Reading view

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share

The post Vanangaan first appeared on ஹரன் பிரசன்னா.

  •  

கிஷ்கிந்தா காண்டம் – நினைவெனும் இருட்குகையின் இரகசிய வெளிச்சம்

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வனப்பகுதியை ஒட்டி வாழும் குடும்பம் ஒன்றின் கதை. ஒவ்வொன்றிலும் கச்சிதம் எதிர்பார்க்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அப்பு பிள்ளா (விஜயராகவன்). அவருடைய மகன் அஜய் சந்திரன் (ஆசிப் அலி). மனைவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன மகனும் இன்றி நிர்க்கதியாக நிற்கிறார் அஜய் சந்திரன். அவருடைய வாழ்வில் புது நம்பிக்கையாக மறுமணம் நிகழ்கிறது. அவருடைய குடும்பத்தில் நம்பிக்கையும், கனிவும் ததும்ப கலக்க முயல்கிறார் மனைவி அபர்ணா (அபர்ணா பாலமுரளி).  

வனத்தை ஒட்டிய அவர்கள் வீட்டைச்சுற்றி குரங்குகளின் நடமாட்டம்.  திடீரென்று துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் கிடைக்கிறது. அப்பு பிள்ளாவின் துப்பாக்கி காணாமல் போனது தெரிய வருகிறது. அப்பு பிள்ளாவிற்கு ஞாபக மறதி இருப்பது படிப்படியாக தெளிவாகிறது. அவர் நினைவில் இருப்பது என்ன, அவர் மறந்துவிட்டது என்ன என்பது இருட்குகை. அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களின் உலகம் அது.

ஏன் துப்பாக்கி காணாமல் போனது? அவரின் பேரன் எங்கு போனான்? ஏன் அவர் கதவை எப்போதும் அடைத்துவைத்துக் கொள்கிறார்? முன்னாள் நக்சல் இயக்கத்தினரை ஏன் சந்திக்கிறார்? குரங்குகள் மட்டும் சாட்சியாக நிற்க அவர் ஏதேனும் குற்றம் புரிந்தாரா? அப்பு பிள்ளாவின் நினைவு திரும்புமா? துப்பாக்கியும், தொலைந்துபோன குண்டுகளும் திரும்பக்கிடைக்குமா? 

கடந்து போன காலத்தின் உண்மையைக் கண்டறிய சிசிபஸ் போல அப்பு பிள்ளா முனைகிறார். உண்மையின் உச்சியை அடைந்ததும், தெளிவை விட குழப்பங்களும், கவலைகளும் வந்தடைகின்றன.  மீண்டும் முதலில் இருந்து உண்மையைத் தேடுகிறார். சளைப்பும், சலிப்பும் அவரை நிறுத்த முடியவில்லை. ஏன்? 

கிஷ்கிந்தா காண்டம் த்ரிஷ்யம் படத்தைப் போன்ற சாயலை சற்றே கொண்டது. ஆயினும், இக்கதையின் முதன்மைக் கதை மாந்தர்கள் புத்திசாலிகள் இல்லை. அழுகை, நோய்மை, இயலாமை அவர்களைப் பீடிக்கிறது. அரவணைப்பின்றி நெருக்கும் உலகத்தின் ஊடாக அவர்களால் பத்திரமாக மீண்டுவரும் முயற்சி என்னானது என்பதே கதை.  இத்தனை மனதுக்கு நெருக்கமான, உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ்ச்சியான திரைப்படத்தைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது. மறக்காமல் பாருங்கள். 

  •  

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்

இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

  •  

அர-மெட்-ஜீ-பேங்!

சமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்!

1. அரண்மணை:
மூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம்பிப் போனோம்.

சந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.

‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா?” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.

“படம் எப்டி?” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா? இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.
--------------

2. மெட்ராஸ்:

நல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.

ரஞ்சித் - Waiting For Your Hat trick Movie!
---------------------------------------

3. ஜீவா:

சமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா!.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா!’


குறியீடுகள் என்று பார்த்தால், இதிலும்.  கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல!

பாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.

OUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு? “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.


ச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
-----------

4. BANG BANG

மெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா!
.
  •  

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்

பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.
  •  

நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்

சித்ரா ராமு-லட்சுமணன் திரைப்படத்துறையில் பிரபலமானவர்கள். சித்ரா லட்சுமணன், தற்போது டூரிங்க் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூட்யூப் சானல் நடத்தி வருகின்றார். அதில் வரும் பேட்டிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. பிரபலமானவர்களுடன், அட இவர்தானா அது என்று வியக்கும் சிலரையும் பேட்டி எடுப்பதுதான் இவரின் சிறப்பு. அதோடு பேட்டி எடுக்கும் விதமும் சிறப்பானது, குறுக்கே விழுந்து பேசாமால், விருந்தினரை பேச வைத்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளி கொண்டு வருகின்றார். அவரின் பத்திரிக்கை உலக அனுபவமும், மக்கள் தொடர்பாளர் பணியும் அவருக்கு பெரிய உதவி செய்கின்றது. படத்தில் பணிபுரிந்தவரே மறந்து போன பல விஷயங்களை இவர் நினைவு படுத்துவதைப் பார்க்கும் போது ஆச்சர்யம்தான் வருகின்றது. 

அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் எழுதிய தொடரை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நல்ல டிஸ்கவுண்ட் கிடைத்ததால் வாங்கி விட்டேன். மூன்று பாகம், கிட்டத்திட்ட 150 கட்டுரைகள்.

சினிமா உலகம் என்று அல்ல, பொதுவாக வாழ்க்கை வரலாறு, வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்தவர் டைரியை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு அல்ப குஷி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜவாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கற்பனையில் கூட வராது. நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் எவ்வித தர்க்கத்திலும் அடங்காது. 

சினிமா உலகை சேர்ந்தவர்கள் என்னும் போது இன்னமும் கொஞ்சம் சுவாரஸ்யம், பிரபலம் என்பதால் மட்டுமல்ல. அங்கு இருக்கும் நிலையற்ற தன்மை வேறு எந்த தொழிலும் இருக்காது. உதாரணம், எம்ஜிஆர், சினிமா உலகை ஆட்டிப்படைத்தவர். அவருக்காக அனைவரும் காத்து கிடந்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவரே ஒரு காலத்தில் தன் சினிமா வாழ்வை தக்க வைக்க போராடினார் என்றும், ஒரே ஒரு வெற்றியை சந்திக்க தடுமாறினார் என்பது நமக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. அதில் புழங்கும் பெரும் பணம், கருப்பு பணம், பலரின் கூட்டு முயற்சியால் நடப்பது, மற்ற தொழில் மாதிரி ஒரு திட்டம் போட்டு வைத்தால் அப்படியே நடக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். அது மாதிரியான துறையில் நடக்கும் சம்பவங்கள் அதிக சுவாரஸ்யமானவையாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் ரஜினி, கமல் காலத்திற்கு முற்பட்ட தகவல்களே அதிகம். சர்ச்சைகளை பெரும்பாலும் தவிர்த்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி கதை எல்லாம் கேள்வி பட்டிராதது. எம்.ஆர். ராதா சினிமாவை விட நாடகமே முக்கியம் என்றிருந்தவர், ஒரு கட்டத்தில் சினிமா தேவை என்று தன்னுடை நாடகத்தை எல்லாம் விட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தியிருக்கின்றார், அஞ்சலிதேவி ஒரு அழுகாச்சி நடிகை என்றுதான் தெரியும், ஆனால் அவர் நடிகர் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியிருப்பது எல்லாம் ஆச்சர்ய தகவல். அன்றிருந்த கலைஞர்களின் அர்பணிப்பே அவர்களுக்கு அந்த உயரத்தை தந்துள்ளது.  சில கலைஞர்களைப் பற்றிய சித்திரமும் நமக்கு உருவாகின்றது, அவச்சொல் பேசாத தங்கவேலு, அனைவருக்கும் உதவி செய்யும் ஜெய்சங்கர், திரைவாழ்விற்கு எதிரான நிஜ வாழ்க்கை கொண்ட நம்பியார், எப்போது அலுப்புடனே இருக்கும் வி.கே.ராமசாமியின் ஆரம்ப காலங்கள், நாடக உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யங்கள்.  

இந்த கட்டுரைகளுக்கான பல தகவல்களை அவர் வெவ்வேறு புத்தகங்களில் இருந்தே பெற்றிருக்கின்றார். அதை சில இடங்களில் காணமுடிகின்ற்து. எனக்கு தெரிந்த சில புத்தகங்கள் என் பெயர் நாகேஷ், அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், என் நாடக உலக சிந்தனைகள், சொன்னால் நம்பமாட்டீர்கள். இவை பெரும்பாலும் சுய சரிதைகள், இதில் இருக்கும் தகவல்களில் சுவாரஸ்யமானவற்றை தொகுத்திருக்கின்றார். இந்த தொடருக்காக சுமார் 500 புத்தகங்களை படித்ததாக கூறியிருக்கின்றார்.  இன்னமும் இரண்டு மூன்று பாகங்கள் எழுதலாம், அந்தளவிற்கு விஷயங்கள் இருக்கும். படித்ததை எழுதுவதை விட அவரது அனுபவங்களை எழுதினாலே அதுவே மிக சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும்.

கிடைத்தால் வாங்கி ஜாலியாக படியுங்கள். தமிழ் திரைப்பட உலகைப் பற்றிய மற்றொரு சித்திரம் கிடைக்கும்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் அவர்களது மூன்றவது ஆண்டு நிறைவை ஒட்டி அளித்த 30% தள்ளுபடி விலையில் வாங்கியது. புத்தகத்தின் தரம் மிக சிறப்பாக உள்ளது. பா.ரா புத்தகங்களை அச்சிட்டது போக நேரம் கிடைக்கும் போது அச்சடித்த சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. அடுத்து விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வாங்கி பார்க்க வேண்டும்.  

  •  

எனது நாடக வாழ்க்கை - அவ்வை சண்முகம்

இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்‌ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு. 

ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.  

டி.கே.எஸ் ப்ரதர்ஸ், நாடக உலகில் மிகவும் பிரலமானவர்கள். டி.கே.எஸ் சண்முகம் , அவ்வை சண்முகம் என்று அழைக்கப்பட்டவர். இவரது தம்பி டி.கே.எஸ்.பகவதி. பல திரைப்படங்களில் நடித்துள்ளவர். சம்பூர்ண ராமாயணத்தில் ராவணேஸ்வரனாக நடித்தவர். அவ்வை சண்முகத்தின் நினைவாகத்தான் கமல் தன் படத்திற்கு அவ்வை சண்முகி என்று பெயர் வைத்தார், மற்றொரு முக்கிய நாடக உலக பிரமுகர் பம்மல் சம்பந்தம் பெயரை மற்றொரு படத்திற்கு வைத்தார்.

அக்கால நாடகங்கள் முழுவதும் பாடல்களால் நிறைந்தவை, பாடல்கள் பாட தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. எம்.ஆர்.ராதாவே மிகச்சிறந்த பாடகர் என்றால் நம்புவது கடினம்தான். அந்த குரலில் பாடலை கேட்பதை நினைக்கவே முடியவில்லை. சண்முகம், மிகச்சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவரின் நாடக வாழ்க்கை, ஐம்பது வருடங்களுக்கு மேலாக போகின்றது. அவர் நாடகத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அவரது இரண்டு மூத்த சகோதரர்களும் ஏற்கனவே நாடகத்தில் நடித்து கொண்டிருந்திருக்கின்றர். அவரின் தந்தை பாடகராக இருந்துள்ளார். 

நூலின் பெரும்பாலான பக்கங்களில் அவர்களின் நாடக குழு சென்ற ஊர்கள், அங்கு கிடைத்த வசூல், அங்கிருந்து சென்ற ஊர் என்றே போகின்றது, எப்படி சென்றார்கள், என்ன கஷ்டம் வந்தது, யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு நடுவேதான் நாடக உலகை பற்றிய பல தகவல்களை நாம் படிக்க முடிகின்றது. 

நாடக நடிகர்களாக ஆரம்பித்து பிறகு சொந்தமாக நாடகங்கள் நடத்தி, சினிமாவிற்கு சென்று நடித்து, சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள். முதல் பகுதிகளில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக குழுவில் அவர்களது அனுபவங்களை விவரித்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இரவில் ஒரு நாடகம் முழுவதையும் எழுதும் திறன் படைத்தவராக இருந்திருக்கின்றார். 4 மணிநேரத்திற்கு மேலாக நடக்கும் நாடகம், அதற்கான காட்சிகள், பாடல்கள், வசனங்கள் அனைத்தையும் ஒரே இரவில் எழுதுவது அசாத்திய திறமைதான். பிற்பகுதிகளில் அவர்களது சொந்த நாடக குழுவைப் பற்றி விவரங்கள். அவர்கள் தயாரித்த நாடகங்கள் பற்றிய விவரணைகள்.

அனைத்து வியாபரங்களில் இருப்பது போலவே ஏமாற்றம், துரோகம், பண மோசடி, ஒரு குழுவை விட்டு இன்னொரு குழுவிற்கு ஓடுவது போன்றவை நாடக உலகிலும் மிக சகஜமானதாக இருந்திருக்கின்றது. காமேஸ்வய்யர் என்னும் சுவாரஸ்ய பாத்திரம், புத்தகம் நெடுக வருகின்றது. பண கையாடல், மோசடி என்று இருந்தாலும் அவரை விட முடிவதில்லை. மக்களிடையே ஒரு காலத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்த நாடக மோகம், சினிமா வந்தவுடன் மங்கலாகின்றது. ஆனால் அதுவே நாடகத்தை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது. 

டி.கே.எஸ் சகோதரர்கள் நாடக உலகில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பார்த்திருக்கின்றனர்.ஒரே சமயம் வறுமையையும், செல்வத்தையும் கண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். மாத சம்பளம் என்று பார்த்தால் பெரிய பணம், ஆனால் சில சமயம் அது கைக்கு வராது. நஷ்டம் அதிகமாகி, குழுவையே மற்றொருவரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு சென்றிருக்கின்றனர், நாடக காட்சியமைப்பு பொருட்களை கொட்டைகையிலேயே விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இருந்தாலும் நாடகத்தை விடவில்லை, சினிமாவில் கிடைத்த பணத்தையும் நாடகத்திலேயே முதலீடு செய்திருக்கின்றார்கள். அண்ணாத்துரை, ஈ.வெ.ரா, என்.எஸ்.கிருஷ்ணன், ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா, பாகவதர் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களுடன் நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. 

சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, நாவல்களை உரிமை பெற்று நாடகங்களாக்கி, நாடக ஆசிரியர்களுக்கு ராயல்டியும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள். பாவம் இன்றைய நாவலாசிரியர்கள். ஈ.வே.ரா , காசு விஷயத்தில் கறார் என்று பெயர் பெற்றவர், டி.கே.எஸ் குழுவினரிடம் தாரளமாக நடந்து கொண்டிருக்கின்றார், பாரதிதாசன் பாடல்களை பயன்படுத்த அனுமதி வேண்டி பல கடிதம் அனுப்பியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். நடிக்க தெரியாத தியாகராஜ பாகவதர், குழுவை விட்டு ஓடுபவர்கள் மீது போலிஸ் கேஸ் கொடுக்கும் நாடக முதலாளி, நாடக கொட்டைகளில் கலட்டா செய்யும் உள்ளூர் ரவுடிகள், மகரக்கட்டால் பாதிக்கப்படும் நடிகர்கள், பெண் வேடத்தில் பிரமாதப்படுத்திய ஏ.பி.நாகராஜன், சண்முகம் மறுத்த வேடத்தில் நடித்து புகழ் பெற்ற கிட்டப்பா, என்.எஸ்.கே உடன் பல சம்பவங்கள், ராஜா சாண்டோவுடனான சினிமா அனுபவங்கள். 

இது மாதிரியான நூல்களால் என்ன பயன் என்றால், சில புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம், ஒரு காலகட்டத்தைப் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கின்றது. நம் தாத்தா பாட்டி எல்லாம் எப்படி இருந்தனர் என்று தெரிந்து கொண்டு கொஞ்சம் வயிறெரியலாம் இல்லை சந்தோஷப்படலாம். 


  •