடி பின்னிரவில் அவன் தனது வீட்டுக்கதவை தட்டும் போது அவனது மனைவி “ஒரு நாள் நீ காற்றில் மறைந்து போய்விடுவாய்“ என்று சபித்தபடியே கதவை திறந்துவிடுவாள். அவளது பருத்த கைகளைப் பற்றிக் கொண்டு “பொன்னிற அழகியே“ என்று முத்தமிட முயலுவான். அவளோ “தொடாதே பன்றியே“ என்றபடியே அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்லுவாள்.

கிறிஸ்துமஸிற்கு முந்திய தினம் ஆப்பிரிக்கப் பயணி ஒருவனுக்கும் அவனுக்கும் மதுவிடுதியில் போட்டி உருவானது. அந்த ஆப்பிரிக்கப் பயணியை விடத் தன்னால் அதிகம் குடிக்க முடியும் என்பதை லாந்தம் நிரூபித்துக் காட்டினான். நான்கு வெள்ளிக்காசுகள் அவன் கையில் கிடைத்தன. தனது பிள்ளைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும் என நாணயங்களைத் தனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். ஆனால் அன்று அவன் வீடு திரும்பவில்லை.

மிதமிஞ்சிய போதையில் விளக்குகம்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டபடி உறங்கிப் போனான். அவனை எப்படிக் கப்பலுக்குக் கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் லாந்தம் கண்விழித்த போது கிழக்கந்திய கம்பெனியின் சார்பில் இந்தியாவிற்குச் செல்லும் சிசிலியா கப்பலில் இருந்தான். போதையில் அது கனவா அல்லது நிஜமா எனப் புரியவில்லை. எழுந்து கொள்ள முயன்ற போது தனது கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அதனை உதற முடியவில்லை. அவனைப் போலவே சிலர் அந்த இருட்டறையில் கட்டிப்போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. எங்கே கொண்டு செல்கிறார்கள் எனப் புரியாமல் குழப்பம் அடைந்தான்.

தனது கோபத்தை வெளிப்படுத்தப் பலமாகக் கூச்சலிட்டான். யாரும் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை

இரவில் ஒரு கிழவன் மரத்தாலான தள்ளுவண்டி ஒன்றை உருட்டியபடி அவர்களை நோக்கி வந்தான். தேவதை கதைகளில் அது போன்ற உருவம் குகையில் வசிப்பதாக லாந்தம் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறான். கிழவனின் மூக்குக் கிழிபட்டிருந்தது. கனத்த குளிராடையொன்றை அணிந்திருந்தான். தள்ளுவண்டியிலிருந்து உலர்ந்த ரொட்டிதுண்டுகளில் ஒன்றையும் ஒரு குவளை மதுவையும் லாந்தமிற்குக் கொடுத்தான். பெரும்பசியும் நாவறட்சியும் கொண்டிருந்த லாந்தம் அந்த மதுவை குடித்துத் தீர்த்துவிட்டு இன்னும் வேண்டுமென்றான். கிழவன் அக்குரலுக்குச் செவி சாய்க்கவில்லை.

“இந்தக் கப்பல் எங்கே போகிறது“ எனக் கிழவனிடம் லாந்தம் கேட்டான்

“இந்தியா.“

“அது எங்கேயிருக்கிறது“

“எனக்குத் தெரியாது. ஆனால் அங்கே கோழிகள் பொன்முட்டையிடும் என்கிறார்கள்“.

“அது நிஜம் தான் என்றால் அந்தத் தங்க முட்டைகளைத் திருடிக் கொண்டு விடுவேன்“

“உன்னால் ஒருபோதும் வீடு திரும்ப முடியாது. குருட்டுவிதியால் உன் வாழ்க்கை எழுதப்பட்டுவிட்டது“ என்றபடி அந்தக் கிழவன் தனது மரவண்டியை தள்ளிக் கொண்டு சென்றான்.

