கடைக்குட்டி|சிறுகதை|முனைவர் சு.சோமசுந்தரி
காலை வெயில் தலையில் சுள்ளென்று விழும் பொழுதில் அக்காக்குருவிகளின் அக்கூவ் என்ற சத்தம் காதுகளில் ரீங்காரமிட்டது. கார்த்திக் சன்னமான கோபத்துடன் அம்மாவிடம் கத்திக்கொண்டிருந்தான்.
“ஏம்மா என்னம்மா சமையல் பண்ணியிருக்க. சாம்பாருக்குப் போய் தொட்டுக்க கூட்டு வச்சிருக்க. இத யாரு தின்பா? நாய் கூடத் திங்காது இந்தச் சோத்த. எத்தனை தடவ சொல்லிருக்கேன் நான். சாம்பார் வச்சா பொறியல் ஏதாவது வையின்னு”
“டேய் இருக்கத தானடா வைக்கமுடியும். துரை அப்படியே சம்பாத்தியம் பண்ணி போட்டு முடிச்சிட்ட. உனக்கு வகைவகையாய் வச்சுக்குடுக்கணும் பாரு. பொங்குனது தின்னுடா”
“எனக்கு ஒண்ணும் வேணாம். நீயே கொட்டிக்க” என்று மூஞ்சியை வலித்துவிட்டுச் சென்ற கார்த்திக்குக்கு வயது இருபதாகிறது. இளங்கன்று பயமறியாது என்று பெரியவர்கள் சொல்லுவதற்கேற்ப பர்வதம் அம்மாளுக்கு மத்த எல்லாப்பிள்ளைகளையும் சமாளித்து விடுவாள். ஆனால் இந்தக் கார்த்தியைச் சமாளிப்பது பெரும்பாடுதான். அவன் இஷ்டத்துக்குச் சமைக்கவேண்டும், கேட்கும்போது காசு கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கோபத்தில் வீட்டிலிலுள்ள பொருள்களைப் போட்டு உடைப்பான். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து, அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு,
“அம்மா சாரிம்மா. நீ ஏன் எனக்குப் பிடிச்சதைச் சமைக்கமாட்டேன்கிற. சமைச்சிருந்தா நான் சாப்பிட்டுருப்பேல்ல”
என்று அம்மாவைச் சமாதானப்படுத்திக் கொஞ்சுவான். அவளும் உச்சிகுளிர்ந்து போவாள். அவன் செய்த சேட்டைகள் மறந்துபோகும். அவளும்,
“என் ராசா. நாளைக்கு நீ கேட்டதையே சமைக்கிறேன்டா” என்று பதிலுக்குக் கொஞ்சவும், அதைப் பார்த்த அவன் தங்கை வான்மதிக்கு எரியும்.
“அவன் என்ன பண்ணாலும். ஒன்னும் சொல்லாத. என்னைய மட்டும் திட்டு. ஒரு நாளைக்குப் பெரிசா ஏதாவது பண்ணிட்டு வந்து நிப்பான். அப்ப பாக்குறேன். என்ன பண்றன்னு” என்று திட்டுவாள். அம்மாவும் மகனும் அதைக் கண்டுகொள்வதே இல்லை.
“போடி பெரிய இவ பாரு. பொறாமை புடிச்சவ” என்று திட்டுவான்.
இப்படித்தான் கார்த்திக்கும் அவன் அம்மாவுக்குமான கொஞ்சல்கள் தொடர்கதையாகிப் போயின. மற்ற இவனது அண்ணன்களுக்கும் தங்கைக்கும் இவர்களது குணம் தெரிந்து கண்டுகொள்ளமாட்டார்கள். இவன் சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும் தொடர்கதையாகிப் போனது. கார்த்திக் மற்ற பிள்ளைகளை விட புத்திசாலி. ஆனால் படிக்கவைக்க சரியான வசதியில்லை. இருந்தும் டிப்ளமோ சேர்ந்து தொழில்கல்வியைக் கற்றிருந்தான். தனது தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு நிறைய நண்பர்களும் இருந்தனர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் போய் நிற்பான். இதனால் எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். ஆண், பெண் பாகுபாடின்றி அக்கா, தங்கையாக பழகுவான். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் நினைத்ததைச் சாதிக்க நினைப்பான். அது சரியான விசயமாகத்தான் இருக்கும். அந்தப் பிடிவாதம்தான் எல்லா முயற்சியிலும் வெற்றி பெறவும் வைத்தது. வீட்டின் கடைக்குட்டியாக இருந்ததால் அம்மாவுக்கு கார்த்திக் என்றால் உயிர்தான். எவ்வளவு சண்டை போட்டாலும் அம்மாவைச் சமாதானம் பண்ணி அவள் கையாலேயே சோறு ஊட்ட வைத்துவிடுவான். மற்றவர்கள் செய்கின்ற சேட்டைகளை மன்னிக்காத அம்மா, இவன் என்ன செய்தாலும் சமாதானமாகிக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள். ஏனென்றால் கார்த்திக் மீது அம்மாவுக்குக் கொள்ளை பிரியம்.
ஒரு நாள் அதிகாலையிலேயே கார்த்திக்கின் நண்பன் வீட்டிற்கு வந்தான்.
“டேய் கார்த்திக் அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலடா. உன் கையில காசு இருக்குமா? இல்ல யார்கிட்டயாவது வாங்கித்தர முடியுமா? என்றான். உடனே பதறிப்போன கார்த்திக்,
“இருடா. பார்க்கிறேன்” என்று வீட்டிற்குள் சென்றவன்,
“அம்மா ஏதாவது காசு வச்சுருக்கியா. சுரேஷ் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையாம். பாவம்மா” என்றவனிடம்,
“என் கிட்ட ஏதுடா காசு. போய் உன் அண்ணன்கள்ட்ட கேளு” என்றாள்.
உள்ளே சென்று அண்ணனிடம் கெஞ்சிக்கூத்தாடி அவனிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைப் பிடுங்கி தனது நண்பனிடம் கொடுத்து அனுப்பினான். இந்த உதவும் குணத்துக்காகவே கார்த்திக்கைக் கொண்டாடுவார்கள் நண்பர்கள். ஆறு மாதத்திற்குப் பின் தீவிரமான முயற்சியில் கார்த்திக்கு நல்ல வேலையொன்று சென்னையில் அமைந்தது. அம்மாவையும் நண்பர்களையும் பிரிந்து சென்னைக்கு சென்றான். கைநிறைய சம்பளத்துடன் அந்த வேலையும் கார்த்திக்குப் பிடித்துப்போனது. முதல் மாத சம்பளத்திலேயே அம்மாவுக்கு டிரெஸ், அண்ணன் குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் என வாங்கிக் கொண்டுபோய் பார்த்துவிட்டு வந்தான். அம்மாவுக்கு மனம் மகிழ்ந்தாலும் கார்த்திக்கை பிரிந்திருப்பது மிகுந்த வேதனையைத் தந்தது. இரண்டு ஆண்டுகளில் பர்வதம் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள். கார்த்திக்கிற்கு அம்மாவின் இறப்பு மிகுந்த வேதனையைத் தந்தது. அதிலிருந்து மீண்டுவரவே ஒரு வருடம் ஆனது. கார்த்திக்கு திருமணம் செய்யவேண்டும் என அண்ணன்கள் முடிவுசெய்தனர். அவன் பெரியப்பா மகள் ஜெயசுதா அக்காவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கார்த்திக்கு அவள் பார்ப்பது பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான்.
மறுவாரமே ஒரு வரன் அமைந்திருப்பதாகவும் பொண்ணு பார்க்க கார்த்திக்கை வரச்சொல்லி போன் செய்தார்கள். கார்த்திக் கருப்பு நிறம்தான் என்றாலும் களையான முகத்தை உடையவன். பெண்ணைப் போய் பார்த்த கார்த்திக்கிற்கு பெண்ணைப் பிடிக்கவில்லை. அதைத் தனது அக்காவிடம் கூறினான். பெண் மிகச்சுமாராக இருந்தாள். அவளுக்கு மூன்று தங்கைகள் வேறு.
“பெண் சுமாராக இருந்தாலும் நல்ல குடும்பம்டா. பெண்ணுக்கு என்ன குறைச்சல்? நீயும் கறுப்பாகத்தானே இருக்கிறாய்?” என மட்டம் தட்டினாள் ஜெயசுதா அக்கா.
கார்த்திக்கிற்கு என்னதான் இருந்தாலும் தன் தாய் உயிரோடு இருந்திருந்தாலோ, தனது உடன்பிறப்புகள் என்றாலோ தனது எண்ணங்களுக்கு மதிப்பளித்திருப்பர். இவள் அடுத்தவள்தானே? அதனால்தான் தனது கருத்தையே வலியுறுத்துகிறாள் என்று எண்ணினான். எனவே,
“அக்கா இப்போதைக்கு எனக்குத் திருமணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்கா” என்றான்.
“சரி நீ ஊருக்குப் போ. பார்ப்போம்” என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஜெயா. இருப்பினும் கொஞ்ச நாள் கழித்து இவனிடம் பேசிப்பார்ப்போம் என மனதில் எண்ணிக் கொண்டாள். அவள் ஒன்று நினைத்தால் அதை நடத்திக்காட்டவேண்டும் என்ற பிடிவாதம் அவளிடம் உண்டு.
கார்த்திக்கின் வீட்டிலோ அம்மா இறந்தபிறகு அவனைப் பற்றிக் கவலைப்பட ஆளில்லாமல் போனது. அண்ணன்களுக்கு அவர்கள் குடும்பமும் தங்கைக்கு அவள் குடும்பம் பற்றியே சிந்திக்கவும் நேரம் போதவில்லை. இதில் அவன் விருப்பமறிந்து செயல்படுவதற்கு ஏது நேரம் என நினைத்துக் கொண்டனர். அவன் பெண்ணைப் பிடிக்கவில்லை எனச் சொன்னபோது,
“வேறு பெண் அமையுதா என்று பார்ப்போம்டா” என்று சொன்னதோடு அண்ணன் தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணினார். ஆறு மாத காலத்திற்குப் பின் ஜெயசுதா அக்கா ஏற்கனவே பார்த்த சுப்புலட்சுமியை முடிப்போம் எனச் சொன்னபோது, கார்த்திக் வேண்டாம் எனத் தடுத்தும் அண்ணன்,
“வயது ஏறிக்கொண்டே போகுதடா. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்ப. எங்க கடமைய நாங்க முடிக்கணுமில்ல. அம்மாவும் உயிரோடு இல்ல” என்றார். வேறு வழியில்லாமல் அண்ணனின் பேச்சுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல நாளில் சுப்புலட்சுமியைக் கரம்பிடித்தான் கார்த்திக். உறவுகளை விட ஏராளமான நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டான் கார்த்திக்.
அவன் ஆரம்ப காலத் திருமணவாழ்க்கை கொஞ்சம் சிரமப்படாமல் கழிந்தது. சுப்புலட்சுமியின் குடும்பத்தாரும் அவனிடம் பாசமாகவே இருந்தனர். ஆனால் சுப்புலட்சுமியின் குணம்தான் அவனுக்குப் பிடிபடாமல் போனது. திருமணத்திற்குப் பின் கார்த்திக் தனது அண்ணன்களுக்கோ, அவர்கள் பிள்ளைகளுக்கோ எதுவும் செய்யவிடாமல் சண்டைபோட்டாள். தனது நண்பர்கள் யாருக்கேனும் பணஉதவி செய்தாலும் அன்று சண்டைதான். நாளுக்கு நாள் சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைபோடும் சுப்புலட்சுமியின் போக்கு கார்த்திக்கிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் நிமிடத்துக்கு ஒரு சண்டை. என்னடா வாழ்க்கை இது என வெறுத்துப்போனான் கார்த்திக். இதற்கிடையில் ஓராண்டில் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையின் மீதிருந்த பாசத்தாலும் சுப்புலட்சுமிக்குக் கீழ் மூன்று தங்கைகள் இருந்ததாலும் அவளைப் பெற்றவர்கள் வீட்டிற்கு அனுப்பவும் இயலாது போராடித் தோற்றான் கார்த்திக். நாளுக்கு நாள் சுப்புலட்சுமியின் பிடிவாதம் வலுத்துக் கொண்டே போனது.
அவனுக்குச் சோறு போட்ட அண்ணிகள் கூட,“ என்ன கொழுந்தனாரே ஒரு நாள்கூட உங்கள் வீட்டிற்குக் கூப்பிடமாட்டீங்களா?” என்று கேட்கும்போது தனது மனைவியின் குணமறிந்து கூப்பிடமுடியாமல் உள்ளுக்குள் புழுங்கிப் போனான் கார்த்திக். இயல்பிலேயே எல்லோரிடமும் பாசம் காட்டும் கார்த்திக்கின் உள்ளம் குறுகிப்போனது.
நான்கு ஆண்டுகளுக்குப் பின் கார்த்திக்கின் அண்ணனுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. பிரித்துப் படித்தவர் மயக்கம் போடாத குறைதான்.
“டேய் என் தங்கமே ஏண்டா இப்படிப் பண்ண” என்று கதறிய அண்ணனின் குரலில் அண்ணியும் கார்த்திக் இறந்துபோனான் என்ற தந்திச் செய்தியைக் கேட்டுக் கதறினாள். வீட்டின் கடைக்குட்டி செல்லமாய் வளர்ந்த கார்த்திக் திருமணமான நான்கு ஆண்டுகளில் தனது வாழ்வை முடித்துக்கொண்டான். இறப்பிற்குப் போய் வந்த குடும்பத்தார் அவன் எப்படி இறந்தான்? என விசாரித்தனர். நீண்ட நாளைக்குப் பிறகு ஒருவரும் அறியாமல் சென்னை சென்ற அண்ணன், தன் தம்பி தனது மனைவியின் கொடுமை தாங்காது விஸ்கியில் விசம்கலந்து குடித்து இறந்தான் என்ற செய்தியில் துடித்துப்போனார். அம்மா போன பிறகு, தான் பார்த்து தம்பிக்கு வாழ்க்கை அமைத்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என மறுகினார். துடித்துப் போனது அவர் மட்டுமல்ல நிம்மதியிழந்த கார்த்திக்கின் ஆன்மாவும்தான்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் சு.சோமசுந்தரி,
புனைபெயர் : மதியழகி
ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
The post கடைக்குட்டி|சிறுகதை|முனைவர் சு.சோமசுந்தரி appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.