Reading view

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

 

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

உதயசங்கர்



காலமும் சமூகமும் தான் தனக்கான படைப்பாளிகளை உருவாக்குகிறது. படைப்பாளிகள் இந்தச் சமூகத்தின் அசைவியக்கத்தை அதன் இயங்கியலைச் சரியாக முன்னுணரும்போது அவர்களது படைப்புகளில் சமூகயதார்த்தம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. சமூக யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட படைப்பாளிகளே சமூகம் எத்திசையில் செல்கிறதென்பதையும் எத்திசையில் செல்லவேண்டுமென்பதையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். யதார்த்ததை  தங்களுடைய பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தி வழிகாட்டுகிறார்கள். சமூகயதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத படைப்பாளிகள் சமூகத்தின் சமன்குலைந்த நிலையையே சமன்நிலையென்று மயங்கி விடுகிறார்கள். அதையே தங்களுடைய படைப்புகளிலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் சமூக அக்கறையுள்ள படைப்பாளி தன் சமூகத்தை உற்று நோக்குகிறார். படைப்புகளில் இதுவரை கவனிக்காத இருள்வெளிகளின் மீதும், சாம்பல்நிறப்பகுதிகளின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். புனைவின் வலிமையான மாயாஜாலத்தினால் தன்னுடைய படைப்புகளில் கவனப்படுத்துகிறார். கூருணர்வுள்ள சமூகம் அந்தப் படைப்புகளின் வழியே தன்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையை பெண்கள் எழுதியதைவிட ஆண்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் பெண்கள் துயர்மிகு வாழ்வினை வாழ்ந்து தீர்ப்பவர்களாக, அவலத்தினால் அனுதாபம் கோருபவர்களாக, கையறுநிலையில் கதறுபவர்களாகவே அன்பே உருவானவர்களாக, தியாகதீபங்களாக, சிறு சலனங்களையும் பெரும்பூகம்பமாக உணர்பவர்களாக, சில சமயம் உறுதிமிக்கவர்களாக, பிரச்னைகளைச் சமாளித்து எழுந்து நிறகும் வல்லமை கொண்டவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் பெண்வாழ்வை ஒரு பெண் எழுதும்போது இதுவரை தெரிந்த மொத்தச்சித்திரமும் தலைகீழாக மாறுகிறது.

இதுவரை ஆண்களின் கண்கள்வழியே பெண்வாழ்வைப் பார்த்த பெண்களுக்கே கூட புதியதொரு தரிசனம் கிடைக்குமென்று சொல்லலாம்.

ஆகாத தீதார் என்ற முதல் சிறுகதைத்தொகுப்பின் வழியே தமிழ்ச்சிறுகதையுலகில் தன்னுடைய இலக்கிய இடத்தை வலுவாகப் பதிவு செய்த ஆமீனா முகம்மத் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நிஹாடு மூலம் புதியதொரு உயரத்திற்குச் சென்றிருக்கிறார். தமிழில் பொதுவாகவே பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மிகவும் குறைவு. அதிலும் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போதும் இப்போதுமாக ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல மின்னி மறைந்து விடுவார்கள். சித்தி ஜூனைதா பேகம், ரொக்கியா பேகம் என்ற பெயர்களுக்கப்புறம், சமீபகாலமாகத் தான் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் ஒளிவீசும் புதிய வண்ணங்களோடு எழுந்து வந்திருக்கிறார் ஆமினா முகம்மத்.

பொதுவாக சமூகத்தில் வாழும் பெண்களின் நிலைமை அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எப்படி இருக்கிறதென்பதைச் சாதாரணமாகச் செய்தித்தாள் வாசிக்கிற எல்லாருக்கும் தெரியும். சொல்லித்தீராதது பெண்களின் பாடுகள். பிறந்ததிலிருந்து இறப்புவரை எந்தச் சுதந்திரமுமின்றி, எந்தச் சுயசிந்தனையுமின்றி, யாரையாவது சார்ந்து, யாராவதொருவரின் பாதுகாப்பில், எல்லாரையும் எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்ந்து மடிந்து விடும் பெண்களின் வாழ்க்கை, என்ற கருத்தியலில் மிகப்பெரும் உடைப்பை ஏற்படுத்தும் கதைகளாக நிஹாடு தொகுப்பிலுள்ள கதைகளிருக்கின்றன.

