Reading view

முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட்

Tim-Cook-and-Warren-Buffett

வாரன் பஃபெட் பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பங்குதாரர்களையும் பொருளாதார உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த முக்கியமான அறிவிப்பு, ஒமாஹாவில் நடந்த வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் வளர்ச்சியை வழிநடத்தி வந்த பஃபெட், தனது வாரிசுக்காக இப்பதவியை விட்டுவிலக்கினார்.

Tim-Cook-and-Warren-Buffett

2026 முதல், துணைத் தலைவர் கிரெக் ஏபல் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார். 94வது வயதிலும் பஃபெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் தொடர, ஏபல் நிர்வாகத் திறமையால் பஃபெட்டின் நம்பிக்கையையும், டிம் குக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

பஃபெட் ஒரு காங்கிரஸ் மன்ற உறுப்பினரின் மகனாக 1930-இல் பிறந்தவர். ‘ஓமாஹாவின் தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் இவர், பெஞ்சமின் கிராஹாமின் வழிகாட்டலில் முதலீட்டு கொள்கைகளைப் படித்து, ஒரு நிதி நெருக்கடியில் இருந்த ஆடை நிறுவனத்தை மிகப்பெரிய முதலீட்டு வல்லரசாக மாற்றினார்.

பஃபெட் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டை தவிர்த்து வந்தாலும், 2016-இல் ஆப்பிளில் முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆப்பிளை ஒரு வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் கூடிய நுகர்வோர் நிறுவனமாகக் கண்டு முதலீடு செய்த பஃபெட், பெர்க்ஷைருக்கே மிகப்பெரிய லாபத்தை பெற்றுத்தந்தார். ஆனால் 2023-24 காலப்பகுதியில் 515 மில்லியன் பங்குகளை விற்றது பலரிடத்தில் கேள்விகளை எழுப்பியது. இதை அவர் வரி திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்தை குழப்பங்களை எதிர்நோக்கிய நடவடிக்கையாக விளக்கியுள்ளார்.

நன்றாக நிர்வாகிக்கப்படும், மதிப்பை விட குறைவான விலையில் உள்ள பங்குகளை நீண்டகாலத்திற்கு வாங்கி வைத்திருப்பதே பஃபெட்டின் முதலீட்டு தத்துவம். கோகா-கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள், அவரது கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெர்க்ஷைர் போர்ட்ஃபோலியோவில் நீண்ட காலமாக உள்ளன. ஸீஸ் காம்பனி, ஃப்ரூட் ஆஃப் த லூம், டெய்ரி க்வீன் போன்ற நிறுவனங்களை முழுமையாக வாங்கினாலும், அவற்றின் நிர்வாகத்தை தொடர அனுமதித்துள்ளார்

பஃபெட் முதலீட்டாளராக மட்டுமல்ல, மாபெரும் நன்கொடை வழங்குபவராகவும் உலகத்தை ஈர்த்தவர். 2006 ஜூனில், தனது பெரும்பாலான செல்வத்தை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறக்கட்டளை உலக சுகாதாரம், நூலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் கவனம் செலுத்துகிறது. இது உலகின் மிகப்பெரிய வெளிப்படையான நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. பதவியில் இருந்து விலகினார் என்றாலும், பஃபெட்டின் சிந்தனையும் செயல்முறையும் உலகின் மிக முக்கிய முதலீட்டுத் துறையிலேயே தொடர்ந்து ஒளிவீசும்.

  • நவீனா

The post முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட் appeared first on செல்லினம்.

  •  

சொற்கட்டளையில் உருவாகும் காணொளி

AI

கூகுள் தனது ஜெமினி செயலி மற்றும் விஸ்க் எனும் பரிசோதனை கருவியின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு காணொளி உருவாக்கும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பங்கள், கூகுள் டீப் மைண்ட் உருவாக்கிய “வியூ 2” எனும் காணொளி உருவாக்கும் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை.

AI

ஏற்கெனவே இருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக உருவாக்கும் திறனுடைய தொழில்நுட்பமான செய்யறிவு நட்பம் (Generative AI) உலகம் முழுக்க வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் கூகுள்  உருவாக்கிய வியூ 2, நாம் தரும் கட்டளையைக்கொண்டு தரம் வாய்ந்த காணொளிகளை உருவாக்கும் திறன் பெற்றது. எளிமையாக சொன்னால், நாம் என்ன  கற்பனை செய்கிறோமோ அதைச் சொற்களில் விவரித்தாலே வியூ 2  ஒரு காணொளியாக்கி காட்டும். யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) உட்பட பல சுருக்கமான காணொளி வடிவங்களுக்கு இது அடிப்படையாக விளங்குகிறது. இதன் மூலம், 8 விநாடி நீளமுடைய 720p தரமான, 16:9 விகிதத்தில் MP4 வடிவில் காணொளிகளை உருவாக்க முடிகிறது. இயற்கை காட்சிகள், திரைப்பட இயக்கம், காணொளிக்கருவி சுழற்சி போன்ற தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய காணொளிகளை விரைவாக உருவாக்கும் திறன் பெற்றது இந்த தொழில்நுட்பம்.

தூண்டுதல்களின் விவரங்களை புரிந்து கொண்டு, அவற்றை காணொளி உருவாக்கத்திற்கான பொருண்மை வரைபடமாக (semantic blueprint) மாற்றும் விஸ்க் ஒரு இயந்திரக் கற்றல் மாதிரியாக செயல்பட்டுகிறது. திரைப்பட இயக்கம், ஒளி அமைப்பு, காட்சி சூழல் போன்ற அம்சங்களை துல்லியமாக திட்டமிடுகிறது. தற்போது கூகிள் ஒன்ஏ ஐ பிரிமியம் (Google One AI Premium) சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விஸ்க், உரையிலிருந்தும் (text-to-video) படங்களிலிருந்தும் (image-to-video) காணொளி உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. விஸ்க் மற்றும் வீயூ 2 சேர்ந்து கலைமிக்க, அறிவுபூர்வமான காணொளிகளை உருவாக்குகின்றன.

இந்த சேவையை கூகிள் ஜெமினி அட்வான்ஸ்டு (Google Gemini Advanced) பயனர்கள் இணையம் மற்றும் திறன்பேசி  வாயிலாகப் பெற முடிகிறது. பயனர்கள் தெளிவான கட்டளைகளை வழங்கினால், அதற்கேற்ப பொருத்தமான காணொளிகளை உருவாக்குகிறது. வியூ 2 மூலம் உருவாக்கப்படும் அனைத்து காணொளிகளும், அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை தெரிவிக்க ஒவ்வொரு காட்சியிலும் “சிந்த்ஐடி”  (SynthID) எனப்படும் கணிம முத்திரை பதிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, நாம் “பனிக்காற்றில் ஓடும் ஒரு முயல் ” என ஒரு உரைக் கட்டளையை வழங்கினால், அதனடிப்படையில் இயற்கையான பனிவிழும் சூழலில் முயல் இயல்பாக ஓடுவது போன்ற திரைப்படத்  தர காட்சியுடன் கூடிய காணொளி உருவாகும். ஒரு காணொளிக்கருவி இல்லாமல், திரைக்கதை எழுதாமல், வெறும் சொற்கள் மூலம் திரைப்படத்தின்  தரத்திற்கு காட்சிகளை உருவாக்க முடியும் என்ற புரட்சியை, கூகுள் தங்களின் விஸ்க் மற்றும் வியூ 2 போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இன்று நடைமுறையில் கொண்டு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் உதவியால் உங்கள் கற்பனையை சொற்களில் பதித்து காணொளி உருவாக்கிப்பயன்பெறலாம்.

  • நவீனா

The post சொற்கட்டளையில் உருவாகும் காணொளி appeared first on செல்லினம்.

  •  

நான் முதல்வன்

Naan Mudhalvan IAS

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகளில் இந்த ஆண்டு (2024-2025) தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதில், 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்களாவர். இவர்களில் 18 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சி மையங்களின் பயனாளிகள். இத்திட்டத்தில் பயன்பெறுவோர்க்குத் தனித்துவமான வலைத்தளம் ஒன்றுள்ளது.

Naan Mudhalvan IAS

மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் இணையதளம் வழங்குகிறது.​ இந்த வலைத்தளத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துக் காண்போம். 

மாணவர்களின் இயல்பான திறனைக் கண்டறிந்து அவரவர் விரும்பும் துறையில் சிறந்து விளங்க அவர்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதே ‘நான் முதல்வன்’ திட்டம். தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை, அரசு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்குகின்றது. இந்த பயிற்சிகள், பொறியியல், கலை, அறிவியல், மருந்தியல் மற்றும் மருத்துவ அறிவியல் போன்ற பல துறைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. காணொளிப் பயிற்சியாக இக்கல்வி கற்பிக்கப்படுகிறது. 

மேலும், “நான் முதல்வன் ஹேக்கத்தான்” எனப்படும் நிரல் திருவிழா, மாணவர்களின் தொழில்நுட்ப சிந்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், தமிழகம் முழுவதும் நடைபெறும் பெரும் நிகழ்வாகும். இது கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான பாலமாக செயல்படுகிறது.
இளங்கலை இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் பங்கேற்கலாம். இது தொழில்துறை சிக்கல்களுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பு  இருக்கிறது.

பொதுவாக, வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும்  தேர்வுகளில், உளவியல் திறனை அளவிடும் சைக்கோமெட்ரி (Psychometry) பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமல்லாமல், குழுவோடு வேலை செய்யும் திறன், மனத்திறன், அழுத்த நிலை, நடத்தை போன்ற அம்சங்களையும் இந்தத் தேர்வு மூலம் நிறுவனம் மதிப்பீடு செய்ய முடிகிறது. சரியான பணியாளரை தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வுகள், நேர்முகத் தேர்விற்கு முந்தைய கட்டமாக நடத்தப்படுகின்றன. அத்தகைய சைகோமெட்ரி பரிசோதனைகளை மாணவர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பயன்படுத்தி பலன் பெறலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள ஒரு முக்கியமான கல்வி மேம்பாட்டு முயற்சியாக “நான் முதல்வன் பள்ளிகள்” திட்டம் கருதப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்குகிறது.

மேலும்  “நான் முதல்வன் ஃபினிஷிங் ஸ்கூல்” (Naan Mudhalvan Finishing School) என்ற புதிய திட்டத்தின் மூலம், தொழில்நுட்பப் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

​நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள், 2023ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வான 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – குடிமை பணிகள்) ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வுக்கான பயிற்சி மற்றும் வல்லுநர்களின் வழிகாட்டுதல் (Mentoring) பெறுகின்றனர்.

அரசுக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் தகவல்களின் வழியாக மாணவர்கள் இத்தளத்தில் தங்களைப் பதிந்துகொள்ள முடியும். கல்லூரி கொடுக்கும் தகவல்களை வைத்து பயனர் கணக்கை உருவாக்கி மாணவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்கின்றனர். உதவி மையத்தினைத் தொலைப்பேசி வழியாக அழைத்தும் (9962220528) தகவல்களையும் உதவிகளையும் பெறவியலும். இணையத்தளத்தின் கீழ்ப்பகுதியில் தொலைப்பேசி எண்கள், முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

  • நவீனா

தொடர்புடைய இணையப் பக்கங்கள்

நான் முதல்வன்

காணொளிக் கல்வி

The post நான் முதல்வன் appeared first on செல்லினம்.

  •  

ஐபோன் திரைப்படம்

iPhone movie

ஐபோன்16 புரோ மாக்ஸ் பயன்படுத்தி. நான்கு மும்பை இயக்குநர்கள் தங்கள் குறும்படங்களை எளிதாகவும், தரமாகவும் உருவாக்கி உள்ளனர்.

iPhone movie

மும்பை அகாடமி ஆஃப் மூவிங் இமேஜ் (MAMI) – மமி அமைப்பின் ‘ஷாட் ஆன் ஐபோன்’ (MAMI Select: Shot on iPhone) என்ற திட்டத்தின் கீழ் இது நடந்திருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த திட்டம், கொங்கனா சென் சர்மா, விக்ரமாதித்ய மோத்வானே, லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறுகிறது. மமி அமைப்பு மும்பைத் திரைப்பட விழாக்களை நடத்தும் ஒரு பொதுவான அமைப்பாகும்.

திரைப்பட உருவாக்கத்தில் திறன்பேசி படக்கருவிகள், குறிப்பாக ஐபோன் படக்கருவியின் பயன்பாடு, உலகளாவிய சினிமா துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதல் முக்கியமான முயற்சி 2011ஆம் ஆண்டு வந்த நைட் பிஷிங் (Night Fishing) என்ற கொரிய குறும்படமாகும். இதை இயக்கியவர் பாக் சான்-வுக். ஐபோன் 4ல் எடுக்கப்பட்ட படம் இது.

அதன்பின் 2015ஆம் ஆண்டு டான்ஜெரின் (Tangerine) என்ற அமெரிக்க திரைப்படம் முழுவதுமாக ஐபோன் 5S-ல் எடுக்கப்பட்டது. இது சண்டான்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது. இதன்பிறகு, திறன்பேசியில் திரைப்படம் எடுக்கும் வழக்கம் பரவலானது.

இந்த வரிசையில், பெரும் தயாரிப்பு செலவுகள் இல்லாமல், கதையை மையமாகக் கொண்டு, தொழில்நுட்பத்தை துணையாகக் கொண்டு ஐபோனை மட்டுமே பயன்படுத்தி குறும்படங்களை உருவாக்க திரைப்படக்கல்வியைக் கற்றுத்தரும் நிறுவனங்களே ஊக்குவிக்கின்றனர். தற்போதைய மமி மும்பைத் திரைப்படவிழாவில் நான்கு இயக்குநர்கள் ஐபோனில் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டன.

அம்ரிதா பக்சி இயக்கியுள்ள ‘டின்க்டோரியா’ (Tinctoria) என்ற உளவியல் துப்பறியும் படமானது 1859ல் வங்காளத்தில் நடந்த இண்டிகோ கிளர்ச்சியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரோஹின் ரவீந்திரன் நாயர் உருவாக்கிய ‘கொவர்ட்டி’ (Kovarty) என்பது ஒரு தட்டச்சுப்பொறிக்கும் தட்டச்சாளருக்கும் இடையேயான உறவைக்கூறும் கற்பனை நிறைந்த காதல் கதை. ஐபோனின் சிறிய வடிவமைப்பினால், அதை தட்டச்சுப்பொறிக்குள்ளேயே வைத்து படம் பிடித்து, சிறந்த கோணங்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரோஹின்.

சாணக்ய வியாஸ் இயக்கிய ‘மங்யா’ (Mangya) என்பது ஒரு சிறுவனையும் அவன் வளர்க்கும் சேவலையும் குறித்த வாழ்வியல் கதை. இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில், கதிரவன் உதயமாகும் முன் 1,000 அடி தூரம் நடிகரைத் தொடர்ந்து சென்று படம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமான படத்தூக்கிக் கருவிகளை அமைக்க நேரமில்லை. ஐபோன் ஆக்சன் மோட் பயன்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மேலும், காணொளி எடுக்கும் போது காட்சியில் ஏற்படும் அதிர்வுகளை குறைத்து, ஒழுங்காக நிலைத்த காட்சியை உருவாக்குவது  (Stabilisation) சவாலாக இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய தமிழ் குடும்பத்தில் உள்ள பெண்களின் அடக்கப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது  சீயிங் ரெட் (Seeing Red). இதில் தமிழ் சினிமாவில் காலம் காலமாக கதாநாயகன் மெதுவான நடையில் அறிமுகமாகும் (slow motion) காட்சிகளை தனது படத்தில் கதாநாயகிக்கு வைத்திருப்பதாக கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் சாலினி விஜயகுமார்.

ஐபோன்16 புரோ-வின் 120மிமீ லென்ஸை பயன்படுத்தி கதை, அமைப்பு மற்றும் கருப்பொருளை ஒரே ஷாட்டில் ஒருங்கிணைக்க முடியும் என்று இந்த நவீன இயக்குநர்கள் கூறுகின்றனர்.

இந்த நான்கு குறும்படங்களையும் முழுமையாக எம்ஏஎம்ஐ(MAMI) மும்பை திரைப்பட விழா யூட்யூப் பக்கத்தில் காணலாம். இன்றைய இயக்குநர்கள், விலையுயர்ந்த படக்கருவி, ஒளி உமிழும் கருவிகள் இல்லாமலேயே உண்மையான கதை சொல்லல் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஐபோன் போன்ற கருவிகள், சிறு படைப்பாளிகளுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் கலை மற்றும் ஊடகத்துறையில் எளிய மக்களின் பங்கேற்பையும் இடத்தையும் இவை எளிதாக்குகின்றன. தொழில்நுட்பத்தின் உதவியால், கலை, காலத்தையும், எல்லைகளையும் கடந்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.

தொடர்புடைய இணைப்பு

ஆப்பிள் செய்தி
மமி யூட்யூப் பக்கம்

The post ஐபோன் திரைப்படம் appeared first on செல்லினம்.

  •  

கூகுள் டாஷ்கேம் செயலி

Google Dashcam

வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் (Android Automotive) இயங்குதளத்துடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு டாஷ்கேம் செயலியை உருவாக்கியுள்ளது, கூகுள் நிறுவனம்.

Google Dashcam

அண்மையில் பெங்களூருவில் எடுக்கப்பட்டதாக காணொளி ஒன்று இணையத்தில் சுற்றிவந்தது. வாகனத்தின் முன்னே ஒருவர் வந்து விழுகிறார். அவரை மோதாமல் வண்டி நிற்கிறது. விழுந்தவரை நோக்கி வாகனம் ஓட்டுபவர் “வண்டியில் டாஷ்கேம் இருக்கிறது” என்று சொல்லும் ஒலி கேட்கிறது. விழுந்தவர் எழுந்து ஓரமாக நிற்க வண்டி சாலையில் பயணத்தைத் தொடர்கிறது. வேண்டுமென்றே மோதி அடிபட்டதாகச் சொல்லிப் பணம் பறிக்க நினைத்த நபர், அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து ஒதுங்கி நின்றதும் தன்னை ஏமாற்ற முயன்றவரைத் தன் தொழில்நுட்ப வசதியால் சமாளித்து சண்டைபோடாமல் வாகனஓட்டி இயல்பாக இந்நிகழ்வைக் கடந்ததையும் வேடிக்கையாகப் பலர் பகிர்ந்திருந்தனர்.

இம்மாதிரி மோசடிகளுக்கு மட்டுமின்றி காப்பீட்டு மோசடிகளைத் தவிர்க்கவும் வாகன முகப்பில் பொருத்தப்படும் காணொளிக்கருவிகள் உதவுகின்றன. விபத்து நேரும்போது சரியான இழப்பீடு வாங்க சான்றாகவும் இக்காணொளிகள் பயன்படுகின்றன. ஓட்டுநர் நடத்தையைக் கண்காணிக்கவும் சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பயணத்தின் போது இப்படிக் காணொளியைப் பதிவு செய்வது பாதுகாப்புச் சிக்கல்களுக்கும் தீர்வாக உள்ளது.

இவை வாகனத்தின் கண்களாகவும் செயல்படுகின்றன என்றால் மிகை இல்லை. 1980களில் ரஷ்யாவில் முதல்முறையாக இவை பாதுகாப்பு கருவியாக பயன்படுத்தப்பட்டன. பின்னர், சீனாவில் இவை  பரவலாக பயணிகள் பாதுகாப்புக்காகப் பயன்பட்டன. இப்போது, உலகளவில் பாதுகாப்பு சிந்தனையுடன் வாகனங்களை வடிவமைக்கும் அனைத்து நிறுவனங்களும் வாகனத்தின் முகப்பில் காணொளிப்பதிவுக் கருவியை வைப்பதை முக்கியமான, தேவையான வசதியாகக் கருதுகின்றன.

ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் என்பது, ஆண்ட்ராய்டு ஆட்டோ போல திறன்பேசியில் இருந்து காட்சியைக் காட்டும் முறையல்ல. இது, வாகனங்களின் உள்ளேயே இணைக்கப்பட்டு நேரடியாக இயங்கும் முழுமையான ஆண்டிராய்டு இயங்குதளமாகும். குரல் கட்டுப்பாடுகள், மூன்றாம் தரப்பு செயலிகள், ஓடிஏ(OTA) அப்டேட்கள் போன்றவை இதன் முக்கியமான அம்சங்களாகும். இதன் மூலம் விளையாடவும் முடியும் என்கிற செய்தியே முன்னரே செல்லினம் தளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பாக டாஷ்கேம் செயலியும் இருக்கிறது.

வாகனத்தின் முகப்பில் பொருத்தப்படும் காணொளிப்பதிவுக் கருவிகளில், கம்பி இல்லா தரவு பரிமாற்றம், இரவு நேர பதிவு திறன், வேகக் கணிப்பு மற்றும் இடம் குறித்த தகவல் சேமிப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன. நவீன வாகனங்களில், பல்வேறு மின்னணு கருவிகள் மற்றும் பல காணொளிக்கருவிகள் உள்ளன. இவை, வாகனத்தின் பின்புறத்தில் உள்ள நபர்கள் அல்லது பொருள்களை கண்டறிவதற்கும், மோதல்களைத் தவிர்ப்பதற்கும் பயன்படுகின்றன.

எனினும், சில வாகனங்களில் மட்டுமே சுற்றியுள்ள சூழலைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. பெரும்பாலான வாகனங்களில் (ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் இயங்கும் கார்களும் கூட) வாகனத்தின் முகப்பில் காணொளிப்பதிவு செய்யும் கருவியை தனியாக வாங்கிப்பொருத்த வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காகவே  கூகுள், வாகனங்களில் எளிதாக இணைக்கக்கூடிய திறந்த மூல  டாஷ்கேம் செயலியை உருவாக்கியுள்ளது.

வாகன உற்பத்தியாளர்கள், தங்களுக்கேற்றவாறு இதை மாற்றி வடிவமைத்து, ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் இயங்கும் வாகனங்களில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும். இதன் மூலம், பாதுகாப்பு மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியாகவும் வாகனங்கள் மேலும் சிறப்படைய வாய்ப்பு உள்ளது.

தொழில்நுட்பமும் பாதுகாப்பும் இணைந்து பணயம் செய்யும் இந்த நவீன உலகில், கூகுள் டாஷ்கேம் செயலி ஒரு பயனுள்ள முன்மாதிரியாகத் திகழும். எதிர்காலத்தில் இது பல வாகனங்களில் இயல்பான அம்சமாக மாறும் என்றும் நம்பலாம்.

  • நவீனா

The post கூகுள் டாஷ்கேம் செயலி appeared first on செல்லினம்.

  •  

கூகுள் ஜெமினி 2.5 புரோ இலவசம்

Gemini AI

கூகுள் நிறுவனம் தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரி ஜெமினி 2.5 புரோ-வை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் ஜெமினியின் மேம்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடிந்தது.

Gemini AI

கூகுள் நிறுவனத்தின்  டீப்மைன்ட் அணியைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய ஜெமினி 2.5 புரோ, இதுவரை கூகுள் வெளியிட்டுள்ள நுண்ணறிவு மாதிரிகளில் அதிகத் திறன் வாய்ந்ததாகவும் முன்பிருந்த நுண்ணறிவு மாதிரிகளைவிட மேம்பட்ட செயல்திறனை கொண்டுள்ளதாகவும்  கருதப்படுகிறது. அது மட்டுமன்றி இதன் மின்சார நுகர்வும் குறைவு.

ஜெமினி செயற்கை நுண்ணறிவு ஒரு முழுமையான பல்துறை (Multimodel) தொழில்நுட்பம் ஆகும். இது ஒரே நேரத்தில் உரை, படம், ஒளிவழி, ஒலிவழி, மற்றும் கணினி மொழிகளை புரிந்துகொள்ளும் திறன் பெற்றுள்ளது. ஜிபிடி-4 போலவே, இதுவும் படங்களை புரிந்துகொள்ளும் திறன் கொண்டது. ஆனால் ஜெமினி 2.5 ப்ரோ, தனித்தனியாக துணை மாதிரிகளை பயன்படுத்தாமல், இயல்பாகவே எல்லா தரவுகளையும் ஒரே வடிவமைப்பில் கையாளும் திறனைக் கொண்டுள்ளது.

பல்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித உணர்வுகள், புரிதல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த புதிய நுண்ணறிவு மூலம், மனிதக் கண்காணிப்பு இல்லாமல் பிழை திருத்தம், அனைத்து ஊடகத் தரவுகளையும் ஒரே இடத்தில் செயலாக்கம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் போன்ற செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

ஜெமினி 2.5 மாதிரிகள் மனிதனைப்போல் சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட மாதிரிகள். இவை பதிலளிக்கும் முன் தங்களின் எண்ணங்களை ஆராயும் திறனைக் கொண்டவை, இதனால் மேம்பட்ட செயல்திறனையும் உயர்ந்த துல்லியத்தையும் பெற முடிகிறது. இத்துறையில் ஆராயும் திறன் என்பது வெறும் வகைப்படுத்தலும் கணிப்பும் மட்டுமல்ல. அது தகவலை பகுப்பாய்வு செய்வது, தர்க்கரீதியில் முடிவுகளை எடுப்பது, சூழ்நிலை மற்றும் நுணுக்கங்களை உணர்வது, மற்றும் அறிந்த முடிவுகளை எடுப்பது போன்ற திறன்களை குறிக்கிறது.

நீண்ட காலமாக, வலுவூட்டப்பட்ட கற்றல் (reinforcement learning) மற்றும் சங்கிலி எண்ணத் தூண்டல் கட்டளை (chain-of-thought prompting)  போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி, மேலும் புத்திசாலியாகவும், ஆராயும் திறனுடன் கூடியதாகவும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக, கூகுளின் முதல் சிந்திக்கும் மாதிரியான ஜெமினி 2.0 மின்னல் சிந்தனை( Flash Thinking) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ஜெமினி 2.5 மூலம், மேலும் மேம்பட்ட அடிப்படை மாதிரியை  மேம்பட்ட பயிற்சி நுட்பங்களுடன் இணைத்து, புதிய செயல்திறன் நிலையை அடைந்துள்ளது. இதன்மூலம் அவை மேலும் சிக்கலான பிரச்சனைகளை கையாள முடியும். தற்போது சோதனைக்கட்டத்தில் உள்ள ஜெமினி 2.5 ப்ரோ, இணைய உலாவி விரிவாக்கங்கள், கோப்பு பதிவேற்றம் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்குதளங்களுக்கான பயன்பாடுகளுக்கு கிடைக்கும்.

தமிழ், ஜப்பானிய மொழி, அரபு மொழி போன்ற சிக்கலான நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கூகுள் ஜெமினி ஆதரிக்கிறது. இதன் மூலம்,  மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் சுருக்கம் போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம். மேலும், சிக்கலான கணிதக் கணக்குகளை தீர்க்கவும்  தர்க்கத் தொடர்புடைய புதிர்களை பகுப்பாய்வு செய்யவும் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதைப்பயன்படுத்தலாம்.

கூகுளின் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தில் மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்படும் ஜெமினி 2.5 புரோ (பரிசோதனை கட்டம்), செயற்கை நுண்ணறிவு செயல்திறனை ஒப்பிடும் அடிப்படையான தரவரிசையில் (LMArena) முதலிடம் பிடித்தது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்த இலவச வெளியீட்டு செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே கூகுளின் முதன்மையான நோக்கமாக உள்ளது.  

  • நவீனா

The post கூகுள் ஜெமினி 2.5 புரோ இலவசம் appeared first on செல்லினம்.

  •