1943: Cinema, Ram Rajya (only film seen by Mahatma Gandhi)
1955: Radio, Marathi Geet Ramayana
1970: Comic book, Amar Chitra Katha’s Rama
1987: Television, Ramanand Sagar’s Hindi Ramayana
2003: Novel, Ashok Banker’s Ramayana series
இவற்றைத் தவிர சம்பூர்ண ராமாயணம் (1958), லவகுசா (1963) திரைப்படங்களையும் இலங்கேஸ்வரன் நாடகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ராமாயண மறுவாசிப்பு என்றால் இப்போதைக்கு சாபவிமோசனம் மட்டும்தான் நினைவு வருகிறது…
கடவுள். காதல் போல் வசதியான பொய். கடவுளின் பெயரால் மதம். சகிக்க முடியாத மனிதத் தன்மையற்ற தமது செயல்களுக்கு ஆட்சியாளர்கள் காரணம் காட்ட தன்னுடன் வைத்திருக்கும் வசதியான உண்மை இந்த மதம். குடிமக்களும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் தெரிந்த வடிவமே தன்னை ஆள்பவர்கள் என்று காலங்காலமாக நம்பும் சித்தாந்தம் இந்த மதம். அரசியலில் மதம் கலக்கும் போது ஆட்சியாளன் பரமாத்மா. குடிமக்கள் கர்மா. அதனால் தான் ஒரு சமூகத்தையே மயக்கடிக்கும் போதை இந்த மதம் என்று வெறுக்கிறது கம்யூனிசம். Religion is opium of masses. ஆனால் மதம் போல மனிதத்திரளை வெகு எளிதில் திரட்டிவிடும் வஸ்து வேறேதுமில்லை. உலகின் மூலைகளெங்கும் பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மையிது. ஜெயமோகன் சொல்வதுபோல, மதம் மூலம் தேசியத்தைக் கட்டி எழுப்பிய அரசுகள் தான் காலந்தோறும் நிலைத்து நின்றிருக்கின்றன.
தனது மதத்தைத் தனது குழந்தைகளுக்குச் சொல்லி வளர்ப்பது கிட்டத்தட்ட குழந்தைகள் மேல் திணிக்கும் வன்முறை என்பவர்களும் உண்டு. எல்லா மதத்தினரும் சமமாக பயிலும் தமிழ்நாட்டில் கூட, பள்ளிப்படிப்பை விட்டு வெளியேறும் போது, பிற மதங்கள் பற்றிய அறிமுகம் கூட இல்லாமலேயே வெளிவருகிறோம். நம் சமூகத்தில் நம் பெற்றோரின் மதம், நம் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய ஜென்மப்பாவம்! இப்படிப்பட்ட சமூகத்தை மதம் என்ற ஓபியம் மூலம் மலுங்கடிப்பது சுலபம். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் குழந்தைகளைப் பெற்று தள்ளுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரவாதிகள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் வசியமாய் மதமாற்றுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் வழிபாட்டுத் தலங்களைத் தீட்டாக்குகிறார்கள். ஓபியம் சமூகம் எளிதாக நம்புகிறது. அந்தக் குறிப்பிட்ட மதங்களுக்கு முன், இங்கு எப்படி இருந்தது என்று ஓபியம் சிந்திக்க விடுவதில்லை. பிற மறைநூல் சாத்திரங்களைப் பாரதி சொன்னது போல் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம். ————————————————————————————————————————————————————————————————————————— புத்தகம்: Eden: An Indian Exploration of Jewish, Christian and Islamic Lore ஆசிரியர்: Devdutt Pattanaik வெளியீடு: Penguin பக்கங்கள்: 312 விலை: 500 ரூபாய் என நினைக்கிறேன் ————————————————————————————————————————————————————————————————————————— யெஹோவா கர்த்தர் அல்லா. தோரா விவிலியம் குரான். ஆபிராம் ஆப்ரஹாம் இப்ராஹிம். இஸ்மேல் இஸ்மேல் இஸ்மேயில். ஜோப் யோபு அயூப். டேவிட் தாவீது தாவுத். சனி ஞாயிறு வெள்ளி. யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம். மூன்றும் மத்திய கிழக்கில் தோன்றிய மதங்கள். ஒரே கடவுள் கொள்கை. கடவுளுக்கு உருவமில்லை. கடவுள் ஆண்பால். கிறிஸ்தவத்தில் மூவொரு கடவுள். கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் உருவ வழிபாடு உண்டு. ஒன்றில் சொர்க்கம் நரகம் இல்லை. இப்புத்தகத்தின் அட்டைப்படம் போல, ஒன்று பாம்பு என்று சொல்லுமிடத்தில், இன்னொன்று மயில் என்று சொல்லும். ஒன்றில் பிரசவம் சாபம், இன்னொன்றில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் பாவத்தில் பங்கில்லை. ஒன்றில் பெண்ணுக்கு மாதவிலக்கு, ஆணுக்கு வழுக்கை, இன்னொன்றில் மனிதனுக்கு ஆடையும் மரணமும் தண்டனைகள்.
ஒன்றில் துறவு கிடையாது. ஆபிரகாமின் சந்ததிகள் என்ற அடையாளமாக ஒன்றில், ஆண்கள் மேல்தோல் வெட்டுவதில்லை. இரண்டில் பரலோகம் உண்டு. ஒன்றில் இறப்பிற்குப் பின்னான பயணத்தைக் குறிக்கும் உத்தரிக்கிற ஸ்தலம் என்றொரு இடமுமுண்டு. பிரளயம் வரை கடவுள் நேரடியாகவே மூன்றிலும் மனிதனிடம் பேசி இருக்கிறார். சவுல் மூலம் ஒரு மதம் அரசாக உருவெடுத்தது உலகில் முதலில் யூதம் என நினைக்கிறேன். பிராமண மதம் போல யூதம் தனதெல்லை மீறி பரவுவதுமில்லை, யாரையும் சேர்ப்பதுமில்லை. கான்ஸ்டன்டைன் முதல் அரசுகளால் கிறிஸ்தவம் பரவியது. அரசாங்கமாகவும் மதமாகவும் ஒரே நேரத்தில் பரவியது இஸ்லாம். இப்படி ஆபிரகாமின் இம்மூன்று மதங்களின் அரசியல் பற்றி முந்தைய பதிவுகள் பலவற்றில் எழுதியிருக்கிறேன்.
ஜியா ஒவ்வொருவர் கைக்கும் போய், சிலுவைப்போர் ஜிஹாத் போய், போப் கலீபா போய், அணு பெட்ரோல் என இந்த ஒன்றேகால் நுற்றாண்டுகளாக பேஜர் வரை பாய்கின்றன! இவற்றை மதமாக தேவ்தத் பட்நாயக் அவர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார் என்றதும் வாங்கிவிட்டேன். காரணம் இவர் மதவாதி அல்ல. குறியீடுகள் சிந்தாந்தங்கள் என்று பல விடயங்களைத் தொடர்புபடுத்தி எழுதுவார். உதாரணமாக கிரேக்க அமேசான் பற்றி எழுதினால், பெண் வீரர்களை மட்டுமே கொண்ட படைக்கு அரசர்கள் அப்பெயர் வைத்தார்கள் என்பார், அப்படியே இங்கு சந்திர குப்த மௌரியர் அதேபோல் ஒருபடை வைத்திருந்ததாக சொல்வார். அவர் புத்தகங்களில் அவர் கைப்பட வரைந்த படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். அப்படங்கள் கதை சொல்லும். இரண்டு மதங்களில் கடவுளுக்கு உருவமே கிடையாதே, எப்படி வரைந்திருப்பார் என்ற ஆர்வம்!
(பார்வையற்ற ஈசாக்கிடம் எசாயூ போல் வேடமிட்டு ஏமாற்றும் யாக்கோபு. இயேசு சொன்ன இடத்தில் வலையிட்டு அதிக மீன் கிடைத்தல்)
சரி, An Indian Exploration என்று ஏன் தலைப்பில் சொல்கிறார். அது நீங்கள் புத்தகம் படித்ததால் தான் புரியும். அவர் எழுத்து நடை அப்படி. ஆசிரியரின் நடையில் எனக்கு புதிதாக கிடைத்த தகவல்கள் சில:
பாரவோன் ஆட்சியில் பஞ்சம் போக்கிய யோசேப் / ஜோசப் / யூசூப், உபரி தானியங்களைச் சேர்த்து வைத்த இடங்கள் தான் பிரமிடுகளாம்!
செங்கடல் வழியே எகிப்தில் இருந்து இஸ்ரேல் நடந்து வர, 40 ஆண்டுகளா என்ற எனது சந்தேகத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து இப்புத்தகம் பதில் சொன்னது.
சாலமோனின் நீதியை நிலைநாட்ட மூன்று மதங்களிலும் மூன்று வெவ்வேறான கதைகளாம்! எனக்கு ஒரு கதைதான் தெரியும். அதைப் போல் ஓர் அரசன் காஷ்மீரை ஆண்டார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
இம்மூன்று மதங்களுக்கு முன்னரே அதே நிலத்தில் ஒரே கடவுள் கொள்கை இன்றும் பேசும் இன்னொரு மதம் பற்றி, ஒரு பக்கம் நிறைய குறிப்பெழுதி வைத்திருக்கிறேன்.
இம்மதங்கள் சாத்தானைப் பற்றி என்ன சொல்கின்றன? பிலாத்துவைப் பற்றி விவிலியம் ஏன் இவ்வளவு துல்லியமாக விவரிக்கிறது? எவ்வளவு அந்நியமாய் இருந்தாலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் மொழியைத் தாண்டி எளிய மக்களை எளிதாக எப்படி நெருங்க முடிந்தது? படித்துப் பாருங்கள். இப்பிறப்பில் ஒழுங்காக வாழச் சொல்லி மனிதனின் மறுபிறப்பை மறுக்கும் இம்மதங்களை, கடவுள்கள் மறுபிறப்பெடுக்கும் இந்திய வழியில் கதை சொல்கிறது இப்புத்தகம். எனக்கு கிரேக்க வழியில் இம்மூன்று மதங்களைக் கேட்டறிய வேண்டும் என்ற ஆவலுண்டு. ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்கள். நிறைய மதங்களைப் படியுங்கள் மதமற்று வாழ!
(முகமது நபியைச் சொர்க்கத்திற்குச் சுமந்து சென்ற பறவை)
அனுபந்தம்: —————-
யூதம் அறிய முகில் அவர்களின் யூதர்கள் புத்தகம் படிக்கலாம். இத்தளத்தில் 36ம் புத்தகம்.
இயேசுவை மட்டும் அறிய கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ படியுங்கள்.
என்னைக் கவிதை உலகிற்குள் இழுத்தவர்கள் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான். ‘பாலை நிலா’ என்ற தலைப்பில் கவிக்கோ அவர்கள், முகமது நபி பற்றி கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். சில உதாரண கவிதைகள் அவருக்கே உரிய நடையில் அட்டகாசம்! அவர் மறைவிற்குப் பின், பதிப்பகத்தாரை விசாரித்தேன். அந்நூல் நிறைவேறவே இல்லை என்பது தமிழுக்குப் பேரிழப்பு.