நன்னூலை முன்வைத்து பொருள்கோள் ஓர் அறிமுகம்
நன்னூலை முன்வைத்து பொருள்கோள் ஓர் அறிமுகம்
சகுந்தலாமணி பா.
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம்,
அரசுக் கல்லூரி சித்தூர்,பாலக்காடு
கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம்
ஆய்வுச் சுருக்கம்
பொருள்கொள்ளும் செயல்முறை முடிவற்ற ஒன்று. ஏனெனில் அர்த்தம் என்பது முடிவில்லாத ஒன்று. எந்த ஒரு விளக்கமும் எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துவதில்லை ஒவ்வொரு விளக்கமும் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஒரு பனுவலில் புகுந்து வாசகன் தன்னை மறந்துவிடும் செயல்பாடுதான் பொருள்கோளியல். மேலும் பொருள்கோளியலின் அடிப்படை ஒரு பனுவலை வரலாற்றுப் பார்வையில் அணுகுவது ஆகும். தமிழ் இலக்கண நூலான நன்னூல் தானே கர்த்தாவாக இருந்து எவ்விதம் பொருள்கோளியல் முறைமைகளை எடுத்துரைக்கிறது என்றும், நன்னூல் இடைக்காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்டது எனினும் எல்லா காலகட்ட வாசகனுக்கும் பொருள் புலப்பாட்டிற்கு உதவுகிறது என்றும், ஆராய வேண்டி உள்ளது. ஒரு பனுவலைப் பழைய மரபிற்குள் வைத்து வாசிப்பதும், ஒரு பனுவலுக்கு பொருள் விளக்கம் தருவதும், அதை பகுத்து ஆராய்வதும் பொருள்கோளியல் துறையின் அடிப்படை ஆகும். பொருள்கோளியல் துறையின் அடிப்படையில் நன்னூலை அணுகுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திறவுச்சொற்கள்
நன்னூல், தொல்காப்பியம், பனுவல், பொருள்கோளியல்,
முன்னுரை
தமிழில் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தை சார்பு நூலாகக் கொண்டு பவணந்தி முனிவரால் நன்னூல் எழுதப்பட்டது. நன்னூலில் எழுத்து, சொல் என இரண்டு அதிகாரங்களையும், 474 நூற்பாக்களும் இடம்பெறுகின்றன. இந்நூல் தொல்காப்பியத்தை எளிமையாகவும் தெளிவாகவும் கற்க உதவுகிறது. நன்னூல் இடைக்காலகட்ட சமூக, சமய,அரசியல் பொருளாதார நோக்கத்தோடு இலக்கணம் கூறுகின்றது. இத்தகைய சிறப்புடைய நன்னூலை பொருள்கோளியல் துறையின் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொருள்கோளியல்
பொருள்கோளியல் பனுவல்களின் அர்த்தத்தை நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கான பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் ஒரு தத்துவ நோக்கு ஆகும். பொருள்கோளியல் துறை வரலாறு, தத்துவம், சமூகவியல் ஆகிய துறைகளிலும் புகுத்திப் பார்க்கப்படுகிறது. பொருள்கோளியல் துறை மேலைநாடுகளில் உரை வரைதல், சொல்லுக்கு விளக்கம் தருதல், நூற்பொருளைப் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள மொழிபுணர் இயல்பு என்னும் கருத்தைப் பொருள்கோள் என்று உரையாசிரியர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.இந்தச் சூழலில் மொழிபுணர் இயல்பை முழுமையான பொருள்கோள் முறையாகக் கருத முடியாது என்ற வாதத்தை முன்வைத்து தொல்காப்பியத்திலுள்ள சில பொருள்கோடல் முறைகளைத் தொகுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது,
“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடைய மாந்தர்க்கு அல்லது தெரியின்
நல்நயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே” [தொல்காப்பியம், மெய்,275]
என்னும் நூற்பாவிலேயே உன்மையான பொருள்கோள் முறைமைகள் காணப்படுவதாக க.பூரணச்சந்திரன் [ தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம் என்னும் நூலில் நிறுவியுள்ளார்.]
பொருள்கோளியலின் தோற்றம்
உலகில் முதன் முதலில் மெசப்பட்டோமியக் கலாச்சாரத்தில் தான் பல்வேறு வகையான உரைகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கிரேக்க புராணக்கதைகளில் ஹெர்மிஸ் என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி அறிய முடிகிறது. அக்கதாபாத்திரம் கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு தூது செல்பவனாகவும், மொழியை கண்டுபிடித்தவனாகவும் கூறப்படுகிறது. ஹெர்மிஸ் கூறும் சொற்கள் ஈரடித்தன்மை கொண்டதாக இருந்தது. இச்சொற்களுக்குப் பொருள் என்ன என்று மக்கள் கேட்டனர். அதற்கு ஹெர்மிஸ் பொருள் விளக்கியதாகவும் தெரிகின்றது. ஹெர்மிஸ் என்னும் பெயரில் இருந்து பொருள்கோளியலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஹெர்மியோடிக்ஸ் உருவாக்கப்பட்டது. இதனை மேலைநாடுகளில் அறிஞர்கள் (theory of textile interpretation and analysis) அதாவது ஒரு பனுவலுக்கு பொருள் விளக்கம் தருதல் அதைப் பகுத்து ஆராய்தல் பற்றிய கோட்பாடு என்று விளக்கம் தருகின்றனர். பொருள்கோளியல் துறை கடினமான மொழிகளை உடைய நூல்களை விளக்குகின்ற விதிகளை அல்லது முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. பொருள்கோளுக்கு அடிப்படையான உரை விளக்கம் பற்றி அணமையில் சிந்தித்த தமிழ் ஆய்வாளர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளனர்.பொருள்மாறுபடுவது அல்லது அர்த்தமாறுபடுவது அல்லது அர்த்த மயக்கம் தான் பொருள்கோள் துறையின் முக்கியமானது.பொருள் மாறுபாட்டிற்கு காரணம் ,
- பாடவேறுபாடு
- சொற்பிரிப்பு
- கொண்டுகூட்டு
- கலை மரபு
- தொகைப்பெயர் விளக்கம்
- ஒரு சொல்லுக்குப் பல பொருள்
- நயம் கூறுதல்
- விளங்கக் கூறுதல்
- கதைகளைப் பொருத்துதல்
ஆகியவைகள் காரணமாக இருக்கின்றன. இலக்கண நூல்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதற்கும் ,உரைகள் தோன்றுவதற்கும் இக்கூறுகளே காரணமாக இருக்கின்றன.
பொருள்கோளியல் அணுகுமுறை
பொருள்கோளியல் அடிப்படையில் நன்னூல் உருவாக்கத்தின் காரணத்தன்மை, காலத்தன்மை, கலாச்சாரத்தன்மை ஆகியவற்றை ஆராய இயலும். இலக்கண நூல்களின் விதிவருமுறை, விதிவிலக்கு முறை ஆகிய கற்பித்தல் கோட்பாடுகளின் வழி நன்னூலுடன் பொருள்கோளியலை பொருத்திப் பார்க்க இயலும்.
பொருள்கோளியல் சுழற்சி
நூலைப் பெறுபவன்
குறி, குறியீடு, பனுவல் ஆசிரியர்
பொருள்கோளியலை முக்கோண வடிவம் வாயிலாக விளக்கலாம். பொருள்கோளியல் ஒரு பனுவலை உருவாக்குவதிலும், அந்நூலினை விளக்குவதிலும் குறிப்பாகப் பனுவல்களின் மெய்மையான அர்த்தத்தை அணுகுவதிலும் அக்கறை காட்டுகின்றது. நூல், அந்நூல் நூலின் ஆசிரியர், வாசகரின் மனநிலை ஆகியவை அந்நூலைப் பொருள் புரிந்து கொள்ள உதவுகின்றது.
“புரிந்துகொள்ளலும், விளக்கமும் இரு வேறு கோணங்கள் என்றாலும் ஒன்றினின்றும் மற்றது பிரிக்க முடியாத தொடர்பு கொண்டவை .புரிந்துகொள்ளல் என்பது நம் மனத்தின் நனவுப்பகுதி ,புறநனவிலிப் பகுதி ஆகியவற்றில் நிகழும் ஒரு செயல்முறை ஆனால் விளக்கம் என்பதில் ஒருவனின் வரலாறு,பண்பாடு,சமூகம்,மொழி ஆகிய காரணிகளை ஆராய வேண்டும் இம்மாதிரி ஒரு பனுவலின் குறிகளை விளக்குவதிலும் ,குறிப்பாகப் பனுவலின் மெய்யான அர்த்தம் என்பதை அணுகுவதிலும் பொருள்கோள் அக்கறை காட்டுகிறது.” க. பூரணச்சந்திரன் [ தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம் ,ப.4] பனுவலை வாசகன் முக்கோண சுழற்சியின் வாயிலாக பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பொருள்கோளியல் துறை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
நன்னூலில் பொருள்கோளியல்
பொருள்கோளியல் துறைக்கும், நூல் உரை உருவாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நன்னூல் உரைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது நுண்ணிய உரை வேண்டும் என்கின்றது. உள்நின்று அகன்ற உரை என்பதற்கு ஒருவரது மனத்தின் ஆழ்நிலையில் பல காலமாக தங்கி இருந்து பேச்சு வாயிலாக வெளிப்படுகின்ற விளக்கம் என்று பொருள் கொள்ளலாம். உரையானது வழிவழியே வாய் மொழியாக பரப்பப்பட்டது. பொருள்கோளியல் துறையும் வாய்மொழி, நம்பிக்கை இவற்றின் வழியாக தோன்றியது என்று மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.
‘’தமிழ் மரபில் ஆசிரியர் தம் மாணவர்களுக்கு வாய்மொழியாக பழைய நூலுlக்கு உரையும் விளக்கமும் கூறி வந்தனர். இவ்வாறு ஒரு நூல் பல தலைமுறைகளைக் கடந்து வரும்போது ஒவ்வொரு பரம்பரைக்கும் உரிய கருத்துக்களையும் விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (உரையாசிரியர்கள், அரவிந்தன் மு. வை, பக்கம்:64 )
ஒரு நூலுக்கு உரை செய்தல், உரை விளக்குதல் என்பதைத் தாண்டி ஒரு பனுவலைப் புரிந்து கொள்வது வயது, கால சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். பொருள்கோளியல் துறை பொருளை வாசகனின் மனநிலைக்கு ஏற்ப புரிந்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது.
பொருள்கோளியல் துறையில் எல்லா பனுவல்களும் சமமானவை என்றும், விவிலியம் போன்ற சமய நூல்களுக்கு தனி இடம் தர வேண்டாம் என்றும் கூறுவர். ஆனால் தமிழ் மரபில் சமய நூல்களுக்கு முக்கியத்துவம் தரும் வழக்கம் இருக்கிறது.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்” (நன்னூல், பாயிரவியல்)
இலக்கண நூல்களுக்கு உரை காணுதல் என்பது அக்கால சமூக, சமய அரசியலுக்கு ஏற்ப உரை மாறுபட்டது. இலக்கண நூல்களுக்குப் பல உரைகள் தோன்றின. ஒவ்வொரு உரை ஆசிரியரும் சொல்லுக்கு உரை காணும் விதம் மாறுபடுகிறது.
நன்னூலில் பொருள்கோள்
பொருள்கோளியல் துறைக்கும் இலக்கண நூல்கள் குறிப்பிடும் பொருள்கோளுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஒரு செயலில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வதற்கு ஏற்ற வகையில் நேராகவோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறையை பொருள்கோள் என்று வழங்குவர்.நன்னூலார் பொருள்கோளை எட்டு வகைப்படுத்துகிறார்.
“யாற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூண்
தாப்பிசை அளைமறியாப்பு கொண்டு கூட்டு
அடிமறி மாற்று எனப் பொருள்கோள் எட்டே’’ [நன்னூல், நூ .411]
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- பூட்டுவில் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறியாப்புப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- அடிமறிமாற்றுப் பொருள்கோள்
ஆற்று நீர்ப் பொருள்கோள்
செய்யுளில் ஆற்று நீரோட்டம் போல சொற்கள் முன்னும் பின்னும் மாறாமல் நேரடியாக பொருள் கொள்ளும் முறை ஆற்று நீர்ப் பொருள்கோள் என்பர். அதனை நன்னூலார்,
“மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே” [நன்னூல், நூ.412]
எனக்கூறுகிறார்.
மொழிமாற்றுப் பொருள்கோள்
செய்யுளில் ஓர் அடிக்குள்ளே மொழிமாற்றி பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள் என்பர்.
நிரல்நிறைப்பொருள்கோள்
செயலில் சொற்கள் முறை பிறலாமல் வரிசையாக அமைந்து வருவது அது முறை நிரல் நிறைப் பொருள்கோள், எதிர்நிறைப் பொருள்கோள் என இருவகைப்படும்.
“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே [நன்னூல், நூ,414]
நன்னூலார் பெயர் வினைகளாகிய சொல்லையும் அவற்றின் பொருளையும் பாடலில் இருக்கும் முறையில் அல்லாமல் பொருந்தும் வகையில் வரிசையாக நிறுத்தி முறையாக அல்லது எதிராகப் பொருள் கொள்வது என்று கூறுகிறார்.
கூட்டுவில் பொருள்கோள்
செய்யுளின் இறுதிச்சொல்லை முதற் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுவது கூட்டுவில் பொருள்கோள் என்பர்.
தாப்பிசைப் பொருள்கோள்
செய்யுளில் சொற்கள் முன்னும் பின்னும் சென்று பொருள்கொள்ளும் முறையினை தாப்பிசைப் பொருள்கோள் என்பர்
அளைமறியாப்புப் பொருள்கோள்
செயலில் இறுதிச்சொல் அல்லது இறுதி அடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளும் முறை அளைமறியாப்புப் பொருள்கோள் என்பர்.
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
செய்யுளில் பல அடிகள் சிதறிக்lகிடக்கும் சொற்களை ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டி பொருள் கொள்ளும் முறை கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பர்.
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
அடிமறி மாற்றுப் பொருள்கோள் இரு வகைப்படும்.அவையாவன,
- ஏர்புழிக் கூட்டு அடிமாற்றுப் பொருள்கோள்
ஒரு செயலின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டி பொருள் காண்பது.
- பொருள் இசை மாறாஅடிமாற்றுப் பொருள்கோள்.
ஒரு செயுளின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் இசையும் மாறாமல் இருப்பது.
நன்னூலார் ஒரு பனுவலை எவ்வாறு வாசகன் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் துணைபுரியும் வகையில் பொருள்கோளை உருவாக்கி உள்ளார். பொருள்கோள் அடிப்படையில் வாசகர் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை வாசகனின் பொருள் புலப்பாட்டுத் தன்மையானது வாசகனின் வயது, காலம், சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். பொருள்கோள் துறையும் ஒருபனுவலை சமூக, சமயப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும் என்கிறது.
சமூக சமயச் சூழலுக்கேற்ப பொருள் கொள்ளல்.
தமிழ் மொழியில் சொற்களின் பொருள் புரிதலைப் பற்றி ஆராயும் பொழுதுபொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே எனக் கூறுவர். ஒரு சொல்லின் பொருள் இன்னொரு சொல்லால் அறியப்படுகிறது. அச்சொல்லின் பொருளை தேடிக்கொண்டே போனால் வரம்பில்லாமல் போகும். இதனை பொருள்கோளியல் துறையில் (Endless semiosis) என்பர். அதேபோன்று ஒரு நூலின் பொருளை அந்நூல் தோன்றிய சமூகத்தின், சமயத்தின் காலத்தின் அடிப்படையில் பொருள் புரிந்து கொள்ள முடியும்.
”நிறை உயிர் முயற்சியில் உள்வழி துரப்ப
எழும் அணுத்திரள் உரம் கண்டம் உச்சி” (நன்னூல்:19)
”மக்கள் தேவர் நரகர் உயர்திணை ” (நன்னூல்:132)
மேற்கூறிய நூற்பாக்கள் நன்னூல் தோன்றிய இடைக்காலக்கட்ட சமூகத்தை வெளிப்படுத்துகிறது தொல்காப்பியத்தில் திணை வகைப்பாடிடில் இடம்பெறாத தேவர், நரகர் பற்றிய சிந்தனை இடைக்கால கட்டத்தில் தோன்றிய புராண இதிகாசங்களில் தேவர்,நரகர் பற்றிய கதைகளின் வழியாக இலக்கண நூல்களில் அவர்களை உட்படுத்த வேண்டிய தேவை எற்பட்டது.நன்னூல் தோன்றிய காலக்கட்டத்தின் விளைவாக சில இலக்கண கூறுகளைப் புதிதாக கூறுகின்றது.
அணு பற்றிய கொள்கை சமணர்களுடையது. ஒரு பொருள் அணுவின் செயற்கையால் உருவாகி விடுவதில்லை அதனோடு காலமும், ஆகாயமும் சென்று உருவாகிறது என்பது சமணர் கொள்கை. எழுத்துக்களின் தோற்றத்திற்கு கூறப்பட்டுள்ள சமணர் கொள்கையில் முக்கியமானது.’தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை’ என்பதாகும். சொற்களின் பொருள் புலப்பாடும் முடிவில்லாதது ஆகும். அது வாசகனின் மனநிலைக்கேற்ப மாறுபட்டு கொண்டே இருக்ககூடியது.
நன்னூலில் எதிர்நிலைச் சொற்கள்
மொழியில் எதிர்நிலை உறவு கொண்ட சொற்கள் பொருள்ப் புலப்பாட்டிற்கு உதவுகின்றன.உதாரணமாக நன்மை,தீமை தேவர்,நரகர் இம்மாதிரி சொற்களை பயன்படுத்தும் பொழுது அச்சொற்கள் எதிர்நிலைச் சொற்களையும் அதனோடு சேர்ந்து பொருள்ப் புலப்படுத்தும் வாசகரின் மனதில் ஒரு சொல்லின் எதிர்நிலை தன்மையும் எழுகிறது இம்மாதிரிச் சொற்கள் பொருளைப் புரிந்து கொள்ளவும் ஆழ்ந்து சிந்திக்கவும் உதவுகின்றது.
“மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை” (நன்னூல்:132)
இந்நூற்பாவைப் போன்று நன்னூலில் உயர்திணை, அஃறிணை, உயிருள்ளது இல்லாதது, ஆண்பால், பெண்பால் ,இயல்பு வழக்கு, தகுதி வழக்கு, வழு, வழுஅமைதி போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன இது போன்ற சொற்கள் பொருள்கோளியல் துறை அடிப்படையில் ஒரு பனுவலை புரிந்து கொள்ள உதவுகின்றன.
நன்னூலில் பொதுச்சொற்கள்
பொருள் அடக்குநிலைச் சொற்கள் என்ற பொதுச் சொற்கள் பொருள்கோளியல் துறையில் முக்கிய இடம்பெறுகிறது.நன்னூலில். வழக்குச் சொற்கள், அசைச் சொற்கள், ஐம்பால், மூவகை இடம் போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன. ஒரு பனுவலில் அசைச் சொற்கள் இடம் பெறுமாயின் அச்சொற்கள் எவை? ஏன் வருகிறது? அதன் தேவை என்னவென்று அறிந்த ஒருவனால் மட்டுமே சரியான பொருள் புரிந்துகொள்ள இயலும். மொழியில் பொதுச்சொற்கள் பொருள்ப் புலப்பாட்டிற்கு உதவுகின்றன.
நன்னூலில் உரிச்சொற்கள்
உரிச்சொற்கள் ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாய் திகழும் சொற்கள். ஒரு சொல் பல பொருளுக்கு உரிமை உடையதாக இருக்கும். இது மொழியில் பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயரடையாகவோ, வரும். உரிச்சொற்களை நன்னூலார்,
“பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்” [நன்னூல், நூ,442]
அதாவது உரிச்சொற்கள் இசை,குறிப்பு ,பண்பு என்று பல்வேறு தன்மைகளைக் குறிப்பதாய் ஒரு குணம் தழுவியதாயும் பல குணம் தழுவியதாயும் பெயர் ,வினைகளை விட்டு நீங்காததாய் செய்யுளுக்கே உரித்தாய் வருவது உரிச்சொல். என்று கூறுகின்றது.
சான்றாக,
\கடிமனை – காவல்
கடிவாள் – கூர்மை
கடிமிளகு – கரிப்பு
கடிமலர் – சிறப்பு
இம்மாதிரியான சொற்கள் பொருள் புரிந்து கொள்வதில் இடர்பாடு ஏற்படுத்துகின்றன கடிமனை எனும் சொல்லில் கடி என்பது காவலை உணர்த்தும் என்பது அறிந்தவனால் மட்டுமே அச்சொல்லின் பொருளை உணர முடியும். ஆனால் பொருள்nகோளியல் துறையில் கடி என்ற சொல்லின் பொருளை அறியாத வாசகன் வேறொரு பொருள் கொள்ள முடியும். அதனால் பொருள்கோளியல் துறையில் உரிச்சொற்களுக்கு பொருள் கொள்வது வாசகனைப் பொருத்தது எனக்கூறுகின்றது,
நன்னூலில் ஒப்புருச்சொற்கள்
நன்னூலில் சொல் தொடர்பற்ற பல பொருளைக் குறிக்கும் சொற்களை ஒப்புருச் சொற்கள் என்பர்.
“மரமல் லெகின் மொழி இயல்பு அகரம்
மருவ வலிமெலி மிகலுமாகும்” (நன்னூல்:12)
எகின் என்ற சொல்லுக்கு மரம், விலங்கு, அன்னம் என்னும் பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சொல்லின் பொருள் மாறுபட்டு கொண்டே இருக்கும். அப்பொருள் புலப்பாட்டிற்கு வாசகனின் சமூகம், அரசியல் சூழலே காரணமாக இருக்கின்றன. இம்மாதிரியான சொற்களை பொருள்கோளியல் துறையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.
முடிவுரை மொழியில் இலக்கணம் இலக்கியத்தை ஒரு வரைச்சட்டகத்துல் அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவ்விலக்கணங்களை மேலை நாடுகளில் உள்ள பொருண்மையியல், பொருள்கோளியல் போன்ற பல கோட்பாடுகளில் பொருத்திப் பார்க்க இயலுகின்றது.அவ்வகையில் நன்னூல் பொருள்கோளியல் துறையின் பலக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இலக்கண நூல் ஒரு மொழியை நெறிப்படுத்துவது மட்டுமல்லாமல் இலக்கணத்தை அது தோன்றிய சமூகம், அரசியல், பொருளியல் காரணங்களின் அடிப்படையில் ஆராய இயலுகின்றது. மீண்டும் மீண்டும் இலக்கண நூல்கள் தோன்றுவதற்கான காரணம் மொழியில் ஏற்படும் மாற்றங்களாகும். அவகையில் நன்னூல் 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக சமய அரசியல் காரணங்களை பிரதிபலிக்கிறது. பொருள் கொள்ளும் செயல்முறை முடிவற்ற ஒன்று. ஏனெனில் அர்த்தம் முடிவில்லாத ஒன்று. எந்த ஒரு விளக்கமும் எல்லா அர்த்தங்களையும் தர இயலுவதில்லை. அது தற்காலிகமானதும் வாசகனை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது..பொருள்கோளியல் துறையில் நூலும் வாசகனின் மனநிலையுமே பொருள் புரிதலுக்கு உதவுகின்றன.
துணைநூற்பட்டியல்
1 அரவிந்தன், மு. வை, உரையாசிரியர்கள் மாணிக்கவாசகர் பதிப்பகம்,சென்னை,2008.
2.சுப்பிரமணியன், சா.வே.,தொல்காப்பியம் மூலம்,தமிழ் இலக்கண நூல்கள் ,மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்,மு.ப.2007
3.தண்டபாணி தேசிகர். ச. நன்னூல் விருத்தியுரை, பாரிநிலையம் சென்னை, 1998. மூன்றாம் பதிப்பு.
4.பூர்ண சந்திரன், க தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம், அடையாளம் வெளியிடு, 2021 முதல் பதிப்பு.
5.. முனைவர்.பி.சி.ஜெகதாதமிழ்ச்செல்வன்,முனைவர்,க.தமிச்செல்வன் ,நன்னூல் சொல்லதிகாரம் மூலமும் உரையும்.