Reading view

கட்டக்கால் : தவளைக்கல் அதிர்வுகள்

ரு நல்ல சிறுகதையை எழுதி முடித்தப்பிறகு மனதிற்குள் எழும் உணர்வு என்பது எழுதும் எவருக்கும் மிக மிக அலாதியான ஒன்று. ஆம். ஆதி இல்லாத, முடிவிலி மகிழ்வுணர்வது. அப்படியான ஒரு சிறுகதை, ‘தொக்கம்’. தொகுப்பின் முதல் கதை. சதிஷ் கிராவின் முதல் சிறுகதையும் இதுதான் என்று நினைக்கிறேன். அந்த உந்துதல் கொடுத்த நம்பிக்கையே இந்தத் தொகுப்பு எனலாம்.

வெவ்வேறு காரணங்களால், தொடர்புகளால் பேசப்படும் அல்லது பேசுபொருளாக ஆக்கப்படும் தொகுப்புகளைக் காலம் அவ்வந்த பொழுதுகளோட கழித்துவிடும். மாறாக, முதல் தொகுப்பு நன்றாக அமைந்து, கவனத்தைப் பெற்றுத் தருவது என்பது மிக அரிதாக நிகழ்வது. அவை தம்மைத்தாமே தகவமைத்துக் கொள்ளும். அப்படியான, கவனத்தை ஈர்த்த தொகுப்பு, சதிஷ் கிராவின் முதல் தொகுப்பாக வந்திருக்கும் இந்த ‘கட்டக்கால்’.

ஏழு வெவ்வேறு சிறுகதைக் களங்கள். ஒரே தாளலயக் கட்டமைப்பு என வந்திருக்கும் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் அதன் நேர்த்தியான வடிவமைப்பில் இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறது.

சடங்குகளை நகைப்போடு சாடுதல், மூடநம்பிக்கைகளை உதறுதல் போன்றவை நிகழ்ந்துகொள்ளும் கதைகளாக அதன்போக்கில் அமைந்தது பிடித்திருந்தது. ஏனெனில் பெரும்பாலும் இப்படியான கதைகளைச் செய்துவிடுவர் சிலர். அப்படிச் ‘செய்தல்’ என்பது கலையாக நிற்காது. இத்தொகுப்பில் வந்த கதைகள் எல்லாமும் இயல்பில் ஆகி வந்தவையே. ‘மோட்சம்’, ’புனர்வாழ்வு’ ஆகியவற்றை சிலகாலங்கள் கழித்து இதே சதிஷ் கிரா இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக எழுதக்கூடும்.

துரை வட்டாரத்தில தொக்கம் எடுப்பது என்பது ‘வயிற்றில் அடைபட்டுக் குடலோடு ஒட்டிக்கொண்ட திண்பண்டத்தைத் தட்டித் தட்டி எடுத்துவிடுவது ‘ எனும் நிகழ்விற்கு சொல்லும் பெயர். என்னுடைய ’உயிருதிர் காலம்’ சிறுகதையில் ஒரு வரியில் இது கடக்கும் என்று நினைவு. ’கட்டக்கால்’ தொகுப்பின் முதல்கதை ‘தொக்கம்’ வேறு ஒன்றை, வேறு பொருளை முன் நிறுத்துகிறது. எழுத்தாளர் எடுத்துக்கொண்டத் தன் ஊரின் களம் என்பதில் இந்தத் தொக்கம் சொல் பயன்பாடாக வரும் நிகழ்வு என்பது ‘வசிய மருந்து’ வைக்கப்பட்ட ஒருவனுக்கு அதை எடுத்து விடுவதான பொருளில் வருகிறது. இப்படி ஒவ்வொரு இடத்திற்கும், களத்திற்குமான வட்டாரமொழி என்பது வெவ்வேறு கோணங்களில், பொருட்களில் கையாளப்படுவதும், குறிப்பாக நாற்பது ஐம்பது மைல் தொலைவுகளுக்கு இடையிலேயே இம்மாதிரியான பாரிய வேறுபாடுகளைக் கொண்டு இயங்கும் சொற்களாக இருக்கின்றன. இப்படியான கதைகளால் மட்டுமே வெவ்வேறு மனிதர்களோடு பயணப்பட்டு சிறு வியப்பையும் வெவ்வேறு வட்டார வாழ்வியலையும் நமக்கு அரியத் தருகின்றன. அதனால்தான் நல்ல சிறுகதைகள் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன. உலகின் எம் மூலையிலோ அமர்ந்து எவ்வாழ்வையோ எழுதிய ‘ஆண்டன் செக்காவை’ இந்த மூலையில், இந்தியாவில், தமிழகத்தில் என இண்டு இடுக்கில் வசிக்கும் இலக்கிய மனங்கள் வாசிப்பில் வைத்துக் கொண்டாடுகின்றன. வாழ்வியல் ஒப்பீடுகள், நிகழ்வுகளின் நிமித்தம் எழும் தரிசனங்கள் ஒருபோதும் சிறுகதை வாசிப்பாளர்களை சலிப்படையச் செய்வதில்லை. ’கட்டக்கால்’ தொகுப்பின் எக்கதையும் சலிப்படையச் செய்யவில்லை.

