Reading view

சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி-3

சென்னை புத்தகத் திருவிழா புதிய வெளியீடுகள் – காலச்சுவடு, பாரதி- புக்பார் சில்ரன்,சால்ட், தமிழ்வெளி, புலம் 

சென்னை புத்தகத் திருவிழா இன்று(27-12-2024)  தொடங்கியுள்ளது. புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவந்த, வெளிவர இருக்கும்  காலச்சுவடு, பாரதி- புக்பார் சில்ரன், சால்ட், தமிழ்வெளி,புலம் ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

காலச்சுவடு வெளியீடுகள்

 

பாரதி புத்தகாலயம் வெளியீடுகள்

Book for children வெளியீடுகள்

 

சால்ட் வெளியீடுகள்

 

தமிழ்வெளி வெளியீடுகள்

 

புலம் வெளியீடுகள்

 

சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியாகும் புதிய வெளியீடுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிட இருக்கிறோம். இணைந்திருங்கள்.

The post சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி-3 appeared first on Kaanalvari.

  •  

கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை” 

கானல்வரி பக்கத்தில் புத்தகத் திருவிழாக்களை ஒட்டி வகைமை வாரியான நூல் பரிந்துரைகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறோம். 

நாளை (06-09-2024) தொடங்கவிருக்கும் மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் முதல் நவீனம் வரையிலான நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள் அடங்கிய பட்டியலை இங்கு பதிவிடுகிறோம். இப்பட்டியல் ஆரம்பகட்ட மற்றும் நடுத்தர வாசகர்கள் பயன்பெறுதற் பொருட்டு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நூற்பட்டியலைப் பரிந்துரைத்து உதவிய காலச்சுவடு அய்யாசாமி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

படங்களைத் தொடர்ந்து பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

நாவல்கள்

1) கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் – எம்.எஸ்)

2) தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் – சுந்தர ராமசாமி )

3) மஹ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

4) மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

5) கடல்புரத்தில் – வண்ணநிலவன்

6) ஈரம் கசிந்த நிலம் – சி.ஆர்.ரவீந்திரன்

7) தண்ணீர் – அசோகமித்திரன்

8) சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

9) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

10) நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

11) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

12) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

13) நாகம்மாள் – ஆர்.ஷண்முகசுந்தரம்

14) பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்

15) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

16) ஜே.ஜே.சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

17) புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

18) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

19) புனலும் மணலும் – ஆ.மாதவன்

20) அஞ்சு வண்ணம் தெரு – தோப்பில் முஹம்மது மீரான்

21) அமிர்தம் – தி. ஜானகிராமன்

22) மாதொருபாகன் – பெருமாள்முருகன்

23) வெல்லிங்டன் – சுகுமாரன்

24) அஜ்னபி – மீரான் மைதீன்

25) சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான்

26) காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், (தமிழில், கே.நல்லதம்பி)

27) பால்யகாலசகி – வைக்கம் முஹம்மது பஷீர், (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

சிறுகதைகள்

28) சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

29) குதிரைக்காரன் – அ. முத்துலிங்கம்

கட்டுரைகள்

30) மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

31) கோவில்-நிலம்-சாதி – பொ.வேல்சாமி

32) உய்யடா உய்யடா உய் – இசை

33) கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன்

34) பதிப்புகள் மறுபதிப்புகள் – பெருமாள் முருகன்

35) மயிர்தான் பிரச்சினையா – பெருமாள் முருகன்

36) சாதியும் நானும் – பெருமாள் முருகன் (ப. ஆ)

37) பதிப்பும் படைப்பும் – கண்ணன்

38) நகலிசைக் கலைஞன் – ஜான்சுந்தர்

39) பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்

40) நடந்தாய் வாழி காவேரி – சிட்டி, தி.ஜானகிராமன்

41) அந்தக் காலத்தில் காபி இல்லை – ஆ.இரா.வேங்கடாசலபதி

42) எனது இந்தியா – ஜிம் கார்பெட், (தமிழில் -யுவன் சந்திரசேகர்)

43) என்கதை – கமலாதாஸ், (தமிழில் – நிர்மால்யா)

44) கவர்ன்மென்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தி, (தமிழில் – பாவண்ணன் )

45) நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை, (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

46) திருடன் மணியன்பிள்ளை -ஜி.ஆர்.இந்துகோபன், (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

47) ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில்,குளச்சல் மு.யூசுப்)

48) ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் – ஆ.சிவசுப்பிரமணியன்

49) கிழக்கும் மேற்கும் பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் – மு.இராமனாதன்

50) காலந்தோறும் பெண் – ராஜம் கிருஷ்ணன்

The post கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை”  appeared first on Kaanalvari.

  •  

காந்தி புன்னகைக்கிறார் (சிறுகதை ) – மு. சாகுல் ஹமீது

நன்றி : காலச்சுவடு & சாகுல் ஹமீது

“சிந்திப்பதைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால் பெயரைக்கூடச் சொல்லாமல் வெறுமனே இப்படி உட்கார்ந்திருக்கும்போது எழுகிற சிந்தனைகள் ஆபத்தானவை. சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்” மீண்டும் அதே புன்னகை.

“என் பெயர் நாதுராம்… உங்கள் நகைச்சுவையுணர்வைப் பாராட்டுகிறேன் காந்தி. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்.”

“பெயர் நாதுராமென்றா சொன்னீர்கள்?”

“ஆம்.”

“நாதுராம்… ராம்… என் ராமனின் பெயர்.”

“உங்கள் ராமனா… எப்போதிருந்து? நீங்கள்தான் இந்து மதத்திலிருந்தே விலகிவிட்டீர்களே. ராமன் மட்டும் எப்படி உங்களவன் ஆனான்?”

“மன்னிக்கவும் நாதுராம். என் ராமனுக்கு எந்த மதமுமில்லை. ஏனென்றால் அவன் ஆலயங்களில் வசிப்பதில்லை. எல்லோருக்குள்ளும் இருக்கிறவன் நாதுராமுள்ளும் இருக்கிறான். இந்தக் கிழவனுக்குள்ளும் இருக்கிறான்.”

“உங்களால் எப்படி இப்படியெல்லாம் இருக்க முடிகிறது காந்தி? இந்த நாட்டின் மொத்த இந்துக்களுக்கும் துரோகம் செய்வதில் உங்களுக்கென்ன அவ்வளவு ஆனந்தம்?”

“இந்தக் கேள்வியை ஆயிரம் முறை கடந்துவந்துவிட்டேன் நாதுராம். இனி லட்சம் முறைகூடக் கேட்கப்பட்டாலும் பரவாயில்லை. பதில்களால் மனிதர்கள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பொய்க்குத்தான் தேவையே தவிர உண்மைக்குத் தர்க்கம் அவசியமில்லை. என் உண்மைக்குப் பல முகங்களுண்டு. ஆனால் முசல்மானின் முகம், பார்ஸியின் முகம், இந்துவின் முகம், சீக்கிய முகம் என்று எந்தப் பேதமும் அதிலில்லை. நீங்கள் என்னை இந்துவின் பக்கமா இல்லை முகமதியன் பக்கமா என்று கேட்டால், நான் மனிதர்களின் பக்கம்தான். எனக்குத் தெரிந்ததும் அது மட்டும்தான்.”

“இது வெறும் வார்த்தை ஜாலம். இதை நான் நம்ப மாட்டேன்.”

“என்னை நம்ப வேண்டுமென்று நான் யாரிடமும் சொல்லவில்லையே… இங்கு தன்னைத் தவிர வேறு யாரையும் யாராலும் முழுமையாக நம்பிவிட முடியாது.”

*

மேலும்
https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/303/articles/15-gandhipunakaikirar

*

மு. சாகுல் ஹமீது: மூன்றாமாண்டு இளங்கலைத் தமிழ்த்துறை மாணவர், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம், தேனி. மின்னஞ்சல்: [email protected]

  •  

காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்

 

Sketch by Adhimoolam

ஜனவரி 2025 காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை 

முன்னூறு இதழ்கள் கடந்திருக்கும் காலச்சுவடிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்த தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டு சில நாட்களாக பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்துக்கள் முதல் முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். ஏப்ரல் 2014 இதழில் அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ நூலுக்கு எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ எனும் விரிவான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது. அந்த முன்னுரை அம்பேத்கரின் பங்களிப்பையும் அவரது சிந்தனையின் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுவதைவிட காந்தியை அவருக்கு எதிரியாக கட்டமைப்பதிலும் மேற்கோள்களை திரித்து காந்தியின் மீது

அவதூறு செய்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. அருந்ததிராய்க்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய விரிவான மறுப்பு ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் சிறு பிரசுரமாக சர்வோதயத்தில் வெளியானது. பி. ஏ கிருஷ்ணன் கோரிக்கொண்டதின் பேரில் ராஜ்மோகன் காந்தியின் பதிலில் இருந்து ஒரு பகுதியை காலச்சுவடு பிரசுரித்தது. அதன் பின் 2020 ஆம் ஆண்டு ‘காந்தி 150’ எனும் சிறப்பு பகுதியும் 2023 ஆம் ஆண்டு ‘இன்றும் காந்தி’ எனும் சிறப்பு பகுதியும்  வெளியானதில் எனது பங்களிப்பும் உண்டு. திரிதீப் சுஹ்ருத்தின் ‘சத்திய சோதனை’ நூலுக்கான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியானது. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ கட்டுரை பரவலாக கவனம் பெற்றது. ஆயுர்வேதம் எனும் பேசு பொருளைக் கொண்டு காந்தி மரபை எவ்விதம் அனுகினார் என காண முயற்சித்தது. ‘காந்தி சாதியவாதியா?’ என்னும்  கேள்விக்கு காந்தியின் எழுத்துக்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவரது வாழ்க்கை தருணங்களையும் கருத்தில் கொண்டு புதிய கோணத்தில் தனது வாதங்களை நிஷிகாந்த் கோல்கேயின் நூல் முன்வைக்கிறது. அண்மை காலத்தில் வெளிவந்த இவ்விறு சிறப்பிதழ்களில் த. கண்ணன், விஷ்ணு வரதராஜன், சித்ரா பாலசுப்பிரமணியம், சுரேஷ் பிரதீப், அரவிந்தன் கண்ணையன், பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் போன்றவர்கள் எழுதியுள்ளார்கள்.  இவை அண்மைய காலத்தில் வெளிவந்தவை என்பதால் இந்த கட்டுரையில் இவற்றை குறித்து பேசுவதை தவிர்க்க விரும்புகிறேன். இதற்கு முன் 2005, 2008 ஆண்டுகளில் காலச்சுவடு காந்தி சிறப்பு பகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை அவதானிப்பது சுவாரசியமாக இருக்கக்கூடும். 


பெரும்பாலான இந்தியர்களுக்கு இருப்பது போலவே எனக்கும் காந்தியின் மீது மதிப்போ வெறுப்போ ஆர்வமோ இல்லாத உறவு தான் இருந்தது. இதன் பொருள் என் அன்றாட வாழ்வில் அவருக்கு எந்த இடமும்  இல்லை என்பதுதான். இது மாறியதற்கு இரு முக்கிய காரணிகளை என்னால் சுட்ட முடியும். ஒன்று, ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ இரண்டு ‘இறுதி கட்ட ஈழப்போர்.’ காந்தியை போன்றே ஈழ அரசியல் குறித்தும் எனக்கு பெரிய அறிதலோ ஆர்வமோ கிடையாது. ஆனால் அதன் இறுதி தருணங்கள் மனதில் ஒருவித பதைப்பை உண்டாக்கியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் இன்றைய காந்தியும் வெளியானதாக நினைவு. ஒரு வரலாற்று ஆளுமைக்கு சரிநிகராக அமர்ந்து உரையாடும் வாய்ப்பு நமக்கு வெகு சிலரிடம் மட்டுமே கிடைக்கும். காந்தியை அத்தகையவராக அவரது அத்தனை முரண்பாடுகளோடும் கண்டுகொண்டேன்.  ‘காந்தி- இன்று’ என்று இணையதளத்திற்கு பெயரிட இரண்டு காரணங்கள். ஜெயமோகனின் நூலும், சுந்தர ராமசாமியின் கட்டுரையும். 1986 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியான ‘காந்தி இன்று’ கட்டுரையில் காந்தியை எப்படி அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார். “நேர்மையான மறுபரிசீலனைக்கான காலம் இப்போது தோன்றுகிறதோ என மகிழ்வு கொள்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த மறுபரிசீலனை செம்மைப்பட நாம் காந்தியுடன் எந்தவிதமான உறவுகொள்ள வேண்டும்? இதுதான் மிக முக்கியமான விஷயம். நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். மேற்கத்திய சித்தாந்தங்கள் எவற்றிலும் சிறைப்பட்டு நிற்காமல், மதக் கோட்பாடுகள் எவற்றிலும் சிக்குண்டு கிடக்காமல் நாம் அவரைப் பார்க்க வேண்டும். எவ்விதமான முடிவுக்கும் வர நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் சுதந்திரத்தை, எந்த அமைப்புக்காகவும் விட்டுக்கொடுக்கப் பிடிவாதமாக மறுத்து, திறந்த மனத்துடன் நாம் அவரைப் பார்க்க வேண்டும்.”  சு ராவின் காந்தி குறித்த பார்வையின் நீட்சி காலச்சுவடில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன். 


2000 க்கு மத்தியில் காந்தி மீதான கவனம் மீண்டும் துளிர்க்க தொடங்கியதற்கு என்ன காரணம் என ஆராய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான சிக்கல்களை கொண்டிருப்பது போல அவற்றுக்கான முறை மருந்துகளையும் கொண்டிருக்கும் என நம்புகிறேன். உலகமயமாக்கல் வாசல்களை திறந்துவிட்டது. ஒருவகையில் உலகமயமாக்கல் முதலில் கோரும் பலியாக காந்தி தான் இருப்பார் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் மால்களில் சிகார் பிடிக்கும் சேகுவேரா டி ஷர்டுகளை விற்பனை செய்வது போல உலகமயமாக்கல் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. நுகர்வின் உச்சத்தில் திளைத்து பொருளின்மையை உணரும் ஒரு நகர்ப்புற / படித்த மேல் நடுத்தர வர்க்கம் 2000 களின் மத்தியில் உருவானது. 


அக்டோபர் 2005 காலச்சுவடு இதழில் எஸ். பிரசன்னா எழுதிய ‘‘காந்தியும் நானும்’ இந்த புதிய தலைமுறையின் பிரதிநிதி என சொல்லலாம். புதிய குரல்கள் கேட்க தொடங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் காலச்சுவடு இதழ்களில் பங்காற்றிய சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம்  போன்றோரின் குரல்கள் இதே மரபின் தொடர்ச்சி என தோன்றுகிறது. கண்ணன் தண்டபாணி தொடங்கி இன்று முனைப்புடன் செயலாற்றி வரும் குக்கூ சிவராஜ் குழுவினர்  வரை இந்த சரடு இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. ‘அரசியல் காந்தி’ மீது இவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. களச் செயல்பாட்டிற்கு காந்தியிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்கள். பிரசன்னாவின் ‘காந்தியும் நானும்’ கட்டுரை அரசியல் நீக்கம் செய்யப்பட அந்தரங்கமான காந்தியை முன்வைக்கிறது. “காந்தியுடன் என்னால் தனிப்பட்ட முறையில் உறவுகொள்ள முடிகிறது. தனிப்பட்ட பிரச்சினைகளைப் பேச முடிகிறது. இந்த உலகுடன் உறவுகொள்ள, இந்த உலகைப் புரிந்துகொள்ள அவரால் எனக்கு உதவி செய்ய முடிந்தால் அதுவே போதுமானது. உலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க என்னால் வழி கூற முடியாது. உலகமயமாக்கல் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியாது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி பற்றிய கேள்விகள் முடிவில்லாத விவாதத்திற்குரியவை. காந்தியாலும் இதற்கெல்லாம் விடைகூற முடியுமா என்பதும் சந்தேகம்தான். உலகம் தற்போது எதிர்கொள்ளும் தீவிர வாதத்தைக் காந்திய வழிப்படி எதிர்கொள்ள முடியுமா என்பதற்குப் பதில் கூறுவதும் எளிதல்ல. ஆனால் என்னால் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமை என்ற கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த வீட்டில் இருப்பவருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான நெறிகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதுதான் இப்போதைக்குச் சாத்தியம். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் மாற்றம் நம்முடைய ஆத்ம சத்தியால் நாளை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியலாம். காந்தி போன்றவர்கள் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் நீடித்ததவத்தின் விளைவாய்த் தோன்றுபவர்கள். ஒரு சமுதாயத்தின் சராசரித் தரத்தைத் தாண்டிய மாபெரும் பாய்ச்சலை அச்சமுதாயத்தினுள் இருக்கும் ஒருவரால் நிகழ்த்த முடியாது. காந்தி, அவர் வாழ்ந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் லட்சிய வடிவம்.”  



எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் ‘அரசியல் காந்தியே’ அதிகமும் விவாதிக்கப்பட்டார். இடதுசாரி எழுச்சி, தலித் அமைப்புகளின் வளர்ச்சி காந்தியை முழுக்க எதிர்மறையாக அணுகின. ஆகவே ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்திற்குள் அவரை நுணுகி ஆராயும்  மயிர்பிளக்கும் விவாதங்கள் அதிகமும் நிகழ்ந்தன. அறிவு சூழலுக்கு வெளியே காந்தி பரவலடைவார் என்பதை எவரும் கணித்திருக்க முடியாது. மரபான காந்திய அமைப்புகளும் ஆசிரமங்களை அதை தோற்றுவித்தவர் மறைந்ததும் வலுவிழந்து போவதை தான் நாம் காண்கிறோம். உதாரணமாக ஏப்ரல் 2006 இதழில்  தியோடர் பாஸ்கரன் எழுதிய ‘காந்தியும் கிறிஸ்துவும்’ எனும் கட்டுரை வேலூர்- திருப்பத்தூரில் ஆசிரமம் அமைத்து தொண்டாற்றிய மருத்துவர் சவுரிராயன் யேசுதாசனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தேசிய கண்ணோட்டம் கொண்ட கிறிஸ்தவர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு காலனிய காலகட்டத்து கிறிஸ்தவ மைய நீரோட்டத்திலிருந்து விலகி இத்தகைய ஆசிரமங்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை தோற்றுவித்தவர் மரணமடையும் போது அந்த அமைப்பும் செயலற்று போகின்றன. உலகமயமாக்கலுக்கு பிறகு ஒருவகையில் காந்தியும் ‘பிராண்ட்’ ஆக ஆனார்.  காந்தி இப்படி புதிய தலைமுறையினரிடம்  பரவலாவதை அவரை எதிர்க்கும் அரசியல் தரப்புகள் எரிச்சலுடன் எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆகவே காந்தியை அரசியல் ரீதியாக நிராகரிக்க வேண்டிய காரணங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அவை ஏற்கனவே அறுதி உண்மைகளாக அவர்களால் கருதப்பட்டவை. 2005 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் நெய்தல் கிருஷ்ணனும் பிரசன்னாவும் எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் இதை காட்டுகின்றன. இரா. முருகானந்தம் பிரசன்னாவின் கட்டுரையை சிலாகித்து எழுதியிருக்கிறார். ஜனவரி 2006 இதழில் காந்தியை மதிப்பிடுவது சார்ந்த விவாதத்தில் பிரசன்னா எழுதுகிறார் ‘அவர் பெரிதும் பாராட்டப்படுவது அவர் குறையற்றவர் என்பதால் அல்ல, ஒரு சாதாரண மனிதன், ஏசுவைப் போன்றோ புத்தரைப் போன்றோ ஐன்ஸ்டைனைப் போலவோ கடவுளின் குழந்தையாகவோ பிறவி மேதாவியாகவோ பிறக்காமல், தன் முயற்சி மற்றும் ஆத்மசக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையடைந்தார் என்பதால்.’ காந்தி மீதான அரசியல் விமர்சனங்கள் இந்த தலைமுறைக்கு பெரிய விஷயமாக இல்லை. அவரை காபந்து செய்ய வேண்டும் எனும்  ஏதுமற்றவர்கள்.  அரசியல் வரம்பிற்குள் அவரை விமர்சித்து நிராகரிக்கும் தலைமுறைக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட காந்தியிடமிருந்து ஊக்கம் பெறும் தலைமுறையினருக்கும் இடையேயான உரையாடலாக இதை காண முடியும். தி. அ. ஸ்ரீனிவாசன் திருச்சி கருப்பையாவிற்கு எழுதிய மறுப்பில் ‘போயர்’ என்பது ஆப்பிரிக்க பூர்வகுடி எனும் நம்பிக்கை வெளிப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அது அப்படி அல்ல என்பதை விளங்கியதை வாசிக்கும்போது வேடிக்கையாக இருந்தது. காந்தியை விமர்சிப்பதில் நமக்கு இருக்கும் முன்முடிவுகளும் அவசரங்களும் எத்தகையது என்பதற்கு சிறந்த உதாரணம் . அருந்ததி ராய் காந்தி வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் அதே எண்பதுகளின் திரைக்கதையை மீள கொண்டுவருகிறார். அன்னா ஹசாரே இயக்கம் உட்பட மத்திய வர்க்கத்தினரின் எழுச்சிகளை எளிதில் புறந்தள்ளுகிறார். காந்திய ஈடுபாடும் அவருக்கு அப்படியான மோஸ்தராக தான் தென்படுகிறது. 



 

இந்த உரையாடலும் நன்மையையே விளைவித்தது. இந்த புதிய தலைமுறை இளைஞர்களில் ஒரு சாரார் என் ஜி ஓ  செல்கிறார்கள். சிறிய எண்ணிக்கையிலானவர்கள் காந்தியை ஆழ்ந்து அறிய தொடங்கினார்கள். இதே பிரசன்னா தான் ஆகஸ்ட் 2014 இதழில் ‘அருந்ததி ராயின் காந்தி’ என அவருக்கு வலுவான மறுப்பை எழுதுகிறார். “திரைக்கதை எழுதும் அவருடைய திறமையைப் பயன்படுத்தித் தலித்துகளின் எழுச்சி என்ற வரலாற்றில் காந்தியின் ‘வில்லத்தனமான’ பங்கைப் படிப்படியாக அடுக்குகிறார். இந்தச் செயலில் அவரும் இந்துக்களின் மரபார்ந்த பழக்கமான தொன்ம உருவாக்கலில் தான் ஈடுபடுகிறார். அவருடைய கட்டுரையிலிருந்து அம்பேத்கரைவிட காந்தியைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்கிறோம். அதுவும் ராய் நமக்குக் காட்ட விரும்பும் காந்தியை. ராயின் நாடகத்தில் காந்தி ஒரு துராத்மா. அவர் ஒரு பொய்யர். மனுவாதி. நிற வெறியர். அம்பேத்கருக்கு எதிரான சதிகாரர்.”    



பிரசன்னாவை போலவே சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம், த. கண்ணன் போன்றோர் காந்தியை அரசியல் ரீதியாகவும் முன்வைக்கும் வலுவான குரல்களாக ஆயினர். காந்தியின் குறைகளை, தளைகளை ஏற்றுக்கொண்டு அவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அதிகம் முன்னிறுத்துபவர்களாக ஆயினர். அசிஷ் நந்தி, ராமச்சந்திர குஹா, மகரந்த் பரஞ்சபே போன்றோர் வழி காந்தியை நெருங்கினர். ‘காலச்சுவடு’ இந்த தலைமுறையை உருவாக்கியது என்று சொல்வதை விட இப்படியான தலைமுறையின் இருப்பை கண்டுகொண்டு அவர்களுக்கான வெளியை அமைத்து கொடுத்தது என்பதை சொல்ல வேண்டும். அரசியல் காந்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதில் காலச்சுவடின் பங்கு முக்கியமானது என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்துத்துவ எழுச்சியின் பின்புலத்தில் அரசியல் காந்தி மறுவாசிப்பு செய்யப்படுகிறார், மீள கண்டடையப்படுகிறார். 2010 முதல் ஏழெட்டு ஆண்டுகள் இணையத்தில் தீவிரமாக செயல்பட்ட இன்னொரு பெயரையும் குறிப்பிட வேண்டும். ராட்டை ரகு சமூக ஊடகங்களில் போகிற போக்கில் காந்தி மீது குவிக்கப்படும் அவதூறுகளுக்கு அயராமல் தரவுகளுடன் பதில்  அளித்தார். இன்று அவை கணிசமாக குறைந்ததற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்று எண்ணுகிறேன். 



ஒரு சிந்தனை எப்படி சமூகத்தில் ஊடுருவுகிறது என்பதை கவனிப்பது சுவாரசியம். கோட்ஸே என்பவர் தனி மனிதர் அல்ல, அதே விளைவை விரும்பிய திரளின் பிரதிநிதி எனும் பார்வை எனக்கு உண்டு. இந்த பார்வையை நான் வந்தடைய முக்கியமான காரணம் தேவி பாரதியின் ‘பிறகொரு இரவு’ குறுநாவல். காவல்துறையினரும், அரசியலில் அவர் பெயரை சொல்லி ஆதாயம் பெறுபவர்களும்  காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் வெளிப்படும்.  ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ எனும் சிறப்பு பகுதி வெளியாகிறது. தி. அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் அசிஷ் நந்தியின் நீள் கட்டுரை ‘இறுதி சந்திப்பு’ அந்த இதழில் தான் வெளியானது. இக்கட்டுரை வெளியாவதற்கு பதிமூன்று ஆண்டுகள் முன்னர் தி.அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த நந்தியின் இன்னொரு கட்டுரை ஏப்ரல்- ஜூன் 1995 காலச்சுவடு இதழில் வெளியானது. இன்று அக்கட்டுரையை வாசிக்கும்போது மனம் உவகை கொள்கிறது. நந்தியை தமிழ் சிந்தனை பரப்பில் அறிமுகப்படுத்தியது காலச்சுவடின் மிக முக்கியமான பங்களிப்பு என்று கருதுகிறேன். 

