Reading view

சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்

Pa Raghavan

தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.

முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.

முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.

திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!

வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.

அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.

இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.

ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!

சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

கதிரவன் ரத்தினவேல்

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)

குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”

மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.

ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.

செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.

இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?

சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?

இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!

குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.

ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.

பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.

மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!

ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!

இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.

முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.

நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்

இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.

சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.

சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.

அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.

சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்

என்னை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்;பயந்தவாறே அவனை விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.கதவு வழியாக உற்றுக் கேட்ட போது குளியலறைச் சுவர்களில் கடற்கன்னியின் நீச்சலால் எழுந்த நீர்த்தெறிப்போசையின் எதிரொலி மட்டுமே காதில் விழுந்தது.எனோமோட்டோ எந்த சப்தங்களையுமே எழுப்பவில்லையென்றாலூம் கூட அவனுடைய இருப்பு எனது குடியிருப்பு முழுவதும் கனமாகப் படர்ந்திருந்தது.இரண்டு மணி நேரங்கள், மூன்று மணி நேரங்கள் கடந்தன, எனோமோட்டோ வெளிவரவேயில்லை
  •  

குறிப்புகளைப் பற்றிய ஒரு குறிப்பு

Pa Raghavan

கையால் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் என் கையெழுத்து நன்றாக இருந்தது. எவருக்கும் புரியும்படி இருந்தது. குறிப்பாக, பவுண்டன் பேனாக்களைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே அச்செழுத்தைப் போலவே இருக்கும். பார்க்கர், பைலட் பேனாக்கள், எழுதுபவனின் கையெழுத்தை மெருகூட்டுவதற்கென்றே உருவாக்கப்படுபவை என்று தோன்றும்.

என் கையெழுத்து கெடத் தொடங்கிய புள்ளி, பால்பாயிண்ட் பேனாக்களில் எழுத ஆரம்பித்ததுதான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறிய பின்பு, கையால் எழுதுவது அறவே நின்று போனது. எப்போதாவது எழுத நேரும்போதுதான் அது கெடத் தொடங்கியிருக்கிறது என்பது உறைக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் கையால் எதற்கு எழுதப் போகிறோம் என்கிற அலட்சியம். அப்படியே விட்டுவிட்டதால் அது தன் இஷ்டத்துக்கு மோசமாகிப் போனது.

சென்ற மாதம் ஆன்லைன் கீதை வகுப்பு ஒன்றனில் சேர்ந்தேன். பதினெட்டு நாள் வகுப்பு. வகுப்பு நடத்தியவர் நல்ல ஞானஸ்தர். பேசும்போதே பத்தி பிரித்துத் தெளிவாகப் பேசுபவராக இருந்தார். கீதையை நான் அணுகும் விதமும் அவர் அணுகிய விதமும் முற்றிலும் வேறு வேறாக இருப்பினும் புதிதாகச் சில தரிசனங்கள் அந்த வகுப்பில் எனக்குக் கிடைத்தன.

விஷயம் அதுவல்ல. அந்த வகுப்பில் கலந்துகொண்ட பதினெட்டு நாள்களும் தவறாமல் அவர் பேசும்போது குறிப்பெடுத்தேன். அவர் என்னவோ நிறுத்தி நிதானமாகத்தான் ஒவ்வொரு சுலோகத்தையும் விளக்கினார். ஆயினும் என்னையறியாமல் கிறுக்கித் தள்ளித்தான் எழுதிக்கொண்டேன். மொத்த வகுப்புகளும் முடிந்த பின்னர் அந்த நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எனக்கே என் கையெழுத்து அவமானமாக இருந்தது. ஒரு அவசர ஆத்திரத்துக்குக் கூட இன்னொருவரிடம் எடுத்துக் காட்ட முடியாது என்று தோன்றியது. நல்ல வேளையாக நான் எழுதுவது எனக்கே புரியாமல் போவதில்லை. அதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன்.

