Reading view

ஜெயமோகனுக்கு நன்றி!

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட வாசகர் ஒருவர் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்களை பரிந்துரைக்கச் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் தனது தளத்தில் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார். ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சாம்ராஜின் கொடைமடம், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் , எஸ். அர்ஷியாவின் பொய்கைக்கரைப்பட்டி, ஏழரைப்பங்காளி வகையறா நாவல்களை குறிப்பிட்டிருப்பதோடு நரசய்யாவின் ஆலவாய் கட்டுரை நூலையும் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியில் மதுரையைக் குறித்து எழுதிவரும் என்னைக் குறித்து எழுதியுள்ள வரிகள் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தன.

சித்திரவீதிக்காரன் என்பவர் ஓர் இணையப்பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். மதுரை பற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு பிடிக்கும் எழுத்து. மதுரை பற்றிய தகவல்கள், வாசிப்புக்குறிப்புகள் என்று விரிவாக எழுதிக்கொண்டே இருக்கிறார். 

ஜெயமோகன் எழுதிய கொற்றவை, விஷ்ணுபுரம், காடு, வெள்ளையானை போன்ற நாவல்களை வாசித்திருக்கிறேன். அவரது கொற்றவை எனக்கு மிகவும் பிடித்த நாவல். வெள்ளையானை நாவல், மத்தகம் குறுநாவல் குறித்து பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா குறித்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

யுவன் சந்திரசேகர் நூல் குறித்த எனது பதிவுகள், வெள்ளை யானை நாவல் குறித்த எனது பதிவுகளின் இணைப்புகளை அவரது தளத்தில் முன்னரே கொடுத்திருக்கிறார். தமிழ் விக்கியில் சில கட்டுரைகளிலும் சில பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையின் சித்திரம் என்ற அவரது இந்தப் பதிவு பெருங்கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறது. ஜெயமோகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

  •  

இசை சூஃபி: ஏ.ஆர்.ரஹ்மான் – மானசீகன்

திரைப்படப்பாடல்களை ஒரு காலச்சக்கரம், அருமருந்து, உணர்வூட்டி எனப் பலவாறு சொல்லலாம். அப்படி ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு ரசித்து அதை சிலாகித்து மானசீகன் எழுதிய கட்டுரைகளே இசை சூஃபி நூல். முகநூலில் மானசீகன் ரஹ்மான் பாடல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோதே இந்நூலை வாங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழினியில் வாங்க முடிந்தது.

மானசீகன் ஒரு பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர். அதோடு சுவாரசியமான எழுதுபவர். ரஹ்மான் ரசிகர் என்பதோடு அவர் கமல் ரசிகரும்கூட. அவரது எழுத்துக்களை முகநூலில் விரும்பிவாசிப்பேன். உளவியல் ரீதியாக எளிமையாக நிறைய விசயங்களை எழுதுவார்.

இசையில் ரஹ்மானின் பரிசோதனை முயற்சிகள், பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம், புல்லாங்குழல், தப்ஸ் அல்லது தாயிரா போன்ற கருவிகளை பாடல்களில் பயன்படுத்திய விதம், புதிய பாடகர்களை அறிமுகம் செய்தது எனப் பல விசயங்களை இக்கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறார். “ரஹ்மானின் பாடல்களை கேட்கக் கேட்க பிடிக்கும் என்பது பொய்; கேட்ட உடனேயே பிடிக்கும்; கேட்க கேட்க புரியும்; இதுவே உண்மை” என்கிறார் மானசீகன்.

இந்தியன், பம்பாய், முத்து, காதல் தேசம், இந்திரா, மெட்ராஸ் போன்ற படங்களிலுள்ள பெரும்பாலான பாடல்களைக் குறித்து எழுதியிருக்கிறார். உயிரே படப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லையே என்றொரு வருத்தமும் உள்ளது. ரஹ்மான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை உயிரே படப்பாடல்கள்தான்.

ஊரடங்கு காலத்தில் இரண்டு பாடல்களைத்தான் பலமுறை கேட்டேன். ஒன்று மரியான் படத்திலுள்ள “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?” என்ற ரஹ்மான் இசையில் வந்த பாடலும், மற்றொன்று விஸ்வாசம் படத்திலுள்ள “வானே வானே” என்ற இமான் இசையில் வந்த பாடலும்தான். இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களே மேடையில் பாடியதைப் பலமுறைப் பார்த்தேன். பம்பரம் சுழலும்போது “ரொங்குது பார்” எனச் சொல்வார்கள். அப்படித்தான் இந்தப் பாடல்கள் என்னை ரொங்க வைத்தன.

மானசீகனின் எழுத்துக்களில் நமக்குப் பிடித்த பாடல்கள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது அந்தப் படங்களைப் பார்த்த நாட்களுக்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. மாயா மச்சீந்தரா பாடலை பற்றி வாசிக்கையில் கைகளும் கால்களும் “டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ” என மெல்ல அசைந்தன. கண்ணாளனே பற்றி வாசிக்கும்போது திருமலை மன்னர் அரண்மனையில் நானும் ஓரிடத்தில் நின்று அந்தப் பாடலைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

அஞ்சலி அஞ்சலி என்ற டூயட் பாடலில் பிரபு கதாநாயகி வந்ததும் சாக்சபோனை வாசிக்கும்போது அந்த இசையும் அவரது முகபாவனைகளும் மிகவும் பிடிக்கும். அந்த நினைவுகளைக் கிளறியது மானசீகனின் எழுத்து. முத்து படத்தில் ரஜினிக்கு இசையமைத்தது, சுகாசினி எடுத்த இந்திரா படத்திற்கு இசையமைத்தது, கதிரின் காதல் தேசம் படத்திற்கு இசையமைத்தது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ரஹ்மானின் இசை படத்திற்கு எவ்வளவு உயிர் கொடுத்திருக்கிறது என்பதை அக்கட்டுரைகளை வாசிக்கையில் அறியலாம். இந்த நூலை வாசித்ததும் ஒரு நாட்குறிப்பேட்டில் எனக்குப் பிடித்த பாடல்களைக் குறித்து விரிவாக எழுதிவைக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.

  •