Reading view

நிவேதிதையா காரணம்?

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் பொய்யாகவோ மிகையாகவோ ஒன்றை எழுதுவதும், படிப்பதுவும், பரப்புவதுவும் அதை நம்புவதும் நம் கலாசாரத்தின் ஓர் அம்சமாகவே ஆகி விட்டது .

“பாரத சுதந்திரம் ,அடிமைத்தனத்தை  நீக்குதல்,பெண்மையை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல், ஜாதி வேறுபாடுகளைத் தகர்த்தல், தீண்டாமை நோயைக் களைதல், ஒற்றுமையை வளர்த்தல், மூடநம்பிக்கைகளை வேரறுத்தல், தேசபக்தியை தெய்வபக்திக்கு ஒப்பாக்குதல், அச்சம் தவிர்த்தல் முதலிய சக்தி மிகு சிந்தனைகளை நிவேதியையிடமிருந்து பாரதியார் பெற்றார். பாரதியார் பாடல்களில் உள்ள கருத்துக்கள்,உணர்வுகள், அனைத்திற்கும் நிவேதிதை அளித்த ஊக்கமே மூலம்” என்று சகோதரி நிவேதிதையைப் பற்றிய நூல் ஒன்று கூறுகிறது (நிவேதிதை நூற்றைம்பது-யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா-ராமகிருஷ்ணா மிஷின் வெளியீடு)

இது எவ்வளவு தூரம் உணமை?

பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1905 ஆம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது என மேலே குறிப்பிட்ட நூல்  கூறுகிறது. ஆனால் நிவேதிதாவின் வரலாற்றை விவரிக்கும் ஆங்கில நூல் (Sister Nivedita -Pravrajika Atmaprana) பாரதி 1906 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற போது நிவேதிதையைச் சந்தித்ததாகக் கூறுகிறது : “When Subrahmanya Bharathi came to attend Calcutta Congress in 1906 he went to meet Nivedita”. (இந்த நூல் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கை பற்றிய மெய்யான (authentic) நூல் என மதிக்கப்படுகிறது. இதை எழுதிய ஆத்மபிராணா ராமகிருஷ்ணா மடத்துத் துறவி. பாரதிய வித்யா பவனைத் தோற்றுவித்த கே.எம்.முன்ஷியின் மகள்)

1905ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. முன்பே கூறியபடி அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவர் பத்திரிகையாளராகக் கூடப் பங்கேற்றிருக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் அவர் அப்போது சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதில் அந்தக் கூட்டம் பற்றி ஏதும் எழுதியிருக்கவில்லை

மாறாக 1906ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற்றார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 1906ஆண்டு காலகட்டத்தில் நிவேதிதை கல்கத்தாவில் வசித்து வந்தார். காசியிலிருந்து கல்கத்தா 420 மைல். பயணங்கள் எளிதாக இல்லாத அந்த நாள்களில் பாரதி அவ்வளவு தொலைவு பயணம் செய்து நிவேதிதையைச் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எனவே, சில நூல்கள் குறிப்பிடுவது போல, கல்கத்தாவின் ஒரு பகுதியான டம் டம் நகரில் இருந்த ஆனந்த மோகன் போஸ் என்பவரது இல்லத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.    .

1906 டிசம்பர் 26, 27 தேதிகளில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதை ஒட்டிய நாள்களில்தான் நிவேதிதையுடனான சந்திப்பு நிகழந்திருக்கக் கூடும் .

நிவேதிதா  அறிவுரை கூறித்தான் பாரதி பெண் கல்வி, ஆண் பெண் சமத்துவம், பெண் விடுதலை போன்ற கருத்துக்களில் நாட்டம் கொண்டார் என்பதற்கு ஆதாரமில்லை. பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1906 டிசம்பர் இறுதியில். ஆனால் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி இதழில். “விக்டோரியா சகரவர்த்தினியின் சரித்திரத்திலிருந்து நமது நாட்டு மாதர்களறியத்த்தக்க சில விஷயங்கள்” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் அவர் கூறுவது; “விக்டோரியா மகாராணியின் பெருமைக்கு முதல் காரணம் அவரது கல்வித் திறமையே. கல்வித் திறமையில்லாதவர்கள் உலகினைப் புகழோடு ஆட்சிபுரிய மாட்டுவார்களா? ஐயோ! கல்வியில்லாதவர்கள் நேரே மண் சுமக்கக்கூட முடியாதவர்களாயிற்றே!

விலங்கோடு மக்க ளனையர்  இலங்குநூல்

கற்றோ டேனை யவர்

இந்தக் குறள் தற்காலத்து ஆசாரத் திருத்தக்காரரகளில் ஒருவரால் இயற்றப்பட்டதனறு. தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனாரால் இயற்றப்பட்டது.படிப்பில்லாதவர்களையும் படித்தவர்களையும் ஒப்பிட்டு நோக்கினால் மிருகங்களையும் மனிதர்களையும் ஒப்பிடுவது போலுமென்கிறார்.வள்ளுவர். கல்வியற்றோர் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் வண்டியிழுக்கத்தான் பயன்படுவார்கள் என்பது திருவள்ளுவருடைய கருத்து”

(சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905)

1905 அக்டோபர் சக்ரவர்த்தினி இதழில் ஓர் பஞ்சாபி மாது என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை பெண்கல்வி பற்றி தெளிவாக மட்டுமல்ல, சுவையாகவும் பேசுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தக் கட்டுரையில் அந்தப் பெண்மணியின் பெயர் கடைசிவரை சொல்லப்படவே இல்லை! அதற்கு ஒரு காரணமும் உண்டு. அயல்நாட்டில் படித்துவிட்டு சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வந்திருக்கும் ஒருவரின் மனைவியைப் பற்றிய கட்டுரை அது. அவரின் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம் பற்றி பாரதி இப்படி எழுதுகிறார்: “இவரது உண்மையான பெயரைப் பிரசுரிப்பதற்கு நாம் இவரிடம் அனுமதி கேட்கச் சாவகாசமில்லாது போயின்மை குறித்து விசனமுறுகிறோம், ஆதலால் இவருக்கு பரதர் என்று புனைப்பெயர் கொடுக்கிறோம்” (இதுவல்லவா இதழியல் அறம்!)

இப்படிச் சொல்லிவிட்டு,, “மேற்படி பரதருடைய பத்தினியாரைப் பற்றியே நாம் இவ்விஷயமெழுதத் தொடங்கினோம்” என்று தொடரும் பாரதி, “சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் தனது தாயாரையும் சகோதரிகளையும், மனைவியரையும் பெண்களையும் கல்வி பெறுவதற்குத் தகுதியில்லாத அடிமைகளாகக் கருதுகிறார்கள் .இக்காரணத்தினாலேயே சென்னை மனிதர்கள் உருவத்திலும் அறிவிலும் மனோதைரியத்திலும் சரீர திடத்திலும் பின்னடைந்தவர்களாக இருக்கின்றனர் என்று  இம்மாது ஒரு முறை சொல்லினாராம். தனது கணவரைப் பார்க்க வரும் சினேகிதர்களிடமெல்லாம் அவரவர் வீட்டு மாதர்களின் கல்வியறிவைப் பற்றியே இவர் பேராவலுடன் விசாரணை புரிவார்:”

(சக்ரவர்த்தினி அக்டோபர் 1905)

வாழும் உதாரணங்கள் காட்டி எழுதியதோடு பாரதி நின்றுவிடவில்லை செல்வச் செழிப்பும், அதிகாரத்தை அணுக வாய்ப்பும் கொண்ட, சென்னை நகரத்துப் பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கான ஒரு பள்ளி தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார். எட்வர்ட் அரசருடைய மகனும் பட்டத்து இளவரசருமான வேல்ஸ் இளவரசர் தன் மனைவியுடன் 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் வந்திறங்கிய போது அங்கு அவர்களுக்கு ஆடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப் போல அவர்கள் செல்லவிருந்த கல்கத்தாவிலும், சென்னையிலும் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதைக் குறித்து 24.10.1905 சுதேசமித்திரனில்  பாரதி எழுதுகிறார்:

“சென்னை நகரத்திலும் வேல்ஸ் இளவரசருக்குச் செய்யும் பல உபசாரங்களுடன் இளவரசியாருக்கும் இந் நகரத்து மாதர்கள் பலர் கூடி பம்பாயில் நடந்ததைப் போல உபசரணைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவென்று கேள்விப்படுகிறோம். மாதர்கள் ஒருங்கூடித் தாமகவே ஒர் பொது நன்மை பற்றிய காரியத்தை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயமே என்றாலும் இவ்விஷயத்தில் மிகுதியான பணத்தை வீண் செலவு செய்வது தகுதியாக மாட்டாது.

ஸர்.வி.பாஷ்யமய்யங்காரின் மனைவியார் முதலிய மாது சிரோன்மணிகள் இவ்விஷயத்தில் முற்பட்டு முயற்சி புரிவார்களென்று எண்ணுகிறோமாதலால், அவர்கள் இளவரசியார் வரவின் அறிகுறியாக ஹிந்து மாதர் ஹைஸ்கூல் ஒன்று ஸ்தாபனம் செய்யுமாறு பிரயத்தனிக்கும்படி பிரார்த்தனை புரிகிறோம்”

(சுதேசமித்திரன்  24.10.1905)

பெண் கல்வி விஷயத்தில் மட்டுமல்ல, ‘பெண்களை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல் ’ஒற்றுமையை வளர்த்தல்’ போன்ற விஷயங்களிலும் நிவேதிதாவைச் சந்திக்கும் முன்னரே சுயமான பார்வை கொண்டிருந்தார் என்பதற்கு சக்ரவர்த்தினி இதழில் நவம்பர் 1905ல் அவர் எழுதத் தொடங்கிய துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையே சான்று. அது மொழிபெயர்ப்பு என்ற போதிலும் அது சொல்லுக்கு சொல் வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. அது  பாரதியின் கருத்துக்களும் வெளிப்படும் மொழியாக்கம். அதே போல ‘ஜாதி வேற்றுமைகளைத் தகர்த்தல். தீண்டாமை நோயைக் களைதல்’ போன்ற எண்ணங்களின் தீவிரமான வெளிப்பாடு 1904ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன் ஹிண்டுவில் எழுதிய ஆங்கிலக் கடிதம் (காண்க தொடரின் முந்தைய கட்டுரைகள்)

நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன்பே பாரதி பெண்கல்வி,பெண்கள் முன்னேற்றம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்களுக்கு எதிரான எண்ணங்கள், மதங்களுக்கிடையே ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு போன்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இவை. எனவே நிவேதிதாவால்தான் பாரதி இத்தகைய சிந்தனைகளைப் பெற்றார் என்பதும் அவரே மூலம் என்பதும் மிகையான கூற்று. ஒருவரை உயர்த்திப் பேச மற்றவரைத் தாழ்த்துவது இங்கு எப்போதும் உள்ள வாடிக்கைதான்.

