Reading view

நடைப்பழக்கம் . . .

சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்).  ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார். 

அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை. 

மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு  சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.

தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.

தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.

The post நடைப்பழக்கம் . . . appeared first on வேணுவனம்.

  •  

கோவிட் காலம்

பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது. 

இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).

எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன். 

‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’

ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின. 

இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.

பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.  

இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.

75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.

கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.

‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’.

‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’

‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’

இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.

‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.

இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.

The post கோவிட் காலம் appeared first on வேணுவனம்.

  •  

சிம்பொனி – சமத்துவத்திற்கான குரல் – களப்பிரன்

ஆயிரம் படங்களுக்கு மேல் பல்லாயிரம் திரைப்பாடல்கள் வழியாக இளையராஜா நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார். அவரின் இசை இல்லாமல் நம் பலரின் இரவுகள் கழிவதே இல்லை. காதல், சோகம், தாலாட்டு, கொண்டாட்டம் என்று எந்த மனநிலைக்கும் இசையால் வருடிக்கொடுக்கும் விரல்களோடு இளையராஜா இப்போதும் நம்மோடு வாழ்கிறார். இளையராஜாவை மேஸ்ட்ரோ என்றும், சிம்பொனியை இசைத்தவர் என்றும் 90கள் தொடங்கி நாம் கொண்டாடி வருகிறோம். மேஸ்ட்ரோ என்றால் மேதை அல்லது இசை நடத்துனரை குறிக்கும். சிம்பொனி என்றால் என்ன? அவர் இதுவரை […]

Source

  •  

‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்

‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

  •  

சிம்ஃபொனி ஒரு அறிமுக பார்வை

சிம்ஃபொனி என்றால் என்ன

மேற்கத்திய செவ்விசை மரபில் உருவான கருவிகளின் சேர்ந்திசை வடிவம் சிம்ஃபொனி . 17ம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த இவ்வடிவம், மேற்கிசையின் மணிமகுடமான இசைவடிவம் என்று சொல்லத்தக்கது. மேற்கிசையுலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களின் கனவு இசைவடிவமாக, அவர்களின் உச்சபட்ச கலையாற்றலின் வெளிப்பாடாக அமைந்த, அமைந்துவரும் இசைவடிவம் சிம்ஃபொனி.

மேற்கிசையில் இது ஒன்றுதான் இசைவடிவமா

இல்லை. மேற்கில் பல்வேறு இசைவடிவங்கள் உருவாகி வழங்கி வந்திருக்கின்றன. குறிப்பாக பின்வரும் இசைவடிவங்களைச் சொல்லலாம்.

சொனாடா – நமது கீர்த்தனை போல துவக்கம், நடுப்பகுதி, முடிவு என்ற கட்டுமானத்தில் அமைக்கப்படும் இவ்விசை வடிவம், வடிவ நேர்த்தியை மைய நோக்கமாகக் கொள்வது. ஏதாவது ஒரு கருவியை மையமாகக் கொண்டு பெரும்பாலும் இசையமைக்கபடும்.

கான்சார்டோ – இவ்வடிவத்தில் ஒரு தனிக்கருவி இசைஞர் இசைக்க அதற்கு பின்னணியாக ஒரு குழுவிசை செயல்படும். இந்த இரண்டின் முரணே (soloist vs orchestra) இவ்வடிவின் மையவிசை.

ஆபரா – இது ஒரு இசைநாடக வடிவம். இயலிசைப் பாடல்களோடு நாடகமாக நடிகர்கள் பாடி நடித்து அரங்கேறுவது.

ஆரட்டோரியோ – இதுவும் இசைநாடக வடிவம். ஆனால் பக்தி சார்ந்த நாடகங்கள். பெரும்பாலும் மேற்கில் கிருத்தவம் சார்ந்த பக்தி கதைகள் இசைநாடகமாக வழங்கப்படும்.

சுயீட் – இது ஒரு தொகுப்பு வடிவம். நடனத்திற்கு உகந்த இசைபாடல்களைத் தொகுப்பாகக் கொண்ட இசைவடிவம்.

பிறகு சிம்ஃபொனிக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு

மேற்குறிப்பிட்ட மேற்கிசையின் முக்கிய இசைவடிவங்கள் அனைத்தின் கூறுகளையும் ஒரு வகையில் உள்ளடக்கியது என்று சிம்ஃபொனியைச் சொல்லலாம்.

சிம்ஃபொனி ஒரு தொகுப்பிசை வடிவம். பொதுவாக இத்தொகுப்பில் நான்கு இசைபாடல்கள் இடம்பெறும். அதன் முதல் பாடல் சொனாடா வகையைச் சார்ந்தது. மூன்றாவது பாடல் சுயீட் இசையைப் போன்ற நடன அல்லது மகிழ்விசை பாணியிலானது. கான்சார்ட்டோவைப் போல சில நேரங்களில் தனித்த கருவியிசை ஒலிக்கவும், பல நேரங்களில் சேர்ந்திசையாகவும் ஒலிக்கவும் வல்லது. மொழியின் துணையோடு உணர்வு பெருக்கும், நாடகீயத்தன்மையோடும் விளங்கும் ஆபரா, ஓரட்டோரியோ வடிவங்களில் வெளிப்படும் பிரம்மாண்டத்தையும், காவிய உணர்வையும் மொழியின் துணையின்றி கருவிகளின் சேர்ந்திசையின் வாயிலாகவே வழங்கவல்லது சிம்ஃபொனி.

எனவே ஒரு வகையில் மேற்கிசையின் அனைத்து வடிவங்களின் கூறுகளைக் தன்னகத்தே கொண்ட வடிவம் இது. சுமார் 400-500 ஆண்டுகளான மேற்கிசையின் பரிணாம வளர்ச்சியின் பலன்களை தனக்குரியதாக்கிக் கொண்ட வடிவம் சிம்ஃபொனி. மேலும் நூற்றுக்கணக்கில் இசைக்கருவிகளும், மொழியோ காட்சியோ என எதன் தேவையின்றியும், கற்பனைக்கான முழு சுதந்திரத்தை இசையமைப்பாளர்களுக்கு வழங்கியும், இசையமைப்பாளரை அதன் மூலம் மகத்தான இசையை மையநாயகனாக்கும் வடிவம் சிம்ஃபொனி.

இவ்வடிவத்தை யார் கண்டுபிடித்தார்கள்

எல்லாக் கலைவடிவங்களையும் போலவே சிம்ஃபொனியும் நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சியைத் தாண்டியே அதன் முழுவடிவை அடைகிறது.

17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆபரா போன்ற இசைநாடகங்கள் மேடைகளில் நிக்ழத்தும்போது, நாடகமேடையின் திரைவிலக இசைக்கப்படும் சிறிய கருவியிசைப்பாடல் sinfonia என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறிய திரைவிலக்கத்திற்கான(curtain raiser music) இசையாக துவங்கிய இவ்வடிவத்தின் பயணம் ஓரிரு நூற்றாண்டுகளில் அதன் முழு வடிவத்தை வந்தடைகிறது.

இசை தனது ஆரம்பகாலம் தொட்டே பிறகலைகளை முக்கியமாக இயலை அதாவது மொழியின் துணை கொண்டே இயங்கி இருக்கிறது. மொழியின் துணை கொண்டே உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

மத்திய காலங்களில் மேற்கிசை பல்வேறு இசைக்கருவிகளின் தயாரிப்பிலும், பயன்பாட்டிலும் வளர்ச்சி அடைகிறது. இது மொழியின் துணையில்லாமல் இயங்கக்கூடிய கருவியிசையை உருவாக்குகிறது. இந்த முனைப்பு அக்காலத்தில் தூயஇசை (pure music – ஏனெனில் எதனையும் சாராது தனித்தியங்கும் இசை) என்றழைக்கப்பட்டது.

இவ்வாறு கருவியிசை வளரத்துவங்கிய போது அதற்கென வடிவங்கள் தேவைப்படுகின்றன. முன்னர் வார்த்தைகள், நாடகங்களின் மூலம் வழங்கப்பட்ட உணர்வை இசை மட்டும் தனியாக வழங்க வேண்டி உள்ளது. இது இசைக்கு முன் தோன்றும் சவாலாகிறது. இதற்கெனவே சொனாடா, கான்சார்ட்டோ உள்ளிட்ட வடிவங்கள் தோன்றுகின்றன.

அதேவேளையில் ஆபரா, ஓரட்டோரியோ போன்ற இயலிசை வடிவங்கள் பெருமளவில் மக்களைக் கவர்ந்த பிரம்மாண்டமான இசைவடிவங்களாகத் திகழ்கின்றன. அவற்றிற்கு இணையாக மக்களைக் கவரக்கூடிய கருவியிசைக்கென ஒரு மையவடிவம் தேவைப்பட, இறுதியில் அவ்விடத்தை சிம்ஃபொனி பூர்த்தி செய்கிறது.

இவ்வடிவத்தை வளர்த்த கலைஞர்கள் யார்?

இவ்வடிவத்தை வளர்த்தெடுத்த பெருமை Joseph Haydnஐ(1732-1809 AD) சாரும். அவரே தன்காலத்தில் sinfonia என்ற பெயரில் சிறு துகளாக வழங்கப்பட்ட இசைக்கு ஒரு வரைவினைக் கொடுக்கிறார். தான் இயற்றிய நூற்றுக்கணக்கான சிம்பொனிகளின் மூலம் அக்குழந்தையை இளமைப் பருவத்திற்கு கரையேற்றுகிறார். எனவே சிம்ஃபொனியின் தந்தை என்றழைக்கப்படுகிறார். பின்னர் மொசார்ட் இயற்றிய சிம்பொனிகள் இவ்வடிவத்தை அடுத்த தளத்திற்கு, அதனை தவிர்க்க முடியாத வடிவமாக மாற்றுகின்றன. ஹைடன் வடிவத்தைக் கொடுத்தால், இசைமொழியின் கவிஞனான மொசார்ட் இவ்வடிவத்திற்கென ஒரு அழகியலை உருவாக்குகிறார்.

அதன்பிறகு இவ்வடிவத்தின் பிதாமகர் என்று சொல்லத்தக்க பீதோவனின் வருகை (1770-1827) இவ்வடிவத்தை மேற்கிசையின் மையவடிவாக மாற்றியமைக்கிறது. பீதோவனே சிம்ஃபொனியின் முழுபலத்தை அறிந்து அதனை பிரம்மாண்டமான இசைவடிவமாக, பிரபஞ்சத்தன்மை (universality) கொண்ட இசைவடிவமாக வளர்த்தெடுக்கிறார். நூற்றுக்கணக்கில் ஆனால் சிறுகதைகளாக இயற்றப்பட்ட ஹைடன் காலத்திலிருந்து, ஒற்றை இலக்கத்தில் ஆனால் நாவல் போன்ற விரிவும், காவியத்தன்மையும் கொண்ட வடிவமாக சிம்ஃபொனி உருமாறிவிடுகிறது. பாடல்கள் நீண்டதாகி விடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கருவியிசைக் கலைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பீத்தோவனின் ஒன்பது சிம்ஃபொனிகளை, இவ்வடிவத்தின் பெரும்காப்பியங்கள் எனலாம்.

அவரது காலக்கட்டதிலிருந்து இன்று வரை சிம்ஃபொனியே மேற்கின் முடிசூடா இசைவடிவமாக கோலோச்சியிருக்கிறது. 18ம் நூற்றாண்டின் ஹைடன் காலம் துவங்கி 20ம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்களான ஷாஷ்டகோவிச், ஸ்டரவின்ஸ்கி, மாஹ்லர் வரையில் மேற்கிசையின் அனைத்து அற்புதமான இசைஞர்களும் இவ்வடிவத்தை பிரதானமாக கையாண்டுள்ளனர். ஐரோப்பாவின் நாடுகள் துவங்கி, ருஶ்யா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளை கண்டங்களை பண்பாடுகளைச் சார்ந்தோர் இவ்வடிவத்தில் இசையமைத்துள்ளனர்.

