Reading view

கிஷ்கிந்தா காண்டம் – நினைவெனும் இருட்குகையின் இரகசிய வெளிச்சம்

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வனப்பகுதியை ஒட்டி வாழும் குடும்பம் ஒன்றின் கதை. ஒவ்வொன்றிலும் கச்சிதம் எதிர்பார்க்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அப்பு பிள்ளா (விஜயராகவன்). அவருடைய மகன் அஜய் சந்திரன் (ஆசிப் அலி). மனைவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன மகனும் இன்றி நிர்க்கதியாக நிற்கிறார் அஜய் சந்திரன். அவருடைய வாழ்வில் புது நம்பிக்கையாக மறுமணம் நிகழ்கிறது. அவருடைய குடும்பத்தில் நம்பிக்கையும், கனிவும் ததும்ப கலக்க முயல்கிறார் மனைவி அபர்ணா (அபர்ணா பாலமுரளி).  

வனத்தை ஒட்டிய அவர்கள் வீட்டைச்சுற்றி குரங்குகளின் நடமாட்டம்.  திடீரென்று துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் கிடைக்கிறது. அப்பு பிள்ளாவின் துப்பாக்கி காணாமல் போனது தெரிய வருகிறது. அப்பு பிள்ளாவிற்கு ஞாபக மறதி இருப்பது படிப்படியாக தெளிவாகிறது. அவர் நினைவில் இருப்பது என்ன, அவர் மறந்துவிட்டது என்ன என்பது இருட்குகை. அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களின் உலகம் அது.

ஏன் துப்பாக்கி காணாமல் போனது? அவரின் பேரன் எங்கு போனான்? ஏன் அவர் கதவை எப்போதும் அடைத்துவைத்துக் கொள்கிறார்? முன்னாள் நக்சல் இயக்கத்தினரை ஏன் சந்திக்கிறார்? குரங்குகள் மட்டும் சாட்சியாக நிற்க அவர் ஏதேனும் குற்றம் புரிந்தாரா? அப்பு பிள்ளாவின் நினைவு திரும்புமா? துப்பாக்கியும், தொலைந்துபோன குண்டுகளும் திரும்பக்கிடைக்குமா? 

கடந்து போன காலத்தின் உண்மையைக் கண்டறிய சிசிபஸ் போல அப்பு பிள்ளா முனைகிறார். உண்மையின் உச்சியை அடைந்ததும், தெளிவை விட குழப்பங்களும், கவலைகளும் வந்தடைகின்றன.  மீண்டும் முதலில் இருந்து உண்மையைத் தேடுகிறார். சளைப்பும், சலிப்பும் அவரை நிறுத்த முடியவில்லை. ஏன்? 

கிஷ்கிந்தா காண்டம் த்ரிஷ்யம் படத்தைப் போன்ற சாயலை சற்றே கொண்டது. ஆயினும், இக்கதையின் முதன்மைக் கதை மாந்தர்கள் புத்திசாலிகள் இல்லை. அழுகை, நோய்மை, இயலாமை அவர்களைப் பீடிக்கிறது. அரவணைப்பின்றி நெருக்கும் உலகத்தின் ஊடாக அவர்களால் பத்திரமாக மீண்டுவரும் முயற்சி என்னானது என்பதே கதை.  இத்தனை மனதுக்கு நெருக்கமான, உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ்ச்சியான திரைப்படத்தைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது. மறக்காமல் பாருங்கள். 

  •  

‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்

‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

  •  

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்

இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

  •  

‘Kathal’ – சமகாலம் குறித்த சலிப்பூட்டாத எள்ளல்

உருவகக் கதைகள் நம்மை உண்மையான உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சாவிகள். ‘Kathal’ எனும் இந்தித்திரைப்படம் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் Uncle Hong ரகப் பலாக்களைத் தேடும் தலித் பெண் ஆய்வாளர் பற்றிய கதை. இது உண்மையில் பலாக்காயை திருடியவரை கண்டுபிடிக்கும் பயணமில்லை.

முதல் காட்சியே அதகளம். இந்திய சினிமா காவல்துறையின் Chase காட்சிகள் எப்படியிருக்கும் என வழமையாக விதித்து வைத்திருக்கும் விதிகளை எல்லாம் விளையாட்டாக அத்தொடர் காட்சி குலைக்கிறது. இது பிற படங்களைப் பகடி செய்யும் முயற்சியல்ல. யதார்த்தத்திற்கு நெருக்கமான காட்சியனுபவத்தைத் தரும் முயற்சியாகவே திரையில் கதை வளர்கிறது.

அதிகாரம், அரசியல், சாதி, பாலினம், ஊடகம் எனப்பலவற்றின் மீதான நகைச்சுவையால் ஆன வெளிச்சம் இப்படம். இதில் காதைக் கிழிக்கும் சண்டைக்காட்சிகள், அதிரடிக்கும் பஞ்ச் வசனங்கள், ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறை அறவே இல்லை. தொலைந்து போன பெண்களை விட அரசியல் தலைவரின் பலாப்பழம் ஏன் முதன்மையானதாகத் தேடப்பட வேண்டிய ஒன்றாகிறது? பதவி உயர்வே வேண்டாமென்று ஒரே ஊரில் சமையல் வேலைகளுக்கான ஆளாக ஏன் பெண்களைக் குடும்ப அமைப்பு நடத்துகிறது?

உண்மையை உரக்கச் சொல்லும் சின்னஞ்சிறிய ஊடகவியலாளர் ஒருவர் இப்படத்தில் கைது செய்யப்படுகிறார். முழுக்க, முழுக்கச் சோகமயமனதாக மாற்ற சகல வாய்ப்புகளும் உள்ள காட்சி அது. அங்கே பிளந்து கொண்டு வெளிப்படும் பகடியும், இசையும், பத்திரிகையாளராகத் தோன்றுபவரின் நடிப்பும் சமகாலத்தின் மீதான நுண்மையான கேலியாக அமைகிறது. ‘நான் ரொம்பப் பிரபலமாகிட்டேன். இவங்க அடிச்ச அடியில என் பிருஷ்டம் மட்டும் இரண்டு இன்ச் வீங்கிருச்சு’ என அவர் இறுதியாகத் தோன்றும் காட்சியில் பேசுகையில் மிதமான கற்பனையுலகினில் உண்மையின் கூர்மையான வெளிப்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.

தீவிரமான சண்டைக்காட்சியில் அடித்து நாயகிக்குக் கை வலிக்கிறது. கதவை உடைக்கப் போகும் நாயகன் அதற்கான திராணியின்றி நாயகியின் கைகளில் விழுகிறான். காணாமல் போன பலாப்பழத்திற்குப் பரிசு என்றவுடன் அதைப்போன்ற போலிப் பலாக்கள் பல வரிசையில் வந்து நிற்கின்றன. எம்.எல்.ஏ.வின் புகழ்பாடும் பேனர் பழைய பேப்பர் கடைக்குப் போவதற்காக நின்றபடியே பலாப்பழ திருட்டிற்கு உடந்தையாகிறது. இடையே மிக மென்மையான காதல் கதை ஒன்று மனதோடு உறவாடுகிறது.

இக்கதை தலித் காவல் ஆய்வாளர் உயர்சாதி காதலன் பதவி உயர்வுக்காக உழைக்கும் திரைப்படம் என்றும் அணுகப்படக்கூடும். ஆயினும், இப்படம் சாதிச்சுவரின் ஓரிரு செங்கல்களை நகைச்சுவை சுத்தியல் கொண்டு உடைக்கிறது. சாதிப்பெருமிதங்களை முன்னிறுத்தும் உலகினை கூர்வேல் கொண்டு எதிர்க்கவில்லை. அதற்கு மாறாகக் கிச்சு கிச்சு மூட்டுகிற பாவனையில் தலையில் ஒரு குட்டுக் கொட்டுகிறது. உலகை மாற்றும் வேகம் இக்கதையின் நாயகர்களிடம் இல்லை. படம் முடிகையில் தேடியது கிடைத்ததா என்பதைவிட ஏன் இதைப்போய்த் தேடினார்கள் என்கிற வினாவே கடத்தப்படுகிறது. மறக்காமல் பாருங்கள். காணாமல் போகும் எளியவர்களின் மீதான அக்கறைமிக்க நுண்மையான ஆக்கம் இத்திரைப்படம். இத்திரைப்படத்தை தமிழிலேயே நெட்பிளிக்ஸில் காணலாம்.

  •  

பொய்யும், புரட்டும், வெறுப்பை விதைக்கும் சூழ்ச்சியுமே Chhaava திரைப்படம் – கார்த்திக்

“Chaava” படம் நாக்பூரில் வன்முறை எனப்படும் மதவாதத் தீயைப் பற்றவைத்துள்ளது. “யானை வரும் பின்னே ஓசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப, திரைப்படங்கள் முன்னின்று விஷப் பிரச்சாரத்தை முன்னிறுத்துகின்றன. அதன் பின்னணியில் வன்முறைகளும் கலவரங்களும் தூண்டப்படுகின்றன. கலையின் பணி மக்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், ஆனால் அது தவறான கைகளில் சிக்கியுள்ளது. “எந்திரன்” படத்தில் வரும் வில்லன் ரோபோவாக கலை கொலையாக மாறிவிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில், திரைப்படம் என்ற ஊடகத்தைத் தனது அரசியல் நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு […]

Source

  •