தொகுப்பின் முதல் மற்றும் இறுதிக் கதைகள் ஒருவித கச்சிதத்தன்மையோடு அமைந்து கொண்டுவிட்டபடியால், தொகுப்பைப் படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு ஏற்படுகிறது. பல்வேறு படிமங்கள், நிகழ்வுகள், குறியீடுகள் என மனதில் எழுந்து மடிகின்றன. மீண்டும் எழுகின்றன. 

ஒரு வெய்யில் நேரத்து மதியப்பொழுதில் சலனமற்று இருக்கும் குளத்தின் மீது வெகு நேர்த்தியாக வீசப்படும் தவளைக் கல், தத்தித்தாவி ஏற்படுத்தும் அரைவட்டதிர்வுகள் அடங்க சற்று நேரம் பிடிக்கும். ‘கட்டக்கால்’ தொகுப்பும் அப்படியான ஒன்று. 

திகைந்து வந்திருக்கிறது முதல் தொகுப்பு, வாழ்த்துகள் எழுத்தாளர், சதிஷ் கிரா. 

சால்ட் பதிப்பகம்.

ரூ.170/

  •  

மொழியின் பொலிவு : ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’.

யாயும் ஞாயும்’ என குறுந்தொகையில் ஆரம்பித்து, ‘நற்றாய் கூற்றுகள் வழி தாய்மையின் பதற்றங்கள், தவிப்புகள் கடந்து, அம்மா என்றழைக்காத பாடல் திரையிசை வரை ‘அம்மாக்களால்’ ஆனது இலக்கிய மற்றும் அன்றாடமும் ஆன உலகம். தீரத்தீர அம்மாவையும் தாய்மையையும் தொடர்ந்து புனிதப்படுத்தி,வியந்தோதியபிறகும், அவளின் அன்பைப்போலவே அவ்வுணர்வு உலகம் உயிர்த்திருக்கும்வரை உயிர்ப்புடன் தான் இருக்கும். அப்படியான ஓர் உயிர்ப்பு, இத்தொகுப்பு, ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’.

இதுவரையிலான நாம் பார்த்த அம்மா, மென்மையன்புக்கவிதைகளை, அல்ல இப்படியும் என்று தலைகீழாக்கிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் கதிர்பாரதி. அதனால்தான் முதலில் 60 என இறுதிக் கவிதையில் இருந்து நகர்கின்றன, பக்கங்களும் படிமங்களும் நம் எண்ணங்களும். சர்ப்பத் தீண்டலில் சரசரவென கீழிறங்குவது போல் அறுபதிலிருந்து ஒன்றுக்கும் பின்னர் ஏணி ஏற்றம் போல் ஒன்றிலிருந்து அறுபதுக்குமாக இத்தொகுப்பு ஓரு பரமபத ஆட்டம்.

 சமீபத்திய நிகழ்வொன்றில் எழுத்தாளார் பா.வெ சொன்னது “கவிதைகள் நிகழ்வுகளில் அல்லாமல் நிச்சலனத்தில் இருந்து எழுந்தவையாக இருந்தன”. மிகப்பிரமாதமான அவதானிப்பு. கதிர்பாரதியின் கவிதைகளில் நிச்சலனம் என்பது படித்து முடித்த பிறகு ஏற்படும் ஒன்றாக, மனம் கனக்கச் செய்யும் ஒன்றாக நிகழ்ந்திருக்கிறது. சொற்களால் ஆனது கவிதை என்றிருந்த பொழுதில், அப்படி அல்ல, கருவில், பாடுபொருளில், நிலத்தில், நிஜத்தில் பட்டுத் தெறித்து எதிர்வெயில் மினுங்க பொலியும் கடல்போல் ஆனது என கவிதைகளோடு வந்தவர்தான் கதிர்பாரதி. ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தொகுப்பில் இப்பொலிவை நீங்கள் கண்டுகொள்ளலாம் எனில் இத்தொகுப்பில் அதை துய்த்துணரலாம். 

‘/அம்மாவை நிரம்பப் பிடித்த 

அப்பத்தா சொன்ன சித்திரம் இது’/

மொத்தத் தொகுப்பின் அச்சு இந்தச் சித்திரத்தில் செழுமைகொண்டு சுழல்கிறது, எனக்கு. இன்னதுதான் தாய்மைக்கான கவிதை பாடுபொருள் என்பதையெல்லாம் உதறிவிட்டு, நினைவில் இருக்கும் யாவையும் கச்சிதமான மொழியில் கவிதைகளாக்கிய விதம், மிகப்பிடித்தது. கச்சாப்பொருட்களை எந்த அலங்கரா ஆபரணங்களும் அல்லாமல் குவித்து வைத்தது போல் இருந்தது என்றும் சொல்லலாம். 

தொகுப்பு முழுக்கச் சொற்களின் லாகவம் அறுபதிலிருந்து ஒன்று, மீண்டும் ஒன்றிலிருந்து அறுபது எனப் பயணப்பட வைக்கிறது. 

அந்தி வேறு /அவளைப்போல் பற்றி எரிகிறது/

இப்படிப் பதறிப்பதறி பக்கங்களைத் திருப்பினால், இவ்வரிகள் பதற்றம் போக்கி மனதைத் தண் என்றாக்கியது

/அப்போது

அவள் பொன்மூக்குத்தி

வேப்பம் பூவாக மினுக்கம் காட்டியது/

மிகச்சிறிய தொகுப்பு, வெகுநாட்களுக்குத் தன்னுள் வைத்துக்கொள்ளும், காலம்.

நீங்கள் அம்மாவோடு வசிப்பவர்கள் எனில் தொகுப்பைப் படித்து முடித்ததும் ஏதேனும் பேசவேண்டும் என்ற உந்துதலில் அவர் முன் போய் நிற்பீர்கள், சொற்கள் தொலைத்திருப்பீர்கள். அம்மா ஊரில் இருக்கிறார் எனில் பேருந்தேறி ஊருக்கு விரையலாம், நிற்க,

அம்மா நினைவுகளில் மட்டும் இருக்கிறார் எனில், இத்தொகுப்பு அவரை சற்று நேரம் ரத்தமும் சதையுமாய் உங்களருகில் வலம்வரச் செய்யக்கூடும். 

கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘முகவீதி’ (தமிழினி) தொகுப்பு தான் இதுவரை நான் பெரும்பாலும் நண்பர்களுக்குப் பரிசாக கொடுத்தப் புத்தகம். இனி இந்த ‘ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’ புத்தகமும் அதில் சேர்ந்து கொள்ளும். 

இத்தொகுப்பும் கதிர்பாரதியின் முந்தைய தொகுப்புகளைப் போலவே, நிறைய விருதுகளைப் பெற்றுத்தரும். அதற்கான தகுதியோடு வந்திருக்கும் கச்சிதமான தொகுப்பு இது.

நண்ப,கதிர்பாரதி. பொலிந்து திகழ்ந்திருக்கிறது உங்கள் மொழி. வாழ்க.

நாதன் பதிப்பக வெளியீடு

விலை- ₹100

  •