ஒருவரது கையெழுத்து அவரது குணத்தை வெளிக்காட்டும் என்பதை நான் நம்பவில்லை. மிக அழகான கையெழுத்தைக் கொண்ட மிக மோசமான மனிதர்களை நான் அறிவேன். அதைப் போலவே மிக மோசமான கையெழுத்துடைய நல்லவர்களையும் அறிவேன். ஆனால், என் கையெழுத்தைக் கொண்டு என்னால் அறிய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். பழக்கம் விட்டுப் போனால் எதுவானாலும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

கடிதங்கள் வழக்கில் இருந்த காலத்தில் கையெழுத்து, பேசுபொருளாக இருந்தது. இன்று அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மிகவும் மோசமாக எழுதப்படும் கையெழுத்து மட்டும் எப்போதாவது சுட்டிக்காட்டப்படுகிறது. சமீபத்தில் சலம் நாவல் பிரதியில் வாசகர் ஒருவருக்கு ‘அன்புடன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்த லட்சணத்தைச் சுட்டிக்காட்டி நண்பர் ரமேஷ் வைத்யா ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்திருந்தார். சிறிது வெட்கமாக இருந்தது.

சில சமயம் தோன்றும். முயற்சி செய்தால் முடியாத செயல் என்ற ஒன்றில்லை. ஆனால் முழு மூச்சாக இறங்க வேண்டும். அப்படிச் சாதித்தவை பல உண்டு. கணிசமான நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயங்களை இப்போதெல்லாம் இது நமக்குத் தேவையா, எடுப்பதா வேண்டாமா என்று தீரப் பரிசீலிக்காமல் கை வைப்பதில்லை. எத்தனை மூட்டைகளைத்தான் முதுகில் ஏற்றிக்கொண்டே போவது?

கையெழுத்து சார்ந்து எனக்குள்ள கவலையெல்லாம் ஒன்றுதான். இப்போது நேரம் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் என் மகள் அவற்றைப் படித்துப் பார்க்க நினைக்கலாம். என் கதைகள், கட்டுரைகள் என்று எதுவும் கையெழுத்துப் பிரதியாக இப்போது இல்லை. பிறர் எழுதியவை, பேசியவை, நான் படித்தவை சார்ந்து எழுதி வைத்த குறிப்புகள்தாம் உள்ளன. அவற்றை அவள் எப்போதேனும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு தரமான ‘நோட்ஸ்’ தயாரிப்பாளன். என் குறிப்புகளைக் கொண்டு மிக நிச்சயமாக அந்தக் கருப்பொருள் சார்ந்து நான் அறிந்தவற்றின் முழுமையை எட்டித் தொட்டுவிட முடியும் என்று நம்புகிறேன். அதனைப் பிடித்துக்கொண்டு இன்னும் பரந்த வெளியில் தேடிச் செல்லவும் ஆங்காங்கே வழி சொல்லியிருப்பேன்.

சலம் எழுதுவதன் பொருட்டு சுமார் இரண்டாண்டுக் காலம் அதர்வ வேதத்தையும் அதன் உபநிடதங்களையும் மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலும் அலுவலகத்திலுமாகக் கையால் எழுதிய குறிப்புகள், கணினியில் டைப் செய்து வைத்த குறிப்புகள், போனில் எழுதி வைத்த குறிப்புகள், பிடிஎஃப்பில் ஹைலைட் செய்து, கமெண்ட் பாக்ஸில் எழுதியவை, பிடிஎஃப்களிலேயே பக்கவாட்டில் ஆப்பிள் பென்சில் கொண்டு எழுதிய குறிப்புகள், தொடர்பான இணையச் சுட்டிகள் என்று அவற்றை மட்டும் தொகுத்தால் இன்னொரு சலம் அளவுக்குப் புத்தகமே தேறும்.

எக்காலத்திலாவது என் மகள் அவற்றையெல்லாம் எடுத்துப் பார்ப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில குறிப்புகள் அவளுக்குப் புரியும். பெரும்பாலும் புரியாமல் போகப் போகிறதென்பதுதான் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முழுதும் ஒரு மனிதன் அப்படி என்ன கிறுக்கித் தள்ளியிருக்கிறான் என்கிற ஆர்வத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு அந்தப் பிரதிகளைத் தனக்கடுத்த தலைமுறைக்கு அவள் விட்டுச் செல்லக்கூடும்.

அவளது ஓய்வுக் காலத்தில், அதைப் படிக்க முடியாவிட்டாலும் இந்தக் குறிப்பைப் படிப்பாள் அல்லவா? என் புத்தகங்களில் என்னையும் என் நோட்டுப் புத்தகங்களில் என் அக்கறைகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதாவது அப்போது அவளுக்குப் புரியும்.

இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள குறுகிய இடைவெளியில்தான் வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

பிரதி கர்ப்பம்

Pa Raghavan

எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.

ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.

அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.

உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.

அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.)  சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.

ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.

எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.

அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.

‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.

இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.

சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.

எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.

இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.

எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

என்றும் இருக்கும் இனம்

Pa Raghavan

உங்களுக்கு இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றலாம். தவறில்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல. முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதுவதைத் தவிர வேறெதையும் கருதாதவனுக்கு இது ஒரு சரித்திரத் தருணம். பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு பல விதங்களில் இது எனக்கு நிகழ்ந்திருக்கிறது என்றாலும் இந்தத் தருணம் முற்றிலும் வேறு விதமானது.

வாட்சப் சேனலில் மிருது என்றொரு கதையை எழுதத் தொடங்கினேன். சலம் போன்றதொரு உக்கிரமான நாவலை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வருவதன் பொருட்டு ஆரம்பித்த மிக எளிய, நகைச்சுவையுடன் கூடிய காதல் கதை. எழுதிப் பிரசுரிப்பதில் இருந்து எட்டு மணி நேரம் மட்டுமே அத்தியாயம் சேனலில் இருக்கும். அதன் பிறகு டெலிட் செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். பெரிய காரணங்கள் ஏதுமில்லை. எழுதுவதில் எனக்கு இருக்கும் கமிட்மெண்ட், படிப்பதில் வாசகருக்கு இருக்க வேண்டுமென்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.

பன்னிரண்டு அத்தியாயங்கள் அப்படித்தான் வெளியாயின. வெளியான வேகத்தில் படித்துவிட்டு வாசகர்கள் மதிப்புரைகளையும் கேலிச் சித்திரங்களையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சில நாள் பகல் பொழுதில் எழுதுவேன். சில நாள் மாலை வேளைகளில். சில நாள் இரவு. இதர வேலைகள் முடியும்போது மிருதுவை எழுதுவது என்று வைத்துக்கொண்டிருந்தேன்.

நேற்றிரவு மெட்ராஸ் பேப்பர் வெளியீடு தொடர்பான பணிகள் மிகவும் நேரம் இழுத்துவிட்டதால் மிருது அத்தியாயத்தை எழுத முடியவில்லை. ‘தாமதமாகும்; நள்ளிரவுக்குள் பிரசுரித்துவிடுவேன்’ என்று அறிவித்திருந்தேன். சொன்னபடி நள்ளிரவுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அத்தியாயத்தைப் பிரசுரித்தேன்.

அதில் சிறப்பேதுமில்லை. ஆனால், ‘நள்ளிரவு நெருங்குகிறது; அத்தியாயம் இன்னும் வரவில்லை’ என்று அதே நேரத்தில் ஒரு மின்னஞ்சல் வருகிறது. அத்தியாயம் பிரசுரமானதும், ‘அத்தியாயம் வந்துவிட்டது’ என்று அதே வாசகர் அக்னாலட்ஜ் செய்கிறார். அந்நேரத்தில் விழித்திருந்து அத்தியாயத்தைப் படித்துவிட்டு மூன்று பேர் மதிப்புரை எழுதுகிறார்கள். நான்கு மீம்கள் வருகின்றன. என்ன நடக்கிறது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

ஒரு கதை நன்றாக இருக்குமானால் எங்கிருந்தாவது எப்படியாவது வாசகர்கள் தேடி வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நள்ளிரவுப் பொழுதில் உறக்கத்தை மறந்து காத்திருந்து படித்துவிட்டுக் கையோடு கருத்தும் எழுதுவார்கள் என்பது இக்காலக்கட்டத்தின் தன்மைக்குப் பொருந்தாதது. இது நிச்சயமாகவே நான் எதிர்பாராதது. எழுதுவதில் எனக்குள்ள கமிட்மெண்ட்டைக் காட்டிலும் படிப்பதில் வாசகர்களுக்கு இருக்கும் தீவிரம் உண்மையிலேயே என்னைத் திகைப்புறச் செய்தது.