பிடிக்காத பயணத்தில் தொலைவு நீண்டுவிடுகிறது. திடீரெனத் தனது வீடு நட்சத்திரங்களுக்கு அப்பால் எங்கோ மறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கல்கத்தா துறைமுகத்திற்குச் சிசிலியா கப்பல் வந்து நின்றபோது தொலைவில் தெரியும் கட்டிடங்களையும் எண்ணிக்கையற்ற காகங்களையும் ஒரே நேரத்தில் லாந்தம் பார்த்தான். அத்தனை காகங்களையும் கொல்ல வேண்டும் போலிருந்தது. துறைமுகத்தில் அவனது பெயரையும் அங்க அடையாளங்களையும் பதிவேட்டில் குறித்துக் கொண்டார்கள்.

இந்தியாவிலிருந்த பிரிட்டீஷ் ராணுவத்திற்குத் தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் அவனைப் போலப் பலரையும் இங்கிலாந்திலிருந்து கடத்திக் கொண்டு சிப்பாயாக மாற்றுகிறார்கள் என்பதை லாந்தம் தெரிந்து கொண்டான்.

இனி இங்கிலாந்து திரும்பிச் செல்வது எளிதானதில்லை. அதற்குப் பதிலாகச் சிப்பாயாக மாறி தங்க முட்டையிடும் கோழிகளை வேட்டையாடலாம் என முடிவு செய்து கொண்டான்.

லாந்தம் கல்கத்தாவின் இரண்டாவது ராணுவ பிரிவில் சேர்க்கப்பட்டான். சிப்பாய்களுக்கு அளிக்கபடும் கடுமையான உடற்பயிற்சிகளை அவனால் செய்ய முடியவில்லை. ராணுவ கட்டுபாடும் தண்டனைகளும் அவனை ஆத்திரப்படுத்தின. ராணுவத்திலிருந்து தப்பியோட முயன்று பிடிபட்ட போது அடியும் உதையும் கிடைத்தது. பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியதாகியது. வயிறு அவனது மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டது. எட்டுமாதப் பயிற்சிக்கு பின்பு அவன் சிட்டகாங் காலாட்படையின் பணிக்கு அனுப்பி வைக்கபட்டான்.

குல்னா என்ற வங்காளியின் நட்பு அங்கே தான் கிடைத்தது. அவன் தான் லாந்தமை குற்றம் செய்யத் தூண்டியவன். இருவரும் இணைந்து சிப்பாய்களுக்கான போர்வை, சோப் மற்றும் உணவுப் பொருட்களைத் திருடி விற்றார்கள். கிடைத்த பணத்தைக் கொண்டு சூதாடினார்கள். குடித்தார்கள். ஒரு நாள் அவர்கள் கண்டுபிடிக்கபட்டதோடு உயிரோடு புதைக்கும்படியாகத் தண்டனை விதிக்கபட்டார்கள்.

இருவரையும் ஆற்றோரப்பகுதியில் தலைமட்டும் வெளியே தெரிய மணலில் புதைத்தார்கள். லாந்தம் ஒரு நாயால் காப்பாற்றபட்டான் என்றார்கள். அதன்பிறகு அவனது வாழ்க்கை திசைமாறியது.

தன்னைப் போலவே இந்தியாவிற்கு ஏமாற்றி அழைத்துவரப்பட்ட சிப்பாய்கள் பலரையும் லாந்தம் ஒன்று சேர்ந்தான். அவர்கள் ஒரு குற்றகும்பலாக உருவெடுத்தார்கள்.

லாந்தனும் அவனது கும்பலும் தபால் அலுவலங்களைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். அந்த நாட்களில் தபால் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு வசதி குறைவாக இருந்தது. ஆனால் சிப்பாய்களுக்கான சம்பளம் மற்றும் கட்டுமானங்களுக்கான பொருட்கள் வாங்குவதற்கான பணம் தபால் மூலமே அனுப்பி வைக்கபட்டது. ஆகவே லாந்தமும் அவனது கும்பலும் தபால் அலுவலகத்தை எளிதாகக் கொள்ளையிட்டுப் பணத்தை அள்ளிச் சென்றார்கள்.

