Reading view

கடவுச்சொல், நினைவில்கொள்

Microsoft Authenticator

கணினி, திறன்பேசிகளில் கடவுச்சொல்லைத் தானாக உள்ளிட்டுக் கொள்ளும்படி சேமித்து வைப்பது நம்மில் பலருக்கு வழக்கம். அதற்கு உதவும் மைகோசாப்ட் ஆதன்டிகேட்டர் செயலியில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.

Microsoft Authenticator

உலகில் கிட்டத்தட்ட அனைத்தும் கணினி மயமாகிவிட்ட நிலையில், வலுவான கடவுச்சொல் மிக முக்கியமானது. இணையத்தில் பாதுகாப்பான பயன்பாடு அனுபவத்தைப் பெறக், கடினமான கடவுச்சொல்லை அமைத்தல், அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றுதல் போன்ற பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி நாம் என்னதான் வலுவான கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், நம்மில் பலருக்கு இணையத்தில் தானியங்கு நிரப்பு (Autofill) அம்சத்தில் கடவுச்சொற்களைச் சேமிக்கும் வழக்கம் உண்டு. அதன்மூலம் ஒரே சொடுக்கில் நம் கணக்குகளுக்குள் நுழைய முடியும். பயன்பாட்டை எளிமையாக்கும் இந்த அம்சம் ஆபத்தானது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் தன் கடவுச்சொல் சேமிப்பு அம்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 

இரட்டை நிலை அங்கீகாரம் 

நமது கடவுச்சொற்களை நாம் இணைய உலவிகளில் சேமித்து வைக்கிறோம். அதிலுள்ள தானியங்கு நிரப்பு அம்சம் மூலமாக ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் உள்ளிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக கணக்குகளுக்குள் நுழைகிறோம். ஆனால் இதே எளிமையான வழியைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களும் நமது தகவல்களைத் திருடிவிட முடியும். கடவுச்சொற்கள் கசிவதால் ஏற்படும் இந்த சவால்களை இரட்டை நிலை அங்கீகாரம் (Two Fator Verification) மிகச் சிறந்த வழியில் தடுக்கிறது. புதிய கணிப்பொறியில் நமது கணக்குக்குள் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்தால், ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் ரகசியக் குறியீட்டுச் சொல் கேட்கப்படும். இதை வரைமுறைப்படுத்தும் புதிய செயலியாக மைக்ரோசாப்ட், ஆதன்டிகேட்டர் (Authenticator) என்ற செயலியைக் கொண்டு வந்தது. உயர் பாதுகாப்பு கோரும் தகவல்கள் அடங்கிய பயனர்களுக்கு இந்தச் செயலி பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இதிலும் கடவுச்சொல் சேமிக்கும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. 

தற்போது ஆதன்டிகேட்டரில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. 2025 ஜூலை மாதத்துடன் இந்த அம்சங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி ஜூன் மாதம் முதல் புதிய கடவுச்சொற்களை ஆதண்டிகேட்டர் செயலியில் சேமிக்க முடியாது. ஜூலை மாதம் தானியங்கு நிரப்பு அம்சம் நிறுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிய வருகிறது.

ஏன் இந்த மாற்றம்?

கடவுச்சொல் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடவுச்சொல்லுக்கு பதிலாக ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி (OTP), நுழைவுக்குறி (Passkeys), முக அடையாளம், விரல்ரேகை உள்ளிட்ட உயிரளவியல் அம்சங்கள் (biometric) பயன்படுத்தப்படும். இதன் மூலம் கடவுச்சொல் இல்லாத பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் கடவுச்சொல் திருட்டு தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

செய்ய வேண்டியது என்ன? 

நீங்கள் ஆதன்டிகேட்டர் செயலியைப் பயன்படுத்துவராக இருந்தால், விரைவில் அதில் சேமித்து வைத்திருக்கும் கடவுச்சொற்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆதன்டிகேட்டர் செயலிக்கு நிகரான கடவுச்சொல் நினைவுச் சேவையை, மைக்ரோசாப்ட் எட்ஜ் வழங்குகிறது. தரவிறக்கி வைத்திருக்கும் தகவல்களை எட்ஜுக்குள் தரவேற்றலாம். இதனால் எட்ஜ் வழங்கும் தடையற்ற கடவுச்சொல் மேலாண்மை வசதியைப் பெறலாம். அதேபோல் இணையத்தில் கடவுச்சொல் மேலாண்மைக்கு தனியார் செயலிகளும், மென்பொறிகளும் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக கடவுச்சொற்களைப் பொருத்தளவில் தானியங்கு சேமிப்பு வசதிகள் எதனிலும் சேமிக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள். 

ஆதன்டிகேட்டர் என்ன ஆகும்? 

கடவுச்சொற்களைச் சேமிக்கும் வசதி மட்டும்தான் ஆதன்டிகேட்டர் செயலியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஆதன்டிகேட்டர், இரட்டை நிலை அங்கீகாரம் (Two Factor Verification), நுழைவுக் குறிகள் (Pass Key), ஒற்றைத்தொடுதல் அங்கீகாரம் (One – Tap Verification) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக வழங்கும். இதனால் அந்தச் செயலியை நீக்க வேண்டிய அவசியம் கிடையாது. மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள இம்மாற்றம், கடவுச்சொல் சேமிப்பு வசதியைப் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு சிரமம் ஏற்படுத்தும்போதிலும், இணையத் தரவுகளின் அடுத்தகட்ட பாதுகாப்பு நோக்கம் அவசியமானது. உங்கள் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் பயன்படுத்தும் இணைய உலவி உட்பட எந்த இடத்திலும் அதைச் சேமிக்காமல் இருப்பதும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதும் பயனளிக்கும். 

  • விவேக்பாரதி

ஆதன்டிகேட்டர் செயலியில் நீக்கம் குறித்த செய்தி

The post கடவுச்சொல், நினைவில்கொள் appeared first on செல்லினம்.

  •