Reading view

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

  •  

வாசன் மலர்

Pa Raghavan

நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.

உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.

ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.

ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.

இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.

ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.

அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?

வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.

தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.

இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

  •  

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

இந்த வருட இதயம் பேசுகிறதுதீபாவளி மலரில் ஒரு அதிசயம். வர்ஜாவர்ஜமின்றிஅகிலன்சுந்தர ராமசாமிகலைஞர் கருணாநிதிஅசோகமித்திரன்செல்வி ஜெயலலிதாசா. கந்தசாமிபட்டுக்கோட்டை பிரபாகர்டி. செல்வராஜ்சுஜாதாகு. சின்னப்ப பாரதிஹேமா ஆனந்ததீர்த்தன்இந்திரா பார்த்தசாரதிஜெயகாந்தன்ராஜேந்திரகுமார். ஆ. மாதவன்இந்துமதிநகுலன்சிவசங்கரிநீல பத்மநாபன்ஜோதிர்லதா கிரிஜாஆதவன்சு. சமுத்திரம்அனுராதா ரமணன்வல்லிக்கண்ணன்வாஸந்திஜெயந்தன்காசியபன் என்று எல்லோருடைய புகைப்படங்களும்குறிப்பிடத்தக்கதென எழுத்தாளர்களே குறிப்பிடும் அவரவர் நாவலின் பெயருமாக ஒரு ஆல்பம் போல வெளியிடப்பட்டிருக்கிறது,

ஒரு எழுத்தளான்புகைப்படம் எடுத்துக் கொள்வதிலோஅதை பத்திரிகையில் வெளியிடுவதிலோ தவறேதுமில்லை. ஆனால் எந்தப் பத்திரிகையில்எந்த விதத்தில்?

உண்மையைத் தேடும் சுந்தர ராமசாமிக்கும்இளமை இனிமை புதுமைக்கும் என்ன உறவுவியாபாரப் பத்திரிகைகளுக்கெதிராக போர்க்கொடி உயர்த்திய கசடதபற கலகக்காரரான சா. கந்தசாமிக்கும்கலாசாரத்தைச் சீரழிக்கும் நபும்சக’ பத்திரிகைக்கும் என்ன கூட்டுபெண்விடுதலை என்று தாண்டிக்குதித்து எகிறும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கும் தொடையில் எங்கே மச்சம் என்று தேடச்சொல்லி போட்டி வைக்கும் இதழுக்கும் என்ன தொடர்புமதம் மக்களுக்கு அபின் என்று சதா ஜெபிக்கிற சிவப்பிலக்கியவாதிகளான டி. செல்வராஜ்கு. சின்னப்ப பாரதிக்கும்இந்துமத மொத்த குத்தகைக்காரரான மணியனுக்கும் என்ன சம்பந்தம்?

வியாபாரப் பத்திரிகையில் எழுதுவதைவெகுஜனங்களை அடைகிற நோக்கம் என்கிற அம்சத்திலேனும் ஏற்றுக்கொள்ளலாம். மேற்படி எழுத்தாளர்களின் நாவலையோ அல்லது நாவல் சுருக்கத்தையோ வெளியிட்டுகூடவே புகைப்படம் போட்டிருந்தாலும் பரவாயில்லை. வெளியிட்டிருப்பது 'வெறும் பொட்டோ'.

சாகித்திய ஞானபீடங்களுக்கெதிராக யுத்த சந்நத்தம் கொள்ளும் இவர்கள். 'நீ இதுவரை என் எழுத்தைக் கேட்டதில்லை. இப்போதும் என் எழுத்தை வெளியிடப் போவதில்லை. போட்டோதான் கேட்கிறாய். எழுத்தாளன் என்கிற விதத்தில் என் முகத்தை விடவும் எழுத்துதான் முக்கியம்போட்டோ தரமுடியாது போய்யா என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும் ?

இலக்கியம்எந்த சீரழிவை எதிர்த்து. சமூகத்தின் திரைகளைக் கிழித்து வெளிச்சம்போட்டு காட்டுகிறதோஅந்த நிலையை மேன்மேலும் வளர்க்கிறஆயிரம் பிரதிகள் போட்ட தரமான புத்தகம்ஐந்து வருடத்திலும் விற்று முடியாதபடிக்குநாடு முழுக்க நரகலைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையில்எழுத்துகூட இல்லைதங்கள் முகம் சில ஆயிரம் பிரதிகளில் அச்சேறிதமிழ் மகாஜனங்களை அடைவதில் அப்படி என்ன சந்தோஷம்?

