Reading view

கதையெல்லாம் தித்திப்பு

 

 
 
 
வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான கதைகள்தாம் தமிழில் அதிகம். கி.ராஜநாரயணன், தோப்பில் முகமது மீரான் போன்ற கதைசொல்லிகள் பலரும் தன்னனுவத்தைப் பிரதானமாகக் கொண்டுதான் கதைகள் எழுதினர். இதற்கு வெளியில் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்கள் தன்னனுபவத்தையும் கற்பனாசக்தியையும் கொண்டு கதைகள் எழுதினர். இந்த இருவிதமான போக்குக்கும் இடையில் இயங்கியவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

சிறுகதை இலக்கியத்தின் சாதனையாளர்களுள் ஒருவர் முத்துலிங்கம். எழுத்துலகில் அவருக்கு இது 60-வது ஆண்டு. இடையில் சில காலம் எழுதாமலும் இருந்திருக்கிறார். 1995 வெளிவந்த அவரது ‘திகடசக்கரம்’ தொகுப்புக்குப் பிறகு தொடர்ந்து அதே ஆற்றலுடன் இயங்கிவருகிறார். 1958-2016 காலகட்டத்தில் அவர் எழுதிய மொத்த கதைகளின் தொகுப்பு நற்றிணை வெளியீடாக இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

முத்துலிங்கம் கதைகளின் அமைப்பு, அசோகமித்திரனுடன் ஒப்பிடத்தகுந்தது. எந்தப் பின்னணியில் இருந்தாலும், எந்தவிதமான கருத்தியலைப் பேசினாலும் அவரது கதைகள் அடைய நினைக்கும் இலக்கு சுவாரசியம்தான். ‘சுவாரசியம்தான் தன் கதைகளின் லட்சியம்’ என்கிறார் அசோகமித்திரன். ஆனால் முத்துலிங்கத்தின் சுவாரசியம், வெகுளியானது. இந்தப் பூமிப் பிரதேசத்தின் ஒவ்வொரு பொருளையும் உயிரையும் பேரார்வத்துடன் அணுகும் குழந்தையின் தன்மை அதற்குண்டு. சுவாரசியத்தின் வெளிப்பாடாக இருவரும் சிரிப்பைக் கதைகளுக்குள் வைத்திருப்பார்கள். அதிலும் அசோகமித்திரனின் நகைச்சுவை, கதைகளுக்குள் புதிர்போன்றது. தேர்ந்த வாசகனால் மட்டுமே அதை அவிழ்க்க முடியும். முத்துலிங்கம் அந்தச் சிரமத்தை வாசகனுக்கு அளிப்பதில்லை.

கி.ரா.வின் கதைகள், கரிசக்காட்டு விவசாயிகளின் பாடுகள். அசோகமித்திரன், வண்ணநிலவன் ஆகிய இருவரின் கதைகளும் ஒரு குறிப்பிட்ட நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைப் பாடுகள். அதுபோல இவர்களது கதைகளின் நிலக் காட்சிகளுக்குள்ளும் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். இப்படி முத்துலிங்கம் காலகட்டத்து எழுத்தாளர்களை ஒரு வரையறைக்குள் வகுத்துவிட முடியும். ஆனால் முத்துலிங்கம் இதற்குள் அடங்காதவர். பாடுபொருள்களிலும் சரி, நிலக் காட்சிகளிலும் சரி, முத்துலிங்கத்தின் கதைகள், ஒன்று மற்றொன்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுபவை.

தமிழ் வாசகனுக்கு முற்றிலும் புதிய நிலக் காட்சிகளை, மனிதர்களை முத்துலிங்கம் தனது கதைகளுக்குள் சித்தரித்துள்ளார். அவர்களுக்கும் மையமான ஓர் ஒற்றுமையைக் காண முடியாது. அவரது கதைகள், ஒரு நவீன கவிதையைப் போல் அன்றாடத்தின் ஒரு துண்டு. உண்மையில் அவை தீவிர விசாரணைக்கு உட்படுத்த முடியாத வெகுளித் தன்மை கொண்டவை.