முன்னொரு காலத்தில் கல்கி பத்திரிகையில் அலை ஓசை முதல் முறை தொடராக வெளிவந்தபோது, தனது கிராமத்து மக்கள் கல்கி பார்சல் வருவதற்காக ரயிலடியில் சென்று காத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஏதோ ஓர் அத்தியாயத்தில் யாரோ ஒரு கதாபாத்திரம் இறந்துவிட்டபோது, ‘அடியே, சீதா போயிட்டாடி…!’ என்று ஒரு கையில் கல்கியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒரு பெண் வீதிக்குள் கதறியபடியே ஓடி வந்த காட்சியை அவர் விவரிக்கும்போது பேச்சு மூச்சற்றுக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்.

அது, கதைகள் கட்டி ஆண்ட காலம். இன்று அதெல்லாம் கற்பனையில் கூடச் சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. ஆனால் நமது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் திரும்பத் திரும்பப் பாடும் ‘வாசகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்’ என்னும் சோகப் பாடல் பொருளற்றது என்பதை நேற்று திடமாகக் கண்டுணர்ந்தேன். எழுதுபவனும் எழுத்தும் சரியாக இருக்குமானால் படிப்பதற்கு வாசகர்கள் எல்லா தலைமுறையிலும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களைச் சரியாகச் சென்றடைகிறோமா என்பதுதான் விஷயம்.

சலம் புத்தக ஆக்கம் முடிந்து, அச்சுக்குப் போனபின்பு, அத்தனை பெரிய நாவல், அவ்வளவு விலைகூடிய புத்தகத்தை எத்தனை பேர் உடனே வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்று சிறிது கவலைப்பட்டேன். கெட்டி அட்டைப் பதிப்பைக் குறைவாகவும் சாதாரண பதிப்பைச் சிறிது அதிகமாகவும் வெளியிட்டுப் பார்க்கலாம் என்று என் பதிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் முன்பதிவு அறிவிக்கப்பட்டபோது நடந்தது முற்றிலும் வேறு. என் கணிப்புக்கு நேர் மாறாக, விலை கூடிய கெட்டி அட்டைப் பதிப்பினைத்தான் வாசகர்கள் அதிக அளவில் விரும்பிப் பதிவு செய்திருந்தார்கள். இரு விதப் பதிப்புகளுக்கும் ஆர்டர் செய்திருந்த மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் ஆச்சரியமளித்தது. இப்போது நான் அதை வெளியிடப் போவதில்லை. புத்தகம் வெளியாகும் நாளில் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சொல்ல வந்தது இதுதான். வாசகன் இறந்துவிட்டான் என்பது இலுமினாட்டிகளின் பொய்ப் பிரசாரம். உலகுள்ள வரை அவன் இருப்பான். இனி என்றென்றும் எனக்கு இக்கவலை இராது.

நேற்றைய எனது நள்ளிரவுப் பொழுதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி செய்துவிட்ட வாசகர்கள் ரவி அர்விந்த், காந்தி பாபு, வினோத்குமார் சுப்பிரமணியன், வெங்கடேசன் சிங்கபுத்திரன், சத்தியநாராயணன் ஆகியோருக்கு என் தீரா அன்பு.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

கண்டெடுத்த வரிகள்

Pa Raghavan

ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?

எல்லா நாவல்களுக்கும் இது வரத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாது. வாசிப்பு என்னும் செயல்பாடு ஒரு கிரகத்திலும் மக்கள் இன்னொரு கிரகத்திலும் வசிக்கும் வினோதமான தீபகற்பத்தில் நாம் வாழ்வதில் உள்ள சிக்கல் இது.

கீழே உள்ள வரிகள், சலம் நாவலில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை என் பதிப்பாளர் ராம்ஜி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் ஒன்றிரண்டாகப் பிரசுரித்து வந்தார். இந்த வரிகள் இந்நாவலின் தன்மையை ஓரளவு உங்களுக்குச் சுட்டிக்காட்டலாம். ஓரளவுக்குத்தான். நாவல் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது. முன்பதிவு செய்தோர் அனைவருக்கும் அன்றே அனுப்பிவைக்கப்பட்டுவிடும். படித்தவர்கள் பேசத் தொடங்கும்போது சர்சுதி மீண்டும் ஊற்றெடுத்துப் பாயத் தொடங்கும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

இடமும் இருப்பிடமும்

Pa Raghavan

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

விழாதவன்

Pa Raghavan

சலம் வெளியீட்டு விழா எங்கே? எப்போது?