இவ்வடிவத்தின் அமைப்பும் இயல்பும் என்ன

எந்த கலைவடிவத்தினைப் போலவே இப்படித்தான் அமைய வேண்டும் என்று யாராலும் ஆணையிட முடியாது என்றாலும், ஒரு பொதுவான சிம்ஃபொனி வடிவம் எவ்வாறு அமைகிறது என்று காண்போம்.

இத்தொகுப்பிசையில் பொதுவாக நான்கு பாடல்கள் இடம்பெறும்.

முதல் பாடல் : விறுவிறுப்பான தாளகதியில் அமைந்த சொனாடா வடிவப் பாடல்

இப்பாடல் துவக்கப்பகுதி, இடைப்பகுதி, மீள்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலில் துவக்கப்பகுதியில் இரண்டு வெவ்வேறு இசைத்தொடர்கள் (themes) அறிமுகப்படுத்தப்படும். அவை இடைப்பகுதியில் பல்வேறு விதமாக உருமாற்றமும், வளர்ச்சியும், தீவிரத்தையும், உச்சத்தையும் அடையும். பிறகு மீள்பகுதியில் அத்தொடர்கள் மீண்டும் அழைத்துவரப்பட்டு பாடல் நிறைவை நோக்கி நகரும். இவ்வாறு முதல்பாடல் வடிவ ஒழுங்கையும், விறுவிறுப்பான தன்மையும், தீவிரமான உணர்வனுபவத்தையும் தரவல்லது.

இரண்டாம் பாடல்: நிதானமான தாளகதியில் அமைந்த மெல்லிசை

இப்பாடல் மெல்லிசை பாணியில் (lyrical quality) ஆற்றொழுக்கோடு அமைவது. இது முதல், முரண், மீள் என்ற மூன்று பகுதிகளால் அமைவது. முதல் பகுதிக்கு முரணாக இரண்டாம் பகுதி அமைந்து அல்லது முதல் பகுதியில் ஒலித்ததன் வெவ்வேறு முகங்களாக இரண்டாம் பகுதி அமையும். பிறகு முதல்பகுதிக்கு வந்து பாடல் நிறைவுறும்.

மூன்றாம் பாடல்: நடனகதியில் அமைந்த மகிழ்விசை

இப்பாடல் மேற்கிசையின் நடனத்திற்கான இசைபாடல்கள் வழியில் வந்தது. பலநேரங்களில் மூவசை தாளக்கட்டில் (triple metre) அமைவது. நடனத்திற்கானதாகவோ அல்லது மெல்லிய கேளிக்கை வகையினதாகவோ அமைவது. இதுவும் மூன்று பகுதிகளால் அமைவது. முதல் பகுதி மூவசைத்தாளக்கட்டில் அமையும் சிறிய நடன இசையான minuet. நடுப்பகுதி அதே தாளக்கட்டில் ஆனால் மூன்று கருவிகள் மட்டும் ஒலிக்கும் trio. பின்னர் மீண்டும் minuet.

நான்காம் பாடல்: வேகமான தாளகதியில் நிறைவை அளிக்கும் சொனாடா

இதுவும் நாம் துவக்கத்தில் பார்த்த சொனாடவின் வடிவப்பாடல். ஆனால் நம்மை நிறைவை நோக்கி நகர்த்திச் செல்லும் பாடல். பொதுவாக வேகமான தாளகதியில், அபரிதமான சேர்ந்திசையில் அமைக்கப்பட்டு ஒரு வெள்ளப்பெருக்காக இசையினை நிறைவு செய்யும்வண்ணம் அமைக்கப்பெறுவது.

இவ்வாறு பார்க்கும் போதே தன்னளவில் எவ்வளவு ஓர்மையைக் கொண்ட வடிவம் சிம்ஃபொனி என்பது புலனாகிறது. முதலில் ஒரு விறுவிறுப்பான இசை, பிறகு அதனை ஆற்றுப்படுத்தும் மெல்லிசை, பிறகு அந்த மெல்லிசை மனநிலையிலிருந்து மாற்ற ஒரு மகிழ்விசை, அந்த மனநிலையிலிருந்து மேலும் பிரவாகமான நிறைவிசை. இவ்வாறு தன்னளவில் ஒரு சமனையும், ஓர்மையையும் கொண்டு மக்களை தனது சுழலுக்குள் பலவகையான உணர்வனுபவங்களுக்குள் சிக்கவைத்து, மகிழ்வித்து, சோகத்திலாழ்த்தி, கொந்தளிக்க வைத்து, சிந்திக்கச்செய்து, மெய்மறக்க செய்யும் இசையே இதன் இயல்பு.

சிம்ஃபொனியின் கருவியிசை எவ்வாறு அமைகிறது:

சிம்ஃபொனி என்ற உடனே நினைவுக்கு வருவது ஒரு விசாலமான இசையரங்கில் இசைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுதான். இது எவ்வாறு அமைகிறது என்று பார்க்கலாம்.

சிம்ஃபொனிக்இசைக்குழுவில் பிரதானமாக தந்தி, குழல், கொம்பு, தாளம் என நால்வகைக் கருவிகுழுக்கள் இடம்பெறுகின்றன.

தந்திப் பகுதி

குரலிசை அல்லாத இசையாக இயங்கும் சிம்ஃபொனி, மனிதக்குரலுக்கு மாற்றாக வழங்குவது தந்திக்கருவியான வயலினையே. ஏனெனில் இசைக்கருவிகளில் வயலின் மனிதக்குரலைப் போல ஒலிக்கக்கூடியது. அதனால் ஒரு சுவரத்தை நீட்டித்தும் அல்லது சுருக்கியும், சன்னமாகவும் உரக்கவும், தனியாகவும் சேர்ந்திசையாகவும் ஒலிக்க முடியும். எனவே சிம்ஃபொனி இசையிலும் இசைக்குழுக்களிலும் முதலிடத்தை வகிப்பது வயலின் கருவிகளே. மனிதக்குரலின் அடர்த்தி soprano, alto, tenor, bass என நால் வகைப்பட்டதைப் போலவே வயலின், வயோலா, செல்லோ, டபுள்பாஸ் என்ற நால்வகை வயலின் கருவிகள் குரலடர்த்தியைக் கொண்டமைபவை. எனவே ஒரு சிம்ஃபொனி இசைக்குழுவின் முதல் வரிசையில் இந்நால்வகை வயலின்கள் இடம்பெறுகின்றன. வயலின்களின் எண்ணிக்கையே இசைக்குழுவின் மொத்த எண்ணிக்கையில் பெரும்பகுதி. 60-80 வயலின்கள் சிம்ஃபொனி இசைக்குழுவில் இடம்பெறுகின்றன.

குழல் பகுதி

வயலினுக்கு பின்னால் குழல்பகுதி. இக்கருவிகள் மரத்தினால் (ஒருகாலத்தில்) செய்யப்பட்டதாலும் ஊதுகாற்றைக் கொண்டு இசைப்பதாலும் இப்பகுதி woodwinds என்றழைக்கப்படுகின்றது. இப்பகுதியில் பல்வேறு நயத்தில் (timbre) அமையும் குழல் கருவிகளான flute, oboe, bassoon, clarinet இடம்பெறுகின்றன. Flute மனித குரலைப் போல ஒலிக்கக்கூடியது, Oboe ஆழ்குரலைக் கொண்டது, Clarinet வெளிச்சமான குரலைக்கொண்டது, bassoon மரஒலியைக் கொண்டது. இப்பகுதியில் இடம்பெறும் கருவிகளின் மொத்த எண்ணிக்கை இருபதுக்குள் வரும்.

கொம்புப்பகுதி

குழலுக்குப் பின் அமையும் கொம்புப்பகுதி உலோகத்தால் முக்கியமாக பித்தளையால் அமைக்கப்படுவதால் brass section என்றழைக்கப்படுகிறது. எனவே ஆரவாரமான குரலைக் கொண்டது. எனவே பின்வரிசையில் இடம் பிடிப்பது. இசையின் ஆரவாரமான பகுதிகள் அல்லது அரைகூவலான தனித்தபகுதிகளில் இவை இடம்பிடிப்பவை. இருப்பதிலேயே ஆரவாரமான trumpet, பரவசமாக ஒலிக்கும் horn, ஆழ் ஒலியை வழங்கும் trombone, tuba போன்ற கருவிகளை உள்ளடக்கியது இப்பகுதி.

தாளப்பகுதி

இசைக்குழுவின் கடைசிப்பகுதியில் தாளக்கருவிகளான் Drums, Cymbals போன்றவை இப்பகுதியில் இடம்பிடிக்கின்றன. இருப்பதிலேயே அதிகஒலியை எழுப்பக்கூடியவை ஆதலால் கடைசிவரிசையில் இடம்பிடிக்கின்றன்.

இவைபோக தனது தொகுப்பிற்குத் தேவையான பிரத்யேகமான வெவ்வேறு கருவிகளையும் இசையமைபாளர்கள் பயன்படுத்தலாம்.

சிம்பொனியை ஒரு குறிப்பிட்டவகையில்தான் இசையமைக்க வேண்டுமா

ஒரு நாவலை ஆயிரம் பக்கங்களுக்கு அல்லது, மிகநீண்ட கதை ஒன்றை மையமாக்கொண்டுதான் எழுத வேண்டுமா என்பதைப் போன்ற கேள்வி இது. இப்படித்தான் எழுத வேண்டும், இதை மட்டும்தான் எழுத வேண்டும் என்று எவ்வாறு நாவலைச் சுருக்க முடியாதோ அதைப் போலவே இப்படி இருந்தால் தான் சிம்ஃபொனி என்று சொல்ல முடியாது. அதில் இத்தனை மணித்துளிகள் ஒலிக்க வேண்டும், இன்னின்ன கருவிகள்தான் இருக்க வேண்டும், நான்கு பாடல்கள் இருக்க வேண்டும் என்று யாரால் கட்டுப்படுத்த முடியும்?

இருபது நிமிடங்களுக்குள் ஒலிக்கும் சிம்ஃபொனிகள் உள்ளன, பீதோவனால் பாடகர்கள் கோரஸாக பாடும் சிம்ஃபொனி அமைக்கப்பட்டது, மின்னணு கருவிகளில் சிம்ஃபொனி அமைக்கப்பட்டுள்ளது, கிராமிய மக்களிசை ஏன் குழந்தைப்பாடல்கள் சிம்ஃபொனியாக அமைக்கப்பட்டுள்ளன.

சிம்ஃபொனி என்பது கருவிகள் சேர்ந்திசையாக ஒலிக்கும் ஒரு நெடுவடிவம் அவ்வளவே. அது எவ்வாறு அமைவது என்பது முற்றிலும் இசைக்கலைஞரின் கற்பனை சார்ந்தது.

சிம்ஃபொனியில் ஒரு இசைக்கலைஞருக்கான சவால்கள் என்ன?

மிகப்பெரிய கருவிக்குழுவிற்கு இசையமைத்தல்

சிம்ஃபொனி போன்ற மிகப்பெரிய இசைக்குழுவிற்கு இசையமைத்தல் பெரிய சவால்கள் நிறைந்தது. இதற்கு ஒவ்வொரு கருவியின் நயம், அடர்த்தி, சுவர அளவீடுகள் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை சேர்ந்திசைக்கும் போது ஒத்திசைவின்றி ஒலிக்காமல் இருக்க வேண்டும். அதே வேளையில் கும்பலாக ஒரே குரலாக ஒலிக்காமலும் இருக்கவேண்டும். சேர்ந்தே இசைத்தாலும் அதில் அந்தந்தக்கருவிகளின் தனித்தன்மைகள் வெளிப்பட வேண்டும். கேட்பவருக்கும் சுவாரசியம் வேண்டும், இசைப்பவருக்கும் சுவாரசியம் வேண்டும். எந்ததந்த பகுதிகளுக்கு எக்கருவிகள் பயன்படுத்தினால் அவை தனித்துவமடையும் என்ற கற்பனை வேண்டும். அவற்றின் பயன்பாட்டில் புதுமை இருக்க வேண்டும். புதுமை என்ற பெயரில் அர்த்தமற்றதாகவும் ஆகிவிடக்கூடாது. இவ்வாறான கண்ணோட்டங்களில் கருவியிசையைக் கையாள்வது இசையமைப்பாளருக்கு சவால் நிறைந்தது.

