தமயந்தி
தமயந்தி எழுதிய அனல்மின்மனங்கள் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. எஸ்தர் சிறுகதையை திருப்பிப் போட்ட மாதிரி இருக்கும். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது? குறும்படமாகவும் வந்ததாம். (கழுவேற்றம்) இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே அந்தச் சிறுகதைதான். இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா?
அவரது சிறுகதைகள் பல விகடனில் எழுதப்பட்டிருக்கின்றன. என் கண்ணில் அவர் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறவில்லை, ஆனால் அவர் இலக்கியம்தான் படைக்க முயல்கிறார்.
பிரபஞ்சன் “தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறாராம்.
அவரது சில சிறுகதைகள் சிறுகதைகள் தளத்தில் கிடைக்கின்றன. அவற்றில் அலர் நல்ல சிறுகதை, அம்பையை சில விதங்களில் நினைவுபடுத்தியது. ஜோதி பேசுவதைப் படிக்கும்போது சும்மா பூந்து விளாசும்மா என்று தோன்ற வைத்தது. பொதுவாகவே அவரது கதைகளில் கொஞ்சம் தைரியமான பெண்ணின், அடங்கிப் போகாத பெண்ணின் சித்தரிப்பு வரும்போது பிடிக்கிறது. உதாரணமாக காற்றில் பரவும் கதைகள் படிக்கலாம் ரகம்தான், ஆனால் நாயகியின் சித்தரிப்பு பிடித்திருந்தது. நூலிழை இறகுகள் கதையில் காட்டப்படும் ஆண்-பெண் ஈர்ப்பு, கைகூடாமல் போவது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு கனவும் பாதி ஃபலூடாவும் இளமைக்கால ஏக்கங்களை நன்றாக விவரிக்கிறது. ஆனால் இவற்றில் ஏதோ நல்ல கூறுகள் இருக்கின்றனவே தவிர படித்தே ஆக வேண்டியவை என்று வகைப்படுத்தமாட்டேன்.
ஆனால் நான் படித்த இலுப்பைப்பூ ரகசியம், ஜன்னல், வாக்குமூலம், யானைக்கனவு, முள்வீடு, தனிமையின் வாசனை, கோட்டை காவல் நிலையம், தேனும் ஒரு கொயர் கோல நோட்டும், பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும், பீஃப் பிரியாணி, மாஹித் ஹிப்சன், 36 பெருமாள்புரம் எல்லாவற்றையும் சுமார் என்றுதான் தரப்படுத்துகிறேன்.
தமயந்தி இலக்கியம்தான் படைக்க முயல்கிறார், ஆனால் அனல்மின்மனங்கள் சிறுகதை மட்டும்தான் என் கண்ணில் தவறவிடக் கூடாத சிறுகதை.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
- விக்கி குறிப்பு
- பரிந்துரைக்கும் சிறுகதைகள்
- மற்றவை