Reading view

அவளின் சிரிப்பு – க. மாரியப்பன்

மொழிபெயர்ப்புச் சிறுகதை : தெலுங்கிலிருந்து தமிழுக்கு

அவளின் சிரிப்பு

தெலுகு படைப்பு : ஶ்ரீசுதா மொதுகு
தமிழாக்கம் : க. மாரியப்பன்

                னால் முடிவுகள் எங்கே எடுக்கப்படுகின்றன? யார் முடிவு செய்கிறார்கள், எப்படி முடிவு செய்கிறார்கள்? அன்றைக்கு நீ அப்படி முடிவெடுத்து வராமலிருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது அல்லவா! எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டாய் பூர்ணா?

                ஹாஸ்பிட்டல் காரிடாரில் தூரமாக எறியப்பட்டதாகத் தெரிந்த மரமேசையை நோக்கி நடந்தேன்.

                                                                                —            —            —

                வாழ்க்கையின் சிறந்த தருணம் என்னவென்று தெரியுமா! உன்னவர்கள் என்று யாரை நீ நினைத்தாயோ அவர்கள் உன்னை விட்டுப் போனால் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சுவிடுவது. அப்படி இருக்கும்போது சுதந்திரத்தை அனுபவிப்பவது நன்றாக இருக்கும். வேறு யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கை அதில் அடங்கியிருக்கிறதா? அவ்வளவு தொலைநோக்குப் பார்வை தேவைதானா? இன்னும் எனக்கு மட்டும் மிச்சிமிருக்கிற காலம் எவ்வளவு?

                சமையலைறையிலிருந்து டீ வாசனை மிதந்து வந்தது. அதற்கு முன்பு டீயோடு கலந்து பூர்ணாவின் வாசனையும் கலந்து வரும். வெறும் டீ வாசனை நன்றாக இருந்தது.

                பூர்ணா போய்ப் பத்துநாட்கள் ஆகின்றன. மனிதர்கள் விட்டுவிட்டுப் போய்விட்டால் உள்ளே ஏதாவது காலியாகுமா? வரும்போது உள்ளே மெல்ல மெல்ல உள்ளே நுழைகிறார்கள். வெளியேறும்போது உள்ளே அவர்கள் விட்டுச் சென்ற சூனியமே நிரம்பியிருக்கிறது நிஜமே, அவர்கள் நிரப்பியது எதாவது இருந்தால், உள்ளே எதற்கு இவ்வளவு சூனியம்! பூர்ணா வருவதற்குமுன் நன்றாகவே இருந்தது. சார்ந்து இருப்பதனாலேயே எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். என்னவொரு மகிழ்ச்சி துக்கமே!

                ராமம் கத்தினான். அவன் ஏதோ சொல்கிறான் இப்படிப்பட்ட யோசனைகளில் உள்ளபோது, சில சமயங்களில் ஒரு விஷயமாக இருக்கும். ஒருமுறை அவனின் கத்தல் எவ்வளவோ கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவனை எங்காவது விட்டுவிடவேண்டும் என்று தோன்றியது.

                ஒரு வாரம் புதிதாக ஏதோ சுதந்திரம் வந்ததுபோல் இருக்கிற நாட்கள் செல்லச்செல்ல வலது கை போய்விட்டதுபோல் தோன்றியது.

                என்ன குறை வச்சேன் பூர்ணாவுக்கு? உண்மையில் ஏதாவது செய்தேனா?

                எப்படிப் பார்த்தேன்? ஒரு சமையல்காரிதானே! ருசியாகச் சமைப்பது மட்டுமின்றி, நம் தேவை எப்பொழுது என்ன இருக்கிறதோ பார்த்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுப்பவள், வெறும் சமையல்காரி ஆகிறாளா? கௌரமாகத்தான் நடத்தினேன் அல்லவா! எப்பொழுது பணம் கேட்டாலும் அதிகமாகவே கொடுத்தேன், ஒருமுறை கேட்காமலும்கூடக் கொடுத்தேன். அது சரி போதுமா? போதாது! கல்யாணத்துக்கு வாங்குற மாதிரி வாங்கணுமா, சினிமாவுக்கு, ஊர் சுற்றிவிட்டு வருதற்கா?

                கல்யாணத்துக்காகவா இதையெல்லாம் செய்தேன்? அவளுக்கு எதற்கு செய்யணும்? எப்பொழுதாவது கல்யாணமானது உண்டா? முழுச் சுதந்திரம் கொடுத்தேன் இல்லையா! எதற்காகக் கொடுத்தேன்? இதைக் காட்டிலும் செய்வதற்கு என்ன இருக்கிறது, என்ன வேண்டுமோ அவற்றைச் செய்தேன். அவளை நான் எதும் அபியூஸ் செய்தேனா? ‘’திட்டுவது அடிப்பது மட்டுமே அபியூஸா, வீட்டில் இன்னொரு மனுஷி இருக்கிறாள் என்ற பிடிப்பே இல்லாமல், தன்னுடன் வாழும் மனுஷியை உடன் வைத்துக் கொண்டு புறக்கணிப்பதைவிடப் பெரிய அபியூஸ் என்ன இருக்கிறது?” என்றாள் அவள். அது என்ன, அது எனக்கு நானே செய்துகொள்கிற செல்ப் அபியூஸ் அல்லவா! உண்மையில் அதெல்லாம் அவள் செய்து கொண்டதாலேயே. “ஆனால் அதற்கு முன்பு மட்டும் நீ மனுஷியாக எப்பொழுது பார்த்தாய்?” என்பதுபோல் கேள்வி கேட்பதுபோல் அவள் பார்க்கும் நேரடிப் பார்வை, பயத்தைத் தந்தது.

                அவளென்றால் சரி, ஆனால் பூர்ணா எதற்கு சென்றாள்?

                அவள் சென்றபொழுதுகூட இவ்வளவு வலிக்கவில்லை. பூர்ணா சென்றதுதான்…

                “போகிறேன்” என்று எவ்வளவு சிம்பிளா சொன்னாள்! எப்படி அப்படி உன்னால் போக முடிகிறது? ஆனால் அவளைத் தடுக்க எனக்கு என்ன அதிகாரமிருக்கிறது?

                “இன்றிலிருந்து பூர்ணா இங்கேயே இருப்பாள்” என்றாள் அவள் செல்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பு. அவளின் பேச்சுக்கு எப்பொழுதும் எதிர்த்தும் சொன்னதில்லை, தலையாட்டியதும் இல்லை. வழக்கமாகப் பஜாரில் எதிர்ப்படுகிற பத்து மனிதர்களில் ஒருவராகத் தெரிந்தாள் பூர்ணா. மறுபடியும் பார்க்கவேண்டும் என்று நினைக்கும்படியான சிறப்பு எதுவும் அவளிடம் தெரியவில்லை.

                ஒருசமயம் அவள் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டாள். உடல்நிலை சரியில்லாமல் திரும்பி வந்தாள். எங்கும் போக முடியாதா இல்லையென்றால் நான் எப்பொழுதும் அவளைக் கவனித்துக் கொள்வேன்  என்று நினைக்கிறாளோ என்று எனக்குத் தெரிவில்லை. அவளுக்கு எந்த மூலையிலோ ஒரு நேசம் இருந்தே ஆகவேண்டும்.

                ஏன் இருக்க வேண்டும்? நான் எப்பொழுதும் அவளை மறுக்கவில்லை. அதற்காக அவளை நெருங்க முயற்சித்ததும் இல்லை. அப்படிச் சென்றதற்கு எப்பொழுதாவது வருத்தப்பட்டு, பச்சதாபம் படுவாள் என்று நம்பினேன். விசித்திரமாகச் சிலநாட்கள் சுற்றிவிட்டு உன்னிடம் வருவது உன் அதிர்ஷ்டம் என்பதாக இருந்தது அவளின் நடத்தை. என்ன செய்தாலும் மன்னிக்கிற நேசம், இவ்வளவு விசாலமான இதயத்தின் பெருந்தன்மையைப் பார்த்துக்கூட எதையும் பொருட்படுத்தாமல் அவள் வருவதே என் அதிர்ஷ்டம் என்று எப்படி இப்படி நடந்து கொள்கிறாள். புரியவில்லை. அவளை சிறுமைப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு நானே பாதாளத்தில் இருப்பதுபோல் எதற்குத் தெரிகிறதோ எனக்குத் தெரியாது. நீயே எனக்கு ஆதாரம் என்று எப்பொழுதும் என் தோளைப் பிடித்துக்கொண்டு அழுவது எதற்கு, கண்ணீரால் என் கால்களைக் கழுவுவது எதற்கு?

                எப்பொழுதோ ஒருமுறை “அனில், நீ எதற்கு என்னைப் பொறுத்துக் கொள்கிறாய்? என்ற பொழுது அவளின் கண்களில் அளவற்ற கருணை. அவள் நெஞ்சின்மேல்  தலை வைத்துக் கொண்டு அமைதியாகப் படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் எதற்கு அப்படிச் சாய்ந்து கொள்ளவேண்டும்? ஒவ்வொரு முறையும் அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், “நீ இப்படி இருக்காத, நீ எது நிஜமோ அப்படியே இரு” என்று. கோபம் தள்ளிக் கொண்டு வந்தது. எனக்குள் அவ்வளவு கபடம் இல்லையென்று தூக்கியெறியத் தோன்றியது.

                ‘’உனக்கு நான் என்ன குறை வைத்தேன்’’ என்று கேட்கத் தோன்றிய பொழுது, என்னால் என்ன கொடுக்க முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன். என் அறைக்குள் யாரையும் உள்ளே வராதபடி வெளியே வைத்திருக்கிறேன் அல்லவா! அப்புறம் அவர்கள் மட்டும் எத்தனை நாட்கள் இருப்பார்கள், அவளை வரவிட்டிருக்கிறேன். மூச்சுவிடமுடியவில்லையென்று சென்றுவிட்டாள். அது என் தப்பா? ஒரு மனுஷியை நேசிப்பது, ஆதரவளிப்பது, துணையாக இருப்பது, இவற்றையெல்லாம் நான் எப்படிச் செய்ய முடியுமோ அப்படியே செய்தேன். அவள் எதிர்பார்த்தபடி எப்படி இருக்க முடியும்? வெளியேறுவது அவளின் சுதந்திரம் அவ்வளவுதான். துவேஷம், காதல், வலி, பக்தி ஏதோ ஒன்று அவளைச் சூழ்ந்திருக்கிறதா எதற்கோ?

                பூர்ணா வந்ததும் நான் குறைவு என்ற பாவனையை என்னிலிருந்து நீக்கினாள். நானும் ஒரு மனிதன்தான் என்று உணர்ந்தேன். என்னவோ! மனிதர்கள் இரக்கமானவர்கள், அப்படியே மோசம் செய்பவர்களும் கூட. குடித்துவிட்டு லேட்டாக வந்தாலும் டேபிள்மேல் சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்று தயாராக இருக்கும். மனிதர்களே இருப்பதில்லை பேசுவதற்கு.

                இரண்டோ மூன்றோ டிரஸ்கள் இருந்தன பூர்ணாவிடம். மிகவும் தெரிவது சிவப்பு வண்ண டிரஸ். அவள் எப்பொழுதும் பூர்ணாவைப் பெரிதாக அதட்ட நினைத்தது கிடையாது. எப்பொழுதாவது “ஓ ராஜகுமாரி எங்கே சென்றாய்?” என்றாள்.

                அவள் சென்றுவிட்டாள், மீண்டும் வரமுடியாத தூரத்திற்கு. நான் கவலைப்பட்டேனா! அப்புறம் திரும்பமுடியாத தூரத்திற்குச் சென்றதற்குக் கவலைப்பட்டேன். சில நாட்களுக்கு முன்பு அவள் சொன்னாள் “நான் இல்லாவிட்டாலும் பூர்ணா இங்கேயே இருப்பாள். குறைந்தபட்சம் பூர்ணாவையாவது போகவிடாமல் பார்த்துக்கொள்” என்று. “சமையல்காரி, அவளைக்கூடச் செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமா!” என்றேன் கோபமாக. எதிர்த்து என்னைப் பார்த்தாள். ‘உன்னைக் கவனித்துக் கொண்டு துணையாக இருக்கும் மனுஷியைக் காட்டிலும் இப்பொழுது உனக்கு என்ன வேண்டும்? பூர்ணாவை இழந்துவிடாதே அணில்” என்றாள்.

                ‘இவ்வளவு காதலித்த நீயே சென்றுவிட்டாய், இனி பூர்ணா எதற்கு? நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்த நான் இவ்வளவு சூன்யமாவது எதற்கு.

                அப்பொழுது வந்தான் ராமம். அதென்னவோ அவன்கூட அவள் முன்பு எதுவும் கத்துவதில்லை. அவளுக்காகப் பக்தியோடு பிரார்த்தனை செய்தான் கொஞ்சநேரம். என் அருகில் வந்தபொழுது சிரிப்பு, நான் ஒருவனே என்பதுபோல் இருந்தது அவனின் பார்வை. பூர்ணாவோடு இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தது கிடையாது. இவனை விடப் பூர்ணாவே குணம்.

                வர வர பூர்ணாவின் மீது ஆதாரப்படுவது அதிகமாகியது. அவள் போனதும் பூர்ணாவும் சென்றுவிடுவாள் என்று நினைத்தேன். போகவில்லை, இருந்தாள். எனக்காக இருக்கிறாள் என்ற ஆனந்தமும் கூட, எனக்காக இல்லை போக்கிடம் இல்லாததால் இங்கே இருக்கிறாள் என்று தோன்றியது.

                ஓருவேளை எப்படித் தொடங்கியதோ அதிகாரம், விருப்பத்தோடு என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற ஒருவன் பரிதாபப்படுவது சாதாரண விசயமா! பூர்ணாவிற்கு மட்டும் விருப்பங்கள் இருக்காதா? அவற்றை முழுவதுமாகக் கொன்றுவிட்டு இருக்கிறாள். ஒரே வீட்டில் இருக்கிறோம். நினைப்பவர்கள் என்னமும் நினைத்துக் கொள்ளட்டும். அது தேவையற்றது. நான் கருணை காட்டினேன். அவள் கையைப் பிடித்துக் கொண்டு நிஜமாகவே என் விருப்பத்தைச் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து ஒருமாதிரி சிரித்தாள். உடல் அருவருக்கும்படியாக, உள்ளே பயத்தை உண்டாக்கினாள். அந்தச் சிரிப்பில் அலட்சியம், எதிர்ப்பு, நிசப்தம். ‘எதற்கு இப்படிச் சிரித்தாய்’ என்று கேட்கிற தைரியம், அவளைப் பிடித்திருக்கிற விருப்பம் நின்று விட்டது.

                பூர்ணா சென்றுவிட்டாள். ராமம் என்னைச் சுற்றி வருகிறான். அவனுக்கு இப்பொழுது சாப்பாடு போடுபவர்கள் யாரும் இல்லை. நான் வைத்தால் சாப்பிடுவதும் இல்லை. அவன் என்னைப் போலவே, இல்லையென்றால் வெளியே பூனை போல நடந்து கத்திக்கொண்டு சுற்றுகிறான். அவன் பூனைதான். பூனைக்கு விசுவாசம் இருக்கும் என்பார்கள். இவன் என்ன சாப்பிட கூட இல்லாமல் விசுவாசத்தைப் பிரகடனப்படுத்துகிறான்! ஒருவேளை அவனுக்குள் ஒரு நிஜமான மனிதன் இருந்திருக்கலாம். எனக்குள் பூனையின் கத்தல். நான் விசுவாசம் அற்றவனா?

                பூர்ணா எங்கே சென்று விட்டாள்? யார் இருக்கிறார் அவளுக்கு?

                பத்து நாட்கள் என்பது ஒன்பது மாதங்கள் ஆனது. ராமம்கூட நடுவில் அவளைப் போலவே சென்று வந்தான். அவனோடுகூட ஒரு சின்னப் பூனைக்குட்டி. அவனின் குட்டியோ என்னமோ, பொத்து பொத்தென்று இருந்தது. உண்மையில் ஆண் பூனைகள் அவற்றின் குட்டிகளை நினைவில் வைத்துக்கொள்ளுமா என்ற டவுட் வந்தது. அவைகளுக்குப் பால் ஊற்றுகிறேன். செலவு செய்கிறேன். ராமம் எங்கு சென்று வந்தாலும் என்னைவிட்டுப் போகாமல் இருக்கிறான். குட்டிப்பூனை என்னைச் சுற்றிச்சுற்றி வருகின்றது. கொஞ்சம் கர்வமாக உணர்ந்தேன். நான் அவற்றுக்கு உணவளிக்கிறேன் என்று.

                ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கதவைத் தட்டுகிற ஓசை. எதிரில் பூர்ணா, பெரிய வயிறோடு. பார்த்ததும் ஆவேசம் வந்தது. “இங்க எதுக்கு வந்த?” விக்கல் கேட்கிறது. இந்த ராத்திரியில் வந்தாள். குட்டிப்பூனை என் காலைச் சுற்றிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒதுங்கிக் கொண்டேன்.

                கோபமாக இருந்தது. நாளை காலையிலேயே சென்றுவிடு என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எதற்கு கோபம். யாருடனோ சென்றாள். தனியாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்தாள். ச்சீ! வெட்கம் கெட்ட ஜென்மம். இப்படி நினைப்பதில் ஏதோ திருப்தி இருந்தாலும், எதற்கோ மிகவும் திருப்தியற்று இருந்தது.

                காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தபொழுது அதே டீ வாசனை. எத்தனையோ நாட்களாக மறந்துபோன டீ வாசனை. ராமத்தின் அலறல் சத்தம் பலமாகக் கேட்டது. இப்படிப்பட்டதை வீட்டில் வைத்திருந்தால் உலகம் என்ன நினைக்குமோ என்னவோ…! உலகத்தைப் பார்க்காமல் கையைப் பிடித்துக்கொள்வது பரவாயில்லையா அப்புறம்!

                இந்தக் கர்ப்பம் யாரால் வந்தது என்று கேட்கவேண்டுமென்று நினைத்தேன். பூர்ணாவின் முகத்தில் ஒளியின் பின்னால் காணப்படும் மெல்லிய இருள் தெரிந்ததுபோல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது இந்தப் பெண் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எங்கெங்கேயோ சுற்றி வழியில்லாமல் மறுபடியும் இங்கே வந்தாள். இவளை எதற்கு நான் பார்க்க வேண்டும்? கேள்விகள் அருகிலேயே நின்றுவிட்டன. பூர்ணா எங்கேயும் செல்லவில்லை. நான் ஊகித்ததுபோல எனக்கு எதிர்படுவது அதிகமாகியது.

                ராமம் குட்டிப்பூனையை விட்டுவிட்டு எங்கேயோ சென்று விட்டான். இரண்டு நாட்கள் தேடினேன். எதிர்பார்த்தேன். பூனைகள் செத்துப் போனால் அன்றி எஜமானின் அருகில் வராமல் இருப்பதில்லை’ என்றாள் பூர்ணா. ஆமாம் அவை பூனைகள். அதே மனிதர்கள் என்றால் அவசரம் ஏற்பட்டால் தவிர வர மாட்டார்கள். வார்த்தை தொண்டையிலேயே நின்று விட்டது. ஆனால் நான் யாருக்கு எஜமானன்? ஒருவருக்கு நான் வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு எஜமானன் ஆகிறேனா? கொடுக்க முடியாததையும் நிரப்ப முடியாதையும் பூர்ணா தந்துள்ளாள், ராமம் செய்த வேலையை மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் போக்கிடம் இல்லாமல் வந்தார்கள் என்று மனம் என்னை ஆட்டுவித்தது. ஆம், அந்த மனம்தான் எல்லாவற்றுக்கும் எஜமான்.

                பூர்ணா அடியெடுத்து வைத்ததால் வீடு வீடு மாதிரி இருந்தது. வெறுமையெல்லாம் எதனாலே நிரம்பியது. அந்தக் காற்றில் ஏதோ உயிர்ப்பு. ராமம் இல்லாத வெறுமை பெரிதாகத் தெரியவில்லை.

                                                                                —-           —-           —-

                “இந்தப் பாரத்தில் கையெழுத்துப் போடு”

                “எதுக்கு?”

                “ஆப்ரேஷனுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென்று”

                நான் எதற்கு செய்ய வேண்டும்? நான் யார் பூர்ணாவிற்கு? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்பது? அவள் பூர்ணாவைக் கொண்டு வந்து என்னிடம் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். கையெழுத்திட்டேன்.

                “பீ பாசிட்டிவ் ப்ளட் குரூப்ல பேசினோம். பொண்ணு ரொம்பப் பலவீனமா இருக்குறா, சின்ன வயசுன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வெள்ளை ஆடையில் ஒளிர்கிற நர்ஸ்.

                அவ்வளவு சின்னவளா பூர்ணா! நாற்பது வயது நிரம்பியவளைப் பார்க்க மிகவும் சின்னவளா? அவ்வளவு சின்னவளா இருந்தா வயிறைத் தள்ளிக் கொண்டு எப்படி வந்தாள்! இப்பொழுதாவது கேட்கவேண்டும் இந்தக் குழந்தை யாருடையதென்று.

                அழுகை கேட்டது. புதிய அழுகை, உலகத்தை அறிமுகப்படுத்தும் அழுகை. வெள்ளை ஆடை அணிந்து கொண்டிருக்கிற நர்ஸ் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட குழந்தையை எடுத்துக் கொண்டு சிரித்தபடி கைகளில் வைத்துச் சொன்னாள் “பாப்பா பிறந்திருக்கு சார்! உங்களுக்கு வாழ்த்துக்கள்”

                பாப்பா கையை இறுக்க மூடி வைத்திருந்தது.

                தூரத்தில் எங்கேயோ ராமம் குட்டிப்பூனையை அழைத்து வந்து என்னை நோக்கிக் கத்துகிற கத்தல் கேட்கிறது. குட்டிப்பூனை கத்துகிற மெல்லிய கத்தல்.

                பாப்பா அழுகையை நிறுத்தியது. கைவிரல்களைச் சிறிதாக விரித்தது. கண்கள் சிமிட்டி  வெளிச்சத்தைப் பார்த்தது. மென்மையான உதடுகளின்மேல் உதயமாகிற ரகசிய பாஷையைப் பிரமிப்பாகப் பார்த்தேன். பரவசமான அவளின் சிரிப்பு. அவளின் சிரிப்பே அது. ஆமாம் அவளின் சிரிப்பே.

                “சார், இந்தப் பாரத்தில் தாய் தந்தை விவரங்களை நிரப்புங்கள்” என்றாள் நர்ஸ் வந்து.

                சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்தேன்.

                முடிவுகளை வெறும் காலம் மட்டும்தான் முடிவு செய்கின்றது.

  •