‘காந்தியும் கோட்ஸேயும் இந்தியாவின் எதிர்காலம்’ கட்டுரையில் கோட்ஸேயை தனித்த வெறியனாக சித்தரிக்க முயல்வதற்கு மாறாக அவனை ஒரு தரப்பின் பிரதிநிதியாக நிறுத்தி காட்டுகிறார் நந்தி. கோட்ஸேயுடைய அரசியல் வாழ்க்கை 30 களில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமையில் தொடங்கி அவரை சுடுவதற்கு முன்பான வணக்கத்துடன் முடிவடைந்தது என்கிறார். காந்தியை கொன்றதற்காக கோட்ஸேவை விமர்சிக்கும் ஆர்தர் கோஸ்லர், ஆர்வல் போன்றோரிடம் கூட கோட்ஸேவுடைய அதே சிந்தனையே வெளிப்படுகிறது என்கிறார். கோட்ஸே பகுத்தறிவுவாதி, அறிவியலை நம்புபவன், சீர்திருத்தவாதி, தயவு தாட்சண்யமற்ற அரசியலை முன்னிறுத்துபவன். அவன் உண்மையான காரண காரிய அறிவு சித்தாந்தத்தின் நவீன பிரதிநிதி.  அதிநவீன இந்துவாக பிரகடனப்படுத்திக்கொண்ட அவன் இந்தியா சமய சார்பற்ற இனவேறுபாடாற்ற நாடாக திகழ வேண்டும் என்று விரும்பினான். இன்றுவரை ஆர். எஸ்.எஸ் நிலைப்பாடு அதுவே.  காந்தி இவற்றுக்கு நேர் எதிரானவர். அந்த கட்டுரை இப்படி முடிகிறது ‘நவீன உலகின் சார்பாகவும் அதன் ஆர்வல்கள்  கோஸ்லர்கள்  மற்றும் கிஸ்ஸிங்கர்கள்  சார்பாகவும்  காந்தியை கொலை செய்வதைத்தவிர கோட்ஸேவிற்கு வேறு வழியில்லை. காந்திக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோட்ஸேவை விரட்டி ஓட்டுவதற்கு மரணத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு உகந்த வழி இல்லை.’ ஜி. நாகராஜனின் ‘கிழவனின் வருகை’ சிறுகதை கோட்ஸே குறித்த இத்தகைய பகுப்பாய்வை நந்தி எழுதுவதற்கு பலகாலம் முன்னரே முன்வைக்கிறது. நவீனத்துவம் காந்தியை புரிந்துகொள்வதில்  எதிர்கொண்ட சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கர், பெரியார், சாவர்க்கர் உட்பட காந்தியை விமர்சித்த தரப்புகள் நவீனத்துவ தன்மை கொண்டவை என தோன்றுகிறது. இந்த கட்டுரை 1995 ல் என்னவகையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்? காலச்சுவடு வெளியிட்ட கோட்ஸே ஆதரவு கட்டுரையாகவே இது பொருள்பட்டிருக்கும்.   விமர்சனங்களுக்கு பதில் எழுதும் முகமாக தி. அ ஸ்ரீனிவாசன் டிசம்பர் 1995 இதழில் ஒரு குறிப்பு எழுதுகிறார்.  கோட்ஸே நகர்ப்புற, நவீனமயமான, உயர்சாதி மேற்கத்திய வயப்பட்ட தனியான சலுகைகள் வேண்டும் என கோரும் தரப்பின் பிரதிநிதி எனும் நந்தியின் கூற்றை சுட்டிக் காட்டுகிறார்.  காந்தியோ கிராமப்புற சாமானியர்களின் தரப்பை சார்ந்தவர். அவர்களது அறியாமையை வளர்ச்சிக்கான தடையாக காணும் மேட்டுக்குடியினரின் தரப்பு தான் கோட்ஸே எனும் நந்தியின் பார்வையை  விளக்குகிறார். 2008 ஆம் ஆண்டு இதே கோணத்தை விரிவாக பேசும் நந்தியின் கட்டுரை வெளியானபோது இத்தகைய எதிர்வினைகள் வரவில்லை. நந்தியின் கோணம் அறிவு சமூகத்தில் பொது ஏற்பு பெற்றுவிட்டது என்பதையே இது குறிக்கிறது.



 ‘இறுதி சந்திப்பு’ கட்டுரையின் பேசுபொருளை மட்டும் முன்வைத்து தனியாக இன்னொரு கட்டுரை எழுத முடியும். “கிருஷ்ணனுக்குக் கம்சன் எப்படியோ அப்படித்தான் காந்திக்குக் கோட்சேயும். ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் என்றாலும் இருவரும் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், கம்சன் கிருஷ்ணனை அறிந்திருந்த அளவுக்கு அர்ஜுனன் கிருஷ்ணனை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வெறுப்பு அன்பைக் காட்டிலும் பிணைப்பு மிகுந்தது. அன்பு பார்வையை மழுங்கச் செய்யும்; வெறுப்போ அதைக் கூர்மையாக்கும்.” எனும் டி.கே. மகாதேவன் மேற்கோளோடு தொடங்குகிறது கட்டுரை. “அரசியல் படுகொலைகள் ஒவ்வொன்றும் கொலையாளியும் அவனுக்குப் பலியாகுபவரும் இணைந்து கூட்டாகத் தயாரித்தளிக்கும் ஓர் அறிக்கை.” எனும் வரியொரு தீர்க்க தரிசனம் போல ஒலிக்கிறது. காந்தி எதை மாற்ற முயன்றார் என விவாதிக்கும் பகுதி மிகவும் முக்கியமானது.  இந்தியாவின் பாரம்பரிய அதிகார அமைப்புக்குக் காந்திய அரசியல் தரப்பு  இரண்டு தளங்களில் ஆபத்து விளைவிப்பவையாக பார்க்கப்பட்டன. இந்தியச் சமூகத்தின் மையமும் விளிம்பும் எவை? அவற்றின் வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் காந்தியின் முயற்சிகள் முதல் ஆபத்து. இரண்டாவது, சமூகத்தின் உள்ளோட்டமாக இருந்த ஆண்மை, பெண்மை பற்றிய கருதுகோள்களின் மீதான அவரது மறுதலிப்பு. அறிவு புனிதமானதாகவும் பிராமணியத்தன்மைகொண்டதாகவும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சாரப் பின்புலத்தில், கருத்துக்குச் செயலினும் மேலான புனிதத் தன்மை அளிக்கப்பட்ட ஒரு சூழலில் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஏற்காமல் அதற்கு மாறாக  இந்திய அரசியலை அறிவுஜீவித்தனத்திலிருந்து விடுவிப்பதே அவரது முதல் குறிக்கோளாக  இருந்தது என நந்தி எழுதுகிறார். 


காந்தியச் சிந்தனையின் இன்னொரு முக்கிய அம்சமாக நந்தி கவனப்படுத்துவது, மனித சமூகத்தைப் பண்படுத்தும் சக்தியாகப் பெண்மையை அவர் கண்டறிந்ததை தான். ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருதரப்பின் ஆண் அடையாளத்திற்குள் பெண்மையின் அம்சங்களான ஆக்கிரமிக்காத தன்மை, அரவணைக்கும் குணம், அஹிம்சை, இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் 'கலந்து' செயல்படும் தன்மை போன்றவற்றை விரிவுபடுத்தக் காந்தி முயன்றார் என்கிறார். காந்தி பாலியலைக் கடந்த, இந்து சமய மகாத்மாவாக மட்டுமின்றி, கிறித்தவத்தில் புனித பிரான்ஸிஸ்ஸைப் போலக் கிறித்துவின் மணப்பெண்ணாகவும் இருக்க விரும்பினார் என்று கூறுகிறார்.  நாதுராம் கோட்ஸே தனக்குள்ளிருந்த பெண் தன்மையை அழித்து ஆண் தன்மையை முன்னிறுத்தியவன். நாதுராம் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு மூக்குக் குத்தப்பட்டு வளையம் (நாத்) இடப்பட்டது. இதனால் ராமச்சந்திரா என்னும் இயற்பெயர் கொண்ட அவன் நாதுராம் என்று அழைக்கப்படலானான். அவனுக்கு சிறுவயதில் குறிசொல்லும் திறன் இருந்து வளர்ந்து அவனது சமூக பார்வை விரிவடையும் போது அது மறைந்துவிடுகிறது. ஒருவகையில் இதை பெண் தன்மையின் அழிவு என கொள்ளலாம். அந்தராத்மாவின் சன்னமான ஆனால் திடமான குரல் காந்திக்கு ஒலித்தபடி இருந்ததை ஒப்பிட்டு நோக்க வேண்டும். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் தனக்குள்ளிருக்கும் பெண்மையை அழிக்கும் சித்திரம் நந்தியின் மேற்சொன்ன பார்வையின் நீட்சி என கொள்ள முடியும். காந்தி கொலையைப் பற்றி இப்படி எழுதுகிறார்.  “ஒரு சமூகத்தின் மையமாக இருப்பதை உடைத்தெறிந்து, புதியதொரு சுதந்திரமான சமூகத்தையும் பழமையின் சிதைவுகளிலிருந்து புதியதொரு அதிகார அமைப்பையும் ஏற்படுத்த முயன்றதன் மூலம், அச்சமூகத்தின் அதிகார மரபுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்த சக்தி ஒன்றைக் கட்டுக்குள் வைப்பதற்காக, அந்த மரபுகள் முயன்ற கதை இது என்று கொள்ளலாமல்லவா?” தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ கதைக்கு உந்துதலாக நந்தியின் கட்டுரைகள்  இருந்திருக்கக்கூடும் என தோன்றுகிறது. ஜனவரி 2008 காந்தி சிறப்பிதழில் தான் தேவிபாரதியின் கதையும் வெளிவந்தது. நந்தியை வாசிக்காமல் தேவிபாரதியின் வழியே நான் நந்தியின் கூற்றை சென்றடைந்திருக்கிறேன். 


ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பு பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் முக்கியமானது. காந்தி மீது அறிவுஜீவிகளுக்கு இருந்த விலக்கம் பற்றி யு.ஆர். அனந்தமூர்த்தியின்  ‘இன்றைக்கு இருக்கும் காந்தி’ கட்டுரை விவாதிக்கிறது. இன்றைய அறிவுஜீவிகளின் சிக்கலையும் காந்தி அவர்களிடமிருந்து வேறுபடும் இடத்தையும் பேசுகிறது. “அறிவு ஜீவிகளான நாம் நாலைந்து அடி முன்னால் எடுத்து வைத்ததுபோலத் தெரிந்தாலும், நாலைந்து அடி பின்னுக்குப் போயிருப்போம். ஆளுகிறவர்கள் யார் என நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்படி சற்றாவது பேசியிருப்போம். காந்தி சமூகம் மற்றும் தேசம் பற்றிய கேள்வியை ஒரு சம்சாரியின் நிலையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.” அனந்தமூர்த்தியின் அவதானிப்புகள் கூர்மையானவை. காந்திக்குத் தொழில்நுட்பவாதியின் குணம் இருந்ததாக குறிப்பிடும் அவர் காந்தியை ராமனுடன் ஒப்பு வைக்கிறார். புனைவு எழுத்தாளராக அனந்தமூர்த்தியின் சொற்கள் கூர்மையானவை. அவதானிப்புகள் துல்லியமானவை. “ஒரு தேசத்தை ஏககாலத்தில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பார்க்கும் வல்லமை காந்திக்கு இருந்தது” என்பது மிக முக்கியமான அவதானிப்பு. நம்மால் தேசமாக பார்க்கும்போது சமூகமாக பார்க்க முடிவதில்லை, சமூகமாக பார்க்கும்போது தேசமாக காண முடிவதில்லை.  காந்தி நம் துக்கங்களிலும் சங்கடங்களிலும் நிலைத்திருப்பார் எனும் அனந்தமூர்த்தியின் கூற்று அதன் உண்மையால் நிலைபெறுகிறது. நாதியற்றவர்களுக்குரிய போராட்ட வடிவத்தை கண்டடைந்தவராக  காந்தி என்றும் நினைவுகூரப்படுவார். 



