Reading view

இதற்காகத் தான்

அப்பாவும், மகளும் நீண்ட பயணம் செய்து என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். வெயிலின் கடுமை அவள் முகத்தில் அத்தனை களைப்பைக் காட்டியது.  பளீரென்ற வெளிச்சத்திலிருந்து அறையின் செயற்கை வெளிச்சத்திற்கு வந்ததில் அவளுக்கு கண்கள் கூசின போலும். கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். ஓரிரு கணங்களில் கண்கள் பழையபடி மின்னின. தகப்பனின் முகத்தில் வேறு விதமான களைப்பு. எந்த வெயிலும், மழையும், புயலும், பயணமும் ஏற்படுத்த முடியாத, என்றும் தீராத களைப்பு. பெண்குழந்தையின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனதே என்ற வேதனை தந்த, வாழ்வில் இனி ஒருபோதும் உற்சாகத்தை வரவிடாத நிரந்தரக் களைப்பு.

நான் கருப்பு அங்கி அணிய ஆரம்பித்த அந்த ஆரம்ப காலங்களில் விதவிதமான வழக்குகள் எங்கள் சட்ட அலுவலகத்திற்கு வரும். நிலத்தை மட்டுமே நம்பி நாட்டின் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலமது. எல்லாமே நிலத்தைச் சுற்றி எழுந்த வழக்குகள். ஒரு துண்டு நிலத்தையும் பங்காளியிடம் ஏமாந்தவர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகச் சொத்து இருந்தும், கஷ்டப்படும் உடன்பிறந்த தங்கைக்கு அரை ஏக்கர் நிலம் தர மனதில்லாதவர்கள், காதலித்து மணம் செய்து கொண்டான் என்பதற்காக மகனுக்கு எதுவும் தரமாட்டேன், சொத்து முழுவதும் கோவிலுக்குத் தான் என்று பிடிவாதம் பிடிக்கும் கிழவர்கள்,  பத்தடி அகலமும், நூற்றிநாற்பது அடி நீளமும் உள்ள பூர்வீக வீட்டை  ஐந்தடி அகலம் என்றாலும் பரவாயில்லை, அகலவாட்டில் தான் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வீம்பு பிடிக்கும் தம்பிகள் என எல்லாம் நிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்த வழக்குகள். இன்று அவையெல்லாம் அரசியல்வாதிகள், வட்டச் செயலாளர் வண்டுமுருகன்கள், தாதாக்களின் கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றங்களுக்குப் போய்விட்டன. இன்று பெரிய படிப்புகள், பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள், வெளிநாட்டு வாசம் என்று சிறுவயதிலேயே என் ஆயுள் முழுவதும் நான் சம்பாதித்ததை சில ஆண்டுகளில் சம்பாதித்து விடும் இளைய தலைமுறையின் திருமணச் சிக்கல்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வருகின்றன. உறவினர்கள், பெரியவர்கள் எவ்வளவு பஞ்சாயத்து செய்தாலும், நீதிமன்ற உத்தரவு என்று ஒன்று வேண்டியதாக இருக்கிறதே ! இன்றைய நவீன உலகில் வக்கீல்களுக்கு வரக்கூடிய ஒரே வழக்கு திருமண முறிவு என்றாகிவிட்டது !

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இந்த இளைஞர் பட்டாளம் திருமணம் முடித்து வெளிநாடு செல்ல ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  தாலி கட்டிய கையோடு பதிவாளரை மண்டபத்திற்கே அழைத்து வந்து திருமணத்தைப் பதிவு செய்யும் சடங்கும் திருமணச் சடங்கில் ஒன்றாக நடந்த காலம்.  அப்போது, உறவினர், நண்பர்களின் குழந்தைகளின் திருமணங்களுக்கு பதிவாளரை அழைத்து வந்து, பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வது என் பொறுப்பாக இருந்தது. எங்கள் உறவு, நட்பு வட்டத் திருமணங்களை நடத்தி வைக்கும் நாராயண சாஸ்திரிகள், முகூர்த்த வேளை நெருங்கும் போது, “பெரியவர்கள் எல்லோரும் மேடையில் இருக்கிறார்களா? வக்கீல் இருக்கிறாரா? ரிஜிஸ்ட்ரார் இருக்கிறாரா?“ என்று கேட்பார். ஒரு திருமணத்தில், சாப்பாட்டு வேளையில் என்னிடம், “அண்ணா, நம் இருவர் தொழிலும் ஒன்று தான். கல்யாணம் செய்து வைத்து, சாப்பிட்டுவிட்டு, தட்சணை வாங்கிக் கொண்டு செல்கிறோம்,“ என்றார் கிண்டலாக. நான் பதில் கூறாமல் இருந்திருக்கலாம். இயல்பான எனது வக்கீல் குணம் தலைதூக்கியது. “அண்ணா,  உங்கள் மந்திரத்தால் சோ்த்து வைக்க மட்டுமே முடியும். ஆனால்,  என் சட்டத்தால் பிரித்து வைக்கவும் முடியும்.  ஆகவே, இரண்டு தொழிலும் ஒன்றல்ல,“ என்றேன் சிரித்துக் கொண்டே.   தொடர்ச்சியாக இன்று தெரிந்தவா்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் டைவர்ஸ் என்று நீதிமன்ற வாசலில் நிற்கும் போது, அதுதான் நினைவுக்கு வருகிறது.

அவள் தன் கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். அறையின் ஏஸி சற்று ஆறுதல் தந்தது போலும். களைப்பு சற்றே குறைந்தது போல் தெரிந்தது. நீங்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் பார்ப்பீகளல்லவா, அந்த அதே சாதாரண முகம். வெளியே செல்வதற்காக அணியும் ஓரளவிற்கு பளிச்சென்ற சுடிதார். விசேஷ நாட்களில் சடையும் பின்னிக் கொள்ள ஏதுவாக  சுமாராக  வெட்டிக் குறைக்கப்பட்டு, குதிரைவால் கொண்டை போட்ட தலைமுடி, நெற்றியில் என் வயதான கண்களுக்கு  மட்டும் என்றில்லாது, எத்தகைய கூரிய பார்வை கொண்டவர் கண்களுக்கும்  தெரியாக புள்ளி போன்ற ஸ்டிக்கர் பொட்டு. வளையல் இல்லா கையில் வாட்ச் மட்டும்.  மிக மிகச் சாதாரண தோற்றம் கொண்ட, எந்த அதீத அழகும் இல்லாத, எந்த அலட்டலும் இல்லாத இந்த சாதாரணப் பெண் மீது அவனுக்கு ஏன் அத்தனை சந்தேகம்?

பெரியவர் பொதுத் துறை வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வாக்கிங் போவது, பாஸ் புக் எண்ட்ரி போடுவது, கல்யாணச் செலவிற்கு போதுமா? போதுமா? என்று கணக்குப் போடுவது, மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பது, சீனியர் சிடிசனுக்கு எங்கே அரை சதவிகிதம் வட்டி அதிகமாகத் தருகிறான் என்று தேடுவது,  என்று திரிந்த ஒரு சாதாரணர். மாப்பிள்ளை  இதே போன்ற மற்றொரு சாதாரணரின் மகன். ஒன்றாவதிலிருந்து பொறியியல் முதுகலை வரை முதல் மதிப்பெண் பெற்றவன். பொதுத் துறை மின்பொறியியல் நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பதவி. இன்னும், இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைவராக அவன் உயர்வான். அரசுப்பள்ளியில்  தமிழ்வழியில் படித்து அந்த நிறுவனத்தின் தலைவனாக அவன் பதவியேற்பது பற்றிய செய்தியை நீங்கள் நிச்சயம் பார்க்கப் போகிறீர்கள். ஆனால் படிப்பு என்பது வேறு, அறிவு என்பது வேறு அல்லவா?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. சந்தேகம்.. சந்தேகம்… சந்தேகம்.. குவார்டஸில் எதிர்வீட்டுக்காரரின் அப்பா என்னம்மா, ரொம்ப அழகா கோலம் போடுகிறாயே ! என்று பாராட்டியதைச் சொன்ன மறுநாள் நமக்கு இந்த குவாட்டர்ஸ் வேண்டாம் என்று அப்பார்ட்மெண்டுக்கு வீடு மாற்றி விட்டான். அங்கு செக்யூரிட்டி இரண்டு முறை இவளைப் பார்த்து இவர்களுக்கு வந்த தபாலைத் தந்தது பெரிய தவறாகிவிட்டது. அவன் ஏன் என்னிடம் கொடுப்பதில்லை? என்று வீடு மாற்றல். குரியர் தபால், தண்ணீர் கேன் போடுதல்,  போன்ற பணிகள் எல்லாம் இன்னும் ஆண்களின் பணியாகவே இருப்பதால் ஓராண்டில் இன்னும் நான்கைந்து வீடுகள் மாற நேர்ந்ததாம். இளம் பெண்களின் பல பிரச்சனைகளுக்கு திருமணம் என்பதைத் தீர்வாகச் சொல்வது போல், திருமணமான இளம் பெண்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும் என்பது சர்வ ரோக நிவாரிணி சைபாலாக இருக்கிறது.  அவள் கர்ப்பமானாள்.

வளைகாப்பிற்கு சற்று முன்னதாக ஒரு நாள் நடந்த கூத்துதான் அவளைப் பிரிந்து விடலாம் என்று முடிவெடுக்க வைத்தது. ஒருநாள் அவன் வழக்கம் போல் அலுவலகம் போய் விட்டான். இவள் குளித்து விட்டு வருகிறாள்.  துண்டை மார்பில் கட்டியபடி, படுக்கையறைக்கு வந்து உடை மாற்றுகிறாள்.  ஏதோ ஒரு சங்கட உணர்வு. தன்னை யாரோ பார்ப்பது போல் ஒரு குறுகுறுப்பு. சீ. இதெல்லாம் மனப்பிரமை… என்று அந்த எண்ணத்தை ஒதுக்கினாலும், என்னமோ மனதில் இனம் புரியாத ஒரு திகில். வீட்டில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.  சுற்றிச் சுற்றி வருகிறாள். நீங்கள் நினைத்தது சரிதான். அவன் கட்டிலுக்குக் கீழே படுத்திருக்கிறான்.  இவள் கூச்சல் எதுவும் போடவில்லை. என்னப்பா இதெல்லாம் ? என்கிறாள். ஜஸ்ட் ஃபார் ஃபன். நா இல்லாதப்ப நீ வீட்ல என்ன செய்யறன்னு பாக்கணும்னு ஒரு ஆசை என்கிறான். அவள் கோபமின்றி, இன்னிக்கி லீவ் போட்டாச்சா? என்கிறாள். இல்லை.. பெர்மிஷன் என்கிறான். தான் அலுவலகம் கிளம்பியவுடன்   (கிளம்பியதாக பாவ்லா காட்டியவுடன்)  வேறு யாரும் வீட்டிற்கு  வரவில்லை என்ற நிம்மதி ஒருபுறம். இப்படி மாட்டிக் கொள்ளாமல், இன்னும் சற்று அதிக நேரம் ஒளிந்திருந்தால் யாரேனும் ஒரு கள்ளக் காதலன் வந்திருப்பானோ? என்ற சந்தேகம் ஒருபுறம். ஆனால், வீட்டில் இருந்து அவள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அலுவலகம் செல்கிறான்.

நகை, பணம், தன் கல்விச் சான்றிதழ்கள், உடைகள், ஆதார், வருமான வரிக்கான நிரந்தர கணக்கு அட்டை என்று அவசியமானவற்றை எடுத்துக் கொண்டு அன்று கிளம்பி அப்பா வீடு வந்தவள்தான். குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆகிவிட்டது. அவன் திருமண உரிமையை மீட்டெடுக்க வழக்குத் தொடர்ந்திருக்கிறான். சட்டப் போர் ஆரம்பித்துவிட்டது. புராணப்படங்களில் அக்னியாஸ்திரத்திற்கு வருணாஸ்திரம், நாகாஸ்திரத்திற்கு கருடாஸ்திரம் என்று விடுவார்களே, அது போல்அவன் வழக்கிற்கு பதில் தரும் விதமாக,  நாங்கள் விவாகரத்து வழக்கு போட்டிருக்கிறோம். நீதிபதி வயதில் மூத்த பெண்மணி. கௌன்சலிங் நடந்து முடிந்துவிட்டது. சேர்ந்திருப்பதாக முடிவு செய்து விட்டார்களானால், பரஸ்பரம் வழக்குகளைத் திரும்பப்பெற்று விடலாம். அது பற்றிப் பேசத்தான் அப்பாவும், மகளும் வந்திருக்கிறார்கள்.

சற்றே ஆசுவாசம் அடைந்து விட்டார்கள். “என்ன முடிவு செஞ்சீங்க? என்றேன். பெரியவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். நான் சைகையால் அவரைத் தடுத்து, “பாப்பா சொல்லட்டும்,“ என்றேன்.

“கௌன்சலிங்லயும் பேசினோம் சார். அப்பறம் ஃபோன்லயும் பேசினோம். சேந்து இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,“ என்றாள் அவள். அவள் குரலில் இருந்து அவள் மகிழ்ச்சியாகச் சொல்கிறாளா, இல்லை வேறேதும் நிர்ப்பந்தமா என்று என்னால் கணிக்க முடியவில்லை.

“நல்லா யோசிச்சுட்டயாப்பா? இதுதான் முடிவுன்னு கிளியரா சொல்லிட்டீங்கன்னா, நா அதர் சைட் வக்கீல்ட்டயும் பேசி,எல்லாத்தையும் முடிச்சுறலாம்,“ என்றேன்.

“நல்லா யோசிச்சுட்டேன் சார். ஒண்ணும் பிரச்சனையில்ல,“ என்றான் அவள். இந்தக் காலக் குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. டைவர்ஸ்தான் என்று ஒற்றைக் காலில் நின்றவள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? அவன் ஃபோனில் ஓவராக சீன் போட்டுவிட்டானோ?

“சரிம்மா, ” என்றேன் அவளிடம். பெரியவரிடம், “சார் ரெண்டு நாள்ல அதர் சைட்ல பேசி விபரம் சொல்றேன். வேற ஏதாவது கண்டிஷன் போடணும்னாலும்,  நாம  அந்த வக்கீல்கிட்ட பேசீறுவோம்,“ என்றேன்.

“நானே சொல்லணும்னு இருந்தேன் சார். இவ ஏழெட்டு மாசமா இங்கயே இருந்துட்டா. டெலிவரி வேற. இவளுக்கும், குழந்தைக்கும் மாத்தி மாத்தி ஆஸ்பத்திரி அது இதுன்னு ஏகப்பட்ட செலவு. இந்த ஏழெட்டு மாச செலவுக்கு ஒரு ஃபைவ் லாக்சோ, த்ரீ லாக்சோ தந்தாங்கன்னா நல்லா இருக்கும். அவங்க வக்கீல் கிட்ட கேட்டுப் பாருங்க,“ என்றார் அந்த அப்பாக்காரர்.

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். நான் ஏன் மீண்டும் அந்த நரகத்திற்குப் போகிறேன் என்பது புரிந்ததா? என்பது போல் பார்த்தாள் அவள்.

நன்றி – பேசும் புதியசக்தி -ஏப்ரல் 2025

  •  

இதற்காகத் தான்

அப்பாவும், மகளும் நீண்ட பயணம் செய்து என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். வெயிலின் கடுமை அவள் முகத்தில் அத்தனை களைப்பைக் காட்டியது.  பளீரென்ற வெளிச்சத்திலிருந்து அறையின் செயற்கை வெளிச்சத்திற்கு வந்ததில் அவளுக்கு கண்கள் கூசின போலும். கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். ஓரிரு கணங்களில் கண்கள் பழையபடி மின்னின. தகப்பனின் முகத்தில் வேறு விதமான களைப்பு. எந்த வெயிலும், மழையும், புயலும், பயணமும் ஏற்படுத்த முடியாத, என்றும் தீராத களைப்பு. பெண்குழந்தையின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனதே என்ற வேதனை தந்த, வாழ்வில் இனி ஒருபோதும் உற்சாகத்தை வரவிடாத நிரந்தரக் களைப்பு.

நான் கருப்பு அங்கி அணிய ஆரம்பித்த அந்த ஆரம்ப காலங்களில் விதவிதமான வழக்குகள் எங்கள் சட்ட அலுவலகத்திற்கு வரும். நிலத்தை மட்டுமே நம்பி நாட்டின் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலமது. எல்லாமே நிலத்தைச் சுற்றி எழுந்த வழக்குகள். ஒரு துண்டு நிலத்தையும் பங்காளியிடம் ஏமாந்தவர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகச் சொத்து இருந்தும், கஷ்டப்படும் உடன்பிறந்த தங்கைக்கு அரை ஏக்கர் நிலம் தர மனதில்லாதவர்கள், காதலித்து மணம் செய்து கொண்டான் என்பதற்காக மகனுக்கு எதுவும் தரமாட்டேன், சொத்து முழுவதும் கோவிலுக்குத் தான் என்று பிடிவாதம் பிடிக்கும் கிழவர்கள்,  பத்தடி அகலமும், நூற்றிநாற்பது அடி நீளமும் உள்ள பூர்வீக வீட்டை  ஐந்தடி அகலம் என்றாலும் பரவாயில்லை, அகலவாட்டில் தான் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வீம்பு பிடிக்கும் தம்பிகள் என எல்லாம் நிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்த வழக்குகள். இன்று அவையெல்லாம் அரசியல்வாதிகள், வட்டச் செயலாளர் வண்டுமுருகன்கள், தாதாக்களின் கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றங்களுக்குப் போய்விட்டன. இன்று பெரிய படிப்புகள், பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள், வெளிநாட்டு வாசம் என்று சிறுவயதிலேயே என் ஆயுள் முழுவதும் நான் சம்பாதித்ததை சில ஆண்டுகளில் சம்பாதித்து விடும் இளைய தலைமுறையின் திருமணச் சிக்கல்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வருகின்றன. உறவினர்கள், பெரியவர்கள் எவ்வளவு பஞ்சாயத்து செய்தாலும், நீதிமன்ற உத்தரவு என்று ஒன்று வேண்டியதாக இருக்கிறதே ! இன்றைய நவீன உலகில் வக்கீல்களுக்கு வரக்கூடிய ஒரே வழக்கு திருமண முறிவு என்றாகிவிட்டது !

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இந்த இளைஞர் பட்டாளம் திருமணம் முடித்து வெளிநாடு செல்ல ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  தாலி கட்டிய கையோடு பதிவாளரை மண்டபத்திற்கே அழைத்து வந்து திருமணத்தைப் பதிவு செய்யும் சடங்கும் திருமணச் சடங்கில் ஒன்றாக நடந்த காலம்.  அப்போது, உறவினர், நண்பர்களின் குழந்தைகளின் திருமணங்களுக்கு பதிவாளரை அழைத்து வந்து, பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வது என் பொறுப்பாக இருந்தது. எங்கள் உறவு, நட்பு வட்டத் திருமணங்களை நடத்தி வைக்கும் நாராயண சாஸ்திரிகள், முகூர்த்த வேளை நெருங்கும் போது, “பெரியவர்கள் எல்லோரும் மேடையில் இருக்கிறார்களா? வக்கீல் இருக்கிறாரா? ரிஜிஸ்ட்ரார் இருக்கிறாரா?“ என்று கேட்பார். ஒரு திருமணத்தில், சாப்பாட்டு வேளையில் என்னிடம், “அண்ணா, நம் இருவர் தொழிலும் ஒன்று தான். கல்யாணம் செய்து வைத்து, சாப்பிட்டுவிட்டு, தட்சணை வாங்கிக் கொண்டு செல்கிறோம்,“ என்றார் கிண்டலாக. நான் பதில் கூறாமல் இருந்திருக்கலாம். இயல்பான எனது வக்கீல் குணம் தலைதூக்கியது. “அண்ணா,  உங்கள் மந்திரத்தால் சோ்த்து வைக்க மட்டுமே முடியும். ஆனால்,  என் சட்டத்தால் பிரித்து வைக்கவும் முடியும்.  ஆகவே, இரண்டு தொழிலும் ஒன்றல்ல,“ என்றேன் சிரித்துக் கொண்டே.   தொடர்ச்சியாக இன்று தெரிந்தவா்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் டைவர்ஸ் என்று நீதிமன்ற வாசலில் நிற்கும் போது, அதுதான் நினைவுக்கு வருகிறது.

அவள் தன் கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். அறையின் ஏஸி சற்று ஆறுதல் தந்தது போலும். களைப்பு சற்றே குறைந்தது போல் தெரிந்தது. நீங்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் பார்ப்பீகளல்லவா, அந்த அதே சாதாரண முகம். வெளியே செல்வதற்காக அணியும் ஓரளவிற்கு பளிச்சென்ற சுடிதார். விசேஷ நாட்களில் சடையும் பின்னிக் கொள்ள ஏதுவாக  சுமாராக  வெட்டிக் குறைக்கப்பட்டு, குதிரைவால் கொண்டை போட்ட தலைமுடி, நெற்றியில் என் வயதான கண்களுக்கு  மட்டும் என்றில்லாது, எத்தகைய கூரிய பார்வை கொண்டவர் கண்களுக்கும்  தெரியாக புள்ளி போன்ற ஸ்டிக்கர் பொட்டு. வளையல் இல்லா கையில் வாட்ச் மட்டும்.  மிக மிகச் சாதாரண தோற்றம் கொண்ட, எந்த அதீத அழகும் இல்லாத, எந்த அலட்டலும் இல்லாத இந்த சாதாரணப் பெண் மீது அவனுக்கு ஏன் அத்தனை சந்தேகம்?

பெரியவர் பொதுத் துறை வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வாக்கிங் போவது, பாஸ் புக் எண்ட்ரி போடுவது, கல்யாணச் செலவிற்கு போதுமா? போதுமா? என்று கணக்குப் போடுவது, மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பது, சீனியர் சிடிசனுக்கு எங்கே அரை சதவிகிதம் வட்டி அதிகமாகத் தருகிறான் என்று தேடுவது,  என்று திரிந்த ஒரு சாதாரணர். மாப்பிள்ளை  இதே போன்ற மற்றொரு சாதாரணரின் மகன். ஒன்றாவதிலிருந்து பொறியியல் முதுகலை வரை முதல் மதிப்பெண் பெற்றவன். பொதுத் துறை மின்பொறியியல் நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பதவி. இன்னும், இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைவராக அவன் உயர்வான். அரசுப்பள்ளியில்  தமிழ்வழியில் படித்து அந்த நிறுவனத்தின் தலைவனாக அவன் பதவியேற்பது பற்றிய செய்தியை நீங்கள் நிச்சயம் பார்க்கப் போகிறீர்கள். ஆனால் படிப்பு என்பது வேறு, அறிவு என்பது வேறு அல்லவா?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. சந்தேகம்.. சந்தேகம்… சந்தேகம்.. குவார்டஸில் எதிர்வீட்டுக்காரரின் அப்பா என்னம்மா, ரொம்ப அழகா கோலம் போடுகிறாயே ! என்று பாராட்டியதைச் சொன்ன மறுநாள் நமக்கு இந்த குவாட்டர்ஸ் வேண்டாம் என்று அப்பார்ட்மெண்டுக்கு வீடு மாற்றி விட்டான். அங்கு செக்யூரிட்டி இரண்டு முறை இவளைப் பார்த்து இவர்களுக்கு வந்த தபாலைத் தந்தது பெரிய தவறாகிவிட்டது. அவன் ஏன் என்னிடம் கொடுப்பதில்லை? என்று வீடு மாற்றல். குரியர் தபால், தண்ணீர் கேன் போடுதல்,  போன்ற பணிகள் எல்லாம் இன்னும் ஆண்களின் பணியாகவே இருப்பதால் ஓராண்டில் இன்னும் நான்கைந்து வீடுகள் மாற நேர்ந்ததாம். இளம் பெண்களின் பல பிரச்சனைகளுக்கு திருமணம் என்பதைத் தீர்வாகச் சொல்வது போல், திருமணமான இளம் பெண்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும் என்பது சர்வ ரோக நிவாரிணி சைபாலாக இருக்கிறது.  அவள் கர்ப்பமானாள்.

வளைகாப்பிற்கு சற்று முன்னதாக ஒரு நாள் நடந்த கூத்துதான் அவளைப் பிரிந்து விடலாம் என்று முடிவெடுக்க வைத்தது. ஒருநாள் அவன் வழக்கம் போல் அலுவலகம் போய் விட்டான். இவள் குளித்து விட்டு வருகிறாள்.  துண்டை மார்பில் கட்டியபடி, படுக்கையறைக்கு வந்து உடை மாற்றுகிறாள்.  ஏதோ ஒரு சங்கட உணர்வு. தன்னை யாரோ பார்ப்பது போல் ஒரு குறுகுறுப்பு. சீ. இதெல்லாம் மனப்பிரமை… என்று அந்த எண்ணத்தை ஒதுக்கினாலும், என்னமோ மனதில் இனம் புரியாத ஒரு திகில். வீட்டில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.  சுற்றிச் சுற்றி வருகிறாள். நீங்கள் நினைத்தது சரிதான். அவன் கட்டிலுக்குக் கீழே படுத்திருக்கிறான்.  இவள் கூச்சல் எதுவும் போடவில்லை. என்னப்பா இதெல்லாம் ? என்கிறாள். ஜஸ்ட் ஃபார் ஃபன். நா இல்லாதப்ப நீ வீட்ல என்ன செய்யறன்னு பாக்கணும்னு ஒரு ஆசை என்கிறான். அவள் கோபமின்றி, இன்னிக்கி லீவ் போட்டாச்சா? என்கிறாள். இல்லை.. பெர்மிஷன் என்கிறான். தான் அலுவலகம் கிளம்பியவுடன்   (கிளம்பியதாக பாவ்லா காட்டியவுடன்)  வேறு யாரும் வீட்டிற்கு  வரவில்லை என்ற நிம்மதி ஒருபுறம். இப்படி மாட்டிக் கொள்ளாமல், இன்னும் சற்று அதிக நேரம் ஒளிந்திருந்தால் யாரேனும் ஒரு கள்ளக் காதலன் வந்திருப்பானோ? என்ற சந்தேகம் ஒருபுறம். ஆனால், வீட்டில் இருந்து அவள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அலுவலகம் செல்கிறான்.

நகை, பணம், தன் கல்விச் சான்றிதழ்கள், உடைகள், ஆதார், வருமான வரிக்கான நிரந்தர கணக்கு அட்டை என்று அவசியமானவற்றை எடுத்துக் கொண்டு அன்று கிளம்பி அப்பா வீடு வந்தவள்தான். குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆகிவிட்டது. அவன் திருமண உரிமையை மீட்டெடுக்க வழக்குத் தொடர்ந்திருக்கிறான். சட்டப் போர் ஆரம்பித்துவிட்டது. புராணப்படங்களில் அக்னியாஸ்திரத்திற்கு வருணாஸ்திரம், நாகாஸ்திரத்திற்கு கருடாஸ்திரம் என்று விடுவார்களே, அது போல்அவன் வழக்கிற்கு பதில் தரும் விதமாக,  நாங்கள் விவாகரத்து வழக்கு போட்டிருக்கிறோம். நீதிபதி வயதில் மூத்த பெண்மணி. கௌன்சலிங் நடந்து முடிந்துவிட்டது. சேர்ந்திருப்பதாக முடிவு செய்து விட்டார்களானால், பரஸ்பரம் வழக்குகளைத் திரும்பப்பெற்று விடலாம். அது பற்றிப் பேசத்தான் அப்பாவும், மகளும் வந்திருக்கிறார்கள்.

சற்றே ஆசுவாசம் அடைந்து விட்டார்கள். “என்ன முடிவு செஞ்சீங்க? என்றேன். பெரியவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். நான் சைகையால் அவரைத் தடுத்து, “பாப்பா சொல்லட்டும்,“ என்றேன்.

“கௌன்சலிங்லயும் பேசினோம் சார். அப்பறம் ஃபோன்லயும் பேசினோம். சேந்து இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,“ என்றாள் அவள். அவள் குரலில் இருந்து அவள் மகிழ்ச்சியாகச் சொல்கிறாளா, இல்லை வேறேதும் நிர்ப்பந்தமா என்று என்னால் கணிக்க முடியவில்லை.

“நல்லா யோசிச்சுட்டயாப்பா? இதுதான் முடிவுன்னு கிளியரா சொல்லிட்டீங்கன்னா, நா அதர் சைட் வக்கீல்ட்டயும் பேசி,எல்லாத்தையும் முடிச்சுறலாம்,“ என்றேன்.

“நல்லா யோசிச்சுட்டேன் சார். ஒண்ணும் பிரச்சனையில்ல,“ என்றான் அவள். இந்தக் காலக் குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. டைவர்ஸ்தான் என்று ஒற்றைக் காலில் நின்றவள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? அவன் ஃபோனில் ஓவராக சீன் போட்டுவிட்டானோ?

“சரிம்மா, ” என்றேன் அவளிடம். பெரியவரிடம், “சார் ரெண்டு நாள்ல அதர் சைட்ல பேசி விபரம் சொல்றேன். வேற ஏதாவது கண்டிஷன் போடணும்னாலும்,  நாம  அந்த வக்கீல்கிட்ட பேசீறுவோம்,“ என்றேன்.

“நானே சொல்லணும்னு இருந்தேன் சார். இவ ஏழெட்டு மாசமா இங்கயே இருந்துட்டா. டெலிவரி வேற. இவளுக்கும், குழந்தைக்கும் மாத்தி மாத்தி ஆஸ்பத்திரி அது இதுன்னு ஏகப்பட்ட செலவு. இந்த ஏழெட்டு மாச செலவுக்கு ஒரு ஃபைவ் லாக்சோ, த்ரீ லாக்சோ தந்தாங்கன்னா நல்லா இருக்கும். அவங்க வக்கீல் கிட்ட கேட்டுப் பாருங்க,“ என்றார் அந்த அப்பாக்காரர்.

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். நான் ஏன் மீண்டும் அந்த நரகத்திற்குப் போகிறேன் என்பது புரிந்ததா? என்பது போல் பார்த்தாள் அவள்.

நன்றி – பேசும் புதியசக்தி -ஏப்ரல் 2025

  •