Reading view

சலுகை வாரம்

Pa Raghavan

உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?

நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…

ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

இடமும் இருப்பிடமும்

Pa Raghavan

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

விழாதவன்

Pa Raghavan

சலம் வெளியீட்டு விழா எங்கே? எப்போது?

முன்பதிவு ஆரம்பமானதிலிருந்து பலபேர் தொடர்ச்சியாக இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். விழாவின்போது நேரில் சந்தித்துப் பெற விரும்புவதாகவும் சிலர் சொன்னார்கள். அனைவருடைய அன்புக்கும் என் நன்றி.

ஆனால் முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்குப் புத்தக விழாக்களில் நம்பிக்கை இல்லை. நான் வெளியீட்டுக்கு விழாவெல்லாம் வைப்பதில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு விழா நடந்தது. அது என் மனைவியின் ஏற்பாடு. அதன் பிறகு எப்போதும் விழா நடந்ததில்லை; நான் அதை விரும்புவதும் இல்லை. சம்பந்தமில்லாத யாரோ ஒரு பிரபலம் வந்து வெளியிட, இன்னொரு பிரபலம் முதல் பிரதி பெற, மூன்றாவது பிரபலம் இன்னும் நான் படிக்கவில்லை என்று ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் பேச, அதையும் கேட்டுத் தொலைக்க வாசகர்களுக்கு என்ன தலையெழுத்து?

எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் இடையில் புத்தகம் மட்டும் போதும். பிரசாரகர்கள் தேவையில்லை. ஒரு புத்தகத்துக்கு நேர்மையாகப் பிரசாரம் செய்யத் தகுதி படைத்தவர்கள் இரண்டு பேர். எழுதியவரும் வெளியிட்டவரும். மூன்றாம் தரப்பென்பது எப்போதும் இடைஞ்சலே. நான் இங்கே எழுதுகிறேன். ராம்ஜி தொடர்ந்து சலத்தில் அவரைக் கவர்ந்த வரிகளை அவரது பக்கத்தில் பிரசுரம் செய்து வருகிறார். போதுமே? எனவே சலத்துக்கு வெளியீட்டு விழாவெல்லாம் கிடையாது.

எப்போதும் போலப் புத்தகம் அச்சாகி வந்ததும் முன்பதிவு செய்யும் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டு அனுப்புவதற்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்வேன். என்னைப் பொறுத்தவரை விழா என்பது அதுதான். வெறும் விழா அல்ல அது. திருவிழா. எழுத்தாளனுக்கும் அவனை விரும்பும் வாசகர்களுக்கும் இடையிலுள்ள உள்ளார்ந்த உறவு நிகரற்றது. மூன்றாவது மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாததும்கூட. எனக்கு அது போதும். இன்றல்ல. என்றென்றும்.

ஒரு விழா என்பது வாசகர்களும் எழுத்தாளரும் நேரில் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பில்லையா என்று ஒருவர் கேட்டிருந்தார். அது உண்மைதான். ஆனால் என்னைச் சந்திப்பதெல்லம் ஒரு பெரிய விஷயமா? யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, நேரம் குறித்துக்கொண்டு என் அலுவலகத்துக்கு வரலாம். சந்தித்துப் பேசலாம்.

அவ்வளவு ஏன், புத்தகம் தயாரானதும் முன்பதிவு செய்திருப்போரின் பிரதிகளில் கையெழுத்திட என்றைக்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்லவிருக்கிறேன் என்பதை நிச்சயமாக இங்கே அறிவிக்கத்தான் போகிறேன். ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அன்றைக்கு அங்கே நேரில் வந்து சந்தித்துப் பெற்றுக்கொண்டால் போயிற்று.

வாசகர்களைச் சந்திக்க எப்போதும் விரும்புகிறேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கவே செய்கிறேன். ஆனால் என்றைக்குமே புத்தக வெளியீட்டு விழா மட்டும் வைக்க மாட்டேன்.

அது வெறும் நேர விரயம். சமோசா விரயம்.