ஓர்மை

ஏற்கனவே நாம் பார்த்ததைப் போல ஒரு பாடல் தொகுப்பாக இருந்தாலும், நூற்றுக்கணக்கில் கருவிகள் இடம்பெற்றாலும் ஒரு சிம்ஃபொனி தொகுப்பு தன்னளவில் ஒரு சமனையும், ஓர்மையையும் கொள்ள வேண்டும். இதுவே அதனைப் புரிந்துகொள்ள, பற்றிக்கொள்ள ரசிகர்களுக்கு உதவுவது. இந்த ஒர்மை எதனாலும் அமையலாம்.

உதாரணமாக பீதோவனின் புகழ்பெற்ற ஐந்தாம் சிம்ஃபொனி அடிப்படையில் இரு சுவரத்தால் அமைந்த சிறிய கருப்பொருளால் (small musical idea-motif) அமைந்தது. “விதி கதவைத் தட்டுவது போன்றது” என்ற உருவகத்தால் இன்று அறியப்படும் அக்கருப்பொருள் அந்த சிம்ஃபொனியின் பிற பாடல்களிலும் இடம்பெறுகிறது. பீதோவனின் மூன்றாம் சிம்ஃபொனி அவர்காலத்தின் நாயகனான நெப்போலியனை ஆதர்சமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. எனவே நாயகத்தன்மையை மையச்சரடாகக் கொண்டது. மாஹ்லரின் முதல் சிம்ஃபொனி சிறு வயது முதற்கொண்டு அவரது வாழ்வின் பாதிப்பில் கிட்டத்தட்ட ஒரு சுயசரிதையின் ஒலியாக வெளிப்படுவது. துவாரக் அமெரிக்கா வந்தபோது ஆப்பிரிக்க-அமெரிக்கரின் இசையே இனி வருங்கால இசை என்ற அவரது முடிவில் அவரது new world symphony அதன் வெளிப்பாடாக அமைக்கப்பட்டது.

எனவே ஒரு சிம்ஃபொனி தனது ஓர்மையை பல்வேறு விதமாக சாதிக்கலாம். அது தத்துவத்தை பேசலாம், அரசியல் பேசலாம், நகைச்சுவையை வழங்கலாம், இசையின் கருப்பொருளை எடுத்துக்கொள்ளலாம், கருவிசேர்ப்பின் புதுமையை மட்டும் கணக்கில் கொண்டு அமையலாம். எதுவாக இருப்பினும் இத்தகைய பிரம்மாண்டமான வடிவத்தை தொகுக்க ஒரு மையச்சரடு உதவுகிறது.

பன்மை

மிகநீண்ட அதுவும் கருவிசை வடிவமாக அமையும் இவ்வடிவம் தன்னை சுவாரசியமாகவும், சொல்ல வருவதை அது தத்துவமாகவமோ, வாழ்வனுபவமாகவோ எதுவாக இருப்பினும் ரசனைக்குட்பட்டதாகவும் வழங்க வேண்டிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. (கேட்பவரின் கஶ்ட்ங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைகொள்ளாத சிம்ஃபொனிகள் ஏராளம் என்பது வேறு கதை)

இசைமொழி

சிம்பொனிக்கான இசைமொழி harmony, counterpoint உள்ளிட்ட மேற்கிசையின் நுட்பங்கள் சார்ந்தது. இவை சுமார் 400 ஆண்டுகள் வளர்ச்சி அடைந்து வந்திருப்பவை. எனவே இந்த நுட்பங்கள் எவ்வளவு சிக்கலாக காலப்போக்கில் உருமாறியிருக்கும் என ஊகிக்கலாம். ஒரு உதாரணத்திற்கு மூன்று சுவரங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஆரம்பித்த ஹார்மனியில் இன்று பன்னிரெண்டு சுவரங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படுகிறது. கருவிகளின் ஒலிப்பு முறையிலும் ஒவ்வொரு கருவிக்கும் சிக்கலான நுட்பங்கள் வளர்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில் நுட்பமே கலையின் மையமாக மாறும் போது அதன் ரசிப்புத்தன்மையில் குறைபாடும் ரசிகர்களின் விலக்கமும் இயல்பாகவே நேருகிறது. மொசார்ட், பீதோவன், பிரஹாம்ஸ் காலகட்டத்தின் கேட்டவுடனேயே நம்மை தன்னுள் வாரிச் சுருட்டிக்கொள்ளும் இசையாக இன்றைய 20ம்,21ம் நூற்றாண்டு சிம்ஃபொனி இல்லை. அதே வேளையில் முற்றாகவும் மதிப்பற்றது என்று ஒதுக்கவும் முடியாது. இந்த விசயத்தில் மேற்கிசை ஒரு குறுக்குச்சாலையில் நின்று கொண்டிருக்கிறது.

மரபும் புதுமையும்

நாம் ஏற்கனவே கண்டதைப் போல சிம்ஃபொனிக்கென்று ஒரு பொதுவடிவமும், கருவிஅமைப்பும், அழகியலும், மொழியும் உள்ளது. மேலும் இவ்வடிவம் நானூறு ஆண்டுகளாக மேற்கில் புழக்கத்தில் இருக்கும் வடிவம். பல்லாயிரக்கணக்கான சிம்ஃபொனிகள் பல்வேறு கலைஞர்களால் இயற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் இதற்கு ஒரு நீண்ட மரபும் வழங்குகிறது. புதிதாக சிம்ஃபொனியை அமைப்பவர்களுக்கு இந்த மரபுகளை ஒட்டியும் விலகியும், இந்த அழகியல்களுக்குள்ளும் புறமும், நுட்பங்களில் சிக்கியும் சிக்காமலும், புதுமையான அணுகுமுறைகளை வழங்குவது, அது பரவலான ரசனைக்கு தோதாவது, அதனை அங்கிருக்கும் விமர்சகர்கள் அணுகுவது என இவையனைத்தும் பல்வேறு சவால்கள் நிறைந்தது.

அதேவேளையில் மேற்கின் செவ்விசையில் இன்று ஒரு மந்தகாலம்தான் நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இசை வரலாற்றின் போக்குகளில் ஒரு இசைவகைமைக்கோ வடிவத்திற்கோ புத்துயிர் வழங்குபவர்கள் முற்றிலும் மாற்று திசையிலிருந்து, பார்வையிலிருந்து, பண்பாடுகளிலிருந்து வருபவர்களே. ஒரே கண்ணோட்டத்திலோ, குழுவாக இயங்கும் எந்த இசைவடிவமும் நாளடைவில் தேக்கத்தை எதிர்கொள்ளக்கூடியதே. புதிய கண்ணோட்டங்களும் வரவுகளுமே தேக்கத்திலிருக்கும் இசைவகைமைகளுக்கு புத்துயிர் அளிக்ககூடியது என்பதையே இசைவரலாறு திரும்பதிரும்பக் காண்பிக்கின்றது. அத்தகைய புதியவரவுகளை மேற்கிசை அவ்வப்போது தடுமாறினாலும் பெருமளவில் வரவேற்கவே செய்திருக்கிறது என்பதையும் வரலாறு காண்பிக்கின்றது.

(அடுத்த பகுதியில் சில தேர்ந்தெடுத்த சிம்ஃபொனி பாடல்களைக் காணலாம்)


  •  

நம் கண்பார்த்தும் கவனமில்ல

<>

ராஜாவின் பாடல்கள் வாசிக்க கடினமானவை என்பது இசையைக் கற்பதற்கு முன்னால் இருந்த முழுமுடிவு. பிரமிப்பான எதுவுமே நமக்கு அப்பாற்பட்டதாகவும், அவ்வாறு அப்பாற்பட்டதாக இருந்தால்தான் நமக்கு பிரமிப்பும் என்பதுதானே வழக்கு.

ஆனால் உண்மையில் இசை கற்கத்துவங்கிய சில மாதங்களிலேயே ஆற்றொழுக்கொடு இல்லாவிட்டாலும், பாடலின் சுரங்களை ஒருவாறு அனுமானித்து சேர்த்து, அவரது பாடல்கள் வாசிக்கக் கைக்கூடின. இங்கே குறிப்பது பாடல்களின் மையக்குரலிழை (vocal melody) மட்டுமே. முன்னிசை, இடையிசை, பாடல் பின்னணியிசை போன்றவை கருவியிசைக்கென அமைக்கப்பட்டவை, ஒப்பிட தேர்ச்சியைக் கோருபவை. ஆனால் மையப்பாடலோ பாடுவதற்காகத் தானே. அதுவும் அப்பாடல்களை அவரவரின் குரல்வளத்திற்கு ஏற்ப பாடிக்கொண்டுதானே இருக்கிறோம். எனவே வாசிக்கவும் எளிமையாக வருவதில் வியப்பில்லை என்று புரியத்துவங்கியது.

இதன் மூலம் சில கருதுகோள்கள் கைக்கூடத்துவங்கின. ராஜாவின் பாடல்களில் ஒரு சுரத்தைப் பிடித்துவிட்டால், முழு பல்லவியின் சுரங்களும் பக்கத்தில்தான் இருக்கப்போகின்றன என்பது சீக்கிரத்திலேயே தெளிந்துவிட்டது. சுரவரிசைகளில் நின்று இசையமைக்கும் அவரது குழப்பமற்ற அணுகுமுறை என்பதாகப் இப்புரிதல் வளர்ந்தது. அவரது பல்லவிகள் பெரும்பாலும் மூன்று முதல் ஐந்து சுரங்களில் முடிந்துவிடுபவை. பல்லவிகளை, நாம் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடம் செல்லும் வழியாக கற்பனை செய்து கொண்டால், ராஜாவின் பல்லவிகள், சீராக ரயில்வண்டி போல ஒவ்வொரு சுரத்தையும் நிறுத்தமாக திருத்தமாக நின்றுச் செல்பவை. அவற்றில் இடம்பெறும் ஒவ்வொரு சுரமும், பல்லவியின் போக்கிறகு இன்றியமையாததாகவும், தங்களது நிறத்தை பல்லவிக்குத் தவறாமல் வழங்கியும் செல்பவை. நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் வித்தைகளான, நம் முன்னால் சென்று கொண்டிருக்கும்போதே, சரேலென பாதைமாறி கதிகலக்கும் சென்னை சாலை சாகசங்களை, அவற்றில் பார்க்க முடியாது.

இவ்வாறு வாசிப்பு மற்றும் போக்குவரத்தில் எளிமை கொண்டதாக அவரது பல்லவிகளை உணர்ந்த போது நியாயமாக அதன்மேலான பிரமிப்பு குறையவேண்டும். ஆனால் கலையழகின் மீதான பிரமிப்பிற்கு வழக்கமாகக் குறிக்கப்படும், அல்லது கட்டமைக்கப்படும் அதன் அமானுஷ்ய மாயை காரணமில்லை போலும். நேர்மாறாக அம்மாயை விலகும்போதுதான், அதன் மேன்மை (மேன்மையான ஒன்றாக இருந்தால்) மேலும் பளிச்சிடுகிறது.

ராஜாவின் பல்லவிகளைக் காணும் போது, இந்த சுரங்கள் எல்லாம் இவ்வளவு அருகில் தான் இருக்கின்றன. இவற்றை மேலும் கீழும் யாராலும் எளிதாக இசைத்து விட முடியும். ஆனால் அதிசயம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும்போது வெறும் சுரக்குவியலாகத் தோன்றும் இச்சுரங்கள், அவரிடம் அர்த்தமும் அழகும் கொண்ட மொழியாக உருவெடுக்கின்றன. நாம் தினமும் செல்லும் சாலைவழி என்றாலும், நம் கண் பார்த்தும், அவர் இசைக்கும் போது மலர்கின்றன.

<>

பல்லவி எனும் புதிர்

ராஜாவைப் போன்ற ஒரு இசையமைப்பாளருக்கு, பல்லவி என்பது சிக்கறுபட வேண்டிய புதிர். சுவாரசியம் என்னவென்றால் புதிரின் சிக்கலையும் இசையமைப்பாளர்கள் தான் தோற்றுவிக்க வேண்டும்.

தோற்றம், வளர்ச்சி,முடிவு என்ற மூன்று நிலைகளாலான பிரபஞ்ச போக்கிற்கு இசைப்பாடல்களும் அவற்றின் உறுப்புகளும் விதிவிலக்கல்ல. இசைபாடல்களும் (Musical Forms), பல்லவி போன்ற பாடல்களின் உறுப்புகளும் – எடுப்பு,தொடுப்பு, முடிப்பு (exposition, development, recapitulation) எனும் மூன்று நிலைகளால் ஆனது. எழுவாய், பயனிலை,செயப்படுபொருள் என்று, மொழி புரிதலுக்கான தனது சொற்றொடர் வடிவத்தை வந்தடைந்ததைப் போல, இது இசையின் சொற்றொடர் வழக்கு.

ஒரு பல்லவியின் எடுப்பு-பகுதி ஒரு புதிரை, கேள்வியைத் துவக்குகிறது. பல்லவியின் தொடுப்பு-பகுதி அந்த கேள்விக்கான விடை காண முயல்கிறது, அல்லது புதிரை வளர்த்தெடுக்கிறது, அல்லது சிக்கலாக்குறது, அல்லது முடிவை நோக்கி ஆற்றுப்படுத்துகிறது. பல்லவியின் முடிப்பு-பகுதி புதிருக்கான விடையாக அமைந்து, அதுகாறும் புதிரால் விளைந்த நிலையின்மையை தீர்த்து சமன்படுத்துகிறது. எனவேதான் பல்லவியின் முடிவில் நாம் சற்று ஆசுவாசமடைகிறோம்.

காட்டுமல்லி பாடலின் பல்லவியை எடுத்துக் கொண்டு இதனைப் பார்க்கலாம். இப்பாடலின் பல்லவி நான்கு இசைச்சீர்களில் (bars) அமைந்துள்ளது.

இதனை மேற்கண்ட பல்லவியின் பகுதிகளாகப் பிரித்தால் (இவ்வாறு பிரிக்க, ஒவ்வொரு இசைச்சீராக தனித்தனியாகக் கேட்கும்போது அவற்றின் எடுப்பு-தொடுப்பு-முடிப்பு செயல்பாட்டை உணரலாம்)

வழிநெடுக – எடுப்பு – ஒரு கேள்வியின் துவக்கம்

காட்டுமல்லி – தொடுப்பு – ஒரு தற்காலிக பதில்

கண்பார்த்தும் – தொடுப்பு – கேள்வி மீண்டும் (முடிவான தீர்வை வேண்டி)

கவனமில்ல – முடிப்பு – புதிரின் தீர்வு. நாம் ஒரு சமதளத்திற்கு வந்து சேர்கிறோம்.

<>

பல்லவியின் கச்சிதம்

எல்லா பாடல்களின் துவக்கத்தையும் நாம் பல்லவி என்று சொன்னாலும், எல்லா பல்லவிகளும் பல்லவிகள் அல்ல. பல்லவி எனும் கருவிக்கென பிரத்யேகமான செயல்பாடுகள் உள்ளன. எல்லாக் கலைகளையும் போலவே இவை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையையும் நாம் கட்டுபெட்டித்தனமாக வைக்க முடியாது என்றாலும், இன்றைய பல்லவியின் வடிவம் நெடுங்காலத்தால் வளர்க்கப்பட்டது. காலத்தில் வெற்றிபெற்ற ஒன்று தன்னிடத்தில் வெற்றிக்கான சூட்சமங்களைத் தக்கவைத்துக் கொள்வதைப் போலவே, தனது பணியினைச் சிறப்பாக செய்யும் ஒரு பல்லவியின் வெற்றி தடுக்கவே முடியாததாகிறது. எந்த கலைக்கருவியை விடவும் ஒரு கச்சிதமான பல்லவி மனிதர்களைப் பாடாய்படுத்தும் சக்திவாய்ந்தது.

ஆனால் வழக்கம்போல அது எளிதில் வாய்ப்பதில்லை. ஏனெனில் எளிதாகக் காட்சியளிக்கும் அதன் கச்சிதம்தான் சவாலானது.

இதனைப் புரிந்துகொள்ள நாமும் இசையமைப்பாளராகிப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக ‘வழிநெடுக’ என்று ஒரு எடுப்பு கிடைத்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த சீராக காட்டுமல்லிக்குப் பதிலாக வேறொன்றைக் கற்பனை செய்து பார்த்தால்தான் நமக்கு ‘காட்டுமல்லி’ என்பது எவ்வளவு கச்சிதமான தொடுப்புச்சீர் என்பது தெரியவரும். சரி வழிநெடுக காட்டுமல்லி முடிந்துவிட்டது. அடுத்த சீரை எப்படி தொடங்குவது என்று யோசித்தால் ‘கண்பார்த்தும் கவனமில்லை’ எவ்வளவு பொருத்தமான சீர்கள் என்பது தெரியவரும்.

இவ்வாறு பார்க்கும் போதுதான் சாதுவாகக் காட்சியளிக்கும் இப்பல்லவியின் கச்சிதம் நம்மை தீவிரமாகத் தாக்கத்துவங்குகிறது. எடுப்பு (Theme) என்று நாம் சொல்லிவிட்டால் ஒரு இசைச்சீர் எடுப்பாகிவிடாது. தொடுப்பு என்று சொல்லுவதால் அது தொடுப்பாகி விடாது. அந்தந்த சீர்கள் அதற்கானப் பணியைச் செய்ய வேண்டும். எடுப்புச்சீரில் எடுப்பிற்கான புதிர்தன்மை/கேள்வி இருக்க வேண்டும். எவ்வாறு மொழியின் எழுத்து அசைச்சீர்களில் சென்று அமர்கிறதோ, அது கேள்வியாகவோ, பதிலாகவோ வாக்கியமாகவோ ஒலிப்பு பெறுகிறதோ, அதைப்போலவே பொருத்தமான சுரங்கள் பொருத்தமான தாளஅசையில் சென்று அமர வேண்டும். அப்போதுதான் அவை எடுப்பாகவோ முடிப்பாகவோ ஒலிப்பு பெறுகின்றன.

எவ்வளவோ பல்லவிகள் வெற்றி பெறுகின்றன. ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த வெற்றி பல்லவியின் துவக்க தாளக்கட்டினாலோ, அல்லது ஒரிரு சீர்கள் கவர்வதாலோ அமையலாம். அல்லது அரிதாக நிகழ்தகவின் சாத்தியமாக ஒரு கச்சிதமான பல்லவி எந்த இசையமைப்பாளருக்கு வேண்டுமானாலும் சிக்கலாம். ஆனால் கச்சிதமான பல்லவி என்பது, ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்கு மட்டுமே தொடர் சாத்தியம் ஆகிறது.

<>

இந்த நான்கு சீர்களும் ஒன்றுக்கொன்று எவ்வளவு பொருத்தமானவை, அதே நேரத்தில் சவாலானவை என்று யோசிக்கும் போதே, நேர்மாறாக இதனை சர்வநிச்சயமாக ராஜா தனது ஹார்மோனியத்தில் ஒரே அழுத்தில் பெற்றிருக்க வேண்டும் என்பதும் நாம் கற்பனை செய்யக்கூடியதே. அதாவது சவாலான ஒன்று அவருக்கோ உள்ளுணர்வு நினைத்த மாத்திரத்தில் இசையாக மாறுகிறது.

ஒரு கலைஞனின் உள்ளுணர்வு மிகப்பிரத்யேகமான (personal) ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது இசையாக மாறுவது என்பதற்கு இசையின் தேர்ச்சி மட்டுமே உதவ முடியும். இன்னும் குறிப்பாக உள்ளுணர்வை இசையாக மாற்றுவதற்கு, இசையின் மூலப்பொருட்கள் மிகப்பெரிய தடைகளையே உருவாக்குகின்றன.

இசையின் சுரங்களும், தாளமும், ஒத்திசைவும் என இசையின் பல்வேறு மூலப்பொருட்களும் தங்கள் விசைச்சக்திகளோடு இயங்குபவை. கிட்டத்தட்ட ஒரு வாகனம் ஓட்டுவதைக் காணும் போது வெகு சாதாரணமாகத் தென்பட்டாலும், முதன்முதலில் முயன்று பார்க்கும்போது பதறி காலை ஊன்றச் செய்துவிடுவதைப் போலவே, அதன் விசைச் சக்திகளுக்கு பழக்கப்படும் வரையில் இது தொடர்வதைப் போலவே, இசையின் விசைச்சக்திகளில் தேர்ச்சி பெறாதவர்களால், அவற்றை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வர இயலுவதில்லை. மாறாக அவற்றில் கொள்ளும் தேர்ச்சியே, ராஜாவைப்போன்ற இசையமைப்பாளர்களுக்கு தங்களது சிந்தனையை, உள்ளுணர்வை, அழகியலை இசையின் மூலம் நேரடியாக நம்மிடம் கடத்த முடிகிறது. Hindemith சொல்வதைப் போல

“..The inner vision that the composer has glimpsed makes itself clearer to another only if the resistance of tones and refractoriness of the tonal progressions does not come in between the impulse of the composer and its expression in sound. An immense mastery of the music material is needed to translate tones into what the heart dictates”

இதுவே ஒரு பொருத்தமான புதிரை (theme) எடுப்பாகக் கொண்டு ஒரு பல்லவியை உருவாக்கவும், அதனை வளர்த்தெடுக்கவும், நிறைவு செய்யவும் முடிகிறது. திரைச்சூழலை மனதில் கொண்டும், திரளான மக்களை சென்று சேர்வதை கருத்தில் கொண்டும் அதனை அமைக்க முடிகிறது. அமைத்த பின்னர் அதன் அழகை “பார்த்து—ம்” என்று சுர இடைவெளிகளை, சுர உச்சரிப்புகளைக் கொண்டும்,பொருத்தமான தாளக்கட்டைக் கொண்டும் மெறுகேற்ற முடிகிறது. இவை அனைத்தும் அவர் நினைத்தபொழுதில், நம் கண்பார்க்கும் போதே தான் நிகழ்ந்து வந்திருக்கிறது.


  •  

PODCAST SERIES: Ilaiyaraaja – a musical movement

Please visit links below for the Podcast series

Spotify – Ilaiyaraaja : A Musical Movement

Chapter Synposis

Part 1 – Introduction 

Personal Connect – Film Music and the Need for a different look at it – Agenda of the Series


Part 2 – Brief History of Music

Music – God or Man made – Early Man’s music – Music of civilizations – Music of Medieval era – Music of Classical era – Western classical Music – Carnatic Music – Tamil classical music


Part 3 – History of 20th Century Music & Raaja’s Arrival

20th century and the state of classical music in West & East – Worldwar, Carnatic – Birth of Film music – Tamil & Hollywood – MSV – Annakili & Raaja’s arrival – significance

 


Part 4 – Building blocks – Folk and Carnatic Music

Musical Analysis – why is it difficult – Building blocks – Folk Rhythms, Metre – Tamil Rhythm and Rhyme – Carnatic music – What is a raagam – Functioning of a melodic scale – What Raagam provides a composer


Part 5 – Building blokcs – Western Classical – Counterpoint & Instrumentation

Counterpoint – Definition – Melodic construction – CounterPoint Techniques – Rhythm, Direction, melodic events, stretto – Subject & Counter Subject – Raaja’s contribution – Instrumentation – classical guitar as an example – Polyphonic texture – Tremolos & Arpeggios

  •  

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்

பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.
  •