சுற்றுச்சூழல், கடவுள் நம்பிக்கை, சத்தியாகிரகம், பொது வாழ்க்கை ஆகிய நான்கு தளங்களில் காந்தியின் தேவை இன்றுமுள்ளதாக அடையாளப்படுத்துகிறார் ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி இன்னும் தேவைப்படுகிறார்’ எனும் கட்டுரையில். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் எழுதிய ‘அறியப்படகுட காந்தி’ இந்த சிறப்பிதழில் எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த கட்டுரை. சில அசலான அவதானிப்புகளை கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.  ‘சுதேசியம் என்பது ஒரு சித்தாந்தம். கதர் என்பது சுதேசியத்தின் மையமான, பருண்மையான உண்மை. கதரில்லாத சுதேசியம் என்பது உயிரற்ற உடம்பு போன்றது. புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மட்டுமே அது தகுதியானது.' எனும் காந்தியின் மேற்கோளை கொண்டு காந்தி கொள்கையை உயிர் என்றும் நடைமுறையை உடல் என்றும் காணும் பொதுப்போக்கை எப்படி தலைகீழாக ஆக்குகிறார் என்பதை காட்டுகிறார். ஸ்டாலின் ராஜாங்கம் வழி நான் அறிந்துகொண்ட அயோத்திதாசர் வரலாறு என்பது இறுகிய பாறையல்ல, நெகிழ்வானது, காலந்தோறும் மாறுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். காந்திக்கும் வரலாறு குறித்து இத்தகைய பார்வையிருந்ததை அறியும்போது வியப்பாக இருந்தது. கிப்பனின் ரோம சாம்ராஜ்யம் எனும் வரலாற்று நூலை காட்டிலும் மகாபாரதம் மேலானது என காந்தி கருதியதாக கிருஷ்ணன் எழுதுகிறார்.  “உண்மைக்கும் புனைகதைக்குமான இடைவெளி மிகவும் குறுகியது. வரலாறே இல்லாத நாடுதான் மகிழ்ச்சியானதென்று தான் கருதுவதாகவும்” காந்தியின் சிந்தனைகளை பற்றி கிருஷ்ணன் எழுதுகிறார். வரலாறு ஆயுதமாக பயன்படக்கூடும் எனும் புரிதல் காந்திக்கு இருந்ததாக தெரிகிறது. கலை குறித்து காந்திக்கும் ராமச்சந்திரனுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் இன்றும் விவாதத்திற்கு உரியது. ‘எப்போது மனிதன் சத்தியத்தில் அழகைக் காண முடிகிறதோ அப்போதுதான் உண்மையான கலை உருவாகும்' என்பதே அவர் நோக்கில் கலைக்கான வரையறை. 'சத்தியத்தையும் அழகையும் பிரிக்க முடியாதா?' என்னும் ராமச்சந்திரனின் கேள்விக்குக் காந்தியின் பதில் 'உண்மையைத் தவிர அழகானது ஒன்றுமில்லை. ஆனால், உண்மை பல விதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.’ வி. ராமமூர்த்தி காந்தியின் கடைசி  இருநூறு நாட்கள் நூலுக்கு எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது. சுகுமாரன் மொழியாக்கத்தில் அம்பேத்கர் பார்வையில் காந்தியம் எனும் அப்துல் மஜீதின் கட்டுரை இதே இதழில் வெளியாகியுள்ளது. காந்தியத்தை விமர்சன நோக்கில் அலசுகிறது. 


தமிழ் காந்திய எழுத்துக்களில் 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பிதழுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று நம்புகிறேன். ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ நூலில்  நந்தி, குஹா போன்றோரின் தாக்கம் வெளிப்படுகிறது.  2008 சிறப்பிதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன. 2020, 2023 சிறப்பிதழ்களில் அணில் நூரியா, திரிதீப் சுஹ்ருத் போன்றோரின் ஒருசில கட்டுரைகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பிற கட்டுரைகள் அனைத்துமே அசலானவை. காந்தியை பற்றி பேசவும் எழுதவும் சில அசலான குரல்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகியுள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்த குரல்கள் இங்கு நிலைபெற வேறு பல ஆளுமைகள் காரணிகளுடன் சேர்ந்து  காலச்சுவடு இதழும்  நிச்சயம் முக்கிய  பங்காற்றியுள்ளது என சொல்ல முடியும். 


காந்தி சிறப்பிதழ்களை தவிர கணிசமாக காந்தியை குறித்து எழுதப்பட்டுள்ளன. அவ்வப்போது விமர்சனபூர்வமான எழுத்துக்களும் பதிவாகியுள்ளன. ப்ரேமின் காந்தியை கடந்த காந்தியம் புத்தக பகுதி இரண்டு கட்டுரைகளாக பிரசுரமாகியுள்ளன. நவம்பர் 2018 இதழில்  ‘காந்தியால் தொடங்கிய தலித்துகளுக்கான பள்ளிகள்’ எனும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை காந்தியின் அரசியல் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயல்தளத்தில் அவரை மதிப்பிட முனைகிறது. “மதுரையின் கீழடி போன்ற பண்பாட்டுப் பெருமையோடு இணையும் நம்முடைய உளவியல், சேவாலயம் போன்ற சமூகப் போராட்டப் பெருமையோடு இணைவதில் தயக்கம் கொள்கிறது. ஏனெனில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குப் பிம்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நமக்கு அது தொந்தரவாய் இருப்பதில்லை. வரலாற்றில் நிகழ்ந்துவிட்டதால் மட்டுமல்ல அதை ஆதரிக்கிறோமோ இல்லையோ அவ்வாறு நடந்தது என்ற அளவிலாவது பலவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குச் சொல்லப்படும் ‘முற்போக்கு’ வரலாறு முற்றிலும் அரசியல் மயப்பட்டது. இதையெல்லாம் தாண்டி காந்தியர்களும் இக்களத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை வரலாற்று நிலை கருதியாவது தலித்துகள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்பலாம்” என எழுதுகிறார். நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ எனும் கட்டுரையில் ‘ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை அனுமதிக்க’த்  தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன’ என்று எழுதுகிறார். தலித்துக்கள் மதுவிலக்குக்காக நடத்திய பத்திரிக்கைகள், சங்கம் குறித்தும் காந்தி- இராஜாஜி ஆகியோர் மதுவிலக்கு சார்ந்து ஆற்றிய பணிகள் குறித்தும் பேசுகிறது. ஜனவரி 2010 இதழில் அரவிந்தன் ‘காந்தி ஏன் உப்பை எடுத்தார்?’ எனும் கட்டுரையில் உப்பின் குறியீட்டு முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஆகஸ்ட் 2017 இதழில் ‘ காந்தி கண்ட பாரதி’ கட்டுரையில் ய மணிகண்டன், பாரதி நடத்திய பாலபாரதம் இதழ் பற்றிய அறிவிப்பு காந்தியின் தென்னாபிரிக்க பத்திரிக்கையான இந்தியன் ஒபினியனில் வெளிவந்துள்ளது என்பதை எடுத்து காட்டுகிறார். தற்போது சித்ரா பாலசுப்பிரமணியம் மதிப்புரைகள், காந்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 



காந்தியை பற்றிய கட்டுரைகளைத் தவிர்த்து ராமச்சந்திர குஹா, அசிஷ் நந்தி, கணேஷ் தேவி, ஜி.எஸ். லட்சுமண அய்யர், நிர்மல் வெர்மா  போன்ற முக்கியமான காந்திய ஆளுமைகளுடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்லால் பகுகுணா, ஈரோடு ஜீவானந்தம், லட்சுமண அய்யர், லாரி பேக்கர், தரம்பால், க.மு நடராஜன், சசி பெருமாள் போன்ற காந்திய ஆளுமைகளுக்கு விரிவான அஞ்சலி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தமிழ் அறிவு சூழலில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் காலச்சுவடுக்கு முக்கிய பங்கு உள்ளது. காந்தியும் அம்பேத்கரும் வேறெந்த தலைவர்களை காட்டிலும் இன்று உயிர்ப்புடன் இருக்க முக்கிய காரணம் அவர்கள் இன்றும் நம்மோடு விவாதித்தபடி உள்ளார்கள் என்பதே. வாசிக்கப்படும் வரை, விவாதிக்கப்படும் வரை வரலாற்று ஆளுமைகள் ரத்தமும் சதையுமாக நம்முடன் இருப்பதாகத்தான் பொருள். நமது அன்றாடங்களை தீர்மானிப்பவர்களாக வாழ்க்கை முறைகளை வழிநடத்துபவர்களாக வரலாற்று ஆளுமைகள் உருமாறுவதற்கு அறிவுலகம் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அவ்வகையில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருக்க காலச்சுவடு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றிவருகிறது. 




 









  •  

ஆயுர்வேதம் உள்ளவரை அவரும் இருப்பார்- டாக்டர். இல. மகாதேவனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு



மே காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை.  நான் இட்டிருந்த தலைப்பு 'மகாதேவன் எனும் எரிநட்சத்திரம்'. 




 "ஆயுர்வேத மருந்துகளுக்கும் பின்விளைவு உண்டு, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும், கல்லீரல் பாதிப்பு நேர வாய்ப்பு உண்டு என ஏழு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவன் எனும் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். ஆயுர்வேதம் புனிதமானது, பின்விளைவற்றது, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள். எல்லாமே இறைத்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொழுது நவீன மருத்துவத்தில் இறைத் தன்மை இல்லையா? போலியோ குணமாக்கப்பட்டதே? சின்னம்மை குணமாக்கப்பட்டதே? அப்பொழுது ரிஷிகளும் சித்தர்களும் எங்கு இருந்தார்கள்? என்ன செய்தது ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும்? ஆதலால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், மனிதனை மதித்தல், நோயாளி குணமாக வேண்டும் என்பதற்கு முன்னுரிமைக் கொடுத்தல், நான் என்ற அகங்காரத்தைத் தள்ளி வைத்தல், இறப்பின் உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்தல்- இவையே இந்த சிக்கலை கடக்க நம்முன் உள்ள தீர்மானமான வழியாகும். மனிதன் மாற வேண்டும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தை நாம் மாற்ற இயலாது. ஆனால் நாம் மாறலாம், நம் பார்வையை மாற்றிக் கொள்ளலாம். நெளிவுசுளிவுடன் நடக்க பழகலாம்." - டாக்டர். இல. மகாதேவன், 'முதற்கால்' நூலிலிருந்து 


பாரதியை பற்றி எண்ணும்போதெல்லாம் அவனொரு எரி நட்சத்திரம் என தோன்றும். கூடவே பாரதியை எளிதாக ‘அவன்’ என உரிமைகொண்டாட முடிவதற்கு என்ன காரணம் எனும் கேள்வியும் எழும். புதுமைப்பித்தனையும் இப்படி அழைக்க முடியும். ஆனால் மௌனியையோ சுந்தரராமசாமியையோ நகுலனையோ அப்படி  ஏக வசனத்தில் அழைக்க முடிவதில்லை. முதன்மை காரணம் பாரதியும் புதுமைப்பித்தனும் இளமையான உருவத்துடனே நம் மனதில் பதிந்துவிட்டார்கள். சுராவையோ நகுலனையோ மௌனியையோ எண்ணுமாபோது அவர்களுடைய முதிர்ந்த தோற்றமே மனதில் உதிக்கும். எரிநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தின் அரிய நிகழ்வு. சில நொடிகளே தென்படும். ஆனால் கண்டவருக்கு அது வாழ்நாள் அனுபவம். தனது முழு ஆற்றலையும் எரிபொருளாக்கி எரிந்து அழியும். இதற்கு நேரெதிரானது அகல்விளக்கு. நின்று நிதானமாக எரியும். நெருங்கி வருபவற்றுக்கு ஒளிவழங்கும். மானுட அறிவு செயல்பாடு இவ்விரு சரடுகளால் ஆனது. இரண்டுக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ளது. எரிநட்சத்திரம் கனவுகளின், இலட்சியங்களின் பிரதிநிதி. அகல்விளக்கு தற்கணத்திகற்கானது. பயன்மதிப்பு கொண்டது. அகல்விளக்கின் தன்மையும் பொருந்தும் என்றாலும் எனது ஆசிரியர் ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனை எரிநட்சத்திரம் என்றே வகைப்படுத்துவேன். ஆயுர்வேதத்திற்காக தனது ஊனையும் உயிரையும் அளித்தவர்.  கலைஞர்களுக்குரிய தத்தளிப்பும் கொந்தளிப்பும் கொண்ட ஆளுமை அவர்.  இலக்கியவாதியாக இருந்திருந்தால் பித்தும் படைப்பூக்கமும் கொண்ட பாரதி புதுமைப்பித்தன் பிரமிள் வரிசையில் இயல்பாக பொருந்தி போயிருப்பார் என தோன்றியதுண்டு. அறிஞர்களுக்குரிய அறிவு பரப்பும் கலைஞர்களுக்குரிய படைப்பூக்கமும் ஒருசேர அமைந்த அரிய ெஆளுமை. 



