265. நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்
சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 13
வெக்கையான நாளொன்றில் சீக்கிய குருத்வாராவில் சாப்பிட்டுவிட்டு, நாட்டின் அடுத்த மூலையில் இருக்கும் ஒரு நுலகத்திற்குள், ஏதோவொரு புத்தகம் எடுத்து ஒரு மூலையில் அமர்ந்து கொஞ்சம் கண்மூடலாம் என்று நுழைந்தபோது, என் இரவுத்தூக்கத்தை ஒருநாள் ஒருமணிநேரம் ஒத்திவைக்கப் போகும் இப்புத்தகம் கண்ணில்பட்டது. இலக்கியம் என்ற பெயரில் எத்தனை நாட்கள்தான் ஆண்குறிகளையும் யோனிகளையும் கடற்கரையிலும் காபிக்கடைகளிலும் எழுதிக் கொண்டிருப்பீர்கள்? மருத்துவமனை காவல்நிலையம் நீதிமன்றம் வந்து உண்மை மனிதர்கள் கதை சொல்லுங்கள் என்று புத்தகத்தின் முன்னட்டையின் பின்புறம் இருந்தது. என்னைப்போல கோபக்கார ஆசிரியர் என்று பக்கங்களைப் புரட்டினேன். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 40 பக்கங்களுக்கு நீளும் கொஞ்சம் பெருஞ்சிறுகதைகள் எட்டின் தொகுப்பு இது.
‘பட்டாளத்தார் இறந்துவிட்டார்: அந்நிலையே இறந்தார் எனப்படுதல் நன்று‘ என்றிருந்தது முதல் கதையின் தலைப்பு. எட்டுத் தலைப்புகளையும் படித்தேன். எல்லாம் ஒரு தலைப்பும், இலக்கிய சாயலில் உபதலைப்பும் கொண்டிருந்தன. அவற்றில் புத்தகத்தின் தலைப்பு இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதுமாதிரி இலக்கிய தலைப்புவைத்து, பெண்கவிஞர்கள் பாடல்கள் வைத்து, கதாநாயகியை உறிஞ்சி எடுக்கும் பாரம்பரியம் சினிமாவிற்கு உண்டென்பதால், தூக்கம் மறந்து ஒரு டெஸ்ட் வைக்கலாம் என்று முதல்கதையைப் படிக்க ஆரம்பித்தேன். எல்லாக் கதைகளிலும் பாஸாகி, ஒரு தொகுப்பின் மொத்தம் எனக்குப் பிடித்துப்போன முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்
ஆசிரியர்: பாவெல் சக்தி
வெளியீடு: எதிர் வெளியீடு
பக்கங்கள்: 374
விலை: 399 ரூபாய்
—————————————————————————————————————————————————————————————————————————
நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள். ஆசிரியர் பாவெல் சக்தி. முதன்முறை கேள்விப்படுகிறேன். வழக்கறிஞர். எல்லாக் கதைகளும் நீதிமன்றம் காவல்நிலையம் சம்மந்தப்பட்ட உண்மைக்கதைகள். கள்ளக்காதல் கொலை. விவாகரத்து. ட்ரிபிள் மர்டர். ஒரே மகனிடம் சொத்தை இழந்த பெற்றோர்கள். இயற்கைக்கு மாறான உடலுறவு. போக்சோ. காதலனின் மரணத்திற்கு நீதி கேட்கும் காதலி. கள்ளக்கடத்தல். கஞ்சா. உள்பாடி ஜட்டி பாவாடை திருடன். போலீசுக்கு ஸ்கெட்ச் போடும் ஒருவன். இதுபோன்ற கதைகளைத் தினந்தோறும் செய்தி ஊடகங்கள் நமக்கு சொன்னாலும், சொல்லும் முறையில் ஆசிரியர் வித்தியாசப்படுகிறார். ஒரு கதையை ஒரு சீனியர் வழக்கறிஞரின் நினைவாக ஒரு ஜீனியர் மாணவர்களுக்குச் சொல்கிறார். ஒரு கதையைப் புதிதாக வந்திருக்கும் நீதிபதிக்குப் போலீஸ் சொல்கிறார். பாதிக்கப்பட்ட நபரே வக்கீலாக வாதாடி பின் குற்றவாளியாகும் ஒருகதையும் உண்டு. இரண்டு கதைகளில் மட்டும்தான் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள். எல்லாக் கதைகளிலும் இலக்கியம் உண்டு. எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் சொல்லப்படவில்லை; ஒவ்வொன்றிலும் சொல்லாமல் விடப்பட்டு தொக்கி நிற்கும் சில சமாச்சாரங்கள் உண்டு.
கதாநாயகியின் உதட்டை நம்ப ஆரம்பித்த பின், நான் பாலா திரைப்படங்கள் பார்ப்பதில்லை. பாலா திரைப்படத்தின் இறுதிக்காட்சி போன்ற திரைப்படங்களைத் தவிர்ப்பவர் நீங்கள் எனில், நகைச்சுவை கொண்ட 4 மற்றும் 8 கதைகளைப் படியுங்கள். கனத்த மனதுடன் 5, 7 மற்றும் 6ன் கடைசி மூன்று பக்கங்களையும் படியுங்கள். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி என்னைப்போல் அணுகுபவர் எனில், புத்தகத்தின் வரிசையிலே படியுங்கள். மொத்தத்தில் நல்ல தமிழ்ப் புத்தகங்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே எனக்குக் கிடைப்பதால், இதைத் தவிர்க்கக் கூடாத புத்தகம் என்கிறேன்.
அனுபந்தம்:
—————-
நமது அரசியலமைப்புச் சட்டத்தை வள்ளுவத்துடன் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். புத்தகம் எங்கும் ஆசிரியரின் பணிப்பெருமைகள், நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். எழுத்தாளன் முதல் ஆளுநர் வரை வள்ளுவர் படும்பாடு இருக்கிறதே….
– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)