லாந்தம் ஒவ்வொரு கொள்ளையின் போதும் அங்கிருந்த தபால்கள் எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்தினான். அதில் சில ராணுவ அதிகாரிகள் லண்டனில் வாழும் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதங்கள். அவற்றை எரிப்பதன் மூலம் தன்னைப் போலவே அவர்களும் மனைவி பிள்ளைகளிடமிருந்து துண்டிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுவே அவர்களுக்குத் தரும் தண்டனையாகக் கருதினான்.

தபால் அலுவலகத்திலிருந்து கொள்ளையடிக்கபட்ட பணத்தில் லாந்தம் தெருநாய்களுக்கு உணவளித்தான். நூறு நாய்கள் கொண்ட பெரிய நாய்கூட்டத்தையே உருவாக்கினான் என்றார்கள். நாய்களின் கால்களில் சலங்கை கட்டியிருந்தான். அவை மணியோசையுடன் தெருவில் அலைந்தன என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்

ஜாதவ்பூர் தபால் அலுவலகக் கொள்ளையிடச் சென்ற போது லாந்தம் பிடிபட்டான். அவனுடன் இருந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டார்கள். தான் அதுவரை கொள்ளையடித்த பணத்தைப் புதைமேடு ஒன்றினுள் புதைத்து வைத்துள்ளதாகச் சொல்லி காவலர்களைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றான். அவன் சொன்ன இடத்தில் பணம் கிடைக்கவில்லை. உடைந்த கபாலம் மட்டுமே கிடைத்தது. அவனை மிரட்டிக் கேட்டதும் போதையில் அந்தப் பணத்தை எங்கே புதைத்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்லிச் சிரித்தான் லாந்தம்.

விசாரணை தேவையில்லை எனக் கர்னல் ஜேம்ஸ் முடிவு செய்து அங்கேயே அவர்களைத் தூக்கிலிட ஆணையிட்டார். தூக்கிலிடுவதற்கு முன்பாக அவன் குடிப்பதற்கு ஒரு குவளை மது வேண்டும் என்று கேட்டான். அவனது கோரிக்கையைக் கர்னல் ஏற்கவில்லை.

ஆறு வேப்பமரங்களில் ஆளுக்கு ஒருவராகத் தூக்கிலிட நிறுத்தப்பட்டார்கள். தூக்குகயிறு கிடைக்கவில்லை என்பதால் காளை மாடுகளைக் கட்டும் கயிற்றைப் பயன்படுத்தினார்கள்.

தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டும் போது லாந்தம் “தங்க முட்டையிடும் கோழி உண்மையில் இருக்கிறதா“ என்று கேட்டான்.

“நீ செத்து பாதாள லோகத்திற்குப் போ. அங்கே அந்தக் கோழியைக் காண முடியும்“ என்று தூக்கிலிடுபவன் கேலியாகச் சொன்னான்

லாந்தம் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கில் போடும் போது நின்றபடியே உறங்கிவிட்டான் என்றார்கள். ஒருவேளை லாந்தம் தனது கனவில் தங்க முட்டையிடும் கோழியைத் துரத்திக் கொண்டிருக்கக் கூடும்.

••

  •  

குற்றமுகங்கள் -7 நூபுரன்

மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் ரயில் சேவை ஜூலை 1, 1856 அன்று ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது. 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுச் சுமார் மூன்றரை மணி நேரம் பயணத்தின் பின்பு வாலாஜாவை அடைந்தது. ரயிலின் வரலாறு இதுவாக இருந்தாலும் ரயிலில் பிறந்த முதல் குழந்தையின் வரலாறு 1894ல் துவங்குகிறது.

நூபுரன் தான் ரயிலில் பிறந்த முதல் குழந்தை. அவனது அம்மாவின் பெயர் தனராணி. ஒடும் ரயிலில் நடந்த பிரவசமது. ரயிலில் யார் பிரவசம் பார்த்தது என்று தெரியவில்லை. ஆனால் ரயிலின் ஓசையே நூபுரன் கேட்ட முதல் சப்தம்.

ரயிலில் பிறந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் என்று பயணிகளில் ஒருவர் சொன்னார். தனராணி அதை நம்பவில்லை. ரயிலில் குழந்தை பிறந்தது அதிர்ஷ்டமில்லை என்று மட்டும் நம்பினாள்.

மாட்டுவண்டிகள் செல்வதற்கே சரியான பாதையில்லாத அவளது சொந்த கிராமமான தென்வடலில் அவனை வளர்த்தாள். ரயிலில் பிறந்த நினைவு நூபுரனுக்குள் இருந்திருக்கக் கூடும். அவன் சிறுவனாக இருந்த போது ஒரு இடத்தில் நிற்காமல் ஒடிக்கொண்டேயிருந்தான்.

தனது பத்தாவது வயதில் அவன் நேரில் ரயிலைப் பார்த்த போது அது தன்னுடைய பிறந்த வீடு என்றே உணர்ந்தான். கனத்த இரும்பின் சப்தம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. ரயிலின் கூடவே அவனும் ஒடினான். ரயிலின் வேகத்தில் இணைந்து ஒட தனக்கும் இரும்பாலான கால்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டான். ரயிலின் கரும்புகை அவனை ஏக்கம் கொள்ள வைத்தது.

ஊர் திரும்பிய நூபுரன் ரயிலைப் போலவே சப்தமிட்டான். அதன் பிந்திய நாட்களில் ரயில் நம்முடையது தானா என அம்மாவிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவனைச் சமாதானப்படுத்த அம்மா அது உன்னுடைய சொத்து என்றாள்.

நூபுரன் அதை முழுமையாக நம்பினான். தனக்குரிய ரயிலை தானே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது பதினைந்தாவது வயதில் வீட்டைவிட்டு ஒடிப் போனான்.

அதுவே அவனது முதல் ரயில் பயணம். அதன் பிறகான ஆண்டுகளில் எத்தனையோ ரயில்களில் எங்கெங்கோ பயணம் செய்துவிட்டான். எதற்கும் டிக்கெட் வாங்கியது கிடையாது. எந்த ரயில் நிலையத்திலும் இறங்கிக் கொள்வான். டிக்கெட் கேட்கும் பரிசோதகரிடம் தான் ரயிலில் பிறந்தவன் என்று வாதிடுவான்.

“உங்கப்பனா ரயிலை விட்டிருக்கிறான். தண்டம் கெட்டு“ என அவர்கள் சண்டையிடும் போது நூபுரன் வெறும் கையை விரித்துக் காட்டுவான். ரயில் தான் அவனைக் குற்றம் செய்ய வைத்தது. தனது முதல் திருட்டை அவன் நிகழ்த்தியது ரயிலில் தான்.

ரயிலில் பயணம் செய்கிறவர்கள் ஈரத்துணி தரையில் கிடப்பதைப் போல நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். பெரிய தொட்டில் ஒன்றில் உறங்கும் குழந்தையைப் போலத் தன்னை உணருகிறார்கள். ரயிலின் வேகத்தில் காற்று முகத்தில் ஏற்படுத்தும் குறுகுறுப்பின் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆண்களை விடவும் பெண்களை ரயில் அதிக சந்தோஷப்படுத்துகிறது என்பதை நூபுரன் கண்டறிந்தான்.

ரயிலில் ஏறியதும் மனிதர்கள் தன் இயல்பை மீறி நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களின் குரல் மாறிவிடுகிறது. தனது வாழ்க்கை நிகழ்வுகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளத் துவங்கிவிடுகிறார்கள். ரயில் பயணம் என்பது பலநூறு நடிகர்கள் ஒரே மேடையில் தோன்றி நடிக்கும் நாடகம்.

சில பயணிகளின் அலட்சியம் மற்றும் அதிகாரம் தான் அவர்களின் பொருளை திருடும்படியாக நூபுரனைத் தூண்டியது. பெரும்பாலும் அவன் பகலில் தான் திருடுவான். அதுவும் திருடிய பொருளோடு ஒடும் ரயிலில் இருந்து குதித்து விடுவான். அது ஒரு சாகசம். அப்படித் தாவிக் குதிக்கும் போது கவண் கல்லில் இருந்து கல் பறப்பது போன்ற இன்பத்தை அடைந்தான்.

மோதிரம், செயின், பயணப்பெட்டிகள், கூஜா, கைகடிகாரம், வெண்கல பானை, எனத் திருடிய அவன் ஒருமுறை ஜேம்ஸ் ஏ. காக்ஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் தொப்பி மற்றும் துப்பாக்கி இரண்டினையும் திருடிச் சென்றான்.

அந்த நாட்களில் ரயில்வே நிறுவனங்கள் பயணிகளின் சொத்துக்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாக்க தங்களுக்கென “வாட்ச் அண்ட் வார்டு” ஊழியர்களைக் கொண்டிருந்தன, அவர்களால் திருட்டை தடுக்க முடியவில்லை.

நூபுரன் தன்னை நித்ய ரயில் பயணியாகக் கருதினான். உறங்குவது என்றால் கூடச் சிறிய ரயில் நிலையம் ஒன்றின் கடைசி இருக்கையினையே தேர்வு செய்தான். ரயில் நிலையத்தில் கிடைக்கும் உணவிற்கு என்றே ஒரு ருசியிருக்கிறது. ரயில் நிலையக்காற்று என்றும் இருக்கிறது. அதை வேறு இடங்களில் உணர முடியாது.

இந்த நாட்களில் தன்னைப் போல ரயில் திருடர்களாக இருக்கும் பலரை அவன் கண்டுகொண்டான். அதில் இருவர் பெண்கள். அவர்கள் திருமண வீட்டிற்குப் போவது போல மிக அழகாக ஒப்பனை செய்து கொண்டு ரயிலில் ஏறுவார்கள். பயணிகளுடன் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். எவரும் அவர்களைச் சந்தேகம் கொள்ள முடியாது. உறங்கும் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகளை, கைவளையல்களைத் திருடிக் கொண்டு நழுவி விடுவார்கள்.

நூபுரன் அந்தப் பெண்களுடன் ஸ்நேகமாக இருந்தான். அவர்களில் ஒருத்தி புளிப்பு உருண்டை சாப்பிடுவதில் விருப்பம் கொண்டிருந்தாள். சிறிய உருண்டை புளியை எப்போதும் வாயில் ஒதுக்கிக் கொண்டிருப்பாள். ஒருமுறை அவன் மீதான அன்பில் அந்த எச்சில் புளி உருண்டையை நூபுரனுக்குக் கொடுத்தாள். பல்கூசும் புளிப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது அவன் முகம் போன போக்கை பார்த்து அவள் சிரித்தது நூபுரனால் மறக்க முடியவில்லை.

பணப்பெட்டி துவங்கி வரை பழக்கூடைகள் ரயிலில் பல்வேறு வகையான பொருட்கள் திருட்டுப் போனது. நூபுரன் யாரோடு இணைந்தும் திருட்டில் ஈடுபடவில்லை. திருடிய நகையைத் துளையிடப்பட்ட இளநீர் ஒன்றுக்குள் வைத்து ரயிலில் இருந்து நூபுரன் வீசி எறிந்துவிடுவான். மறுநாள் பகலில் அதை எடுத்துக் கொள்வது வழக்கம்.

மதராஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்து வழக்கு ஒன்றுக்காக ராவ் பகதூர் வேதலாசம் அடிக்கடி ரயிலில் போய் வருவதுண்டு. அவரது தலைப்பாகையில் வைரக்கல் பதிந்திருக்கும். ரயில் பயணத்திலும் அதை அணிந்திருப்பார். பயணத்தின் போது அவருடன் இரண்டு வேலையாட்கள் ஒரு கணக்குபிள்ளை உடன்வருவார்கள் பயணத்திற்கென பட்டுத் தலையணை, படுக்கை, விசிறி, வெள்ளி கூஜாவில் பசும்பால் கொண்டு வருவார்கள். ராவ் பகதூரின் வேலையாட்கள் ரயில்பெட்டியில் தரையில் தான் அமர வைக்கபட்டார்கள்.

அவரது தலைப்பாகையை நூபுரன் கொள்ளையடித்துச் சென்றது செய்திதாள்களில் கூட இடம்பெற்றது. ஒரு முறையில்லை. ஐந்து முறைகள் ராவ் பகதூர் வேதாசலத்தின் பொருட்களை நூபுரன் கொள்ளையடித்திருக்கிறான். அத்தனையும் அவரது வேறுவேறு ரயில் பயணத்தில்.

ஒரு முறை அவர் கைதுப்பாக்கியுடன் பயணம் செய்தார். காவலுக்கு நான்கு ஆட்களையும் வைத்திருந்தார். நூபுரன் எப்படித் திருடினான் என்று எவருக்கும் தெரியவில்லை. அந்த முறை அவர் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைநாண் களவு போயிருந்தது.

பாம்புப்பிடாரன் போல வந்து நூபுரன் அதைத் திருடிச் சென்றான் என்றும் அவனது மகுடிக்குள் திருடிய வெள்ளி நாணை மறைத்துக் கொண்டு விட்டான் என்றும் சொல்கிறார்கள்

வெள்ளைகார துரைகளிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ராவ்பகதூர் திருடனைத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போதும் நூபுரனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது தலைக்கு ஆயிரம் ரூபாய்த் தருவதாகக் கூட அறிவித்தார்கள்.

இந்தத் தொடர் திருட்டுகள் தனக்கு இயற்கை விடுகிற எச்சரிக்கை என்பது போல உணர்ந்த ராவ்பகதூர் தான் வழக்காடிக் கொண்டிருந்த கேஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஒன்பது வருஷங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சொத்துவழக்கு நொடித்துப் போய்க் கடனில் மூழ்கியிருந்த ஆறுமுகத்தின் பக்கம் ஜெயமாகியது.

நூபுரனை பிடிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து பனிரெண்டு துப்பாக்கி வீர்ர்கள் வரவழைக்கபட்டார்கள். அவர்கள் மாறுவேஷத்தில் பயணிகள் போல ரயிலில் சென்றார்கள். சந்தேகப்படுகிறவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தார்கள். இதில் நூபுரன் எந்த ரயிலில் வைத்து அவர்களிடம் அகப்பட்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் ரயிலில் இருந்து தப்பிக் குதிக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இறந்து கிடந்த அவனது உடல் இரண்டு நாட்களுக்குத் தண்டவாளத்தின் ஓரத்தில் கிடந்தது. மூன்றாம் நாளில் உடலை ஒலைப்பாயில் சுருட்டி கூட்ஸ் ரயிலில் கொண்டு போனார்கள் எனக் கான்ஸ்டபிள் ஃபிரைட்மேன் தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார். அவன் ரயிலில் பிறந்தவன் என்ற தகவல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

முர்ரே ஹாமிக் மதராஸின் காவல்துறை ஆணையராக இருந்த போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கபட்டிருக்கிறது.

••

  •