டாக்டர் இல. மகாதேவன், லக்ஷ்மண சர்மாவிற்கும் சந்த்ராவிற்கும் ஜனவரி 19, 1969 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவி சாரதா. ஒரே மகள் சந்த்ரா இப்போது இளநிலை ஆயுர்வேதம் பயின்று வருகிறார். இவருடைய தாத்தா ஒய். மகாதேவ ஐயர் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற மருத்துவர். நாகர்கோவில் அருகேயுள்ள தெரிசனம்கோப்பு எனும் ஊரில் உள்ள டாக்டர். ஒய். மகாதேவ ஐயரின் ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் முதன்மை மருத்துவராக இருந்தார். சென்னை வெங்கட்ரமணா கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத பட்டப்படிப்பை 1992 ஆம் ஆண்டு முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரியில் காய சிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார். கேரளாவில் உள்ள பங்கஜ கஸ்தூரி கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.  தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறந்த அறிவியல் எழுத்துக்கான தேசிய விருதை ஆயுஷ் துறை மத்திய அமைச்சர் ஸ்ரீ பாத் யஷோ நாயக்கிடமிருந்து பெற்றுள்ளார். தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார். அவருடைய ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ தமிழக அரசின் சிறந்த புத்தக பரிசை வென்றுள்ளது. காலச்சுவடு வெளியீடாக வந்த 'உணவே மருந்து' நூலுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்தாண்டு ஆயுர்வேத மருத்துவர்களுக்கான உச்ச விருதான ‘தன்வந்தரி’ விருது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. சாரதா ஆயுர்வேத மருத்துவமனை இளம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான பயிற்சி களமாகவும் திகழ்கிறது.  ஆயிரக்கணக்கான ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ மாணவர்களும் இளம் மருத்துவர்களும் மகாதேவனிடம் பயின்றுள்ளனர். தமிழகம் கேரளம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட அவரிடம் பயின்றுள்ளனர். ஆறுமாதம் வரை தெரிசனங்கோப்பில் இலவசமாக தங்கி பயிலலாம். அதற்கு பிறகு தொடர விரும்புபவர்களுக்கு மாதச்சம்பளம் உண்டு. இணையத்திலும் பல்வேறு தேசிய சர்வதேசிய கருத்தரங்குகளிலும் பங்கேற்று செறிவான உரைகள் ஆற்றியுள்ளார். சர்வதேச அளவில் ஆயுர்வேதத்தின் முகங்களில் ஒருவர் என சொல்லலாம். ஏப்ரல் எட்டாம் தேதி இரவு இருதய நோய் காரணமாக மரணமடைந்தார். ஃபிப்ரவரி மாத இறுதியில் அடுத்தடுத்து அவரது தந்தையையும் தாயையும் இழந்திருந்தார். மகாதேவனின் மரணம் அவரை அறிந்த அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது. தனிப்பட்ட முறையில் என்னால் அவரது மரணத்தை செரித்துக்கொள்ள இயலவில்லை. அந்த வாரத்தில் அவரை சந்திப்பதாக இருந்தேன். சரக சம்ஹிதையின் மெய்யியல் பகுதி சார்ந்த நூல் ஒன்றும் சித்த மருத்துவர் கு. சிவராமனுக்கும் மகாதேவனுக்குமிடையிலான உரையாடல் நூலொன்றும் என அவருடன் சேர்ந்து இரு நூல்களை எழுதும் திட்டமிருந்தது. அவரது தாத்தா ஒய். மகாதேவ ஐயரின் மரணத்தை பற்றி சொல்லும்போது "உடலைப் பொருட்படுத்தாமல், வெறி பிடித்த மாதிரி உழைத்ததினால் வந்த நிலை என்று சொல்லலாம்" என குறிப்பிடுகிறார். மேற்சொன்ன காரணம் மகாதேவனின் மரணத்திற்கும் பொருந்தும். அவரை நேர்காணல் செய்வதற்காக நாகர்கோயிலில் இறங்கி 5 மணிக்கு தெரிசனம்கோப்பு சென்று சேர்ந்த போது வாசல் பகுதியில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் எட்டு மணி வரை வாசிப்பது அவரது வழக்கம். தனது வாசிப்பு முறையைப் பற்றி கூறும்போது “இப்போது ஒரு புது நோயாளி வருகிறார், புது பரிசோதனை முறை வருகிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்கிறேன். எல்லா பெரிய கருத்தரங்குகளிலும் உரையாற்ற அழைக்கிறார்கள், அதை புதியமுறையில் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தொடர் வாசிப்பு தேவை. ஆயுர்வேத பட்ட மேற்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியுள்ளதால் அதற்காகவும் வாசிக்கிறேன். இதற்கு பிறகு இந்த நோய்க்கு சித்தமருத்துவத்தில் என்ன மருந்து?  பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்படாத சில நாட்டு மருத்துவ முறைகள்  உள்ளன. அதில் என்ன சிகிச்சை கூறப்பட்டுள்ளது? இப்படி நான் பலவற்றுடன் ஒப்பிட்டுப் படிக்கும் போது தான் அறிதல் முழுமையடைகிறது. இதில் பட்ட மேற்படிப்புக்கு மட்டும் தான் பாடம் வருகிறது. 70 % நடைமுறைக்கு பயனளிக்க கூடியதைத் தான் படிக்கிறோம். இது மருத்துவம் சார்ந்த படிப்பு. இப்போது 50 % சித்த மருத்துவம் தான் வாசிக்கிறேன். 15 % நாட்டு மருந்து சார்ந்த புத்தகங்கள், குமரி மாவட்ட மருத்துவப் புத்தகங்கள், 10% ஆயுர்வேதம், 20% ஆங்கில மருத்துவப் புத்தகங்கள், தொடக்கக் காலங்களில் நிறைய ஆயுர்வேதப் புத்தகங்கள் படித்ததினால் அதை குறைத்து கொண்டேன்.” என கூறுகிறார்.‌   ஆயுர்வேதம், சித்த மருத்துவம், குமரி மாவட்ட நாட்டு மருத்துவ முறைகள், நவீன மருத்துவம், இலக்கியம் என பலதரப்பட்ட வாசிப்பு அவருக்கு உண்டு. கருத்தரங்குகள், வகுப்புகள் என தொடர் பயணங்கள். மருத்துவ ஆலோசனைக்கு அமர்ந்தாரெனில் எப்படியும் நாளைக்கு நூறு புற நோயாளிகளை காண்பார். உள்நோயாளிகளை நாளுக்கொருமுறையோ இருமுறையோ பார்ப்பார். இத்தனைக்குமிடையே சுமார் 16000 பக்கங்கள் ஆயுர்வேதம் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.  


நான் மகாதேவனின் முதன்மை மாணவர்கள் போன்று அவருடன் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ உடனிருந்து பயின்றவனில்லை. ஆனால் எப்போதும் அவரையே எனது ஆயுர்வேத ஆசிரியராக கருதிவந்துள்ளேன். அவ்வளவாக பரிச்சயமில்லாத ஏதேனும் ஒரு புதிய நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் மகாதேவனின் நூல்களே முதன்மை புகலிடம். சமாளிக்க சிரமப்பட்டால் அவரிடம் அனுப்பி வைப்பேன். என் முடியும் முடியாது முயன்று பார்க்கலாம் என தெளிவாக சொல்லிவிடக்கூடிய மருத்துவர் அவர். தனது எல்லைகளை அறிந்தவரே அறிஞராக இருக்க முடியும். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள் அவரை தங்களது ஆசிரியராக கருதுதிறார்கள். எனது தனிப்பட்ட துயரத்திற்கு பெரிய பொருளேதும் இல்லை. மகாதேவனின்  எத்தகைய ஆளுமை, அவரது பங்களிப்பு என்ன? ஆகிய கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியே இந்த கட்டுரை. 

ஆயுர்வேத உலகில் அவர் அறிமுகமான புதிதில் ஒரு கலகக்காரராகவே அறிமுகமானார். சமஸ்கிருத பாடமுறையை அடிப்படையாக கொண்டது ஆயுர்வேதம். மகாதேவன் நடைமுறை பயன்பாடை கருத்தில் கொள்ளாத பண்டித மரபை கடுமையாக விமர்சித்தார். “ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருத நாட்டம் அவசியமானதுதான். ஆனால் சமஸ்கிருதத்திற்குள் ஆழ்ந்து மூழ்கி தம்மை இழந்துவிட்டால் சிகிச்சையில் நாட்டம் குறைந்து பின்தங்கி விடுவார்கள். அவர்களுக்கு புத்தக அறிவு அளிக்கும் ருசியே போதையாகிவிடும். மருந்து செய்பவர்களின் வலி, மருந்து கிடைக்காததன் வலி, நோய் குணமாகவில்லை என்பதால் வரும் ஏக்கம் என இவை எதையும் அவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் அவர்களின் பாண்டித்தியத்திற்கு கல்லூரியில் நல்ல வேலை கிடைத்து விடுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவார்கள். சமஸ்கிருத அறிவு ஆயுர்வேதத்திற்கு நடைமுறை பயன்பொருட்டே முக்கியமானது என்பதை மறந்துவிடுவார்கள். பதார்த்த விஞ்ஞானம் போன்ற அடிப்படை பாடங்களை நூலறிவை கொண்டு எளிதாக நடத்தியே காலம்கடத்திவிடுவார்கள். மருத்துவத்தை தொழிலாக கொண்ட நாம் அப்படி இருக்க முடியாதே.  இரவு இரண்டு மணிக்கு, நன்கு உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,  எழுப்பி, இரத்தம் கசிகிறது, என்ன செய்வது என கேட்பார்கள்.” மிக தெளிவாக ஆயுர்வேத கோட்பாட்டுவாதிகளுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் இடையேயான வேறுபாடை முன்வைக்கிறார். இவ்வகையான விமர்சனங்கள் தொடக்க காலத்தில் ஆயுர்வேத தூய்மைவாத தரப்பினால் அவர் தீவிரமாக எதிர்க்கப்பட காரணமானது. மேடையுரைகளில் அவர்களை கிண்டல் செய்தார். தீவிரமாக விமர்சித்தார். நேர்காணலிலிருந்து ஒரு உதாரணத்தை சுட்டுவதாக இருந்தால், இந்த பதிலை எடுத்துக்கொள்ளலாம் “சில வேதப் பாரம்பரிய பிராமணர்கள் வினோதமான சில கருத்துக்களை சொல்வார்கள். எனக்கு அவற்றில் நம்பிக்கை கிடையாது. அமெரிக்கா போய் கர்மா செய்தால், அந்த கர்மாவிற்கு பலன் கிடையாது. பஞ்சகச்சம் கட்டவில்லையென்றால் அந்த ஆற்றல் பூமிக்குப் போய்விடும். இப்படி பல கதைகள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் போய்க் கடுக்காய் கொடுத்தால் எந்த நாட்டு நோயாளிக்கும்  பேதி போகும். நேர்வாளம் கொடுத்தால் பேதி போகத் தான் செய்யும். மதனபலம் (மலங்காரைக்காய்) கொடுத்தால் வாந்தி வரத் தான் செய்யும்.” மகாதேவன் என பெயர் குறிப்பிடாமல் எங்கள் வகுப்புக்களில் அவருக்கான மறுப்புகள் சில வேளைகளில் கிசுகிசுப்பாகவும் சில வேளைகளில் வெளிப்படையான எரிச்சலுடனும் சொல்லப்பட்டன. சாத்திரத்தின் மீதான நம்பிக்கையின்மையே அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்றார்கள். நவீன மருத்துவ நோக்கை ஆயுர்வேதத்திற்குள் பொருத்தி பார்ப்பது பெரும் பிழை, தேவையில்லாத குழப்பத்தையே விளைவிக்கும் என்றார்கள். மாணவர்கள் அவரை நெருங்கினால் வழிமாறி சென்றுவிடுவார்கள் என அஞ்சினார்கள். ஆனால் இவை எங்களுக்குள் மகாதேவன் மீதான ஈர்ப்பை பெருக்கியதே அன்றி குறைக்கவில்லை. நவீன‌‌ மருத்துவம் குறித்து அவர் கொண்டுள்ள பார்வை பிற ஆயுர்வேத பட்டதாரிகளிடமிருந்து வேறானது.‌  “ஆயுர்வேதத்தை முழுமையாக, நன்றாகப் படித்த, குண சித்தாந்தங்களை புரிந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்ட பிறகு தான் நான் நவீன மருத்துவத்தை ஊன்றி அறியத்தொடங்கினேன். நான் நேரடியாக நவீன மருத்துவத்தை கற்க தொடங்கி இருந்தால் குழம்பிப் போய் இருப்பேன். சமூகத்திற்குப் பெரிய தீங்கு விளைவிப்பவனாக மாறி இருப்பேன். இப்பொழுது ஸ்டேட்டின் (Statin) சாப்பிட்டால்  கல்லீரலில் சுரக்கும் நொதிகள் கூடி கெண்டைக்கால் வலி ஏற்படுகிறது. கால்சியம் சேனல் தடுப்பான்களை (calcium channel blockers) சாப்பிட்டால் கால் வீக்கம் வருகிறது. அம்லோடிஃபினோ (amlodipine), நிஃபிடிஃபினோ (Nifedipine) (உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்)  சாப்பிட்டு காலில் வீக்கத்துடன் ஒருவர் வருகிறார் என்றால் ஆயுர்வேத மருத்துவருக்கு இது பற்றி தெரிவதில்லை. சோபம் (வீக்கத்தை முதன்மை குறியாக கொண்ட நோய்)  என்று நினைத்து புனர்னவாதி கஷாயத்தில் சந்திரபிரபா சேர்த்து கொடுத்து, இரவு இரண்டு ஸ்பூன் தசமூல ஹரிதகி சாப்பிடுங்கள் என்கிறார். அவர் எழுதியது சரி; தவறல்ல; ஆனால் நோய் காரணம் ஆங்கில மருந்தில் வருவது என்று அவருக்குத் தெரியவில்லை. மருந்தை மாற்றி விட்டு வேறு ஒரு நவீன மருந்தை பரிசீலனை செய்து இருந்தால் நோயாளி குணமாகி இருப்பார். இந்த மாதிரி தவறுகள் நவீன மருத்துவமும்  படித்தவர்களுக்கு வராது” என்கிறார். ஆயுர்வேதத்தை தர்க்கப்பூர்வமான மருத்துவமுறையாக மட்டும் காணும் குறைத்தல்வாத நோக்கையும் அவர் ஏற்கவில்லை என்பதே அவரை மேலும் முக்கியமானவராக ஆக்குகிறது. “ஆயுர்வேதம் என்பது நம்முடைய மெய்யறிவு சார்ந்த ஒரு சாத்திரம். அபர வித்யையில் இருந்து பர வித்யைக்கு (பர வித்யை என்பது பிரம்மத்தை அறிவதற்கான கல்வி. அபர வித்யை என்பது உலகியல் தளத்தில் உள்ள பிற அறிவுத்துறைகள்) கொண்டு போகக் கூடிய சாத்திரம் அதாவது உலக அறிவில் இருந்து மெய்யறிவுக்கு தயாராக்கும் வகையில்  நம்  ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சீராக்குகிறது” என தெளிவாக ஆயுர்வேதத்தை வீடுபேறுக்கான மார்க்கத்தின் ஒரு பகுதியாக சுட்டுகிறார்.  முழுமையான ஆயுர்வேத வைத்தியனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு “சிவ வாக்கியர்,  தாயுமானவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் குயில்பாட்டு, வசன கவிதைகள், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றை ஏற்கனவே ஆழ்ந்நு படித்துள்ளேன். முன்பு வாசித்ததை தான் இப்பொழுது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புராணங்களைம், ஸ்மிருதிகளைம் வாசிப்பதை  நிறுத்தி விட்டேன். ஆனால் இப்போதும் பட்டினத்து பிள்ளையார் திரட்டு, மெய்ஞான திரட்டு போன்றவை எல்லாம் வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு சரகம், சுஸுருதம், வாக்பட்டமும் மட்டும் தான் ஆயுர்வேதம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. முழுமையை எய்த முடியாது” என கூறுகிறார்.  

தர்க்கப்பூர்வ மருத்துவமுறை - வீடுபேறு அடைவதற்கான சாதனை மார்க்கத்தின் ஒரு பகுதி, ஆகிய இவ்விரு துருவங்களுக்கு இடைப்பட்ட பாதையை தேர்கிறார். 



கவிஞர் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த அஞ்சலி குறிப்பில் மகாதேவனை இராமானுஜருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அந்த ஒப்பீடு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதப்பட்டதாக தொனிக்கலாம். ஆனால் அதில் நியாயமில்லாமல் இல்லை. சர்வநிச்சயமாக மகாதேவனை ஆயுர்வேதத்தின் வீச்சை அதிகரித்து எல்லைகளை விஸ்தரித்த சீர்திருத்தவாதியாக காண இடமுண்டு. குருகுல கல்வியில் நவீன ஜனநாயக தன்மை இருக்காது. சாதி, மதம் பாலினம் என பல்வேறு தடைகள் உண்டு. இன்று ஆயுர்வேத கல்லூரிகளில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் பயில்கிறார்கள். குருகுல கல்வியில் இது சாத்தியமாயிருக்காது. ஆனால் ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவு துறைகள் நவீன கல்விமுறையால் முழுமையாக கடத்தமுடியாது. இந்த இடைவெளியை மகாதேவன் நிரப்பினார். தெரிசனங்கோப்பு சாரதா மருத்துவமனை குருகுலத்தன்மையுடையது தான் ஆனால் அங்கு சாதி, மத, இன, தேசிய, பாலின பாகுபாடு என எதுவும் கிடையாது. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே ஒரே வரையறை. குருகுலங்களின் மரபு மருத்துவமுறைகளில் உள்ள இன்னோரு முக்கியமான சிக்கல் அதில் பேணப்படும் இரகசியம். ஒருவித மூடுண்டத்தன்மை உண்டு. மருந்துகளுக்கு குழுவுக்குறி பெயர்கள், செய்முறைகளுக்கு தெளிவில்லாத விளக்கங்கள் என பல தடைகள். மகாதேவனிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அனுபவம் வழி அவரடைந்த அத்தனை புரிதல்களையும் நேரிலும் புத்தகங்களிலும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அவரது கருத்தரங்கு உரைகளும் வகுப்புகளும் மிகுந்த தனித்தன்மையுடையது “காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தால் எப்படி சொக்கிப் போய்விடுவார்களோ, அப்படி  மதியம் 2.30 மணிக்கு வகுப்பு என்றால் கூட அப்படியே நன்கு விழித்துக்கொண்டு மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வெறும் பேச்சல்ல, அவர்களுக்குப் புரியும் போது தான் அதனுடைய ஆழமும், நுட்பமும் தெரியும். ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று திருமூலர் சொன்னது போல படித்ததைப் பகிரும் போது அனுபவம் மேலும் பெருகத் தானே செய்யும்” என குறிப்பிடுகிறார். அவரது வகுப்புக்களில் இந்த லயிப்பை உளமார உணர்ந்திருக்கிறேன். 


“இளம் மருத்துவர்களுக்கு நான் கூறும் மிக முக்கியமான ஆலோசனை ஒன்றுண்டு. ஆர்வம் மேலிட சாஸ்திரத்தை நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது” என கூறுகிறார். அப்படி நிறுவ முற்படுவது ஒருவகையில் அபத்தம். பண்டித மரபு நூல்களில் உள்ளவற்றை மாறா சொல் என கருதுகிறது. நிரூபனத்துக்கு அப்பாலானது என்று முன்வைக்கிறது. ஒருவர் ஏன் மருத்துவம் புரிய வேண்டும்? சாஸ்திரத்தை உண்மை என்று நிறுவுவதற்கா இல்லை நோயாளியின் நோயை தீர்ப்பதற்கா? நவீன மருத்துவத்தில் இந்த கேள்வியே எழாது. ஏனெனில் அவை சான்றை உருவாக்கிய பின்னரே நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் மரபு மருத்துவமுறைகள் களப் பயன்பாட்டிலிருந்து சான்றுகளை தொகுத்து கொள்பவை. ஆகவே மீண்டும் மீண்டும் இந்த முரண்பாடு எழும். மகாதேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான தொடக்கக்கால பாடமென்பது “நான் ஆயுர்வேதத்தை காப்பதற்காக ஆயுர்வேதத்தை பின்பற்றவில்லை. நோயாளியை காப்பதற்காகவே ஆயுர்வேதத்தை பின்பற்றுகிறேன்.” நோயாளி மைய நோக்கை மகாதேவன் எப்படி அடைந்தார் என்பதை அவரே நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். “இது நடந்ததும் வைத்யநாதன் சாருடன் இருந்தபோது தான். ஒரு  22 வயது இளைஞன், கடும் அசதி, உடல் எடை சரசரவென குறைகிறது என  சொல்லிக்கொண்டு வந்தான். வைத்யநாதன் சார், அவனுடைய நோயை க்ஷயம் (தேகம் வற்றி போதல்) என்று கண்டறிந்து, அக்னி தீபனம் (பசியைத் தூண்டுதல்), ஸ்ரோதோ சோதனம் (நாள சுத்தி), ப்ரும்ஹணம் (உடலை தேற்றுதல்), லேசான விரேசனம் (பேதிக்கு) என சிகிச்சை அளித்தார்  சியவன பிராசம், கூஷ்மாண்டம் (வெண்பூசனி)  என ரசாயனமாக (ஆயுராவேதத்தில் ரசாயனம் என்பது ஆங்கிலத்தில் கெமிக்கல் எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. காயகல்பம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஆயுர்வேத ரீதியாக அப்பழுக்கற்ற சிகிச்சை அது. ஒவ்வொன்றையும் சரியாக செய்தார். ஆனால் ஒருநாள் மயங்கி விழுந்தான். நவீன மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சர்க்கரையின் அளவு 680 சர்க்கரை நோயின் முற்றிய நிலை (diabetic ketoacidosis- இன்சுலின் இல்லாத நிலையில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கீட்டோன்களை உடல் அதிகம் உற்பத்தி செய்து ரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கும் ஆபத்தான நிலை) இருந்தது இவர் கொடுத்த லேகியம் அனைத்தும் வீணாகப் போயிற்று. எவ்வளவு பெரிய மனிதர்? அவர் சிகிச்சையிலேயே தவறு நிகழ்ந்து விட்டதே. அது அவர் தவறில்லை அவருக்கு இது கற்றுக் கொடுக்கப்பட வில்லை.ஆகவே அவர் கணக்கில் கொள்ளவில்லை தவறிபோனது.  இப்படிப்பட்ட சூழல்களில் நவீன மருத்துவம் கற்றால் தான் இந்த தவறுகள் குறையும். நான் அப்போதே டேவிட்சன் பாட புத்தகத்தை  வாங்கிவிட்டேன்.” வைத்தியநாதன் அவரது ஆசிரியர். தனது குரு என செல்லுமிடத்திலெல்லாம் அவரை முன்னிறுத்துவார். குருவின் முறைமைகளின் எல்லையை கண்ணுற்று அங்கிருந்து தனக்கான தனிப்பாதையை வகுத்துக்கொள்வதற்கு அபார மனத்திண்மை வேண்டும். அப்படியான தனிப்பாதை பயணத்தை ஆசிரியரின் மீதான அவமரியாதையாகவோ வெற்றியாகவோ கருதிக்கொள்பவரும் இல்லை.   



நேர்காணலில் நோயாளி மையப் பார்வை முழுமையாக துலங்கி வரும் பகுதி என இதைச் சொல்வேன். “சரக சம்ஹிதை சூத்ர ஸ்தானம் ‘மகாசதுஸ்பாதம்’ அத்தியாயத்திலேயே இந்த கேள்வி வருகிறது. இதில் மைத்ரேயர் என்பவர் ஆத்ரேயரைப் பார்த்து “பதினாறு குணங்களும் நிரம்பிய பிஷக்,(மருத்துவன்) திரவ்யம், (மருந்து) உபஸ்தா,(செவிலி) ரோகி (நோயாளி) இருந்தும், ஒழுங்காக கற்று சரியாக மருந்து கொடுக்கிறேன் ஆனால் பலனில்லை. ஒரு போலி அளிக்கும் மருந்து பலனளித்து எழுந்து நடந்துவிட்டானே? முறைப்படி நான் கற்றதற்கும் சிகிச்சை செய்ததற்கும் என்ன மதிப்பு?"   என்று கேட்கிறார். இது 20-வது அத்தியாயத்தில் வருகிறது, “மித்யாஹாதி மைத்ரேய” (குழம்பிய புரிதல் கொண்ட மைத்ரேயா) என்று பதில் சொல்லத் தொடங்குகிறார் ஆத்ரேயர். மிக பிரமாதமான பதில் அது. “ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான். அவனைத் தாண்டி செல்கிறாய். கையை கொடுக்கிறாய். அவன் எழுந்திருக்க வேண்டும் என்று தலைவிதி இருந்தால் எழுந்திருப்பான். இல்லையென்றால் அப்படியே கிடப்பான். நீ கை கொடுக்க வேண்டியது உன் கடமை. கை கொடுக்காமல் சென்றால்  அது உன் தவறு. கை கொடுப்பதுதான் சுதர்மம். 'யாவத் கண்டகதா ப்ராணா தாவத்காரியம் சிகிட்சிதம்.' பிராணன் கண்டத்தில் சென்று கொண்டிருக்கும் வரையில் சிகிச்சையை செய்ய வேண்டும் என்கிறார். வேறெந்த   மருத்துவத்தில் இப்படி சொல்லப்பட்டு  இருக்கிறது? சரகரைத் தவிர வேறு யார் இதைப் பற்றி பேசுகிறார்கள்? நீ முயற்சி செய்துக் கொண்டே இரு. இறக்கும் வரை மருந்து கொடுத்துக் கொண்டே இரு. நோய் குணமாகுகிறதோ, இல்லை குணமாகவில்லையோ அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ மருந்தை கொடு. அது தானே உன்னுடைய சுதர்மம். ஒரு மருந்தை கொடு அது கேட்கவில்லையா? அடுத்ததைக் கொடு, அதுவும் கேட்கவில்லையா? அதற்கு அடுத்ததைக் கொடு. இந்த வழிகாட்டலை முழுமையாக  கடைப்பிடிக்கிறேனா, என்று சொல்ல முடியாது. 70% வரை கடைப்பிடிக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் முழுவதுமாக கடைபிடிப்பது சவாலானது. ஆனால் அடைய வேண்டிய நிலை அவர்கள் கோடிட்டு காட்டும் அந்த லட்சியம் தான். ஒரு நாள் அந்த லட்சியத்தை உறுதியாக அடைவோம். புற தேவைகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு அந்த லட்சியத்தை மட்டுமே இலக்காக கொள்ளும்போது நிச்சயம் சாத்தியமாகும்.” மகாதேவனிடம் கற்றவர்கள் இணையவழியில் அவருக்கு நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். கேரளத்தில் ஆயுர்வேந பேராசிரியராக உள்ள ஒருவர் அவரது கல்லூரி பருவத்து நினைவை பகிர்ந்துகொண்டார். மகாதேவன் அன்று மருத்துவமனைக்கு வரவில்லை. உள்ளூர் வாசியான ஒரு குடும்பம் அவரை பார்த்தே ஆக வேண்டும் என காய்ச்சலில் துவண்டு கிடக்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இல்லத்திற்கு வரச்சொல்கிறார். மலம் வெளியேறவில்லை காய்ச்சல் அடிக்கிறது. நாடி நோக்கிவிட்டு உடனடியாக வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவரை காண பரிந்துரைக்கிறார். அருகிலிருந்த பேராசிரியருக்கு குழப்பம். வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுத்து பார்க்கும் சுதர்சன மாத்திரை அம்ருதாரிஷ்டம் என கொடுத்து பார்த்திருக்கலாமே என கேட்கிறார். அநேகமாக குடலில் பொத்தல் (Intestinal perforation) விழுந்துள்ளது. உடனடியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என பதில் சொல்கிறார். அவரது அனுமானம் சரி. நெடுநாளாக குடலில் டி.பி பாதிப்பு இருந்து குடல் பொத்தல் ஏற்பட்டுள்ளது. இரவு புற நோயாளிகளை பார்த்துவிட்டு நவீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த குழந்தையை பார்த்து அவர்களது பெற்றோருக்கு நிலையை விளக்கிச்சொல்கிறார். மகாதேவன் எனும் மிகச்சிறந்த மனிதர் வெளிப்பட்ட தருணங்களில் ஒன்று. நோய் கண்டறிதலில் அல்லது சிகிச்சையில் ஏதும் பிழை ஏற்பட்டால் அவரால் அன்று உறங்க முடியாது. தனிப்பட்ட துயராக, தோல்வியாக வரிந்துகொள்வார். பல சமயங்களில் இதுவே மன அழுத்தத்தின் எல்லைவரை அவரை கொண்டு செல்லும். உள்ளுணர்வு என்பது மனச்சாய்வாக இல்லாமலிருக்க பெரும் அறிதலும் பயிற்சியும் வேண்டும். நோய் கண்டறிதலில், அதிலும் குறிப்பாக அரிய நோய்களை கண்டறிவதில் மகாதேவனுக்கு இணையான இன்னோரு ஆயுர்வேத மருத்துவரை நான் கண்டதில்லை. 

சில உள்ளூர் நண்பர்கள் மகாதேவனை விட சாரதா வைத்தியசாலையில் உள்ள மற்றொரு முத்த மருத்துவரான சிதம்பரம் அவர்களை காண்பதையே விரும்புவதாக என்னிடம் சொன்னதுண்டு.‌ தொடக்கத்தில் எனக்கிது ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களது பார்வையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மகாதேவன் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து கைவிடப்பட்ட அரிய நோயாளிகளையே பார்த்து அவற்றில் நிபுனத்துவம் பெற்றுவிட்டதால் அவரால் எளிய சளி இருமலைக்கூட அதன் உச்ச சாத்தியத்திலிருந்தே சிந்திக்க முடியும். 


நோயாளி மைய நோக்கைப் போன்றே ஆயுர்வேதம் பயிலவரும் சாமானிய  மாணவர்கள் குறித்து அதிகம் சிந்தித்ததும் அவரே. குறிப்பாக தமிழக மாணவர்கள் குறித்து நிறைய கவலைப்பட்டார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் வருகைக்கு முன் பின் என தமிழக ஆயுர்வேத கல்வியை இரண்டாக பிரிக்கலாம். தமிழ்வழியில் பயின்றவர்கள் அரசு கல்லூரியின் வருகைக்கு பிறகு அதிகம் ஆயுர்வேதம் பயின்றனர். “நான் படித்த  காலத்தில் இரண்டு பேர் தமிழ் மாணவர்கள். மற்றவர்கள்  எல்லோரும் மலையாள மாணவர்கள்.  தமிழ் மாணவர்கள் எப்போதும் வருடா வருடம் தேர்வில் தோற்றுப் போய்விடுவார்கள். காரணம் சமஸ்கிருத அறிவு குறைவு என்பதே. அவர்களுக்கு நான் பாடம் எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் நான் தான் குறிப்புகள் எழுதி சொல்லிக் கொடுத்தேன்; அவர்களை தேர்ச்சியடைய வைத்தேன்.  தமிழ் மொழியில் தான் நான் படித்தேன், எனக்கு வடமொழி ஆற்றல் குறைவு என முன்னரே சொன்ல்லியிருந்தேன். தமிழில் படித்து தான் நான் தேர்ச்சியடைந்தேன். தமிழ் மேல் எனக்கு தீராத பற்று உண்டு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆரோக்ய ரக்ஷா கல்பத்ருமம், ஸஹஸ்ரயோகம் போன்ற புத்தகங்கள் பரிச்சயம் இல்லை. மலையாளம் தெரியாதவர்கள் படிக்கட்டுமே என்று எழுதினேன். பழைய கையெழுத்து பிரதிகளை வெளியில் கொண்டு வந்தேன். எனது தமிழ் படைப்புகளில் முக்கியமானது திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம். ஆயுர்வேதத்தின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது. தமிழில் புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை என்றாலும் ஆங்கில புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்க தயங்குகிறார்கள். அதுவும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்க நினைக்கிறார்கள். மூன்றுக்கு ஒன்று இலவசமாக வேறு  கேட்கிறார்கள். இதுதான் நிலை.” ஆயுர்வேத அடிப்படைகள் குறித்து தமிழில் அவர் எழுதிய நூல்கள் அத்தனையும் முக்கியமானவை. ஆயுர்வேத நூல்களில் முப்பெரு நூல்கள் என சரகர், சுசுருதர், வாக்பட்டர் இயற்றிய நூல்களை குறிப்பிடுவது வழக்கம். இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை. உண்மையில் மகாதேவனின் ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ சமகாலத்து சம்ஹிதை நூல் என துணிந்து சொல்ல முடியும். சித்த மருத்துவத்தின் மருந்துகளை முக்குற்றங்களின் பார்வையில் அணுகி பார்க்கும் நூலும் மிக முக்கியமானது. தமிழ் மருத்துவ சூழலுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியது.


மகாதேவனால் நவீன மருத்துவர்களுடனும்  ஆக்கப்பூர்வமாக உரையாட முடிந்தது. எந்த அறிகுறிக்கு என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்தவர். அலோபதி மருத்துவர்களின் நன்மதிப்பை பெற்றதுடன் நல்லுறவையும் பேணினார். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என இடப்பட்ட அரசாணை குறித்து அவருக்கிருந்த பார்வை இது :- “குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என கிளம்பினால், அது ஆங்கில மருத்துவர்கள் மனதைப் புண்படுத்தும், நட்பை கெடுக்கும். இது சரி என்றால்,  ஆங்கில மருத்துவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அவர்களும் பச்சிலை மருந்தை கொடுக்கட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஒப்புக்கொள்வோமா?” மனதை புண்படுத்தும் நட்பை கெடுக்கும் என்பதையே முதன்மையான காரணமாக குறிப்பிடுகிறார். தமிழக சூழலில் சித்த மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்குமிடையே ஒருவிதமான இறுக்கம் எப்போதும் உண்டு. மகாதேவன் சித்த மருத்துவத்தை ஆழ்ந்து கற்றார். உள்ளார்ந்த மதிப்புடன் அணுகினார். இவ்விரு முறைகளுக்கிடையே முக்கியமான பாலமாக திகழ்ந்தார். இரண்டையும் இரு கண்கள் என பிரகடனம் செய்தார். சித்த மருந்துகள் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் அவருடைய மிக முக்கியமான பங்களிப்பு என்பது ஆசனவாய் வழி மருந்து செலுத்தும் வஸ்தி சிகிச்சை முறையை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் சில முக்கியமான பங்களிப்பை செய்துள்ளார். எத்தகைய ஆய்வுகள் தேவை எனும் கேள்விக்கு “ஆயுர்வேதத்தினுடைய ஆராய்ச்சி என்பது நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையை ஆவணப்படுத்துவதுதான். நோயாளிகளின் நோய் நிலையை சிகிச்சையின் வழி ஆவணப்படுத்துவது மிக முக்கியம்.  ஒவ்வொரு நோயாளிக்கும் நோய் எப்படி குணமானது என களத்தில் மேற்கொண்ட கருத்தினையும், கருதுகோளையும், செய்முறையையும், படிப்பினைகளையும் உள்ளடக்கியது ஆகும்” என பதிலளிக்கிறார். 


மகாதேவனின் தொடக்க கால மேடையுரைகளிலும் வகுப்புகளிலும் ஒருவித அவசரம் தொனிக்கும். இதோ இப்போது ஏதேனும் செய்தாக வேண்டும் எனும் அவசரம் கேட்பவரைத் தொற்றிக்கொள்ளும். அவரது பல்வேறு கருத்துக்கள் வலுவாக ஒலித்ததாலேயே சர்ச்சைக்குள்ளாகின. நாடி பார்த்து நோயறிதல், வர்ம சிகிச்சை போன்றவற்றை எல்லாம் முழுமையாக நிராகரித்தார். அவற்றை புறவயமாக அனுக இடமில்லை என்பதே அவரது வாதம். ஆனால் காலப்போக்கில் இவற்றில் அவரது பார்வை மாற்றமடைந்ததை காண முடிகிறது. “வைத்யநாதன் சார் இறப்பதற்கு முன்னால் என்னிடம் ‘ஐயாயிரம் நோயாளிகளுக்குத் தனியாகச் சிகிச்சை அளிக்காத வரைக்கும் அடுத்தவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காதே’ என கூறினார். இந்த தகுதி மிக முக்கியமானதல்லவா? 97-லிருந்து 2007 வரைக்கும் நான் ஆற்றிய உரைகள், எழுதியவற்றில் எல்லாம் நிறைய பிழைகள் உள்ளன. ஒரு அமைதி ஏற்படாமல், முழு சிகிச்சை அனுபவம் ஏற்படாமல், சாத்திரத்தை மட்டும் படித்து, மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்று விட்டோம் என்ற அகங்காரத்தில் பேசிய பேச்சு தான் பெரும்பாலும்.  இப்போது அப்படி இல்லை. பேச்சில் நிதானம் கூடியிருக்கிறது. முடியும், முடியாது என்ற ஹித  அஹித விசேஷ (நன்மை தீமை பகுத்தறிவு) ஞானம் உள்ளது. என்னாலேயே என்னை நோக்க முடிகிறது. அதனால் நான் பழைய பதிவுகளை (ரெக்கார்டிங்கை) எல்லாம் அழித்துவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அமெரிக்காவில் ஆற்றிய உரைகள் எல்லாம் முழுவதுமே பாட புத்தகத்தில் உள்ளவை தான். இப்பொழுது மூன்று ஆண்டுகளாகப் பேசிய உரைகள் தான் உண்மை. இனிமேல் நான் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் ஆறரை லட்சம், ஏழு லட்சம் நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை சொல்கிறோம் என்றால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.” என்கிறார். தர்க்கப்பூர்வ முறைகளை மட்டுமே கறாராக நம்பியவர் நாடி வர்மம் போன்ற முறைகளை ஏற்றுக்கொண்டார். “இன்று இம்மரபை பேணுபவர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால்  எல்லா நோய்களும் குணமாகிவிடும் என்று அதீத நம்பிக்கையுடன் பேசுவது தான். தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அடுத்தவர்களை இகழ்ந்து பேசுவதும், நம்மைத் தவிர மீதி எல்லாருமே அறிவிலிகள் என்று நம்புவதும், தெரியவில்லை என்று நாம் போய்க் கேட்டால் கேலி செய்வதும் என இன்று அம்மருத்துவமுறையை பின்பற்றுபவர்களின் மனப்போக்கே முதன்மை சிக்கல்.” என்றே வர்மம் குறித்து எண்ணுகிறார். இந்திய மருத்துவத்தில் பாலியல் சிக்கல்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவர்களைப் பற்றியும் அவருக்கு பெரிதாக அபிப்ராயமில்லை.  சிட்டுககுருவி லேகியத்தின் மகிமையைப் பற்றி கேட்கும்போது “லேகியத்தால் ஒன்றும் பெரிய பலன் இல்லை, வேண்டுமானால் வெளியில் இருக்கும் அட்டைப்படத்தினால் ஏதாவது பலன் என சொல்லிக்கொள்ளலாம்.” என தனக்கேயுரிய கிண்டலுடன் சொன்னார். தொடக்க காலத்தில் உடலில் இருந்து மலத்தை வெளியேற்றி சுத்திகரிக்கும் சிகிச்சை முறைகள் மீது பெரும் ஈடுபாடிருந்தது. வாந்தி எடுக்க வைக்கும் சிகிச்சை போன்றவற்றை எல்லாம் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் இத்தகைய கடினமான சிகிச்சை முறைகளை குறைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு உகந்த முறைகளுக்கு மாறினார். பஞ்சகர்ம சோதனை சிகிச்சைகள் இல்லாமல் உள் மருந்துகள் கொடுக்கும்போதும் அதே விளைவை ஏற்படுத்தமுடியும் எனும் இடத்தை வந்தடைந்தார். ஆயுர்வேத சாத்திரங்களின் மீது நன்மதிப்பும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து மதிப்பிட்டார். எவை பலனளிக்கிறது எவை பலனளிக்கவில்லை என்பதை வெளிப்படையாக பேசினார். 

