Reading view

கதை நிஜமான கதை

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு குட்டி நாடு.  ஏராளமான கனிமவளம் கொண்டது. அங்கு ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி.  அவருக்கு எதிரணியில் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மற்றொரு வருங்கால சர்வாதிகாரி.  அவரை ஆட்சியில் அமரவைத்து, கனிமவளங்களை மொத்தமாகச் சுரண்டத் திட்டமிடும் ஒரு பன்னாட்டு ஏகபோகநிறுவனம். தானே ஒரு ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி, தனது ஆளை ஆட்சிக்குக் கொண்டுவந்தால், காலாகாலத்தில் சுரண்டலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் அந்த நிறுவனம் ஒரு கூலி ராணுவப் படையை (mercenary army) ஏற்பாடு செய்கிறது.  கோடிக்கணக்கில் செலவு செய்து புரட்சியும் நடக்கிறது.  கூலிராணுவப்படையின் தளபதி கடைசியில்[i] இரு சர்வாதிகாரிகளையும் கொன்றுவிட்டு, சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு மிதவாத மக்கள் தலைவரை அதிபராக்கிவிடுகிறார்  .கைக்காசைச் செலவழித்த நிறுவனம் செய்வதறியாது திகைத்துநிற்க சுபம் !

      மேற்படி 10-20 வரிக்கதை மிக நுட்பமாக எழுதப்பட்ட, பிரும்மாண்டமான நாவலான ‘தி டாக்ஸ் ஆஃப் வார் ( the dogs of war) என்ற நாவலின் மிக மோசமான சுருக்கம். தி டாக்ஸ் ஆஃப் வார் என்பது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய வரி. இந்த நாவலை எழுதியவர் தனது 27ஆவது வயதில் ‘டே ஆஃப் தி ஜகால்’ என்ற நாவலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்ற ஃபிரடெரிக் ஃபார்சித்.  டே ஆஃப் தி ஜகால் எட்வர்ட் ஃபாக்சின் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் திரைப்படமாகவும் வந்து சரித்திரம் படைத்தது. மேற்படி தி டாக்ஸ் ஆஃப் வாரும்கூட ஓரளவு மூலக்கதை சிதையாது, திடைப்படமாக வந்தது.  கூலி ராணுவப்படைத் தளபதியாக கிறிஸ்டோபர் வாக்கன் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருந்தார்.

      ஃபார்சித் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் அங்குலம் அங்குலமாக நுணுக்கமாக எழுதுபவர்.  டே ஆஃப் தி ஜகாலில் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்முறை பற்றி விவரிப்பது அற்புதம்.  1970களில் அவர் சொல்லும் சட்ட ஓட்டைகளை பல வருடங்கள் ஆராய்ந்து 2003ல் தான் பிரிட்டிஷ் அரசு சரிசெய்தது.  அதுபோலவே ராஜீவ்காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மனிதவெடிகுண்டு முறை அவரது தி நெகொஷியேட்டர் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

      இந்த நாவலை எழுத ஃபிரடெரிக் ஃபார்சித் உலகெங்கும் உள்ள தலைசிறந்த கூலிராணுவப்படை தளபதிகளைச் சந்தித்து, தாம் ஒரு நாட்டில் ராணுவப் புரட்சிக்கு ஏற்பாடு செய்துவருவதாகக் கூறி, பேச்சுவார்த்தைகள் நடத்தி, விஷயங்களைச் சேகரித்தார். கூலிராணுவத்தினரைத் தொடர்ந்து கண்காணித்து வரும் சி.ஐ.ஏ, கே.ஜி.பி, மொஸாத், எம்.ஐ.6 போன்ற உளவு நிறுவனங்கள் ஃபார்சித்தை தீவிரவாதி பட்டியலில் வைத்துக் கண்காணித்தன.  தி டாக்ஸ் ஆஃப் வார் நாவல் வெளிவந்ததும், சே! இதற்குத்தானா என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. கூலிராணுவப்படையை உருவாக்கி ஒரு நாட்டில் திடீர்புரட்சியை (coup)  ஏற்படுத்துவது எப்படி ( நம் ஊர் சமையல் குறிப்பு புத்தகம் போல!) என்பதை விளக்கமாக விவரிக்கும் ஹவ் டு ஸ்டேஜ் அ மிலிட்டரி கூப் என்ற நூலின் ஆசிரியர் கென் கானர் தி டாக்ஸ் ஆஃப் வார் நாவலைத்தான் கூலிராணுவப்படைகளுக்கு பாடநூலாகப் பரிந்துரை செய்கிறார்!

      அதன்பிறகு ஃபார்சித் இரண்டாம் உலகப்போர்க்குற்ற நீதிமன்றத்திலிருந்து தப்பி தலைமறைவாக வாழும் நாஜிதளபதிகள் பற்றிய நாவலான ‘தி ஒடிஸ்ஸா ஃபைல்’, வளைகுடா போர் பற்றிய நாவலான ஃபிஸ்ட் ஆஃப் காட், சோவியத் யூனியன் சிதறுண்ட பின், அங்கு எழுந்த மாஃபியா அட்டகாசம் பற்றிய தி ஐகான், பனிப்போர் கால நாவலான தி டெவில்ஸ் ஆல்டர்னேடிவ் (பனிப்போர் காலத்திய நாவல்களில் அமெரிக்காவுடனான ஒரு சிக்கலில் ரஷ்யா ஜெயிப்பது மாதிரி முடியும் ஒரே நாவல் இதுதான்) என்று பல நாவல்கள் எழுதி ஏராளமான ரசிகர்களின் ஆதர்ச எழுத்தாளரானார்.  நம் கட்டுரை அதைப் பற்றியல்ல.

      எத்தனை நாவல் வந்தாலும் டாக்ஸ் ஆஃப் வாரின் தாக்கம் குறையவில்லை. ஒரு படைப்பாளனின் கூற்று பொய்யாகலாமா? கம்பனின் கூற்றை மெய்ப்பிக்க சரஸ்வதிதேவி கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாய் வந்த கதை போல,  தி டாக்ஸ் ஆஃப் வாரை உண்மையாக்க ஒரு பெரிய இடத்துப் பிள்ளை முடிவு செய்தார்.

      நாவலில் கூறப்படும் ஆப்பிரிக்கநாடு என்று விமர்சகர்கள் சந்தேகிக்கும் ஈக்வடோரியல் கயானா உண்மையாகவே கனிமவளம் நிறைந்த நாடு.  மேற்சொன்ன பெரிய இடத்துப் பிள்ளையின் பன்னாட்டு நிறுவனம் அதை விழுங்க ஆசை கொண்டது.  அந்தநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் ஒரு டுபாக்கூர் கம்பெனி அங்கு துவங்கப் பட்டது  கம்பெனிக்கு வந்துசெல்லும் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டன.  கூலிராணுவப்படை ஏற்பாடுகள் முடிந்தன.  திடீரென இந்தப்படை அந்தநாட்டில் நுழைந்து, அதிபரைக் கொன்று, கம்பெனிக்கு வேண்டப்பட்ட பொம்மையை அதிபர் நாற்காலியில் உட்கார்த்திவிட்டால், நாடே கம்பெனி கையில் ! கம்பெனி நாள் நட்சத்திரம் பார்த்துக் குறித்த சுபயோக சுபதினத்தில் 64 கூலிராணுவப்படையினர் ஜிம்பாப்வேயின் ஹாராரே விமானநிலையத்தில் விமானத்தில் ஏறியபோதே, எப்படியோ விஷயம் கசிந்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, ஈக்வடோரியல் கயானா ஆகிய மூன்று நாடுகளின் உளவு மற்றும் கமாண்டோ கூட்டுப்படை 64 பேரையும் சிறு சிராய்ப்புகூட இல்லாமல் கைது செய்தது.

கூலிப்படையினருக்கு தலா ஆயிரம் டாலர்கள்தான் கூலி பேசியிருந்தார்களாம்.  வேலை முடிந்து புதுஅதிபர் வந்ததும் அவரது மெய்க்காவலாளர் பதவி – மாதம் 10000 டாலர் சம்பளம் என்று ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.  கடைசியில் எல்லோரும் சிறையில்.  விசாரணையில் கூலிப்படையின் தளபதி சைமன் மான் தங்களை வேலைக்கு அமர்த்தியவர் பெயரைச் சொன்னதும் ஆப்ரிக்கக்கண்டமே அதிர்ந்தது.  தென் ஆப்ரிக்காவில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரையும் கைது செய்து இழுத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். வழக்கின் முடிவில் கூலிப்படையின் தலைவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை. மற்றவர்களுக்கு ஓராண்டு சிறைவாசம்.  ஏற்பாடு செய்தவரின் அம்மா உலகளாவிய செல்வாக்கு உடையவர். அவர் தலையீட்டால் பிள்ளைக்கு 30 லட்சம் ராண்ட் அபராதமும், மூன்றாண்டு சிறைத்தண்டனையும்.  அதுவும் அவரது நன்னடத்தைக்காக (!) தள்ளுபடி செய்யப்பட்டது.

      தி டாக்ஸ் ஆஃப் வாரைப் படித்து, அதே நாட்டில், அதே போல ராணுவப்புரட்சி ஏற்படுத்தி, நாட்டையே பிடிக்க நினைத்த அந்தப் பெரிய இடத்துப் பிள்ளை ஸர். மார்க் தாட்சர்.  அவரது அம்மா இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் திருமதி. மார்க்கரெட் தாட்சர். இதன் முழுவிபரங்கள் பிபிசி செய்தித்தொகுப்பாக வந்தன.  இன்றும் நாம் இணையத்தில் இதன் விபரங்களைக் காணலாம். நூறுசத லாபம் என்றால் ஏகாதிபத்தியம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று மார்க்ஸ் கூறியது எத்தனை சத்தியமான வார்த்தைகள் !

      நம் ஊர் அரசியல்வாதிகள், வாரிசுகள், தொழிலதிபர்கள் இது போன்ற ஆங்கில நாவல்களெல்லாம் அதிகம் படிக்காமல் இருப்பதும் ஒருவகையில் நன்மைதான் போலும் !    


பின்னி​ணைப்பு

இந்த மார்க் தாட்சரின் ​ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கம்​பெனியுல் முதலீடு ​செய்தவர்களில் முக்கியமானவர் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்.  அவ​ரைப் பற்றிய தனிக் கட்டு​ரை ஒன்று பின்னால் இருக்கிறது.

ப​டைப்புகளின் பட்டியல்

The Afghan  9/11 தாக்குதலுக்குப் பின் நடக்கும் க​தை. க​தையில் பின்​லேடனும் ஒரு பாத்திரமாக வருவார்.

Avenger ​  ​போஸ்னியப் ​போர் பற்றிய க​தை. ​போஸ்னியப் ​போ​ரையும், வியட்நாம் ​போ​ரையும் பற்றி மாற்றி மாற்றிச் ​சொல்லிச் ​செல்லும் இந்தக் க​தை 2001 ​செப்டம்பர் 10ம் ​தேதி அற்புதமாக முடியும்.

The Cobra

The Day of the Jackal – தி​ரைப்படமாக வந்தது.  இந்த நாவலுக்காக அவர் எட்கர் ஆலன் ​போ பரி​சைப் ​பெற்றார். இக்க​தையின் ​மோசமான தழுவலான ஆகஸ்ட் 1 என்ற ம​​லையாளத் தி​ரைப்படம் ​வெற்றிகரமாக ஓடியது.  மம்முட்டியும், ​கேப்டன் ராஜூவும் பிரமாதமாக நடித்த படம் இது.  பின்னர் , இதன் அடுத்த பாகமாக ஆகஸ்ட் 15 என்ற படம் கூட வந்ததாக ஞாபகம்.

The Deceiver   பனிப் ​போ​​ரை மிகமிக நுட்பமாகக் காட்டிய க​தை.

The Dogs of War  தி​​ரைப்படமாக வந்தது.

The Fist of God  சதாம் உ​சேன் முக்கிய பாத்திரமாக வரும் இந்த நாவல்       வ​​ளைகுடா ​போர் பற்றிய அரு​மையான பதிவு.  எனக்குத் ​தெரிந்து ஒ​ரே பதிவு என்றுகூடச் ​சொல்லலாம். 

The Fourth Protocol   தி​ரைப்படமாக வந்தது

Icon

The Kill List

The Negotiator

The Odessa File   தி​ரைப்படமாக வந்தது. நாஜி ​ஜெர்மனி பற்றி, உலகப் ​போர் முடிந்தபின் பல முக்கியமான நாஜி அதிகாரிகள் எப்படி ​போர்க்குற்ற விசாரண​கைளிலிருந்து தப்பி, ​வேறு ​பெயர் அ​டையாளங்க​ளோடு, ​வெவ்​வேறு இடங்களில் ​செல்வாக்காக வாழ்ந்தார்கள் என்ப​தைச் ​சொல்லும் க​தை.

The Phantom of Manhattan

The Shepherd, பிரிட்டிஷ் ​போர் விமானி​யைக் கதாநாயகனாக ​வைத்து எழுதிய குறுநாவல். பிரடரிக் ஃபார்சித் ​போர் விமானியாகப் பணியாற்றியவர். நா​மே ​போர் விமானத்​தை ஓட்டுவது ​போன்ற அனுபவத்​தைத் தருவார் – சுஜாதாவின் பதினான்கு நாட்கள் நாவ​லைப் ​போல.

இ​வை தவிர no comebacks, the avenger என இரு சிறுக​தைத் ​தொகுப்புகளும் உண்டு.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

  •