வைகையால் உறிஞ்சப்படாத உயிர் அல்லது தற்கொலையின் நாட்குறிப்பு என்ற கதையில், வெளிநாடு சென்ற கணவனின் துரோகம் தெரிந்த கனியம்மா கரைபுரண்டுவரும் வெள்ளத்தில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார். ஆனால் ஆமினா முகம்மதின் கலையுணர்வு அவரை ஆண்கள் மட்டுமே நியாயம் வழங்குகிற பஞ்சாயத்தில் அத்தனை பேரையும் சமாளிக்கிற வலிமையுள்ள பெண்ணாக மாற்றுகிறது.

உசுரு கருப்பட்டி கதையில் வரும் கச்சம்மா கதையில் ஆமினா முகம்மதின் மொழிநடை புதிய உச்சத்தைத் தொடுகிறது. கூட்டுவண்டியில் சாமான்களுடன், குரோதம், வஞ்சம், எல்லாம் பயணப்பட்டு வந்ததாகச் சொல்வதாகட்டும், தற்கொலை செய்ய நினைக்கும் கச்சம்மாவிடம் சிட்டம்மா தண்ணியை அழுக்காக்கிறாதே என்று சொல்லி ஞானம் போதிப்பதாகட்டும், கச்சம்மா கடைசிவரை தான் சாபம்விட்டவர்களின் வீட்டில் ஒருவாய்த்தண்ணீர் குடிக்கவில்லை என்ற முடிவுவரை இதுவரை சொல்லப்படாத கதையாக இருக்கிறது.

வாழவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் ஆயிரம் வழி இருக்கிறது என்ற வார்த்தைகளில் தான் பிடாரியம்மாளில் வரும் தங்கம்மாளின் மூர்க்கம் இருக்கிறது. எல்லாரையும் வந்துபாரு என்கிற அவருக்குத் துணையாக நாகூர் அனிபா தன்னுடைய பாடல்களின் வழியே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாரென்ற விவரிப்பின் எள்ளல் தொனி தங்கம்மாள் என்ற கதாபாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது.

காதலினால் மதம் மாறித் திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை நிரூபிக்கப் போராடும் வாழ்க்கையைப் பற்றிய கதை அம்மு. இதுவரை யாரும் பேசாத கதை இது. இந்தக் கதையில் வரும் அமுதவள்ளி என்ற அமீராவின் போராட்டங்கள் மனம் உருகும் வண்ணம் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதை குறித்தும் விரிவாக எழுதிவிட மனம் துடித்தாலும் முன்னுரையில் அதற்கு இடம் கொடுக்கக்கூடாதென்ற நடைமுறையை நினைத்து சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன்.

சாஜிதா மாமி கேஸ் மனதை உருக்கும் கதை. கதையை வாசித்தவுடன் சாஜிதா மாமி ஒரு செவ்வியல் கதாபாத்திரமாக மாறியிருப்பதை நாம் உணரமுடியும். மாமனாரின் ஆவி கதையில் வரும் ராசாத்தி செய்யும் பழிவாங்கல், அசனம்மாளின் தற்கொலைக் குறிப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றும்  அசனம்மாளின் தந்திரம், இரகசிய அறை கதையில் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் இரட்டை நடைமுறை, கடைசிவரியில் ஒரு பெண்வாழ்வின் சுமையை நம் மீது ஏற்றிவிடும் வல்லமை கொண்ட கதையாகத் திகழ்கிறது. மகனுக்காகத் தன்னைப் பலிகொடுத்த தாயைப் பழிவாங்கும் பெண்ணின் சாதுரியம் என்று தொகுப்பு முழுவதும் பெண்களே நிறைந்து நிற்கிறார்கள்.

.ஆமீனா முகம்மத்தின் கதைகளில் வரும் பெண்கள் பழி வாங்குகிறார்கள், தந்திரம் செய்கிறார்கள், தன் சொந்தங்களின் மீதே சாபம் விடுகிறார்கள். வன்மத்தைப் போற்றி வளர்க்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள், அதிகாரம் செய்கிறார்கள், பிறழ்மனநிலை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள், அடிக்கடி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள், பிடிவாதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் செய்பவர்களாக, ரத்தமும் சதையுமாக நம் முன்னால் உலவித்திரிபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் இயங்கியல்ரீதியாக தனித்துவமாகவும் முழுமையாகவும் கதைக்குள்ளே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாகவும் வருகிறார்கள். பெண்ணெழுத்துகளில் நகைச்சுவையும் எள்ளலும் கேலியும் கிணடலும் மிக அரிது. ஆமீனா முகம்மத் மிக இலகுவாக தன்னுடைய மொழிநடையில் அதைக் கொண்டு வருகிறார். வாழ்க்கையை விலகி நின்று பார்க்கும்போது மட்டுமே கிடைக்கிற அபூர்வமான நோக்கு. புதுமைப்பித்தனிடம், வைக்கம் முகமது பஷீரிடம் அத்தகையை எழுத்து முறையைப் பார்க்கலாம்.  ஆமீனா முகம்மது இயல்பாக எழுதிச் செல்கிறார். இதில் தான் அவருடைய  கலை வெற்றியடைகிறது. .

ஒரு புதிய காட்சி தெரிகிறது. புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. புதிய கோணத்தில் இந்த வாழ்வு துலங்குகிறது. பெண்களின் வாழ்க்கை குறித்த பழமையான சிந்தனைகள் தகர்கின்றன. பெண்கள் இப்படித்தான் சிந்திப்பார்களென்ற ஆண்களின் அனுமானங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. பெண்கள் பேராளுமையாக, பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டிலும் இருக்கலாம்!

தமிழ்ச்சிறுகதைக்கு புத்தம் புதிய காற்றாய், பேசாப்பொருளைப் பேசத் துணிந்தவராய், அபூர்வமான கதைகளுடன் மீண்டும் வந்திருக்கிற ஆமீனா முகம்மத் மிக விரைவில் இன்னும் சிறந்த படைப்புகளைத் தருவார். தமிழின் சிறந்த படைப்பாளிகளிலொருவராக மாறுவார்.

 

 

  •  

கிருஷ்ணகதா 03-10-2014 - மதுப்பழக்கம் கேடானது எப்படி?

“புராணகாலத்துல எல்லாம் சோம பானம் சோம பானம்னு சொல்லப்படுது. முனிவர்கள், தேவர்களெல்லாம் குடிச்சதா படிச்சிருக்கேன், இந்த மதுப்பழக்கம் எப்டி கெட்ட பழக்கம்னு ஆச்சு?’ – ஃப்ரெண்ட் கேட்டாப்ல. அதுக்காகத்தான் இந்தக் கதை.

மொதல்ல கேரக்டர்ஸை தெளிவா உள்வாங்கிக்கோங்க. அப்ப படிக்கறப்ப குழப்பம் இருக்காது. மொத்தம் நாலே கேரக்டர்ஸ்.

1. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யார்.  2. அவர் மகள் – தேவயானி
3. தேவர்களின் குரு பிரகஸ்பதி.  4. அவர் மகன் – கசன்.

மனப்பாடம் பண்ணீட்டீங்களா? சரி.

தேவர்கள் – அசுரர்கள் போர் நடந்துட்டிருச்சு. அசுரர்கள்ல இறந்தவங்களை, சுக்கிராச்சார்யார் டெய்லி உயிர்ப்பிச்சுட்ட்டே இருந்தார். தேவர்கள், தங்களோட குருகிட்ட போனாங்க.

“ஹல்லோ குருஜி, வாட்டீஸ் திஸ்”ன்னு கேட்டாங்க.

அதுக்கு பிரகஸ்பதி, ‘வாட் கேன் ஐ டூ மை பாய்ஸ்? சுக்கிராச்சார்யார்க்கு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கற சஞ்சீவினி மந்திரம் தெரியும். எனக்கு தெரியாதே”ன்னாராம்.

உடனே தேவர்கள், ‘உங்க பையன் கசன் இருக்கான்ல? அவனை சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா அனுப்ச்சு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துட்டு வரச் சொல்லுங்க”ன்னாங்க. அதன்படி, பிரகஸ்பதி, தன் மகன் கசனை, சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா சேர்த்திவிடறார்.

கசன், சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்கத்தான் தன்கிட்ட சிஷ்யனா வந்திருக்கான்னு சுக்கிரருக்கு தெரியும். அவரும், குருகுல வழக்கப்படி சேர்த்துகிட்டு எல்லா வேலையும் வாங்கீட்டிருக்கார். அந்த மந்திரத்தை சொல்லிக் குடுக்கறபாட்டையே காணோம்.

இப்ப, அசுரர்களுக்கு இந்த மேட்டர் கேட்டு கிலியாகிடுது. எங்க சுக்கிராச்சார்யார் சொல்லிக் குடுத்துடுவாரோன்னு பயப்படறாங்க. சுக்கிரர், ‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பயப்படாதீங்க’ன்னுடறாரு. ஆனாலும் அசுரர்களுக்கு மனசு கேட்கல. ஆடு மேய்க்கப்போன, கசனைக் கொன்னு நாய்க்கு உணவாப் போட்டுடறாங்க.

இங்க ஒரு ட்விஸ்ட். சுக்கிராச்சார்யாரோட மகளான தேவயானிக்கு கசன் மேல ஒன் சைட் லவ்வு. சாயந்திரமாச்சு, கசனைக் காணோம்னு கவலையோட அப்பாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. அவரு ஞானதிருஷ்டில பார்த்து, கசன் இறந்துட்டதைத் தெரிஞ்சுக்கிறார்.

தேவயானி அழ, மகள் மேல பாசமா இருக்கற சுக்கிரர், ‘டோண்ட் வர்ரிம்மா.. வெய்ட்டீஸ்’ன்னுட்டு சஞ்சீவினி மந்திரம் சொல்லி கசனை உயிர்ப்பிக்கிறார். கசனும், நாய் வயித்தைக் கிழிச்சுட்டு உயிரோட வந்துடறான்.

அசுரர்களுக்கு கோவம் வருது. ரெண்டாவது தடவையா கசனைக் கொன்னு கடல்ல போட்டுடறாங்க. மறுபடி தேவயானி கண்ணீர். எகெய்ன் மந்திரம். கசன் எண்ட்ரி.

அசுரர்களுக்கு கடுப்பாவுது. இந்தாள் என்ன இப்டியே பண்றாருன்னு மூணாவது வாட்டி கசனைக் கொன்னு, அவன் அஸ்தியை சுக்கிராச்சார்யார் தினமும் குடிக்கற சோமபானத்துல கலந்துடறாங்க.

அப்பல்லாம் டெய்லி கொஞ்சம் சோமபானம் சாப்டுட்டு தூங்குவாங்க. சுக்கிராச்சார்யாரும் அதன்படி லைட்டா சாப்டுட்டு தூங்கப்போறார்.

கசன், இன்னும் வர்ல. தேவயானிக்கு டென்ஷனாவுது. அப்பாட்ட மறுக்கா கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. வழக்கம்போல தன் ஞா.தி-ல கசன் எங்கன்னு பார்க்கற சுக்கிரருக்கு ஷாக்!

கசன், தான் குடிச்ச சோமபானம் மூலமா, தன்னோட வயித்துக்குள்ளதான் இருக்கான்னு தெரியுது. இப்ப அவனை உயிர்ப்பிச்சா,  வயிறு பொளந்து, இவர் இறக்க நேரும். தேவயானிகிட்ட ‘வாட் டு டூ?’ன்னு கேட்கறாரு.

“டாடி, எனக்கு நீங்களும் வேணும். அவரும் வேணும். ப்ளீஸ்..”ன்னு கெஞ்சறாங்க தேவயானி.

’நாம சொல்லித்தரக்கூடாதுன்னு நெனைச்சோம். இப்ப அசுரர்களோட துர்புத்தியே, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்க வைக்குது’ன்னு நெனைச்ச சுக்கிராச்சார்யார், வெளில இருந்தபடி வயித்துக்குள்ள இருக்கற கசனை உயிர்ப்பிச்சு, சஞ்சீவினி மந்திரத்தை சொல்லிக்குடுத்து, ‘என் வயித்தக் கிழிச்சு வந்து, அப்பறம் இதே மந்திரத்தைச் சொல்லி என்னை உயிர்ப்பி’ங்கறார். அதன்படியே நடக்குது.

வெளில வந்த கசன், தேவயானியோட லவ்வை, ‘உங்கப்பா வயித்துல இருந்து வந்ததால நான் உன் சகோதரன் அல்லவா? ஸாரிம்மா”ன்னு ரிஜெக்ட் பண்ணது கிளைக்கதை. மெய்ன் மேட்டருக்கு வருவோம்.

சுக்கிராச்சார்யார் உயிர்த்து எழுந்ததும், அந்த சோமபான பாட்டிலைப் பார்க்கறார். “இந்தக் கெரகத்தைக் குடிச்சதாலதான் எதிரிப் படையோட குரு மகனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தது? இதக் குடிக்கலைன்னா இவ்ளோ டெலிகேட் பொஸிஷன் வந்திருக்காதுல்ல?”ன்னு யோசிச்சு,

“இனி இந்த சோமபானத்தைக் குடிக்கறவங்க, தன் மதியிழந்து போகக் கடவது”ன்னு சாபம் விட்டுடறாரு!

அதுக்கப்பறம்தான் மதுன்னா, கெட்டதுன்னு ஆச்சாம்! அக்காங்ப்பா!

**
  •