முன்பதிவு ஆரம்பமானதிலிருந்து பலபேர் தொடர்ச்சியாக இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். விழாவின்போது நேரில் சந்தித்துப் பெற விரும்புவதாகவும் சிலர் சொன்னார்கள். அனைவருடைய அன்புக்கும் என் நன்றி.

ஆனால் முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்குப் புத்தக விழாக்களில் நம்பிக்கை இல்லை. நான் வெளியீட்டுக்கு விழாவெல்லாம் வைப்பதில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு விழா நடந்தது. அது என் மனைவியின் ஏற்பாடு. அதன் பிறகு எப்போதும் விழா நடந்ததில்லை; நான் அதை விரும்புவதும் இல்லை. சம்பந்தமில்லாத யாரோ ஒரு பிரபலம் வந்து வெளியிட, இன்னொரு பிரபலம் முதல் பிரதி பெற, மூன்றாவது பிரபலம் இன்னும் நான் படிக்கவில்லை என்று ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் பேச, அதையும் கேட்டுத் தொலைக்க வாசகர்களுக்கு என்ன தலையெழுத்து?

எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் இடையில் புத்தகம் மட்டும் போதும். பிரசாரகர்கள் தேவையில்லை. ஒரு புத்தகத்துக்கு நேர்மையாகப் பிரசாரம் செய்யத் தகுதி படைத்தவர்கள் இரண்டு பேர். எழுதியவரும் வெளியிட்டவரும். மூன்றாம் தரப்பென்பது எப்போதும் இடைஞ்சலே. நான் இங்கே எழுதுகிறேன். ராம்ஜி தொடர்ந்து சலத்தில் அவரைக் கவர்ந்த வரிகளை அவரது பக்கத்தில் பிரசுரம் செய்து வருகிறார். போதுமே? எனவே சலத்துக்கு வெளியீட்டு விழாவெல்லாம் கிடையாது.

எப்போதும் போலப் புத்தகம் அச்சாகி வந்ததும் முன்பதிவு செய்யும் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டு அனுப்புவதற்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்வேன். என்னைப் பொறுத்தவரை விழா என்பது அதுதான். வெறும் விழா அல்ல அது. திருவிழா. எழுத்தாளனுக்கும் அவனை விரும்பும் வாசகர்களுக்கும் இடையிலுள்ள உள்ளார்ந்த உறவு நிகரற்றது. மூன்றாவது மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாததும்கூட. எனக்கு அது போதும். இன்றல்ல. என்றென்றும்.

ஒரு விழா என்பது வாசகர்களும் எழுத்தாளரும் நேரில் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பில்லையா என்று ஒருவர் கேட்டிருந்தார். அது உண்மைதான். ஆனால் என்னைச் சந்திப்பதெல்லம் ஒரு பெரிய விஷயமா? யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, நேரம் குறித்துக்கொண்டு என் அலுவலகத்துக்கு வரலாம். சந்தித்துப் பேசலாம்.

அவ்வளவு ஏன், புத்தகம் தயாரானதும் முன்பதிவு செய்திருப்போரின் பிரதிகளில் கையெழுத்திட என்றைக்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்லவிருக்கிறேன் என்பதை நிச்சயமாக இங்கே அறிவிக்கத்தான் போகிறேன். ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அன்றைக்கு அங்கே நேரில் வந்து சந்தித்துப் பெற்றுக்கொண்டால் போயிற்று.

வாசகர்களைச் சந்திக்க எப்போதும் விரும்புகிறேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கவே செய்கிறேன். ஆனால் என்றைக்குமே புத்தக வெளியீட்டு விழா மட்டும் வைக்க மாட்டேன்.

அது வெறும் நேர விரயம். சமோசா விரயம்.

நிற்க. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சலத்தின் இரு பதிப்புகளுக்கும் முன்பதிவு செய்யலாம். முப்பது சதவீதச் சலுகை விலையில் புத்தகம் உங்களை வந்தடையும். முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன். இதில் மாற்றமில்லை. முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன.

சலம் முன்பதிவுச் சுட்டிகள்:

Paperback Edition
HardCover Edition

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

சலம் முன்பதிவு ஆரம்பம்

Pa Raghavan

சலம் முன்பதிவை நேற்று தொடங்கி வைத்த வாசக நண்பர்களுக்கு நன்றி.  ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இயக்குநர் சமுத்திரக்கனி இதன் முன்பதிவுச் சுட்டிகளை வெளியிட்டு வாழ்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது.

எவ்வளவோ எழுதுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். எல்லாமே இருப்பதன் பொருட்டு நிகழ்வது. ஆனால், நாம் இருந்ததன் நியாயத்தை நமது காலத்துக்குப் பிறகு சொல்வதற்கு ஒவ்வோர் எழுத்தாளனும் ஒன்றை எதிர்பார்த்து நிச்சயமாகத் தவமிருப்பான். எனக்கு இது, அது.

ஆகக் கூடியவரை பிழையற்ற பதிப்பாக, இம்மியளவும்  நேர்த்தி குலையாத பதிப்பாக, தூக்கி வைத்துக்கொண்டு பிரித்துப் படிக்கையில் ஓரங்களில் எழுத்து ஒளிந்துகொண்டு  சிரமம் தராத பதிப்பாக, அனைத்தினும் முக்கியமாகக் கண்ணை உறுத்தாத வடிவத்தில் இது அமைவதற்கு என்னால் முடிந்த வரை முயற்சி செய்திருக்கிறேன். தயாரிப்புப் பணிகளின்போது ஜீரோ டிகிரி ஊழியர்களைக் கிட்டத்தட்ட சித்திரவதையே செய்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வருத்தமாகவும் சிறிது வெட்கமாகவும்கூட இருக்கிறது. வேறு எந்த எழுத்தாளரும் ஒரு பதிப்பாளரை இவ்வளவு இம்சிக்க இயலாது. எதற்குமே முகம் சுளிக்காமல் கேட்ட அனைத்தையும் செய்தளித்த ராம்ஜியை இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். உடன் இருந்து உதவிய வித்யா, செல்வகுமார், மகேஷ், விஜயன், ராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

ஆயிரம் ரூபாய்க்கு மேலே விலை கூடிய ஒரு நாவலை எத்தனை பேர் ஆர்வமுடன் வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்கிற – கவலையல்ல – சிறிய யோசனை நேற்று காலை வரை இருந்தது. கெட்டி அட்டைப் பதிப்பினும் வழக்கமான பதிப்பைத்தான் அதிகம் பேர் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. நேற்றிரவு ராம்ஜி அளித்த புள்ளி விவரம் வேறு விதமாக இருந்தது. நேற்று நாளெல்லாம் நண்பர்கள் முன்பதிவு செய்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் என் அன்பு.

இரண்டு வினாக்கள் நேற்று அதிகம் கேட்கப்பட்டன.

1. இந்த முப்பது சதவீத விலைக் குறைப்பு இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தானா? பிறகு இருக்காதா?

2. வெளியீட்டு விழா எப்போது, எங்கே? நேரில் சந்தித்துக் கையொப்பமுடன் பிரதியைப் பெற விரும்புகிறேன்.

இதில் முதல் வினாவுக்கு மட்டும் இப்போது பதிலளித்துவிடுகிறேன். விலைச் சலுகை இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தான். அதன் பிறகு வழக்கமான பதிப்பின் விலை ரூ. 1000 ஆக இருக்கும். கெட்டி அட்டைப் பதிப்பின் விலை ரூ. 1200. முப்பது சதவீதத் தள்ளுபடி விலை என்பது முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே.

இரண்டாவது வினாவுக்குச் சிறிது விளக்கமாக பதிலெழுத நினைக்கிறேன். எனவே தனியாக, பிறகு.

சலம் முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். சித்திரை பிறந்ததும் நூல் உங்களை வந்தடையும்.

  1. Paperback Edition
  2. HardCover Edition

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •