ஜெயமோகனுக்கு நன்றி!
மதுரையைப் பூர்வீகமாக கொண்ட வாசகர் ஒருவர் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்களை பரிந்துரைக்கச் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் தனது தளத்தில் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார். ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சாம்ராஜின் கொடைமடம், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் , எஸ். அர்ஷியாவின் பொய்கைக்கரைப்பட்டி, ஏழரைப்பங்காளி வகையறா நாவல்களை குறிப்பிட்டிருப்பதோடு நரசய்யாவின் ஆலவாய் கட்டுரை நூலையும் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியில் மதுரையைக் குறித்து எழுதிவரும் என்னைக் குறித்து எழுதியுள்ள வரிகள் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தன.
சித்திரவீதிக்காரன் என்பவர் ஓர் இணையப்பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். மதுரை பற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு பிடிக்கும் எழுத்து. மதுரை பற்றிய தகவல்கள், வாசிப்புக்குறிப்புகள் என்று விரிவாக எழுதிக்கொண்டே இருக்கிறார்.
ஜெயமோகன் எழுதிய கொற்றவை, விஷ்ணுபுரம், காடு, வெள்ளையானை போன்ற நாவல்களை வாசித்திருக்கிறேன். அவரது கொற்றவை எனக்கு மிகவும் பிடித்த நாவல். வெள்ளையானை நாவல், மத்தகம் குறுநாவல் குறித்து பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா குறித்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
யுவன் சந்திரசேகர் நூல் குறித்த எனது பதிவுகள், வெள்ளை யானை நாவல் குறித்த எனது பதிவுகளின் இணைப்புகளை அவரது தளத்தில் முன்னரே கொடுத்திருக்கிறார். தமிழ் விக்கியில் சில கட்டுரைகளிலும் சில பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையின் சித்திரம் என்ற அவரது இந்தப் பதிவு பெருங்கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறது. ஜெயமோகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