நிற்க. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சலத்தின் இரு பதிப்புகளுக்கும் முன்பதிவு செய்யலாம். முப்பது சதவீதச் சலுகை விலையில் புத்தகம் உங்களை வந்தடையும். முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன். இதில் மாற்றமில்லை. முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன.

சலம் முன்பதிவுச் சுட்டிகள்:

Paperback Edition
HardCover Edition

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

சலம் முன்பதிவு ஆரம்பம்

Pa Raghavan

சலம் முன்பதிவை நேற்று தொடங்கி வைத்த வாசக நண்பர்களுக்கு நன்றி.  ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இயக்குநர் சமுத்திரக்கனி இதன் முன்பதிவுச் சுட்டிகளை வெளியிட்டு வாழ்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது.

எவ்வளவோ எழுதுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். எல்லாமே இருப்பதன் பொருட்டு நிகழ்வது. ஆனால், நாம் இருந்ததன் நியாயத்தை நமது காலத்துக்குப் பிறகு சொல்வதற்கு ஒவ்வோர் எழுத்தாளனும் ஒன்றை எதிர்பார்த்து நிச்சயமாகத் தவமிருப்பான். எனக்கு இது, அது.

ஆகக் கூடியவரை பிழையற்ற பதிப்பாக, இம்மியளவும்  நேர்த்தி குலையாத பதிப்பாக, தூக்கி வைத்துக்கொண்டு பிரித்துப் படிக்கையில் ஓரங்களில் எழுத்து ஒளிந்துகொண்டு  சிரமம் தராத பதிப்பாக, அனைத்தினும் முக்கியமாகக் கண்ணை உறுத்தாத வடிவத்தில் இது அமைவதற்கு என்னால் முடிந்த வரை முயற்சி செய்திருக்கிறேன். தயாரிப்புப் பணிகளின்போது ஜீரோ டிகிரி ஊழியர்களைக் கிட்டத்தட்ட சித்திரவதையே செய்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வருத்தமாகவும் சிறிது வெட்கமாகவும்கூட இருக்கிறது. வேறு எந்த எழுத்தாளரும் ஒரு பதிப்பாளரை இவ்வளவு இம்சிக்க இயலாது. எதற்குமே முகம் சுளிக்காமல் கேட்ட அனைத்தையும் செய்தளித்த ராம்ஜியை இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். உடன் இருந்து உதவிய வித்யா, செல்வகுமார், மகேஷ், விஜயன், ராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

ஆயிரம் ரூபாய்க்கு மேலே விலை கூடிய ஒரு நாவலை எத்தனை பேர் ஆர்வமுடன் வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்கிற – கவலையல்ல – சிறிய யோசனை நேற்று காலை வரை இருந்தது. கெட்டி அட்டைப் பதிப்பினும் வழக்கமான பதிப்பைத்தான் அதிகம் பேர் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. நேற்றிரவு ராம்ஜி அளித்த புள்ளி விவரம் வேறு விதமாக இருந்தது. நேற்று நாளெல்லாம் நண்பர்கள் முன்பதிவு செய்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் என் அன்பு.

இரண்டு வினாக்கள் நேற்று அதிகம் கேட்கப்பட்டன.

1. இந்த முப்பது சதவீத விலைக் குறைப்பு இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தானா? பிறகு இருக்காதா?

2. வெளியீட்டு விழா எப்போது, எங்கே? நேரில் சந்தித்துக் கையொப்பமுடன் பிரதியைப் பெற விரும்புகிறேன்.

இதில் முதல் வினாவுக்கு மட்டும் இப்போது பதிலளித்துவிடுகிறேன். விலைச் சலுகை இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தான். அதன் பிறகு வழக்கமான பதிப்பின் விலை ரூ. 1000 ஆக இருக்கும். கெட்டி அட்டைப் பதிப்பின் விலை ரூ. 1200. முப்பது சதவீதத் தள்ளுபடி விலை என்பது முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே.

இரண்டாவது வினாவுக்குச் சிறிது விளக்கமாக பதிலெழுத நினைக்கிறேன். எனவே தனியாக, பிறகு.

சலம் முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். சித்திரை பிறந்ததும் நூல் உங்களை வந்தடையும்.

  1. Paperback Edition
  2. HardCover Edition

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •