Reading view

நவோதயா உண்மைகள்

நவோதயா பள்ளிகளை தமிழக அரசியல் கட்சிகள் தடுத்து வருவதாகவும், அதனால் தமிழகத்தின் அனைத்து பள்ளிக்குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்காமல் தடுக்கப்படுவதாகவும் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்ன என்று பார்ப்போமா?

நவோதயா பள்ளி ஆரம்பிக்க மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தையும் கொடுத்து, பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்காலிக இட வசதியையும் செய்து கொடுக்க வேண்டும்.

ஏன்… அந்த பணத்தில் தமிழக அரசுக்கு பள்ளிக்கூடம் கட்டி நடத்த தெரியாதா?

நவோதயா பள்ளி 6ஆம் வகுப்பில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அங்கு 6ஆம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்!

நுழைவுத்தேர்வு வைத்து 0.1% மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, மீதி 99.9% எப்படியாவது போகட்டும் என்று இருப்பது மத்திய அரசு மாடல். 

கையில் இருக்கும் நிதியை வைத்து முடிந்த அளவுக்கு எல்லோருக்கும் சமமான கல்வியை கொடுக்க முயற்சி செய்வது தமிழக மாடல். 

சென்ற ஆண்டு நவோதய பள்ளியின் 6ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் 19 இலட்சத்து 94 ஆயிரம்.

அதில் தேர்வானவர்கள் வெறும் 46 ஆயிரம்! நவோதயா வலைத்தளத்தில் இந்த தகவல் இருக்கிறது https://navodaya.gov.in/nvs/en/Admission-JNVST/JNVST-Result-Statistics/

அப்ப தேர்வாகாத மாணவர்கள் கதி? அவர்களுக்கு உங்கள் “தரமான” கல்வி திட்டத்தில் இடமில்லையா?

நவோதயா பள்ளியின் வலைத்தளத்தில் இருக்கும் இந்த வரியை பாருங்கள்.

“…to select 80 most meritorious students for each JNV…”

ஒரு மாவட்டத்துக்கு 80 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படும்! மீதி மாணவர்கள் தரமான கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்று அவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போதே தரம் பிரிக்கப்படுவார்கள்!

தமிழ்நாட்டுல இப்ப என்ன 38 மாவட்டமா? அப்ப தமிழ்நாடு முழுக்க மொத்தம் 3040 மாணவர்களுக்கு மட்டுமே! 

தமிழநாட்டில் சென்ற ஆண்டு +2 தேர்வு எழுதியவர்கள் 8.5 இலட்சம்! இவர்கள் வெறும் 3 ஆயிரம் பேருக்காக ஒரு பள்ளி நடத்தி தமிழ்நாட்டு கல்வித்தரத்தையே உயர்த்த போகிறார்களாம்! அதற்கு தமிழக அரசு நிலம் கொடுக்காததால்தான் எல்லாம் கெட்டுப் போய்விட்டதாம்!

நவோதயாவை அனுமதித்த பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? 4ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கோச்சிங் என்ற பெயரில் தினம் வதைக்கப்படும் அவலம் நடக்கிறது.  


சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இவர்கள் என்று குழந்தைகள் படங்களை போட்டு கல்வி வியாபாரம் நடக்கிறது 

கிராமப்புற மாணவர்களுக்காக நவோதயா பள்ளிகள் நடத்தப்படுகிறது என்று கதை விடுவார்கள். எந்த கிராமத்தில் இப்படி கோச்சிங் செண்டர்கள் நடக்கிறது? 

இந்த நுழைவுத்தேர்வில் யார் வெல்வார்கள்? கோச்சிங் செண்டர்களுக்கு பணம் செலவழித்து தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பவர்கள் வெல்வார்கள். ஏழைகள் இந்த போட்டியில் ஜெயிக்க முடியுமா?

தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு நடக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். தனியார் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் நடக்கவில்லை. ஆனால் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள், நமது வரிப்பணத்தில் நடக்கிறது.

மாநில அரசு நடத்தும் எந்த பள்ளியிலாவது சேர நுழைவுத்தேர்வு இருக்கிறதா? இருக்காது! ஏனென்றால் பள்ளிக்கல்வி என்பது உரிமை! அதை மறுக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் இங்கே பகிரங்கமாக மத்திய அரசு அடிப்படை பள்ளிக்கல்வியை வழங்க மாணவர்களை முளையிலேயே தரம் பிரிக்கிறது.

நாம் 800 மாணவர்களின் கல்விக்காக செலவு செய்யும் நிதியை, நம்மிடம் இருந்து மத்திய அரசு பிடுங்கி “நாங்கள் 80 மாணவர்களுக்கு மட்டும் தரமான கல்வியை அளிக்கிறோம்” என்கிறார்கள். எது சரியான மாடல்? இருக்கிற நிதியை 800 மாணவர்களின் கல்விக்காக சரி சமமாக பகிர்ந்தளிப்பதா? அல்லது அதில் 80 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அனைத்து நிதியையும் அவர்களுக்காக மட்டுமே செலவு செய்வதா?


PDF வடிவில் தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1SayKod_yBnFXH3Rrcha4MH5JQgz7bGGm/view?usp=sharing

  •