Reading view

ஹெக்ஸகோன் – 9

ஜூலை 2023

‘இந்த அபார்ட்மெண்ட் ரொம்பப் பழசு, இல்லையா?’ என்று சாந்த்ராவிடம் கேட்டால் ‘இல்லையில்லை, அவ்வளவு பழசில்லை. 1860ல் கட்டியதுதான்’ என்றார்.

பாரிஸிலுள்ள பல கட்டடங்கள் மிகவும் பழமையானவை என்றாலும் அவற்றை அழகாக பராமரித்து வருகிறார்கள். 1200களில் கட்டிய கட்டடங்களையெல்லாம் புதுப்பித்து உறுதியாக வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்தைக் கேட்காமல் கட்டடங்களின் வெளியில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

நாத்ருதாம் கட்ட உபயோகித்தக் கல்லில்தான் இந்த வீட்டின் இந்தப் பகுதி கட்டப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பெருமை கொள்கிறார்கள். ஈஃபில் டவர், நாத்ருதாம், மோன்மார்த்தர் போன்ற புகழ் வாய்ந்த சின்னங்கள் உங்களின் பால்கனியில் இருந்து பக்கத்தில் தெரிந்தால் உங்கள் வீட்டின் விலை சில கோடிகளுக்கு எகிறும்.

வீதியில் நடக்கும்போது அபார்மெண்ட்களின் முன் நின்று அண்ணாந்து பார்ப்பார் சாந்த்ரா. கண்கள் பளிச்சிட ‘இந்தக் கட்டடங்களுடைய கூரைகள்தான் என்னை வசீகரிக்கின்றன’ என்று புன்னகைத்துக்கொண்டே சொல்வார். கையை நீட்டி ‘இதோ பார்த்தாயா! ஓஸ்மான் (Haussmann) கட்டிய கட்டடங்களிலெல்லாம் இரண்டாம் மாடிக்கும் ஐந்தாம் மாடிக்கும் மட்டுமே பால்கனிகள் உண்டு’ என்பார். அதிசயமாக இருந்தது.

ஓஸ்மான் 1850ல் இருந்து 1870 வரை மூன்றாம் நெப்போலிய மன்னன் ஆணைப்படி நகரத்தை முழுமையாக சீரமைத்தார். ஏகப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் கிளம்பினாலும் பாரிஸை அதிநவீனமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்த தெருவை புகழ்பெற்ற ஷான்ஸ் எலிஸேவாக (Champs Elysees) மாற்றினார். தெருவெங்கும் மரங்களை நட்டார். நகரத்தில் ஆங்காங்கே பல பூங்காக்களை அமைத்தார். இப்போது நாம் பார்த்துக்கொண்டாடும் பாரிஸ் ஓஸ்மானின் கைங்கர்யம்.

அதிலிருந்து நானும் பால்கனிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பால்கனிகள் விஸ்தாரமாகவெல்லாம் இருக்காது. ஒரு சன்னமான ஆள் பத்து தப்படி நடக்கக் கூடிய அளவிற்குத்தான் இருக்கும். பெரிய வீடெல்லாம் பாரிஸில் கனவுதான். பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே பெரிய பால்கனி சாத்தியம்.

சாந்த்ராவினுடைய அபார்ட்மெண்ட் ஐந்தாம் மாடி. சிறிய வீடுதான். ஆனால் வசதி மிக்கது. வாசல் கதவைத் திறந்தவுடன் ஒரு திறந்த சமையலறை. அதன் வழியாகத்தான் வீட்டினுள் நுழைய முடியும். சமையலறையிலிருந்து போனால் இடது பக்கம் ஒரு படுக்கையறை, வலது பக்கம் ஒரு சிறிய சதுர லிவிங் ரூம். அங்குதான் குறுகலான ஒரு பால்கனி. படுக்கையறைக்கும் லிவிங் ரூமுக்கும் நடுவே இருக்கும் சின்னப் பாதையில் சென்றால் ஒரு வளைந்த இரும்புப் படிக்கட்டு. படிக்கட்டின் இடதுபுறம் கழிவறையுடன் கூடிய ஒரு குளியலறை. படிக்கட்டின் மேலே ஏறிச் சென்றால் ஒரு நீள அறை. நடுவில் ஒரு சிறிய படுக்கையறை.

அந்தப் படுக்கையறையை ஷார்லத் என்ற 21 வயது பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் சாந்த்ரா. அந்தப் பெண்ணின் வீடு ஒயினுக்குப் புகழ்பெற்ற நகரமான பார்தோவில் இருந்தது. அவள் எட்டு மாதத்துக்கு அப்ரெண்டிஸாக வேலை செய்ய பாரிஸ் வந்திருந்தாள்.

மேலே அந்த நீள் அறையின் இடது பக்க மூலையில் எனக்கு ஒரு கட்டிலும், வலது பக்க மூலையில் சிந்துஜாவுக்கு ஒரு கட்டிலும் போட்டிருந்தார் சாந்த்ரா.

‘மன்னிக்கவும், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். நான் பொதுவாக இங்கிருக்கும் படுக்கையறையை வாடகைக்கு எல்லாம் விடுவதில்லை. ஆனால் அடுத்த வருடம் ஜப்பான் செல்ல பணம் வேண்டியிருப்பதால் வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதனால் உங்களுக்குத் தர இயலவில்லை’ என்றார்.

சாந்த்ரா பல ஆவணப் படங்கள் எடுத்திருக்கிறார். பிலிம் எடிட்டராகவும் இருந்தவர். அவருக்கு இந்தியா அத்துப்படி. எம்ஜிஆர் பற்றிய டாக்குமெண்டரி கூட எடுத்திருப்பதாகச் சொன்னார். பாரிஸில் இறங்கிய அடுத்த நாள் காலையில் ‘எனக்கு தோசை இட்லி எல்லாம் செய்ய முடியாது. பிரெட்தான் உங்களுக்கு’ என்றார்.

எங்களுக்காக பகெத் (Baguette) என்ற நீள ரொட்டி, ஜாம், வெண்ணெய், முட்டை, பழங்கள், தயிர் எல்லாம் வாங்கி வைத்திருந்தார். இடுப்பளவே உள்ள ஃப்ரிட்ஜ் ஒன்று இருந்தது. அதே அளவுள்ள ஃப்ரீஸர் தனியாக இருந்தது. அந்த ஃபிரிட்ஜில் மூன்று தட்டுகள். நடுத்தட்டு ஷார்லத்தினுடையது. அதிலிருக்கும் பொருட்களை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஷார்லத் காலையிலோ அல்லது மாலையிலோ ஏதேனும் சமைத்து சாப்பிடுவாள்.

நாங்கள் அந்த வீட்டிற்கு சென்ற பிறகு ஒரு மூன்று நாட்கள் ஷார்லத்தைப் பார்த்திருப்போம். பிறகு அவ்வளவாகப் பார்க்கவில்லை. நடுவில் அவள் இரண்டு நாள் ஊருக்குப் போய் விட்டிருந்த சமயத்தில் துணி துவைக்க வேண்டுமானால் ஷார்லத்தின் அறையில் வாஷிங் மெஷின் இருப்பதாகவும் துவைக்கலாம் என்றும் சாந்த்ரா கூறினார்.

அந்த ரூமிற்குள் நான் நுழைந்ததும் ஸ்தம்பித்து விட்டேன். எல்லா சாதனங்களும் அலங்கோலமாகக் கிடந்தன. கட்டிலில் மடிக்காத போர்வை ஒன்று சுருண்டு கிடந்தது. என் முகத்தைப் பார்த்த சாந்த்ரா ‘அது அவள் அறை. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், வீட்டிற்கு பங்கம் வராத வரை’ என்றார்.

லாவண்யா தங்கியிருந்த கீழ்வீட்டில் இருந்த குஜராத்திக் குடும்பத்தினர் பாரிஸில் ஒரு உணவகம் வைத்திருந்தார்கள். அவ்வப்போது சாந்த்ராவுக்கு சப்பாத்தியும் தாலும் பாஸ்மதி சாதமும் கொடுப்பார்கள். நாங்கள் இருந்த சமயத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எங்களுக்கு குஜராத்தி சாப்பாடு கிடைத்தது.

‘ஜப்பான் செல்கிறாயா? எப்போது? யாரோடு?’ என்று கேட்டேன்.

‘அடுத்த வருடம் செல்லலாமென்றிருக்கிறேன். தனியாகத்தான் போவதாக இருந்தேன். ஆனால் என் தோழி ஒருத்தியும் கூட வருவதாக இப்போது சொல்லியிருக்கிறாள். பார்க்கலாம்’ என்றார் சாந்த்ரா.

சில சமயம் சாந்த்ரா ஜப்பான் மேப்பை விரித்து வைத்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருப்பார். சாந்த்ரா வயதில் உள்ளவர் யாரேனும் நம் ஊரில்  ‘உடம்பு வலிக்கிறது’ என்று சொன்னால் ‘வயசாச்சு இல்ல. அப்படித்தான் இருக்கும்’ என்று அனைவரும் சொல்லிச் சொல்லி நமக்கும் ஐம்பது வயதாகி விட்டாலே இனி சுடுகாட்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான் என்ற எண்ணம் உருவாகிவிட்டிருக்கும். அதனால் எனக்கு சாந்த்ராவைப் பார்த்து ஒரே பிரமிப்பாக இருந்தது.

நான் அங்கிருந்த பதிமூன்று நாட்களில் ஒரு நாள்கூட அவர் தனக்கு வயதாயிற்று என்றோ, இனிமேல் இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்றோ சொல்லிக் கேட்கவேயில்லை. சுறுசுறுப்பாக இளம்வயதினரைப்போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு கட்டிலை, மேஜையை இழுத்து வீட்டை சுத்தம் செய்துகொண்டு இருப்பார்.

‘ஷார்லத் இருப்பது நல்லதுதான். உனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கும்’ என்று நான் ஒரு நாள் சொன்னதும் கோபம் வந்துவிட்டது சாந்த்ராவுக்கு.

‘பேச்சுத் துணைக்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எனக்கென்று நண்பர்கள் படையே உண்டு. இந்தக் குட்டியிடம் பேசி எனக்கெதுவும் ஆகப்போவதில்லை’ என்றார். நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

எழுபத்தைந்து வயது அவருக்கு. 2020ல் அவருக்கு மார்பகப் புற்று நோய் வந்து மார்பகங்களை அகற்றியிருக்கிறார்கள். ஆனாலும் அதை ஏதோ ஒரு காய்ச்சல் வந்ததுபோல் அலட்சியமாக சொல்வார்.

‘இப்போது நன்றாக இருக்கிறேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறை செக்கப் மட்டும் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த வியாதி வருவதற்கு முன்னால் வரை சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன். இனிமேல் தான் மறுபடி ஆரம்பிக்க வேண்டும்’ என்றார்.

நம்மூர் ரயிலில் மேல் பெர்த் கிடைத்தால் கீழ் பெர்த்தை தரும்படி இளைஞர்களிடம் யாசிக்கும் நாற்பது வயதுப் பெண்கள் நினைவுக்கு வந்தனர்.

*

சாந்த்ராவும் நானும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்போம். முடிந்தவரை அவருடன் பிரெஞ்சிலேயே பேசுவேன். ‘உனக்கு நிறைய பிரெஞ்சு சொற்கள் தெரிந்திருக்கின்றன. நன்றாகவும் பேசுகிறாய். இன்னும் தங்குதடையின்றி யோசிக்காமல் மட்டும் பேச வேண்டும். பேசிக்கொண்டேயிருந்தால் இரண்டு மாதத்தில் சரளமாகப் பேசி விடுவாய்’ என்று உற்சாகமளிப்பார். முதன்முதலாக ஆங்கிலம் பேசும்போது எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ அதைவிடப் பல மடங்கு ஆனந்தமாக இருந்தது பிரெஞ்சில் பேசியது.

‘உன்னோட ஓட்டை பிரஞ்சை வைத்து எப்படியோ சமாளிக்கிறாய்’ என்று என்னிடம் ஒரு வார்த்தைகூட பிரஞ்ச் தெரியாத லாவண்யா சொன்னது வேடிக்கையாக இருந்தது.

வெள்ளைக்காரப் பெண்மணிகள் (ஐரோப்பியர்கள், ஆஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள்)சிலருடன் எனக்கு ஏற்பட்டிருந்த, மற்றும் கேட்கக் கிடைத்த கசப்பான சம்பவங்களினால் அசௌகரியமாகத்தான் சாந்த்ராவிடம் இருக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர் மிகப் பெரிய ஆச்சரியம்.

2009ல் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது மெல்போர்னிலிருந்து சிட்னி வரும் வழியில் ஒரு பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்டில் தங்கியிருந்தோம். அங்கே சாப்பாட்டு அறையில் இருந்த ஒரு ஈஸிசேரில் என் தோழி உட்கார,உரிமையாளரான நடுத்தர வயதுப் பெண்மணி ‘எழுந்திரு! அது என் கணவரின் நாற்காலி. யாரும் உட்காரக்கூடாது ‘ என்று மிகக் கடுமையாகச் சொன்னார். அவ்வளவு கடுமையாக சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்கவேயில்லை. அதேபோல் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மேஜையின் மேல் இருந்த பாட்டிலை தன்னுடையது என்று நினைத்து அதை எடுத்து என் தங்கை தண்ணீர் குடிக்க எத்தனித்தபோது ஒரு அமெரிக்கப் பெண்மணி தலைதெறிக்க ஓடி வந்து ‘என் தண்ணீர்’ என்று பிடுங்கிக் கொண்டார். ‘காபி ஆறி விடும் குடித்து விடுங்கள்’ என்று இருமுறை சொன்னதற்காக ‘என் ப்ரைவஸியில் நுழைகிறாய். நான் எப்போது எப்படிக் குடிக்க வேண்டும் என்று நீ சொல்லித் தராதே’ என்றெல்லாம் பேச்சு கேட்டதுண்டு.

என் தோழி ஒருவரையும் அவர் நண்பர்களையும் அமெரிக்கர் ஒருவர் புது வருடப் பிறப்பு அன்று இரவு சாப்பாட்டிற்கு அவர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இவள் மட்டும் அந்தக் கூட்டத்தில் முட்டைகூட சாப்பிடாத வெஜிடேரியன். இவளுக்காக அவர்கள் எதுவும் தனியாக சமைத்திருக்கவில்லை. ‘உனக்கென்று தனியாக சமைக்க எனக்கு நேரமில்லை’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார். அவள் ஏதோ பழரசத்தைக் குடித்துவிட்டு பட்டினியாக வந்திருக்கிறாள்.

அதனால் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே சாந்த்ராவை அணுகினேன். டைனிங் டேபிளின் நாற்காலியைத் தவிர வேறு எதிலும் உட்கார மாட்டேன். டைனிங் டேபிளுக்கு அருகில் இருக்கும் சோஃபா மெத்தென்று அழகாக இருந்தாலும் உட்கார மிகவும் தயக்கமிருந்தது. ஆனால் சாந்த்ரா நம் பாட்டிகளைப்போல் வாஞ்சையுடன் இருந்தார். வா தங்கம், வா கண்ணு என்று சொல்வதுபோல் ‘மா ஷெரி’  என்று வாஞ்சையுடன் அழைத்தார். நம்மூர் பாட்டிகளைப்போல் வம்பும் உண்டு. உலக அரசியல் எல்லாம் அத்துப்படி.

‘உங்க நாட்டுல ஒரு மோடி இருப்பதுபோல் எங்கள் நாட்டிலும் ஒரு கோமாளி இமானுவேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது’ என்று படாலென்று பேசி அதிர வைப்பார்.

சாந்த்ராவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள். ஒரு மகன். மகன் பிரெஞ்சு சினிமா நடிகர். அவர் நடித்த Ornithologist என்ற படம் பல விருதுகள் வாங்கியிருக்கிறது. பாரிஸ் செல்லப் போகிறேன் என்றதும் Mubiல் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதில் பல விவிலியக் குறியீடுகள் இருந்தன. எனக்குப் படம் சரியாகப் புரியவில்லை. பாரிஸ் சென்று சாந்த்ராவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

‘ஆர்னிதாலஜிஸ்ட் படம் பார்த்தேன். உங்கள் மகன் நன்றாக நடித்திருந்தார்’ என்று சொன்னேன்.

‘படம் புரிந்ததா?’ என்று புன்னகைத்துக் கொண்டே கேட்டார்.

‘இல்லை. உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்’.

‘ஹ! எனக்கும் புரியவில்லை’ என்று கண்ணடித்துச் சிரித்தார்.

இந்தக் கண்ணடிக்கும் பழக்கமும் பல பிரெஞ்சுக்காரர்களிடம் பார்த்தேன். பாரிஸ் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் ஆஃபீஸர் என் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்திவிட்டு ‘ஹேவ் அ நைஸ் ஸ்டே’ என்று கண்ணடித்துச் சிரித்தார். ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு வெளியேறும்போது முன்னால் இருப்பவரிடம் ‘மெர்ஸி’(நன்றி) சொன்னவுடன் தலையசைத்துக் கண்ணடித்தார். வீதியில் வழி சொன்னதற்கு நன்றி சொன்னவுடன் கட்டை விரலை உயர்த்திக் கண்ணடித்துச் சிரித்தார் ஒரு நபர். மோனே அருங்காட்சியகத்தில் என் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னதும், அழகான பல்வரிசையுடைய ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான அந்தப் போலீஸ்காரர் கண்ணடித்து சிரித்தபோதுதான் மனது லேசாக ஏதோ செய்தது.

*

  •  

தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை

மெட்ராஸ் பேப்பர் இதழின் உதவி ஆசிரியர், நஸீமா ரஸாக், தமிழ்நாட்டில் திருக்கோவிலூரில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வருகிறார். மௌலா, துபாய் விசா பகுதி 1 மற்றும் பகுதி 2, தளிர், மராம்பு, என்னைத் தேடி, பொன் விளைந்த பூமி உள்ளிட்ட பதினொரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்து தமிழ் திசையில் இவரது கட்டுரைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நஸீமா ரஸாக் அவர்களது ”தோற்றாலும் விடமாட்டேன்” கட்டுரைத் தொகுப்பு நாற்பது கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தோல்விகள் எத்துனை வந்தாலும், மனந்தளராது, விடா முயற்சியுடன் தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்த உலக அளவிலான நாற்பது சாதனையாளர்களைப் பற்றிய நூல்.

சாதனையாளர்களைப் பற்றிய தகவல்களை அள்ளித் தரும் தகவல் திரட்டு அல்ல இந்த நூல்.
ஒரு சாதனையாளர் எந்த ஆண்டு பிறந்தார், எங்கு எப்போது படித்தார் அல்லது அவருக்குக் கிடைத்த அங்கிகாரங்களின் பட்டியல் போன்ற புள்ளி விவரங்களால் பக்கங்கள் நிரப்பப்படவில்லை.

அதே சமயத்தில், ஒவ்வொருவருடைய வாழ்வின் முக்கியத் தருணங்களை, உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அவர்கள் எதிர் கொண்ட சவால்கள், அவர்களது வேதனைகள், திடமான உறுதியுடன் , விடாமுயற்சியுடன், தோற்றாலும் விடமாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவர்கள் செயல்பட்டதை மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்து உள்ளார்.
கட்டுரைகளின் நீளம் பற்றிக் குறிப்பிட வேண்டும்.ஆசிரியர் எடுத்துக் கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக ஒரு நூலே எழுதலாம். இருப்பினும், அவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களையும் குறிப்பிட்டு, அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் சொல்லி, தோல்வி மனப்பானமையை அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நூலின் அடிப்படைக் கருத்தை ஆழமாக வலியுறுத்தி… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவை அனைத்தையும் சிறிய கட்டுரைகள் வாயிலாகத் தந்துள்ளார்.
தொய்வில்லாமல் , சுவாரசியத்துடன் படிக்க இந்த “சுருங்கச் சொல்லும்” உத்தி உதவுகிறது என்றால் மிகை ஆகாது.
அத்தியாயங்களின் தலைப்புகள் சாதனையாளர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. ஓரிரு அத்தியாயங்களுக்கு மட்டுமே சாதனையாளரின் பெயரே தலைப்பாக உள்ளது.

சாதனையாளரின் கோணத்தில், சாதனையாளரே பேசுவது போல் (First Person Narrative) அமைந்திருப்பது மிகச் சிறப்பு. சிறப்பானதொரு கதை சொல்லும் உத்தி அல்லவா ! வாசகரை, சாதனையாளருடன் பொருந்தி இருக்க வைக்கிறது இந்த உத்தி!

பத்து பெண் சாதனையாளர்கள் மற்றும் முப்பது ஆண் சாதனையாளர்கள் பற்றி நூல் விவரிக்கிறது.
அறிவியல் ( இயற்பியல், கணிதவியல்), கால்பந்து, இணைய வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவன முனைவர்கள், கிரிக்கெட், கார்ட்டூன் – அனிமேஷன், குத்துச்சண்டை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர் ( புதினம், குழந்தை எழுத்தாளர், மர்மக் கதை, கவிஞர் ) இசை, நடனம், நடிப்பு, கணினித் துறை, உணவுத் தொழில், அரசியல், கூடைப்பந்து, சிறு மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள், ஓட்டப் பந்தயம், பால் உற்பத்திப் பொருள், உடற்கலை வல்லுநர், மலையேற்ற வீரர், கதை சொல்லி, ஊக்கமூட்டும் சொற்பொழிவாளர்…. எத்துணை துறைகள் !
எந்தத் துறையாக இருந்தாலும், நிராகரிப்பு, தோல்வி, துரோகம் முதலியவற்றைக் கடந்து, துணிவுடன், தொடர்ந்து முயற்சிப்போருக்கு வெற்றி நிச்சயம் எனக் கட்டியம் கூறுகிறது இந்நூல்.

என்னைக் கவர்ந்த தலைப்புகள் : கருந்துளையின் காதலன், கோழி அரசன், துணை வந்த செயற்கைக் கால், மரண தண்டனை.

ஒரு சில கட்டுரைகள் பற்றி:

கூடைப் பந்துத் தலைவன் : இக்கட்டுரை ”ஹிஸ் ஏர்னெஸ்” என அறியப் படும் மைக்கேல் ஜோர்டான் பற்றியது.

// தோல்விகளை மட்டுமே அதிகமாக சந்தித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் முதல் பெயர் என்னுடையதாகத் தான் இருக்கும்.// எனத் தொடங்குகிறது ஜோர்டனின் அத்தியாயம்.
பள்ளியில் மிக அருமையாக விளையாடினாலும், குழுவில் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், அவரது உயரம் குறைவு! அந்த நிராகரிப்பையும் தோல்வியையும் சீரணித்து ஜூனியர் மாணவர் குழுவில் இணைந்தார். உயரத்தை அதிகரிக்க உணவு பயிற்சி என முயற்சி செய்தார். வாய்ப்பு கிடைத்து விளையாடத் துவங்கும் நேரம் காலில் அடி. அதனால், சரியான பருவத்தில் பல வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் விளையாடத் துவங்கிய போதும் சரியான கட்டங்களில் புள்ளிகளை எடுக்காமல், ஒன்பதாயிரம் முறை சிறப்பாக ஆடத் தவறி உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி, அவமானங்கள், குற்ற உணர்வு. ஆனால், கூடைப்பந்து விளையாட்டில் முக்கிய இடத்தை அடைந்தார். விளம்பரங்கள், நிர்வாகம் என பல களங்களைக் கண்டார். நிராகரிப்புகளையும் வலிகளையும் பயிற்சிக்கு உரமாக மாற்றியதால் வெற்றி சாத்தியமாகியது.

முதுகில் ‘ஏழு’ இலக்கமிட்ட ஜெர்ஸியைப் பார்த்தாலே வெறி கொள்ளும் ரசிகர் கூட்டம் உலகம் முழுதும் ! கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றியது ”ரியல் மேட்ரிட்” கட்டுரை.
பெற்றோர்களால் ஒரு பந்தைக் கூட வாங்கித் தர முடியாத நிலை. பிற மாணவர்கள் ரொனால்டோவின் வறுமையைப் பரிகசித்தனர். இங்கேயே இருந்தால் மீன்காரனாகத் தான் ஆக வேண்டும். நகரத்துக்குச் சென்று கால்பந்து பயின்றால் குடும்பமே உயரும் என தந்தை சொல்ல, நகரம் நோக்கிச் சென்றார்.
ஆனால், பதினைந்து வயதில் ரொனால்டோவுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பின் மீண்டும் களத்தில் ரொனால்டோ!
மேன்செஸ்டர் அணியை எதிர்த்து விளையாடிய ரொனல்டோவை அந்த அமைப்பே நூற்றியெழு மில்லியன் டாலர் கொடுத்து ஓப்பந்தம் செய்தது. பிரபலமான ஏழாம் எண் ஜெர்ஸியை அவருக்குக் கொடுத்த போது சக வீரர்கள் விரும்பவில்லை.

பல தோல்விகள், மூட்டு வலி, ஆட வேண்டிய மைதானத்திலேயே பார்வையாளனாக இருந்த சூழல் என பல வலிகளைத் தாங்கித் தான் வெற்றி பெற்றுள்ளார் ரொனால்டோ.
கால்களை இழந்தும் தம் துறையில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டிய ’மயூரி’ சுதா மற்றும் மலையேற்ற வீராங்கனை அருணிமா பற்றிய கட்டுரைகள் சிறப்பு.
பஜ்ஜி வியாபாரமும் செய்து இருக்கிறார், ஜவுளி வியாபாரமும் செய்து இருக்கிறார் திருபாய் அம்பானி. அடிபட்டு, அசிங்கப்பட்டு வாழ்வில் உயர்ந்தார்.
தலித் பெண்மணி கல்பனா சரோஜ், பாப் இசைக் கலைஞர் லேடி காகா மற்றும் பேச்சாளர் நிக் வுஜிசிக் கதைகள் நம்மை எழுச்சியுறச் செய்யும்.
//வெற்றி அழகானது. ஆனால், தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை//

சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும் தவறுகளையும் கண்டறிந்து, திருத்திக் கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தை இந்நூல் விவரிக்கிறது.
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

கமலா முரளி

The post தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை appeared first on Naseema Razak.

  •  

பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன்

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்.
இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார்.
1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன் நடந்த போரில் குவாசிம்கள் தோற்கடிக்கப்படுகின்றனர்.

வளைகுடாவில் பிரிட்டிஷ் படையினரின் வருகை ஒரு பாசிட்டிவான வளர்ச்சி. துபாய் ஒரு புதிய வெளிப்புற சக்தியுடன் ஆக்கபூர்வமான உறவில் இணைகிறது.
வளைகுடா பாதுகாப்பு பகுதிகளான பஹ்ரைன் மற்றும் கத்தாரையும் சேர்த்து அமீரகம் இருக்கும் என்று பிரிட்டிஷார் எதிர்பார்க்கையில் ஐக்கிய அரபு கரையோரத்தில் இருக்கும் ஐந்து மிகச் சிறிய ஷேக் ராஜ்ஜியங்கள் ஒன்றாக அபுதாபி, துபாய் ,பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பிரதேசங்களாக செயல்பட துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

1968 ல் தனது தனித்தன்மையை இழந்து விடுவோம் என பஹ்ரைன் நாடு நினைத்ததால் இணைப்பு சாத்தியப்படவில்லை..
பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பஹ்ரைன் ,கத்தார் அமீரகத்தில் இணைய விரும்பாததால் ஏனைய ஏழு நாடுகள் ஒன்று சேர்ந்து 1971 டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறந்தது.

அபுதாபியின் ஷேக் தலைமை ஏற்க அனைத்து ராஜ்யங்களும் இணைந்த கவுன்சில் ஒன்றுகூடி முடிவுகளை எடுத்த விதம் விவரிக்கப்பட்டுள்ளது.
வியாபாரம் ஒன்று மட்டுமே பொருளாதார ரீதியில் தமது நாட்டை மேம்படுத்தும் என்ற எண்ணிய துபாயின் மன்னர் ஷேக் மஹ்தூம் முடிவால் துபாயில் அரேபியர்கள், பாரசீகர்கள், இந்தியர்கள் ,மற்றும் பலூச்சிகள் என வெவ்வேறு நிலத்து மக்கள் ஒன்று கூடி வாழ ஆரம்பித்தார்கள்.
துபாயில் இலவச துறைமுகம் ஒரு பக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது.
ஷேக் ராஷீத் அவர்களின் மேற்பார்வையில் அடுத்தடுத்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள்.

மன்னர் மனதில் துபாயை முக்கிய கேந்திரமாக மாற்றுவதற்கான அனைத்து பரிமாணங்களையும் யோசிக்க ஆரம்பிக்கிறார் .
1940களில் ஷார்ஜாவில் மட்டும் ஒரு சிறிய விமான நிலையம் இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தவிர விமான போக்குவரத்து அரிதான காலகட்டத்தில் தமக்கென்று சொந்தமாக விமான நிலையம் வேண்டும் என்று துபாயில் விமான நிலைய பணிகளை 1950 களில் ஆரம்பிக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் விமான நிறுவனங்கள் துபாயில் தரையிறங்க மறுத்தன .அந்த அளவுக்கு பயணிகள் இருக்கைகள் நிரம்பாது என்ற காரணத்தை அவர்கள் முன்னெடுத்தனர் ஷேக் அவர்கள் இருக்கைகள் அனைத்தையும் தாமே வாங்கிக் கொள்வதாக அறிவித்து அதற்கான முயற்சிகளை செய்ததில் விமான நிறுவனங்கள் சம்மதித்து துபாயில் தரையிறங்க ஆரம்பித்ததை வாசிக்கையில் வியப்புக்கு உள்ளாகிறோம்.
அடுத்த கட்டமாக வணிகத் தேவைக்காக சொந்தமாக வங்கியை நிறுவிய வரலாறுகள்..
மற்ற அரபு நாடுகளை விட துபாயில் எண்ணெய் வளம் குறைவு.

1970களில் பிரம்ம பிரயத்தன முயற்சிகளுக்குப் பிறகு குறைவான எண்ணெய் எடுக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் ஒரு அதிசய பொருள். அது எவ்விதம் கிடைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வரும். அவ்வகையில் துபாயின் பொருளாதாரம் சிறிது சிறிதாக மேம்பட ஆரம்பித்தது..
அடுத்த கட்டமாக நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி.

துபாயையும் அபுதாபியையும் இணைக்கும் வகையில் நீண்ட சாலை போடப்பட்டது. துபாயின் ஆட்சியாளர் பெயர் அபுதாபி சாலைக்கும் அபுதாபியை ஆள்பவரின் பெயர் துபாய் சாலைக்கும் வைக்கப்பட்டது வரலாறு.
ஆங்காங்கே இருந்த சிற்றோடையின் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன.
சரக்கு வாகனங்கள் துறைமுகத்தை விரைவில் சென்றடைவதற்காக தனியாக வசதிகள் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை விமான நிலைய ரன்வேயின் கீழே அகலமான சாலைகளும் சுரங்கப் பாதைகளும் அமைக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரிக்கையில் குடிநீருக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
துபாய் நகருக்கு தெற்கே 15 மைல் தொலைவில் அல் அவீர் என்ற இடத்தில் ஒரு நன்னீர் நீர் நிலையை கண்டுபிடிக்கின்றனர். நிலத்தடி நீர் குழாய்கள் மூலம் துபாய் நகருக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாக ஒவ்வொன்றாக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த அதே நேரத்தில், வரி, சிகப்பு நாடாத்தனம் போன்றவைகளில் வணிகர்களை சிக்க வைக்காமல் வரியில்லா துறைமுகம், ஏர்போர்ட் என்ற வசதிகள் 85 களில் பெருக ஆரம்பிக்கின்றன .
அந்த காலகட்டத்தில் துபாயில் நல்ல நட்சத்திர விடுதி கிடையாது. உடனடியாக விடுதிகள் கட்டப்படுகின்றன..
அவ்வாறே துபாய்க்கு என்று பிரத்தியேகமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் துவக்கப்படுகின்றன .இன்று உலகின் நம்பர் ஒன் விமான நிறுவனமாக எமிரேட்ஸ் உள்ளது.

அனைத்து பொருளாதரங்களும் உள்கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்படுகின்றன .துபாயின் வெற்று கடற்கரையான ஜெபல் அலி என்னும் இடத்தில் மெகா துறைமுகம் கட்டும் திட்டத்தை முன்னெடுக்கிறார்கள்..
துபாய் இன்று மிடில் ஈஸ்ட் வர்த்தகத்தின் நம்பர் ஒன் நகரம் .
மிகப்பெரிய துறைமுகம் மற்றும் விமான நிலையம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கம்பெனிகளின் இருப்பு ஷேக் ராஷீத்தின் தொலைநோக்கு பார்வையும் அவரின் கனவுகளும் இன்றைய துபாய்க்கு மிகப்பெரிய பலம்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய மால்கள் உணவகங்கள் கட்டப்படுகின்றன.. இவை குறித்து நஸீமா ரசாக் விரிவாக எழுதியுள்ளார் அதைப்போல் துபாயின் ரியல் எஸ்டேட் எவ்விதம் செயல்படுகிறது.. அமெரிக்காவின் லாஸ் வேகாசிற்கு அடுத்தபடியாக இன்று உலகப் பட்டியலில் துபாய் ரியல் எஸ்டேட்டில் முன்னணியில் அறியப்படுகிறது..
புர்ஜ் கலீஃபா என்னும் உலகின் உயரமான கட்டிடம் கட்டப்படும் பொழுது எழுந்த நெகட்டிவ் விமர்சனங்கள் ..
‘இது ஒரு வெள்ளை யானை ப்ராஜெக்ட் ..சரிவராது’ என்று பேசப்பட்ட நிலையில் அது எவ்வாறு முழுமை அடைந்தது என்பதை இரண்டு அத்தியாயங்களில் விரிவாக காண்கிறோம்..

“அந்தச் செல்லத்தை தூக்கி வாங்கப்பா” என்று படத்தில் சொல்வது போல் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் துபாய்க்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த ஆர்கிடெக்டுகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் கூட்டு முயற்சியே வானாளாவிய கட்டிடம்.
துபாயை ஆண்ட ஷேக்குகளின் சந்ததியில் ஷேக் முகமது குறித்த அத்தியாயத்தில் அவர் எந்த அளவுக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றி, வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அவருடைய நிர்வாகத் திறமை குறித்த தகவல்கள் யாவும் வியப்பூட்டுகின்றன.
ஆசிரியர் சொல்வது போல ‘எல்லாம் இருக்கும் பல தேசங்கள் ஆட்சியாளர் சரியாக அமையாததால் அழிவை சந்திக்கின்றன. உதாரணமாக சிரியா, இலங்கை ஈரான் என சொல்லலாம். ஆனால் எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் ஒன்றும் இல்லாமல் உயரத்தை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்பதில் சந்தேகமில்லை.
பழைய சங்கதிகளை சொல்வதுடன் இல்லாமல் இந்த நூலில் சமீபத்திய அசுரன் ,அரக்கன் ,கோவிட் நோய் தொற்று காலத்தில் துபாய் மீண்டெழுந்த கதையை மிகவும் அருமையாக நமக்கு சொல்கிறார்.

சுற்றுலா பயணிகளையே வருமானமாக கொண்ட ஒரு தேசம் பெருந்தொற்றின் காரணமாக முடக்கப்படும் போது சந்திக்கும் நஷ்டம். பொருளாதார சிரமங்களிலிருந்து வெளிவந்த தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் பில்லியன் டாலர்களில் நஷ்டத்தை சந்தித்த பொழுது அரசு தலையிட்டு அந்த நஷ்டத்தை ஈடு செய்து மீண்டும் லாப நோக்கில் செயல்பட வைத்ததெல்லாம் மிகப்பெரிய முன்னெடுப்பு…

ஷேக் முகமது அவர்களின் மகனார் ஷேக் ஹம்தன் இன்றைய பட்டத்து இளவரசர்.. துபாய் எக்ஸ்போ கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியதன் மூலம் அவருடைய நிர்வாகத் திறமை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பரிமளிக்க செய்கின்றன.
பாலைவனத்தின் மீன்பிடி கிராமம் துபாய் என்கிற மணல்பிரதேசம் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாக உருமாறிய வரலாற்றை ஆசிரியர் நஸீமா ரஸாக் தெளிவான தரவுகளுடன், சுவாரசியமான எழுத்து நடையில் அபாரமாக விளக்கியுள்ளார்.
வரலாற்று ஆர்வம் மிக்கவர்கள் மட்டுமல்லாது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த ‘பொன் விளைந்த பூமி’.

நன்றி ராஜா ஹஸன்.

 

புத்தகம் வாங்க

http://tinyurl.com/Pon-Vilaindha-Bhoomi

The post பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன் appeared first on Naseema Razak.

  •