Reading view

மொழிபெயர்ப்புக் கொடுமைகள்

எல்லாத் துறைகளிலும் கடினமான வேலைகளை எளிதாக்க இயந்திரங்களின் வருகை நிகழ்கிறது. அந்த இயந்திரங்களின் வேலைகளை மேலும் எளிதாக்க கணினிகள் வருகின்றன. கணினிமயத்தையும் மேலும் எளிதாக்க, செயற்கை நுண்ணறிவு வருகிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும், அந்த வேலை எளிதாகச் செய்யப்படுவது மட்டுமின்றி, உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் தரமும் மேலும், மேலும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால், ஒரே ஒரு விசேஷமான துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் தலைகீழாக மாறிக்கொண்டு வருகிறது. இலக்கிய வகைமைகளில் மிகக் கடினமானதும், அதே சமயம் அதிகம் கவனிக்கப்படாததுமாகிய மொழிபெயர்ப்பு வகைமைதான் அது.

மொழிபெயர்ப்பு என்பது துவக்ககாலத்திலிருந்தே கடினமான ஒன்றுதான்.  ஏதோ திடீரென்று மனதில் ஒன்று தோன்றியது. உடனடியாக கையில் கிடைத்த பேப்பரில் எழுதி இலக்கியம் படைத்து முடித்துவிடுவதாக இல்லை இது.  உங்கள் முன் மூலநூல் நந்தி போல் நிற்கிறது. மூல ஆசிரியன் நந்தியின் எஜமானனாக எப்போதும் நிற்கிறான். எனது படைப்பை என்ன செய்து தொலைக்கப் போகிறாய்? என்ற கவலையோடு மொழிபெயர்ப்பாளனை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.  மற்ற வகைமை எழுத்துகளை விட மொழிபெயர்ப்பிற்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் கூடுதலாகவே இருக்கின்றன.  மொழிபெயர்ப்பு எதுவும் செய்யாத பெருந்தகைகள் பலரும் கூட எப்படி மொழிபெயர்ப்பது என்று பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

மூல ஆசிரியன் சுதந்திரப் பறவையாக இருக்கிறான். மொழிபெயர்ப்பாளன் கூண்டுப் பறவையாக இருக்கிறான். அவனுக்கு சொந்த நடை கிடையாது. மூல ஆசிரியனின் நடையைத்தான் நடக்க வேண்டும்.  அவனுக்குத் தரப்படும் அறிவுரைகளைப் பாருங்கள்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒவ்வொரு சொல்லாகப் பெயர்த்து எழுதுவதல்ல, என்கிறார் ஒருவர்.

மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு மொழிக்கும் இருக்கும் அதற்கே உரித்தான மரபைப் பேண வேண்டும் என்கிறார் ஒரு அறிஞர்.

மொழிபெயர்ப்பு என்பது சீமை ஓட்டைப் பிரித்து விட்டு. கீற்று வைக்கும் வேலை என்கிறார் கு.ப.ராஜகோபாலன்.

மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் என்று பெயர்த்துத் தருவதன்று என்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அந்த மொழி புழங்கப்படும் பகுதியின் பண்பாடு, கலாச்சாரத்தை புரிந்து கொண்டு சொற்களைப் போட வேண்டும் என்கிறார் அவர். சரிதான். Meenakshi Temple Car Festival  என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் படிக்கும் போது எனக்கு மீனாட்சியின் பிரும்மாண்டமான தேர் ஆடி ஆடி, அசைந்து, அசைந்து வருவது தெரிகிறது. ஒரு அமெரிக்கர் படித்தால், அவர் கண் முன் வரிசையாக கார்கள் அல்லவா வந்து போகும்? அவருக்கு கற்பு என்பதை எந்த ஆங்கிலச் சொல்லால் நான் புரியவைக்க முடியும்?

மொழிபெயர்ப்பாளன் தன் மொழிக்கு முற்றிலும் புதிதான ஒரு விஷயத்தை மொழிபெயர்க்கும் போது, புதிய புதிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாகவும் இருக்கிறது.  இப்படிக் கண்டு பிடிக்கப் பட்ட அத்தனை புதிய சொற்களும் காரணப் பெயர்கள்தான். மிளகு போன்று காரம் கொண்ட ஒரு காய் மிளகாய் ஆனது. புகைக்கப் பயன்பட்ட இலை புகையிலை ஆனது. வள்ளிக் கிழங்கு போல் நீள நீளமான கிழங்குகளை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு அந்நியன் உருண்டை உருண்டையாகக் கொண்டு வந்த கிழங்கைப் பார்த்ததும் உருளைக் கிழங்கு என்று பெயர் வைக்கத் தோன்றியது. நுனியில் துளையின்றி தலையில் சிறு குண்டைச் சுமந்து கொண்டிருந்த ஊளி குண்டூசி ஆனது. சவுக்கால் விரட்டி ஓட்டிய வண்டிக்கு பதிலாக காலால் மிதித்து ஓட்டும் வண்டி வந்த போது மிதிவண்டி என்று பெயர் பெற்றது.

தமிழில் புதுச் சொல் கண்டுபிடிக்கத் தெரியாத போது, அவசரத்திற்கு வடமொழியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முடிந்த போது அதற்கு தமிழிலும் சொல்லை உருவாக்கினார்கள். முதன்முதலில் census  என்பது இப்படித்தான் குல ஸ்திரி புருஷ பால விருத்ய ஆயவ்யய பரிமாண பத்திரிகை என்று ஏதோ அமாவாசை தர்ப்பண மந்திரத்தின் சாயலில் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள்தொகை கணக்கெடுப்பானது. ஸர்வகலாசாலையாக  இருந்த University பின்னர் பல்கலைக்கழகமானது.  உப அத்யட்சகராக இருந்த  Vice Chancellor இப்போது துணைவேந்தராகி இருக்கிறார்.  உ.வே.சாவும், வையாபுரிப் பிள்ளையும் லெக்சரர் என்று குறிப்பிட்ட Lecturer இன்று விரிவுரையாளராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு என பல காலம் விவாதித்து விவாதித்து கலைச்சொற்கள் புதிது புதிதாய் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனாலும், மொழியின் இந்த நுட்பங்கள், இந்த விதிகள் எல்லாம் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் கூட, அவற்றை அக்கறையோடும், கவனத்தோடும் கடைப்பிடிப்பதில்லை. மனிதர்களின் நிலையே இப்படி என்றால், கணினியும், செயற்கை நுண்ணறிவும் என்ன செய்யும்? எல்லாமாகச் சேர்ந்து  மொழிபெயர்ப்புகளை, மொத்தத்தில் தமிழ் மொழியைக் குதறிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

This is a flower  என்றால் இது ஒரு மலர்.

This is a dog என்றால் இது ஒரு நாய்.

This is my father என்றால் இவர் என் அப்பா.

இந்த இடத்தில் This என்பது இது என்பதற்குப் பதிலாக இவர் என்று மாற வேண்டும் என்பது தமிழ் அறிந்தவனுக்கு இயல்பாகவே தெரியும். ஆனால் இயந்திரத்திற்குத் தெரியாது. நாம் அதற்குக் கற்றுத் தர வேண்டும். அப்படிக் கற்றுத் தராமல் அது சொல்வதை அப்படியே எழுதுவதுதான் இன்று மொழிபெயர்ப்புகளில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.  I have 50 rupees என்பதை நான் ஐம்பது ரூபாய் வைத்திருக்கிறேன் என்று சொல்லும் கணினி, I have a house at Chennai  என்பதை அதே போல் நான் சென்னையில் ஒரு வீடு வைத்திருக்கிறேன் என்கிறது. சென்னையில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது என்றால் ஒரு பொருள். ஒரு வீடு வெச்சுருக்கேன் என்றால் வேறொரு பொருள் என்பதை அது அறியாது.  You ought to take practice, you must take medicine  போன்ற வரிகளை எல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும், மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கணினி சொல்லிச் சொல்லி நமது அன்றாட பேச்சிலேயே அது சகஜமாகி விட்டது. பயிற்சியை செய்ய வேண்டும்.  மருந்தை, உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிட வேண்டும்.

மொழியின் பயன்பாட்டில் இப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று வரக்கூடிய பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் இயல்பாகவே வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் and என்று மூலநூலில் வரும் இடங்களில் எல்லாம் மற்றும் என்று போடுகிறார்கள். தமிழில் உம் என்பதும் இருக்கிறது, உம்மைத் தொகையும் இருக்கிறது என்பதே தெரியவில்லை.. அல்லது மறந்து விட்டது.

அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் என்ற அபுனைவு மொழிபெயர்ப்புகளை விட புனைவுகளின் மொழிபெயர்ப்பில்தான் மொழிவதை அதிகமாக நடக்கிறது. ( விதிவிலக்குகளும் உண்டு. அது பின்னர்) காரணம் புனைவுகளில் பாத்திரங்கள், தங்களது கலாச்சாரம், பண்பாடு சார்ந்த மொழியில் உரையாடுகிறார்கள். அதை கணினியும், மொழிபெயர்ப்பாளர்களும் இயந்திர கதியாக மொழிபெயர்க்கிறார்கள்.  இப்படி இயந்திரகதியில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்பாளர்கள் மொழிக்கும், நமக்கும் செய்யும் கொடுமை கொஞ்சநஞ்சமல்ல.. நண்பர்கள் சிரிக்கவும், அதே சமயம் வேதனைப்படவும் இங்கே அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் மிகப் புகழ்பெற்ற நாவல் அது.  இரண்டாம் உலகப் போர் பற்றிய மிக முக்கியமான நாவல். திரைப்படமாகவும் அந்தக் காலத்தில் வந்தது.  உளவாளிகளை ஆங்கிலத்தில் Agent  என்பார்கள் அல்லவா? நம் மொழிபெயர்ப்பாளர் அதை தரகர் என்றே நாவல் முழுக்க மொழிபெயர்த்திருப்பார்.  ஓரிடத்தில்  Can’t avoid telling  என்று வரும். அது தமிழில்  ‘சொல்லிவிடுவதை தவிர்க்க முடியாதவரானார்‘ என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கும்.  நாவலில் ஓரிடத்தில், Took some digging to find him என்பார்கள். நம் நண்பர் அதை  ‘தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஆள், கொஞ்சம் பள்ளம் தோண்டி வேட வேண்டியதாச்சு‘ என்று எழுதியிருப்பார்.  தன்னை காதலிக்கும் பெண்ணிடம் நாயகன் You are seventeen. I am very old thirty five என்பான். தமிழில் இது ‘நீ பதினேழு. நான் மிகவும் கடந்த முப்பத்தியைந்து‘ என்று வரும்.  He let me think he was still in the army  என்பதை ‘இன்னும் அவர் ஆர்மிலதான் இருக்கார் எனும் பதிவை அவர் எனக்குள்ளே நிலை நிறுத்தினார்‘ என்று மொழிபெயர்த்தால் நான் எப்படிப் படிப்பேன்?  உச்சபட்டசமாக ஒரு கொடூர மொழிபெயா்ப்பைச் சொல்கிறேன். Even if the Rangers search the area, they won’t bother with the beach, because, the signs say it is mined  என்ற இந்த வரி ‘ரேஞ்சர்கள் தேடுதல்ல ஈடுபட்டாலும், அவங்க பீச்சைப் பற்றி பொருட்படுத்த மாட்டாங்க.  ஏன்னா, அது சுரங்கப் பகுதியா மாறியிருக்குன்னு குறிப்பு இருக்கு‘ என்று எழுதப்பட்டிருக்கிறது.

மற்றொரு புகழ்பெற்ற ஆங்கில  பெண் மர்மநாவல்ஆசிரியையின் நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு படுபயங்கரமாக இருக்கும். Weather is not going to present difficulties. It looks as though it had set in fine  என்பதை ‘வானிலை எந்த தொந்தரவும் தரப்போவதில்லை. அது கோவையாக அமைந்து விட்டது‘ என்று மொழிபெயா்த்துள்ளார்கள். அது ஏன் எனது மதுரையாக அமையவில்லை? என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் !

……….. sat down on the edge of the bed. It was not, he, thought like anyone else sitting on your bed. It was as unsubstantial as though a fairy had poised itself for a minute  என்பதை ‘அவள் அப்படி அமர்வது வேறு யாரோ போல் இல்லாது, சூட்சுமப் பொருளாய்க் காணப்படும் ஏதோ ஒரு தேவதை வந்தமர்ந்தாய்ப் பொருள் கொண்டார்‘ என்று மொழிபெயர்த்திருப்பார்கள்.

இதைவிடக் கொடுமை மற்றொரு புகழ்பெற்ற நாவல் கம் திரைப்படத்தின் மொழிபெயர்ப்பு.  திரைப்படத்தின் தமிழ் வசனங்கள் எவ்வளவோ அற்புதம் என்று சொல்லலாம்.  அதிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். நாவலில், There existed only one person on earth to whom he could pass the torch. மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதர் தனது பொறுப்பை அடுத்து ஒருவரிடம் ஒப்படைப்பது பற்றி நினைப்பது பற்றிய வரி இது. மொழிபெயர்ப்பாளர் அவர் அந்த ரகசிய விளக்கை ஒரே நபரிடம்தான் தர முடியும் என்று எழுதிவிட்டார். பின்னே, Torch என்றால் விளக்கு இல்லாமல் வேறு என்னவாம்?

அபுனைவுகளிலும் இப்படி அவ்வப்போது,  நடக்கவே செய்கிறது. புகழ்பெற்ற ஒரு அபுனைவு நூல்.  கதைசொல்லி தன் காதலனை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள். அந்த சந்திப்பின் போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொள்கிறார்கள். மூல நூலில் They met in a hotel room. They decided to get married in that meeting  என்று இருந்திருக்கக் கூடும். தமிழ் மொழிபெயர்ப்பில், அந்தக் கூட்டத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தார்கள் என்று வருகிறது. காம்ரேடுகளுக்கு Meeting  என்றாலே கூட்டம், தீர்மானம் தானே !

பல ஆண்டுகளுக்கு முன் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்த பட்டாம்பூச்சி நாவலின் அணிந்துரையில் சுஜாதா Traffic was paralysed  என்பதை போக்குவரத்திற்கு பக்கவாதம் ஏற்பட்டது என்று சொல்லக் கூடாது என்று எழுதியிருப்பார். ஆனால், இன்று மொழிபெயர்ப்புகளுக்கு எல்லாப் பக்கங்களிலும் வாதமாகிவிட்டது !

செய்திப் பத்திரிகைகளின் கொடுமை அதற்கு மேல் ! இப்போது கிரிக்கெட் செய்திகளில் எல்லாவற்றிலும் இலக்கு துரத்தப்பட்ட போது என்கிறார்கள். சர்க்கரை நோய் பற்றிய கட்டுரையில் ஒரு பெரிய மருத்துவர் சர்க்கரை நோயைப் பராமரித்தல் என்கிறார். Maintaining the diabetes  என்பதைச் சொல்ல வருவதாக நான் புரிந்து கொண்டேன். தமிழில் இதை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்று எழுத வேண்டும். பராமரித்தல் என்பது ஒன்றை அக்கறையாக கவனித்து மேம்படுத்துதல் என்ற பொருளில் பயன்படுத்த வேண்டிய சொல். தோட்டத்தை பராமரித்தால் அது செழித்து வளரும். நூலகத்தைப் பராமரித்தால், நூலகம் சிறப்பாக வளரும். சர்க்கரை நோயை பராமரித்தால் அது வளருமேயன்றி, குறையாது !

நந்தனார் படத்தில் நடித்த ஒரு துணை நடிகர் பற்றிய குறிப்பில் அப்படத்தின் credits ல் அவர் வேலாயுதம் என்று குறிப்பிடப்படுவதாக சொல்ல வரும் கட்டுரையாளர் அவர் அப்படத்தில் வேலாயுதம் என்று வரவு வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ! நான் நவீன சீத்தலைச் சாத்தனாராக என் பேனாவால் தலையில் குத்திக் கொள்கிறேன் !

மொழித் தூய்மையை விட கருத்துத் தெளிவிற்குத் தான் முக்கியத்துவம் தரவேண்டும். மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமே என்றெல்லாம் எத்தனையோ சப்பைக்கட்டுகள் சொல்லலாம். ஆனால், இயந்திரகதியான இத்தகைய மொழிபெயர்ப்புகளில் மொழி, கருத்து எல்லாமே சிதைக்கப்படுகிறது.  மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி வேண்டும் என்பது போய் ஏதேனும் ஒரு மொழி அரைகுறையாகத் தெரிந்தால் போதும், மற்றதை செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளும் என்று ஆகிவிட்டது.  அப்படி அது பார்த்துக் கொள்வது மிக மிகக் கேவலமான வகையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு நம் தமிழறிவு போய் விடுமோ என்று மெய்யாகவே எனக்கு அச்சமாக இருக்கிறது !

அரசு அலுவலகங்களில் எல்லா வேலைகளையும் கணினியில் ஒரு முறை செய்து விட்டு,  வழக்கமான பழைய பாணியிலும் ஒரு முறை செய்யும் நடைமுறை இன்றும் இருக்கிறது. அது போல, மொழிபெயர்ப்பையும் கணினி துணையோடு செய்தாலும், ஒரு முறை  நேரடியாக நம் மொழியறிவின் துணையோடும்  செய்தால்தான் சரிப்படும் என்று தோன்றுகிறது.

ஆனால், அதற்கு நாம் நிறைய உழைப்பைப் போட வேண்டும் !  மன்னிக்கவும்…. உழைக்க வேண்டும் !

சிற்றுளி அக்டோபர் – டிசம்பர் 2024 இதழில் வெளியான கட்டுரை.

  •