Reading view

வைரஸ் வந்த கதை

ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து இறந்த பிறகுதான் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனை இந்த வினோதமான காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அடைந்தது.



அதன் பிறகு நடந்தது உலக சுகாதாரத்துறை வரலாற்றின் தீரம் மிக்கப் போராட்டம். மாநில சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் தன்னார்வலர்களும் இணைந்து நடத்திய உணர்ச்சியும் நிபுணத்துவமும் மிக்க இந்தப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு வந்துள்ள ‘வைரஸ்’.

ஆஷிக் அபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன், டோவினோ தோமஸ், ஆஷிஃப் அலி, ரேவதி, பார்வதி, இந்திரஜித், பூர்ணிமா, ரீமா கலிங்கல், ரெம்யா நம்பீசன், ஜோஜூ ஜோர்ஜ், ரகுமான் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் அணி வகுத்துள்ளனர். ஒவ்வொரு பாத்திரமும் அதனளவில் முக்கியத்துவம் மிக்கதாகப் படம் சித்தரிக்கிறது.

இரு காட்சிகளில் மட்டுமே வரும் ரகுமான் கதாபாத்திரம்தான், ‘இது நிபாவாக இருக்கலாம்’ என முதன்முதலாகச் சந்தேகிக்கிறது. இது பேபி மெமோரியல் மருத்துவமனையின் மருத்துவர் அனூபை அடிப்படையாகக் கொண்டது. செவிலியர் லினிக்கு சிகிச்சை அளித்த டி.பி.ரஞ்சித் கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ளார். லினியாக ரீமா நடித்துள்ளார். நிபா வைரஸ் நோயாளிகள் சடலத்தை உடற்கூறு செய்ய யாரும் முன்வராத நிலையில் அதைத் தைரியத்துடன் செய்த மருத்துவர் கோபகுமாராக இந்திரஜித் நடித்துள்ளார்.

எல்லாக் கதாபாத்திரங்களும் நிஜ மனிதர்களின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேரள சுகாதாரத்துறை அமைச்சராக நடித்துள்ள ரேவதியின் தோற்றத்தைப் பார்த்த அமைச்சர் ஷைலஜா டீச்சர் அது தனது பழைய புகைப்படம் என நினைத்துள்ளார். இந்தத் தோற்றச் சித்தரிப்பு மூலம் படத்தை உண்மைக்கு அருகில் வைக்க ஆஷிக் முயன்றுள்ளார். இந்த இடத்தில் படம் மகேஷ் நாராயணனின் ‘டேக் ஆஃ’பை நினைவூட்டுகிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியை முக்கியக் களமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரியில் சந்தித்துக்கொள்ளும் எண்ணற்ற கதாபாத்திரங்களின் வழி கதை விரிந்து செல்கிறது. மருத்துவர் பிஜின் – மருத்துவர் சீது பொன்னுத் தம்பி தம்பதியின் நிஜக் கதையும் இதில் வருகிறது. இத்துடன் ஆஷிஃப் – தர்ஷனா போன்ற சில கற்பனைகளையும் படம் உருவாக்கியுள்ளது. இந்தக் கற்பனையும் நிஜமும் பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அம்சங்களாக இருக்கின்றன.

தன் மனைவி லினியை, ஒரு முறை காண முடியாத கணவனின் நிலையை மின்தகன அறையிலிருந்து வெளிவரும் புகை வழி, படம் உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. வெளியே பரபரப்பான கோழிக்கோடு நகரம் வெறிச்சோடிப் போன சூழலையும் காட்சிப்படுத்தியுள்ளது. நிபா பீதி பரஸ்பர மனித சிநேகத்தை நஷ்டப்படுத்தியதையும் கவனத்துடன் செல்கிறது. ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தின் இணைக் கதையாசிரியர் மோசின் பராரி, ஷர்பு, சுகாஸ் ஆகிய இருவருடன் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.



மருத்துவர்களால் கணிக்க முடியாதபடி நிகழும் இந்த மரணங்களுக்குப் பின்னாலுள்ள வினோதம் நிபா எனக் கண்டுபிடிக்கப்பட்டதும் படம் ஒரு திரில்லராக மாறுகிறது; முதன்மை நோயாளியான முகமது சாபிதிலிருந்து ஒரு விசாரணையாக முன்னும் பின்னும் நகர்கிறது. மத்திய அரசின் பிரநிதிகள் இதை அந்நியத் தாக்குதலாகக் கருதுகிறார்கள். அதைத் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கவில்லை என்றால் பாதுகாப்பு அமைச்சகம் இதைக் கைக்கொள்ளும் வாய்ப்பு சுட்டிக்காட்டப்படுகிறது.  
அதனால் நிவாரணம் இல்லா இந்த நோய் எப்படி வந்தது, அதன் மூலம் என்ன? எனக் கண்டறிய வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்படுகிறது. மணிப்பால் வைராலஜி நிறுவனத்தின் மருத்துவர் அருண் குமாரும் கோழிக்கோடு முதுகலை மருத்துவ மனைவி சீது பொன்னுத் தம்பியும் இந்தப் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த இரு கதாபாத்திரங்களிலும் முறையே குஞ்சாக்கோ போனும் பார்வதியும் நடித்துள்ளனர்.

இந்த இரு கதாபாத்திரங்கள் வழி படம் ஒரு த்ரில்லராக விறுவிறுப்படைகிறது. பார்வதி, சாபித்திடமிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியைத் தன்னார்வமாக மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் நிபா குழு இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. போபன் இந்த வைரஸ் சாபிதுக்கு எப்படி வந்தது என்பதைக் கண்டறிய அறிவியல் பூர்வமான விசாரணையில் இறங்குகிறார்.

சாபித் தோட்டத்தினுடைய பழங்கள், வளர்ப்பு முயல்கள் என இந்த விசாரணை தொடர்கிறது. 2018 ஜூன் 10 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் நிபா பாதிப்பு இல்லை என அறிவிக்கும்வரை ஒரு மாதம் காலம் தொடர்ந்த இந்தப் போராட்டத்தின் உண்மை நிலையைப் படம் வெகு அருகில் சென்று காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் நாடகத்தனமான படத்தின் இறுதி மேடைக் காட்சியில் ஆஷிக் தான் ஒரு பழைய எஸ்.எஃப்.ஐ.காரன் என்ற ரீதியில் உணர்ச்சவசப்பட்டுவிட்டார்.

ஜெயகுமார்

தமிழ் இந்து, 21, ஜூன், 2019

  •  

ஜல்லிக்கெட்டு: ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகம்




பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருக்கிறது, ‘ஜல்லிக்கெட்டு’. அடிமாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட எருமை ஒன்று தப்பித்துவிட, அதைத் தேடி அலையும் ஒரு ஜனக் கூட்டத்தின் கதைதான் இது. ‘மாவோயிஸ்ட்’ என்னும் தலைப்பில் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஸ் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்.ஜெயகுமாரும் ஹரீஸும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

மலையாள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இதன் இயக்குநர். ‘ஆமென்’ படத்தில் இருந்து தனக்கெனத் தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட லிஜோ இதில் இன்னும் திருத்தமாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஷாட் தேர்வில் அவரது தேர்ச்சி கூடியிருக்கிறது. கடிகார முள்ளின் ஓசைக்குப் படத்தின் கதாபாத்திரங்கள் விழி திறக்கும் முதற்காட்சி அதற்கான பதம்.


கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக் கிராமம்தான் கதையின் களம். அங்கே கறி வியாபாரம் செய்யும் வர்கியின் கடைக்குக் கொண்டுவரப்படும் எருமை, அடித்துக்கொல்லப்படும் அதிகாலை வேளையில் அவருடைய கையாள் அந்தோணியின் பிடியிலிருந்து நழுவிக் காட்டுக்குள் பதுங்கி விடுகிறது. அதன் பிறகு அந்த ஊரின் இரு பகல்களும் இரு இரவுகளும் நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பிக் காட்டுக்குள் அலைகிறது. இந்தச் சிறு காலத்துக்குள் படம், பலவிதமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பு எருமை மாட்டிறைச்சி, அந்த ஊரின் வாழ்க்கையுடன் எவ்வளவு தொடர்பு கொண்டது என்பதைத் திட்டுத் திட்டான காட்சிகள் வழியே லிஜோ சொல்லியிருக்கிறார்.


காட்டுக்குள் தப்பிச் சென்ற எருமை மூர்க்கத்துடன் ஊருக்குள் நுழையும் ஒரு நீண்ட காட்சியில் முதலில் டீக்கடையை முட்டிச் சிதைக்கிறது. பிறகு கம்யூனிஸ்ட் கொடியை, பிறகு வங்கிக்குள் புகுந்து பெரும் சினத்துடன் வர்கியை முட்டித் தள்ளிவிட்டு மீண்டும் காட்டுக்குள் புகுந்து கொள்கிறது. இதற்குப் பிறகு தோழர்கள் வருகிறார்கள். சாய்ந்த கொடியைக் குறித்துப் பேசுகிறார்கள். ஏதோ தீர்வு சொல்ல முயன்று அதற்குள் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கு முந்தைய காட்சியில் பசு மூத்திரம் பிடிக்கும் ஒருவர் எருமையை அதன் போக்கில் வாழவிட வேண்டும் என்று ஜீவகாருண்யம் பேசுகிறார். ஆனால், எருமை அவரது காட்டைச் சிதைக்கும்போது கொதித்துப் போய் வசை பாடுகிறார். வலது, இடது அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம், போலீஸ் அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதையும் சொல்கிறது. மத அமைப்புகள், எளிய மனிதர்களின் நம்பிக்கைகளைக் கொண்டு தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைச் சாதிப்பதையும் படம் காட்சிகளின் வழியே பதிவுசெய்கிறது.


படத்தின் தொடக்கத்தில் மின்னல் வெட்டுபோல் காட்சிகள் வந்துபோகின்றன. அவற்றில் ஒன்றில் தினமும் புட்டு சமைப்பதற்காக ஒருவர் தன் மனைவியை அடிக்கிறார். இதுபோல் திட்டுத் திட்டாகப் பெண் கதாபாத்திரங்கள் படத்துக்குள் வந்துபோகின்றன. ஆனால், அவை மையக் கதைக்குள் எந்தக் குறுக்கீட்டையும் நிகழ்த்த வில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திரங்களின் வழி அதிகார அமைப்பை படம் சித்தரிக்கிறது. இன்னொரு காட்சியில் நக்சல் தோழரின் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இதற்கு ஒரு தொடர்ச்சி படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிறது. எருமை திரும்பவும் தப்பிக்கும் காட்சியில் இந்த நக்சல் தோழர் மூலம் நடப்பு காலத்தின் இடதுசாரி அரசியலைப் படம் விமர்சிக்கிறது.


அந்தோணி, வர்கியின் தங்கை, எருமையைப் பிடிக்க காட்டுக்குள் இறங்கும் வர்கியின் முன்னாள் கையாள் குட்டச்சன் இந்த மூன்று கதாபாத்திரங்களின் முரணில்தான் படத்தின் இரண்டாம் பகுதி துளிர்க்கிறது. இவர்களுக்கு வெளியே எருமையைப் பிடிக்க ஜனக் கூட்டம் மூன்று பிரிவுகளாகக் காட்டுக்குள் இறங்குகிறது. இந்தப் பிரிவுகளுக்கு இடையில் ஒன்றிற்கு ஒன்று முரண்பாடுள்ளது. இந்த ஜனக் கூட்டம் சட்டம், ஒழுங்கைக் கைப்பற்றுகிறது. ஊரின் காவல் உதவி ஆய்வாளர் ஜனத்தோடு ஜனமாகக் கைலியுடன் எருமையின் மீது காலனைப் போல் ஓடும் காட்சி அதற்கான சாட்சி. பிறகு அந்த ஊரே ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகத்தின் கீழ் வருகிறது. ஒருவகையில் இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் நிலை என்பதைப் படம் சொல்ல முயன்றிருக்கிறது.


இந்தத் துரத்தல் நாடகத்தை கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் பிரஷாந்த் பிள்ளையின் ஒலிப்பதிவும் மூர்க்கமானதாக மாற்றியிருக்கின்றன. பின்னணி இசையாகக் குரல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. நாகரிகம் தொடங்குவதற்கு முன்னான மனித சப்தங்கள். நவீன ஆயுதங்கள் இன்றி கம்பும் சுத்தியலுமாக முன்னேறும் ஜனக் கூட்டத்தின் சப்தமும் தீப்பந்தமும் அத்துடன் சேர்ந்துகொள்கின்றன.


இந்தத் தேடுதல் வேட்டையின் ஊடே அந்தக் காட்டுக்குத் தங்கள் முப்பட்டான்கள் மலை ஏறி வந்த கதையைக் கதாபாத்திரங்கள் சொல்கின்றன. வாழ வழியில்லாத, வாழ்க்கைக்குத் தப்பிய உதிரிகளின் தேசமாக அது ஆனதைப் பல காட்சிகள் ஊடே படம் சொல்கிறது. அந்த ஊரே ஒரு தேசமாக விரிவுகொள்கிறது. அந்தத் தேசத்தில் இன்னும் மீதமிருக்கும் காட்டு வாசனையைப் போல் ஜனங்களிடம் தேங்கியிருக்கும் மிருக வாசனையையும் இந்தப் படம் இறுதியாகக் கண்டடைகிறது.


- மண்குதிரை
  

இந்து தமிழ், 25, அக்டோபர், 2019


  •  

கோட்சே ஜனநாயகம் vs காந்திய ஜனநாயகம்



மூன்றாண்டுகளுக்கு முன்பு ‘டெமாக்ரசி’ என்னும் மலையாளக் குறும்படம் ஒன்று யூடியூப்பில் தனிக் கவனம் ஈர்த்தது. காதல், த்ரில்லர் எனக் குறும்பட முயற்சிகளும் எல்லைகளுக்குள் சுருங்கிவரும் காலகட்டத்தில் இந்தப் படம் சுதந்திரத்துடன் வெளிப்பட்டிருந்தது. பேருந்துப் பயணம் ஒன்றை உருவகமாகக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை விமர்சித்திருந்தது அந்தப் படம். அதன் இயக்குநர் ஜூபித் நம்ராடத். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அது முழுநீளத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதுதான் ‘ஆபாசம்’. இந்துத்துவம் முன்னிறுத்தும் ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் (Aarsha Bharatha Samskaram) என்பதன் சுருக்கம்தான் ‘ஆபாசம்’.
பெங்களூரில் இயங்கும் டெமாக்ரசி (ஜனநாயகம்) என்னும் தனியார் பேருந்து நிறுவனம், காந்தி, கோட்சே, அம்பேத்கர், ஜின்னா, மார்க்ஸ் ஆகிய பெயர்களில் கேரளத்துக்குப் பேருந்துகளை இயக்குகிறது. இந்தப் பேருந்துகளும் அவற்றின் பயணிகளும்தான் கதைக் களம்.
ஜின்னா பேருந்து தொடக்கக் காட்சிகளிலேயே படத்திலிருந்து வெளியேறிவிடுகிறது. மிச்சமிருக்கும் காந்தி, மார்க்ஸ், அம்பேத்கர், கோட்சே ஆகிய பேருந்துகளுக்காக ஜனநாயக ஆட்காரர்கள் ஆள் பிடிக்கிறார்கள்.
காந்தியப் பேருந்தின் வயதான ஓட்டுநர், கிடைக்கும் நேரத்திலெல்லாம் ஸ்மார்ட் போனில் ஆபாசப் படம் பார்க்கிறார். எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் ஜியோ சிம்மை அவர் வாங்கியிருக்கிறார். அவரது கிளீனருக்குப் பெண் பித்து. கையில் மஞ்சள் கயிறு கட்டியிருக்கும் அவர், கோட்சே ஜனநாயகப் பேருந்தில் ஓட்டுநராக முயன்றுவருகிறார். கோட்சே ஜனநாயகத்தினர், காந்திய ஜனநாயகத்தின் நேரடிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். காந்தியைத் தோற்கடிக்கப் புதிய பேருந்து வாங்கும் திட்டமும் அவர்களுக்கு இருக்கிறது.

எல்லாப் பேருந்துகளும் போன பிறகு கடைசியாகத்தான் காந்திய ஜனநாயகப் பேருந்து வருகிறது. முழுக் குடிகாரர், மத்திய சர்காரால்தான் நாடு நலமாக இருக்கிறது என நம்பும் ஒரு இந்து பக்தர், கிறிஸ்துவப் பிரச்சாரத் தம்பதி, ஒரு திருநங்கை, சொந்த மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் ஒரு சிறுமி, பொதுக் கலாச்சாரத்தில் தனித்திருக்கும் ஒரு யுவதி, எஸ்.எஃப்.ஐ.லிருந்து டி.ஒய்.எஃப்.ஐக்குப் போய்க் கடைசியில் சோத்துக் கட்சியிலிருக்கும் ஒரு குடும்பஸ்தன், கிறித்துவரான உம்மன் சாண்டி ஆட்சி இன்னும் நடந்துவருவதாகவும் அதனால்தான் கேரளம் நன்றாக இருப்பதாகவும் நம்பும் ஒரு கிறித்துவ மூதாட்டி, ஒரு ஐடி இளைஞன், விருப்பமில்லாத தனது திருமண நிச்சயத்துக்குச் செல்லும் ஐடி பெண், கடும் பசி இருந்தும் நோன்பிலிருப்பதால் சாப்பிடாமல் இருக்கும் ஆச்சாரமான முஸ்லிம் கணவன், (அவனது மனைவியைப் பிறர் பார்ப்பதை விரும்பாத அவன் அவர்களிடம் கோபப்படாமல் மனைவியிடம் சீறுகிறான்.) சில வெளிநாட்டவர்கள், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ஒரு மாணவர், ஒரு நோயாளித் தொழிலாளி இவர்கள்தாம் காந்திய ஜனநாயகப் பேருந்தின் பயணிகள்.

இவர்களுள் தொழிலாளிக் கதாபாத்திரம் கடைசியாக வந்து சேர்கிறது. காந்திக்கும் முன்பு சென்ற மார்க்ஸ் ஜனநாயகப் பேருந்தில் அவருக்கு இடம் கிடைக் காமல் போய்விடுகிறது. முறையில்லாத வேலையாலும் கூலியாலும் கடும் உடல், மன உளைச்சலுக்கு உள்ளான அவர் அம்பேத்கரில் முன்புபதிவு செய்துவைக்கிறார். ஆனால், அம்பேத்கர் பேருந்துக்கு ஆட்கள் சேராததால் அதை நிறுத்திவிடுகிறது ஜனநாயக நிறுவனம். வேறு வழியில்லாமல் ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து காந்திய ஜனநாயகப் பேருந்தில் ஏறிக்கொள்கிறார்.
காந்திய ஜனநாயகப் பேருந்துக்குள் நடக்கும் சம்பவங்களும் குழப்பங்களும் படத்தின் மையக் கதை. இந்தப் பல தரப்பட்ட மனிதர்கள் ஒரே குடையின் கீழ் கூடும்போது இயல்பாக ஏற்படும் முரண்பாடுகளை அப்படியே இயக்குநர் விவரிக்கிறார்.
இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. அவர்கள் பயணத்தின் ஊடே அதைத் துழாவிப் பார்க்கிறார்கள். திருநங்கை, தனது துணிச்சலான முடிவால் சமூகத்தில் சந்திக்க நேர்ந்த அவமானங்களை நினைத்து விசனப்படுகிறார். ஐடி பெண்ணுக்கு ஒரு தமிழ்ப் பையன் மீது மையல் இருக்கிறது. அந்த ‘சொல்லாத’ காதல் வந்துபோகிறது. பயணியான பழைய கம்யூனிஸ்டுகாரனின் ஓட்டலில் மாட்டுக் கறி விற்பதால், பிரச்சினை வரலாம் என அவனுடைய சமையல்காரன் தொலைபேசி வழியாக எச்சரிக்கிறான். இனி மாட்டுக்கறியை ‘மாயாமோகினி’ (பேருந்தில் காட்டப்படும் திலீபின் படம்) எனப் பெயர் மாற்றி மெனு கார்டில் அச்சிடச் சொல்கிறான்.
ஜூபித் நம்ராடத்

இவர்கள் அல்லாது காந்திய ஜனநாயகப் பேருந்தில் மாறுவேடமிட்டு இரு நக்சலைட்கள் ஏறிக்கொள்கிறார்கள். அவர்களைத் தேடிவரும் போலீஸ் பேருந்தைப் பாதி வழியில் நிறுத்திவிடுகிறது. ஆனால் வழக்கம்போல் அதற்கு முன்பே அவர்கள் தப்பிவிடுகிறார்கள். அப்போது அங்கு வரும் ‘கோட்சே’வில் ஐடி இளைஞர், ஐடி பெண், இந்து பக்தர் எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். காந்திய ஜனநாயகம் மட்டும் நடு வழியில் நிற்கிறது.
சமகால அரசியலை இவ்வளவு துணிச்சலாகச் சொன்ன படம் சமீபத்தில் இல்லை எனலாம். தணிக்கைக்காக ஓராண்டுக்கு மேல் காத்திருந்தது என்பதிலிருந்தே இதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். தெறிப்புகளாக இந்தப் படம் ஜனநாயகத்தின் முன் வலுவான கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், கதையாக அது சொல்லும் தீர்வு, இந்திய ஜனநாயகத்தைப் போல் பலவீனமானதாக இருக்கிறது.

(20, ஜூலை, 2018, இந்து தமிழ் திசை)

  •  

இரு துர்காக்கள்


நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ‘செக்ஸி துர்கா’வுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ‘எஸ் துர்கா’ எனப் பெயர் மாற்றப்பட்டுத் திரைக்கு வந்திருக்கிறது. ‘ஒழிவு திவசத்த களி’ படத்தின் மூலம் கவனம்பெற்ற சனல்குமார் சசிதரனின் அடுத்த படம் இது.
‘எஸ் துர்கா’, ஆவணப் புனைவு (Docufiction) வகையைச் சேர்ந்த திரைப்படம். அதாவது ஒரு கதையைச் சொல்வதன் வழி ஒன்றை ஆவணப்படுத்தல் எனச் சொல்லலாம். ஒரு கதையின் வழி துட்டி வீட்டை ஆவணப்படுத்திய விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மலையாளத்தில் டாக்டர் பிஜூவின் ‘வலிய சிறகுள்ள பட்சிகள்’ உள்ளிட்ட பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
இந்தப் படம், கேரளத்தின் பிரசித்திபெற்ற அம்மன் வழிபாட்டுச் சடங்கான கருடன் தூக்கத்தை ஆவணப்படுத்துகிறது. கேரளத்தின் நெடுஞ்சாலையில் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை இன்னொரு பக்கமாகத் தொகுத்துள்ளது. இந்த இரண்டு காட்சிகளும் அடுத்தடுத்த அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
படத்தின் மையக் கதாபாத்திரமான துர்காவும் கபீரும் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் நிற்கிறார்கள். சாலையில் வேகமாக நடந்துகொண்டே வாகனங்களுக்குக் கைகாட்டிக்கொண்டு நடக்கிறார்கள். ஒரு வாகனம் நிற்கிறது. அது ஒரு ஆம்னி வேன். அதற்குள் இளைஞர்கள் இருவர். இந்தப் பயணம்தான் படம்.
துர்கா, கபீர், ஆம்னியில் ஏறிக்கொள்ளும் மேலும் இளைஞர்கள் இருவர், துர்க்கை ஆகிய இவர்கள்தாம் படத்தின் மையக் கதாபாத்திரங்கள். இவர்கள் அல்லாமல் வெள்ளைச்சட்டைக்காரர்கள் இருவர், போலீஸ்காரர் மூவர், வாகன ஓட்டி ஆகியோர் வந்துசெல்கின்றனர். இந்தக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை அமானுஷ்யமானவை. த்ரில்லர் படத்தின் கொலைகாரனைப்போல், பக்திப் படத்தின் தெய்வத்தைப் போல் சட்டென்று இதில் அவதரிக்கின்றன. பின்னணியைச் சொல்லாமல் கதையிலிருந்து மறைந்தும் போகின்றன. துர்கா, கபீர் உள்பட இந்தக் கதாபாத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன, என்ன செய்கின்றன, என்ன செய்யப் போகின்றன எல்லாமும் அமானுஷ்யம்தான். இது பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சமாகப் படத்தில் வெளிப்பட்டுள்ளது.
துர்கா என்ற மையப் பாத்திரம் வட இந்தியாவைச் சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருப்பது படத்துக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. துர்கா உணரும் அந்நியத்தன்மை அவளது பதற்றம் ஆகிறது. அது பார்வையாளர்களின் பதற்றமாகவும் மாறுகிறது.
சனல் குமார் சசிதரன்

படத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஒரு கதையைப் படிக்கக்கூடிய அனுபவம்போல் இருக்கிறது. நெடுஞ்சாலையில் துர்காவும் கபீரும் நடந்துசெல்லும்போது கேமரா சாலையில் ஒரு பக்கமாகப் பின்தொடர்கிறது. இது பார்வையாளர் சாலையில் நின்று இந்தக் காட்சியைப் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. ஆம்னி வேனுக்கும் இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வேனிலிருந்து இறங்கி, நடுச்சாலையில் கபீரும் துர்காவும் ஓடும் காட்சிகளில்செயற்கை விளக்குகள் உபயோகிக்கவில்லை. அதனால் பார்வையாளர்களுக்கு சப்தம் மட்டும் கேட்கிறது. அது தரும் பதற்றம் கூடுதலாக இருக்கிறது. இந்த ஒளிப்பதிவுக்காக ரஷ்யாவில் தர்க்கோவெஸ்கி சர்வத் தேசத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை இதன் ஒளிப்பதிவாளர் பிரதாப் ஜோசப் பெற்றிருக்கிறார்.
நெதர்லாந்து, அர்மெனியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட 50 சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
நெடுஞ்சாலையில் மக்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். ஒரு காட்சியில் தனியாக நெடுஞ்சாலையில் நடப்பவர்களைத் தடுத்து கேள்வியாகக் கேட்கிறார்கள் வெள்ளைச்சட்டைகாரர்கள் இருவர்.
துர்கா, கபீரின் சப்தம் கேட்டு விளக்கிட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பார்க்கும் ஒரு வயதான தம்பதியினர், கொட்டாவியுடன் மீண்டும் தூக்கத்துக்குத் திரும்புகிறார்கள். இந்தக் காட்சிகள் வழியே ஜனநாயக அமைப்பின் காவலர்கள், கலாச்சாரக் காவலர்கள், மிஸ்டர் பொதுஜனம் என சமூகத்தின் எல்லா அவலங்களையும் வசனமில்லாமல் படம் விமர்சிக்கிறது.
இருக்கும் வசனங்களும் யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளன. கதையில்லாத படம் எனச் சொல்லப்படும் இதற்கு முடிவும் இல்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சினிமா முடிந்த பிறகும் துர்கா ஆம்னியில் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
ஒரு துர்கா நள்ளிரவில் துணிச்சலான ஒரு சாகசப் பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்க, இன்னொரு துர்கா, கடவுளாக வலம்போக அலங்காரம்செய்துகொண்டிருக்கிறாள். பயபக்தியுடன் ஆண்கள் நூற்றுக்கணக்கானோர் நேர்த்திக் கடனுக்காக தங்கள் உடல்களை ஊசியால் துளைத்துச் சன்னதம் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் நெடுஞ்சாலைத் துர்க்கையை ஆண்கள் ‘செக்ஸியாக’ பார்த்துக் கடக்கிறார்கள்.
இந்த இரு துர்க்கைகளையும் ஆண் சமூகம் எதிர்கொள்வதில் உள்ள வேறுபாட்டைத் தான் ‘எஸ் துர்கா’ சித்திரிக்க முயன்றுள்ளது. அதில் அபூர்வமான வெற்றியையும் பெற்றுள்ளது.
(30, மார்ச், 2018, தி இந்து)

  •  

ஜீவநதியின் சங்கடங்கள்

ரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான மலையாள சினிமாவின் புதிய அலை இயக்குநர்களுள் ஒருவர் ஆஷிக் அபு. சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘மாயாநதி’.
22 ஃபிமேல் கோட்டயம், சால்ட் அண்ட் பெப்பர், இடுக்கி கோல்டு, டா தடியா என ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்களை எடுத்த ஆஷிக், இதில் காதலை மையமாக வைத்துள்ளார். ஆனால் இது ‘பிரேமம்’ போன்ற பைங்கிளிக் காதல் அல்ல. கல்லூரிக் காதல் முறிவுக்குப் பிறகு பிழைப்புக்கான தேடலிலிருக்கும் இருவரிடையே மீண்டும் துளிர்க்கும் காதலின் கதை. இந்தக் காதலின் வழியாகச் சமகால அரசியலையும் ஒரு சாரமாக எடுத்துள்ளது படம்.
கங்கை போன்ற ஒரு ஜீவநதி, நம்பிக்கைகளால், சமகால அரசியலால் பாதிக்கப்படுவதைப் போல் வாழ்க்கை என்னும் ஜீவநதியும் புறக் காரணங்களால் பாதிக்கப்படுகிறது. அந்தச் சங்கடங்களைச் சொல்லும் படம் இது. மாத்தா-அபர்ணா ஆகிய இரு பாத்திரங்களைச் சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. ‘ஒரு மெக்சிகன் அபாரத’ மூலம் நட்சத்திர அந்தஸ்துபெற்ற டொவினோ தோமஸ், ஐஸ்வர்யா லெக்ஸ்மி ஆகிய இருவரும் மாத்தா, அபர்ணாவாக நடித்துள்ளனர். ஐஸ்வர்யா, ‘ஞண்டுகளுட நாட்டில் ஒரிட வேள’ படத்தில் நிவின் பாலிக்கு இணையாகச் சில காட்சிகளில் நடித்தவர்.
கொடைக்கானலில் மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையுடன் படம் தொடங்குகிறது. ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான இந்தத் தொடக்கக் காட்சி ஆஷிக்கின் திரைமொழியிலிருந்து வேறுபட்டது. அந்த மதுரை கும்பலில் ஒருவர் மாத்தா. மதுரையில் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், அந்தக் கல்லூரியில் மலையாளி மாணவர்களுக்குச் சீட்டு வாங்கித் தரும் தரகராகவும் இருந்தவர்.
ஆஷிக் அபு
கொடைக்கானல் சம்பவத்தின் விசாரணையாகப் படம் விரிவுகொள்கிறது. இந்த இடத்தில் ஒரு சாதாரண த்ரில்லர் படத்துக்கான தோற்றம் வந்துவிடுகிறது. இதைத் தவிர்ப்பதுபோல விசாரணையை விட்டுவிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான உளவியலை வசனங்கள் மூலம் சித்திரிக்கிறது படம். இந்தக் கதையை ஷியாம் புஸ்கரனும் திலீஷ் நாயரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள்.
மதுரையிலிருந்து கொச்சிக்கு நகரும் கதை, மாத்தா - அபர்ணா காதலின் நினைவுக்காக மீண்டும் மதுரை வருகிறது. இந்தக் காட்சிகள் வழியாக மதுரையின், தனுஷ்கோடியின் தனித்துவமான நிறங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டு நகரமொன்றை அழகாகச் சித்திரித்த மலையாளப் படம் இது எனலாம்.
சத்யன் அந்திக்காடு, சிபிமலயில், அரவிந்தன், லோஹிததாஸ் போன்ற மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களே தமிழ்க் கதாபாத்திரங்களை இயல்பாகச் சித்திரிப்பதில் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். அந்த விதத்தில் ஆஷிக் இதில் வெற்றிபெற்றிருக்கிறார். விசாரணை அதிகாரியாகத் தமிழ் நடிகர் இளவரசு இயல்பாக நடித்துள்ளார்.
வன்முறையும் காதலும் இரவுக் காட்சிகள் வழியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொச்சியில் நடக்கும் பகல் காட்சிகளில் மாத்தா பூனையைப் போல் ஒளிந்துகொள்கிறார். அபர்ணா பிழைப்பு தேடுகிறார். இரவில் இருவரும் காதல் மனநிலைக்குத் திரும்புகிறார்கள். சமயங்களில் அகன்று நடக்கிறார்கள். மெட்ரோ ஓடத் தொடங்கியிருக்கும் கொச்சி நகர இரவு வழியாக அதன் சமகால வாழ்க்கையையும் சொல்லியிருக்கிறார் ஆஷிக்.
மாத்தா-அபர்ணாவின் கடந்த காலத்தைத் திறந்து காண்பித்த பிறகான சில காட்சிகளில் சினிமா அயர்ச்சியடைந்து விடுகிறது. விறுவிறுப்பைத் தவிர்ப்பதற்கென்ற திட்டமிடலாக இருக்கலாம். அதுபோல் தமிழக-கேரள எல்லையின் காட்டுக்குள் முடிந்துவிடும் படத்தை மீண்டும் கொச்சிவரை இழுத்துச் சென்றிருப்பது இயல்பாக இல்லை.
அவ்வளவு நெருக்கத்திலிருந்தும் அகன்றிருக்கும் காதலியாக அபர்ணா இருக்கிறார். தந்தை இறப்புக்குப் பிறகு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பிலிருக்கும் அவர், சினிமா நடிகை ஆக முயன்றுவருகிறார். ஒரு குடும்பத் தற்கொலையிலிருந்து தப்பி, அபர்ணாவே வாழ்க்கை எனச் சுற்றி சுற்றி வருகிறார் மாத்தா. இருவரையும் பின்தொடர்ந்து வருகிறது இளவரசு குழு. இளவரசு மனைவியால் ஏமாற்றப்பட்டவர். அவரது குழுவில் ஒருவர் புது மாப்பிள்ளை. நூல்கண்டின் விடுவிக்கமுடியாத சிக்கலைப் போன்ற இந்த முரண்பாடுகள் மூலம் வாழ்க்கை நதியின் விசித்திரங்களைச் சொல்கிறது இந்தப் படம்.

  •