Reading view

அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3


அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்படுமா? இந்திய அளவில் பிராமணர்கள் அறிவார்ந்தவர்கள் என்றும், உலக அளவில் எடுத்துக்கொண்டால் யூதர்கள்தான் புத்திசாலிகள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இதற்கு மரபணுக்களைக் காரணமாக முன்வைத்து பல கட்டுரைகள் இணையத்தில் இருக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அறிவாற்றலுக்கு மரபணுச் சூழல் இரண்டுக்கும் பங்கிருக்கிறது. மரபணு அளவில் ஐகியூ கடத்தப்படும். ஐகியூ என நான் சொல்வது, அறிவாற்றல் கிடையாது. நுண்ணறிவு.

பெற்றோரின் நுண்ணறிவு அப்படியே வந்துவிடுமா?

அப்படியே வராது. ஓர் ஆய்வு 30 சதவிகிதம் என்கிறது. இன்னொரு ஆய்வு 32 சதவிகிதம் என்கிறது. அதையும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தச் சதவிகிதம் அனைத்தும் நாம் எடுத்திருக்கும் தரவுகள் அடிப்படையில்தான். நாம் ஒரு 100 பேரை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் 1000 பேரை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதுமட்டுமில்லாமல் இங்கு ஆய்வுகள் அனைத்திலும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்துதான் சோதனை செய்வார்கள். சென்னை என்றால் சென்னை மட்டும்தான். இங்கு சென்னைக்கும் பெங்களூருவுக்குமே வேறுபாடுகள் இருக்கும். இதனால் நாம் உறுதியான முடிவுக்குவந்துவிட முடியாது. வேண்டும் என்றால் ஆரம்பகட்ட சோதனையாக இதைக் கருதலாம்.

ஐகியூ கடத்தப்படுவது உண்மை. ஆனால் கற்றல் கிடையாது. அறிவாற்றல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தால் புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.

பத்து வருடத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கும் இப்போது பிறந்த குழந்தைக்கும் புத்திசாலித்தனம் வேறுபடுவதாக தோன்றுகிறதே. பொதுவாக எல்லோருடைய குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் அதிகரித்திருகிறது என்று சொல்லலாமா? அல்லது குறிப்பிட்ட சமூகத்தை, வர்க்கத்தை சார்ந்த மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமா?

குறிப்பிட்ட சமூகம், வர்க்கம் என குறுக்க முடியாது. இது பொதுவான மாற்றம். ஐகியூ என்பது ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையில் கட்டாயமாகக் கூடும். அதுவும் பிழைத்திருக்க ஒரு காரணம். சுற்றுச்சூழலுடன் பொருந்தி வாழ வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் அடாப்ட் செய்ய வேண்டும் அல்லவா? பொதுவாக அப்பா அம்மாவைவிட குழந்தைகள் அறிவில் ஒரு படி முன்னேறிதான் இருப்பார்கள். இது சூழல்சார்ந்தது எல்லாம் கிடையாது. கட்டாயம் முன்னேறிதான் இருக்க முடியும். காரணம், அந்தப் பத்துவருட இடைவெளியைத் தாண்டுவதற்கு, அப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ள இயற்கை ஏற்படுத்தும் வழி இது.

சிறந்த மரபணுக்களை மட்டும் தேர்வு செய்து சிறந்த மனித தலைமுறையை உருவாக்குவோம் என சொல்லும் Eugenics பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

குறிப்பிட்ட சில பண்புகளை உயர்ந்த பண்புகள் என மனிதர்கள் நினைக்கிறார்கள். இதை மட்டும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தினால் போதும் எனச் சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தாக்கம் 19ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்று இன்றும் நிலவுகிறது. ஆனால் இது தவறானது. இயற்கை ஒரு பண்பைக் கொடுப்பதற்கு எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. கருப்பு நிற தோல் மட்டமானது என்பது Eugenics கருத்து. ஆனால் இயற்கைதானே அதையும் தேர்வு செய்திருக்கிறது. பிறகு எப்படி அதைக் குறைந்த பண்பாகச் சொல்ல முடியும்? Eugenics என்பது அறிவியலைத் துணைக்கு இழுத்துக்கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த முயலும் கருத்து.

நாம் உளவியல் ரீதியாகவே வெள்ளை தோலால் ஈர்க்கப்படுகிறோம் என்று சொல்லலாமா?

கிடையவே கிடையாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் யார் அதிகாரத்தில் இருந்தார்கள் என்றால் வெள்ளையர்கள். அவர்களை அடிப்படையாக வைத்தே நாம் வெள்ளையை வழிபட தொடங்கிவிட்டோம். இதை வேறு உதாரணங்களிலும் சொல்லலாம். பெண்களை ஏன் பலவீனமான பாலினம் என்கிறோம். அறிவியல் ரீதியாக அதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. அது உளவியலால் வந்ததா? இல்லை. அதை ஒரு சமூகம் வலியுறுத்த வலியுறுத்த நாம் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆப்பிரிக்கப் பெண்களைக் கீழ்மைப்படுத்தி Polyandry போன்ற விஷயங்களைக் கடைபிடிப்பதால் அங்கு பாலியல் ரீதியான நோய்கள் அதிகம்தான் வருகின்றன.

அப்போது ’உயர்தர’ என்கிற விஷயமே போதிக்கப்பட்டது என எடுத்துக்கொள்ளலாமா?

ஆம்.

அப்படிப் பார்த்தால் தூய இனம் என்ற ஒன்று கிடையாதா?

கிடையவே கிடையாது. நமது சருமம் ஆப்பிரிக்க வம்சாவளியில் இருந்து வந்தது. இதுபோல எப்படிப் பார்த்தாலும் ஏதாவது ஒரு பண்பு வேறோர் இடத்தில் இருந்துதான் வந்திருக்கும். மனித இனமே கலப்பினத் தொகுதிதான். தூய்மை என்பது கிடையாது.

அப்போது உயர் குலம், தாழ் குலம் என்று சொல்வது எல்லாம்?

உதார். எங்கள் ஆசிரியர், கெங்கிஸ்கான் டி.என்.ஏதான் வடக்கு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பார். ஆனால் அவர்கள்தான் தங்களைத் தூய இனத்தினர் எனச் சொல்லிக்கொண்டு இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள்.
தூய இனம்போல் திறமையும் மரபு ரீதியாகத் தொடராது. ஒரு குறிப்பிட்ட சாதிதான் புத்திசாலியாக இருக்கும். குறிப்பிட்ட சாதி ஆளும் திறன் வாய்ந்தது. ஒரு சாதிக்குத் திறமையே கிடையாது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அதேபோல ரத்த உறவு (Consanguinity) தப்பு. பல மரபியல் நோய்களுக்கு இதுதான் காரணம்.

உறவினர்களுள் முதல் வட்டத்திற்குள் திருமணம் செய்வதற்கும், ஒரே தலைமுறைக்குள் திருமணம் செய்வதற்கும், ஒரு தலைமுறை மாற்றிச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, தாய்மாமன் என்பது முதல் தலைமுறை. அக்காவுடைய பெண் என்பது இரண்டாவது தலைமுறை. இந்த இரண்டு பேருக்குள் திருமணம் செய்யக்கூடாது. அத்தைப் பெண் மாமா பெண் என்றால் இருவரும் ஒரே தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ஒரே வயது அளவில்தான் இருப்பார்கள். ஆனால் அதில் செய்வதுமே பிரச்னை இருக்கிறது. ரொம்ப நெருக்கமான உறவுக்குள் திருமணம் செய்வது சிக்கல். ஆனால் கொஞ்சம் தூரத்து உறவினராக இருந்தால் பிரச்னை இல்லை. சொந்த அத்தை கிடையாது, சொந்த மாமா கிடையாது என்றால் பிரச்னை இல்லை.

அதேபோல இஸ்லாமியச் சமூகத்தில் அம்மா வழி சித்தி மகன்கள், தாய் வழியில் வரும் சகோதரியின் மன்களைத் திருமணம் செய்வார்கள். அதையும் செய்யக்கூடாது. Consanguity எதற்கு வந்தது என்றால், சொத்து போய்விடக்கூடாது. சொந்தம் போய்விடக்கூடாது என்பதால்தான். ஆனால் இப்போது அதுதான் பாரம்பரியம். பண்பாடு என்பதுபோன்று ஆகிவிட்டது.

இதேபோல சாதிக்குப் பொது பண்பு விதிப்பதும் மரபியல் ரீதியில் பொய். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள்தான் குற்றவாளிகள், தீமை செய்வார்கள். இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்கள் நல்லவர்கள் என்று முத்திரை குத்துவதும் மரபியலுக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தாலே கெட்டவன் என முத்திரை குத்திவிடுகிறார்கள். அவர்களை நல்லவர்கள் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வது இல்லை. ஒருவன் குற்றச் செயல் செய்வது ரத்தத்திலேயே ஊறிப்போவது என்று சொல்வது தவறு. அதேபோல இறைச்சி சாப்பிடுபவர்கள் வன்முறையாக இருப்பார்கள் என்பதும் தவறு.

சில குறிப்பிட்ட சாதியினர் உயர்ந்த பதவியில் இருப்பதற்கும் மரபியல்தான் காரணம் எனச் சொல்வதும் உண்டு. உண்மையில் அவர்கள் எத்தனை தலைமுறையாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சிறுவன் புதிதாகப் பள்ளிக்குச் செல்வதற்கும், பத்துத் தலைமுறையாகச் செல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இது மரபியல் கிடையாது. சூழல்தான் காரணம். புதிதாகச் செல்பவன் பள்ளியில்தான் படிக்க முடியும். ஆனால் பத்துத் தலைமுறையாக செல்பவனுக்கு சொல்லிக் கொடுக்கப் பத்துத் தலைமுறையும் இருக்கும். ஐகியூ மரபணுவில் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த, Enhance செய்வதற்கான வாய்ப்பைச் சூழல்தான் தருகிறது.

நான் ஒரு என்.ஜி.ஓவில் பணியாற்றினேன். குற்றச் செயல் செய்த மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். அவர்கள் நம்மிடம் எந்த வன்முறையும் காட்ட மாட்டார்கள். ஒன்றை எழுதி முடித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றால் அமைதியாக பயத்துடன் எழுதி காட்டிவிட்டுதான் செல்வார்கள். ஆனால் வெளிச் சூழலில் வன்முறை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதற்குக் காரணம். அவர்கள் ஒரு மாணவனை ’நீ தத்தி’, ‘அப்பன் மாதிரி’ என்றெல்லாம் சொல்வதால் அவர்கள் உளவியலால் பாதிக்கப்பட்டு படிப்பு மேல் அக்கறையே இல்லாமல் போய்விடுகிறது.

வெறி, கோபம் எல்லாம் மரபணுக்களில் வெளிப்படுமா?

அதற்கான தன்மை மரபணுக்களில் இருந்தாலும் வெளிப்படுவது சூழலைப் பொறுத்து, வாழ்வியலைப் பொறுத்துதான் அமைகிறது. உளவியல், நடத்தை ஆகிய விஷயங்களை மரபணுவும் சரி, சுற்றுச்சூழலும் சரி சமவிகிதத்தில் பாதிக்கும்.

இவற்றில் எது அதிகம் தாக்கம் ஏற்படுத்தும்?

சொல்ல முடியவில்லை. மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள்கூடக் காரணமாக இருக்கலாம். இன்றைய மரபியல் உலகில் முக்கியமான விவாதமே அதுதான். மரபியல், சுற்றுச்சூழல், உளவியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு.

நாம் நேர்மறை எண்ணங்களை விதைத்தால் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்களே?

கிடையவே கிடையாது. நமது உடலின் செயல்பாடுதான் மரபணு என்பது. நம் உடல் எப்படி இயங்குகிறது. நமக்கு வேண்டிய இன்சுலின் வெளியாகிறதா? கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்கிறதா என உறுதி செய்வதுதான் மரபணுவின் வேலை. பிழைத்திருத்தல், தகவமைத்தல், இயங்குதல் ஆகியவற்றுக்கானது மரபணு. அது பிறப்பிலேயே கடத்தப்படுகிறது. அவை இயங்குவதற்கு சுற்றுச்சூழல் பங்களிக்கிறது. ஆனால் எண்ணங்களால் மாற்றம் நிகழும் என்பதில் எல்லாம் உண்மை இல்லை.

தமிழ்ச் சமூகத்துக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு எத்தகையது?

தமிழ் சமூகத்துக்கும் ஆறிவியலுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான். தொல்காப்பியத்திலேயே அதற்கான கூறுகள் இருக்கின்றன. இதை நான் என் நூலிலும் எழுதியிருக்கிறேன். அதேபோல பஞ்சாகத்தையும் சொல்லியாக வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்றே ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காலத்து அறிவியலை அந்தக் காலத்துச் சூழலுடன் பொறுத்திப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அதை இப்போது கொண்டு வந்து நம்பச் சொன்னால் ஏற்க முடியாது. இதைச் சொல்லிதான் நிறைய போலி அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது.

மரபியலில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதா?

மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா என்று கேட்டால் சந்தேகமே. ஆனால் ஆய்வு ரீதியாக வந்துவிட்டது. குறிப்பாக மூலக்கூறு அளவில் ஆய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. இப்போது நான் ஒரு விஷயம் கண்டுபிடிக்கிறேன் என்றால் அதைச் சார்ந்து இன்னொரு ஆய்வு நடைபெற்றால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக ஒரு புரதம் இன்னொரு புரதத்தோடு இணைந்து இயங்கும்போது எவ்வளவு வலுவாக ஊடாடுகிறது. எந்த இடத்தில் அந்த ஊடாட்டம் நிகழ்கிறது என்பதை எல்லாம் இதில் அறிய முடியும்.

செயற்கை நுண்ணறிவின் முக்கியமான நோக்கம் என்னவென்று கேட்டால், இப்போது என்னிடம் ஒரு புரதம் இருக்கிறது. அந்தப் புரதச் செயல்பாட்டைத் தடுப்பதற்கு என்னிடம் 100 தடுப்பான்கள் (Inhibitors) இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். பரிசோதனைக் கூடத்தில் ஒவ்வொரு தடுப்பானாகச் சோதித்துப் பார்த்தால் எது சரியான தடுப்பான் எனக் கண்டுபிடிப்பதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிடும். இந்த ஆய்வைத் துரிதப்படுத்துவதற்கு இப்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. அந்த நூறு தடுப்பான்களைக் கொடுத்து, அதன் தன்மை எல்லாவற்றையும் தந்து, இவற்றில் பத்து சிறந்த தடுப்பான்களைக் கொடு என்று கேட்டால் அதைச் செயற்கை நுண்ணறிவு ஊகித்துச் சொல்லிவிடும். அந்தப் பத்துத் தடுப்பான்களை நாம் எடுத்து சோதனை செய்யலாம். இதனால் நேரமும் குறையும். செலவும் குறையும். செயற்கை நுண்ணறிவு இருந்ததால்தான் கோவிட் போன்ற பெருந்தொற்றை வெகு சீக்கிரமாக நாம் தடுத்து நிறுத்தினோம்.

எதிர்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதாவது ஜெனிட்டிக் கிட் போன்றவை இருக்குமா?

இப்போதே இருக்கிறது. 23andme. நீங்கள் உங்கள் எச்சில் மாதிரியைத் தந்தால் போதும், அதில் உள்ள டி.என்.ஏவை ஆய்வு செய்து, உங்கள் மூதாதையர் யார், யாரெல்லாம் உங்கள் வழி வந்தவர்கள், உங்கள் நெருங்கிய உறவினர் எந்தப் பகுதிகளில் எல்லாம் இருக்கிறார்கள் என எல்லாவற்றையும் சொல்லிவிடும்.

ஆறு மாதத்தில் உங்களுக்கு இந்த நோய் வரப்போகிறது. ஒரு வருஷத்தில் இந்த நோய் வரப்போகிறது. கட்டாயம் இந்த நோய் வந்துதான் நீங்கள் சாகப்போகிறீர்கள் என்பதையெல்லாம் ஊகித்துச் சொல்லிவிடும். 23அண்ட்மீயின் முக்கியப் பயன்பாடு மரபணு சார்ந்த நோயை ஊகிப்பது. உங்கள் மரபணுவில் எந்த அளவு பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்து இதைச் செய்கிறது.

டி.என்.ஏவை ஆய்வு செய்யும்போது என்னவெல்லாம் கண்டடையலாம்? நோயைக் காண்டடைய மட்டும்தான் டி.என்.ஏவா?

நமது பண்புகளைக் கண்டுபிடிக்கலாம். அதேபோல குழந்தைக்கு யார் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எனப் பல வழக்குகளில் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. தடயவியல் துறையில் பயன்படுகிறது. கைரேகைபோல டி.என்.ஏவும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும் இல்லையா? இதனால் குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் டி.என்.ஏ தரவுகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம்.

கைரேகை தரவுகள் போல டி.என்.ஏ தரவுகள் இருக்குமா என்ன?

இருக்கிறது. NCBI எனும் இணையதளத்திற்குச் சென்று எல்லா தரவுகளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் தரவுகள் மட்டுமே.

நாம் மூதாதையரைத் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?

இந்தியாவைப் பொறுத்தவரை கிடையாது. இந்தியாவில் யாரும் அதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதில்லை. இந்தியாவில் ஜனத்தொகையை மையப்படுத்தி செய்யும் ஆய்வுகள் அத்தனையும் நோய் சார்ந்தே இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் செய்திருந்தால் ஆரியர்கள், திராவிடர்கள் பஞ்சாயத்தே வந்திருக்காது.

மானுடவியல் பார்வையில் மரபியல் ஆய்வுகள் இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது?

சுத்தமாக எதிர்காலம் கிடையாது. ஒருசில ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் பெரிய அளவில் நடப்பதில்லை. மானுடவியல் மட்டுமல்ல, பொதுவாகவே மரபியலுக்குப் பெரிய எதிர்காலம் கிடையாது. இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. இந்தியாவில் மரபியல் நோய்கள் அதிகம். ஆனால் ஆய்வுகள் குறைவு. இரண்டுமே இருக்கும் நிலை இந்தியாவில் தொடர்கிறது. அதற்கான நிதிகள் வருவதே இல்லை. அதேபோல நிறுவனங்களும் முக்கியத்துவம் இல்லை.

ஆனால், கோவிட் பெருந்தொற்றில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது‌. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவ ஆய்வுகளில் பல நெறிமுறை கெடுபிடிகள் இருக்கின்றன. ஆனால், வளரும் நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு முன்னுதாரணமாகத்தான் இருக்கிறது. இதுவே வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியா இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

பெரும்பாலும் இந்திய ஆய்வுகள் இன்னும் நேரடி மக்கள் பயன்பாட்டை எட்டவில்லை. ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காகத்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் அப்படிக் கிடையாது. உதாரணமாக, ஐரோப்பாவில் மரபியல் ஆலோசனை என்பது மருத்துவத்தில் ஒரு பகுதி. இந்தியாவில் அப்படிக் கிடையாது.

ஏன் வெளிநாடுகளில் மட்டும் அதிகம்?

அவர்கள் குடும்ப அமைப்பு அப்படி. அவர்கள் குடும்ப அமைப்பே இடியாப்பச் சிக்கலைப்போன்றது. Half brother, Half sister, Step brother, Step Sister போன்ற உறவுகள் நிறைய இருக்கின்றன. மூலம் தெரியாத விதமாக அவர்களுக்குள் திருமணம் நடந்து, அவர்களுக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு மரபியல் குறைபாடு வரக்கூடாது என்பதால் அவர்கள் ஒவ்வொன்றையும் மருத்துவ ரீதியாக ஆய்வு செய்த பின்னரே தொடங்குகிறார்கள்.

ஆனால், இங்கு அப்படிக் கிடையாது. இங்கு இருக்கும் மூன்று தலைமுறை வரைபடத்தை வரைந்தோம் என்றால் அது நேரடியாக இருக்கும். வேறு எங்கும் இணைப்பே இருக்காது. அப்படி இணைப்பு இருந்தாலும் தாய்மாமன் வழியில் மட்டுமே இருக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படிக் கிடையாது. இதனாலேயே வெளிநாடுகளில் மரபியல் ஆலோசனை படிப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். நிறையத் தெரிந்துகொள்ள முடியும். நிறையக் கண்டுபிடிக்க முடியும்.

இங்கு மரபியல் குறைபாடு இருக்கிறது என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கருவைக் கலைக்க மாட்டார்கள். உணர்வே இல்லாத ஒரு குழந்தையைக் கலைப்பதற்கும் அதற்கு எல்லாவற்றையும் கொடுத்து வலியுடன் வாழ வைப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. உணர்ச்சிகள், கலாசாரக் கெடுபிடிகள் காரணமாக இங்குள்ள பெற்றோர்கள் அவ்வாறு செய்வதில்லை. வெளிநாடுகளில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு மரபியல் நோய் இருக்கப்போகிறது என்றால் யோசிக்காமல் கலைத்துவிடுவார்கள்.

இங்குள்ள கலாசார, மத ரீதியான நம்பிக்கைகளால் சிகிச்சை மட்டுமல்ல, சோதனைகளும் பாதிக்கப்படுகிறது. சிலர் பரிசோதனை செய்யவே முன் வருவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவின் மருத்துவக் கொள்கைகள் மரபியல் அடிப்படையில் இருக்கிறதா?

மரபியல் ஆய்வுகளுக்கு என்று தனிக் கொள்கைகள் இருக்கிறது. PCPNDT என்று தனியாக ஒரு சட்டம் இருக்கிறது. அதில் மரபியல் ஆலோசகரின் வழிகாட்டல், நெறிமுறைகள், யாரெல்லாம் மரபியல் ஆலோசனை வழங்கலாம், எங்கு செய்யலாம், எவை எல்லாம் மரபியல் குறைபாடுகள், அதில் எவை எல்லாம் சரி செய்ய முடியும் எனச் சொல்லியிருப்பார்கள்.

மரபியல் குறைபாடுடையவர்கள் எங்கு சென்று அணுக வேண்டும்?

Centres for Excellence என இடங்கள் இருக்கின்றன. சில மருத்துவமனைகளை அரசாங்கமே Centre for excellences என நிர்ணயித்திருக்கும். இங்கு சென்று மரபியல் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, தமிழ்நாட்டில் ஹீமோபிலியா நோய்க்கு ராஜிவ் காந்தி மருத்துவமனை ஒரு சிகிச்சை மையம். கட்டணம் கிடையாது. அதேபோல AIIMS ஒரு சிகிச்சை மையம். இப்படிப் பல இடங்கள் இருக்கின்றன. குஜராத்தில் Gujarat State Biotechnology Mission. அங்கு சென்று நாம் டி.என்.ஏவை சீக்வென்ஸ் செய்துகொள்ளலாம். அதேபோல மாநில அரசுகளும் இதேபோன்ற மருத்துவமனைகளை அங்கீகரித்துள்ளன. இன்னொன்று Rare Diseases Registry என்று ஒன்று இருக்கிறது. அங்கு சென்று நாம் நமக்கு இருக்கும் மரபியல் நோயைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது அதேபோலக் குறைபாடுகள் உடையவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்கள். இந்த நோய்களுக்கு உதவும் என்.எஜி.ஓக்கள், காப்பீடு நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைத்துவிடுவார்கள்.

பண்டையக் காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?

நாம் அப்போது இருந்த ஆரோக்கியத்தையும், இப்போதுள்ள ஆரோக்கியத்தையும் ஒப்பிடத் தரவுகள் கிடையாது. மேலும் எதை வைத்து நம்மால் ஒப்பிட முடியும்?

மிக்சி, கிரைண்டர் எல்லாம் இல்லாத காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே?

எதை வைத்துச் சொல்கிறார்கள்? அப்போது கழிப்பறைகள் கிடையாது. சுகாதார வசதிகள் கிடையாது. மாதவிடாய் வந்தால் பயன்படுத்த நேப்கின்கள் கிடையாது. பல ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்திருக்கும். வயதாகி இறந்ததைப்போன்று பாம்பு கடித்து, பூச்சிகள் கடித்து இறந்தவர்களும் அதிகம். அதற்கான தரவுகளும் நம்மிடம் கிடையாது. இன்னொன்று கர்ப்பத்தின்போது, குழந்தை பிறப்பின்போது இறந்தவர்கள் அதிகம். இந்த இரண்டு வாழ்வியலையும் ஒப்பிட முடியாது.

இயற்கை மரணம் இப்போதுதான் அதிகம். இது எளிமையான லாஜிக்தான். அப்போது ஒரு நோய் வந்தால் குணப்படுத்த முடியாது. காலரா, பெரியம்மை, போலியோ போன்ற நோய்கள் வந்தால் இறந்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. மனித வாழ்நாள் நீண்டிருக்கிறது. இயற்கை மரணம் அதிகரித்திருப்பது இப்போதுதான். மேலும் நம்மிடம் இருக்கும் தரவுகள் அனைத்தும் நகரத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. கிராமங்களில் மாசு கிடையாது என்கிறோம். என் அம்மா பிறந்த ஊரில் தொண்டையில் புற்றுநோய் வந்து 11 பேர் இறந்துள்ளனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது? நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமே தரவுகளைத் தருவதால் கிராமத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை.

மரபியல் மாற்றப்பட்ட உணவுப்பொருட்களால் நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்குமா?

நாம் ஒரே கோணத்தில் எதையும் அணுக முடியாது. நாம் செயற்கையாக ஏற்படுத்தும் ஒரு மரபியல் மாற்றத்திற்கு எதிராக இயற்கையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதனால்தான் பிடி கத்திரிக்கா, பிடி காட்டன் போன்றவை மிகப்பெரிய பிரச்னையை விளைவிக்கக்கூடியவையாக இருக்கின்றன. அவற்றால் நேரடி நோய்கள் உடலுக்கு வராது என்று விஞ்ஞானிகள் வாக்கு கொடுக்கலாம். ஆனால் இவை உணவு சங்கிலியைப் பாதிக்கின்றன. அதனால் வேறு விதமான நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆய்வுகளும் மனிதர்களை மையப்படுத்தியே இருக்கின்றன. மனித நலனை நோக்கித்தான் இருக்கின்றன. அவை மற்ற உயிர்களுடனான சமநிலையை நோக்கி இருப்பதில்லை. இவைதான் நமக்கும் இயற்கைக்கும் இடையிலான வேறுபாடு. இயற்கை ஒரு மாற்றத்தை எல்லா உயிரினங்களை நோக்கிய சமத்துவ நோக்கில் பார்க்கிறது.

உதாரணம் சொல்கிறேன். பூச்சிகள் தாரவங்களைப் பாதிக்கிறது அல்லவா? தாவரங்களுக்கு இயற்கையாகவே பூச்சித் தாக்குதலைத் தடுக்கும் எதிர்ப்பு இயக்கமும் இருக்கும். அதேபோல அந்த எதிர்ப்பை உடைக்கும் குணமும் பூச்சிகளுக்கு இயற்கையாக வழங்கப்பட்டிருக்கும். இது ஒருவகை பொதுவான பண்பு. இது இயற்கையாக நடப்பது ஒரு பிரச்னையும் இல்லை. இது தவிர பூச்சிகள் மூலம்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. பூச்சிகள் இல்லை என்றால் செடிகள் எப்படிப் பெருகும்?

ஆனால் நாம் இந்தப் பூச்சித் தாக்குதலைத் தடுக்க, தாவரங்களின் மரபணுக்களில் இருக்கும் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்துவிடுகிறோம். ஆனால் இது உணவுச் சங்கிலிச் சமநிலையைக் குலைத்துவிடுகிறது. இதனாலேயே நீண்ட நோக்கில் பார்க்கும்போது அந்தத் தாவரத்தால் பிழைக்க முடியாது. சில சமயங்களில் அதை உண்ணும் நமக்கும் ஏதாவது ஒரு பிரச்னை வரும். இந்த எதிர் மரபணுப் பிறழ்வு எங்கு நடக்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் பெரிய வில்லங்கமே.

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பண்பை நாம் வளர்த்தேடுப்பது. உதாரணமாக நெற்பயிற்கள் பயிரிடும்போது அதில் எந்த நெற்மணிக்கள் பெரிதாக இருக்குமோ, அதிக விளைச்சலைத் தருமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் பயிரிடுகிறோம். அதன்மூலம் நாம் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு தனி ரகத்தையே உருவாக்குகிறோம். இதுவும் பிரச்னைதான்.

இந்தத் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எந்த அளவுக்கு செல்கிறது என்பதுதான் பிரச்னை. எதற்காக இயற்கை இரண்டு வகைகளை உருவாக்க வேண்டும்? குட்டைச் செடி, உயரமான செடி என்று இரண்டு இருக்கிறது என்றால் நாம் நம்முடைய தேவைக்காக உயரமான செடியைத் தேர்வு செய்துகொள்கிறோம். அது நமது தேர்வு. இயற்கையின் தேர்வு கிடையாது. இயற்கை இரண்டும் வேண்டும் என்பதால்தான் இரண்டு உயரத்திலும் செடிகளைத் தருகிறது. நாம் நமது தேர்வால் உயரமான செடியைத் தேர்வு செய்து அதை மீண்டும் மீண்டும் பெருக்குவதால் நமது உற்பத்தி அதிகரிக்கும் என்பது உண்மைதான். நிறையப் பேருக்கு உணவு வழங்கலாம்தான். ஆனால் அந்தக் குட்டைச் செடியில் என்ன நல்லது இருக்கிறது என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுமே? இப்படிச் செய்துதான் கம்பு, சாமை, திணை எனப் பலவற்றை நாம் இழந்துவிட்டோம். அரிசியும் கோதுமையும்தான் பொருளாதாரரீதியாக பலன் தரக்கூடியது என்பதால் நாம் அதற்கு முக்கியத்துவம் தந்து மற்றவற்றைக் குறைத்துவிட்டோம்.

மரபணுக்களை எடிட் செய்யும் கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் மூலம் நமது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்க முடியுமா?

நிறைய அறநெறி பிரச்னைகள் இருக்கின்றன.

அது இருக்கலாம். ஆனால் அறிவியல் பூர்வமாக முடியுமா?

சொல்ல முடியாது. நமது ஆய்வுகள் அனைத்தும் பரிசோதனைக்கூடத்திற்கு உட்பட்டது. பரிசோதனைக்கூடம் சார்ந்தது. நமது உடலிலும் அதுதான் நடக்குமா என்றால் சொல்ல முடியாது. உதாரணமாக நாம் இரண்டு புரதம் அல்லது இரண்டு மரபணுக்களின் இயங்கு விதத்தை மட்டும் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இதுவே நம் உடலை எடுத்துக்கொண்டே அதே நேரத்தில் அதே மரபணுவுடன் / அதே புரதத்துடன் பத்தாயிரம் புரதங்கள், பத்தாயிரம் மரபணுக்கள் இணைந்து இயங்கிக்கொண்டிருக்கும். எதனுடைய தாக்கமும் எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது.

நாம் இரண்டே இரண்டு மரபணுக்களை மட்டும் வைத்து ஆய்வு செய்வதற்கும் உடலுக்குள் நடப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது அறிவியல் சமூகத்திற்கும் தெரியும். இப்போது செய்றகை நுண்ணறிவு வந்தது ஒருவகையில் பலன் தரலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் நம் உடலின் வளர்ச்சிதை இணைப்பை (Metabolic Networks) செயற்கையாக உருவாக்கிவிடுகிறார்கள். நமது உடல் வெப்பத்தையும் செயற்கையாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாமே கணினி மாதிரிகள்மூலம். கொடுத்துவிட்டு அதன் எதிர்வினை எப்படி இருக்கிறது எனப் பார்க்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நமக்குப் பல பதில்கள் கிடைக்கின்றன.

ஆனால் இதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஓர் ஊகமாக வைத்துக்கொள்ளலாம். கிரிஸ்பரிலும் இதேதான் நடக்கப்போகிறது. நாம் செய்வது அனைத்தும் பரிசோதனை ரீதியாக நிரூபணமானது. ஆனால் நமது உடலுக்குள்ளும் இப்படித்தான் நடக்குமா என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு இடத்தில் பதில் கிடைத்துவிடாதா என்றுதான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

புற்றுநோயை ஏற்படுத்துவதாக மொத்தம் 300 மரபணுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் 300ஐயும் மொத்தமாக வைத்து யாரும் பணியாற்றுவது இல்லை. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மரபணுவை வைத்து வேலை செய்கிறார்கள். அதிகபட்சமாக 10 மரபணுக்களை வைத்து வேலை செய்வார்கள். ஏனென்றால் நம்முடைய அறிவு அவ்வளவுதான். நம்மால் மூன்று பரிமாணத்தில் மட்டுமே அனைத்தையும் பார்க்க முடியும். அதைத்தாண்டி ஒரு பரிமாணத்தில் நம்மால் சிந்திக்க முடியாது. இன்னொன்று எல்லாமும் உடலில் ஒரே இடத்தில் நடந்தால் பிரச்னை இல்லை. ஆனால் நம் உடல் அப்படி இயங்குவதில்லை. நாம் தொடும் உணர்வே இங்கிருந்து நமது மூளைக்குச் சென்று திரும்பி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் ஒட்டுமொத்த உடலுமே ஈடுபட்டிருப்பதால் நம்மால் உறுதியாக கிரிஸ்பரால் பயன்பெற முடியுமா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், தீர்க்க முடியாத சில மரபணுக் குறைபாடுகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையலாம் என்பதால் தான் CRISPR/CAS9 தொழில்நுட்பத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நோயைக் குணப்படுத்த ஜீன் தெரப்பிகள் இருக்கின்றவே?

ஜீன் தெரப்பியின் வெற்றி விகிதம் நல்லவிதமாகத்தான் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட மரபணுவுக்கு மட்டும்தான். பெரிய அளவில் பல்வேறு மரபணுக்கள் ஈடுபடும்போது செய்யமுடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா மரபியல் குறைபாடுகளுக்கும் இந்த தெரப்பி வேலை செய்யாது. உதாரணமாக சிஸ்டிக் பைப்ரோஸிஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு ஜீன் தெரப்பி இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆராய்ச்சி படிநிலையில்தான் இருக்கிறது. அதுவும் Puff வகையில். அதற்கென்று இன்ஹேலர்ஸ் இருக்கின்றன. அவை பாதிக்கப்பட்ட மரபணுக்களுக்குப் பதிலாகப் புதிய mRNAவை செல்களுக்குள் செலுத்தும். அதையும் முழு வெற்றியாகக் கருத முடியாது. எல்லாமே பராமரிப்பு நோக்கம்தான். அனைத்தும் ஆராய்ச்சிநிலையில்தான் இருக்கின்றன. ஆராய்ச்சியின் கட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுமே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக முற்றிலும் நோய் குணப்படுத்தலுக்கான சிகிச்சை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நோய்க்கான சில மருந்து கலவைகளை FDA அமைப்பு அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாவரங்களில்?

தாவரங்களில் கிரிஸ்பார் பயன்படுத்தலாம். ஆனால் இதையெல்லாம் செய்துதான் நாம் பிரச்னையை இழுத்து வைத்திருக்கிறோமே!

ஆயுர்வேத மருத்துவம் போன்ற Evidence Bassed மருத்துவம் இல்லாதவை மரபியல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறதா?

ஆயுர்வேதம் குணப்படுத்தாது. மக்களும் செல்வதில்லை. முதலில் மக்கள் மரபியல் குறைபாடுகள் இருப்பதையே ஒப்புக்கொள்வதில்லை. ஒப்புக்கொண்டால்தானே செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் அலோபதியே தள்ளாடும்போது ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாது.
உண்மையில் ஆங்கில மருத்துவம் என்றால் என்ன என்றே தெளிவு பலருக்கு இல்லை. ஆங்கில மருத்துவம் என்றால் தரவுகள் சார்ந்த, ஆதாரங்கள் சார்ந்த மருத்துவம். அவ்வளவுதான். ஆனால் பலர் அதனைச் செயற்கை, வேதியியல் மருத்துவம் என்கிறார்கள். உண்மையில் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளே இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து செய்வதுதான். உதாரணமாக ஆயுர்வேதத்தில் வேப்ப இலை சாப்பிட்டால் பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறது என்று சொல்கிறோம் இல்லையா? நமது மாத்திரைகளில் என்ன இருக்கிறது? அந்த வேப்ப இலையில் எந்த வேதிப்பொருளுக்கு பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொடுப்பதுதான் ஆங்கில மருத்துவம். இவர்கள் நினைப்பதுபோல கார்பன், ஆக்சிஜன், சல்பர் ஆகியவற்றை நாம் தனித்தனியாக எடுத்து கலந்து தருவதில்லை. Drug என்பதே இயற்கைக் கலவைதான்.

நாட்டுப் பப்பாளியில் இருக்கும் ஒருவகை கொழுப்பு சருமத்திற்கு நல்லது எனக் கண்டறிந்து பயன்படுத்துகிறோம். அது முதலில் ஏன் பப்பாளியில் இருக்கிறது தெரியுமா? பப்பாளியில் வட்ட, வட்டமாக ஒருவகை பரவல் இருப்பதைப் பார்த்திருப்போம். அது பப்பாளியைத் தாக்கும் ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது. அந்த வைரஸ் கொடுக்குள்ள குட்டிப் பூச்சிகள் வழியாக ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குப் பரவும். இதுபோன்ற வைரஸ் பரவல்களை ஏற்படுத்தும் பூச்சிகளை வெக்டர் என அழைப்பர். அந்தப் பூச்சிகளின் கொடுக்கை உள்ளே போக விடாமல் தடுப்பதற்கும் வைரஸிடமிருந்து பப்பாளியைக் காப்பாற்றுவதற்கும் அந்தக் கொழுப்பு பயன்படுகிறது என்பதைச் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். நமது காலில் எண்ணெய் தேய்த்தால் எப்படிக் கொசு கடிக்காதோ, அதேபோலதான் அந்தக் கொழுப்பும் பயன்படுகிறது.

இந்த கொழுப்பை மட்டும் எடுத்து, இந்த வைரஸுக்கும் வெக்டாருக்கும் இடையில் இருக்கும் ஊடாடலைத் தடுக்க முடியுமா என ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அவ்வாறு தடுக்க முடிந்தால் அந்தக் கொழுப்பை வைத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு மருந்தோ பூச்சிக்கொல்லியோ ஸ்ப்ரேயோ தயாரித்துவிடுவோம். இது இயற்கையாக உள்ள பொருட்களை எடுத்து சோதனை செய்து தயாரிப்பது. நூறு சதவிகிதம் வேதியியல் கிடையாது. ஆனால் இந்தப் புரிதலே பலருக்குக் கிடையாது.

இதேபோல ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் தடுப்பூசி எனும் கருத்தாக்கத்தையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் நோய் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு நிலைப்பாடு. எதற்காகக் குணப்படுத்த வேண்டும் என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை தடுப்பூசி என்பது ஒரு கட்டுக்கதை. ஆனால் உண்மையில் அப்படியா இருக்கிறது?

உலகில் உள்ள பெரிய பெரிய நோய்களை எல்லாம் தடுப்பூசியை வைத்துதான் விரட்டியடித்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் பொதுவான நோயெதிர்ப்பு தூண்டுதலுக்கும் குறிப்பிட்ட ஒரு பிரச்னையைச் சரி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாகக் குப்பைமேனி இலையை உடலில் தேய்த்தால் சருமப் பிரச்னைகள் வராது. இது ஆயுர்வேதத்தில் சொல்லக்கூடிய ஒரு விஷயம். திருநீற்றுப் பச்சிலையைச் தேய்த்தால் பருக்கள் வராது என்பதும் ஆயுர்வேதம். ஆனால் ஒரு சரும நோய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அங்கேபோய் நாம் குப்பை மேனியைத் தேய்த்து என்ன பிரயோஜனம். அது எதனால் வந்தது என்றே நம்மால் சொல்ல முடியாது. அது வைரஸாக இருக்கலாம். பூஞ்சையால் இருக்கலாம். இங்கே பொது சிகிச்சை வேலைக்கு ஆகாது. ஆயுர்வேதத்தின் பிரச்னையே அதுதான். குறிப்பிட்ட நோய்காரணிகளுக்குப் பொது மருந்தைப் பரிந்துரைப்பார்கள். அதுவும் உலகளவில் ஒரே அளவை பயன்படுத்துவது கிடையாது‌. ஆனால் அலோபதியில் குறிப்பிட்ட நோய்களுக்கு என்று தனிப்பட்ட மருந்துகள் என்பதுதான் பயன்பாடு.

கபசுர குடிநீர் குடித்தால் டெங்கு வராது என்பது தடுப்புதான். ஆனால் குணப்படுத்த முடியாது. டெங்கு வந்தவர்களை அது குணப்படுத்தாது. அதேபோல பப்பாளி இலையைக் குடிக்கச் சொல்வார்கள். அது குடித்தால் வெள்ளை ரத்த அணுக்கள் ஜாஸ்தியாகும் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், கூடவே வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளைத் தடுப்பதற்கான மருந்தை எடுக்க வேண்டும். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெறும் பப்பாளி இலையைக் குடித்தால் முடிந்தது கதை.

இங்கே பொத்தாம் பொதுவாக ஒன்றை நல்லது என்று பார்ப்பதே தவறு. மஞ்சள் தேய்த்து குளித்தால் பருக்கள் வராது என்பது பொதுவாகச் சொல்வது. ஆனால் எனக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் முகம் முழுவதும் பருக்கள் பூத்துவிடும். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

உங்கள் முனைவர் பட்ட ஆய்வு எதைப் பற்றியது? எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

என் முனைவர் பட்ட ஆய்வு புரதங்களின் ஊடாடலைப் பற்றியது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பயன்படுத்தி புரதங்களின் ஊடாடலைக் கணிப்பது.

இயற்கை என்பது போட்டியா ஒத்துழைப்பா?

ஒத்துழைப்புதான்.

ஆனால் ஒன்றையொன்று அடித்து சாப்பிட்டால்தானே உயிர்கள் வாழ முடிகிறது?

அவை இரண்டுமே பிழைத்திருக்கதானே செய்கிறது. அதன் நோக்கம், நான் மட்டும்தான் உயிர் வாழ வேண்டும். நீ வாழக்கூடாது என்பதில்லையே. அப்போதும் அவை மொத்தமாக அழித்துவிடவில்லையே. ஆனால் மனிதர்கள் மட்டும்தான் போட்டிப் போட்டுக்கொண்டு நாங்கள்தான் உயர்ந்தவன், நாங்கள்தான் ஆல்ஃபா என எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் போர்களே உதாரணம்.

அறிவியல் துறையில் இருக்கும் எல்லோரிடமும் நான் கேட்க விரும்பும் கேள்வி இது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

கடவுள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் இயங்கு சக்தி ஒன்று இருக்கிறது. இயக்கத்துக்கு ஏதோ ஒன்று காரணமாக இருக்கிறது. அதை இயற்கை என்றும் நீங்கள் கருதலாம். எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து அழைத்துக்கொள்ளலாம். அது இருப்பதால்தான் எல்லாமே சமநிலையில் இருக்கிறது. கடவுள் என்பது தனிப்பட்ட அனுபவம். அதை எல்லோருக்கும் பொது என்று பொருத்திவிட முடியாது. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இறுதியாகச் சில கேள்விகள். எழுதுவதில் ஆர்வம் வந்தது எப்படி?

எழுதுவதில் ஆர்வம் வந்ததற்குத் தமிழ் ஆர்வம்தான் காரணம் என நினைக்கிறேன். மூன்று வயதில் இருந்தே அப்பா எனக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பள்ளியில் நடக்கும் சிறுசிறு போட்டிகளில் கலந்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் பரிசுகளும் கிடைத்திருக்கின்றன. அதுவே தொடர்ந்து தமிழில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான ஊக்கம். இது புத்தகமாக விரிந்தது. புத்தகம் எழுதுவது தற்செயலாக நடந்தது. அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் எழுதுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை. பெண்களின் கருப்பை நீக்கம் சார்ந்து எழுத்தாளர் மோனிஷா அவர்களுடனான ஒரு அழைப்பேசி உரையாடல்தான் நான் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கான ஆரம்பப்புள்ளி. அதன்பிறகு ஹெர் ஸ்டோரிஸ் அறிமுகம் கிடைத்து பதினைந்து அறிவியல் கட்டுரைகள் எழுதினேன். அதுவே தாயனை புத்தகமாக வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சில மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் அறிவதுவே புத்தகமாக வெளிவந்தது.

இப்போது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியலாளர்களையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் மாணவர்களுக்கான புத்தகமாக எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

0

The post அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3 appeared first on கிழக்கு டுடே.

  •  

அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2

மனிதப் பரிமாணம் ஏன் தாமதமாக நிகழ்கிறது?

மரபணு நோய்களுக்கு இந்தியாவில் சொந்தத்திற்குள் நடைபெறும் திருமணம் முக்கியக் காரணமா?

ஆம். சொந்தத்திற்குள் இல்லாவிட்டாலும் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சில இடங்களில் மறைமுகமாகக் குடும்பத்தாருக்கு மரபியல் நோய்கள் இருப்பதைச் சொல்லாமலேயே திருமணம் செய்துவிடுகிறார்கள். சில விநோத வழக்குகளும் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இரண்டு பேர் காதல் திருமணம் செய்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேருடைய மரபணுக்களுமே வெவ்வேறானவை. ஆனால் குழந்தைக்கு Recessive Disorder எனும் குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாடு பொதுவாகச் சொந்தத்துக்குள் திருமணம் செய்தால் மட்டுமே வரக்கூடியது. இதுவெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

மரபியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிறப்பு பள்ளிகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. சென்னையிலேயே இருக்கிறது. ஆட்டிசம் போன்றவைக்குப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் மரபியல் குறைபாடு உள்ளவர்களைப் பெரும்பாலும் பள்ளிகளில் சேர்த்துக்கொள்வதில்லை. எனது வீட்டின் அருகே இரண்டு சிறுவர்களுக்கு ஆட்டிசம் இருக்கிறது. இருவரையும் எந்தப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேபோல வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு தர அனுமதிக்க மறுக்கிறார்கள்.

மரபியல் குறைபாடுகள் ஏற்படச் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவு பங்கு இருக்கிறது?

புற்றுநோய்களை எடுத்துக்கொள்வோம். 90-95% புற்றுநோய்கள் திடீர் பிறழ்வுகளால் வருபவை. 5-10% மட்டும்தான் பெற்றோர்களிடம் இருந்து வருபவை. இதில் இரண்டு வகை உண்டு. பொதுவாகப் பெற்றோர்களிடம் இருந்து நம் உடலுக்கு இரண்டு மரபணு வேறுபாடுகள் (Allele) வரும். அவற்றில் சிலவகை மரபணுக்களில் ஒன்று மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கு நோய் வராது. இன்னொன்றும் பாதிக்கப்பட்டால்தான் நோய் வரும். இது முதல் வகை. இரண்டாம் வகை, சில குறிப்பிட்ட மரபணுக்களில் ஒரு மரபணு வேறுபாடு பாதிக்கப்பட்டாலே நோய் வரும்.

பிரச்னை என்னவென்றால் நாம் அதிகம் வேதிப்பொருட்களை எடுக்கிறோம். மாசு இருக்கிறது. இதில் எல்லாம் கார்சினோஜென் (Carcinogen) எனும் வேதிப்பொருள் அதிகம் இருக்கிறது. இவற்றை நாம் நுகர நேரும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுதான் வாழ்வியல் புற்றுநோயை உருவாக்குகிறது. அதேபோல மைதா அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் கணையம் அடிவாங்கும். இன்சுலின் சுரத்தலில் மாறுபாடு ஏற்படும்.

மரபணுப் பிறழ்வுகளுகள் பிறப்பின்போது வருபவையா, சுற்றுச்சூழலால் ஏற்படுபவையா? எது ஆதிக்கம் செலுத்துகிறது? டார்வினின் கூற்றுப்படி பிறழ்வுகள் அனைத்தும் தன்னிச்சையாக நடைபெறுபவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதில் எவை எல்லாம் பிழைத்திருக்க பயன் தருகிறதோ அவை மட்டும் நீடிக்கும். பிழைத்திருக்க பயன் தராத மாற்றம் நீக்கப்பட்டுவிடும். சரியா? ஆனால் நீங்களோ சூழலுக்கு ஏற்றவாறுதான் மாற்றம் அடைகிறது என்கிறீர்களே!

நீங்கள் சொல்வது சரிதான். அதேசமயம் நாம் எந்த அளவுக்குச் சூழலை வேகமாக மாற்றுகிறோம் என்பதும் இருக்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்கிறது. நாம் தொழில்நுட்பத்தில் அதிகம் மாறுதலடைகிறோம். இதன்மூலம் சூழலை வேகமாக மாற்றுகிறோம். இதற்கு ஏற்றவாறு நம் உடலும் மாறுகிறது. பரிணாம மாற்றம் என்பது நேர்கோட்டில் நடைபெறாது. சுழற்சி முறையில் இயங்கக்கூடியது.

பொதுவாக மனித உடலில் ஏற்படும் மரபணு பிறழ்வுகள் தானாகப் போய்விடுமா அல்லது அதற்கு ஏற்றாற்போல் நாம் மாறிவிடுவோமா என்கிற கேள்வி இருக்கிறது.

இயற்கையாகவே சில குறைபாடுகள் நீங்கிவிடும். தொடராது. பொதுவாக 5-6 தலைமுறையிலேயே ஒரு மரபியல் நோய் போய்விடும். 2-3 தலைமுறை வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு மேல் அந்த Allele பிழைக்காது.

இதற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்?

எதிர் மரபியல் பிறழ்வு (Counter Mutation). மனிதனின் வாழ்வியல், உணவு, சுற்றுச்சூழலை மையப்படுத்தி எதிர் மரபியல் பிறழ்வு நடைபெறும் அல்லவா? அதனால்கூட அவை போய்விடலாம் என இப்போதைய தரவுகளை வைத்து நாம் சொல்லிவிட முடியும்.

நாம் ஒரு பிறழ்வைத் தூண்டுகிறோம். இயற்கை கண்டிப்பாக ஒரு எதிர் பிறழ்வைத் தூண்டும். காரணம், இயற்கை என்பதே சமநிலைதானே? இயற்கை பிழைத்திருப்பதற்காக இதைச் செய்கிறது. இந்த எதிர் பிறழ்வு என்ன என்பது நமக்குத் தெரியாது. அதோட விளைவுகளும் நமக்குத் தெரியாது.

அதனால்தான் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை (GMO) நம்மால் தார்மீக நெறியின் காரணமாக அனுமதிக்க இயலாது. நம்மால் இயற்கையில் இருந்து வெளிவந்து எதையும் செய்ய முடியாது. எந்தப் பிறழ்வுகளைத் தர வேண்டும் என்பது இயற்கையிடம்தான் இருக்கிறது.

ஆனால் இயற்கை எதையும் திட்டமிட்டு செய்வதில்லைதானே?

நாம் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒருவிஷயம் திட்டமிட்டு நடைபெறவில்லை என்றால் நாம் எப்படி Lactose Tolerantஆக இருக்க முடியும்.

அதாவது நம்மால் பாலில் உள்ள லேக்டோஸை கிரகிக்க முடியும். ஆனால் எல்லோருக்கும் அப்படிக் கிடையாது. பெரும்பாலும் ஐரோப்பிய மக்கள்தான் லேக்டோஸை முழுமையாகக் கிரகிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு (இந்தியர்கள் உட்பட) இன்னும் பால் ஆகாத விஷயம்தான். குழந்தையாக இருக்கும் வரைதான் நம்மால் பாலை எடுத்துக்கொள்ளமுடியும். இந்தத் பாலை ஜீரணிக்கும் தன்மை நமக்கு வந்ததற்குக் காரணம் மரபணுப் பிறழ்வு. ஆனால் இது எப்படித் தன்னிச்சையாக நடைபெற்றிருக்க முடியும்?

அது தன்னிச்சையாக இருக்க வாய்ப்பில்லை. அது தன்னிச்சையாக இருந்தால் சூழல் சார்ந்த, சுற்றுச்சூழலை அடிப்படையாக கொண்ட மரபணுக்கள் (genepool) நம்மிடம் இருக்காது. டார்வின் இருந்த காலகட்டத்தில் அந்தப் புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்படிப் பரவுகிறது என்பதற்கு அவை தன்னிச்சையாகப் பரவுகிறது என்று சொன்னார்கள். எங்கெல்லாம் புற்றுநோய் செல்கள் போகின்றனவோ அங்கெல்லாம் இரண்டாம்நிலை கட்டிகள் வரும் என்பதுதான் முதலில் சொன்னது.

ஆனால் இப்போது Seed and soil எனும் கோட்பாடு சொல்லப்படுகிறது. இதன்படி எங்கு புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான போஷாக்குகள் இருக்கிறதோ அங்குதான் புற்றுநோய்கள் வரும். அதுபோல மரபணுக்கள் மாற்றமும் தன்னிச்சையாக நடைபெறாது என்பது என் கருத்து.

அப்படியென்றால் இயற்கை, சூழல் இரண்டுக்குமே சமமான பங்கிருக்கிறது என்று சொல்லலாமா? இயற்கையாகவும் நிகழலாம். சூழலும் பாதிக்கலாம். அப்படி எடுத்துக்கொள்ளலாமா?

குறிப்பிட்ட மக்கள் மட்டும் லேக்டோஸ் டாலரெண்டாக எப்படி மாறினோம்? இந்த மாற்றம் வேறொங்கும் நடைபெறவில்லைதானே? எத்தியோப்பியர்கள், திபெத்தியர்களுக்கு மட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை ஏன் அதிகம் இருக்க வேண்டும்? அப்போது அது திட்டமிட்டதுதானே? இங்குமட்டும் அது நடக்கவேண்டும் எனத் திட்டமிட்டு நடத்தியதுதானே?

வைட்டமின் சி நமது உடலில் சுரக்காது. மனிதன் இறைச்சி சாப்பிட்ட வரை வைட்டமின் சி நமது உடலிலேயே சுரந்தது. நாம் என்றைக்குக் காய்கறி சாப்பிட ஆரம்பித்தோமோ அப்போதே உடலில் வைட்டமின் சி அளவு குறைந்துவிட்டது. இப்போது நாம் வெளியில் இருந்துதான் வைட்டமின் சி-ஐ எடுக்க முடியும். இது பரிணாம மாற்றம்.

இதுவே ஆடுகளை எடுத்துக்கொண்டால் அவையும் தாவரப் பட்சிணிதான். ஆனால் அவற்றின் உடம்பில் வைட்டமின் சி இன்னும் சுரக்கிறது. நமக்கு அந்தப் பண்பு போயிருந்தால் ஆட்டுக்கும் போயிருக்க வேண்டும்தானே?

அது ஏன் ஆகவில்லை? காரணம் ஆடு, பஞ்சத்தில் வாழக்கூடிய மிருகம் எனச் சொல்லலாம். எல்லா நேரத்திலும் அதற்குப் போதிய வைட்டமின் சி கிடைக்காது என்பதால் இயற்கை அதைத் தக்க வைத்துள்ளது. அப்படி என்றால் இவை தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றுதான் அர்த்தம்.

டார்வின் சொல்வது இயற்கைத் தேர்வு அல்லவா? தகுதி வாய்ந்த பண்பை மட்டும் இயற்கை தக்க வைத்துக்கொள்கிறது. மற்றவை நீக்கப்படுகிறது. அது வாழ்வதற்கான சூழல் இல்லாததால் அழிந்துவிடுகிறது. அதனால் தகுதியுள்ளவை மட்டும் அடுத்த தலைமுறைக்கும் பிழைக்கிறது அல்லவா? அதுபோல அந்தத் தன்மை பிழைத்திருக்கலாம்.

இதை ஒரு தவளைக்கோ எலிக்கோ பொருத்திப் பார்க்கலாம். காரணம், அவற்றின் இனப்பெருக்க எண்ணிக்கை அதிகம். ஆனால் மனிதர்களுக்கு எப்படிப் பொறுத்திப் பார்க்க முடியும்?

உயிரினங்களில் கீழே செல்லச் செல்ல மரபணுக்கள் பிறழ்வு அடையும் வேகம் அதிகரிக்கிறது. மேலே செல்லச் செல்லப் பிறழ்வு அடையும் எண்ணிக்கை குறைகிறது. அதனால்தான் நாம் பரிணாம மாற்றம் அடைய லட்ச வருடங்கள் எடுக்கிறது. ஒரு கொசு பரிணாமம் அடைய சில நாட்களே போதும்.

இன்னொரு விஷயம் டி.என்.ஏவில் எக்ஸான்ஸ் (Exons), இன்ட்ரான்ஸ் (Introns) என இரு பிரிவுகள் இருக்கின்றன. எக்ஸானில்தான் எழுதப்பட்ட தகவல் (குறியீட்டுத் தகவல்) இருக்கும் (Coding Part). இன்ட்ரானில் இருப்பது எழுதப்படாத தகவல்கள். நம் உடலில் நடைபெறும் அதிகமான மாற்றங்கள் இன்ட்ரானில்தான் நடைபெறுகின்றன. அதனால்தான் நாம் உடலை எப்படிக் கெடுத்துக்கொண்டாலும். அதாவது குடித்தாலும் வேறுவிதமான சீர்கேட்டில் ஈடுபட்டாலும் நாம் இன்னுமே ஆரோக்கியமான தலைமுறையைக் கொண்டிருக்கிறோம். எக்ஸானோடு ஒப்பிடும்போது இன்ட்ரானின் பங்குதான் அதிகம்.

ஒருவேளை எக்ஸானில் நடந்தால் என்ன ஆகும்? எக்ஸானில்தான் நம் உடல் எப்படி இயங்க வேண்டும் என்கிற தகவல் எழுதப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை அடிப்படையாக கொண்டுதான் புரதங்கள் உடலில் உருவாகும். புரதம் மூலமாக செல்கள் உருவாகி உடல் இயங்குகிறது. எக்ஸான் அடிவாங்கினால் மொத்தமும் முடிந்தது கதை.

அதிர்ஷ்டவசமாக இன்ட்ரான்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாம் சாதாரண வாழ்க்கையை வாழ முடிகிறது. இல்லையென்றால் நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களுக்கு, சாப்பிடும் உணவுக்கு எல்லோருக்கும் புற்றுநோய் வந்திருக்க வேண்டும். ஆனாலும் சிலருக்குப் புற்றுநோய் வருவதற்கு எக்ஸானிலும் பிறழ்வு நடைபெற வாய்ப்புள்ளது என்பதுதான் காரணம்.

இதுவே பரிணாம மரத்தின்கீழ் பகுதியில் உள்ள உயிரினங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றின் மரபணுத் தொகுப்பே சிறியது. இதனால் பிறழ்வு எக்ஸானில்தான் நடந்தாக வேண்டும். அதனால் பரிணாம மாற்றமும் ஜாஸ்தியாக இருக்கிறது.

மனித உடலில் 2 சதவிகிதம் ஜீனோம்தான் (குறியீடு) எழுதப்பட்ட பகுதி என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மீதம் 98 சதவிகிதம் எதற்கு இருக்கிறது என்றே தெரியாது. அதாவது 98 சதவிகிதம் எதற்கானது என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதை நாம் கண்டுபிடித்தோம் என்றால் ஒரு விடை கிடைக்கலாம்.

நாம் தாமதமாகப் பரிணாமம் அடைவதற்கு மற்றொரு காரணம், நாம் டி.என்.ஏவை வெளியில் இருந்து எடுக்க மாட்டோம். ஆனால் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் அவற்றைச் செய்யும்.

பாக்டீரியா போன்ற உயிரிகள் சுற்றுச்சூழலில் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அவை வேகமாகப் பரிணாம மாற்றம் அடைகின்றன. இவற்றை Horizontal Gene Transfer என்கிறோம்.

ஆனால் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. நாம் தலைமுறை தலைமுறையாகத்தான் டிஎன்ஏவைக் கடத்த முடியும். இதனை Vertical Gene Transfer என்கிறோம். இதுவும் நாம் பரிணாம மாற்றம் அடைவதற்குத் தாமதம் ஏற்பட காரணம். இதனாலும் மனிதப் பரிணாம மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை முழுமையாக நாம் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம்.

இன்றைய தம்பதிகளுக்குக் கர்ப்பம் தரிக்கும் தன்மை குறைவதற்கு மரபணுப் பிறழ்வு காரணமா?

பொதுவாகவே கருத்தரிக்கும் தன்மை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். ஸ்வயர் சிண்ட்ரோம் போன்ற சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு கிட்டாது. அதற்கான வாய்ப்பு குறைவு. XXX சிண்ட்ரோம் போன்று அந்த உறுப்பே வளராமல் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு குறைவு. அவர்களைதான் sterile என்று சொல்ல முடியும். மற்றவர்களுக்குக் கருவுறச் சில காரணங்கள் இருக்குமல்லவா? அந்தக் காரணங்களில் ஏதோ பிரச்னை என எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் ஃபோலிக் ஆசிட் பலருக்கு இருப்பதில்லை என்கிறார்கள். ஆனால் இது மரபணுப் பிறழ்வால் வந்த பிரச்னை கிடையாது. சாதாரண ஊட்டச்சத்து குறைப்பாடுதான். இதுபோன்ற பொது சுகாதாரம் சார்ந்த காரணங்களே அதிகம் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்குக் காரணம். மரபணுக்கள் அல்ல.

அதேபோல பெண்களுக்கு அவர்கள் குழந்தையாக அம்மா வயிற்றுக்குள் இருக்கும்போதே கருமுட்டை தயாராகிவிடுகிறது. 25 வயதில் அந்தப் பெண் குழந்தைக்காகத் திட்டமிடும் பட்சத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த முட்டை அவர்களுக்குள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் சாப்பிடும் எல்லா விஷயங்களும் உடலுக்குள் சேகரிக்கப்படும் இல்லையா? வயதாக வயதாக நிறையக் கசடுகள் சேகரிக்கப்படும்போது ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அதற்காக 35 வயதுக்கு மேல் எல்லோருக்கும் குழந்தை பிறக்காது, ஆரோக்கியமாக இருக்காது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மரபியலில் நிகழ்சாத்தியங்கள்தான் (Probability) அதிகம். முழு பதில் கிடையாது.

மனிதர்களுக்கு Y குரோமோசோம் குறுகிக்கொண்டு வருவதாகச் சொன்னீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

மனிதர்களிடையே ஆண் பாலினத்தை உருவாக்குவது Y குரோமோசோம்தான். அது சமீபத்தில் குறுகி வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

Y குரோமோசோம் இல்லாமல்போய்விட்டால் என்னவாகும்? இயற்கைக்கு ஆணே தேவை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. வேறு எதாவது மாற்றம் வரலாம். சொல்லப்போனால் Y குரோமோசோமே பெண்ணின் X குரோமோசோமில் இருந்து வந்ததுதானே.

Y குரோமோசோம் மறைந்தால் மனிதர்கள் அல்பாலீர்ப்பு (Asexual) கொண்டவர்களாக மாற வாய்ப்பிருக்கிறதா?

அப்படி ஆகவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை அர்த்தநாதிஸ்வரர் மாதிரி, ஆணும் நானே பெண்ணும் நானே என்றும் ஆகலாம். எதையும் நம்மால் ஊகிக்க முடியாது.

மரபியலில் வெறும் நோய்கள் சம்பந்த ஆய்வுகள் மட்டும்தான் இருக்கிறதா?

இந்தத் துறையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு மற்ற துறையில் இருப்பதுபோன்று அதிகம் ஆய்வுகள் கிடையாது. தரவுகள் கிடையாது. இருக்கக்கூடிய தரவுகள் ஒரு நூற்றாண்டிற்கு உட்பட்டவை.

ஜனத்தொகையும் ஒரு பிரச்னை. தமிழ்நாடு என்றால் எல்லோரிடமும் தரவுகள் எடுக்க முடியாது. அவர்களாகத் தன்னார்வம் கொண்டு வந்தால் மட்டும்தான் எடுக்க முடியும். உதாரணமாக மூன்று பேர் மட்டும்தான் கிடைத்தார்கள் என்றால் அவர்களிடம் கவனிக்கும் மாறுபாடுகள், மரபணுப் பிறழ்வுகளை மட்டுமே நாம் பதிவு செய்ய முடியும்.

மரபியலில் ஆய்வு மிக மிகக் குறைவு. அதற்கான நிதி ஒதுக்கீடும் குறைவு. நான் இந்திய அளவில் சொல்லவில்லை. உலக அளவில் சொல்கிறேன். முதலில் புற்றுநோய்க்கு எப்படி நிதி வந்தது தெரியுமா? அமெரிக்காவில் ஆல்பர்ட் லாஸ்கர் என்னும் தொழிலதிபருக்கு புற்றுநோய் வந்தது, அதன் பிறகுதான் அவரது மனைவி மேரி லாஸ்கர் நீதிமன்றங்களில் வாதாடி இந்த நோய்க்கான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்து 1971, புற்றுநோய்க்கான தனிச் சட்டத்தை (National Act of Cancer, 1971) இயற்ற முக்கியக் காரணமாக இருந்தார். இது தவிர லாஸ்கர் அறக்கட்டளை மூலம் மருத்துவ ஆய்வுகளுக்காக நிதியுதவியும் விருதுகளும் வழங்கினார். அதன்பிறகு புற்றுநோய் ஆய்வுக்கான நிதி அமெரிக்காவில் அதிகமாகியது. பிறகுதான் மற்ற நாடுகளுக்கு நிதி கிடைத்தது.

அப்போது புற்றுநோய் மிக அரிதாக இருக்கக்கூடிய நோய். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. சராசரியாக பத்து பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறது. மேலும், மரபியல் ஆய்வுக்குத் தம்மை உட்படுத்த முன்வரமாட்டேன் என்கிறார்கள். நாம் கேட்டால் யாரும் வருவதில்லை. அவர்கள் அனுமதி அவசியம் என்பதால் நம்மால் எதையும் செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் பல சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. ஆய்வுக்குக் கிடைக்கும் மாதிரிகளும் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் மரபியல் படிப்பில் 5-6 நாள் ஆகக்கூடிய நாட்டுக்கோழி முட்டையை ஆராய என்றால்க்கூட அனுமதி வாங்க வேண்டும்.

இயற்கையோடு வாழ்தல் என்றால் என்ன? நாம் இயற்கையைத் துண்டித்துவிட்டு வாழ்வதுதான் நோய்கள் ஏற்பட பிரச்னையே எனப் பலரும் சொல்கிறார்களே?

இயற்கை என்பது ஒரு செயல்பாடு. அதைப் பெரும்பாலானோர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த இயற்கைச் செயல்பாடுக்கு ஒருங்கிணைந்து வாழ்வதே இயற்கையோடு வாழ்தல். ஆனால் கலாசாரக் காவலர்கள் சொல்வதுபோல் இயற்கையோடு வாழ்தல் என்பது மலை, வயல், காடு, ஆடு, மாடு ஆகியவற்றுடன் மட்டுமே வாழ்வது அல்ல. அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு வளர்ச்சியே கூடாது. தகவமைத்துக்கொள்ளும் செயல்பாடுதான் (Process of Adaptation) இயற்கை. இன்னொன்று சமநிலை. எங்கெல்லாம் சமநிலை குறைகிறதோ அங்கெல்லாம் இயற்கை ஒரு அதீத முயற்சி எடுக்கும். அப்போது சமநிலை சரிசமமாகும்.

சிலர் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருப்பதைக்கூட இயற்கை என்று சொல்கிறார்களே. அது இயற்கை, சமநிலையை ஏற்படுத்த செய்யும் செயலாக எடுத்துக்கொள்வது சரியா?

எல்லா இடங்களிலும் அப்படி சொல்ல முடியாது. சில இடங்களில் கரு தானாக கலைந்துவிடும். இதற்குக் காரணம் குரோமோசோம்களின் எண்ணிக்கையாக இருக்கலாம். இதனை Ploidy என்பார்கள். குரோமோசோம் எண்ணிக்கையில் இடறுகள் ஏற்பட்டால் (இரட்டித்தல், மும்மடங்காதல்) அது பிழைக்கவே பிழைக்காது. IVF-ல் கூட. இதை நாம் என்ன செய்தாலும் கருவை உண்டாக்க முடியாது. ஆனால் அதற்காக IVF செய்பவர்களை எல்லாம் இயற்கைக்கு எதிரானவர்கள் எனக் குற்றம்சாட்டுவது தவறு.

இந்த ஐவிஎஃப் முறையில் ஆண்கள், பெண்கள் எந்த வகை பாதிப்பை உணர்கிறார்கள்?

பொதுவாக ஆண்களுக்கு பெரிய பாதிப்புகள் கிடையாது. ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. Super Ovalution என ஒரு செயல்பாடு இருக்கிறது. மிகவும் வலி மிகுந்தது. வழக்கமான மாதவிடாயின்போது ஒரு முட்டை வெளிவரும். ஆனால் இந்த சூப்பர் ஓவலியூஷனில் 6,7,…12 முட்டை வரை ஒரே நேரத்தில் வெளிவர வைப்பார்கள். அதைத்தான் சேகரித்து வைப்பார்கள். மாதம் ஒருமுறை ஒரு முட்டை வரும்போதே எத்தகைய வலியை பெண்கள் உணர்கிறார்கள். இதுவே சூப்பர் ஓவலியூஷன் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அவர்கள் மன ஆரோக்கியம் என்னவாக இருக்கும்? உடல் ஆரோக்கியம் என்னவாக இருக்கும்?

ஆனால் ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையாது. ஒருமுறை விந்தணுவை எடுத்தாலே பல லட்சம் விந்தணுக்கள் இருக்கும். பெண்களுக்குத்தான் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதிகமாக எடை போடும். இதில் சிறந்த முட்டையைத் தேர்ந்தெடுத்து, விந்தணுவைச் சேர்க்க விடுவார்கள். பிறகு அதைக் குறிப்பிட்ட செல் பிரிவு நடைபெறும்வரை சோதனை கூடத்தில் வைத்து, பிறகு பெண்கள் உடலில் வைப்பார்கள். அது வெளியில் வராமல் இருக்க தைப்பார்கள். என்ன இருந்தாலும் கருப்பை சூழல் சோதனைக்கூடத்தில் இருக்காது. அதற்கு ஏற்ற வேதிப்பொருட்கள் எதுவும் சுரக்காது. இதனால்தான் ஐவிஎஃப் வெற்றி விகிதம் குறைவாக இருக்கிறது.

ஐந்து, ஆறு நாள் கருவை சோதனைக்கூடத்தில் வைப்பார்கள் எனச் சொன்னீர்கள். அது சாத்தியமா?

முடியும். அவை செல்கள்தானே.

விந்தணு, கருமுட்டை என்றால் நீங்கள் சொல்வது சரி. அவை செல்கள். ஆனால் கரு வளர்ச்சி என்பது செயல்பாடு அல்லவா? செல் பிரிதல் எனும் செயல்பாட்டை எப்படித் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்?

முடியும். உதாரணம் சொல்கிறேன். புற்றுநோய் பற்றிய ஆய்வுகளில் செல்களைப் பயன்படுத்துவோம். அந்த செல்களை ஹீலா செல்கள் என சொல்வார்கள். அந்த ஹீலா யார் தெரியுமா? 72 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவர். 1951இல் 31 வயதான ஒரு பெண்மணியிடம் இருந்து எடுத்தது. அதைப் பதப்படுத்தி வைத்து இன்றைக்கும் பரிசோதனைகூடங்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வருடம் ஆகிறது என்று பாருங்கள். அதனால் செல் இயக்கத்தை உறைய வைப்பது சாதாரணம்.

அப்படியென்றால் ஒருமுறை உறைய வைத்த செயல்பாடு திரும்பவும் தொடங்குமா?

தொடங்கும். அதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை நேரடியாக தண்ணிரில் உறைய வைக்க முடியாது. செல்கள் உடைந்துவிடும். அது உடையாமல் இருக்க, பாக்டீரியாவாக இருந்தால் கிளிசரால், மனித செல்களாக இருந்தால் அதற்கேற்ற வேதிப்பொருட்களை சேர்த்து உறைய வைப்பார்கள். அப்போது அது கிரிஸ்டாகாது. ஜெல்லி போன்று இருக்கும். அப்படிதான் சேகரிக்க முடியும்.

அதை மீண்டும் இயங்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

சாதாரண அறை வெப்பத்திற்குக்கொண்டு வந்தாலே போதும். சில நேரங்களில் அதைக் கைகளிலேயே தேய்த்து வெப்பம் உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது விரைவாக அது இயல்பு நிலைக்கு திரும்பும். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு கிளிசரால் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வேறு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து, விழிக்க வைக்க வேண்டும்.

செல் வாழ்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த திரவத்திற்கு மாற்ற வேண்டும். அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும். இல்லை என்றால் செல் இறந்துவிடும். ஆனால் எத்தனை வருடம் கழித்து அதை இயங்க வைக்கிறோம் என்பதும் அவசியம். கருவை உறைய வைக்கும்போது 5-10 ஆண்டுகளில் எடுத்து இயங்க வைத்துவிட்டோம் என்றால் பிரச்னை இல்லை. அதற்கு மேல் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்பு குறைவு. இரட்டை குழந்தை ஒன்று 30 ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கிறது. ஆனால் அது போன்ற விஷயங்கள் அரிதானது.

பதப்படுத்திய ஒரு கருவை எடுத்து பல ஆண்டுகள் கழித்து பயன்படுத்தினால் அது காலத்திற்கு ஏற்ற மரபணு மாற்றத்தை அடைந்திருக்குமா?

சில பத்தாண்டுகள் கழித்து எடுத்துப் பயன்படுத்துவதால் பெரிய மாற்றம் எதுவும் வராது.

ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். மனித இனமே புதிய பண்புகளை பெற்றிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது பழைய மாற்றமடையாத தன்மைதானே அந்தக் கருவிற்கு இருக்கும்?

அப்படி இருக்க நேர்ந்தால் அந்தக் கரு முதலில் உருவாகாது. ஆனால் அந்தக் கருவை வைத்து, அந்த விந்தணுவை வைத்து நாம் ஆய்வு செய்துகொள்ளலாம். ஒப்பிட்டுப்பார்க்கலாம். இப்படிப் பலவற்றை ஒப்பிட்டுத்தான் நாம் மனித பரிணாமம் பற்றிய புரிதலைப் பெற்றிருக்கிறோம்.

(தொடரும்)

The post அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2 appeared first on கிழக்கு டுடே.

  •  

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு முக்கியமான சங்கம், பிளினியன் சங்கம். 1823-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 1826-ம் ஆண்டு டார்வின் இணைந்தார்.

பிளினியன் சங்கத்தில் ஏராளமான சுயேட்சை ஆய்வாளர்கள் இருந்தனர். பலர் தன்னிச்சையாக உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்.

கிரான்ட், டார்வினைவிடப் பதினாறு வயது மூத்தவர். பன்னிரண்டு ஆண்டுகள் மருத்துவராக இருந்துவிட்டு, கடல் உயிரிகளை ஆராய வேண்டும் என்பதற்காகப் பாதியில் வந்தவர். கிரான்டுக்கு அறிவியல், சமூகம் இரண்டிலும் ஆர்வம் இருந்தது. சமூகத்தின் பல சிக்கல்களுக்கு அறிவியல்தான் பதிலளிக்கும் என நம்பினார்.

இந்த கிரான்டைச் சந்தித்ததுதான் டார்வினின் வாழ்வில் பெரும் திருப்புமுனை. கிரான்ட்தான் முதன் முதலில் உயிரினங்களைப் பற்றியும் அவற்றின் தோற்றத்தைப் பற்றியும் பல கேள்விகளை டார்வினின் மனதிற்குள் விதைத்தார்.

0

கிரான்ட் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். பரிணாமக் கொள்கையை முன்வைத்து ஏராளமான ஆய்வுகளைச் செய்துவந்தார்.

உண்மையில் உயிரினங்கள் எப்படித் தோன்றின என்கிற கேள்வி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒருபக்கம் கடவுள்தான் உயிர்களைப் படைத்தார் என்ற எளிமையான பதில் சொல்லப்பட்டு வந்தாலும், அனாக்ஸிமேண்டர், அரிஸ்டாட்டில் தொடங்கி பல சிந்தனையாளர்கள் உயிரினங்களின் தோற்றத்திற்குப் பின் இருக்கும் அறிவியலை ஆராய முற்பட்டனர். இவ்வளவு ஏன், டார்வினின் தாத்தா எராஸ்மஸ்கூட எல்லா உயிர்களும் ஒரே மூதாதையரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிற பார்வையைத் தனது நூலில் முன்வைத்திருக்கிறார். இப்படித் துண்டுத் துண்டாகப் பல விளக்கங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் இணைக்கும் விதமாக முழுமையான பரிணாமக் கொள்கையை முன்மொழிந்தவர் பிரெஞ்சு அறிவியலாளர் ஜீன்-பாப்டிஸ்ட் லாமார்க். இவரைத்தான் கிரான்ட் தன் ஆதர்ச நாயகனாகக் கருதினார்.

லமார்க்கின் புரட்சிகர சிந்தனை, பிரெஞ்சு உலகில் கொண்டாடப்பட்டது. ஆனால் இங்கிலாந்திலோ பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக, திருச்சபை அதிகாரிகள் லமார்க்கின் பரிணாமக் கொள்கையை ஆபத்தானதாகக் கருதினர். அறத்திற்குப் புறம்பானதாக, சமூகத்தை அச்சுறுத்தும் கருத்தாகப் பார்த்தனர்.

பரிணாமக் கொள்கை, மனிதர்களும் விலங்குகள் வழி வந்தவர்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்தார் என்கிற கிறிஸ்தவத்தின் அடிப்படையான கூற்றை மறுக்கிறது அல்லவா? இதுதான் பிரச்னை. அதேபோல கடவுள் மேலே, திருச்சபை ஊழியர்கள் நடுவே, சாமானியர்கள் கீழே என அதிகாரம் உருவாக்கி வைத்திருந்த சமூகப் படிநிலையையும் பரிணாமக் கொள்கை கேள்வி எழுப்பியது.

இதனாலேயே திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கல்விநிலையங்களில் பணியாற்றி வந்த பல அறிவியலாளர்கள், இயல்பாகவே பரிணாமக் கொள்கையை ஏற்காமல் அமைதி காத்தனர். கிரான்டைப் போன்ற சில தன்னார்வ இளைஞர்கள்தான் லமார்க்கின் சிந்தனையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆய்வுகளைத் தன்னிச்சையாக முன்னெடுத்தனர்.

கிரான்ட், ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பரிணாமக் கொள்கையை விவாதித்தார்.

இறுதியாக எடின்பர்க் திரும்பிய அவர், தாவரங்கள் – விலங்குகளுக்கு இடையேயான தொடர்பை ஆராய வேண்டி, கடற்பஞ்சுகள் (Sea Sponges) என அறியப்பட்ட உயிர்களை ஆராய்ந்தார். இந்த ஆய்வுக்கு அவர் தேர்ந்தெடுத்த உதவியாளர்தான் டார்வின். டார்வினுக்கும் கிரான்டின் கருத்துக்கள் மீது ஈர்ப்பு இருந்தது. அவருடன் சேர்ந்து பயணிப்பதை விரும்பினார்.

கிரான்ட், டார்வினை கடலுக்கு அழைத்துச் சென்றார். கடற்கரையில் ஆய்வுகள் குறித்து ஏராளமாக உரையாடினார். பல விஷயங்களை டார்வினுக்குப் போதித்தார். எப்படி ஆய்வைத் தொடங்க வேண்டும், எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும், கண்டறிந்த விஷயங்களை எப்படி ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் என ஆய்வின் அடிப்படைகள் அனைத்தும் டார்வினுக்கு கிரான்ட் வழங்கியதுதான்.

கிரான்ட், எடின்பர்க்கில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் ஒரு கடற்கரை வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு ஓதநீர்க் குட்டைகளைக் கண்டறிந்து அதிலிருந்து கடற்பஞ்சுகளையும், கடலிறகுகளையும் (Sea-Pens), பவளப்புழு இனம் அமைக்கும் தட்டைப் பாறைகளையும் (Sea mat) சேகரித்தார். அந்த உயிரிகள் முட்டையில் இருந்து எப்படி வளர்கின்றன என்பதை நுண்ணோக்கிகளைக் கொண்டு ஆராய்ந்தார்.

தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் இருபது ஆய்வுக்கட்டுரைகளாக எடின்பர்க் ஆய்விதழில் வெளியிட்டார். இதுவே கிரான்டுக்கு ஐரோப்பா முழுவதும் பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.

கிரான்டின் வழிகாட்டலுடன் டார்வினும் கடல் உயிர்களை ஆராயத் தொடங்கினார். எடின்பர்க் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வெர்னியன் இயற்கை வரலாற்று சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அங்கு சென்று உரைகள் ஆற்றுவது கிரான்டின் வழக்கம். இந்தக் கூட்டங்களுக்கு டார்வினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார் கிரான்ட். சங்கக் கூட்டங்களில் பொதுவாக மாணவர்கள் உரையாற்ற அனுமதி கிடையாது. ஆனால் விருந்தினராகக் கலந்துகொள்ளலாம். இந்தச் சங்கத்தில் கடற்பஞ்சுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்த கிரான்ட், தனது கண்டுபிடிப்புகளில் டார்வின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இதுதான் டார்வினுக்கு பொதுவில் கிடைத்த முதல் அங்கீகாரம். அங்கே எழுந்த கரகோஷம் அவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே பூரித்துப்போனார். அப்போது, என் தந்தை சொன்னதுபோல் நான் உபயோகமற்றவன் இல்லையா? என்னாலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? டார்வினுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. மேலும் புதிய விஷயங்களைத் தேடினார். தனியாக ஓர் ஆய்வை நிகழ்த்தத் திட்டமிட்டார்.

ஆனால் எந்த ஓர் ஆய்வும் அதற்கு முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் இல்லையா? அதனால் கிரான்ட் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, கடற்பாசி வகையைச் சேர்ந்த Flustra எனும் உயிரியை டார்வின் ஆராயத் தொடங்கினர். அதன் உடலில் உள்ள முடிபோன்ற (Cilia) அமைப்பைக் கண்டறிந்தார். தன் கண்டுபிடிப்பை வெர்னியன் இயற்கை வரலாறு சங்கத்தில் சமர்ப்பித்தார். இதுதான் டார்வினின் முதல் கண்டுபிடிப்பு.

தனியாகப் பார்க்கும்போது இது ஒன்றும் அத்தனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்று தோன்றலாம். ஆனால் கிரான்ட் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

கிரான்ட் நிறுவ நினைத்தது இதுதான். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஓர் இணைப்பு இருக்க வேண்டும். தாவரங்கள் பாசி வகையில் இருந்து வந்துள்ளன. பாலூட்டிகள் குழாயுடலி (polyps) எனப்படும் கடல் உயிர்களிலிருந்து தோன்றி இருக்கின்றன. இவை இரண்டின் முட்டைகளை ஆராய்ந்தால் ஒற்றுமை இருப்பது தெரியும். இவை இரண்டையும் இணைக்கும் பொது மூதாதையர் இருக்க வேண்டும். அந்த மூதாதையரைப் பின் தொடர்ந்து சென்றால் ஒருமைப் புள்ளி ஒன்று இருக்க வேண்டும். இந்த ஒருமைப்புள்ளிதான் உயிரற்ற பொருட்களையும் உயிர்களையும் இணைக்கும் புள்ளி. அதில் இருந்துதான் இன்றைய சிக்கலான உயிரினங்கள் பரிணமித்து வந்திருக்க வேண்டும். இதுதான் கிரான்ட் நிறுவ நினைத்தது. இந்தக் கருத்தை இப்போது டார்வினின் ஆய்வும் வலுப்படுத்தியது.

டார்வின் ஆராய்ச்சி செய்த ஃப்லஸ்ட்ரா எனும் உயிரி, பிரையோசோவா (bryozoa) என அறியப்பட்ட பாசி போன்ற உயிரினத்தின் பிரிவைச் சேர்ந்தது. அந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் தாவரம் என்றே கருதி வந்தனர். ஆனால் டார்வின் அதன் உடற்பாகங்களை ஆராய்ந்து சிலியா எனும் பாகத்தைக் கண்டறிந்தது மூலம் அது விலங்கினத்தைச் சார்ந்தது என நிரூபித்தார். காரணம், அந்தக் குறிப்பிட்ட பாகம் பொதுவாக விலங்குகளுக்கே உடையது.

இதையடுத்து ஒட்டுமொத்த பார்வையில் பார்க்கும்போது அந்தக் குறிப்பிட்ட உயிரினம், தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கலாம். இதுபோன்ற உயிரினங்களில் இருந்து பிரிந்துதான் தாவரங்கள் தனியாக, விலங்கினங்கள் தனியாக பரிணமித்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவரது ஆய்வு முன்வைத்தது.

டார்வினின் கண்டுபிடிப்பைக் கேட்டறிந்த கிரான்ட், அகம் மகிழ்ந்துபோனார். எழுந்துவந்து டார்வினைக் கட்டி அணைத்துக்கொண்டார். டார்வினின் கண்டுபிடிப்பு பரிணாம கொள்கை குறித்த ஆய்வுகளுக்கு எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்று விளக்கினார்.

‘ஒவ்வொரு விலங்கும் தனித்தனியாக படைக்கப்பட்டுள்ளது என்பது தவறு. இதனை உயிரினங்களுக்கு இடையேயான உடல் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம். மனிதர்களில் இருந்து சிறிய நுண்ணுயிர்கள் வரை ஒரே வகையான உறுப்புகள்தான் இருக்கின்றன. இதனால் நாம் அறிவது ஒன்றுதான். எல்லா விலங்குகளுக்கும் தொடர்புண்டு. எல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. நுண்ணியிர்களிடம் எளிமையான உறுப்பாக இருப்பது, மனிதர்களிடம் சிக்கலான வடிவில் இருக்கிறது. அவ்வளவுதான். இதனால் நாம் கண்டடையும் உண்மை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் தொடர்ச்சி இருக்கிறது. லமார்க் சொல்வதுபோல் உயிர்கள் ஒவ்வொன்றும் முந்தைய உயிரில் இருந்து பரிணாமம் அடைந்துதான் வந்துள்ளன. இதுதான் உண்மை.’ என்று கூறினார்.

டார்வின் கிரான்டின் உரையைக் கேட்டு மெய்மறந்து நின்றார். அவரால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை. அண்டம் விடுத்துள்ள மிகப் பெரிய மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கப் பங்காற்றி இருக்கிறோம் என்ற எண்ணமே டார்வினைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அவர் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பி இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை.

கிரான்ட் தன் உரையை முடித்தவுடன் பிளினியன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த பிரவுன் என்பவர் எழுந்து, ‘இந்தக் கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களை படைக்கவில்லை என்பதை நிறுவுகிறது’ என்று கூச்சலிட்டார். அவ்வளவுதான். கொஞ்ச நேரத்தில் அங்கு கலவரமே வெடித்துவிட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த திருச்சபை அமைச்சர்கள் பிரவுனின் மேல் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பிரவுன் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கிழிக்கவும் முற்பட்டனர். டார்வினின் கண்களுக்கு முன்னாலேயே பிரவுனின் கண்டுபிடிப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. இனிமேல் இப்படியான ஆய்வுகள் வெளிவந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் திருச்சபை ஊழியர்கள் கூச்சலிட்டனர்.

நடப்பதைக் கண்டு டார்வின் அதிர்ந்துபோய் நின்றார். டார்வினுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அண்டம் குறித்தான ஒவ்வொரு பதிலுக்கும் நேர்மறை விளைவுகள் மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகளும் உண்டு. அதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அது.

டார்வின் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார்.

(தொடரும்)

 

______

படம்: ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்

The post டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு appeared first on கிழக்கு டுடே.

  •  

டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

பதினாறு வயதில் டார்வின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார். அவரது தந்தை ஏற்கெனவே சில நாட்கள் தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பயிற்சிகள் எல்லாம் கொடுத்துதான் அனுப்பி வைத்தார். டார்வினும் தந்தைக்குச் செய்த சிறுசிறு உதவிகளை எல்லாம் எண்ணி பல்கலைக்கழகம் தனக்குப் பிடித்த இடமாக இருக்கும் என்று நம்பிச் சென்றார். ஆனால் அங்கே எல்லாம் இவர் நினைத்ததற்கும் தலைகீழாக இருந்தது.

எடின்பர்க் பல்கலைக்கழகம் முழுக்கவும் அதிகாரத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போதைய ஐக்கிய ராஜ்ஜியம் இரண்டு பெரும் கட்சிகளாகப் பிரிந்திருந்தது. ஒரு கட்சியினர் விக்குகள் (Whigs) என அறியப்பட்டனர். இன்னொரு பிரிவினர் டோரிக்கள் (Tories) என அழைக்கப்பட்டனர். இதில் டோரிக்கள் பாரம்பரிய, பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள். திருச்சபை ஆதாரவாளர்கள். முடியாட்சி, சமூக ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள். அதிகாரத்தின் சலுகையை அனுபவித்து வந்தவர்கள். இவர்களுடைய எதிர்த்தரப்பினர், விக்குகள். இவர்களும் அரசரை ஏற்பவர்கள்தாம். ஆனால் அரசருக்கே சர்வ அதிகாரமும் என்று இல்லாமல், தனிநபர் சுதந்திரம், பாராளுமன்ற அரசியல், அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை வேண்டியவர்கள்.

இந்த இரு கும்பலும்தான் எலியும் பூனையும்போல அடித்துக்கொண்டன. இதில் டார்வினின் குடும்பம் விக்குகளை ஆதரித்தது. இதற்குக் காரணமும் இருந்தது. 50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் டோரிக்கள் பல்கலைக்கழகத்தையே நாசமாக்கி வைத்திருந்தனர்.

குறிப்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் இல்லாமல், உள்ளூர் டோரிக்களின் சபையே கட்டுப்படுத்தியது. பேராசிரியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை டோரிக்கள் சபைதான் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்குக் கல்வித் தகுதி இருக்கிறதா என்பதைவிட அரசியல் தகுதி இருக்கிறதா என்பதையே ஆராய்ந்தது.

திருச்சபை விசுவாசிகளே பணியிடங்களை நிரப்பினர். குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி, தந்தை, மகன், பேரன் என வாரிசுகளே அங்கு பேராசிரியர்களாக இருந்தனர்.

இதுவே அவர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் நிலவ காரணமாக இருந்தது. பேராசிரியர்கள் யாரும் மாணவர் நலனில் அக்கறையெடுத்துப் பாடம் நடத்துவதுபோல தெரியவில்லை. வகுப்பறையில் இருப்பதைவிட மதுவிடுதிகளில்தான் அதிகம் நேரம் செலவழித்தனர். அங்கிருந்தே பாடத்திற்கான குறிப்புகளைக் கொடுத்தனுப்பினர். மாற்றுக் கருத்துக்கள் கொண்ட மாணவர்களை வஞ்சிக்கவும் செய்தனர். பல்கலைக்கழகத்தின் பெருமை எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பளபளத்தது. உள்ளே நிர்வாகம் அழுகிக்கொண்டிருந்தது.

இதனாலேயே மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்தைத் தாண்டிச் சுற்றியுள்ள கல்வி விடுதிகளில் பாடம் பயின்றனர். அப்போது எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஏராளமான சிறிய தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. நிறுவனங்கள் என்று சொல்வதைவிட விடுதிகள் என்றால் சரியாக இருக்கும்.

ஒரு சிறிய வகுப்பறை. ஒரு சோதனைக்கூடம். இதுதான் கட்டமைப்பு. அங்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் எனப் பலரும் கட்டணம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர். இவர்களிடம் கற்பதைத்தான் மாணவர்களும் விரும்பினர். இந்தப் புதிய சிந்தனையாளர்கள் பேசிய அரசியல், மரபார்ந்த விழுமியங்களின் மீதான அவர்களது தாக்குதல் இளம் வயதினரை இயல்பாகவே ஈர்த்தது.

டார்வினுக்கோ வகுப்பில் இருக்கவும் பிடிக்கவில்லை. வெளியே படிக்கவும் விருப்பமில்லை. யார் வம்புக்கும் செல்லாமல், தனி அறையில் அமர்ந்து தனாகப் படித்துக்கொண்டிருப்பார். பல்கலைக்கழகம் சென்று நூலகத்திலிருந்து எல்லாப் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார். இரவு பகலாக உட்கார்ந்து படிப்பார். அதன்பிறகுதான் தூக்கம், சாப்பாடு எல்லாமே.

ஆனாலும் டார்வினுக்கு மருத்துவப் படிப்பு உவக்கவில்லை. காரணம், பாடப்புத்தகத்தைத்தாண்டி அவர் செய்ய வேண்டி இருந்த உடற்கூராய்வு சோதனைகள்.

டார்வினுக்கு ரத்தத்தைப் பார்த்தாலே பயம். குறிப்பாக அறுவை சிகிச்சையை அவர் வெறுத்தார். அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு என்று தனித்தனி அறுவை சிகிச்சைக் கூடங்கள் இருந்தன. அங்கே பிணங்கள் கொட்டிக் கிடந்தன. உடல் அறுபட்டு, கைகள் ஒருபக்கம், கால்கள் ஒருபக்கம் துண்டுத் துண்டாக விரவி கிடந்தன. பிணத்தின் வாடை குமட்டலை ஏற்படுத்தும். அந்த அறையில் இருப்பதே டார்வினுக்கு மூச்சு முட்டும்.

அறுவை சிகிச்சை செய்யும் முறையும் அப்போது குரூரமானதாக இருந்தது. மயக்க மருந்துகள் புழக்கத்தில் வராத காலகட்டம் அது. இதனால் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது நோயாளிகள் வலி தாங்க முடியாமல் கத்துவர். கேட்கவே கோரமாக இருக்கும். அதேபோல உடல் பாகங்களை வெட்டுவதற்குப் பழைய அழுக்கடைந்த துருப்பிடித்த கத்திகள்தான் பயன்படுத்துவார்கள். கைகளைச் சுத்தம் செய்வதற்குக்கூட வழி கிடையாது. உடலை வெட்டி அதிலிருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை வாளியில் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கேட்கவே குரூரமாக இருக்கும் இத்தகைய காட்சிகளை டார்வினால் கல்வி நிலையங்களில் அனுபவிக்க முடியவில்லை. மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்வதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருமுறை குழந்தை ஒன்றுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை கதறுவதைப் பார்க்கச் சகிக்காத, டார்வின் அறையை விட்டு ஓடிவிட்டார். இனிமேல் அறுவை சிகிச்சைக் கூடத்திற்கு வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் காட்சியே வாழ்க்கை முழுவதும் அவரை அச்சுறுத்தியது. இதனாலேயே அவர் மருத்துவத்தை வெறுத்தார்.

இந்த அவலமான நாட்களில் டார்வினுக்கு இருந்த இரண்டே ஆறுதலான விஷயங்கள், வேதியியலும் கடற்கரையும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களில் வேதியியல் சோதனைகளை மட்டுமே டார்வின் ஆர்வமுடன் செய்தார். அதேபோல மாலை நேரங்களில் கடற்கரையில் அலைந்து திரிந்து கணவாய், நத்தை, கடல் எலி, கடல் அட்டை ஆகியவற்றைச் சேகரித்தார்.

பறவைகள் மீதும் டார்வினுக்கு ஆர்வம் வந்தது. பறவைகளை உற்று நோக்கக் காற்றுக்கொண்டார். அவற்றின் நடத்தைகளை, வாழ்விடங்களைப் புத்தகத்தில் குறித்து வைத்தார். வேட்டையாடிய பறவைகளைப் பாடம் செய்தார்.

பாடம் செய்யும் செயல்முறையை டார்வினுக்குக் கற்றுக்கொடுத்தது, சார்லஸ் வாட்டர்டன் எனும் முன்னாள் கறுப்பின அடிமை. அடிமையாக இருந்து தனியார் ஆசிரியராக மாறிய அவர், தான் சந்தித்த அனுபவங்களை, பயணித்த நிலங்களை விவரிப்பார். குறிப்பாகத் தென் அமெரிக்க மழைக்காடுகளில் சந்தித்த மிருகங்களை, அவற்றின் வாழ்வியலைச் சுவைபடக் கூறுவார். இந்தக் கதைகளைக் கேட்கவே டார்வினுக்குப் பிடிக்கும். இதற்காகவே தவறாமல் அவரது வகுப்பிற்குச் சென்றுவிடுவார். நேரம் போவது தெரியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். இதன் காரணமாகவும் டார்வினுக்குப் பயணத்தின் மீதான ஆர்வம் துளிர்விட்டது.

பல்கலைக்கழகத்தில் அவர் கடைபிடித்துவந்த மற்றொரு பழக்கம், தவறாமல் தனது சகோதரிகளுக்குக் கடிதம் எழுதுவது. தினசரி அனுபவங்களை, கற்றறிந்த விவரங்களைச் சகோதரிகளுக்கு விளக்குவார். அதேபோல அனுபவிக்கும் இன்னல்களையும் விவரிப்பார். அவர்களோ டார்வினுக்கு ஆறுதல் சொல்லி, அவரை ஊக்கப்படுத்தி பதில் கடிதம் எழுதுவர்.

டார்வினின் சகோதரி சூசன், ‘உன் கஷ்டம் புரிகிறது சார்லஸ். ஆனால் வாழ்க்கை என்பதே கடினமானதுதான். அதில் நீ தேடி கண்டடையும் ஞானமே உனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என்று எழுதுவார். இன்னொரு சகோதரி கரோலின், டார்வினுக்கு ஆன்மீக ஊக்கங்களை வழங்குவார். ‘நீ பயிலும் மருத்துவம் அருள் வாய்ந்தது. நீ இறந்தபின் சொர்க்கத்திற்குச் செல்லத் தேவையான அருளை உனக்குப் பெற்றுத்தர வல்லது’ என்பார். இப்படியாகச் சகோதரிகளின் அன்பான வார்த்தைகளே டார்வினை இயக்கின.

ஆனாலும் டார்வினால் மருத்துவப் படிப்பில் முழுதாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. வகுப்புகளில் கவனம் இல்லாமல் இருந்தார். இதை ஒரு பேராசிரியர் கவனித்துவிட்டு டார்வினின் தந்தைக்குத் தெரியப்படுத்தவே, அவர் கோபமாக ‘நீ படிப்பில் கவனம் செலுத்தாமல் சோம்பேறியாகச் சுற்றிக்கொண்டிருந்தால் ஒன்றுமில்லாமல் போவாய்’ என்று கடிதம் எழுதினார்.

டார்வினுக்கு அச்சம் பிறந்தது. பிடிக்காத பாடம். பிடிக்காத சூழல். எதிலுமே ஆர்வம் வரவில்லை. எதிர்காலம் என்னவாகப்போகிறது? தந்தை சொன்னதுபோல ஒன்றுமில்லாமல் முடிந்துவிடுவோமா?

ஆனால் அப்போதே மற்றொரு எண்ணமும் வந்தது. இல்லை, என் தந்தை ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும்கூட நிராதரவாக நிற்கும் நிலை ஏற்படாது. இதுபோதும். பார்த்துக்கொள்வோம்.

இந்த எண்ணமே அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. விரும்பியதுபோல வாழ முடிவெடுத்தார். வகுப்புகளுக்குச் செல்வதையே முற்றிலுமாக நிறுத்தினார்.

பொழுதுகளை வீணாகக் கழித்தார். அவர் எண்ணம் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது. அப்போதுதான் அவருக்கு மாணவர் சங்கங்களுடனான தொடர்பும் ஏற்பட்டது. விளையாட்டாக அவர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்து, அங்கே கிடைத்த அனுபவங்கள்தான் டார்வினின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

(தொடரும்)

The post டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்! appeared first on கிழக்கு டுடே.

  •  

டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

சார்லஸ் டார்வினுக்கு ஐந்து வயதில் வீட்டில் கல்வி தொடங்கியது. டார்வினின் அக்கா கரோலின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டார்வினுக்கு அடிப்படை ஆங்கில எழுத்துகளைப் பயிற்றுவித்தார். பாடல்கள் பாடிக் காட்டினார். சொற்களுக்குப் பொருள்களை விளக்கினார். டார்வினுக்கோ சகோதரி பயில்விக்கும் பாடங்களில் ஆர்வம் கிடையாது. படு சுட்டியாக இருப்பார். வம்பு தும்புகளில் ஈடுபடுவார். கண்ணாடிகளை உடைப்பார். பொருட்களைத் திருடிச் சென்று வழியில் காணும் சிறுவர்களுக்குத் தானம் செய்வார்.

டார்வினுடைய தந்தை ராபர்ட் பெரிய நூலகம் வைத்திருந்தார். அதில் சென்று வரைபடங்களையும் கலைக்களஞ்சியங்களையும் புரட்டிப் பார்ப்பார். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டமே டார்வினின் பிரதான வசிப்பிடம். அவரது தாய் வளர்த்து வந்த புறாக்களுடன் விளையாடுவார். மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து உண்பார். அருகே ஓடும் ஆற்றில் மணிக்கணக்கில் அமர்ந்து மீன் பிடிப்பார்.

டார்வினுக்கு அப்போதே சிற்றுயிர்களைச் சேகரிப்பதில் ஆர்வம் இருந்தது. நத்தை, சிப்பி ஆகியவற்றின் ஓடுகள், பறவை முட்டை என ஒவ்வொன்றையும் எடுத்துவந்து வீட்டில் குடுவையில் அடைத்து வைப்பார். பூக்களைப் பறித்துவந்து நோட்டுப் புத்தகங்களுக்குள் பதுக்குவார். அவற்றின் பெயர்களைத் தாயிடம் கேட்டு எழுதிக்கொள்வார்.

டார்வினின் எட்டாவது வயதில் வீட்டின் அருகேயுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கேயும் அவருக்கு வகுப்பறை உவக்கவில்லை. பள்ளிக்கு வெளியேயுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது, பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது என நேரம் கழிப்பார். விலங்குகளையும் தாவரங்களையும் சேகரிப்பதுடன், அவற்றைப் பற்றி நண்பர்களிடம் விவரிப்பது டார்வினுக்கு இன்னமும் பிடிக்கும். குறிப்பிட்ட விலங்கையோ, தாவரத்தையோ எங்கே பார்த்தேன், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தது, அவற்றை எப்படிப் பிடித்தேன் என உண்மையுடன் கொஞ்சம் புனைவையும் கலந்து அடித்துவிடுவார். நண்பர்களும் அவர் சொல்லும் கதைகளை வாய்பிளந்து கேட்பர். இப்படியாக டார்வினுக்கு அறிவியலை எப்படிச் சலிப்பில்லாமல் சொல்ல வேண்டும் என்ற கலை அப்போதே கைகூடி இருந்தது.

0

சிறார் பருவம் இப்படியாக நகர, திடீரென்று ஒருநாள் டார்வினின் தாய் சூசானா காலமானார். வயிற்றுக் கட்டியால் படுக்கையில் இருந்தவர் மறைந்துபோனார். தாயின் மரணம் டார்வினை உலுக்கியது. நீண்ட நாட்கள் தனிமையிலேயே இருந்தார். சூசானாவின் மரணத்திற்குப் பிறகு டார்வினின் சகோதரிகள் வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். டார்வினின் தந்தை ராபர்ட்டோ குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளத் தொடங்கினார். வெளியில் அன்பான மனிதராக இருந்தாலும் வீட்டில் சிடுசிடுவென இருப்பார். தான் சொன்ன வேலைகளை உடனே செய்து முடிக்க வேண்டும் எனக் கெடு விதிப்பார். எல்லாமும் சரியாக இருக்க வேண்டும். ஒழுங்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

பதிமூன்று வயதில் டார்வினை ஷ்ரூஸ்பரி அரசுப் பள்ளியில் சேர்ந்தார் ராபர்ட். அந்தப் பள்ளியும் டார்வினுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வீட்டின் கடுமையான சூழலுக்கு பள்ளியையே தாங்கிக்கொள்ளலாம் என்றிருந்தார்.

டார்வினுடைய அண்ணன் எராஸ்மஸும் அதே பள்ளியில்தான் படித்தார். டார்வினுக்கு எராஸ்மஸ்தான் எல்லாம். இருவரும் சகோதரர்கள் என்பதைவிட நல்ல நண்பர்கள். எந்நேரமும் சேர்ந்தே பொழுதைக் கழிப்பர். இருவரும் சேர்ந்து புத்தகங்களை வாசிப்பர். கதைகளைப் பகிர்ந்துகொள்வர்.

டார்வினுக்குச் சாகசக் கதைகள் பிடிக்கும். அவற்றில் வரும் வினோத மிருகங்கள் பிடிக்கும். நிறையக் கதைகளைப் படித்ததில் அந்த வயதிலேயே உலகம் முழுக்கம் சுற்ற வேண்டும் என்ற விருப்பம் டார்வினுக்கு வந்தது. தீவுகளிலும், தென் அமெரிக்கக் காடுகளிலும் சாகசப் பயணம் மேற்கொள்வதுபோல் பகல் கனவு காண்பார். அதேபோல் கடல்கள் என்றாலும் டார்வினுக்கு அலாதி பிரியம். கடற்கரைகளுக்குச் சென்றால் நீண்ட நேரம் அலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பார். அங்கே காணும் தாவரங்களை, கரை ஒதுங்கும் உயிரினங்களை வீட்டிற்கு எடுத்து வருவார். அது என்ன என்று கேட்டறிந்து வகைப்படுத்தி எழுதி வைப்பார். இப்படி எழுதி வைப்பது அவருடைய தாய் சொல்லிக்கொடுத்த பழக்கம். உயிரினங்களைச் சேகரிப்பதையும் வகைப்படுத்துவதையும் இப்படித்தான் கற்றுக்கொண்டார்.

உயிரினங்களைப் போல வேதியியலிலும் டார்வினுக்கு ஆர்வம் இருந்தது. இதற்குக் காரணமும் சகோதரன் எராஸ்மஸ்தான். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் சோதனைக்கூடம் ஒன்றை உருவாக்கி, தன் தந்தையின் மருந்துகளை எடுத்து வந்து பல்வேறு சோதனைகள் செய்வர். குறிப்பாக அந்தக் காலகட்டம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி இருந்ததால் வளர் பருவத்தினருக்குப் பெற்றோர்களே வேதியியல் பரிசோதனைகளை ஊக்குவித்தனர். டார்வினும் எராஸ்மஸும் தந்தையின் சட்டைப் பையிலிருந்து காசுகளைத் திருடிச் சென்று கண்ணாடிக் குடுவை, சிறிய அடுப்பு, ரசான கரைசல்கள் என என்னென்னவோ வாங்கி வருவர்.

ஆனால் இவை அனைத்தும் எராஸ்மஸ் பதினேழு வயதை எட்டியவுடன் முடிவுக்கு வந்தது. பள்ளிப் படிப்பை முடித்த எராஸ்மஸ், மருத்துவம் பயில்வதற்காக கேம்பிரிட்ஜ் கிறிஸ்து கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். டார்வினின் கூட்டுச் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. சகோதரன் இல்லாத வீடு, சகோதரிகளின் கட்டுப்பாடுகளாலும் தந்தையின் கடுமையாலும் வாழ வழியற்ற இடமாகத் தெரிந்தது.

வீட்டில் இருப்பதையே வெறுத்தார். அப்போது டார்வின் பதினைந்து வயதை எட்டியிருந்தார். வேட்டையாடுவதில் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. பள்ளிக்குச் செல்லாமல் தந்தையின் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்து காடுகளிலும் ஏரிகளிலும் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் தேடித் திரியத் தொடங்கினார்.

ஆனால், துப்பாகி வேட்டைக்கு அரசின் அனுமதி வேண்டும். இருப்பினும் டார்வினுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. தன் தந்தை உள்ளூரில் பிரபல மருத்துவர் என்பதால், உள்ளூர் பிரமுகர்களிடம் தந்தையின் பெயரைச் சொல்லிவிட்டு வேட்டையாடக் கிளம்பிவிடுவார். நேரம் காலம் தெரியாமல் வேட்டையாடுவது, ஊர் சுற்றுவது என நாட்கள் கழிந்தன. திடீரென ஒருநாள் டார்வினின் தந்தைக்கு உண்மை தெரியவந்தது. ராபர்ட் கடும் கோபத்தில் கொந்தளித்தார். வீட்டிற்குத் திரும்பிய டார்வினை இடைமறித்து, ‘நீ நாய் சுடுவதற்கும், எலி பிடிப்பதற்கும் தவிர எதற்கும் லாயக்கில்லாதவன். நீ, நம் குடும்பத்திற்கே அவமானம்’ எனக் கத்திவிட்டார்.

தந்தை கண்டிப்புடன் நடப்பார் என்பது டார்வினுக்குத் தெரியும். ஆனால் தன்னைப் பற்றி இப்படி ஓர் எண்ணத்தை வைத்திருப்பார் என்பதை டார்வினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அழுதேவிட்டார். டார்வினை ஒழுக்கமற்ற நிலையிலிருந்து வெளிகொண்டு வருவதற்கு ஒரு வழிதான் ராபர்ட்டுக்கு இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் மிச்சம் இருக்கும் நிலையிலும், அவரது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு, கல்லூரிக்கு அனுப்புவது. அவருக்கான வாழ்க்கைப் பாதையைக் காட்டுவது. மருத்துவம் பயிலவைப்பது. இவை எல்லாம் டார்வினை நல்வழிப்படுத்தும் என்று நம்பினார். இதற்காக இரண்டு தேர்வுகளை டார்வினுக்கு முன்னால் வைத்தார்.

ஒன்று, ஸ்காட்லாந்துக்குச் சென்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில வேண்டும். பிறகு லண்டனில் தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் உதவியாளராகச் சேர்ந்து மருத்துவராக உயர வேண்டும்.

இல்லை என்றால், இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலோ சேர்ந்து கிறிஸ்தவ நெறியியலைக் கற்க வேண்டும். ராபர்ட் இவ்வாறு கருதியதற்குக் காரணம் இருந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் திருச்சபையுடன் இணைப்பில் இருந்தன. திருச்சபை வலியுறுத்தும் ஒழுக்க நெறிகளை மாணவர்களுக்குப் போதிப்பதே அவற்றின் தலையாயக் கடைமையாக இருந்தது. அங்கே பயில்வது அறிவை இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என ராபர்ட் கருதினார். சொல்லப்போனால் ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜும் வகுப்புவாதத்தைச் சமூகத்தில் நிலைக்க வைத்திருக்கும் கல்விக்கூடங்களாகவே இருந்தன. ஒருவேளை டார்வினுக்கு ஆர்வம் இருந்தால் அங்கேயே மருத்துவமும் பயின்று ‘உயர்குடி’ நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவராக உயரலாம் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு.

டார்வினுக்கு இரண்டிலும் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. சலிப்பூட்டும் சமயக் கொள்கைகளைப் பயில்வதற்கு மருத்துவராகிவிடலாம் என முடிவு செய்து எடின்பர்க் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்தார்.

(தொடரும்)

The post டார்வின் #3 – ஒழுக்கமற்றவன் appeared first on கிழக்கு டுடே.

  •  

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. இங்கிலாந்து, பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து தொழிற்சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. பிர்மிங்ஹாம் இந்தப் புதிய தொழில் உலகின் மையமாகத் திகழ்ந்தது. நீராவி இயந்திரங்களின் கூச்சல்களும் தொழிற்சாலைகளின் இரைச்சல்களுமே நகர வீதிகளை ஆக்கிரமித்திருந்தன.

புதிய செல்வந்தர்கள் வர்க்கம் உருவாகி வந்தது. அறிவையும் தொழில்நுட்பங்களையும் லாபத்தையுமே கருத்தில் கொண்டு எதிர்காலத்தை உருவாக்கும் முனைந்த வர்க்கம். இதில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். பாரம்பரிய, நிலவுடைமைச் சமூகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிதாய் முளைத்து, சுயமாய் செல்வத்தைத் தேட முனைந்தவர்கள்.

இதில் ஒருவராக ஜோஷியா வெட்ஜ்வுட் இருந்தார். மண்பாண்டங்கள் செய்யும் தொழிற்சாலை வைத்திருந்தார். பிர்மிங்ஹம் வட்டாரத்தில் முக்கியப் புள்ளி. வெட்ஜ்வுட்டுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் எராஸ்மஸ். மருத்துவர், கவிஞர், கண்டுபிடிப்பாளர் எனப் பல்துறை வித்தகர். இவரும் வெட்ஜ்வுட்டும் எலியும் பூனையும்போல.

எராஸ்மஸ் எல்லோரையும் கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் கிண்டலடிப்பார். குறிப்பாக மத நம்பிக்கைகளை, கிறிஸ்தவ நம்பிக்கைகளை. கிறிஸ்தவ மதம் அழிந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு அறிவு வந்துவிட்டது. கிறிஸ்தவத்தைக் கேள்வி எழுப்புகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவம் தன்னைச் சீர்திருத்திக்கொள்கிறது என்பார். ஜோஷியா வெட்ஜ்வுட்டோ கிறிஸ்தவர். ஆனால் பழைமைவாத, சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிப்போன கிறிஸ்தவர் கிடையாது. இவருடையது சீர்திருத்தக் கிறிஸ்தவம். இந்தக் கிறிஸ்தவம் பிதா, குமாரன், தூய ஆவி என்கிற பழைய திரித்துவ நம்பிக்கையை நிராகரித்தது. இறைவன் ஒருவனே என்கிற இறை ஒருமைவாதத்தை முன்வைத்தது.

இதைத்தான் கிறிஸ்தவம் பகுத்தறிவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள சீர்திருத்தத்தில் ஒளிந்துகொள்கிறது என்றார் எராஸ்மஸ். அவர் அறிவை நம்பினார். அறிவியலை நம்பினார். அறிவியலே எல்லாவற்றுக்குமான பதிலை வைத்திருக்கும்போது எதற்காக மதத்தின் பக்கம் ஒளிய வேண்டும்? பகுத்தறிவைக் கொண்டே வளமையான எதிர்காலத்தைக் கட்டமைப்போம் என்பதுதான் எராஸ்மஸின் வாதம். இதுதான் இருவருக்கும் அடிக்கடி மோதல் வருவதற்குக் காரணம்.

இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் 18ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தை உளமாற நேசித்தார்கள். கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடினார்கள். இந்தக் கண்டுபிடிப்பாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து லூனார் சமூகம் என்ற சங்கத்தை நிறுவினர். ஜேம்ஸ் வாட், மேத்யூ போல்டன், பெஞ்சமின் பிராங்ளின், ஜோசப் பிரிஸ்ட்லி போன்ற பெரும் அறிவியலாளர்கள் இந்தச் சங்கத்தில் இருந்தார்கள். அறிவியல், தத்துவம், சமூகம், தொழில், கல்வி, மருத்துவம் எனப் பலவற்றை விவாதித்தார்கள். இந்தச் சமூகம் பௌர்ணமி இரவு அன்றைக்கு மட்டுமே கூடும். அதனால் லூனார் சமூகம் என அழைக்கப்பட்டது. லூனார் என்றால் நிலவு என அர்த்தம். ஆனால் அரசு இவர்களை லூனாட்டிக் சமூகம் என்றது. லூனாட்டிக் என்றால் அறிவற்றவர்கள் என அர்த்தம்.

இந்த லூனார் சமூகம், பழமைவாத கருத்துகளை மறுத்தது. பழைய சமூக விழுமியங்களைப் புறக்கணித்து, புதிய விழுமியங்கள் தோன்றுவதற்கு வித்திட்டது. இதனால் அரசு இவர்களைக் கலகக்காரர்களாகப் பார்த்தது. அன்றைக்கு இங்கிலாந்து அரசியலில் பழைமைவாதத்தைப் போற்றும் ஆங்கிலிகன் திருச்சபை ஆட்களே இருந்தனர். இவர்கள்தான் கல்வி அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். அதிகார மட்டம் அனைத்திலும் இவர்களுக்கு மட்டுமே இடம் இருந்தது. இவர்களது அதிகாரத்தை லூனார் சமூக ஆட்கள் அச்சுறுத்தியதால் அரசு பயந்தது.

லூனார் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஜோசப் பிரிஸ்ட்லி. வேதியியலாளர். ஆக்சிஜன் வாயுவைக் கண்டறிந்ததில் முக்கியமானவர். இவருடைய ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட எராஸ்மஸ், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது நோயாளிகளுக்கு ஆக்சிஜனைப் பரிந்துரைத்த முதல் மருத்துவர் எனக்கூடச் சொல்லலாம். வெட்ஜ்வுட்டும் பிரிஸ்ட்லியைக் கொண்டாடினார். அவரது பரிசோதனைகளுக்கு வேண்டிய நிதியையும் கருவிகளையும் தாராளமாக வழங்கினார்.

பிரிஸ்ட்லி அறிவியலில் மட்டுமல்லாமல் இறையியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிறிஸ்தவத்தை எல்லோருக்குமான மதமாக மாற்ற முனைந்தார். அது என்ன அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இறைவன் அருள் பாலிப்பார்? இயேசுவின் அருள் சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கேற்ற கொள்கைகளை வகுக்கத் தொடங்கினார்.

இதுதான் திருச்சபை அதிகாரத்தை அச்சுறுத்தியது. அது எப்படி பிரிஸ்ட்லி கடவுளை எல்லா வர்க்கத்தினருக்கும் சமம் என்று சொல்லலாம்? சடங்குகளை நிராகரிக்கலாம்? புனித ஆவியையும், மந்திர தந்திரங்களையும் மறுக்கலாம்? பிரிஸ்ட்லி மனிதர்களுக்கு மறு அவதாரம் கிடையாது என்கிறார். இயேசு உயிர்த்தெழுந்ததிற்குப் பின்னால் நாம் கண்டறியாத இயற்பியல் விதிகள் இருக்கலாம் என்கிறார். இது இப்படியே சென்றால் நமது எதிர்காலத்தைப் பாதித்துவிடும். மக்களிடம் இத்தகைய கருத்துக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு முன் இந்தக் கும்பலுக்கு மொத்தமாக முடிவுரை எழுத வேண்டும் என அரசு முடிவு செய்தது. அதற்கான சந்தர்ப்பம் அமைய காத்திருந்தபோதுதான் வந்தது, பிரெஞ்சுப் புரட்சி.

0

பிரெஞ்சுப் புரட்சியில் பழைய மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு புதிய மக்கள் அரசாங்கம் உருவானது. இதனை எராஸ்மஸ் கொண்டாடினார். மூளையற்ற முட்டாள் மன்னர்கள் வீழ்ந்து, மக்கள் அரசாளட்டும் என ஆராதித்தார்.

இங்கிலாந்து அரசு ஏற்கெனவே பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் இங்கிலாந்திலும் எதிரொலித்துவிடுமோ என அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் எராஸ்மஸ் போன்ற அறிஞர்கள் இப்படிப் பேச, லூனார் சமூக ஆட்கள் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனச் சொல்லி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

சமத்துவம் பேசிய லூனார் சமூகத்தின் ஆட்கள் சல்லடைப்போட்டு தேடப்பட்டனர். நாத்திகம் பேசியவர்கள் நசுக்கப்பட்டனர். ஜோசப் பிரிஸ்ட்லியின் வீடும், பிரார்த்தனைக் கூடமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அறிவாளிகளுக்கு இனி வேலை இல்லை. அரசரும் திருச்சபையுமே போற்றப்பட வேண்டியவர்கள் என்றது அரசாங்கம். லூனார் சமூகம் சிதைந்துபோனது. பிரிஸ்ட்லி அமெரிக்கா தப்பிச் சென்றார்.

எராஸ்மஸ் தன் உழைப்பை எல்லாம் செலுத்தி ‘ஸூனோமியா’ (Zoonomia) எனும் புரட்சிகர மருத்துவ நூல் ஒன்றை எழுதி இருந்தார். ஆனால் அதைக் கிழித்தெறிய வேண்டும் என்றது அரசாங்கம். அவருடைய மற்ற படைப்புகளும் ஆபாசம் எனத் தூற்றப்பட்டன. எராஸ்மஸ் பேசும் நாத்திகம்தான் பிரெஞ்சுப் புரட்சி போன்ற சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இறுதியில் லூனார் சமூகம் இழுத்து மூடப்பட்டது. அப்போது நிலவி வந்த சுதந்திரச் சிந்தனை எல்லாவற்றையும் தீக்கு இரையாக்கிவிட்டு, புதிய இங்கிலாந்தை மீண்டும் பழைமைவாதம் நோக்கிய, திருச்சபை விழுமியங்களைப் பாதுகாக்கும் தேசமாக மாற்றியது அரசு.

அறிவுஜீவிகள் தங்கள் நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டனர். வெட்ஜ்வுட் உடல்நலம் பாதிக்கப்பட்டார். தனது மகன்களுக்குச் சொத்துகளைப் பிரித்துக்கொடுத்துவிட்டு, மகள்களுக்குத் திருமணங்கள் செய்துவைத்தார். தனது மகள் சூசானாவை தனது நண்பர் எராஸ்மஸின் மகனான ராபர்ட்டுக்குத் திருமணம் செய்துவைக்க முன்வந்தார்.

எராஸ்மஸுக்கு 14 வாரிசுகள். மூத்தமகன் சார்லஸ். அவரும் மிகச் சிறந்த மருத்துவர். ஆனால் நோயாளி ஒருவரைக் குணப்படுத்த முயற்சி செய்து, அதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்துபோனார். இரண்டாவது மகன்தான் ராபர்ட். எராஸ்மஸ், ராபர்ட்டையும் மருத்துவராக்க விரும்பினார்.

ராபர்ட் எடின்பர்க் பல்கலைக்கழகம் சென்றார். லெய்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். சொந்த ஊருக்குத் திரும்பி, மருத்துவர் பணியைத் தொடங்கினார். ராபர்ட்டுக்கு தனது தந்தையைப்போலவே மருத்துவ ஞானம் இருந்தது. அனைவரையும் அரவணைக்கும் நேசம் இருந்தது. இதனால் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார். ஆனால் தன் தந்தையைப்போலப் புரட்சிகர, நாத்திகவாதக் கருத்துக்களைப் பேசாமல், இங்கிலாந்து அரசுக்கு அடிபணிந்து ஷ்ரூஸ்பரி நகருக்கு வெளியே ஒரு பெரிய வீட்டைக் கட்டிக்கொண்டு குடிபுகுந்தார்.

இவருக்குத்தான் வெட்ஜ்வுட் தன் மகள் சூசானாவைத் திருமணம் செய்ய முன்வந்தார். ராபர்ட்டுக்கும் சூசானாவுக்கும் 1796-ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் அடுத்தடுத்து ஆறு குழந்தைகள் பிறந்தன. முதல் மூன்றும் மகள்கள். நான்காவது மகன். அவனுக்கு எராஸ்மஸ் எனத் தந்தையின் பெயரையே வைத்தார் ராபர்ட். இதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து பிப்ரவரி 12, 1809 அன்று இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்கு ராபர்ட், தன் குடும்பத்தின் மருத்துவப் பாரம்பரியத்தை நினைவூட்டும் வண்ணம், சார்லஸ் ராபர்ட் டார்வின் எனப் பெயரிட்டனர்.

சார்லஸ், ராபர்ட்டின் சகோதரர் பெயர். நோயாளியைக் குணப்படுத்தப்போய் இறந்தவர் எனப் பார்த்தோம் இல்லையா? அவரது பெயர். டார்வின் என்பது தனது தந்தை ‘எராஸ்மஸ் டார்வினின்’ வம்சாவளியை நினைவுபடுத்தும் குடும்பப் பெயர். இப்படியாக மருத்துவர்கள் வழிவந்த மகன் என்பதால் சார்லஸ் டார்வினும் சிறந்த மருத்துவராக வருவான் என ராபர்ட் எதிர்பார்த்தார். ஆனால் மகனுக்கோ மருத்துவத்தில் துளியும் ஆர்வமில்லாமல் இருந்தது.

(தொடரும்)

The post டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம் appeared first on கிழக்கு டுடே.

  •  

அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

மரபியல் ஆலோசனை சொல்வதற்கு மனவலிமை வேண்டும்!

மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வைஷ்ணவி. மரபணுப் பொறியலில் இளநிலை பட்டம் பெற்றவர். கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் பயின்றவர். மரபியல் ஆலோசகராகப் பணியாற்றியவர். வெண்பா என்கிற புனைப்பெயரில் மரபியல் சார்ந்து எழுதி வருபவர். தாயனை, அறிவதுவே ஆகிய அறிவியல் நூல்களை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளார். மரபியலுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு, அதை சமூகம் எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து விரிவாக அவர் உரையாடிய நேர்காணலின் முதல் பகுதி இது.

அறிவியலில் ஆர்வம் வந்தது எப்படி?

குறிப்பிட்ட ஒரு காரணம் சொல்ல முடியாது. முதலில் எங்கள் வீட்டில் பெரும்பாலானோர் பள்ளி ஆசிரியர்கள். அறிவியல் ஆசிரியர்கள். ஆனாலும் முதன்முதலில் அறிவியலில் ஆர்வம் வரத் தொடங்கியது, எட்டாம் வகுப்பில்தான். என் உயிரியல் ஆசிரியர் பாடம் தொடர்பாகப் படங்கள் வரைவது பிடிக்கும். இதயம், சிறுநீரகம் என உடல் பாகங்களை அழகாக வரைவார். அவர் சொல்லித் தருவதும் அழகாக எளிமையாக இருக்கும். இதுதான் அறிவியலில் ஆர்வம் வருவதற்கான தொடக்கப்புள்ளி என நினைக்கிறேன்.

ஏன் குறிப்பாக, மரபியல்?

ஒன்பதாம் வகுப்பில் குரோமோசோம்ஸ் பற்றிய பாடம் வந்தது. அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே ஏனோ ஆர்வம் வந்தது. 12ஆம் வகுப்பு முடித்தவுடன் நீட் பயிற்சியில் சேர்த்துவிட்டார்கள். மருத்துவத்தில் ஆர்வமில்லை. மரபியல் படிக்க வேண்டும் எனக் கூறினேன். வீட்டில் சம்மதிக்கவில்லை. காரணம், மரபியல் படித்தால் எந்த வேலைக்கு செல்வோம், எதிர்காலம் எப்படி அமையும் என்கிற புரிதல் அப்போது கிடையாது. நீட்டில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 10 லட்சம் கேட்டார்கள். நாங்கள் சம்மதிக்கவில்லை. மரபுப் பொறியியல் (Genetic Engineering) படிப்பில் சேர வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றேன். அப்போது உயிரித் தொழில்நுட்பம் (Bio-Tech) ஓரளவு தெரிந்த படிப்பாக இருந்தது. அதில் சேர்க்கத் திட்டமிட்டார்கள். ஆனால் நேர்காணலில் மரபுப் பொறியியலையே தேர்ந்தெடுத்துவிட்டேன். வீட்டில் எல்லோருக்கும் கோபம். இப்போதும் திட்டுவார்கள்.

கோபம் அகன்றதா?

மரபியலுக்கும் உயிரித் தொழில்நுட்பப் படிப்புக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கிட்டதட்ட 70 சதவிகிதம் ஒன்றாகத்தான் இருக்கும். 30 சதவிகிதம் மட்டுமே மாறும். உயிரித் தொழில்நுட்பத்தில் துறை அறிவு சார்ந்து படிப்போம். மரபியலில் நோய்கள் பற்றிப் படிப்போம். என் உறவினர் ஒருவருக்குப் பிறந்த குழந்தை மரபணுக் குறைபாட்டுடன் இருந்தது. அதேபோல உறவினர் ஒருவருக்கு Myasthenia எனும் ஒரு நோய் இருக்கிறது. தசைகளைச் சாப்பிட்டுவிடும் நோய். தன்னிச்சையான இயக்கம் (Voluntary Movements) எல்லாவற்றையும் முடக்கிவிடும். கண்களை மூடினால் திறக்க முடியாது. கண்கள் மூடி திறப்பது தன்னிச்சையாக நடைபெறுவது இல்லையா?

அந்த நோய் உள்ளவர்களுக்கு உடலில் சருமத்திற்குக் கீழ் எலும்புகள்தான் இருக்கும். தசைகள் இருக்காது. எழுந்து நடக்க முடியாது. படுத்தால் எழ முடியாது. கழுத்தைத் திருப்ப முடியாது. கையை நகர்த்த முடியாது. இந்த நோய்க்கு சிகிச்சை கிடையாது. மாத்திரைகள் மட்டும் தருவார்கள். உடலை உருக்கும் வலி இருக்கும். அதைப் போக்குவதற்காக மட்டும் மாத்திரைகள். நான் அப்போது மரபியல் படித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்குதான் வகுப்பில் அந்த நோய் பற்றிப் படித்தேன். என் உறவினருக்கு வந்திருப்பது அந்த நோயாக இருக்கலாம் எனத் தந்தையிடம் சொன்னேன். அவர் முதலில் நம்பவில்லை. நான் விடாமல் வற்புறுத்தவே சோதனைகள் எடுத்தனர். இறுதியில் அந்த நோய்தான் என உறுதியானது. அதன்பிறகுதான் என் வீட்டில் நான் சொல்வதையே நம்பத் தொடங்கினார்கள். இந்தப் படிப்புக்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது தெரிந்தது. ஊக்கம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அதேபோல விவரம் தெரியாத வயதில் இருந்தே மாத்திரைகளில் ஆர்வம் அதிகம். அதுவும்கூட காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் சாப்பிடும் மாத்திரைகளின் பெயர்களும், அவை எந்த நோய்க்கானது என்பதும் விவரம் அறியாத வயதில் இருந்தே தெரியும். இப்படி மாத்திரைகளில் ஆர்வம் இருந்ததால்கூட நோய்கள் பற்றிய படிப்பில் ஆர்வம் வந்திருக்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் கேட்டவுடன் தோன்றுகிறது.

நோயில் ஆர்வம். நீட் பரீட்சையில் தேர்ச்சி. பிறகு ஏன் மருத்துவராகவில்லை?

வலி, ரத்தம் எல்லாம் ஆகாது. நோயாளிகளின் துன்பத்தைப் பார்க்க இயலாது. சண்டைப் படங்கள்கூட பார்க்க மாட்டேன். இது ஒருவகை மனவடுவாகக்கூட (Trauma) இருக்கலாம். எப்படி அந்த வடு வந்தது என்று தெரியவில்லை.

மரபியலிலும் நோய் பற்றிப் படிக்கிறீர்கள். அங்கும் நோயாளிகளைப் பார்க்கிறீர்கள். இன்னும் எப்படித் தொடர முடிகிறது?

என் வீட்டில் ஒரு குழந்தைக்கு Cystic Fibrosis எனும் மரபியல் நோய் இருக்கிறது. இப்போதுவரை சிகிச்சையில்தான் இருக்கிறான். அவனைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்போது பார்த்திருக்கிறேன். எல்லோரும் சிறுவர்கள். பிறந்த குழந்தையில் இருந்து 18 வயது ஆனவர்கள் வரை இருப்பார்கள். 400 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூடாது. யாரும் பேசிக்கக்கூடாது. ஒருவரிடம் இருக்கும் பாக்டீரியா இன்னொருவரிடம் பரவக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

சிஸ்டிக் பைப்ரோசிஸால் பாதிக்கப்பட்டவர்கள் நுரையீரலில் பாக்டீரியா இருக்கும். அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக இருக்கும். ஒருவேளை வேறொருவரிடம் இருந்து பாக்டீரியா பரவிவிட்டால் நுரையீரலைக் காலி செய்துவிடும். நுரையீரல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும். நுரையீரல் கிடைக்காது. கிடைத்தாலும் சிகிச்சை மேற்கொள்வதற்கு வேண்டிய பொருளாதாரம் இருக்காது. அப்படியே பொருளாதாரம் இருந்தாலும் சிஸ்டிக் ஃபைரோஸிற்கு என்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நிபுணர்கள் குறைவு.

அந்தப் பிரச்னை இருப்பவர்கள் பார்க்கச் சாதாரணமாக இருப்பார்கள். நாம் சொன்னால்தான் தெரியும். சாதாரண பள்ளியில் படிப்பார்கள். மற்றவர்களிடம் இருந்து இவர்களுக்கு இருக்கும் வேறுபாடு, எதைச் சாப்பிட்டாலும் மாத்திரை போட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரிய வரும்.

கிட்டத்தட்ட பல மருத்துவமனைகளுக்கு அலைந்து இறுதியில் வேலூர் சி.எம்.சியில்தான் அந்தச் சிறுவனுக்கு வந்தது சிஸ்டிக் ஃபைரோஸிஸ் எனத் தெரிந்தது.

அவனது பாட்டி குளிக்க வைக்கும்போது, ‘என்னடா தங்கம் உனக்கு மட்டும் இருக்கே. உனக்கு எதுவும் உடம்புக்கு முடியவில்லை என்றால் சொல்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘வைஷ்ஷு அக்கா இதற்குக்தான் படிக்கிறாங்க. எப்படியும் சரி பண்ணிடுவாங்க’ என்று பதில் சொல்லியிருக்கிறான். இதை அவன் பாட்டி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது வரைக்கும் நான் இந்தப் படிப்பில் தொடர்வதற்கு இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணம்.

ஆனால் தொடங்கும்போது ஏற்கெனவே சொன்னதுபோல இதைச் சேவையாக செய்யப்போகிறோம், மனிதர்களிடம் கொண்டு சேர்க்கப்போகிறோம் என்றெல்லாம் எண்ணவில்லை. பாடம் பிடித்திருந்தது. அதில் வரும் செல்கள், அந்த செல்களுக்குள் இயங்கும் தனி உலகம் எனக் கற்பனைக்கும் எட்டாத ஆச்சரியங்களைத் தந்தன. அவை மட்டும்தான் காரணம்.

இதனால்தான் மரபியல் ஆலோசனையிலும் ஆர்வமா?

கல்லூரி இரண்டாம் ஆண்டில் கீழ்ப்பாக்கத்தில் மரபியல் ஆலோசனைக்குச் (Genetic Counselling) சென்றேன். மரபியல் படிப்பவர்கள் கட்டாயம் இன்டர்ன்ஷிப் செல்ல வேண்டும். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நிறுவனங்களிலும். நான் சிஸ்டிக் பைரோஸிற்குச் சிகிச்சை தரும் இடங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சி.எம்.சி சென்று வர முடியவில்லை. அருகில் ஏதாவது இடம் இருக்கிறதா எனத் தேடினேன். கீழ்பாக்கத்தில் மருத்துவ மரபியல் மையம் இருந்தது. அங்கு சென்று விசாரித்தபோது மரபியல் ஆலோசனை தொடர்பாகப் பயிற்சித் திட்டம் இருந்ததும் தெரிந்தது. நிறையப் பேர், நிறைய மரபியல் குறைபாடுகளுக்குச் சிகிச்சை எடுப்பதைக் கண்டேன். அங்கேயே பணியாற்ற முடிவு செய்தேன். பிறகு அஹமதாபாத்திலும் பணியாற்றினேன்.

இப்போதும் மரபியல் ஆலோசனைகள் செய்கிறீர்களா?

தொடரவில்லை. விட்டுவிட்டேன். மொத்தம் ஆறு மாதங்கள் மட்டுமே சென்றேன். நோயில் ஆர்வம் இருந்தது. ஆச்சரியம் இருந்தது. முதன்முறை நோயாளிகளைப் பார்க்கும்போது அவர்கள் படும் துன்பத்தைவிட அந்த நோயாளிகளிடம் உள்ள குறைபாடு என்ன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, குணப்படுத்துவது என்பதில்தான் தேடலும் ஆர்வமும் இருக்கும்.

ஆறு மாதங்களில் பல்வேறு நோய்களைப் பார்த்தேன். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். ஆனால் ஒருகட்டத்துக்குப் பிறகு, நிறைய நோயாளிகளைப் பார்க்கும்போது ஆர்வம்போய் யதார்த்தம் உறைக்கும்.

முதல்கட்டத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்போம். மூன்றாம் கட்டத்தில் நாம் முதிர்ச்சியாக நோய்மையைக் கண்டுபிடித்துக் குணப்படுத்த விழைவோம். இதற்கு இடையில் இரண்டாம் கட்டம் இருக்கிறது. நம்மை நம்பிக்கை இழக்க வைக்கும் கட்டம். இதில்தான் அவர்கள் படும் துன்பங்களை, வேதனைகளைப் பார்ப்போம். இதில் சிக்கினால் மூன்றாவது கட்டத்திற்குச் செல்லவே முடியாது. நான் இரண்டாம் கட்டத்தில் சிக்கிவிட்டேன். உண்மையைச் சொன்னால் குணப்படுத்துவதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும், சாதாரணமாக்க வேண்டும் என்பதுதான் நமது எண்ணமாக இருக்கும்.

மரபியல் ஆலோசகராக உங்கள் பணி என்ன?

மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது அவர்களுக்கு வந்திருப்பது மரபியல் குறைபாடா எனத் தெரியாத பட்சத்தில் எங்களிடம் அனுப்புவார்கள். நாங்கள் அவர்களுக்கு மரபணுச் சோதனை செய்து அவர்கள் குறைபாடு எத்தகையது எனக் கண்டுபிடிப்போம்.

எந்த வயதில் இருந்து ஆலோசனைக்கு வருவார்கள்?

குழந்தை பிறக்கும் முன்னரே. கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்யும்போது அவர்கள் பின் கழுத்தில் நீர் கோர்த்திருக்கிறதா என்று 10வது வாரத்திலேயே தெரிந்துவிடும். இது மரபியல் குறைபாடு இருப்பதற்கான ஒரு பொதுவான அறிகுறி. எதனால் அந்தக் கட்டி என்பதைச் சாதாரண மருத்துவர்களால் சொல்ல முடியாது. அவர்கள் மரபியல் ஆலோசகரிடம் அனுப்புவார்கள்.

சாதாரண மருத்துவர்கள் மரபியல் நோய்க்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களா?

அவர்கள் மரபியல் ஆலோசனை பண்ண முடியாது. பண்ணவும் கூடாது. அவர்கள் மரபியல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் பெற்றவர்கள் இல்லை. அதனால் எங்களுக்குப் பரிந்துரைப்பார்கள்.

நாங்கள் நோயாளிகளை மருத்துவர்கள் சொல்லியதை வைத்து ஆராய்வோம். அவர்கள் குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது மரபியல் குறைபாடுகள் இருக்கின்றனவா? கணவன், மனைவி யாருக்காவது மரபியல் குறைபாடுகள் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புவோம். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் உறவுமுறை என்னென்ன எனக் குடும்ப வரைபடம் (Pedigree) வரைவோம். மூன்று தலைமுறையினரை உள்ளடக்கும் வரையில் அந்த வரைபடம் இருக்கும். தந்தை தரப்பில் மூன்று தலைமுறை, தாயின் தரப்பில் மூன்று தலைமுறை. இது வரையும்போதே வந்திருப்பது எத்தகைய நோய் என ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.

இதிலும் தெரியாதபட்சத்தில் Non Invasive Pre-Natal Testing என்ற ஒன்றைச் செய்வோம். தாயின் ரத்தத்தை எடுத்து, அதில் சுற்றித் திரியும் குழந்தையின் டி.என்.ஏவைப் பிரித்தெடுத்து, அதில் உள்ள குரோமோசோம்களை ஆராய்வோம். அதிலும் தெரியவில்லை என்றால் அடுத்தகட்ட சோதனையாக கருப்பையில் இருந்து Amniocentesis நீரை எடுத்து ஆராய்வோம். இதில் குழந்தைக்கு என்ன பிரச்னை எனத் தெரிந்துவிடும்.

ஆனால் இந்த ஒவ்வொரு சோதனைக்கும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். நாம் வற்புறுத்தக்கூடாது. அவர்களுக்கு விருப்பம் என்றால் மட்டும் செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா?

மாட்டார்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. சோதனை செய்தால்தான் கண்டுபிடிக்க முடியும். இல்லை என்றால் முடியாது எனச் சொல்வோம். அப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கருவிற்கு ஏதாவது பாதிப்பு உண்டாகும் எனும் பயம் ஒரு பக்கம். மதம், கலாசார நம்பிக்கைகள் மறுபக்கம்.

இந்தச் சோதனைகளால் கருவிற்குப் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்குமா?

பொதுவாக 10வது வாரத்தில் சோதனைகள் இருக்கும். சில சோதனைகளைப் 13வது வாரத்தில் செய்ய வேண்டும். சில சோதனைகள் 15 வாரத்தில் நடைபெறும். கருப்பை நீர் எடுக்கும் சோதனைகள், நச்சுக்கொடியில் இருந்து செல்களை எடுத்து பரிசோதிக்கும் சோதனைகளை 13, 15 வாரக் கருவில் மட்டும்தான் செய்ய முடியும். இதில் கரு கலைவதற்கு 1 சதவிகிதத்துக்கும் குறைவான வாய்ப்புதான். ஆனால் இதையும் பெற்றோர்கள் ஏற்பதில்லை.

ஆய்வு செய்ய நேர்ந்து குழந்தைக்குப் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தால் என்ன செய்வீர்கள்?

பெற்றோருக்கு ஏதேனும் மரபணு குறைபாடிருந்தால் அவர்கள் குழந்தைக்காகத் திட்டமிடும் போது உங்களுக்குக் பிறக்கப் போகும் குழந்தை உங்களுக்கு இருக்கக்கூடிய மரபணுக் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மட்டும்தான் சொல்ல முடியும். அதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. 25 சதவிகிதம் வாய்ப்பு, 90 சதவிகிதம் வாய்ப்பு என்றுதான் சொல்ல முடியும். இதுவே பிறக்கப் போகும் குழந்தையைப் பரிசோதித்த பிறகு குறைபாட்டை உறுதி செய்ய முடியும். சில சமயங்களில் அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அதுவும் குழந்தையைப் பரிசோதிக்கும்போது தெரிந்துவிடும். குழந்தை குறைபாடுடன் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கலைக்க வேண்டும் என்றால் கலைக்கலாம். தொடர வேண்டும் என்றால் தொடரலாம் என்று சொல்வோம்.

ஒருவேளை தொடர சம்மதித்தால்?

அந்தக் குழந்தையை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றி சொல்வோம். குழந்தைக்கு வேண்டிய சிகிச்சை, குழந்தையை வளர்ப்பதற்கான செலவு ஆகியவற்றைச் சொல்வோம். பெற்றோர்கள் குழந்தையைக் கலைக்க சம்மதிக்காதபட்சத்தில் குழந்தைப் பிறக்கும் வரை எங்கள் மேற்பார்வையில்தான் இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடனும் குறைபாடுடன் இருக்க நேர்ந்தால் முழுதாக நாங்கள்தான் பார்த்துக்கொள்ளும்படி நேரிடும்.

பிறந்த குழந்தைக்கு மரபணு குறைபாடு இருக்கிறதா என்பதை எப்படி ஆராய்வீர்கள்?

முதல் கட்டம் அவர்கள் உடல் அமைப்பு. அந்தக் குழந்தை சாதாரணமாக இல்லாமல் முக அமைப்பில் வேறுபாடு இருக்கும். இரண்டு கண்களுக்கு இடையிலான தூரம். கண்ணுக்கும் காதுக்கும் இடையிலான அமைப்பு. மூக்குக்கும் கண்ணுக்குமான அமைப்பு ஆகியவற்றை ஆராய்வோம். புருவமும் காதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் முழுவதும் ஒவ்வொரு பாகமும் அதற்கான அளவீடுகளில் இருக்க வேண்டும். இதை வைத்தே நாம் எந்த மரபணு குறைபாடு என்று சொல்லிவிடலாம். சில மரபணு குறைபாடுகள் வெளித் தோற்றத்தை பாதிக்காது. அது போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாகவே தெரிவார்கள். அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து அல்லது நோய்க்கான அவர்களின் குடும்பப் பிண்ணனியை வைத்துதான் என்ன குறைபாடு என்பதைக் கண்டறிய முடியும்.

பெரியவர்கள் மரபணுக் குறைபாட்டால் வருவார்களா?

சில குறைபாடுகள் 40 வயதுக்கு மேல்தான் வரும். ஆனால் அவர்களுக்கு விழிப்புணர்வு இருக்கும். பெரும்பாலும் புற்றுநோய் மற்றும் Huntington’s chorea உள்ளிட்ட மூளை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரபியல் சோதனைக்கு எங்களிடம் வருவார்கள்.

ஏன் இந்த மரபியல் குறைபாடுகள் வருகின்றன?

காரணம் மரபணுப் பிறழ்வுகள் (Mutations). உடலில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றம். கரு உருவாகும்போது அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமும் முதல்கட்டமாகப் பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படிக் கடத்தப்படும் மரபணுக்களில் ஏதேனும் பிறழ்வு ஏற்பட்டால், அது குழந்தையைப் பாதிக்கும். சுற்றுப்புறத்துடனான நமது உறவு, உண்ணும் உணவு, வேதிப் பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றாலும் நடக்கின்றன. இவ்வாறு மரபணுவில் மாற்றம் ஏற்படுவது நமது உடலைப் பாதிக்கிறது.

அதேபோல மரபணுப் பிறழ்வால் நோய்கள்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதனை மரபணு நோய்கள் என அழைப்பதே தவறு. குறைபாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். Swyer Syndrome என்கிற ஒரு மாற்றம் இருக்கிறது. கிட்டத்தட்ட பெண் உடலில் ஆண் குடியிருப்பதுபோன்றது. அவர்களுக்கு உள்ளுக்குள் பெண் உறுப்புகள் இருக்கும். கருப்பை இருக்கும், கருமுட்டைக் குழாய் (Fallopian Tube) இருக்கும். ஆனால் கருமுட்டை இருக்காது. இதனால் அவர்களது வாழ்வியலுக்கு எந்தப் பாதிக்கும் இருக்காது. ஆனால் அவர்களால் கருவுற முடியாது. அவர்களுக்குப் பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் கருப்பையில் வளர்ச்சி இருக்காது. சிலருக்கு விதைப்பைகள் உள்ளே வளர்ந்திருக்கும். வெளியே அவர்கள் பெண்ணாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் ஆண் உறுப்புகள் இருக்கும். சிலருக்கு இரு உறுப்புகளும் இருக்கும். இது அவர்களுக்கே தெரியாது. இதுபோன்ற குறைபாடுகளும் இருக்கின்றன.

இந்த விஷயங்கள் எதுவும் அவர்கள் பொது வாழ்வியலைப் பாதிக்காது. ஆனால் சொந்தமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சிலருக்கு மட்டும் செயற்கைக் கருத்தரித்தல் முறையில் குழந்தை பிறந்திருக்கிறது.

மரபணுக்களில் மாற்றங்கள் வந்தாலே ஆபத்தா?

அப்படிச் சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் பயன்தரக்கூடிய மாற்றங்களும் இருக்கின்றன. உதாரணமாக ஆப்பிரிக்க ஜனத்தொகையில் வெகு சாதாரணமாகக் காணப்படும் G6PD, HbS, HbC உள்ளிட்ட மரபணுப் பிறழ்வுகள் மலேரியா தொற்றிலிருந்து அந்தக் குறிப்பிட்ட இனத்தைக் கணிசமாகக் காக்கின்றன. அவர்கள் ஹீமோகுளோபினில் நடைபெற்ற மாற்றம். அவர்கள் உடலில் மலேரியா ஒட்டுண்ணியை பிழைக்க விடாது. இதேபோல CCR5 – delta32 என்னும் மரபணுப் பிறழ்வால் சிலருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிக்காது. குறிப்பிட்ட மரபணுப் பிறழ்வால் குறிப்பிட்ட நோய்க்குத் தடுப்பு ஏற்படுவதை protective mutation என்போம்.

இது போன்ற மரபணுப் பிறழ்வுகள் குறிப்பிட்ட நோய்களைத் தடுக்குமே தவிர இந்தப் பிறழ்வுகளால் கட்டாயம் பாதிப்புகளும் விளைவுகளும் உண்டு. உதாரணத்திற்கு HbS மரபணு பிறழ்வு sickle cell anemia எனும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதேபோல வேறு பயன் தரும் பிறழ்வுகளும் இருக்கின்றன. உதாரணமாக மனிதர்கள் உருவானபோது அவர்களுக்குத் தாய்பாலைத் தவிர வேறு விலங்குகளின் பால்களைக் கிரகிக்கும் தன்மை இல்லை. ஆனால் இப்போது நாம் எல்லோரும் பால் அருந்துகிறோம்.

இது ஒரு பயன்தரக்கூடிய மாற்றம். இதுபோன்ற பயன் தரும் மாற்றங்களும் வெகு சாதாரணம். ஆனால் அவை தனிநபர்களுக்கு என்று இல்லாமல் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு நடக்கும். இதைத்தான் நாம் பரிணாம மாற்றம் என்கிறோம்.

இன்றைய வாழ்க்கை முறையால் மட்டும்தான் மரபியல் நோய்கள் வருவதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

இல்லை. ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்கிறது. என்ன, அந்தக் குழந்தை பிழைத்திருக்காது. முன்பெல்லாம் ஒரு வீட்டில் பத்துக் குழந்தைகள் பிறக்கிறது என்றால் நான்கைந்து இறந்துவிடும் எனக் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா? அது எதனால் இறந்தது என்று அப்போது தெரியாது. அவர்கள் இறந்ததற்கு பெரும்பாலும் மரபியல் பிறழ்வுகளும் காரணமாக இருக்கலாம். அப்போதைய மனிதர்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு கிடையாது. ஆனாலுமே இதுபற்றி தெரிந்த ஒரு சமூகமும் இருந்திருக்கிறது. அவர்கள் கொடுத்த தரவுகள் அடிப்படையில்தான் இன்றைய புரிதல் உருவாகி இருக்கிறது.

எப்போதில் இருந்து நமக்கு தெளிவான தரவுகள் கிடைக்கின்றன?

உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை 1950ஆம் ஆண்டு ஸ்வயர் சிண்ட்ரோம் ஒன்று பதிவாகி இருக்கிறது. அப்போதே குரோமோசோம் சோதனைகள் வந்துவிட்டன. குழந்தையின் பாலினத்தை அறிவதற்கு. பாலினம் அறிவதற்கு அன்று தடை கிடையாது. அப்போது குரோமோசோம் சோதனை செய்துவிட்டு வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள்.. ஆனால் பிறந்தது பெண் குழந்தை. இது ஒரு நீதிமன்ற வழக்காகவே மாறி இருக்கிறது.

சொல்லப்போனால் 90களில் மனித மரபணுப் தொகுப்புகளை அறியும் Human Genome Project ஆரம்பிப்பதற்கு முன் மனிதர்களின் முழுமையான மரபணுக்கள் குறித்து யாருக்கும் புரிதல் கிடையாது,

அதற்கு முன் பகுதிப் பகுதியாகத்தான் மரபணுக்களை ஆராய்வார்கள். காரணம் அதற்கான செலவுகள் அதிகம். தொழில்நுட்பமும் கிடையாது. நம் உடலில் மரபணுக்களைக் கட்டமைத்துள்ள அடிப்படை சாரமான நியூக்ளியோடைட்ஸ் 3 பில்லியன் அளவில் இருக்கின்றன. அனைத்தையும் சேர்த்து ஆராய வேண்டும். அப்போது சாங்கர் (Frederick Sanger) என்பவர் கண்டுபிடித்த முறைதான் பயன்பட்டது. இப்போது (NGS- Next-generation sequencing) எனப்படும் முறை பயன்படுகிறது. இதில் மரபணுத் தொகுப்பைக் கொடுத்தால் ஒருநாளுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் என்கிற அளவில் முழுமையாக ஆராய்ந்து கொடுத்துவிடும். இப்போதே ஒரு நாளுக்கு இரண்டு பேர்தான் என்றால் அப்போது நினைத்துப் பாருங்கள்.

1990ல் ஆரம்பிக்கப்பட்ட மனித மரபணுத் தொகுப்புத் திட்டம் 2003இல் முடிந்தது. 100க்கும் மேற்பட்ட பரிசோதனைக்கூடங்களில் மனித மரபணுத் தொகுப்பைப் பகுதிப் பகுதியாக வெட்டி ஆராய்ந்தார்கள். நாம் பார்த்த சாங்கர் தொழில்நுட்பத்தில் 1000 பகுதிகளை மட்டுமே ஆராய முடியும். அதிலும் ஏகப்பட்ட உள்வேலைகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் செய்து இறுதியில் மனித மரபணுக்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.

இதில் ஒரு விஷயம், நாம் செய்யும் ஆய்வில் மரபணுக்களில் இடம்பெறும் தகவல்களில் 98 சதவிகிதம் குப்பைதான். வெறும் 2 சதவிகிதத்தில்தான் நாம் தேடும் தகவல்கள் இருக்கும்.

இன்று ஒருவருடைய மரபணுத் தகவல்களைக் கொடுத்தால் அவருடைய உடல் ஜாதகம் மொத்தத்தையும் சொல்லிவிடலாம். இன்றைக்கு என்ன நோய் வரும், நாளை மறுநாள் என்ன நோய் வரும் என்றெல்லாம் கண்டுபிடித்துவிடலாம். இவை எல்லாம் 2003க்குப் பிறகுதான் சாத்தியமானது.

மரபியல் குறைபாடுடையவர்களிடம் அவர்கள் பிரச்னைகளை எப்படிச் சொல்ல முடியும்?

சொல்லவே முடியாது. உதாரணமாக புற்றுநோய் இன்றைக்கு எல்லோருக்கும் பரவலாக தெரிந்த நோயாகிவிட்டது. இன்று உலகளவில் ஆறில் ஒரு இறப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்திற்கு வந்துவிட்டோமா? ஒரு நோயாளியிடம் சென்று உங்களுக்குப் புற்றுநோய் என்று சொல்ல முடிகிறதா? கிடையவே கிடையாது.

பிறகு எப்படிச் சொல்வீர்கள்?

அதனால்தான் எனக்கும் இந்தத் துறைக்கும் ஒத்துவரவில்லை. இந்தத் துறையில் இருப்பவர்கள் உணர்ச்சிரீதியில் வலுவானவர்களாக இருக்க வேண்டும். நம் கண்முன்னாடியே பிறக்கப்போகும் இந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்காது என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்மால் எதுவும் செய்ய இயலாது. பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் சோதனை செய்ய முடியாது. கட்டாயப்படுத்தவும் முடியாது.

பொதுவாகப் பெற்றோர்கள் எடுக்கும் முடிவு என்ன?

மரபியல் ஆலோசனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கீழ் மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். உணர்வுப்பூர்வமானவர்கள். உடைந்து அழுவார்கள். உதவியற்று இருப்பார்கள். சில வழக்குகளில் விவாகரத்து வரை எல்லாம் சென்றிருக்கிறது. அதுபோன்ற விஷயங்களை நம்மால் சமாளிக்கவே முடியாது. அவர்களிடம் ஆறுதலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நமக்கே பாதிப்பாக அமையும். அந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும். அழுகை வரும். அந்த வலியையும் வேதனையையும் துக்கத்தையும் நாமும் உணர்வோம். ஆனால் எதுவும் செய்ய முடியாது.

அவர்களுக்கான நேரத்தை நாங்கள் கொடுப்போம். நோயாளிகள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாலும் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களை வெளியே போகும்படிகூடச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே உணர்வுரீதியாக உடைந்துவிட்டார்கள். சிறிய வார்த்தைகள்கூட அவர்களைக் காயப்படுத்திவிடும். மரபியல் ஆலோசனை செய்துவிட்டு இரவில் தூக்கமே வராது.

இதில் முரண்பாடே மத்தியத் தர வர்க்கத்தில் உள்ளவர்கள்தான். குழந்தைக்கு மரபியல் குறைபாடு இருந்தாலும் கலைக்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லையா?

ஆம்.

ஒருவேளை இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் வாழ்க்கைச் செலவுகள் எவ்வளவாகும்?

ஒவ்வொரு நோயைப் பொறுத்து மாறும். ஸ்வயர் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகளுக்குப் பெரிய செலவுகள் ஆகாது. ஆனால் ஹார்மோனல் தெரப்பி செய்வார்கள். ஹிமோபிலியா போன்ற நோய்களுக்கும் பெரிய செலவுகள் கிடையாது. ஆனால் கையைக் கிழித்துக்கொண்டால் உடனே சிகிச்சை எடுத்தாக வேண்டும். இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசம். அவர்களுடைய செலவு என்பது வெறும் ஜாக்கிரதையாக இருப்பது மட்டுமே. ஆனால் எல்லா நோய்களுக்கும் அப்படிச் சொல்ல முடியாது. சில நோய்களுக்கு மாதம் 4000, 5000 ரூபாய் வரை ஆகும். சிஸ்டிக் ஃபைரோஸில் போன்ற நோய்கள் வாழ்க்கை முழுவதும் நாம் பரமாரிக்க வேண்டியதாக இருக்கிறது. இதற்கான செலவை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒருநாளுக்கு 8 மாத்திரை சாப்பிட வேண்டும் இது குழந்தைப் பருவத்தில். வயதுகூட மாத்திரையின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகும். அந்த மாத்திரை அட்டை 800 -1000 ரூபாய். மொத்தம் 15 மாத்திரை வரும். 15 மாத்திரை இரண்டு நாளுக்குத்தான் வரும். மாதக்கணக்கில் எவ்வளவு செலவாகும் என யோசித்துப் பாருங்கள். இது மாத்திரைக்கான செலவு மட்டுமே. இது தவிர nebulizer, antibiotic போன்ற இதர செலவுகளும் உண்டு.

இந்த மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழி இல்லையா?

அரசு மருத்துவமனையில் பெரும்பாலான நோய்களுக்கு மருந்துகள் இலவசம். ஆனால் எல்லா நோய்களுக்கும் கிடைக்காது. சில என்.ஜி.ஓக்கள், சேவை நிறுவனங்கள் இதற்காக இயங்குகின்றன. அவர்கள் தள்ளுபடி விலையில் மருந்துகளைப் பெற்றுத் தருகிறார்கள். இதன்மூலம் செலவுகள் கொஞ்சம் குறையும்.

இந்தியாவில் இருக்கும் பொதுவான மரபியல் நோய்கள் எவை?

இந்தியாவைப் பொறுத்தவரை உறவுக்களுக்குள் திருமணம் செய்வதால் வரும் நோய்கள்தான் அதிகம். குறிப்பாக ரத்தம் சம்பந்தமான நோய்கள் (thalassemia, sickle cell anemia, G6PD Deficiency).

இந்தியாவில் நடைபெறும் மரபியல் ஆய்வுகள் எத்தகையவை?

அதிகம் கேன்சர் பற்றியதுதான். மரபணு சார்ந்தவை என்று குறிப்பாகப் பார்த்தால் ஏற்கெனவே கூறியதுபோல இரத்தம் சார்ந்த குறைபாடுகள், Duchene Muscular Dystrophy (DMD) உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

The post அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1 appeared first on கிழக்கு டுடே.

  •  

டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம், கூச்சல் நகரமெங்கும் விரவிக் கிடந்தது. சாலைகளில் நெருப்புக் குண்டுகள் வீசப்பட்டன. வீதிகளில் புரட்சி அலை வீசிக்கொண்டிருந்தது. புரட்சியாளர்கள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடினர். பழைய அதிகார அமைப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய, சமத்துவ சமூகத்தை நிறுவும் முயற்சியில் இருந்தனர்.

எவை எல்லாம் மக்களை ஒடுக்கும் கருவிகளாகப் பார்க்கப்பட்டனவோ அத்தனையையும் அடித்து நொறுக்கத் தயாராக இருந்தனர். மதங்கள், மத குருமார்கள், அரசாங்கம், அதிகாரிகள் என எல்லாமும் விமர்சிக்கப்பட்டன.

கடவுளைக்கூடப் புரட்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஆவியும் ஆன்மாவும் உண்மை இல்லை. உழைக்கும் மக்களைக் கட்டுப்படுத்த உயர்குடியால் உருவாக்கப்பட்ட பொய்கள் அவை. இந்தச் சமூக ஒழுங்கே சாமானியர்களை அடிமைப்படுத்த செல்வந்தர்கள் உருவாக்கிய கட்டமைப்புதான் எனச் சொல்லப்பட்டது.

மறுபக்கம், செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும், மடாதிபதிகளும் செய்வது அறியாது திகைத்தனர். அதிகாரம் ஆட்டம் கண்டுகொண்டிருந்தது. பிரிட்டன் வீழும் தருவாயில் இருக்கிறது. இப்படியே சென்றால் புரட்சியாளர்கள் மொத்தமாக நம்மை வாரிச் சுருட்டிவிடுவார்கள். நமது அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் பாதுகாக்க நாமும் சண்டையிட்டாக வேண்டும். அவர்களிடம் ஆள் பலம் இருக்கலாம். நம்மிடம் ஆயுத பலம் இருக்கிறது. யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அத்தனை பேரையும் அடித்துத் துவையுங்கள். யாரெல்லாம் எதிர்த்துப் பேசுகிறார்களோ அத்தனைப் பேரையும் புரட்டி எடுங்கள்.

உத்தரவு பறந்தது. முற்போக்குப் பேசியவர்கள் தாக்கப்பட்டனர். கடவுளைப் பழிப்பவர்கள் கண்டிக்கப்பட்டனர். இருபக்கமும் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்தச் சமயத்தில் அந்த 30 வயது நபர் லண்டனின் பதற்றச் சூழலில் இருந்து வெளியேறி இங்கிலாந்தின் கிராமம் ஒன்றில் குடியேறினார். சுற்றியும் ஆள் நடமாட்டமில்லாத இடம். உதவிக்குக் கூப்பிட்டால்கூட யாரும் வர முடியாது. முற்றிலும் தனிமை. ஆனால் அப்படியொரு இடம்தான் அவருக்குத் தேவைப்பட்டது.

இத்தனைக்கும் அவர் ஏழையில்லை. புகழ்பெற்ற மருத்துவரின் பேரன். மிகப்பெரிய நிலச்சுவாந்தாருடைய மகன். கேம்ப்ரிட்ஜில் கல்வி பயின்றவர். திருச்சபையில் மிகப் பெரிய சமய குருமாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்க முடியாமல் தனிமையைத் தேடி வந்திருந்தார்.

அவருக்குள் பூகம்பம் வெடித்துக்கொண்டிருந்தது. மனதுக்குள் சுனாமி வீசியது. அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணம். அதில் எழுதப்பட்டுள்ள சொற்கள்தான் அவரைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தன. அடிக்கடி தலைவலி வந்தது. உடல் வலி வாட்டியது. கைகளில் நடுக்கம். பலமுறை படுத்த படுக்கையாய் ஆகவும் நேர்ந்தது.

அந்த நோட்டுப்புத்தகத்தில் உள்ள விஷயம் வெளியே தெரிந்தால் என்னவாகும்? இங்கிலாந்தே இரண்டாய் உடைந்துவிடுமே? எந்தப் பக்கத்தில் இருந்து தாக்குவார்கள் என்றே சொல்லமுடியாதே? ஒருவகையில் இது நான் சார்ந்திருக்கும் சமூகத்திற்குச் செய்யும் துரோகம் இல்லையா? ஏற்கெனவே நாலாபுறமும் புகைந்து கொண்டிருக்கிறது. கொலைகாரக் கும்பல் சாலையில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கையில் இந்த நோட்டுப் புத்தகம் கிடைத்தால் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல ஆகிவிடாதா?

இதில் எழுதப்பட்டுள்ள கருத்துகள் வெளியே தெரிந்தால் திருச்சபை என்னை மன்னிக்காது. நாத்திகவாதி எனத் தூற்றுவார்கள். அறத்திற்குப் புறம்பானவன் என வசைபாடுவார்கள். மொத்தமாய் ஒதுக்கிவிடுவார்கள். இதற்கு நானே ஒதுங்கிவிடலாம் என முடிவெடுத்துதான் இங்கு வந்திருக்கிறேன்.

அப்படியென்றால் அந்த நோட்டுப் புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிடலாமே? விட்டு ஒழிந்தது என நினைத்துவிடலாமா? அதுவும் முடியாது. இது நான் கண்டடைந்த கருத்துகள். சொல்லப்போனால் உண்மைகள். ஆனால் சமூகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போடும் வல்லமை படைத்த உண்மைகள். அதனால்தான் என்னை அலைக்கழிக்கிறது.

அந்த நோட்டுப் புத்தகத்தை ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்தார். அந்த வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையே தவிர்த்தார். தனது படிப்பறையின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கண்ணாடியை மாட்டிவைத்துக்கொண்டு வீட்டின் அருகே யாரெல்லாம் வந்துபோகிறார்கள் எனக் கண்காணித்தார். தூங்குவதுகூட அச்சமாயிருந்தது. இப்படித்தான் அவரது வாழ்க்கை கழிந்தது. ஒருநாட்கள், இரு நாட்கள் அல்ல. 22 ஆண்டுகள்.

ஆம், தான் கண்டுபிடித்த உண்மையை 22 ஆண்டுகள் பாதுகாத்து வைத்தார் அந்த மனிதர். அவர் வேறு யாரும் இல்லை. வரலாற்றில் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக அறியப்பட்ட சார்லஸ் டார்வின்.

டார்வின் இந்த அளவு அஞ்சி நடுங்குவதற்கு அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது? அப்படி அவர் என்ன கண்டுபிடித்திருந்தார்?

அவர் கண்டுபிடித்த உண்மை எளிமையானது. உயிரினங்களைக் கடவுள் படைக்கவில்லை. அவை சில இயற்கை விதிகளின்கீழ் பரிணமித்து தோன்றின. இதுதான். இந்தக் கருத்துக்கள்தான். இதற்காகத்தான் அவர் இன்றைக்கும் தூற்றப்படுகிறார். மதநம்பிக்கைவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார். சில அறிஞர்களாலும் விமர்சிக்கப்படுகிறார்.

ஆனால் இந்தக் கருத்தை அவர் சொன்னபோதே அது ஒன்றும் புதிய கருத்து இல்லை. டார்வினுக்கு முன்பே பரிணாமம் பற்றிய பார்வை இருந்தது. கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை என்ற கருத்தாக்கம் இருந்தது. பிறகு ஏன் டார்வினை மட்டும் எல்லோரும் தூற்ற வேண்டும். டார்வினைக் கண்டு மட்டும் ஒருசாரார் ஏன் அலறவேண்டும்?

இதைத் தெரிந்துகொள்ள நாம் டார்வினையும் அவர் கண்டடைந்த உண்மைகளையும் அவை தோன்றிய சமூக–அரசியல் பின்னணியையும், அந்தக் கருத்துகள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாம் டார்வினின் வாழ்க்கையை முழுதாக ஆராய வேண்டும்.

டார்வின் தான் கண்டடைந்த உண்மையை நினைத்து, மனம் வெதும்பி, நண்பர் ஒருவருக்கு எழுதிய கடித்ததில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘வேறு யாரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும்? இயற்கையை அத்தனை அழகானதாய், தெய்வீகம் வாய்ந்ததாய் கருதுகிறோம். இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கடவுள் பார்த்து பார்த்துப் படைத்தார் எனப் பூரிக்கிறோம். ஆனால் நானோ இயற்கையின் மற்றொரு முகத்தை, அதன் குரூரத்தைக் காட்ட விழைகிறேன். நான் நிச்சயம் சாத்தானின் பணியாளாகத்தான் இருக்க முடியும்.’

உண்மையில் டார்வின் சாத்தானின் பணியாளா?

(தொடரும்)

The post டார்வின் #1 – சாத்தானின் பணியாள்! appeared first on கிழக்கு டுடே.

  •