தன் பத்திரிகையின் ஆபாச முகத்தைத் திரை விலக்கிக் காட்டிவிட்டார் என்ற காழ்ப்பில்இலக்கியத்திற்கும்கிசுகிசுமூட்டி கிளப்பிவிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதமதம்+ செக்ஸ் என்று தமிழர்களுக்கு ஆத்ம சரீர சுகமளிக்கும் மணியன்இதே பத்திரிகையில் வண்ணநிலவனைப் படுகேவலமாகத் தாக்கினார். சக எழுத்தாளன்ஒரு நியாயமான விஷயத்திற்குக் குரல் கொடுக்கப்போய்கேவலப் படுத்தப்படுவதைக் கண்டித்து மேற்படி எழுத்தாளர்கள் எவரும் குரலெழுப்பவில்லை. மாறாக அவன் கேட்டவுடன் எங்கிருந்து மாலை விழுந்தாலும் பரவாயில்லை என்று கழுத்தை நீட்டி போட்டோ அனுப்பியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே இவர்களின் எழுத்து நாளைக்கே வியாபாரத்தனமாகிவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய பயில்வான்கள்போயும் போயும் போட்டோ தடுக்கியா விழவேண்டும்?

இந்த எழுத்தாளர்களையெல்லாம் தோளில் சுமந்தபடி சுற்றிவருகிற இளைஞர்களை இதைவிட வேறு எப்படி அவமானப்படுத்திவிட முடியும் 


***


இது வெளியான 1983 ஞானரதத்தைத் தேடிப்பிடித்து, இந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பிவைத்த மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமிக்கு நன்றி.

 

  •  

அசோகமித்திரனின் பெண்கள்

 



எழுத்தாளர் அசோகமித்திரன் காலமாகிவிட்டார். தமிழ்ப் புனைவு கதைகளில் பெரும் சாதனைகளைச் செய்தவர் அவர். அவரது கதைகள், நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடப் பாடுகளை மையமாகக் கொண்டவை. நடுத்தரவர்க்க மக்கள் கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகள், வாழ்க்கை முறை ஆகியவற்றையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டையும் துன்பங்களையும் அசோகமித்திரன் அளவுக்குக் கதைகளில் யாரும் சொன்னதில்லை.

இந்த நடுத்தரவர்க்க ஒழுக்கங்களில் மிகப் பெரிய பங்கு பெண்களுக்கு இருக்கிறது. இவற்றைப் பராமரிப்பவர்களாகவும் அதனால் உண்டாகும் துன்பங்களைச் சுமப்பவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். இந்த அம்சத்தையும் அசோகமித்திரன் தன் கதைகளின் மூலம் சொல்லியுள்ளார். அவரது கதைகளில் பெண்கள் காதல் தேவதைகளாகவோ தெய்வீக அவதாரங்களாகவோ இல்லை. பெண்கள் குடும்ப அமைப்பின் அங்கமாக வருகிறார்கள். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் செய்யும் அம்மாவாக, நள்ளிரவில் குழந்தை அழுவதற்காகக் கணவனிடம் முரட்டுத்தனமாக அடிவாங்கும் மனைவியாக, தாய் தவறிவிட குடும்பப் பொறுப்பை ஏற்கும் மகளாக வருகிறார்கள்.

பெண்களை அழகுப் பதுமைகளாக வர்ணிக்கும் அலங்கார வார்த்தைகள் எதுவும் அசோகமித்திரனிடம் இல்லை. சக மனுஷனாக அவள் படும் பாடுகளை அருகிலிருந்து பார்த்துப் பகிர்கிறார். மேலும், பெண்களின் உலகத்தைச் சொல்லும்போது, அவர்களது சந்தோஷங்களைவிடத் துன்பங்களையே பிரதானமாக்குகிறார். அவர்களுள் ஒருவராக இருந்து பேசுகிறார். அவள் ‘இதைப் போல இப்படிச் செய்தாள்’ என்ற ஒப்பீடுகளை அசோகமித்திரன் தவிர்க்கிறார். ஒரு பெண்ணின் தனித்துவமான இயல்புகளுடனே காட்சிப்படுத்துகிறார்.

‘தண்ணீர்’ நாவலின் ஜமுனா, ‘மணல்’ குறுநாவலின் சரோஜினி, ‘விமோசனம்’ சிறுகதையின் சரஸ்வதி ஆகிய கதாபாத்திரங்களை அசோகமித்திரனின் முன்னுதாரணப் பெண்களாகக் கொள்ளலாம். ‘விமோசனம்’ சரஸ்வதி ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் தன் கணவனுடனும் கைக்குழந்தையுடனும் வசிக்கிறாள். அரிசிக்கும் பருப்புக்கும் திண்டாடும் வாழ்க்கை ஒரு பக்கம், முரட்டுக் கணவனின் அடிகள் போன்ற துன்பங்கள் ஒரு பக்கம், என்றாலும் வாழ்க்கை போகிறது. கணவனின் அடிக்குப் பதில் பேசாமல், அடி வாங்கிக்கொண்டே இருப்பவள், ஒருநாள் லேசாக மூஞ்சியைத் திருப்பிக்கொள்கிறாள். அவ்வளவுதான் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. செவிடாகும்படி அடிகளை வாங்கிக்கொண்ட பிறகுதான் என்றாலும் அவள் பாவம் செய்துவிடுகிறாள். குழந்தை, பால், அப்பளம், சாதம், வத்தல் குழம்பு, கடன், காபி என்ற இந்தக் குடும்ப அமைப்பிலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் மன்றாடுகிறாள். ஆனால், நிராகரிக்கப்படுகிறாள். கணவனே சரணாகதி என்னும் நிலையிலிருக்கும் பெண்கள் பலரின் பிரதிநிதியாக சரஸ்வதியை உருவாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.

‘தண்ணீர்’ ஜமுனாவும் சரஸ்வதியைப் போல் ஒண்டுக் குடித்தன வீட்டில் வசிப்பவள். சினிமா நாயகியாக ஆசைப்பட்டவள். பாஸ்கர்ராவ் என்னும் சினிமா ஆளால் ஏமாற்றப்பட்டு, தன் தங்கை சாயாவுடன் வசித்துவருகிறாள். சாயா, ஜமுனாவின் குடும்பப் பெண் தன்மையின் மீதமாக கூடவே இருக்கிறாள். ஜமுனா ஒழுக்கத்தை மீறும்போதெல்லாம் அவளைக் கண்டித்துக் கொண்டே இருக்கிறாள். சாயாவுக்குக் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கைகள் உண்டு. அவளுக்கு ஒரு குடும்பம், ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால், அவளும் அந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் இருக்கிறாள். ஜமுனா எல்லாவற்றையும் மீறுபவளாக இருக்கிறாள். பாஸ்கர்ராவ் ஏமாற்றுபவனாக இருந்தாலும் அவனிடமே திரும்பத் திரும்ப செல்பவளாகவும் இருக்கிறாள். இறுதியில் சரஸ்வதிக்கு நேர்வது போன்ற ஒரு துன்பத்தைச் சந்தோஷமாக ஜமுனா முன்வந்து ஏற்கிறாள்.

‘மணல்’ சரோஜினி, பெரிய குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண். அண்ணன்கள், அம்மா, அப்பா, அக்கா எனக் குடும்ப அரவணைப்பில் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் இருப்பவள். ஆனால், அவளுடைய அம்மா ஒரு நாளில் தவறிவிடுகிறாள். விசேஷம் கழிந்த மறுநாள் வேலைக்குப் புறப்படும் அண்ணனுக்காக, அப்பாவுக்காகச் சமைக்கப் போகிறாள். பிறகு அவள் சமைத்துப் போடும் இயந்திரமாக மாறிவிடுகிறாள். அவளது டாக்டர் கனவு கலைந்துபோகிறது. கடைசியில் பி.எஸ்சி.கூடப் படிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இவளையும் வாழ்க்கை, குடும்ப அமைப்பிலிருந்து பிரித்துவிடுகிறது. ஒழுக்கம், நேர்மை போன்ற நெறிகளுக்கு உதாரணமானவள் அதிலிருந்து பிறழ்கிறாள். மைதானத்தில் காத்திருக்கும் போட்டோ ஸ்டூடியோக்காரனுடன் செல்லத் தயாராகிறாள்.

பல்வேறு குணநலன்கள் கொண்ட இந்த மூன்று பெண்களைக் கொண்டே அசோகமித்திரனின் மொத்தக் கதைகளின் பெண் கதாபாத்திரங்களை மதிப்பிட முயலலாம். பெண்களுக்கென்று தனித்துவமாகக் கட்டுப்பாடுகளை உருவாக்கிவைத்திருக்கும் இந்தக் குடும்ப அமைப்பின் நெறிகளையும் மறுபரீசீலனை செய்யலாம்.

(26, மார்ச், 2017)


  •  

கதையெல்லாம் தித்திப்பு

 

 
 
 
வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான கதைகள்தாம் தமிழில் அதிகம். கி.ராஜநாரயணன், தோப்பில் முகமது மீரான் போன்ற கதைசொல்லிகள் பலரும் தன்னனுவத்தைப் பிரதானமாகக் கொண்டுதான் கதைகள் எழுதினர். இதற்கு வெளியில் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்கள் தன்னனுபவத்தையும் கற்பனாசக்தியையும் கொண்டு கதைகள் எழுதினர். இந்த இருவிதமான போக்குக்கும் இடையில் இயங்கியவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

சிறுகதை இலக்கியத்தின் சாதனையாளர்களுள் ஒருவர் முத்துலிங்கம். எழுத்துலகில் அவருக்கு இது 60-வது ஆண்டு. இடையில் சில காலம் எழுதாமலும் இருந்திருக்கிறார். 1995 வெளிவந்த அவரது ‘திகடசக்கரம்’ தொகுப்புக்குப் பிறகு தொடர்ந்து அதே ஆற்றலுடன் இயங்கிவருகிறார். 1958-2016 காலகட்டத்தில் அவர் எழுதிய மொத்த கதைகளின் தொகுப்பு நற்றிணை வெளியீடாக இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

முத்துலிங்கம் கதைகளின் அமைப்பு, அசோகமித்திரனுடன் ஒப்பிடத்தகுந்தது. எந்தப் பின்னணியில் இருந்தாலும், எந்தவிதமான கருத்தியலைப் பேசினாலும் அவரது கதைகள் அடைய நினைக்கும் இலக்கு சுவாரசியம்தான். ‘சுவாரசியம்தான் தன் கதைகளின் லட்சியம்’ என்கிறார் அசோகமித்திரன். ஆனால் முத்துலிங்கத்தின் சுவாரசியம், வெகுளியானது. இந்தப் பூமிப் பிரதேசத்தின் ஒவ்வொரு பொருளையும் உயிரையும் பேரார்வத்துடன் அணுகும் குழந்தையின் தன்மை அதற்குண்டு. சுவாரசியத்தின் வெளிப்பாடாக இருவரும் சிரிப்பைக் கதைகளுக்குள் வைத்திருப்பார்கள். அதிலும் அசோகமித்திரனின் நகைச்சுவை, கதைகளுக்குள் புதிர்போன்றது. தேர்ந்த வாசகனால் மட்டுமே அதை அவிழ்க்க முடியும். முத்துலிங்கம் அந்தச் சிரமத்தை வாசகனுக்கு அளிப்பதில்லை.

கி.ரா.வின் கதைகள், கரிசக்காட்டு விவசாயிகளின் பாடுகள். அசோகமித்திரன், வண்ணநிலவன் ஆகிய இருவரின் கதைகளும் ஒரு குறிப்பிட்ட நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைப் பாடுகள். அதுபோல இவர்களது கதைகளின் நிலக் காட்சிகளுக்குள்ளும் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். இப்படி முத்துலிங்கம் காலகட்டத்து எழுத்தாளர்களை ஒரு வரையறைக்குள் வகுத்துவிட முடியும். ஆனால் முத்துலிங்கம் இதற்குள் அடங்காதவர். பாடுபொருள்களிலும் சரி, நிலக் காட்சிகளிலும் சரி, முத்துலிங்கத்தின் கதைகள், ஒன்று மற்றொன்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுபவை.

தமிழ் வாசகனுக்கு முற்றிலும் புதிய நிலக் காட்சிகளை, மனிதர்களை முத்துலிங்கம் தனது கதைகளுக்குள் சித்தரித்துள்ளார். அவர்களுக்கும் மையமான ஓர் ஒற்றுமையைக் காண முடியாது. அவரது கதைகள், ஒரு நவீன கவிதையைப் போல் அன்றாடத்தின் ஒரு துண்டு. உண்மையில் அவை தீவிர விசாரணைக்கு உட்படுத்த முடியாத வெகுளித் தன்மை கொண்டவை.

அசோகமித்திரனின் படைப்புகளைப் போல் கட்டுரைக்கும் கதைக்கும் இடைப்பட்டவை முத்துலிங்கத்தின் படைப்புகள். இருவரும் தன்னிலையில் சொல்லும் கதைகள், ஒரு சுய அனுபவக் கட்டுரையின் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. முத்துலிங்கம், ஐ.நா. அதிகாரியாகப் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானில் பணியாற்றியபோது உளவாளி ஒருவர், இவரைக் கண்காணிப்பதற்காக ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இஸ்லாமாபாத் தெருக்களில் வழி தடுமாறி, குழம்பிப் போய்விடுகிறார். திரும்பித் தங்குமிடம் வரத் தெரியாததால், தன்னை வெகுநேரமாகப் பின்தொடர்ந்து வரும் உளவாளியிடமே கேட்டுவிடலாம் எனக் கேட்கிறார். ‘அவரும் என்னைத் பின்தொடருங்கள், உங்கள் தங்குமிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். உலக உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு உளவாளியை, உளவுபார்க்கப்படுவன் பின்தொடர்ந்த சம்பவம் நடக்கிறது. முத்துலிங்கம் தனது தனித்துவமான நகைச்சுவையுடன் இந்தச் சம்பவத்தை எழுதியிருப்பார். இது கட்டுரையா, கதையா என அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி தங்கியிருக்கிறது.

முத்துலிங்கம் கதைகளில் தீர்க்கமான அரசியல் இல்லை என விமர்சிக்கப்படுவதுண்டு. அவரது கதைகள், உரத்துச் செல்லும் இலங்கையின் பெரும்போக்கிலிருந்து விலகியே இருந்தது, இந்த விமர்சனத்துக்கான காரணமாக இருக்கலாம். அவரது ‘நாளை’ சிறுகதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போரால் அநாதையான சிறுவர்கள் - அண்ணனும் தம்பியும் - இறைச்சிக்காக ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு வேலி தாண்டிச் செல்லும் சம்பவம்தான் கதை. ஆனால் அவர்களுக்கு ரொட்டி மட்டும்தான் கிடைக்கிறது. நாளை இறைச்சி கிடைக்குமா, என்ற சிந்தனையில் உறங்கிப் போகிறார்கள். இதில் ஒரு இடத்தில் அண்ணன்காரன் ஒரு கட்டையை எடுத்துத் துப்பாக்கி பிடிப்பதுபோல் பாவனை செய்கிறான்.

முத்துலிங்கம், இலங்கையில் பிறந்து உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர். அதன் மூலம் நாம் அறியாத நிலத்தைப் பண்பாட்டுப் புலத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார். அவரது பல கதைகளின் மையமும் இந்தப் பண்பாட்டு முரண்தான். ஆனால் அவர் இந்த முரணை வெறுப்புடனோ கேலியுடனோ அணுகுவதில்லை. அது வாசகருக்கு அளிக்கக்கூடிய சுவாரசியத்தையே அவர் கவனத்தில் கொள்கிறார். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என நிகழ்வதற்கும் நிகழாமைக்கும் இடையில் வாசகர் அடையும் மன எழுச்சியையும் அவர் ஓர் அம்சமாகக் கொண்டிருக்கிறார். படர்க்கையில் கதை சொன்னாலும் வாசக நெருக்கத்துக்காக அதில் ஓர் தன்னிலை விவரிப்புத் தன்மையை முத்துலிங்கத்தின் கதைகளில் உணர முடிகிறது. வாசகர்களிடம் நெருங்கிவர ஒவ்வொரு கதைகளிலும் அவ்வளவு பிரயாசம் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று இது. அதனால் கதைகளை வாசகர்களை முன்னிறுத்தியே எழுதினார். அதனால் கதைகளுக்குள் தத்துவ விவரிப்பைத் தவிர்த்தார். அதற்கான முகாந்திரம் உள்ள கதைகளிலும் அதை ஒரு சுவாரசியமான நகைச்சுவையாக்கவே முயன்றுள்ளார். முத்துலிங்கத்தின் எழுத்துகளை ஒரு காடு எனக் கொண்டால் ஜெயமோகன் சொல்வதுபோல் அதன் ஒவ்வொரு இலையும் தித்திப்பே. அதுவே அவரது கதைகளின் லட்சியமும்கூட.
(இந்து தமிழ் திசை, 04.03.2018)

  •