அசோகமித்திரனின் படைப்புகளைப் போல் கட்டுரைக்கும் கதைக்கும் இடைப்பட்டவை முத்துலிங்கத்தின் படைப்புகள். இருவரும் தன்னிலையில் சொல்லும் கதைகள், ஒரு சுய அனுபவக் கட்டுரையின் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. முத்துலிங்கம், ஐ.நா. அதிகாரியாகப் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானில் பணியாற்றியபோது உளவாளி ஒருவர், இவரைக் கண்காணிப்பதற்காக ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இஸ்லாமாபாத் தெருக்களில் வழி தடுமாறி, குழம்பிப் போய்விடுகிறார். திரும்பித் தங்குமிடம் வரத் தெரியாததால், தன்னை வெகுநேரமாகப் பின்தொடர்ந்து வரும் உளவாளியிடமே கேட்டுவிடலாம் எனக் கேட்கிறார். ‘அவரும் என்னைத் பின்தொடருங்கள், உங்கள் தங்குமிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். உலக உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு உளவாளியை, உளவுபார்க்கப்படுவன் பின்தொடர்ந்த சம்பவம் நடக்கிறது. முத்துலிங்கம் தனது தனித்துவமான நகைச்சுவையுடன் இந்தச் சம்பவத்தை எழுதியிருப்பார். இது கட்டுரையா, கதையா என அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி தங்கியிருக்கிறது.

முத்துலிங்கம் கதைகளில் தீர்க்கமான அரசியல் இல்லை என விமர்சிக்கப்படுவதுண்டு. அவரது கதைகள், உரத்துச் செல்லும் இலங்கையின் பெரும்போக்கிலிருந்து விலகியே இருந்தது, இந்த விமர்சனத்துக்கான காரணமாக இருக்கலாம். அவரது ‘நாளை’ சிறுகதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போரால் அநாதையான சிறுவர்கள் - அண்ணனும் தம்பியும் - இறைச்சிக்காக ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு வேலி தாண்டிச் செல்லும் சம்பவம்தான் கதை. ஆனால் அவர்களுக்கு ரொட்டி மட்டும்தான் கிடைக்கிறது. நாளை இறைச்சி கிடைக்குமா, என்ற சிந்தனையில் உறங்கிப் போகிறார்கள். இதில் ஒரு இடத்தில் அண்ணன்காரன் ஒரு கட்டையை எடுத்துத் துப்பாக்கி பிடிப்பதுபோல் பாவனை செய்கிறான்.

முத்துலிங்கம், இலங்கையில் பிறந்து உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர். அதன் மூலம் நாம் அறியாத நிலத்தைப் பண்பாட்டுப் புலத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார். அவரது பல கதைகளின் மையமும் இந்தப் பண்பாட்டு முரண்தான். ஆனால் அவர் இந்த முரணை வெறுப்புடனோ கேலியுடனோ அணுகுவதில்லை. அது வாசகருக்கு அளிக்கக்கூடிய சுவாரசியத்தையே அவர் கவனத்தில் கொள்கிறார். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என நிகழ்வதற்கும் நிகழாமைக்கும் இடையில் வாசகர் அடையும் மன எழுச்சியையும் அவர் ஓர் அம்சமாகக் கொண்டிருக்கிறார். படர்க்கையில் கதை சொன்னாலும் வாசக நெருக்கத்துக்காக அதில் ஓர் தன்னிலை விவரிப்புத் தன்மையை முத்துலிங்கத்தின் கதைகளில் உணர முடிகிறது. வாசகர்களிடம் நெருங்கிவர ஒவ்வொரு கதைகளிலும் அவ்வளவு பிரயாசம் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று இது. அதனால் கதைகளை வாசகர்களை முன்னிறுத்தியே எழுதினார். அதனால் கதைகளுக்குள் தத்துவ விவரிப்பைத் தவிர்த்தார். அதற்கான முகாந்திரம் உள்ள கதைகளிலும் அதை ஒரு சுவாரசியமான நகைச்சுவையாக்கவே முயன்றுள்ளார். முத்துலிங்கத்தின் எழுத்துகளை ஒரு காடு எனக் கொண்டால் ஜெயமோகன் சொல்வதுபோல் அதன் ஒவ்வொரு இலையும் தித்திப்பே. அதுவே அவரது கதைகளின் லட்சியமும்கூட.
(இந்து தமிழ் திசை, 04.03.2018)

  •  

கல் அடுக்கு சிற்பங்கள் - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்

கல் அடுக்கு சிற்பங்கள் - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்.



சிறு பிராயத்தில், கற்களை அடுக்கி வைத்து ஆடும் ஒரு விளையாட்டு நினைவில் இருக்கிறது.  இந்திய துண கண்டத்தில் பரவலாக அறியப்படும் சிறுவர் விளையாட்டுதான்.  நமது முறை வரும்போது, சிதறிகிடக்கும் வெவ்வேறு வடிவான சிறு கூழாங்கற்களை, கீழே விழாதபடிக்கு அடுக்கி வைக்க வேண்டும்.  எதிரணியினர் பந்தை எறிந்து அக்கல் அடுக்கை தகர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிற்பாடு, கடலோரமாக இது போன்ற கற்களை அடுக்கி வைத்து ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு கலையாக பயிலப்படுகிறது எனத் தெரிந்து கொண்டேன்.  


வாழ்க்கை நமக்கு அளிக்கும் அனுபவங்களிலிருந்து ஒரு புனைவுலகை உருவாக்கிக் கொள்வது 'கல் அடுக்கு சிற்பங்களை' உருவாக்குவது போன்றதொரு கலைதான்.  அதொரு கற்பனை உரு.  ஆனால் அக்கற்கள் நிஜமானவை. அக் கற்கள் அந்த அடுக்கிற்காக உருவானவை அல்ல.  நனவுலகில் நிகழ்ந்த அனுபவங்களை அப்படியே ஒரு புனைவுலகிற்கான அடுக்கு சிற்பங்களாக மாற்றும் ரசவாதம் அ முத்துலிங்கம் அவர்களின் தனித்த திறமை.


அ முத்துலிங்கம் அவர்களுக்கு என் தந்தையை விட 5 வயது அதிகம்.  இக்காலத்து எழுத்தாளர்கள் இடையே ஒரு முதுதாதை வடிவாக அவர் இருக்கிறார்.  என் போன்ற சிறுவர்கள் கை அளாவிய இந்த குறுங்கட்டுரைகள் அவர் போன்ற பெரும் தந்தைகளுக்கு பிரியமானதாக இருக்கக் கூடும் என்று வள்ளுவரை மனதில் கொண்டு இதை மேற்கொண்டு எழுதுகிறேன். தமிழ் இலக்கியத் தொடர்ச்சியின் கடைக் கண்ணியில் இருக்கும் எவராக இருந்தாலும், அ முத்துலிங்கம் அவர்களுடைய இலக்கிய செயல்பாட்டு விளைவின் ஒரு சிறு தொடர்ச்சியாக இருக்கும் சாத்தியமே அதிகம்.  மக்கள் சொற்கேட்டல் பெற்றவர்க்கு உற்ற இன்பம்.


தற்கால இலக்கிய சூழலைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை அ முத்துலிங்கம் அவர்கள் எப்போதும் செய்யத் தவறியதில்லை.  தொழில்நுட்பமும், தொடர்புவலையும் செறிந்த இக்காலத்தில், எண்ணற்றப் புத்தகங்கள் உருவாகி வருகின்றன.  அவருடைய முதல் தொகுப்பு இலங்கையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக கப்பலேறி தமிழகம் சென்று அச்சு வடிவம் அடைந்து மீண்டும் இலங்கைக்கு வருகிறது.  தம் எழுத்தை அச்சு வடிவத்தில் காண்பதற்கு தவமாய் தவமிருந்த காலம் போய், இப்போது புத்தக வடிவம் எய்துதல் ஒப்பீட்டளவில் மிகவும் எளிதாகி விட்டிருக்கிறது.  ஆனால் புத்தகம் ஆகுவதெல்லாம் எழுத்தாகி விடுமா? அல்லது புத்தகம் ஆக வேண்டிய எழுத்து வெற்றி பெறுகின்றதா?  அரிதான எழுத்து பலவும் ஒரு பதிப்போட்டு தேங்கி, புதையுண்டு போயிருக்கின்றன.  எழுத்திற்கு தேவை வடிவம் மட்டுமல்ல, தொடர் வாசிப்பும்.  இந்தத் தொடர்ச்சியைப் பற்றி அ முத்துலிங்கம் பல இடங்களில் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.  கனடா இலக்கிய தோட்டத்தினை தோற்றுவிக்க அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்ததற்கும் இந்தக் கரிசனம் முக்கியமானது.  


தமிழின் இலக்கிய மரபு சங்ககாலம் தொட்டு பல்வேறு காலங்களில் பெரும் பாய்ச்சல் காட்டி வளர்ந்திருக்கின்றது.  நவீன காலத்தில், சிறுபத்திரிகைகள் வழியே, மணிக்கொடி இயக்கம் வழியே,  பெரும் இலக்கிய ஆளுமைகளின் தலைமையிலான கூடுகைகள் வழியே, அவர்களிடையேயான ஆரோக்கியமான, அழிச்சாட்டியமான சர்ச்சைகள் வழியே என பல பரிமாணங்கள் காட்டி வளர்ந்திருக்கின்றது.  இணையம் வழியே பல தொழில்நுட்ப வசதிகளும், உடனடி தொடர்புகளும் பெருகிய காலத்தில் இலக்கிய மரபிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது எனலாம்.  பெரும் வணிக பத்திரிகைகளின் ஓரங்கமாக புனைவெழுத்து எட்டிய வீச்சைக் காட்டிலும் இணையம் பல மடங்கு அதிகமாகவும், முதிர்ச்சியுடனும் இலக்கிய வெளியை சுவீகரித்துக் கொண்டது.  அந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக அ முத்துலிங்கம் அவர்கள் காணப்படுகிறார்.  


இணையம் வழியே தமிழிலக்கியம் பரவ தொடக்கமாக இருந்த திண்ணை பத்திரிகையில், அவருடைய படைப்புகள் வெளி வரத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் அவருடைய வாசகந்தான்.  அப்போது அவர் கனடாவிற்கு வருகை புரிந்திருந்த நடிகை பத்மினியுடனான சந்திப்பை, தனக்கேயுண்டான தனிச்சுவையுடன் எழுதியிருந்ததை நினைவு கூர்ந்தேன்.  மைய நீரோட்ட பத்திரிகைகள் 'ஜூசி'யாக தருகிறோம் என உருவேற்றித் தரும் செய்திகளுக்கும்,  எத்தகைய அனுபவ்த்தையும் ஒரு கலை நுட்பத்துடன், சுவை குன்றாது, அழுத்தமான செறிவுடன் வெளிப்படுத்தும் எழுத்திற்குமான வேறுபாடு உடனே பற்றியிழுத்துக் கொண்டது.    


இன்றைய சமூக ஊடகங்களில், புதிய தொடர்புகளைப் பெருக்கிக் கொள்ளவென முனைப்பில், ஒரு கூட்டில் தங்களை அடைத்துக் கொள்ளும் போக்கை அதிகம் காண முடிகிறது.  அப்படியொரு அவசர அடையாளம் புனைந்து கொள்வதை, அரசியல் நோக்கெனவும் புரிந்து வைத்திருக்கிறோம்.  அரசியல் அரங்கின் முதன்மையான கோட்பாடு, வெற்றியை நோக்கிய பயணத்தில் உண்மைக்கான இடம் முக்கியமில்லை என்பதே.   அறத்தை காவுகொடுத்து பெரும் வெற்றியில் என்ன ஒளி இருந்துவிடப் போகின்றது.  "அரசியல் எனும்போது அதொரு கூடாரத்தில் அடைக்கப்பட்ட நிலை" என்கிறார் அ முத்துலிங்கம்.  இலக்கியம் என்பது கூடாரங்களுக்கு அப்பாற்ப்பட்ட விரிந்து படர்ந்த வெளி.  வெட்டவெளியில் பயணப்படும் இலக்கிய வாழ்விற்கு துணையென சத்தியம் தவிர வேறெதுவும் இருப்பதில்லை.  வம்பு சர்ச்சைகளும், பொருமல்களும் படைப்பூக்கத்திற்கான பெரும் உந்துதல் என்பதை தகர்த்து, வாழ்வனுபவங்களை சான்றாக கொண்டு கதை புனைந்து செல்லும் எழுத்தாளனாக தன்னை நிறுவிக் கொள்கிறார்.  அந்தக் கதைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ஒரு பெரும் சித்திரமாக நமக்கு அவருடைய படைப்புலகை துலங்கச் செய்கின்றன.



கல்லூரி மாணவனாக அவர் எழுதிய சிறுகதைகளிலிருந்தே அவரிடம் அந்த முதிர்ந்த பக்குவம் படிந்திருந்தது.  அதற்கு முந்தைய பருவத்தில் அவருடைய அம்மாவை ஆஸ்துமா நோய்க்கு பலி கொடுத்த துக்கத்தின் விளைவாக இருக்கலாம்.  ஒரு பேட்டியில் அம்மாவுடைய இறுதிக்கண அவஸ்தையை மிகக் கூர்மையானச் சொற்களில் சுருக்கமாகச் சொல்கிறார்.  மலைச் சுனையின் ஆழத்தில் புரளும் கற்களின் சலனம் மேற்பரப்பில் புலப்படுவதில்லை.  மாறாக அந்த சுனை ஆறாக நம் மனதில் புரண்டு ஓடும்போது நாமே அக்கற்களாக தத்தளிக்கத் தொடங்குகிறோம்.  ஒவ்வொரு வாசிப்பிலும் அந்த மலை ஓடையின் புரட்டல் ஒவ்வொருவித கொந்தளிப்பை தோற்றுவிக்க வல்லதுது


"இருப்பிடம்" என்றொரு கதை.  நாம் இப்போது ஸ்பெஷல் சைல்ட் என்று சொல்லிப் பழக்கப்பட்ட தனித்துவ திறமை கொண்ட சிறுவன் பற்றிய கதை.  தேர்த்திருவிழா பின்னணியில் அந்தச் சிறுவனைப் பற்றிய ஒர்ரு சம்பவமாக கதை விரிகின்றது. பெரும் தேர்ச் செல்லக் கூடிய பெரும்பாதைகளின் அமளி துமளியிடையே அபூர்வமாக பூத்து நிற்கும் ஒற்றை மலரை ஒரு கவிஞனின் மனம்தான் கண்டுகொள்ள முடியும்.  அதன் வசீகரத்தை அவனால்தானே அங்கீகரிக்க முடியும். நாஞ்சிலாரின் புகழ்பெற்ற இடலாக்குடி ராசாவை நினைவுபடுத்திய அழகிய கதை.


அந்த முதல் சிறுகதை தொகுப்பின் தலைப்பு கதையான "அக்கா" ஒரு சிறுவனின் பார்வையில் தன் அக்காவைப் பற்றி சொல்வதாக இருக்கிறது.  அந்தக் கதை நிகழும் காலத்தில் அந்த சிறுவனின் அக்கா, திருமண பருவத்திற்கு தயாராகும் ஒரு சிறு பெண்.  அவளை பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகிறது.  அதில் ஒரு மாமா அவளையே உற்றுப் பார்க்கிறார்.  அக்கா ஓடி வந்து விடுகிறாள்.  அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியின் துளைக்கும் கேள்விகளை அனுசரித்தபடி அக்கா பேசிக் கொண்டிருக்கிறாள்.  ஆனால் அந்த வரன் தகையவில்லை.  பிறகு மற்றொரு மாமா அழகான புகைப்படங்கள் எடுக்கிறவர்.  அக்காவையும் ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார்.  அந்தப் படத்தை இந்த சிறுவனிடம் காட்ட, தன் அக்காவிடமும் அந்தப் படத்தை காட்ட அவன் விரும்புகிறான்.  அந்த மாமா புகைப்படத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் தருகிறார்.  பெண் பார்க்க வந்த மாமாவிற்கும், காதல் கடிதம் அளிக்கும் மாமாவிற்கும் அவனுக்கு வேறுபாடு தெரிவதில்லை.   அந்த காதல் கடித நாடகம் அம்பலப்பட்டு அந்த சிறுவனின் குடும்பத்தினரிடையே பெரும் களேபரம் நிகழ்கிறது.  முத்துலிங்கம் அவர்களின் விருப்ப எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் போல, இந்த சம்பவத் திரிகளை சாதாரணமாக சொல்லிச் செல்லும் போது, அந்த கதையோட்டம் நமக்கு சொல்லாத ஒரு புள்ளியில் ஓர் அசௌகரியம் ஏற்படுகின்றது.    அது அந்த அக்கா என்றழைக்கப்படும் சிறுபெண்ணின் மனவோட்டமாக இருக்கலாம்.  அல்லது அந்த கோபக்கார, தகப்பனின் இயலாமையாக இருக்கலாம்.  அந்த சிறுவனின் பார்வையில் கதை எழுதிப் போகும் முதிர்ந்த எழுத்தாளனின் திறன் நம்மை அப்படியான தத்தளிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கிறது.  


அதே தொகுப்பில் காணப்படும் "பக்குவம்" சிறுகதையின் பேசுபொருளெல்லாம் அக்காலத்து கல்லூரி வயசு இளைஞனின் படைப்பா என வியப்பாக இருக்கின்றது.  பூப்படைதல் எனும் ஒரு இயல்பான பயாலஜிக்கல் நிகழ்வை மையமாக கொண்ட கதை.  அக்கதையின் தொடக்கத்தில் ஒரு முரணை வைக்கின்றார் கதாசிரியர்.  இளைய பெண் குழந்தை பூப்படையும் வைபவத்தில், மூத்த பெண் குழந்தைக்கு ஏற்படும் சங்கடமான அனுபவம்.  அந்தக் கதை ஒரு இயல்பான முடிவிற்கு சென்று விடுகிறது.  ஆனால் அது நமக்கு ஒரு அவஸ்தையை அளிக்காமல் போவதில்லை.  இந்த முத தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் களம், அதன் மையப்பொருளை விரித்துக் கொண்டு போகும் நேர்த்தி, அவை பேசப்பட வேண்டிய பொருள் என்பதற்கான நியாயம், அதன் வடிவ பொருத்தம் இவையெல்லாம் அக்காலத்தின் முக்கிய தமிழ் எழுத்தாளர் எவர்க்கும் குறைந்ததில்லை.  இலங்கையில் பேசப்பட்ட அளவிற்கு அப்போது தமிழ்ச்சூழலில் பேசப்படாமல் போயிருக்கலாம்.  


அவர் மீண்டும் எழுதத் தொடங்கிய காலத்தில், அவருடைய படைப்புகளின் விவரணை முறையிலும், அதன் விவரிப்பிலும் குறிப்பிடதக்க மாற்றங்கள் இருக்கின்றன.  இடைக்காலத்தில் அவருக்குண்டான பரந்துபட்ட அனுபவங்களும், அவருடைய உலகளாவிய நோக்கும் அவருடைய படைப்புகளின் மையம் கொள்கின்றன எனலாம்.


க மோகனரங்கன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். முத்துலிங்கம் அவர்களின் கதைகளில் வரும், பெரும் எடை கொண்ட ஆப்பிரிக்க யானை. நெடுங்காலம் பூமியில் புதையுண்டு கிடக்கும் சிகாடா பூச்சி.... போன்ற அபூர்வ வகை விலங்குகள் பற்றி குறிப்பிடுகிறார்.  உயிரற்ற எந்திரங்களையும் ஒரு மையப்பாத்திரமாக முத்துலிங்கம் ஆக்கிவிடுகிறார்.  'பூமாதேவி' கதையில் அப்படித்தான், துணி துவைக்கும் இயந்திரம் ஓர் அபாரமானதொரு பாத்திரமாக உருவகித்திருக்கிறது.  ஒரு தந்தை தனது சிறு மகளுக்கு அந்த சலவை இயந்திரத்தின் முன்பாக, நாம் எப்படி மனிதர்களுடனான 'ஒப்பந்தம்' என்கிற ஒரு நடைமுறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நியமத்தைப் பற்றி  போதிக்கின்றார்.  அந்தப் பெண் பெரியவளானதும் தவறாமல் தன்னுடைய ஒப்பந்தங்களை கடைப்பிடிக்கிறாள்.  ஆனால் அதை போதித்த அப்பாவிடம், அவருடைய சிறிய மகளாக அந்த 'பூமாதேவி' பற்றிய விளையாட்டுப் பேச்சு ஒப்பந்தத்தை காலப்போக்கில் மறந்து விட்டிருந்தாள்.  அந்தப் புள்ளியைச் சுற்றி கதை ஒரு சராசரி அமெரிக்க வாழ்க்கையை பின்னிப் பிணைந்து கொண்டு செல்கின்றது.


கனேடிய குடியேற்ற அதிகாரிக்கு, சிறைக்கைதி எழுதும் கோரிக்கை கடித வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதை "கொழுத்தாடு பிடிப்பேன்".  இது போன்ற கடித வகை புனைவுகளில் ஒரு வித மர்ம வசீகரம் உண்டு.  இந்தக் கதை சொல்லிப் போகும் பல சம்பவங்கள், கனடா நாட்டின் புலம்பெயர் வாசியின் ஒரு சராசரி அனுபவப் பதிவாக  விரிகின்றது.  ஒரு புதைந்த ரகசியத்தின் புற விளிம்புகளை தொட்டு விளக்கிக் கொண்டே போகும் சாமர்த்திய விவரிப்பு.  கதை முடிந்ததும், அதன் சரடுக்ளை இழுத்துப் பிடித்து அந்த புதிருக்கான விளக்கத்தை தேடி நாம் அந்த வரிகளிடையே மீண்டும் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றோம்.


புலம்பெயர் வாழ்க்கையின் இருண்மையான பக்கங்களைக் காட்டும் மற்றொரு சிறுகதை "கருப்பு அணில்".  பனிக்கொட்டத்தொடங்கிய அந்த வேளையில் கதைநாயகனே ஓர் அணில் போல தன்னை உணர்ந்தபடி தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அதனால் உருவாக்கிக் கொள்ளும் ஒரு கற்பித கொண்டாட்டம்.  தேர்ந்த சொற்களில் மனதை துளைத்து செல்கின்றது.  ஒருவிதத்தில் அந்த நம்பிக்கையற்ற நிராசையின் விரக்தியை நாமும் கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.


சிறுபெண்ணின் மனதின் புதிர் மையங்களைத் தொட்டுப் போகும் மற்றொரு படைப்பு "மகாராஜாவின் ரயில்வண்டி".  சகி என்றழைக்கப்படும் மன்றோவின் கதையை நினைவுப் படுத்துவது போல் ரோஸ்லின் பல ரகசியங்களை கதைசொல்லியிடம் சொல்கிறாள். அப்போதுதான் பிறந்திருக்கும் ஒரு பூனைக்குட்டி அவளுக்கு அரிஸ்டாட்டிலை நினைவுப் படுத்துகிறது என்று அப்படியே அதற்கு பெயர் சூட்டுகிறாள்.  அவள் இல்லாதபோது அந்தப் பூனைக்குட்டிகளை பார்க்க நேரிடும் கல்லூரிச் சிறுவனான கதைசொல்லி, அந்தக் குட்டிகளுக்கு அவளுடைய பெயரையே பிட்டுப் பிட்டு வைக்கிறான்.


ஒரு பேட்டியில் அ முத்துலிங்கம் சொல்கிறார்.  அவருடைய இளம் பிராயம் புராண இதிகாசங்கள், பக்தி கதைகளென அம்மாவிடம் கேட்டு வளர்ந்ததை.  படைப்பூக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மனதை இக்கதைகள் எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என நாம் விளக்க வேண்டியதில்லை.  அந்த கதை அனுபவங்கள் பிறகொரு காலத்தில் வேறு சில திறப்புகளாக வெளிப்படுவது இயல்பு.  ராமாயண காவியத்தை ஆதி காவியம் என்பர்.  வால்மீகியை ஆதி கவி எனவும் சொல்வர்.  அந்த வகையில் அக்காவியத்தின் தொடக்க பாடல், முதல் கவிதையாக இருக்க வேண்டும்.  ஆனால் அது ஒரு போற்றும் பாடலா அல்லது நிந்தைப் பாடலா என பாடபேதங்கள் உண்டு.  இது காவியத்தில் இடம் பெற்றிருக்கும் மறை புதிர்.  இதை ஒரு புனைவாக விரித்துப் பார்க்கும் போது உங்களுக்கு ஒரு பார்வை கிடைக்கும்.  கம்ப நாட்டாரின் சொற்களில் "ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன் பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள்" என்கிறார்.  என்ன?  ராமாயணக் கதையின் உச்சமான அக்கினி பிரவேசம் பற்றிய பாடல் அது.  


புதுமைப் பித்தன் என்ன செய்கிறார்? அந்த செய்தியை அகலிகையிடம் கொண்டு போய் சொல்கிறார்.  அது சாபவிமோசனம் எனும் கதையாக உருவாகிறது.  அதே செய்தியை ஓர் அன்னயின் பார்வை கொண்டு பார்க்கிறார் ஜெயகாந்தன்.  அவருடைய முத்திரை சிறுகதையான 'அக்னி பிரவேசம்' உருவாகிறது.   மகாபாரத இதிகாசத்தில் காண்டவ பிரஸ்தத்திலிருந்து இந்திர பிரஸ்தம் உருவாகுவதை, நகர நவீனமாக்கத்தில் வைத்துப் பார்க்கிறார் அம்பை. 


அது போல குங்கிலியகலய நாயனாரின் கதையை முத்துலிங்கம் அவர்கள், ஒபுக்கு எனும் மேற்கு ஆப்பிரிக்க இளைஞன் ஒருவனின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கிறார்.  அவருடைய அலுவலகத்தில் ஒன்றும் தெரியாத வெகுளி இளைஞனாக வருபவன், அங்கிருந்த கணிணியை கற்றுக் கொள்கிறான்.  அங்கே பீஸ்கோ எனும் பகுதியில் இருந்து வரும் ஒரு பெண்ணை காதலியாகக் கொள்கிறான்.  அவள் வழியே மதுப்பழக்கமும் ஏற்படுகிறது.  அவன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அவன் மீளாத ஓர் எல்லைக்கு சென்று விடுகிறான்.  அந்த எல்லையிலிருந்து விடுபடுதல் என்பதுதான் சாதனை.  குங்கிலியகலய நாயனாரின் பக்தி தொண்டு அது போன்ற மீளா எல்லைக்குட்படும்போது இறையருளால் மீட்கப்படுகின்றது என்பது நமது தொன்மக்கதை.  இந்த 'விடுபடுதல்' பற்றி மூன்று தளங்களில் பேசுகிறார்.  நண்பர்களிடையே அவர்களுடைய அனுபவங்களை வைத்தொரு சரடு.  ஒபுக்குவின் கதை.  இறுதியாக குங்கிலியகலய நாயனாரின் கதை.  இம்மூன்றும் தனித்தனியாக அதனளவில் ஒரு சிறுகதையாக இருப்பவை.  


முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க அழுத்தம் தோற்றுவித்த சிறப்பானதொரு படைப்பு "அமெரிக்காக்காரி" சிறுகதை.  இந்த சிறுகதையைப் பற்றி மட்டுமே நான் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பு படிக்க வரும் பெண், வியட்நாமிய இளைஞன் ஒருவனை திருமணம் முடிக்கிறாள்.  அவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவப் பரிசோதனை சொல்கின்றது. பிறகொரு ஆப்பிரிக்கரின் விந்தணுவை கடன் வாங்கி குழந்தை பெற்றுக் கொள்கிறாள்.  அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.


ஒருவித கவித்துவ மன அலைக்கழைப்பை காட்சிபடுத்தும் கதை "செங்கல்".  ஏதோ ஒரு இனம்புரியாத தேடலில் மையம் கொண்டு, பிறகு அந்தத் தேடலே ஒரு பாரமாக மாறி, தொலைதூர மலையின் தடையால் எதுவுமே அடைய முடியாமல் போய்விட்டது போல் ஒருவித ஹலுசினேஷன் தொனியில் முடிகிறது.  இது போன்ற உத்திகள் கொண்ட மிஸ்டிகல் கதைகளில் முத்துலிங்கம் அவர்களுக்கு எப்போதும் நாட்டம் இருந்திருக்கின்றது.  மற்றொரு தலைப்பு மறந்துவிட்ட கதையில், முதிய தம்பதிகள், ஒரு மனநல மருத்துவரிடம் தங்கள் பிரச்னைகளைப் பற்றி சொல்லிக் கொண்டு வருவர்.  இறுதியாக அவர்கள் சொல்லும் பிரச்னை அவர்கள் கண்களுக்கு மட்டும் புலனாகும் அவர்களுடைய பெண்ணோ, பேத்தியோ பற்றியது என்பது போல முடியும்.  ஒரு ஓட்டலில் உணவு பரிமாறும் வேலையில் இருக்கும் சிறு பெண், அந்த ஓட்டலுக்கு வரும் ஒரு இளைஞன் மீது காதல் கொள்கிறாள்.  அவளுக்கு அவனுடன் எப்படிப் பேசுவது என்று தவிப்பாக இருக்கிறது.  அவனுடைய தொலைபேசி எண் அவளுக்கு எப்படியோக் கிடைக்கின்றது.  ஃபோனும் செய்து விடுகிறாள்.  மறுமுனையில் அவனுடைய குரல் கேட்டதும் இவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.  ஒரே பேதமை.  தடுமாற்றம்.  சட்டென, அவளுக்கும் அவனுக்கும் அறிமுகமான, அவள் வழக்கமாக செய்ய்தும் மெனு ஒப்பித்தலை செய்கிறாள்.  


இப்படி அ முத்துலிங்கம் அவர்கள் தனது கதை உலகை வளர்த்துக் கொண்டே போகிறார்.  எங்கோ அந்த கதையுலகில் நாமும் இடம்பெற்று விடுகிறோம்.  அப்புறம் நாமும் அவருடைய பாத்திரங்களாக உருமாறி விடுகிறோம்.  அதை அவர் செய்கிறாரா, அல்லது அதற்கு நாம் விழைகிறோமா என்பது ஒரு விவரிக்க இயலாத அனுபவமாக இருக்கின்றது.  ஆத்மநாம் ஒரு புகழ்பெற்ற கவிதை இப்படி முடிகின்றது.  "எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்" என.  இன்னொரு கவிதை "எனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன்" எனத் தொடங்கும்.  இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கும் போதுதான் ஒரு கலைஞனின் படைப்பூக்க மனம் பற்றிய ஒரு திறப்பு நமக்கு புலனாகின்றது.  அ முத்துலிங்கம் அவர்கள் தனது நடையை அயராது தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.  எதற்கான தேவையாகவும் இல்லாமல், ஒரு பறவையின் இயல்பான பறத்த போல அவருடைய எழுத்துப் பயணம் தொடர்ட்டும்.


நமக்கான சதுரங்களில் நாமும் நடந்து பயில்வோம்.  அவருக்கு இல்லாத ஒரு வசதி நமக்கு உண்டு.  அவரைப் போன்ற முன்னோடிகளின் தடம் பற்றிக் கொண்டு நாம் பறக்கலாம்.  இயல்பாக.  எதையும் நிறுவ வேண்டிய அவசியமற்ற ஏகாந்த பயணத்தில். 




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •