குற்றவுணர்வில்லாக் கொலைகள்
தோழி ஒருத்தியிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது தன் ஆன்மீக குரு சொன்னதாக ஒரு விஷயத்தை மிகுந்த சிலாகிப்புடன் சொன்னாள் – ”ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி அரிசிய அரசமரத்தடில கொண்டு போய் போடச் சொல்லிருக்கார். ஒரு நூறு எறும்பாவது அதை சாப்பிடும் இல்லயா? அப்ப அத்தனை ஜீவனுக்கு அன்னமிட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும்”னு அவர் சொல்றார் என்றாள்.
ஆமாம் தானே என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அதே எறும்புகள் வீட்டு சமையலறைக்குள் வந்துவிட்டால் ஒரு கைப்பிடி எறும்பு மருந்தள்ளித் தூவுகிறாயே, அப்போதும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற பாவம் வரும்தானே என்றொரு கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. வெளிப்படையாகச் சொல்லி விவாதிக்குமளவு நெருங்கிய நட்பல்ல என்பதால் மையமாய்ச் சிரித்து வைத்தேன்.
**
தெருவில் ஒரு முதிய தம்பதியினர் தனி வீட்டில் வசிக்கின்றனர். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் அதிகம் என்பதால் குளுமையான வீடு. நிழலதிகம் என்பதால் கொசுத் தொல்லையும் அதிகம். மாலையானால் அந்த அங்கிள் கொசு பேட்டை டென்னிஸ் வீரனைப் போல் உற்சாகமாக சுழற்றிக் கொண்டிருப்பார். சிறு பிள்ளைகள் கேப் வெடிப்பதுபோல சீரான டப் டப் ஒலி கேட்பது எங்களுக்கு தினசரி பழக்கம். இத்தனைக்கும் அவர்களிருவரும் மிகுந்த கனிவான மனிதர்கள்தான். ஆனால் என்றேனும் தினமும் இத்தனை உயிர்களைக் கொல்கிறோமே என்று அவர்களுக்குத் தோன்றியிருக்குமா என்ன?
சிற்றுயிர்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது நமக்கு ஒரு பொருட்டாகவே தோன்றுவதில்லை. உயிரின் அளவும், அவை நம்மோடு கொள்ளும் உறவின் ஆழமுமே நம் குற்றவுணர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று தோன்றலாம். ஆனாலும் அதுவும் முழு உண்மையில்லை.
ஆதிகாலம் முதல் இன்று வரை குரலெழுப்ப வாய்ப்பில்லாத சக மனிதர்களையும் இதே போல்தான் கொத்துக் கொத்தாக எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொன்றழித்து வருகிறோம். பாகுபலி படத்தில் சிலை சரியும்போது நசுங்கும் மனிதர்களைக் கண்டு மகிழ்ந்து சிரிக்கும் ‘பிங்கல தேவனை’ப் போல் இல்லாவிட்டாலும் சற்று குற்றவுணர்வோடேனும் கூட்டக் கொலை செய்யாத ஆட்சியாளர்கள் இங்கு யாருமில்லை.
அதிலும் கிளிக்குள் இருக்கும் மந்திரவாதியின் உயிர் போல சாம்ராஜ்யங்களின் கௌரவமெல்லாம் அரச குலப் பெண்களின் யோனியில்தான் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதால், போர்க்களங்களில் யார் தோற்றாலும் முதலில் வெந்து தணிய வேண்டியது அந்தப்புரங்கள்தான்.
ஜோஹர் என்ற கூட்டுத் தீக்குளிப்பை, கௌரவத் தற்கொலை என்றோ, கௌரவக் கொலை என்றோ என்னென்ன பெயரிட்டு அழைத்தாலும் அது கொலை மட்டுமே.
செய்தவனுக்கு குற்றவுணர்வு வராத கொலை என்பதோடு சாகிறவர்களுக்கும் ஏதோவொரு வகையில் மன நிறைவு அடையலாம் என எண்ணத்தைத் தரும் வினோதமான விபரீதம் அது.
அப்படி நூற்றுக் கணக்கான பெண்களின் கொடூர மரணம் பற்றிய கதைகளில் ஒன்றினை எழுதியுள்ளேன். இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள அக்கதையை வாய்ப்புள்ளோர் படித்து, கருத்துரைக்க வேண்டுகிறேன்.