மகாதேவன் தனது ஆசிரியரும் தாத்தாவும் ஆயுர்வேதத்தை முழுக்க நம்பினார்கள் என்கிறார். இறுதிவரை நவீன மருத்துவத்தை நோக்கி செல்லவே இல்லை என்பதாலேயே அவர்களுடைய வெற்றி சதவிகிதம் அதிகம் என்கிறார். உள்ளார்ந்து அவர்கள் அளவிற்கு தனக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.  ஒருவகையில் இந்த ஐயமும் தீர்மானமின்மையும்தான் மகாதேவனின் தனித்தன்மை என்று கூட சொல்லலாம். ஆயுர்வேதம் கற்க விரும்புகிறவருக்கு என்ன சொல்வீர்கள் எனும் கேள்விக்கு இப்படியான ஒரு பதிலை தருவித்தது. “ஆயுர்வேதம் படிக்காதே என்று சொல்வேன். ஆயுர்வேதத்தை கல்லூரியில் நன்றாக சொல்லிக்கொடுக்கக்கூடும், ஆனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை. ஒரு சில மருத்துவமனைகளே வெற்றிகரமாக நடக்கின்றன. பல கல்லூரிகளில் ஈ ஓட்டுகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் கற்பதில்லை, விதியே என கடனுக்கு கல்லூரி வந்து செல்வார்கள். மூலிகைச் செடிகளை அடையாளம் காணும் அறிவு கிட்டுவதில்லை, மருந்து செய்யும் கலை வளர்வதில்லை. பத்து மாணவர்களில் இருவர் தான் வெற்றியடைகிறார்கள். மீதி எட்டு பேருக்கும் தோல்விதான். இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே வேறு ஏதாவது நல்லப் படிப்பு படி என்று தான் சொல்வேன். குடும்பப் பாரம்பரியம் உள்ளது, அதை தொடர வேண்டும் என்றால் படி என்று சொல்வேன். அபரிமிதமான உற்சாகம், ஞானம், உழைப்பு உள்ளவர் வந்தால் படி என்று சொல்வேன். ஆயுர்வேதம் படிக்கவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது, படித்தால் ஒரு சில நன்மைகள் விளையும், இன்றைய காலகட்டத்தில் இது கண்டிப்பாக, இன்றியமையாத ஒரு மருத்துவ சாஸ்திரம் என்று சொல்வதற்கில்லை. நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான்.” நேர்காணலின் இறுதி கேள்வி இது. ஏதேனும் ஒரு உச்ச புள்ளியில் நிறைவு செய்வார் எனும் நோக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் எதிர்பார்க்காத வேறொரு பதிலை கூறினார். ஆயுர்வேதத்தின் கோணத்திலிருந்து சிந்திக்காமல் சாமானிய மாணவரின் கோணத்திலிருந்து  மெய்யான கரிசனத்துடன்  சொல்லப்பட்ட பதில். அந்த பதிலில் சுடரும் அறிவார்ந்த நேர்மை காரணமாகவே அது நம்மை சுடுகிறது. 



 அவரது ஆன்மிக வாழ்வு குறித்து நேர்காணலின் போது பேசக்கிடைத்தது ஒரு அரிய வாய்ப்பு. முற்றிலும் வேறு சில திறப்புகளை அளித்தன. பரமஹம்ஸ யோகானந்தரின் மரபில் கொஞ்சகாலம் இணைந்திருந்தார். யோகானந்தரின் சுயசரிதை நூலை அவர் படித்த கதையே சுவாரசியமானது “1987 ல் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ வரைக்கும் தினமும்  நடப்பேன். அப்பொழுது அந்த வழியில் உள்ள புத்தகக்கடை அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின்  அட்டையில்  உள்ள அவரது முகம்  என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றும். தினமும் அவரைப் பார்ப்பதற்காகவே, நடக்கத் தொடங்கினேன். தினமும் பார்க்கப் பார்க்க முகம் பெரியதாகிக் கொண்டே இருப்பது போல் தோன்றும். என்னடா இது! என்று குறுகுறுப்பு. ஒருநாள், இவர் யார்? என்ன புத்தகம்? என அப்புத்தகக் கடைக்காரரிடம் கேட்டேன், அவரும் “அது ஒரு சாமியுடைய வாழ்க்கை வரலாறு” என்று சொல்ல, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.” யோகானந்தரின் நேரடி சீடரான ராய் யூஜின் டேவிஸின் நூலை மொழியாக்கம் செய்தார். ஆனால் தனக்கென நிலையான ஒரு வழியையோ குருவையோ அவர் கண்டுகொண்டாரா என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. “ஸ்ரீவித்யா மார்க்கத்தில் இருந்தேன்; யோக மார்க்கத்தில் பயணித்தேன்; பூஜைகளை செய்தேன். கோவில் கோவிலாக அலைந்திருக்கிறேன். தான தர்மங்கள் செய்தேன். ஆனால் இவை எதிலுமே நிறைவை உணர இயலவில்லை. கர்மாக்கள் சேர்ந்து இருக்கக்கூடும். அது நமக்குத் தெரியவில்லை. குருவினுடைய திருவடியைத் தவிர வேறு மோட்சமே இல்லை.” என தனது அலைச்சலைப் பற்றி எழுதுகிறார். நான் அவருடன் உரையாடியபோது காலஞ்சென்ற திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்த சுவாமிகளை குருவாக‌ கண்டுகொண்டதாக குறிப்பிட்டார். “இன்னொரு இடத்தில் எதையும் படிக்காதே, எதையும் செய்யாதே, நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேள், ஏற்கனவே நான் எல்லாம் படித்துவிட்டேன், கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன், கூடவே வா என்கிறார். மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது, நம்பிக்கை அளிக்கிறது.  மிகவும் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த போதெல்லாம் அவருடைய அருளை உணர முடிந்தது. அனுக்கிரகம் என்பது அத்ரவியம் (புலனறிதலுக்கு அப்பாலானது) ஆயிற்றே? அதை நான் எப்படி சொல்ல முடியும்? உணர்வுகளை எப்படிச் சொல்ல முடியும்? உருவம் கொடுக்க முடியுமா? இனிப்பு, இனிப்பு என்று தான் சொல்ல முடியும். நான் ஒழுக்கமாக வாழத் தொடங்கி, சரணாகதி பாவம் கைவரும் தோறும் எனக்கு அதுவரை நிகழாதது எல்லாம் நிகழத்தொடங்கியது. வெளியில் இதைச் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. என்னைப் பொறுத்தவரை உண்மை. நீங்கள் அதனை உண்மை என்று உணர்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எவ்விதத்திலும் நடக்கச் சாத்தியமில்லாததெல்லாம் நடந்தது இது உண்மை சத்தியம்.”  என்கிறார். ஆயுர்வேதத்தின் தர்க்கவழி மருத்துவம் எனும் எல்லையை கடந்த சில அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நாட்பட்ட தீரா நோய்களைப் பற்றி குறிப்பிடும்போது “சிகிச்சையளிக்கலாம் தான். அச்சிகிச்சை அளிப்பவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய் தீர்க்க முயல வேண்டும். டாக்டர் ஆகலாம், ஆனால் ஹீலராகி  குணப்படுத்த முடியுமா? குணப்படுத்துதல் என்பது வேறு. குணமாக்குதல் என்பதொரு வேள்வி.  முழு ஈடுபாடு வேண்டும். அதை எல்லாருக்கும் என்னால் செய்ய இயல்வதில்லை. நூறில் நான்கு பேருக்கு சாத்தியமாகிறது. பாக்கி 96 பேருக்கு நான் கற்ற பாடத்தை அடிப்படையாக கொண்ட சிகிச்சை தான் அளிக்க முடியும். சிலருக்குக் கேட்கும், சிலருக்குக் கேட்காது. சங்கல்பம் (உறுதி ஏற்றல்) செய்து கொண்டு மருந்து கொடுத்தால் பொதுவாகக் கேட்கும்.” என குறிப்பிடுகிறார். இத்தகைய அனுபவங்களை பேசும் பெரும்பாலோனோர் தர்க்கரீதியான சிகிச்சை முறைகளை கைவிட்டு முழுவதுமாக குணப்படுத்துதல் நோக்கி நகர்ந்து அதையே பிராச்சாரம் செய்வார்கள். இவை அரிய நிகழ்வு. அறிவியலின் “விளைவை மீளுருவாக்குதல்” ( repeatability of results) கோட்பாட்டுக்கு பொருந்தாதது. இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பெற்றாலும் அதை அவர் பெரிதாக முன்வைக்கவில்லை. மறைக்கவும் இல்லை. “பிரார்த்தனை செய்வது நல்லது. பிரார்த்தனையினால் ஒரு சில நோய்கள் எளிதாக குணமாகும். ஆனால் அதுவும் ஒரு சிலருக்கே நடக்கும். எல்லோருக்கும் பலனளிக்கும் என சொல்லிவிட முடியாது. ஆகவே இதை விளம்பரப்படுத்துவது தவறானது.” என இவ்வகை நம்பிக்கை சார்ந்த முறைகளின் எல்லையை வரையறை செய்கிறார். 


தொழில்முறை மருத்துவராக மகாதேவன் மருத்துவ அறங்களைப் பின்பற்றுவதில் ஒரு முன்மாதிரி. “அறத்தால் வருவதே இன்பம்- கமிஷன் வாங்க கூடாது, பரிசுப் பொருள் வாங்கக் கூடாது. கொரோனாக் காலத்தில் கொள்ளையடிக்கக் கூடாது. போடுகின்ற பில்லை முதல் நாளே சொல்லிவிட வேண்டும். ஏழைகளுக்கு இரங்க வேண்டும். அறத்தினாலேயே இன்பம் வரும், அறத்தை கைவிட்டுவிட்டு பூஜைகளை செய்து என்ன பயன்? இறைவனை வணங்குவதினால் பலன் இல்லை.” மேற்சொன்னவற்றை அவர் இறுதிவரை பின்பற்றினார். பின்பற்றுதலே எங்களுக்கு போதனை. 


‘முதற்கால்’ எனும் எங்கள் நேர்காணல் நூலை அடிப்படையாகக்கொண்டு இந்த கட்டுரையை எழுதினேன். தனிப்பட்ட நினைவுகள் பல முட்டி மோதுகின்றன. அவரது சின்ன சின்ன உடலசைவுகள் காட்சிகளாக மனக் கண்ணில் தோன்றுகின்றன. மகாதேவன் சமகால பாரம்பரிய மருத்துவ உலகின் பேராளுமை. இன்னும் இருபதாண்டுகள் இருந்திருந்தால் அவர் பல எல்லைகளை கடந்திருப்பார். எப்படி மரணமடைந்தார் என்பதற்கு தர்க்கப்பூர்வமான பதில்கள் உள்ளன ஆனால் ஏன் இறந்தார் எனும் கேள்விக்கு எந்த பதிலும் சமாதானத்தை அளிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் மாணவர்களுடன் மகாதேவன் உரையாடிய ஒரு சிறிய பகுதி அவருடைய மரணத்தையொட்டி அதிகமாக பரப்பப்பட்டது. அதில் “மகாதேவன் எனும் இந்த வடிவத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள். பிரிவு துயரத்தை அளிக்கும்” என்கிறார். 55 வயதில் எது அவரை இப்படி சொல்ல வைத்தது என தெரியவில்லை. ஆயுர்வேதம் இந்த மண்ணில் இன்னும் சில ஆண்டுகள் உயிர்ப்புடனிருந்தால், அல்லது எப்போது வரை உயிர்ப்புடன் உள்ளதோ அப்போது வரை மகாதேவனும் எங்களுடன் இருப்பார். ஆசிரியருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். 







 




  •