அப்படியானால் நிவேதிதா பாரதியிடம் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவில்லையா?

அப்படிச் சொல்வதற்கு இல்லை. அவர் பாரதியிடம் ஏற்கனவே இருந்த கனலை தூண்டவும் அது பெரு நெருப்பாக வளரவும் அவர்களிடையே 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சந்திப்பு காரணமாக அமைந்தது.

இந்த சந்திப்பு குறித்து ஆராய வேண்டிய கேள்விகள், 1) காங்கிரஸ் மாநாட்டுக்குக் கல்கத்தா சென்ற பாரதி, காங்கிரஸ் தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்காமல், நிவேதிதாவைச் சந்தித்ததின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?2. ‘எனக்கு ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று நிவேதிதாவைக் குறிப்பிடும் பாரதி ஏன் திலகரை, விபின் சந்திர பாலரைப் பற்றி, விரிவாக எழுதியது போல் எழுதவில்லை?

முதல் கேள்விக்கு என்னுடைய ஊகமான பதில், காங்கிரஸ் ஒருவித நிதானமான அணுகுமுறையைக் கொண்டிருந்த காலகட்டத்தில் நிவேதிதா போர்க்குணம் கொண்டவராக விளங்கினார் என அவரைப் பற்றிய செய்திகள் மூலம் அறிய முடிகிறது (அவை குறித்து இதே தொடரில் விரிவாக முன்னம் எழுதியிருக்கிறேன்) அந்தப் போர்க்குணம்தான் தாகூர் அவரிடம் இருந்து விலகி இருந்ததற்குக்  காரணம் (“She had power and she exerted that power with full force on the lives of others. When it was not possible to agree with her it was impossible to work with her” -Rabindranath Tagore) ஆனால் அதே போர்க்குணம்தான் பாரதியை நிவேதிதாவை நோக்கி பாரதியை ஈர்த்திருக்க வேண்டும்.

எத்தனையோ தலைவர்களைப் பற்றி, ஆப்கானிஸ்தானத்து அமீர் உட்பட அயலகப் பிரமுகர்களைப் பற்றி, போற்றுதலுக்குரிய பெண்மணிகளான அகல்யா பாய், சரளாதேவி (தாகூரின் சகோதரி) -ஏன் விக்டோரியா மகாராணி பற்றிக் கூட –  குறித்தெல்லாம் எழுதிய பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை. நிவேதிதா 1911ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானார். அதாவது நிவேதிதா பாரதி சந்திப்பு நிகழ்ந்ததற்குப் பின் சுமார் ஐந்தாண்டு காலம் வாழ்ந்திருந்தார். அவர் பாரதியின் ஆங்கில இதழான பாலபாரதாவிற்கு எப்போதாவது எழுதியதாக நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை என்பதுதான் பெரிய ஆச்சரியம்.

நிவேதிதா பற்றி பாரதி எழுதியதாக எனக்குக் கிடைப்பவை. நான்கு சிறிய குறிப்புகள்தான்

1.1906ஆம் ஆண்டு நவம்பர் 24 தேதியிட்ட இந்தியா இதழில் நிவேதிதா உடல் நலிவுற்றிருந்த போது நலம் பெற வேண்டும் என எழுதிய குறிப்பு (அதன் பின் நிவேதிதா நலம் பெற்று பணிகளுக்குத் திரும்பிவிட்டார் இது பாரதி -நிவேதிதா சந்திப்பு நிகழும் முன்னர் எழுதியது)

2.1907 ஆம் ஆண்டு பாலபாரதா என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக, அதன் நவம்பர் இதழில் ஆங்கிலத்தில் எழுதிய தலையங்கத்தில் “Open your eyes, men of India, open your eyes to the facts of life!” எனத் தொடங்கும் நிவேதிதாவின் மேற்கோளைக் குறிப்பிட்டிருப்பது.

3. ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்’ எனத் தொடங்கும் நிவேதிதா தேவி துதி. அது எப்போது எழுதப்பட்டது எனத் தெரியவில்லை அது பாரதியாரின் வாழ்நாளில் எங்கும் வெளியானதாகத் தெரியவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1937 ஆம் ஆண்டு வெளியான சுயசரிதையும் பிறபாடல்களும் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது

4. 1908ஆம் ஆண்டு பாரதியே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பான ஸ்வதேச கீதங்களில் காணப்படும் சமர்ப்பணக் குறிப்பு: “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணங்களில் இச் சிறு நூலை சமர்ப்பிக்கிறேன் -ஆசிரியன்” என்கிறது அந்தக் குறிப்பு. அதில் நிவேதிதாவின் பெயர் நேரிடையாக இடம் பெறவில்லை.

இந்தக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு, “சகோதரி பாரதியின் கையைப் பிடித்திழுத்து வெளியே இழுத்து வந்தார்.அங்கே விரிந்து படர்ந்திருந்த ஓர் ஆலமரத்தின் அருகே சென்று, “இதோ பார் பாரத மாதா!” என்றார். இளைஞர் பாரதி வியப்புடன் அவர் காட்டிய திசையில் பார்த்தார். அங்கே அவர் கண்டது என்ன! பாரதமாதாவே தேவியாக வானாளவிய நின்றதை அகக் கண்கள் திறக்கப்பெற்ற பாரதியார் தரிசித்தார்.மெய் சிலிர்த்தது, நா தழுதழுத்தது அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டார்” என்று நாடகீயமாக நிவேதிதை நூற்றைம்பது என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள்.  கிருஷ்ணனுடைய விஸ்வரூபத்தை உவமையாகச் சொன்னதை ஜோடனைகள் செய்து உணர்ச்சிமயமான நாடகமாக ஆக்கிவிட்டார்கள். இந்த சம்பவம் குறித்து நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை!

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி சொல்லியதுதான் எத்தனை உண்மையான வார்த்தை!

The post நிவேதிதையா காரணம்? appeared first on Maalan.

  •  

தகப்பனைப் போல ஒரு முன்னோடி

மாலன்

காற்று வேகமாக வீசும்போது கதவுகள் படீரெனெ திறந்து கொள்வதைப் போல பத்திரிகைப் பணி பாரதியின் மனக் கதவுகளைத் திறந்தது. அவரது பார்வை விரிந்தது.

அவர் பத்திரிகைத் தொழிலுக்கு வந்திருக்கவில்லையென்றால் அதிக பட்சமாக அவரது காலத்தில் வாழ்ந்திருந்த பல சிறந்த தமிழறிஞர்களைப் போல ஓரு தமிழ் அறிஞராக சிறப்பெய்தியிருக்கக் கூடும்.  அவரது காலத்தில் உ.வே.சாமிநாதய்யர், இரண்டு ராகவய்யங்கார்கள், ம.கோபாலகிருஷ்ணன், நாவலர் சோமசுந்தர பாரதி, அரசஞ்சண்முகனார் எனப் பல தமிழறிஞர்கள் வாழ்ந்தார்கள்  அவர்கள் எல்லோரும் செவ்வியல் தமிழுக்கும், இலக்கணத்திற்கும் பங்களித்தார்கள். பத்திரிகைத் தொழிலுக்கு வரும் முன்  பாரதி எழுதிய  கடினமான நடையைக் கொண்ட, இலக்கண சுத்தமான, கவிதைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது.

ஆனால்  பாரதியை அவரைச் சுற்றிப் பேரெழுட்சியுடன் மலர்ந்து கொண்டிருந்த நவீன உலகை நோக்கிச் செலுத்தியது அவர் இணைந்து கொண்ட பத்திரிகைத் தொழில்.

அதற்கு சாட்சியாக இருப்பது அவர் ஹிண்டுவிற்கு ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கடிதம். சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே அவர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். 1904ஆம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி வரை அவர் மதுரையில் சேதுபதி பள்ளியில் பணியில் இருந்திருக்கிறார். அதன் பின் அவர் நவம்பர் மத்தியில் சென்னையில் சுதேசமித்ரனில் சேர்ந்திருக்கலாம். அந்தக் கடிதம் 1904ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிண்டுவில் வெளியாகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சுதேசமித்ரனில் அவரது படைப்புகள் ஏதும் வெளியாகும் முன்னரே (அதற்கு 10 மாதங்கள் ஆயிற்று) சென்னை வந்த சில நாள்களிலேயே இந்தக் கடிதம் ஹிண்டுவில் பிரசுரமாகி இருக்கிறது. அந்தக் கடிதம் வெறும் கடிதமல்ல. அது கனல் மணக்கும் பூ.

அதைக் கனல் மணக்கும் பூ எனச் சொல்லக் காரணம் அதில் வெளிப்படும் பாரதியின் அறச்சீற்றம். அந்தக் கடிதத்தில் பாரதி எழுதுகிறார்: “அரசியல் விடுதலை என்பது நான் இந்த நாட்டைச் சார்ந்தவன் என்ற தேசிய உணர்வு இல்லாமல் ஏற்படாது. எங்கே ஜாதி அமைப்பு இருக்கிறதோ அங்கு தேசிய உணர்வு ஏற்படாது.இந்த ஜாதி அமைப்பு என்பது விசித்திரமானது. பறையர் ஒருவர் அறக் கொடைகள் அளிக்கும் வள்ளலாக இருந்தாலும் அவரை ஒரு பிராமணத் தரகனை விடத் தாழ்ந்தவராகவே அது நடத்தும். இங்கிலாந்தில் உரிய தகுதிகள் கொண்ட செருப்புத் தைக்கும் இளைஞன் அந்த நாட்டின் பிரதமராக ஆவதற்கு அங்கு எந்தத் தடையும் எவரிடமிருந்து எழாது ஆனால் சமஸ்கிருத இலக்கியங்களில் இணையற்ற ஞானமும், உயர்ந்த ஒழுக்கமும் பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் இந்து மடம் ஒன்றின் பீடாதிபதியாக வர முடியும் என இந்தியாவில் எவராவது நம்பினால் அவர் தேசத் துரோகியாகக் கருதப்படுவார் சூத்திரனே வர முடியாது என்னும் போது பஞ்சமரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏன் மக்கள் விரும்பியே குருடர்களாக இருக்கிறார்கள்? தேசிய காங்கிரசில் மிகச் சிறந்த தொண்டர்கள் இருக்கிறார்கள், அந்தன் லட்சியங்கள் உயர்ந்தன என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண் என்றென்றும் துயரத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும் என எண்ணும் கல் நெஞ்சம் கொண்ட ஒருவர் தலைமைப் பீடத்திலிருந்து மக்களை எழுட்சியுறச் செய்ய முடியும் என எவரேனும் நம்புவார்களா?” என்று அந்தக் கடிதத்தில் பொரிந்து தள்ளும் பாரதி “சமூக சீர்திருத்தம் இல்லாமல் அரசியல் சீர்த்திருத்தம் என்பது ஒரு கனவு. பொய். ஏனெனில் சமூக அடிமைகள் அரசியல் சுதந்திரம் என்ன என்பதை ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.” என்று கடிதத்தை முடிக்கிறார்.  

இந்த சீற்றத்தின் ஊற்றுக் கண் ஜி.சுப்ரமணிய ஐயர். ஜி.சுப்ரமணிய ஐயரைப் பற்றித் தமிழ் நாட்டில் அதிகம் பேசுவாரில்லை. மறக்கப்படுவதற்காகவே பிறக்கிறவன் பத்திரிகையாளன் என்பதற்கான மற்றொரு நிரூபணம் அவர். அவரைப் பற்றிப் பேசுகிற ஒரு சிலரும் அவர் ஹிண்டு சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரியர், நிறுவனர் என்றோ, மிதவாதி என்றோ ஓரிரு வரிகளில் சுருக்கி விடுவார்கள்.

இவையெல்லாம் உண்மைதான். ஆனால் முழுமையான உண்மைகள் அல்ல. ஜி. சுப்ரமணிய ஐயர் பலவிதங்களில் முன்னோடி. அரசியல் மேடைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். மதப் பிரசாரகர்கள் ஊர் ஊராய்ப் போய் பரப்புரை செய்வதைப் போல அரசியல் ஆர்வலர்களும் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி அதைத் தொடங்கியவரும் அவர்தான். ஊராட்சி நகராட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதைத் தமிழில் கேள்வி பதில் வடிவத்தில் விளக்கிக் கையேடு வெளியிட்டவரும் அவர்தான்.இவற்றின் நீட்சி அல்லது இன்னொரு வடிவம்தான்  அவரது பத்திரிகைகள்.

அவரது மற்றொரு முகம், அதிகம் அறியப்படாத முகம், அவர் ஒரு சமூக சீர்த்த ஆர்வலர் என்பது. இந்து மதத்தில் இருந்த தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட  இந்து ஆசார சீர்திருத்த சபையின் நிறுவனவர்களில் ஒருவர். மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தை பாரதி ‘இந்து ஆசார சபையின் உறுப்பினர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார்

ஜி.சுப்பரமணிய ஐயர் பேச்சளவில் நிறுத்திக் கொண்டவர் அல்ல. தன் வாழ்க்கையிலும் மேற்கொண்டு காட்டியவர். அவரது மூத்த மகள் சிவப்பிரியை 13 வயதில் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். அதன் காரணமாக ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டவர். அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தத் திருமணத்தை 1889ஆம் ஆண்டு பம்பாயில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடிய போது நடத்தினார். வேறு ஒரு சமயம், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்த போது இறந்தவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து அந்தணர்களும் உறவினர்களும் புறக்கணித்தனர். காரணம் இறந்தவர் இளம் வயதில் விதவையான தன் குழந்தைக்கு மறுமணம் செய்து வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஜி.சுப்ரமணிய ஐயர், அந்த வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் பேச்சு நடத்தி வேறு சில புரோகிதர்களை ஏற்பாடு செய்து அந்தச் சடங்குகள் நடைபெறச் செய்தார்.

இந்து மத சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக  அவர் கொடுத்த விலை மிகப் பெரிது. அந்த விலை  அவர் தன் உழைப்பையும் செல்வத்தையும் கொண்டு உருவாக்கிய ஹிண்டு நாளிதழ்.

இந்து ஆசார சீர்திருத்த சபையைப் போல சுப்ரமணிய ஐயர் சம்பந்தப்பட்டிருந்த இன்னொரு அமைப்பு திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம். அதைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள்தான் ஹிண்டு பத்திரிகையைத் தொடங்கியவர்கள். ஜி.சுப்ரமணிய ஐயர், எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவராவ், என்.சுப்பாராவ் பந்துலு  ஆகிய ‘திருவல்லிக்கேணி அறுவர்’தான் 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, முதன் முறையாக வெள்ளையர் அல்லாத ஒரு இந்தியர் (முத்துசாமி ஐயர்) உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பிற்கு பதில் கூற ஹிண்டுவைத் தொடங்கினர். அப்போது ஜி.சுப்ரமணிய ஐயருக்கு 23 வயது. இவர்களில் ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் ஆசிரியர்கள். மற்ற நால்வரும் சட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் வக்கீல் தொழிலை கவனிக்கப் போய் விட்டனர். ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியர் இருவர் மட்டுமே பத்திரிகையை நடத்த வேண்டிய நிலை. சுப்ரமணிய ஐயர் ஆசிரியர் பொறுப்பை கவனிப்பது என்றும், வீரராகவாச்சாரியர் நிர்வாக இயக்குநராக பத்திரிகையின் விற்பனை, நிதி விஷயங்களைக் கவனிப்பது என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வரப்பத்திரிகையாகத் தொடங்கிப் பின் வாரம் மும்முறையாக வளர்ந்து, 1887ஆம் ஆண்டு சென்னையில் முத்ன்முறையாக காங்கிரஸ் மாநாடு நடந்த பின் 1889ஆம் ஆண்டு மாலை நாளிதழாக மலர்ந்தது. பிரச்சினை ஜி.சுப்ரமணிய ஐயரின் எழுத்தின் மூலம் நுழைந்தது.

ஜி.சுப்ரமணிய ஐயர் பிரிட்டீஷ அரசின் செயல்கள், அதிகாரிகளின் அத்து மீறல், இவற்றோடு தீண்டாமை, குழந்தைத் திருமணம் ஆகியவற்றை விமர்சித்து எழுதி வந்தார். அவரை மிதவாதி, மென்மையானவர் என்று விமர்சிப்பவர்கள் அவரது எழுத்துக்களை வாசித்துவிட்டுத்தான் பேசுகிறார்களா என்று நான் எண்ணுவது உண்டு. காரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுபவர் அவர். சுதேசமித்திரனில் அவர் எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன்:

மதுரையில் வெங்கோபாச்சாரியார் என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒரு நாள் காலையில் மாணவர்கள் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வழக்கமான பிரார்த்தனை பாடல்களுக்குப் பின் வந்தேமாதரம் பாடலைப் பாடினர். ஆத்திரம் அடைந்த வெங்கோபாச்சாரியார் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை பெஞ்ச்சின் மேல் நிற்க வைத்து, மிரட்டி, இதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர் யார் எனக் கண்டுபிடித்து விட்டார். அந்த நான்கு பேரையும் பிரம்பால் விளாசிவிட்டார். அவர்களில் ஒருவருக்கு மணிக்கட்டு பிசகிவிட்டது. சுப்ரமணிய ஐயர் சுதேசமித்திரனில் செய்தியும் வெளியிட்டுத் தலையங்கமும் எழுதினார். அதில் ஒரு வரி: “ ஹிந்துப் பிள்ளைகள் ஹிந்துக்களே நடத்தும் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதன் முக்கிய பலன் தேசாபிமானம் என்கிற உத்தமோத்தமான நல்லுணர்ச்சியைக் கற்பது. அப்படி ஹிந்துப் பிள்ளைகள் தேசாபிமானம் கற்பதால் வெங்கோபாச்சாரிக்குக் கோபம் உண்டாகுமானால் இவரைவிடக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவின குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் ஒருவன் பிரின்சிபலாக இருக்கலாமே?”

குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் என்பது உருவ கேலியாக இருந்தாலும், அந்த சொற்றொடர் இல்லாமலே இந்தக் கண்டனத்தை எழுதியிருக்கலாம் என்றாலும் அது அவரது சீற்றத்தைக் காட்டுகிறது. இந்தச் சீற்றம், அரைக்கணம் இதை பாரதி எழுதியிருப்பாரோ என்ற மயக்கத்தைத் தந்தாலும் இதை எழுதியது பாரதி இல்லை. ஐயர்தான். ஏனெனில் இந்தத் தலையங்கம் வெளியானது 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி. அப்போது பாரதி இந்தியா பத்திரிகைக்குப் போய்விட்டார். அதுமட்டுமல்ல, அவர் இந்தத் தலையங்கத்தை வரவேற்று களி கூத்தாட இந்தியா பத்திரிகையின் 13.10 1906 ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்

சுப்ரமணியத்தின் ஆங்கில நடையும் இதுபோலக் காரமானதுதான்.அதிலும் குறிப்பாக நம் கலாசாரத்தில் இருந்த குறைகளைப் பற்றி எழுதும் போது. உதாரணத்திற்கு ஓரிடத்தில் சுப்ரமணியம் எழுதுகிறார்: (நம்) “கலாசாரத்தின் தொன்மை எவ்வளவு போற்றுதலுக்குரியதாக இருந்தாலும் அது நடைமுறையில் பழமையானதாகவும் பயனற்றதாகவும் ஆகிவிட்டது” (“a civilisation which however venerable its antiquity is for practical purposes more or less antiquated and useless)

சமரசம் செய்து கொள்ளாத சுப்ரமணியத்தின் எழுத்துக்கள் பார்டனர்ஷிப்பில் விரிசலை ஏற்படுத்தின அவர் முன்வைக்கும் கடுமையான வாதங்கள் பத்திரிகையின் விற்பனையை பாதிப்பதாக வீரராகவச்சாரியர் கருதினார். ஏற்கனவே அரசுக்கு எதிராக எழுதப்பட்ட தலையங்கங்கள் காரணமாக பத்திரிகை பல வழக்குகளை சந்தித்துக் கொண்டிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியிருந்தது

விரிசல் பிளவானவது அவர் தீண்டாமை பற்றி எழுதிய ஒரு கூர்மையான  விமர்சனத்தால்.

தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டவர்களின் தாழ்ந்த நிலை குறித்தூ எழுதும் போது “ இழிவானதாகவும், விநோதமாகவும் உள்ள இந்து சமூக அமைப்பு (தாழ்த்தப்பட்டவர்களுக்கு)  எந்த வித மேம்பாட்டையும் அனுமதிக்கும் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.நம் மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் எத்தகைய மதிப்பும்  இந்த ஏழை மக்களுக்கு விடுதலை கொண்டுவராது (“notorious and the peculiarities of The Hindu social system are such that from this system no hope whatever of their amelioration can be entertained… no amount of admiration for our religion will bring social salvation to these poor people.”)

.ஜி.சுப்ரமணிய ஐயர் தீண்டாமைக்கு எதிரான தன் குரலை, எழுத்துக்களை மட்டுப்படுத்திக் கொள்ள இணங்கவில்லை. பார்ட்னர்ஷிப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் பார்டனர்கள் கருதினர். பிர்பல வழக்கறிஞர் நார்ட்டன் முன் ஹிண்டுவை விட்டு சுப்ரமணியம் விலகி விடவேண்டும் என்றும் வீரராகவாச்சாரியாரே ஆசிரியர் பொறுப்பை கவனிப்பார் என்றும்  முடிவாயிற்று. தன் உழைப்பாலும் எழுத்தாலும் அறிவுக் கூர்மையாலும் வளர்த்த பத்திரிகை சாம்ராஜயத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பியமைக்காக இழந்து ஜி.சுப்ரமணிய ஐயர் வெளியேறினார். மிச்சமிருக்கும் சுதேசமித்திரன் மூலம் தன் பணியையும் லட்சியங்களையும் தொடர்ந்தார்.

இது எவ்வளவு உன்னதமான செயல்! சுப்ரமண்ய சிவா இதைப்பற்றி இப்படி எழுதினார்; “தேசாபிமானமும்  பாஷாபிமானமும் இன்னவையென்று எவரும் உணராத அக்காலத்தில் அதாவது ‘சுதேசமித்திரன்’ ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ப்ரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் தாம் நடத்திக் கொண்டிருந்த ‘ஹிந்து’ என்ற ஆங்கில பத்திரிகையை விட்டுவிட்டுச் சாதாரண ஜனங்களுக்குள் அறிவைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் வியக்கத்தக்கது.” (ஞானபாநு – 1916- ஆகஸ்ட்)

பாரதி சுப்ரமணிய ஐயரை எப்படிப் பார்த்தார்? : “இராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதியவிழிப்பிற்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர்.” (சுதேசமித்திரன் 1918 மே- 31- ) என்று எழுதினார் பாரதி. அவர் சுப்பிரமணிய ஐயரை வள்ளலாருக்கு நிகராக வைக்கக் காரணம் சுப்ரமணிய ஐயரிடமிருந்த சமூக சீர்திருத்த கருத்துக்கள்தான்

22 வயதில் சமூகம் பற்றி பாரதி  பெற்ற விழிப்புணர்வின் ஆதிகர்த்தாவும் அவர்தான். திலகர் வழியை சுப்ரமண்யம் ஏற்கும் முன்   அவருக்கும் பாரதிக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. அதன் காரணமாக பாரதி அவரை விமர்சித்ததும் உண்டு. ஆனால் கருத்து ரீதியான வேறுபாடுகள் தகப்பனுக்கும் மகனுக்குமிடையே ஏற்படுகிற முரண்பாடுகள் போல.

ஆம் தகப்பன்தான். பாரதிக்கு 33 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் சுப்ரமணிய ஐயர் தனது 49ஆம் வயதில்  22 வயது பாரதியைக் கண்டெடுத்து இதழியலுக்குக் கொண்டு வந்தவர். அது பாரதிக்கு மறு பிறப்பு.

தமிழுக்கும்தான்

கலைமகள் ஜூலை 2024

The post தகப்பனைப் போல ஒரு முன்னோடி appeared first on Maalan.

  •  

ஆழமும் தெளிவும் அமைந்த நதி

பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான, ஆனால் பாரமர்களால் குறைவாக வாசிக்கப்பட்ட, வாசித்தவர்களாலும் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட நூல் பகவத் கீதை. அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகக் கேள்விப்பட்டதைக் கொண்டு பேசுகிறவர்கள் அதனை, விவிலியம், குரான், குருகிரந்த சாகிப் போன்ற நூல்களைப் போலக் கருதி அது இந்து மதத்திற்கானது என்பார்கள். வேறு சிலர் ‘கீதை போர் புரியத் தூண்டும் நூல்’ என்பார்கள். சிலர் இதை ஒழுக்கத்திற்கான வழிகாட்டி என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் நூல் என்பதுதான்.ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட பரிணாமங்கள் அதற்கு உண்டு. வெற்றிக்கும் அமைதிக்கும் வழிகாட்டும் நூல் அது.

காந்தி, பாரதி, காஞ்சிப்பெரியவர் போன்றவர்கள் கூட பகவத்கீதையை வெவ்வேறு கோணங்களில் பார்த்தார்கள். “மூன்று காரணங்களால் கீதை இணையற்ற நூலாக விளங்குகிறது. முதலாவதாக அது உபதேசிக்கப்பட்ட சந்தர்ப்பம். இரண்டாவதாக அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி. மூன்றாவதாக தனிநபர் முயற்சிக்குக் கீதை கொடுக்கும் முக்கியத்துவம். ஆகிய இக்காரணங்களால் கீதை தன்னிகரற்று விளங்குகிறது…பகவத் கீதையின் விசேஷம் என்னவென்றால் இதை உபதேசிப்பதற்கு பகவான் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததும் போர் செய்ய மறுத்து எந்த நிமிஷத்திலும் தலை போய்விடக்கூடிய அபாயத்தில் இருந்தவனுக்கு இது உபதேசிக்கப்பட்டதுதான். ஆன்மீக ஞானத்திற்கு மனிதன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது” என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

காந்தி தன் வாழ்வில், அரசியல், சமூகம், மதம் என்ற மூன்று முனைகளில் போராடினார். அந்தப் போராட்டங்களில் நெருக்கடிகளையும், ஏமாற்றங்களையும், மன அழுத்தங்களையும் எதிர்கொண்டார். “ என்னை சந்தேகங்கள் அச்சுறுத்தியபோது, ஏமாற்றங்களை எதிர்கொண்ட போது, எந்த வழியும் புலப்படாமல் இருளில் ஆழ்ந்தபோது நான் பகவத் கீதையை நோக்கி ஓடுவேன், அதில் உள்ள ஏதேனும் ஒரு பாடல் எனக்கு ஆறுதல் அளிக்கும், உடனே பெரும் துயரத்திற்கு இடையேயும் நான் புன்னகைப்பேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார் காந்தி.( I confess to you that, when doubts haunt me, when disappointments stare me in the face, and when I see not one ray of light on the horizon, I run to the Bhagavad Gita and find a verse to comfort me, and I immediately begin to smile in the midst of overwhelming sorrow.” -Gita -the mother, M.K.Gandhi)  

காந்திக்கு முன்னதாகவே இந்தக் கருத்தைச் சொன்னவர் பாரதியார்.       “மனிதன் சகல துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்த நூலின் (பகவத் கீதையின்) முதற்கருத்து” என்று எழுதுகிறார் பாரதியார்.

துக்கங்களுக்குக் காரணம் என்னவென்று தெரிந்தால் அதிலிருந்து விடுபடும் வழியையும் கண்டு கொள்ள முடியும். துக்கங்களுக்குக் காரணம், நாம், நம் செயல்கள் அல்லது நம் அமைப்பு, அல்லது நம் குடும்பத்தினர் போன்றவர் மீது வைக்கும் பற்று, அதைக் குறித்து ஏற்படும் சந்தேகம், அந்த சந்தேகத்தால் ஏற்படும் பயம், அதை அடுத்து ஏற்படும் கலக்கம், அதனால் ஏற்படும் மனச் சோர்வு, இவைதான் நமது துக்கங்களுக்கான காரணங்களாகின்றன. பகவத் கீதை பற்றி எழுதும் போது பாரதி எழுதுகிறார்: “எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்துவிட்டு, மனச்சோர்வுக்கும் கவலைக்கும்,கலக்கத்திற்கும், பயத்திற்கும், இவை அனைத்திலும் கொடியாதாகிய ஐயத்திற்கும் இடம் கொடாதிரு. ‘ஐயமுற்றான் அழிவான்’

எல்லாவிதமான பற்றுக்களையும் களைதல் -நிஷ்காம்ய கர்மா- இதுதான் கர்மயோகத்தின் சாரம். துயரத்தில் தொடங்கி மோட்சத்தில் முடிகிற பதினெட்டு யோகங்களைக் கொண்டது என்றாலும் கர்மயோகம்தான் பகவத்கீதையின் இதயம். கர்மா என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் கடமை என்ற பொருளில் இப்போது வழங்கப்படுகிறது. பாரதியார் அதனைச் செயல் என்று அர்த்தப்படுத்துகிறார். சில காலம் முன்புவரைகூட அது செயல் என்ற பொருளில்தான் வழங்கப்பட்டு வந்தது. காமராஜருக்கு கர்ம வீரர் என்று ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. அதாவது செயல் வீரர்.

கடமைக்கும் செயலுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அதனை வார்த்தைகளால் விளக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால் நாம் எல்லா நேரமும் கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்ல முடியாது. ஆனால் எல்லா நேரமும் ஏதோ ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறோம். (சும்மா இருப்பதைப் பற்றிய திரை நகைச்சுவைக் காட்சியை நினைத்துப் பாருங்கள்!) இதை பாரதியார் “ எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கை இன்றி இருப்பதில்லை” என்கிறார்.ஏன் இருப்பதில்லை? ஏன் இருப்பதில்லை என்றால் இருக்க முடியாது. செய்கை என்பது மனித இயல்பு. நம்முடைய இயல்பான குணங்கள் நம்மைச் செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. அறிந்து கொள்ளும் ஆர்வம் என்பது (curiosity) என்பது மனித இயல்புகளில் ஒன்று. எல்லா மனிதருக்கும் அது உண்டு. ஆனால் எல்லோருக்கும் அது ஒன்று போல, ஒரே அளவில் இருப்பதில்லை. அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளவன் நிலவில் என்ன இருக்கிறது என்று ஆராய ஆர்வம் கொள்கிறான். ஆர்வம் குறைவாக இருப்பவன் வழியில் உள்ள கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறான். படைத்தல் என்பது மனித சுபாவம். ஒரு குழந்தை கூட எதையோ வரையப் பார்க்கிறது. படைப்பார்வம் அதிகம் இருப்பவன் ஓவியனாகவோ கவிஞனாகவோ, ஏதோ ஒன்றைப் படைப்பவனாகிறான். அது அவனுக்கு வருமானமோ புகழோ தராத போதிலும் அதை அவன் கைவிடுவதில்லை. படைப்பார்வம் குறைவாக இருப்பவன் ‘பொழுது போகாமல்’ எதையோ கிறுக்கிப் பார்த்து நிறைவு கொள்கிறான். செய்கை என்பது மனித சுபாவம். அதானல்தான் இப்போதெல்லாம் பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் போது நேர்காணலுக்கு வந்தவரின் சான்றிதழ்களை மட்டும் பார்ப்பதில்லை. அவரது இயல்பான ஆர்வம் (aptitude) எந்தளவு இருக்கிறது என்றும் கணிக்கிறார்கள்.

பாரதி இதை மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்: “ எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கை இன்றி இருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன”

செய்கை மனித இயல்பு என்றால் அதை எப்படிப் பற்றில்லாமல் செய்வது? “இயற்கையின் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதல் அடைகிறார்கள்” என்கிறார் பாரதியார். இந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டால் பற்றை விட்டுவிடலாம். அதிலிருந்து எப்படி விடுபடுவது? எல்லாச் செயல்களும் இறைவனின் செயல்கள், அதை இறைவனுக்காகச் செய்கிறோம், இறைவனுக்கே இதை அர்ப்பணிக்கிறோம் என்ற ஞானம் வந்து விட்டால் அது எனது என்ற எண்ணம் நீங்கிவிடும். அப்போது ஆசை அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள் நீங்கிவிடும். “எல்லாச் செயல்களையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று,மனக்காய்ச்சல் தீர்ந்தவனாய் (போர்) செய்யக் கடவாய்” என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறார் (பாரதியார் மொழிபெயர்ப்பு)

இதுதான் பகவத் கீதையின் சாரம். இதை அறிந்து கொண்டதால்தான் காந்திக்கு அவ்வளவு பெரிய போராட்டத்தை தலைமையேற்று நடத்தவும் அதில் எதிர்கொண்ட நெருக்கடிக்களை எதிர்கொள்ளவும் முடிந்தது.

நான் மூன்று முறை பகவத் கீதையை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறேன். 19-20 வயது இருக்கும் போது முதலில் படித்தேன். ஒன்றும் புரியவில்லை. ஸ்திதப் பிரக்ஞன் என்ற சொல்மட்டும் பிடித்திருந்தது. அதை என புனைப்பெயர்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாமா என்னுமளவிற்குப் பிடித்திருந்தது. இருபது வருடம் கழித்து மறுபடியும் படித்தேன்.இந்த முறை பல கேள்விகளும் எதிர்வாதங்களும் மனதில் எழுந்தன.

சேவாலயா முரளி எழுதியிருப்பது போன்ற ஒரு நூல் எனக்கு அன்றே கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஒருவேளை வாழ்வின் போக்கே கூட மாறியிருக்கலாம், பளிங்கு போன்ற ஆற்றின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கும் கூழாங்கற்களைத் துல்லியமாகப் பார்க்க முடிவது போல, முரளியின் பகவத் கீதையால் கடினமான விஷயங்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அத்தனை தெளிவு. வாசித்தலும் புரிந்து கொள்ளுதலும் மிக எளிது. இது பாமரனின் பகவத் கீதை அல்ல. என் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்ட கீதை.

சில இடங்களை அனுபவத்தால் விளக்குகிறார். சில இடங்களைக் கதைபோல் சொல்லி சுவாரஸ்யம் கூட்டுகிறார். சில இடங்களில் நகைச்சுவைக்கும் குறை வைக்கவில்லை.

கீதையில் வரும் சொல்களில் ஒன்று ஸ்வதர்மம். ஒவ்வொருக்கும் ஓர் இயல்பு உண்டு என்பதைக் குறிக்கும் சொல். அதற்கு என்னென்னவோ விளக்கங்கள் கொடுத்து குழப்பி வைத்திருக்கிறார்கள். முரளி அதை எளிமையாக விளக்குகிறார் அவரது அனுபவத்திலிருந்து பிறக்கிறது அந்த விளக்கம்:

“சேவாலயா பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு career counselling செய்ய சில வல்லுநர்களை அழைத்துப் பேச வைக்கிறோம். அவர்கள் மானவர்களிடம், “நீங்கள் இன்ஜினியர், டாக்டர், வக்கீல் அல்லது ஆசிரியர் ஆகலாம். அல்லது அரசு வேலைக்குச் செல்லலாம். இப்படிப் பலவகையான துறைகள் இருக்கின்றன.நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போவதில்லை. இன்னும் ஒருபடி மேலே போய்,ஒவ்வொரு மாணவனது விருப்பம் என்ன என்ரு அறிந்து கொள்வதோடு நிறுத்திவிடாமல் உளவியல் முறைப்படி ஆய்வு செய்து அந்த மாணவனது இயல்பு, natural tendency என்ன என்றும் அதற்கேற்ற துறைகள் எவையெவை என்றும் சொல்வார்கள். இந்த natural tendencyதான் பகவத்கீதையில் சுதர்மம்”

இந்த natural tendency என்பது எப்படி வருகிறது? நூலைப் படியுங்கள். தெரிந்து கொள்வீர்கள்.

இளைஞனாக இருந்து படித்த போது கீதை எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன் அல்லவா, அப்படி எனக்குக் குழப்பம் தந்த வரிகளிலே ஒன்று இது: “செய்கையில் செயலின்மையையும், செயலின்மையில் செய்கையையும் எவன் காண்கிறானோ அவனே மனிதரில் அறிவுடையோன், அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்தில் இருப்பான்” என்கிறது கீதை (பாரதியார் மொழிபெயர்ப்பு)

அது எப்படி செய்கையில் செயலின்மையைக் காண்பது என்பது எனக்கு அன்றிருந்த குழப்பம். இந்த நூலில் முரளி அதை அருமையாக விளக்குகிறார். பூமி ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள். “திருவிழாவில் சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றக் கூடிய ராட்டினத்தில் அமர்கின்றோம். அதில் சுற்றிவிட்டு வந்து தலைசுற்றுகிறது  என்கிறோம். ..1000 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கக்கூடிய ராட்டினம்தான் நாம் அமர்ந்து கொண்டிருக்கும் பூமி. ஆனால் அந்த வேகத்தை  அந்த சுழற்சியை நாம் உணர்வதே இல்லை.  சற்று கற்பனை செய்து பார்ப்போம். காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்கிறோம். ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு எட்டுமுதல் பத்துமணி நேரம் வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்ப வேண்டும் என்றால் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் வீட்டிற்குச் செல்ல முடியாது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீடு பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தள்ளிச் சென்றுவிடும்.  மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியில் 10 மணி நேரத்தில் காலையில் இருந்த இடத்திலிருந்து பூமி பத்தாயிரம் கிலோ மீட்டர் நகர்ந்திருக்கும்.  நாம் வீட்டிற்குத் திரும்பியே போக முடியாது. கற்பனையே பயங்கரமாக இல்லையா?

பூமி ஒரே சீரான வேகத்தில் ஒரே திசையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது பூமியில் இருக்கும் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான தொலைவும் மாற்றமடைவதே இல்லை. தன்னைத்தானே சுற்றி வருதல்; சூரியனையும் சுற்றி வருதல்; விரிவடைந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தில் சூரியனை விடாமல் பின் தொடர்தல் என முப்பரிமாணங்களிலும் மிக வேகமாக இயங்கி வரும் பூமி அசையாமல் நிலைத்திருப்பது போல நமக்குக் காட்சியளிக்கிறது. இதைப் போலவே மகத்தான காரியங்களைச் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது போல இருக்கமுடியுமா?மிகப் பெரிய செயல்களில்  செயலின்மையைப் பார்க்க முடியுமா? இதைப் பார்க்கத் தெரிந்தவந்தான் ஞானி” என்று விளக்குகிறார் முரளி

இப்படிப்பட்ட ஒரு ஞானிதான் முரளி. அவரது செயலுக்கு கண்ணெதிரே சாட்சியா நிற்கிறது சேவாலயா. அதன் பயணத்தை, அதன் வளர்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிரமிக்க வைக்கும் பயணம். ஆனால் முரளி அன்று- 42 ஆண்டுகளுக்கு முன் -பார்த்தது போல அப்படியே இருக்கிறார். அதே எளிமை. அதே இனிய சுபாவம் ‘இவ்வளவு செய்திருக்கிறோம்’ என்று துளிக்கூட கர்வமில்லாத தன்னடக்கம். முதிர்ச்சி.

அப்படிப்பட்ட ஞானியிடமிருந்து வந்திருக்கிறது இந்த நூல். எனக்கு என் இளமையில் கிடைக்காத ஒரு வாய்ப்பு இன்று உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. வாசித்துப் பயன் பெறுங்கள்.     

பாமரனின் பகவத்கீதை நூலுக்கு எழுதிய முன்னுரை

The post ஆழமும் தெளிவும் அமைந்த நதி appeared first on Maalan.

  •  

நாத்திகராய் பாரதி

“உலகத்தில் வாலிப பருவத்தில் ஒருவன் எவ்வாறு பழகினானோ அப்படியே வயோதிக பருவம் வரையில் நடக்கிறான் என்பது உண்மை. ஐந்தில் வராதது ஐம்பதில் வராது என்பது திண்ணம்”  என்று ஒரு கட்டுரையைத் தொடங்குகிறார் பாரதி. (இந்திய குருவும் ஆங்கில குருவும்- விஜயா 25 பிப்ரவரி 1910)

இவ்வளவு உறுதியாக பாரதியார் சொல்லும் விஷயம் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் அவரது இளமைப் பருவம், அதில் அவர் பெற்ற கல்வி, அடைந்த அனுபவங்கள், அவரை பாதித்த சிந்தனைகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது பதின்ம வயது வாழ்க்கை, குறிப்பாக 16 முதல் 20  வயது வரையிலான (1898-1902) வாழ்க்கை பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகள் இதுவரை நமக்குக் கிட்டவில்லை.

நானறிந்த வரையில் பாரதியின் மனைவி செல்லம்மா எழுதியுள்ள பாரதியார் சரித்திரத்தில் இந்தக் காலகட்டம் பற்றி சில செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் முரண்பாடுகளும் இருக்கின்றன. “பாரதியார் 1902ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று ஓரிடத்தில் எழுதும் செல்லம்மா, “காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டிற்கு அழைத்து வந்தவர் எட்டையபுரம் மகாராஜாதான். அந்த சமயத்தில் தில்லி தர்பாருக்குச் சென்றிருந்த மகாராஜா திரும்புங்காலையில் காசியில் சிவமடத்தில் இறங்கினார். அங்கே பாரதியாரைச் சந்தித்து தம்முடன் எட்டையபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார்” என்றும் எழுதுகிறார்.

பிரிட்டீஷ் ஆட்சியில் மூன்று முறை தில்லியில் தர்பார் நடந்தது.(1877, 1903, 1911) இதில் 1877 ஆண்டின் போது பாரதி பிறந்திருக்கவில்லை. 1911 ஆண்டு புதுச்சேரியில் இருந்தார். இங்கிலாந்தில் புதிதாக அரசரோ அரசியோ அரியணை ஏறும் போது அவர்கள் தங்களது காலனி நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி ஏழாம் எட்வர்ட் அரசரானபோது அவர் தில்லிக்கு வருவதற்கு 1903ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தார். பெரிய வெளியில் கூடாரங்கள் எழுந்தன. பிரத்தியேகமாக ஒரு ரயில் பாதை போடப்பட்டது. கப்பலில் பம்பாய் வரும் அரசர் அங்கிருந்து ரயில் மூலம் தில்லி வருவதாக ஏற்பாடு. அதே நேரம் கல்கத்தாவிலிருந்து கர்சன் வருவார், மேற்கிலிருந்து வரும் அரசரும் கிழக்கிலிருந்து வரும் வைஸ்ராயும் தில்லியில் சந்திப்பார்கள் எனத் திட்டம். மற்ற காவலர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமான சீருடை அணிந்த சிறப்புக் காவல் படை உருவாக்கப்பட்டது. மின்சார கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் நிறுவப்பட்டன. ஒருதபால் நிலையமும் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது. 1903 ஜனவரி ஒன்றாம் தேதி, புத்தாண்டு அன்று, நாடெங்கிலிருந்தும் சமஸ்தான அரசர்கள் அவர்களிடமிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து தர்பாருக்கு வந்தனர். சிலர் யானை மீது தங்க அம்பாரியில் வந்தனர். அவர்களது யானைகளைக் கட்டவும் அவற்றுக்குத் தீனிபோடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்தனை கோலாகலம். ஆனால் அரசர்தான் வரவில்லை! ஏழாம் எட்வர்ட் தான் வராமல் தன் தம்பியை அந்த தர்பாருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இதெல்லாம் நடந்தது 1903ல். 1902ல் அல்ல. அதனால் எட்டையபுரம் மகாராஜா தில்லி தர்பாரிலிருந்து திரும்பிச் செல்லும் போது காசிக்கு வந்திருக்க  இருக்க முடியாது. அல்லது பாரதி எட்டையபுரம் திரும்பியது 1902ஆக இருக்க முடியாது.

வருடக் கணக்கு முன் பின்னாக இருந்தாலும் செல்லம்மாவின் நூலை வரிகளுக்கு இடையில் வாசித்தால் சில செய்திகள் புலனாகின்றன. பாரதி சில காலம் நாஸ்திகராகவும் இருந்தார் என்பது அவற்றில் ஒன்று. “காளைப் பருவமானதாலும், பண்படாத சுதந்திர வீறுபடைத்த மனமாகையாலும் அவருக்கு நாஸ்திக வாதத்தில் பற்றுண்டாயிற்று” என்று எழுதுகிறார் செல்லம்மா.

பாரதியா? கணபதி, முருகன், சிவன், பராசக்தி,சரஸ்வதி, லக்ஷ்மி, காளி, மாரியம்மன், கண்ணன் என்ற இந்து தெய்வங்கள் மட்டுமன்றி, ஏசு, அல்லா என்று எல்லா தெய்வங்கள் மீதும் கவிதைகள் எழுதிய பாரதியா நாஸ்திகராக இருந்தார்? ‘தமிழா, பயப்படாதே, தெய்வத்தை நம்பு!” என்று எழுதியா நாஸ்திகராக இருந்தார்? வேத, உபநிஷத்களிடம் மனதைப் பறி கொடுத்து வேத ரிஷிகளின் கவிதை என ரிக் வேதப் பாடல்களையும், பகவத்கீதையையும் மொழிபெயர்த்த பாரதியா நாஸ்திகராக இருந்தார்?

ஆம். அவரது பதின்ம வயதில் அவர் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். “அப்போது அவருக்கு ஷெல்லி, பைரன் என்ற ஆங்கிலக் கவிகளின் நூல்களை வாசிப்பதில் பிரியம் அதிகம்” என்று செல்லம்மா கூறுகிறார்.காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பின் பாரதி ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார் என்றும் குறிப்பிடுகிறார் செல்லம்மா.

எட்டையபுரத்திலிருந்தும் பாரதி வெளியேற எட்டையபுரம் மன்னரை விமர்சித்து திருநெல்வேலியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சர்வஜனமித்திரன் என்ற இதழில் பாரதி எழுதியதுதான் காரணம் என்று பாரதியின் சகோதரர் சி.விஸ்வநாதன் தெரிவித்ததாக ஓரு குறிப்பு உண்டு. அதனை ஷெல்லிதாஸ் என்ற பெயரில் எழுதியதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நூல் கற்பனை வகையைச் சார்ந்தது என்று பிரேமா நந்தக் குமார் போன்றவர்கள் கருதுகிறார்கள். பாரதியின் அந்தப் படைப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் ஷெல்லிதாஸ் என்ற பெயரில் பாரதி எழுதிய வேறு ஒரு படைப்பை நாம் இன்றும் வாசிக்க முடியும். அது ‘துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’. பாரதியே ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி பத்திரிகையில் 1905 நவம்பர் தொடங்கி, 1906 ஜூலை வரை, இதழுக்கு இரண்டு பக்கங்கள் வீதம், இடைவெளி விட்டு விட்டு, ஐந்து மாதங்கள் வெளியான கதை. அது ஒரு மொழியாக்கக் கதை. அதை ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரைச் சூடி பாரதி எழுதினார்.

காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பாரதி அங்கு ஷெல்லியின் பெயரால் ஷெல்லியன் கில்ட் (Shelleyan Guild என்ற ஓர் அமைப்பையும் தொடங்கியதை பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான ஆக்கூர் அனந்தாச்சாரியார் குறிப்பிடுகிறார்: “ஷெல்லி, கீட்ஸ் இவ்விரு கவிவாணர் மீதுதான் அவர் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார். தமது ஊரில் ஒரு சங்கம் ஏற்படுத்தி, அச்சங்கத்தில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காண்பித்து, அனுபவிக்கும்படி செய்து வந்தார்” (கவிச்சக்ரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் -ஆக்கூர் அனந்தாச்சாரி)

சுதந்திர வீறு கொண்ட மனம் வாய்த்த பாரதி, தன்னை எந்த மனிதருக்கும் தாஸன் என்று சொல்லிக் கொண்டதில்லை, ஷெல்லியைத் தவிர. சக்தி தாஸன், காளிதாசன் என்ற பெயர்களில் அவர் எழுதியதுண்டு. ஆனால் அவை இறைவியின் பெயர்கள். மனிதர்களில் அவர் தன்னை தாஸனாக அறிவித்துக் கொண்டது ஷெல்லி ஒருவருக்குத்தான்.

யார் இந்த ஷெல்லி? ஏன் அவர் மீது அவ்வளவு ஈர்ப்பு?

இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம் சசக்ஸ். அந்த மாநிலத்தில் ஒரு பிரபு வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தவர் ஷெல்லி. அவரது தந்தை பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. ஷெல்லி பிறந்தது 1792 ஆகஸ்ட்டில்.

அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பாவையே உலுக்கியிருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரஞ்சுப் புரடசியின் லட்சியமும், முழக்கமும் ஆகும். மன்னர் என்பவர் தெய்வத்தின் பிரதிநிதி, எனவே அரசாட்சி என்பது தெய்வீக உரிமை என்ற கருத்து ஒருகாலத்தில் இங்கிலாந்தில் நிலவி வந்தது (Sovereignty என்ற சொல்லை அதனால்தான் தமிழில் இறையாண்மை என்று மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள்) ஆனால் குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்று மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் வேண்டும் என்று 1688ல் நடந்த கிளர்ச்சியின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதும் அந்தக் காலகட்டத்தில்தான்.

பிரபு வீட்டுப் பிள்ளையானாலும் மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள், சுதந்திரம், சமத்துவம் என்ற கருத்துக்கள் காதில் விழுந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் ஷெல்லி வளர்ந்தார். அந்தக் கருத்துக்களின் தாக்கம்தான் அவரைக் கவிஞனாக்கியது. எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் ஷெல்லி. அவரை பிரஞ்சுப் புரடசியின் குழந்தை என அவரது கவிதைகளின் விமர்சகரான எட்மண்ட்ஸ் எழுதுகிறார்.

அரசன் தெய்வத்தின் பிரதிநிதி அல்ல என்ற புள்ளியில் தொடங்கிய ஷெல்லியின் சிந்தனை இறைவனுக்கு எதிராகவும் நீண்டது. அவர் தனது பதினேழாவது வயதில், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படிக்கும் போது நாத்திகத்தின் தேவை (The Necessity of Atheism) என்ற நூலை எழுதினார். அது பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கல்வி நிலையங்களில் கெடுபிடி நிலவிய காலம். அதனால் ஜெர்மியா ஸ்டக்லி என்ற புனை பெயரில் எழுதினார். அவர் கையெழுத்திட்டு நண்பர்களுக்கு அனுப்பி வைத்த நூலின் பிரதிகளை, நண்பர் ஒருவர்  மதகுருக்களுக்கு அனுப்ப, அந்த மதகுரு பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்ப, ஷெல்லி பிடிபட்டார். பல்கலைக்கழக துணைவேந்தரும் அதிகாரிகளும் ‘இதை எழுதியது நானல்ல’ என்று மறுத்துவிடு உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்று சொன்னார்கள்.  ஆனால் ஷெல்லி, “உங்கள் மதம் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பொய் சொல்வது அற்பத்தனமான, கோழைத்தனமான காரியம் என்று நானறிந்த கொள்கைகள் சொல்கின்றன. நான் பெருமை கொள்ளத் தக்கதாக இந்த நூலை நான் எழுதவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக அதைப் புறக்கணிக்கச் சொன்னால் அது என்னால் முடியாது” என்று மறுத்துவிட்டார். விளைவு பல்கலைக்கழகத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதை அவமானமாகக் கருதிய அவரது தந்தை,  உன் போக்கை நீ மாற்றிக் கொள்ளாதவரை உன்னை என் மகனாக நான் ஏற்க மாட்டேன் என்று ஷெல்லிக்கு கடிதம் எழுதினார். தந்தையின் நிபந்தனைகள் எதையும் ஏற்கமறுத்த ஷெல்லி வீட்டை விட்டு வெளியேறினார்.  பெரும் பணக்கார வீட்டில் பிறந்த ஷெல்லி வாழ்க்கையில் பெரும்பகுதி மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தார்.

ஷெல்லியின் வாழ்க்கை, மன்னர்களைப் பற்றிய அவரது எள்ளல் (A King, a heartless beast, pageant, a name – ஒரு மன்னன், இதயமற்ற மிருகம், அலங்கார அணிவகுப்பு, வெறும் பெயர்) அதிகார எதிர்ப்பு, சமத்துவத்திற்கான வேட்கை, ஏழைகள் மீதான ஷெல்லியின் பரிவு (I am the friend of the unfriended poor- நான் நண்பர்களற்ற ஏழைகளின் நண்பன்)) மதகுருக்களுக்கு எதிரான உணர்வாகத் தோன்றி விரிந்த நாத்திகம் இவையெல்லாம் பதின்ம வயது பாரதியை வசீகரித்திருக்க வேண்டும். எட்டையபுர அரசரை முட்டாள் என வர்ணித்ததால்தான் அரசர் சினமடைந்தார் எனச் சொல்கிறார்கள். “The fool whom the courtiers nickname monarch, whilst a slave even to the basest appetites” – அரசப் பிரதிநிதிகளால் அரசன் என்றழைக்கப்படும் முட்டாள், கீழான வேட்கைகளுக்கு அடிமை என்பது ஷெல்லியின் வரிகள்.

நாத்திகத்தைத் தவிர ஷெல்லியின் கருத்துக்களின் தாக்கத்தைப் பல படைப்புகளில் காணலாம். அரசரையும், அரசவையையும் ஏளனம் செய்வது (சின்னச் சங்கரன் கதை) மதகுருக்கள், அமைப்புக்கள் மீதான விமர்சனம் (சங்கரன் நாயர் விஷயம் தொடர்பாக சங்கராச்சாரியார் பற்றி இந்து நாளிதழுக்கு எழுதிய கடிதம்) ஏழைகள் மீது பரிவு (மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?) சமத்துவத்திற்கான வேட்கை (ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்) அதிகார எதிர்ப்பு (பல பாடல்கள்/கட்டுரைகள்) எனச் சில உதாரணங்களைக் கூறலாம்.

நேரடியான உதாரணம் காந்தாமணியின் தொடக்க வரிகள்:” வெயிலொளி எந்தப் பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன” என்று காந்தாமணி என்ற கதையைத் தொடங்குகிறார் பாரதி.

இதில் கவனிக்க வேண்டிய ஓர் செய்தி உண்டு. காந்தாமணி பாரதி மறைவதற்கு ஈராண்டுகளுக்கு முன், செப்டம்பர் 1919ல் எழுதப்பட்ட கதை. 1905ல் ஷெல்லிதாசன் என்ற பெயரில் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கி 1921 அமரராகும் வரை ஷெல்லி பாரதி மீது தாக்கம் செலுத்தி வந்திருக்கிறார் என்பதற்கான வலுவான சான்று இது.

இன்னொரு சான்றும் உண்டு. தனது மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பு, 1921 பிப்ரவரி மாதம் பாரதி மகாமகம் என்று ஒரு கட்டுரை எழுதினார். அதில் எழுதுகிறார்: “ இந்திரனை தேவ தேவ என்ப. மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவருக்கு அவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி காளிதாசர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும் இங்கிலீஷில் ஷெல்லியையும் கவிகளின் கவி என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள்”

ஷெல்லியைப் பற்றி அப்படிச் சொல்பவர், நமது கவிகளின் கவியான பாரதி!    

கலைமகள் -மே 2024  

The post நாத்திகராய் பாரதி appeared first on Maalan.

  •  

பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள்

பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள்

மாலன்

பாரதியைக் குறித்துப் பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. இன்று பாரதி இயல் என்பது ஓர் துறையாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது. என்றாலும் கூட, விளக்கின் கீழ் படிந்து கிடக்கும் நிழல் போல, அவரது காசி வாழ்க்கை பற்றிய செய்திகள் நமக்கு இதுவரை அதிகம் கிடைக்கவில்லை.

காசியில் அவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பது குறித்து நமக்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் அவர் அங்கு நான்கு வருடங்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. அப்படி அவை குறிப்பிடுவதற்குக்கான அடிப்படை பாரதியின் தந்தையின் மறைவுக்குப் பின், அவரது அத்தையின் அழைப்பின் பேரில், அவர் காசி சென்றார் என்ற செய்தி மாத்திரமே.

அவரது தந்தை 1898 ஜூனில் மறைந்தார் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்புக் குறிப்பிடுகிறது. ஆனால் அதே நூலில், பாரதியாரின் சுதேச கீதங்கள் என்ற நூலின் முதற்பதிப்பில், நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘ஸ்ரீ சி.சுப்ரமணிய பாரதியார்  சரித்திரச் சுருக்கம்’ என்ற கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. அதில் “தந்தையார் இறந்த பிறகு தனக்கு ஆதரவும் துணையும் இல்லாமல் தன் தந்தையுடன் பிறந்த அத்தையார் அழைக்க 1901ஆம் வருஷம் காசிக்குப் போனார். அங்கே ஒரே வருஷம் இருந்தார்” என்று சோமசுந்தர பாரதி எழுதுகிறார். (பக் 1074)

“பாரதியார் 1902 ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று செல்லமாள் பாரதி அவரது ‘பாரதியார் சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார் (பக்கம் 32) ஆனால் அவரது நூலிலும் பாரதி எந்த ஆண்டு காசிக்குச் சென்றார் என்ற தகவல் இல்லை.

பலர் குறிப்பிட்டுச் சிலாகிக்கும்  ‘பாரதி சின்னப் பயல்’ வெண்பாக்கள் இரண்டும் 1897,1898 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு  யூகிக்கிறது. இளசை ஒருபா வொரு பஃது  என்ற பிரபந்தம், “1898ல் இயற்றப்பட்டது என்று பாரதியாரின் இளவல் சி.விஸ்வநாத ஐயர் அவர்களும் உறுதி செய்தார்” என்றும் அந்த நூல் குறிப்பிடுகிறது. அப்படியானால் 1898ல் பாரதி எட்டையபுரத்தில் இருந்திருக்க வேண்டும்.

இந்தத் தகவல்கள் நம்முள் சில கேள்விகளை எழுப்புகின்றன. அவை: பாரதி காசிக்குச் சென்றது எந்த ஆண்டு? பாரதி தனது தந்தை மறைந்த சில மாதங்களிலேயே, அதாவது 1898லேயே, காசிக்குச் சென்றாரா? அல்லது 1901லா? அவர் அங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தார்? நான்காண்டுகளா? ஓராண்டா? ஒருவேளை அவர் தந்தை இறந்த பின்னும் சில காலம் எட்டையபுரத்தில் ‘ஆதரவும் துணையுமின்றி’ வாழ்ந்தாரா? அப்படியாயின் அவரது அந்த நாட்கள் எப்படி இருந்தன? ஏதாவது எழுதினாரா? துணையின்றி துன்பத்தில் இருந்த ஒரு கவிஞன் எழுதாமல் இருந்திருக்கும் வாய்ப்புக்கள் குறைவு. அப்படி எழுதியிருந்தால் அவை எதைப் பற்றியதாக இருந்திருக்கும்?

அவரது தந்தை இறந்த போது அவருக்கு வயது 16. பாரதி நிலை குலைந்து போனார். வறுமை சூழ்ந்தது. அந்தச் சிறுவனுக்கு பயப்படாதே என ஆறுதல் சொல்லி வழிகாட்ட யாருமில்லை. மனது குழம்பிக் கிடந்தது. உள்ளத்தில் வலிமை இல்லாததால் உடலும் நைந்தது. கற்ற கல்வியும் கை கொடுக்கவில்லை. நான் ஏன் பிறந்தேன் என்ற விரக்தியில் ஆழ்ந்தார் என்பதை அவரது சுயசரிதை சொல்கிறது.

தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது

தரணி மீதினில் அஞ்சேல் என்பார் இலர்

சிந்தையில் தெளிவில்லை உடலினில்

திறனுமில்லை உள்ளத்தில் இல்லையால்

மந்தர் பால் பொருள் போக்கிப் பயின்றதால்

மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை

எந்த மார்க்கமும் தோன்றில என் செய்வேன்

ஏன் பிற்ந்தேன் இத் துயர் நாட்டிலே?

என்று தந்தை இறந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகும்  வடுவாக மாறாத அந்த வலியைப் பதிவு செய்கிறார் பாரதி.

பாரதியாரையும் அவரது தங்கையையும் அவரது அத்தை குப்பமாள் எட்டையபுரத்திற்கு வந்து காசிக்கு அழைத்துப் போனதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் விவரிக்கிறார்.  “ஆதரவற்ற பாரதியாரை அத்தை குப்பம்மாள் காசிக்கு வரும்படி அழைத்தார், அழைப்பிற்கிணங்கி பாரதியாரும் காசிக்குச் சென்றார்” என்று எழுதுகிறார் செல்லம்மாள் “அத்தையார் அழைக்க” பாரதி காசிக்குச் சென்றார் என்றுதான் சோமசுந்தர பாரதியாரும் எழுதுகிறார். அத்தை எட்டையபுரம் வந்து அழைத்துச் சென்றாரா? அல்லது பாரதியே தனியே காசிக்குப் பயணப்பட்டாரா?

பாரதியின் இளமைக் கால வாழ்க்கை பற்றிய குறிப்புகளை, அவரே எழுதிய சில பாடல்களில் காணமுடியும் ஆனால் அவை மிகச் சில. குறிப்பிட்டுச் சொல்வதானால் அவை, அவரது மூன்று சீட்டுக் கவிகள், கனவு என்ற அவரது கவிதை ஆகியன.  சீட்டுக் கவிகளில் ஒன்று கல்வி கற்க நிதி ஆதரவு கேட்டு, அவர் தந்தை இருந்த காலத்திலேயே, 1897ல் எட்டையபுர அரசருக்கு எழுதியது. மற்றவை புதுச்சேரியிலிருந்து வெளியேறி தமிழகம் திரும்பிய பின் எழுதியவை.(1919 என்று கருதப்படுகிறது)  

கனவு என்ற கவிதை, அவர் வாழ்நாளிலேயே, அவர் புதுச்சேரியிலிருந்த போது, 1911ஆம் ஆண்டில், தனது 29ஆம் வயதில், அவரே பதிப்பித்தது, அவர் வாழ்நாளில் அரசால் தடை செய்யப்பட்டஅது, அவர் மறைவுக்குப் பின் ‘சுயசரிதை’ என்று தலைப்பிட்டுப் பிரசுரிக்கப்பட்டது.  பாரதி அறுபத்தாறு என்னும் கவிதையை அவரது தன் வரலாறு கூறும் கவிதையாக தொகுப்புகளில் காணப்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அது அவர் புதுச்சேரியில் சந்தித்த சில சித்தர்கள், துறவிகள் பற்றியது. இவை எதுவும் அவரது காசி வாழ்க்கை பற்றிக் கூறுவதில்லை.

பாரதி காசியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் நம்மிடம் இல்லை என்ற போதிலும். எந்த ஒரு படைப்பாளிக்கும் அவரது படைப்பே வாழ்க்கையை விட முதன்மையானது என்பதால் அது அளிக்கும் ஆதாரங்கள் பரிசீலிக்கத் தகுந்தவை. பாரதியின் படைப்புக்களில் காசியின் தாக்கம் என்ன?

காசியில்தான் அவர் ஆடை அணியும் பாணி மாறியது. சிகை போய் தலைப்பாகை தலையில் ஏறியது. அவரது மொழிப் புலமை விரிவு கண்டது. அவரது பார்வை விசாலமாயிற்று. மொழி மதம் ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கான விதைகள் மனதில் தூவப்பட்டன. தேசிய எண்ணங்கள் அவர் உள்ளத்தில் ஒளியேற்றத் தொடங்கின.

ஒரு சிற்றூரில், மரபான நம்பிக்கைகளில் பற்றுக் கொண்ட ஓர் அந்தணக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஓரு சிறுவனை,  கண்மூடித்தனமான மத ஆசாரங்களை ஏற்க மறுக்கும், முற்போக்கான, நவீன இளைஞனாக மாற்றியது காசி. தனிமனிதத் தாக்குதல் அல்லது புகழ்ச்சி, ஆகியன பாடு பொருள்களாக அமைந்த வெண்பா, பிரபந்தம், சீட்டுக்கவி என்று யாப்பமைந்த செய்யுள்களை எழுதி வந்த புலவனை சொல்புதிதாய் பொருள் புதிதாய் அமைந்த ஜோதி மிகு கவிதைகளை எழுதிய மகாகவியாக மாற்ற அடித்தளம் அமைத்தது அவரது காசி வாழ்க்கை. அந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தவை புத்தகங்கள்.

எட்டையபுரத்தில் இருந்த போதே, அதாவது அவரது 10,12 வயதிலேயே பாரதிக்கு புத்தக வாசிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது, தோழர்கள் இன்றி புத்தகக் கூட்டங்களே அவருக்கு அப்போது தோழர்களாய் இருந்தன. ’தூண்டு நூற்கணத்தோடு தனியனாய் தோழமை பிறிதின்றி வருந்தினேன்’ என்கிறார் பாரதி.

காசியில் இருந்த போது பாரதேந்து ஹரீஷ்சந்திரா என்ற இந்திக் கவிஞரின் கவிதைகள் பாரதிக்கு நூல்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியிருக்க வேண்டும். பாரதி காசிக்குச் செல்வதற்கு முன்பே, 1885ல் ஹரீஷ் சந்திரர் காலமாகிவிட்டார். ஆனால் ஹரிஷ் சந்திரர் அந்த காலகட்டத்தில் அங்கு பிரபலமாகத் திகழ்ந்த கவிஞர், பத்திரிகையாசிரியர், நாடகாசிரியர். இன்றும் அவரை நவீன இந்தி இலக்கியத்தின் தந்தை எனக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள் (Diana Dimitrova (2004). Western tradition and naturalistic Hindi theatre) செய்தி அறிக்கைகள், ஆசிரியருக்குக் கடிதங்கள், நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்ற நவீன காலத்து வடிவங்களைப் பயன்படுத்தி பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக மக்களிடம் கருத்துக்களை உருவாக்க முயன்றவர் என்பதால் அவரை யுகக் கவி (யுக் சாரண்) என்று வர்ணிக்கிறார்கள். அவர் கவி வசன சுதா, ஹரிஷ்சந்திரா பத்திரிக்கா, பால போதினி என்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார். இவற்றில் ஒன்று பெண்களுக்கான பத்திரிகை என்று அவரது வாழ்வையும் படைப்புகளையும் விரிவாக ஆராய்ந்த பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் வசுதா டால்மியா கூறுகிறார் (The nationalization of Hindu traditions : Bharatendu Harischandra and nineteenth-century Banaras.)

அவர் நாட்டின் வறுமை, அடிமைத்தனம், ஆளுவோரின் சுரண்டல், அவர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள்,  மத்திய வர்கத்தின் மெத்தனம் இவற்றைப் பற்றி எழுதியவர். வைணவ மரபைப் பின்பற்றும் பழமையில் ஊறிய குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற போதும் இந்து மதத்தில் இருந்த சில அர்த்தமற்ற சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை விமர்சித்து இந்து மதத்தில் சீர்திருத்தங்களை விழைந்தவர். ஆனால் பக்தி இயக்கத்தை ஆதரித்தார். அவர் எழுத்தில் அங்கதம் உண்டு. காதல் கவிதைகள் கொண்ட பல தொகுதிகளை எழுதியவர்  எனக் குறிப்புகள் சொல்கின்றன.

காசியிலிருந்து திரும்பிய பின் பாரதி எழுதிய படைப்புகளில் இந்த எல்லா அம்சங்களும் இருப்பதைக் காணமுடியும்.  

ஹரீஷ்சந்திரரின் எண்ணங்கள் பாரதியின் கவிதைகளிலும் எழுத்துக்களிலும் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.

விவித்⁴ கலா ஶிக்ஷா அமித், ஜ்ஞான் அநேக் ப்ரகார்.

ஸப்³ தே³ஸன் ஸே லை கர்ஹூ, பா⁴ஷா மாஹி ப்ரசார்

என்பது ஹரிஷ்சந்திரரின் கவிதை வரி. இதன் பொருள்: அறிவு பல வகைப்பட்டது; அது எல்லா நாடுகளிலிருந்தும் பெறப்பட வேண்டும். அவை தாய் மொழியில் பரப்பப்பட வேண்டும்.

இவை சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் (தமிழ்த் தாய்) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் (தமிழ்) என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகின்றன.

நிஜ் பா⁴ஷா உந்நதி அஹை, ஸப்³ உந்நதி கோ மூல் .

பி³ன் நிஜ் பா⁴ஷா-ஜ்ஞான் கே, மிடத் ன ஹிய் கோ ஸூல்

என்பது ஹரீஷ்சந்திரரின் வரி.

இதற்கு ‘எல்லா வளர்ச்சிக்கும் மூலம் தாய்மொழி, தாய்மொழிதான் மனப்புண்ணை ஆற்றக் கூடியது’ என்று பொருள்.

தேசியக் கல்வி என்ற கட்டுரையில் பாரதி எழுதுகிறார்: ““தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி. இத்தேசத்து ஜனங்களின் கல்வி வித்து சத்தாக இருக்க வேண்டுமேயானால் மக்கள் தங்கள் தாய்மொழியிலே கல்வி தானம் பெற வேண்டும். அதுவே சகல வளர்ச்சியின் விஸ்பரூபத்திற்கும் வேராகும்”.

 அதே கட்டுரையில் பாரதி எழுதுகிறார்: “அ…………………………………………………………….ன்”

மேலே காட்டிய குறியின் பொருள் யாது? தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாவ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பதுபொருள்…பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; “ஸ்லேட்””பென்சில்” என்று சொல்லக் கூடாது.”

தமிழருக்கு என்ற இன்னொரு கட்டுரையில், “ தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்” என்கிறார்.

ஹரிஷ் சந்திரருக்கும் பாரதிக்கும் உள்ள இந்த ஒற்றுமைகள் தற்செயலானவைகளாகக் கூட இருக்கலாம். வங்க மறுமலர்ச்சியின் காரணமாக அன்று நாட்டில் எழுட்சியுற்று வந்த தேசிய உணர்வின் வெளிப்பாடாக, காலத்தின் குரலாகக் கூட, இருக்கலாம். 

ஹரீஷ்சந்திரர், பாரதி இருவரின் படைப்புகளில் காணப்படும் அங்கதச் சுவையை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்திற்காக ஆராய்ந்தவரும் தற்போது சிங்கப்பூரில் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வரும் ஆசிரியருமான முனைவர் மணிவண்ணன், என்னுடனான தனி உரையாடலில், “ஹரிச்சந்திரர் பாரதியிடம் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது. பாரதியார் ஹரிச்சந்திரர் பற்றி அறிந்திருக்க இயலும் . ஆனால் பாரதியின் படைப்பில் அதற்கான எவ்வித சான்றும் இல்லை” என்கிறார். ஆனால் பாரதியின் வாழ்க்கையை ஓரு புதினத்திற்கு உண்டான நடையில் “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி” என்ற நூலை எழுதியுள்ள எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பாரதி தனது காசி வாழ்க்கையில் ஹரீஷ்சந்திரர் பால் ஈர்க்கப்பட்டதாக எழுதியிருக்கிறார்.

எது உண்மை? இதுவரை அதிகம் வெளிச்சம் பெறாத பாரதி வாழ்வின் நிழலான இன்னொரு பகுதி இது.   

The post பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள் appeared first on Maalan.

  •