வாசிப்பதும் வாசித்த புத்தகங்களைப் பற்றி உரையாடுவதும் அன்றாட வாழ்வில் இடம்பிடிக்கத் தொடங்கின. வலைப்பூ பற்றி அறிந்தபோது 2010இல் சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் உதவியுடன் மதுரைவாசகன்.வேர்டுபிரஸ் பக்கத்தில் எழுதத் தொடங்கினேன். இன்று 300க்கும் மேலான கட்டுரைகளை இப்பக்கம் வாயிலாக எழுதியுள்ளேன்.
வாசித்த புத்தகங்களைப் பற்றி பேசவும், உரையாடவும் சமூக ஊடகங்களில் அதைப் பகிர்வதும் அவசியமாகிறது. நண்பர் ரகுநாத் உதவியுடன் மதுரைவாசகன் என்ற வலைப்பூ பக்க பெயரிலேயே யூடியூப் பக்கமும் தொடங்கியுள்ளேன். இந்தப் பக்கத்தில் வாசித்த நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் குறித்து தொடர்ந்து பதிவேற்றும் இலக்கோடு தொடங்கியிருக்கிறேன்.
மதுரைவாசகன் வலைப்பூ பக்கத்தை ஆதரிக்கும் நண்பர்கள் யூடியூப் பக்கத்திற்கும் ஆதரவுதந்து தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் நம் உடல் எனும் மூலதனத்தை நாம் அடகுவைத்துவிட்டோம். அதிகாலை எழும்போது நாம் என்ன குடிப்பது என்று தொடங்கி இரவு கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக உறங்க என்ன செய்வது என்பதுவரை நம் வாழ்க்கையை சந்தைதான் தீர்மானிக்கிறது. இதிலிருந்து முற்றாக நம்மை விடுவித்துக் கொள்ள முடியுமா என்றால் அது சாத்தியமில்லாத விசயம். நம் உடலின் மீது சந்தைக்கு இருக்கிற அக்கறையை நாமும் கொஞ்சம் காட்டினால் பிழைத்துக் கொள்ளலாம்.
போப்பு எழுதிய ‘என் உடல் என் மூலதனம்’ என்ற நூல் நமக்கு பல அடிப்படையான விசயங்களைக் கற்றுத் தருகிறது. நேரத்துக்கு தூங்குவதில்லை, எழுந்திருப்பதுமில்லை. கண்டநேரத்திற்கு சாப்பிடுவது, கண்டதைச் சாப்பிடுவது என நம்முடைய உடலை கவனிக்காமல், அதை படாதபாடுபடுத்தி அலட்சியப்படுத்துகிறோம். போப்பு இந்நூலில் நம் உடலோடு உரையாட வேண்டும் என்கிறார். ஒரு நாளில் அரைமணி நேரம் ஒதுக்கி ஒவ்வொரு உறுப்புகளிடமும் பேச வேண்டும் என்கிறார். காலில் வலி இருக்கிறதா? கையில் வலி இருக்கிறதா? என அதனிடம் கேட்க வேண்டும். அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லாமல் அதைச் செய்வது அவசியம். இவ்வாறு செய்வது நாம் ஆரோக்கியத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் எட்டு என்று சொல்லலாம்.
நாலு கப்புத் தண்ணியத்தூக்கி ஊத்திட்டு அதைக் குளியல் என்று சொல்லி அரக்கப்பரக்க கிளம்பக் கூடாது. மெல்ல நிதானமாக குளிக்க வேண்டும். குளிர்வித்தல் என்ற சொல்லில் இருந்துதான் குளித்தல் என்ற சொல் வந்ததாக தொ.ப. சொல்வார். அதுபோல உடம்பு குளிரக் குளிக்க வேண்டும். நம் உடலில் உள்ள வெப்பம் குறைந்தாலே பெரும்பாலான நோய்கள் நம்மைவிட்டுப் போகும். கொஞ்சூண்டு பாலை எடுத்து உச்சிமுதல் உள்ளங்கால் வரைத் தேய்த்துக் குளிப்பது, பழத்தோலை அரைத்து குளிப்பது, பாசிப்பயறு மாவில் பாதாம் பிசின் அல்லது வேப்பம் பிசினை ஊறவைத்து அரைத்துக் குளிப்பது என பல குளியல் முறைகளைச் சொல்கிறார். நம்முடைய சோப்பில் நிறைய வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன. வாரத்திற்குப் பாதி நாட்களாவது இயற்கையான பொருட்களைக் கொண்டு தேய்த்துக் குளிக்கலாம். அதேபோல பாத் டப்பில் குளிப்பது நல்லது என்கிறார். அப்படி குளிக்க வாய்ப்பில்லாதவர்கள் பயணங்களின் போது அருவி, ஆறு, கடல் போன்ற இடங்களுக்குச் சென்று குளிப்பது நல்லது. உடல் குளிர மனசு குளிரும்.
நடைக்கு மேலான நண்பன் இல்லை என்கிறார் போப்பு. தினசரி நாற்பது நிமிடங்களுக்கு மேல் வெறுங்காலோடு நடப்பது நல்லது. நடக்கும் போது அரட்டையடித்துக் கொண்டு நடப்பது பயன்தராது. நம் உடலோடு உரையாடியபடி நடந்தால் நல்லது. மூன்று வேளையும் சாப்பிடாமல் சில நேரங்களில் ஒருவேளை உணவை சாப்பிடாமல் விடுவது உடல் செரிமானப் பணிகளைச் சிறப்பாக செய்ய உதவும். மேலும், ஒருநாள் உணவாக பழங்களை எடுத்துக் கொள்வது உடலை இலகுவாக்கும்.
குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பதால் உணவுப்பொருட்களின் உயிர்த்தன்மை கெடுகிறது. அதில் காய்கறிகளை வாங்கி அடைந்து வைக்காமல் இரண்டு மூன்று நாட்களுக்கு வாங்கிப்பயன்படுத்தலாம். சளி பிடித்தால் சனி பிடித்தது போல பயப்படத் தேவையில்லை. உடலில் உள்ள கழிவு வெளியேறுகிறது என போதிய ஓய்வெடுத்தாலே போதும். கழிவுகள் வெளியேறாமல் உடனடியாக மாத்திரை போடுவது பின்னாளில் நோய்க்கே வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நம் உடல் எல்லா நோய்களையும் வெல்லும் திறன் கொண்டது. மெடிக்கல் மிராகிள் என்று சொல்லும் வண்ணம் சில சாதனைகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. நாம் நம் உடலோடு கொஞ்சம் உரையாடத் தொடங்கினால் நம் மூலதனத்தை அடகில் இருந்து மீட்கலாம்.
வாசிக்கும்போது நன்றாகயிருக்கிறதே நாளைமுதல் செயல்படுத்திவிடலாம் என்ற எண்ணம் வரும். பிறகு அந்த நாளை என்பது எங்கிருக்கிறது எனத் தெரியாமல் போகும். முதலில் நாம் செய்ய வேண்டியது இக்கணத்திலிருந்தே தொடங்குவதுதான். மிளகாய்க்கு பதில் மிளகு தேர்ந்தெடுப்பது, அவித்த உணவு வகைகள் (இட்லி, இடியாப்பம், புட்டு), பச்சைக்காய்கறிகள், காய்கறி தீநீர், மூலிகைத் தேநீர் என உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவருவதைப் போல, காலை அல்லது மாலை வேளைகளில் காலாற நடப்பது, உடல்குளிரக் குளிப்பது போன்றவற்றை பின்பற்றத் தொடங்கலாம். நம் உடல் நம் மூலதனம்.
கோவில்களுக்குச் செல்லும்போது சுவர்களில் உபயக்கல்வெட்டுகளை பார்த்திருப்போம். பழமையான கோவில்களில் ஆங்காங்கே சில கல்வெட்டுக்களை காணமுடியும். சில மலைகளில் குகைபோன்ற பகுதியின் விளிம்பில் கல்வெட்டுக்களைப் பார்க்கலாம். சில கல்வெட்டுகள் சமகாலத் தமிழ் எழுத்துகளைப் போல இருக்கும், சில வட்டவடிவில் இருக்கும், சில குச்சிகுச்சியாக ஆங்கில எழுத்தைத் திருப்பிப் போட்டதுபோல இருக்கும். இந்தக் கல்வெட்டுக்களை எல்லாம் எப்படி வாசிப்பது? இவையெல்லாம் தமிழா? அப்படியென்றால் அவற்றை எவ்வாறு வாசிக்க வேண்டுமென்ற சந்தேகம் நம்முள் எழும்.
இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழ் கல்வெட்டுகளே! கல்வெட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்று ஏற்பட்டுள்ள சூழலில் கல்வெட்டுக்கலையை நாம் கற்றுக்கொள்வது அவசியம். பசுமைநடை பயணங்கள் வழியாக தமிழிக் கல்வெட்டுகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் எடுத்துரைக்க நேரடியாய் கேட்கும் நல்வாய்ப்பும் கிட்டியது.
கல்வெட்டுக்கலை பற்றி அறிய விரும்புபவர்களுக்காக எழுத்துருவாக்கம், குறியீடுகள், தமிழி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து, கிரந்த எழுத்து, மெய்கீர்த்திகள், கல்வெட்டுகளில் காலக்கணக்கீடு, கல்வெட்டு வழிகாட்டிகள், நடுகற்கள்-நினைவுக்கற்கள், நீர்நிலைகளில் கல்வெட்டுக்கள், திருக்கோயில் திருப்பணிக் கல்வெட்டுகள், பெருவழிகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் என கிட்டத்தட்ட 50 தலைப்புகளில் விரிவாக எளிமையாக எழுதியுள்ளனர்.
வைகைக் கரைக் கல்வெட்டு என்ற கட்டுரையில் குருவிக்காரன் சாலைப் பாலமருகில் வைகையில் கிடைத்த பாண்டிய மன்னன் அரிகேசரியின் கல்வெட்டை வாசித்து அதைக்குறித்து விரிவாக எழுதியுள்ளனர். குருவித்துறைக்கருகில் வைகையாற்றில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் கல்லணை குறித்த செய்திகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டு தற்போது மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பார்வைக்கு உள்ளது. இக்கட்டுரையை வாசிக்கையில் பாண்டியரின் நீர் மேலாண்மையை அறிந்துகொள்ள முடிகிறது.
புலிமான்கோம்பை, தாதப்பட்டி நடுகற்கள் குறித்த கட்டுரையை வாசித்து அதை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஏனெனில், தமிழிக் கல்வெட்டுகள் எல்லாம் மலைப்பகுதிகளில் மட்டுமே இருந்ததால் வடக்கிலிருந்து எழுத்து சமணமுனிவர்கள் வழியாக வந்ததாக கூறப்பட்ட சூழலில் இந்த நடுகற்கள் அந்த முடிவை மாற்றி அமைத்தது. இப்போது அந்த நடுகற்களைக் கீழடி அருங்காட்சியகத்தில் காண முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. கீழடி பானையோடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் தமிழ்நாட்டில் சமணர்கள் வருவதற்கு முன்பே எழுத்தறிவு இருந்தது என்பதை உறுதி செய்துவிட்டது.
இன்றிருக்கும் தேசிய நெடுஞ்சாலைப்போல அந்தக் காலத்திலிருந்த பெருவழிகளைப் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கின்றனர். இராஜகேசரிப் பெருவழி, அதியமான் பெருவழி, மகதேசன் பெருவழி, கொங்குப் பெருவழி எனப் பல பெருவழிகள் இருந்திருக்கின்றன. அதில் அதியமான் பெருவழி குறித்த கல்வெட்டு ஒன்றில் எத்தனை காத தூரம் என்பதை தமிழ் எழுத்தோடு குறிப்பிட்டிருப்பதை சிறப்பாகச் சொல்லலாம். காதம் என்பது இன்றைய அளவில் 6.706 கிலோ மீட்டர் தூரம். சிலப்பதிகாரம் பூம்புகார் மற்றும் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்ல பெருவழி இருந்ததை குறிப்பிடுகிறது.
கல்வெட்டை பிரதியெடுக்கும் முறை பற்றி இந்நூலில் மிகவும் அருமையாக விளக்கியுள்ளனர். ஒருமுறை பசுமை நடைப் பயணமாக மாடக்குளம் சென்றபோது அந்தக் கண்மாயில் கிடைத்த சித்திரமேழி கல்வெட்டை படியெடுத்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வாசித்துக் காட்ட அதை அருகிருந்து காணும் வாய்ப்பும் கிட்டியது. நூலின் பின்பகுதியில் படியெடுப்பதற்கான கருவிகளின் படங்களை இணைத்திருக்கின்றனர். அதுபோல பாறை ஓவியங்கள், சிந்துவெளி முத்திரைகள், தமிழி எழுத்துக்கள், சங்க சேரர் காசுகள், நடுகற்கள், வல்லம் குடைவரைக் கல்வெட்டு, பிள்ளையார்பட்டி வட்டெழுத்து, கிரந்த செப்பேடு, தமிழ்ச் செப்பேடு என வண்ணப்படங்களை நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.
கல்வெட்டுக்கலை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். இந்நூலை வாசிப்பதன் வழியாக தொல்லியல் மீதான ஆர்வம் ஏற்படும். நூலறிஞர்கள் இருவரிடமும் தமிழி – வட்டெழுத்துப் பயிற்சி கற்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு கிட்டிய வரம். தமிழி எழுத்துருவில் எழுதுவதைவிட வட்டெழுத்து கொஞ்சம் கடினம். சொ.சாந்தலிங்கம் அவர்களுடன் பசுமைநடைப் பயணங்களில் தொடர்ந்து பயணித்திருக்கிறேன். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் வழியாக இந்நூல் 2013இல் கல்லூரி மாணவர்கள் கல்வெட்டுக்கலை பற்றி அறிவதற்காக வெளியிடப்பட்டது. இந்நூலாசிரியர்கள் இருவரும் இத்துறையில் ஆழங்கால்பட்டவர்கள். அதேசமயம் புதிதாக வாசிப்பவர் மற்றவர்களுக்கு கல்வெட்டுக்கலைப் பற்றி எடுத்துரைக்கும் அளவிற்கு எளிமையாக எழுதியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்விக்கான விதை துளிர்க்கத் தொடங்கியபோது அதை நீருற்றிச் செழிக்கச் செய்தவர்களில் கேட்டிவில்காக்ஸ் அம்மையாரும் ஒருவர். அவர் தன் வாழ்வின் சரிபாதி நாட்களை மதுரையில் பெண்கல்விக்காகத் தியாகம் செய்தவர். மதுரையில் ஓ.சி.பி.எம் பெண்கள் பள்ளி, நாய்ஸ் ஆங்கில வழிப்பள்ளி, டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை உருவாக்கி பெண்கல்வி மேம்பாட்டிற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தவர். மதுரையின் பெண்கல்வி வரலாற்றை எழுதும்போது பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர்களில் கேட்டி வில்காக்ஸூம் ஒருவர்.
கேட்டி வில்காக்ஸ் குறித்து விக்கிப்பீடியாவில் 2015இல் எழுதியபோது விரிவாக எழுத வேண்டுமென்ற தூண்டல் ஒரு கதையாக உருவானது. தற்செயலாக இந்தக் கதை கேட்டி வில்காக்ஸ் மதுரைக்கு வந்த நூறாவது ஆண்டில் எழுதப்பட்ட கதையாக அமைந்தது. 2019இல் முன்னாள் இயற்பியல் துறைத் தலைவர் ஆர். ஆண்டாள் அவர்கள் காலமான போது அவருடைய தொடக்ககால படங்களை ஜே.எக்ஸ்.மில்லர் நூலகத்திலிருக்கும் ஆவணக் காப்பகத்தில் தேடியபோது கேட்டி வில்காக்ஸ் அம்மையாரின் படங்களும் அவர் மறைந்தபோது நாளிதழ்களில் வந்த செய்தியும் பார்க்கக் கிட்டியது. அப்போதே அவரைக் குறித்து நூல் ஒன்றை எழுத வேண்டுமென நினைத்தேன்.
கேட்டி வில்காக்ஸ் அம்மையார் குறித்து நான் எழுதிய கட்டுரையும் கதையும் அடங்கிய குறுநூல் “கேட்டி வில்காக்ஸ்: மேற்கிலிருந்து வந்த செம்பரிதி” டோக் பெருமாட்டி கல்லூரியில் கேட்டி வில்காக்ஸ் பிறந்த நாளான ஜூலை 26 2024 அன்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
கல்லூரி முதல்வர் இரா. பியூலா ஜெயஸ்ரீ வெளியிட சிறப்பு விருந்தினர் ஆனந்த பாரதி முத்துக்கிருஷ்ணன் & இயற்பியல் துறை முன்னாள் துறைத்தலைவர் ம. பிரிஜெட் மேரி பெற்றுக்கொண்டனர். துணை முதல்வர் ரா. நிம்மா எலிசபெத், நிதி காப்பாளர் பி. வனிதா மலர்விழி, மாணவ நலனாளர்கள் ஆரோக்கிய சியாமளா பனியரசி, மௌனா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நூல் வெளிவர உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் ஆயிரமாயிரம் நன்றி.
திரைப்படப்பாடல்களை ஒரு காலச்சக்கரம், அருமருந்து, உணர்வூட்டி எனப் பலவாறு சொல்லலாம். அப்படி ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு ரசித்து அதை சிலாகித்து மானசீகன் எழுதிய கட்டுரைகளே இசை சூஃபி நூல். முகநூலில் மானசீகன் ரஹ்மான் பாடல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோதே இந்நூலை வாங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழினியில் வாங்க முடிந்தது.
மானசீகன் ஒரு பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர். அதோடு சுவாரசியமான எழுதுபவர். ரஹ்மான் ரசிகர் என்பதோடு அவர் கமல் ரசிகரும்கூட. அவரது எழுத்துக்களை முகநூலில் விரும்பிவாசிப்பேன். உளவியல் ரீதியாக எளிமையாக நிறைய விசயங்களை எழுதுவார்.
இசையில் ரஹ்மானின் பரிசோதனை முயற்சிகள், பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம், புல்லாங்குழல், தப்ஸ் அல்லது தாயிரா போன்ற கருவிகளை பாடல்களில் பயன்படுத்திய விதம், புதிய பாடகர்களை அறிமுகம் செய்தது எனப் பல விசயங்களை இக்கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறார். “ரஹ்மானின் பாடல்களை கேட்கக் கேட்க பிடிக்கும் என்பது பொய்; கேட்ட உடனேயே பிடிக்கும்; கேட்க கேட்க புரியும்; இதுவே உண்மை” என்கிறார் மானசீகன்.
இந்தியன், பம்பாய், முத்து, காதல் தேசம், இந்திரா, மெட்ராஸ் போன்ற படங்களிலுள்ள பெரும்பாலான பாடல்களைக் குறித்து எழுதியிருக்கிறார். உயிரே படப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லையே என்றொரு வருத்தமும் உள்ளது. ரஹ்மான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை உயிரே படப்பாடல்கள்தான்.
ஊரடங்கு காலத்தில் இரண்டு பாடல்களைத்தான் பலமுறை கேட்டேன். ஒன்று மரியான் படத்திலுள்ள “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?” என்ற ரஹ்மான் இசையில் வந்த பாடலும், மற்றொன்று விஸ்வாசம் படத்திலுள்ள “வானே வானே” என்ற இமான் இசையில் வந்த பாடலும்தான். இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களே மேடையில் பாடியதைப் பலமுறைப் பார்த்தேன். பம்பரம் சுழலும்போது “ரொங்குது பார்” எனச் சொல்வார்கள். அப்படித்தான் இந்தப் பாடல்கள் என்னை ரொங்க வைத்தன.
மானசீகனின் எழுத்துக்களில் நமக்குப் பிடித்த பாடல்கள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது அந்தப் படங்களைப் பார்த்த நாட்களுக்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. மாயா மச்சீந்தரா பாடலை பற்றி வாசிக்கையில் கைகளும் கால்களும் “டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ” என மெல்ல அசைந்தன. கண்ணாளனே பற்றி வாசிக்கும்போது திருமலை மன்னர் அரண்மனையில் நானும் ஓரிடத்தில் நின்று அந்தப் பாடலைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
அஞ்சலி அஞ்சலி என்ற டூயட் பாடலில் பிரபு கதாநாயகி வந்ததும் சாக்சபோனை வாசிக்கும்போது அந்த இசையும் அவரது முகபாவனைகளும் மிகவும் பிடிக்கும். அந்த நினைவுகளைக் கிளறியது மானசீகனின் எழுத்து. முத்து படத்தில் ரஜினிக்கு இசையமைத்தது, சுகாசினி எடுத்த இந்திரா படத்திற்கு இசையமைத்தது, கதிரின் காதல் தேசம் படத்திற்கு இசையமைத்தது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ரஹ்மானின் இசை படத்திற்கு எவ்வளவு உயிர் கொடுத்திருக்கிறது என்பதை அக்கட்டுரைகளை வாசிக்கையில் அறியலாம். இந்த நூலை வாசித்ததும் ஒரு நாட்குறிப்பேட்டில் எனக்குப் பிடித்த பாடல்களைக் குறித்து விரிவாக எழுதிவைக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.
யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பான ஏமாறும் கலையை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இந்தாண்டு (2024) தொடக்கமாக வாசிக்க எடுத்தேன். கதைகதையாம் காரணமாம் தொடங்கி மூன்று கதைகள் வாசித்தேன். அவரின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று ஏமாறும் கலை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் வாசித்தேன்.
யுவன் சந்திரசேகர் தன் கதையுலகிற்குள் வாசிப்பவரையும் அழைத்துச் செல்கிறார். அவர் கரட்டுப்பட்டியில் கதை நடக்கிறது என்றால் நாம் கரட்டுப்பட்டி தெருவில் நிற்கிறோம், வங்கியில் நடப்பதுபோல எழுதினால் நாம் பணமெடுப்பவராய் வரிசையில் நிற்கிறோம், இந்துஸ்தானி இசையை மையம் கொண்ட கதையென்றால் நாமும் பின்வரிசையில் நின்று புல்லாங்குழலிசை கேட்கிறோம். அவர் ஒரு கதையில் ஒரு கதையை மட்டும் சொல்வதில்லை. பல கதைகளைச் சொல்கிறார். மேலும், அந்தக் கதையில் வரும் எல்லோரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார். சில கதாபாத்திரங்களை நாமும் வழியில் சந்தித்திருப்போம்.
யுவன் சந்திரசேகர் கதை சொல்வதைப்போல எங்கப்பா என்னிடம் கதை சொல்லியிருக்கிறார். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும் மதுரையிலிருந்து புறப்பட்டு போய் திரும்பிவந்தது வரை கதையாய் என்னிடம் சொல்லிய நாட்கள் நினைவில் எழுகிறது. எத்தனையெத்தனை மனிதர்கள். ஏமாறும் கதை தொகுப்பிலுள்ள 12 கதைகளும் ஏதோ ஒருவகையில் யாரோ ஒருவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. சில கதையில் வரும் முக்கிய மாந்தர்களின் மரணமோ, தற்கொலையோ அது நம்மையும் உலுக்கி எடுக்கிறது.
ஒருவர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தபின் தெரியாததுபோல் நாமும் நடிப்பதுதான் ஏமாறும் கலை. வங்கிக்கு பணமெடுக்க வரும் பெண் ஒருவர் தன் கணவரின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது; அவரால் நடக்க முடியாதெனப் பொய் சொல்லி ஒவ்வொருமுறையும் வந்ததும் பணமெடுத்து சென்றுவிடுவார். பின்னாளில் ஒரு விசேச வீட்டில் அப்பெண் அவள் கணவனுடன் சேர்ந்து நிற்பதை பார்த்து நொந்துவிடுவார் கதைசொல்லி. உடன் பணியாற்றுபவர் அதைத் தெரியாததுபோல் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். அதுதான் ஏமாறும் கலை.
ஊரில் இறந்தவர் குரலில் குறிசொல்லும் பெண்ணின் கதையை வாசிக்கையில் எங்க ஊரில் முன்பு இறந்தவர்கள் பேய் பிடித்ததாகச் சொல்லி அவர்களைப் போல் பேசிய கதைகளை நிறைய கேட்டிருக்கிறேன். மனம்புகுதல் என்ற கதை இதைப்பற்றி பேசுகிறது. கரட்டுப்பட்டியில் நடக்கும் இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள் முப்பது வயதிற்கு மேலானவராய் இருந்தால் இதுபோன்றதொரு கதை உங்களிடமும் இருக்கும்.
ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் காதலை அறிந்த குடும்பம் அவளது சோற்றில் விசம் வைத்துக் கொள்கிறது. ஆணவக்கொலையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் பானு பன்னீர்செல்வம் மீது கொண்ட காதலால் இறந்துபோகிறாள். முடிவற்று நீளும் கோடை எனும் இக்கதை மறக்க முடியாத ஒரு தம்பியின் பார்வையில் நகர்கிறது.
திருமணம் செய்துகொள்ளாமல் கால்போன போக்கில் பயணிப்பவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும். தங்கையா என்ற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த கதைகளும் மூன்று முத்தங்களும்தான் மூன்றாவது முத்தம் கதை. ரயில்வே போர்ட்டராக தங்கையா இருக்கையில் என்ஜின் டிரைவராக வரும் லால் சொல்லும் கதை சுவாரசியம்.
தன்னோடு வங்கியில் உடன் பணியாற்றிய ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனிடம் தன் தாய் பற்றி பகிர்ந்து கொள்ளும் கதை தாய்மை யாதெனில். மகனுக்காக வாழும் அம்மா பக்கத்துவீட்டில் திருமணமாகி சண்டையிட்டு வந்த ஜம்னாவுடன் பேசும் மகனின் மீது சந்தேகம் கொள்வது அவளது அன்பென்கிறது கதை.
ஒவ்வொரு கதையாய் கதையில் வரும் மாந்தர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்தத் தொகுப்பை நீங்கள் வாசிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறுதான் இல்லையா? கவிஞர் சுகுமாரன் யுவனின் கதைகள் குறித்து சொல்லும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன். “தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப்பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதிநவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. யுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்லை. கதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார்.”
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்; நன்றி – கலைஞர் நூற்றாண்டு நூலகம்