புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல் மாத இதழ் – 2025 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: உலகப் புத்தகத் தினத்தை பள்ளிதோறும் அரசு விழாவாக மாற்றுவோம்! – ஆசிரியர் குழு ♻️ நூல்…
உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது. அதற்கு முன்னால் நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை. அதன் பெயர் புசானன் மேஜை. இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது. ‘அதில் உட்காருங்கள். அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர். அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை. மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.
வாலஸ் மெல்ல அமர்கிறார். எதிரே பிரும்மாண்டமான மேஜை. அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு. அதிபரின் குடும்பப் படங்கள். ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள். விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது. மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.
பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள். எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி. அருகே இரண்டு சாதா கறுப்பு தொலைபேசிகள். அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.
நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ். அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது. பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார். இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு. அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள். ஒரு கடற்போர் சித்திரம். அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி. அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம். இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.
நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி. அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள். வெளியே பாதுகாவலர்கள். நிற்கும் அறை. அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம். அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.
ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்? அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம். அந்த நாள் 1963 செப்டம்பர் 16.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது. இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார். பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள். ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார். நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !
மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது. தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ். ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).
நேரம் முடிந்துவிட்டது. அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ். உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும் நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி. ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!
நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ். டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார். கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது. வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.
நாவல் வெளியாகிவிட்டது. வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது. கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ். பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.
பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார். அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,
ஒரு தட்டில்
பழங்களும், பிரார்த்தனைகளும்
வைக்கப்பட்டன.
பழத்தைத் தின்றார் கடவுள்.
பழுக்கட்டும் என்று
விட்டு வைத்தார்
பிரார்த்தனைகளை.
என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது. ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !
பின்னிணைப்பு
இது ஒரு நாள் சம்பவமல்ல. பத்து நாட்கள் இதுபோல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வரை கென்னடி ஓய்வெடுக்கும் போது அவரது அலுவலக அறையில் இது போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.
இர்விங் வாலஸின் புனைவுகளைப் போலவே அவரது கட்டுரை நூல்களும் மிகமிக முக்கியமானவை. இக்கட்டுரை அவரது சண்டே ஜெண்டில்மேன் என்ற கட்டுரைத் தொகுப்பிலிருக்கிறது – ஆம், வேறெரு கட்டுரையில் நாம் ஏற்கனவே பார்த்தது போல அவர் ஞாயிற்றுக்கிழமைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. 1965ல் வெளிவந்த இந்தத் தொகுப்பில் அவர் அமெரிக்கா தொடர்பாக எழுதியவை, வெளிநாடு சென்று பார்த்ததை எழுதியவை என இரு பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார். இந்தக் கட்டுரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகாகோவின் புகழ் பெற்ற எவர்லே விடுதியை நடத்திய இரு பெண்கள் பற்றிய கட்டுரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.
இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னுரை மிகமிக முக்கியமானது. புகழ்பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உழைப்பைப் போகிறபோக்கில் சொல்வார். பத்திரிகைகளில் வேலை பார்த்துக் கொண்டு முதலாளி சொன்னதை எழுதிக் கொண்டே ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் பெற்றுவிடவில்லை. அவரது புகழ் பெற்ற படைப்புகளின் எண்ணிக்கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட படைப்புகளும் உண்டு. அவர் சொல்வதை அப்படியே தருகிறேன் – பாருங்கள்.
என் பதினேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளுமைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டாரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீரோஸ் ஆஃப் டுடே என்று ஒரு நூல் எழுதினேன். நிராகரிக்கப்பட்டது. பதினெட்டாவது வயதில் மக்களின் பொதுவான மூடநம்பிக்கைகளை வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதினேன். நிராகரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் வயதில் ஹோண்டூராஸ் காடுகளில் நான் மேற்கொண்ட சாகசப் பயணம் பற்றி மை அட்வென்சர் டிரெய்ல் என்று ஒன்று எழுதினேன். நிராகரிப்பு. டேனியல் டெஃபோவின் வாழ்க்கை வரலாற்றை தி சண்டே ஜென்டில்மேன் ( அதுதான் ஒரிஜினல் போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது. இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்கை வரலாற்றை ரோமன் ஹாலிடே என்று ஆரம்பித்து பாதி எழுதி நானே நிறுத்திவிட்டேன். அப்போது பல பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டுரைகளை திருத்தி எழுதி புத்தகமாகத் தொகுத்தேன். அது பிரசுரமாகவில்லை. இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நினைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் மெய்ன் காம்ஃப் என்று ஒன்றை எழுதினேன். நிராகரிப்புதான். இருபத்தியேழாவது வயதில் நான் பத்திரிகை வாழ்வில் பேட்டி கண்ட ஆளுமைகளைப் பற்றி வித் தெயர் பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல். பிறகு கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்திலேயே அரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் தோல்விதான். முப்பத்தியேழாவது வயதில் பத்திரிகை வேலையை விட்டுவிட்டு சீரியஸாக முழுநேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதியபோதுதான் முதல் புத்தகம் வந்தது.
பிரசுரமாகாத இந்த நூல்களை யாராவது தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்றேனும் ஒரு நாள் அவை பிரசுரமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எப்படி எழுதவேண்டும் என்பதை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சியோடு எழுதவேண்டும் என்பதையும் நாம் இர்விங் வாலஸிடம் சேர்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.
இணையத்தில் சமீபத்தில் கிடைத்த ஒரு ரத்தினம் The science of MichaelCrichton என்ற மின்னூல். அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பத்துபேர் சேர்ந்து, மைக்கேல் கிரைட்டனின் விஞ்ஞான நாவல்களில் எத்தனை சதம் விஞ்ஞானம் எத்தனை சதம் கதை என்று மிகக் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து எழுதிய நூல். பத்து கட்டுரைகள். 184 பக்கங்கள்.
நூலைப்படித்தும், என்னையறியாமல் அப்படியே அவரது ஜுராசிக் பார்க் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் படமாக வந்து இன்றும் ஏதேனும் ஒரு சானலில் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே ஜுராசிக் பார்க்தான். ஒரு காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞான நாவலாக என்னைக் கவர்ந்த அதே ஜுராசிக் பார்க். அதில் விஞ்ஞானம் மிகவும் குறைவு,கதைதான் அதிகம் என்று 27 ஆண்டுகள் எம்பிரியானிக் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ள டாக்டர் சான்டி பெக்கர் 40 பக்கத்திற்கு கட்டுரை எழுதிய பிறகு, கிரைட்டனின் தீவிர ரசிகன் என்றபோதிலும், அதை ஏற்பதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆனாலும் மறுவாசிப்பில் மைக்கேல் கிரைட்டன் என்னை வேறுவிதமாக ஈர்த்தார்.
6’9” உயர உருவத்தின் காரணமாக இருந்த கூச்சசுபாவத்தால் யாரிடமும் பேசிப் பழகாத தனிமை விரும்பியான கிரைட்டன் இயல்பாகவே ஒரு படைப்புமனம் கொண்டவராக இருந்தார். தொழிலால் மருத்துவர் என்றாலும் ஒருகட்டத்தில் முழுநேர எழுத்தாளரானார். திரைப்பட இயக்குனரானார். சக மருத்துவரான, சகஎழுத்தாளரான ராபின் குக் எழுதிய கோமா என்ற மருத்துவ திகில் படத்தை இயக்கினார். 19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் கொள்ளையை வைத்து, தான் எழுதிய தி கிரேட் டிரைன் ராபரி என்ற நாவலை அதே பெயரில் படமாக எடுத்தார். இதில் சீன் கானரி நடித்திருக்கிறார். ஜுராசிக் பார்க்கில் கிழவர் ஹாமாண்ட் பாத்திரத்தில் அற்புதமாக நடித்தவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் கிரைட்டன். அதிலும் வெற்றிதான். 1994ல் அமெரிக்காவின் டாப் திரைப்படமாக ஜுராசிக் பார்க்கும், டாப் தொலைக்காட்சி தொடராக ஈ.ஆர் தொடரும், டாப் நாவலாக டிஸ்குளோசர் நாவலும் வெகுகாலத்திற்கு இருந்தன. மூன்றுமே கிரைட்டனின் படைப்புகள். இவரைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் இந்த சாதனையை இன்றுவரை செய்யவில்லை. ஆனாலும் அடிப்படையில் மருத்துவரான அவரது மனம் விஞ்ஞானப் புனைகதைகளில்தான் இருந்தது.
அவர் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஆய்வுகளை, மாற்றங்களை வைத்துத் தன் நாவல்களைப் புனைந்தார். அவர் தமது நாவல்களில் கூறும் அறிவியல் ஆய்வுகளுக்கு, போக்குகளுக்குத் தரும் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருக்கும். செயற்கையாக டைனாசோர்களை உருவாக்கும் ஜுராசிக் பார்க்காக இருக்கட்டும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளின் சில அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் லாஸ்ட் வேர்ல்ட்டாக் இருக்கட்டும், ( இதைத்தான் ஸ்பீல்பெர்க் டைனாசோரின் தாய்ப்பாசத்தைக் காட்டும் ஆங்கில அன்னை ஓர் ஆலயமாகக் கெடுத்தார்),காலயந்திரப் பயணத்தையும், 13ம் நூற்றாண்டு ஐரோப்பா வரலாற்றையும் அற்புதமாக இணைத்து எழுதிய ‘டைம்லைன்’, மனிதர்களைப் போல் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த மனிதக்குரங்கினை மையமாக வைத்து எழுதிய காங்கோ ( இது இதே பெயரில் திரைப்படமாகவும் வந்தது. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு சானலில் அது ஓடிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது இன்று மனிதக்குரங்குகளை வைத்து வந்துள்ள பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்பட வரிசைக்கு இந்த காங்கோதான் முன்னோடி) புவி வெப்பமயம் என்பதே ஒரு ஏகாதிபத்திய சதிதான் என்ற கருத்தில் ஏகப்பட்ட வரைபடங்கள், புள்ளிவிபரங்களோடு எழுதப்பட்டு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான தி ஸ்டேட் ஆஃப் ஃபியர், என எல்லா நாவல்களுமே வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான தகவல்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு எழுதப்பட்டவை. அவரவர் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்ற, 25,30 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உள்ள அறிஞர்கள் ( இவர்களும் கிரைட்டனின் தீவிர ரசிகர்கள்தான்) கிரைட்டனின் நாவல்களை வரிவரியாக ஆராய்ந்து மேற்கூறிய நூலை எழுதிய பிறகுதான் கிரைட்டனின் நாவல்களில் 20 சதம்தான் விஞ்ஞானம், 80 சதம் கதைதான் என்று தெரிகிறது. நம் நாட்டில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மாயக்கலவையான வசீகரஎழுத்து.
விஞ்ஞானக்கதையில் விஞ்ஞானத்தின் சதவிகிதம் குறைந்தால் என்ன? கிரைட்டன் கதைகளில் அறிவியல் அடிப்படையில் கதை எழுதினாலும், அதையும்தாண்டி, கதையின் ஆதாரமாக அறிவியலின் நோக்கத்தை வைத்திருப்பது இந்த மறுவாசிப்பில் தெரிந்த்து. ஜுராசிக் பார்க்கில் கேயாஸ் கொள்கை பேசும் பேராசிரியர் டாக்டர் மால்கம் கிரைட்டன்தான். மால்கமின் குரலில் கிரைட்டன் அறிவியல் ஆராய்ச்சிகள் யாரால் செய்யப்படவேண்டும், ஆராய்ச்சிகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம், ஆராய்ச்சிகளுக்கு யார் செலவு செய்வது, ஆராய்ச்சிகளின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவா? சாதாரண மக்களின் நல்வாழ்விற்காகவா ? என்றெல்லாம் பேசுகிறார். ஜெனிடிக் இஞ்சினீயரிங், பரிணாமத் தத்துவம் என்றெல்லாம் போகும் கதையில் நடுநடுவே, மால்கம் குரலில் கிரைட்டன் ‘லேசர், டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், போலியோ சொட்டு மருந்து,ஹோலோகிராம்,கணினி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இவை எல்லாமே தனியார் ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. அரசுப் பல்கலைக்கழகங்களில் புதிய ஆய்வுகளுக்கு எவ்வித ஊக்குவிப்பும் கிடையாது,’ ‘இத்தனை முன்னேற்றத்திற்குப் பிறகும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள் வந்தபின்னும் கூட 1930களிலிருந்து இன்று வரை வீட்டுவேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் குறையவே இல்லை’, விஞ்ஞானிகள் தங்களை இயற்கையை வென்றவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படகு செய்யலாம். ஆனால் கடலைச் செய்யமுடியாது. அவர்களால் விமானத்தைச் செய்ய முடியலாம். ஆனால் காற்றைச் செய்யமுடியாது, என்றெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார். அவரது கோபம் விஞ்ஞானத்தின் மீதல்ல. விஞ்ஞானத்தின் வர்த்தகமயத்தின் மீதுதான். அவரது நாவல்களில் விஞ்ஞானிகள் தீராத அறிவியல்தாகத்தோடு, அந்த முயற்சியில் எத்தகைய இடையூறு வந்தாலும் ஏற்கத் தயாரானவர்களாக இருக்க, அவர்கள் ஆய்வு நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் லாபத்திற்காக எத்தகைய மோசமான செயலையும் செய்பவர்களாக கவனமாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிவியல் புனைகதைகளை வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள், விண்வெளிப் பயணம் என்பதைத் தாண்டி முதலாளித்துவ உலகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கடும்விமர்சனமாகத் தனது நாவல்களை எழுதியவர் என்பதால் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு ஜொலிப்பவர் கிரைட்டன்.
எது படித்தாலும் தமிழ்ச்சூழலில் என்ன நிலமை என்று யோசிக்கும் என் மனம் இப்போதும் அதேபோல் யோசித்தது. விஞ்ஞானக்கதைகளை ஓரளவு எழுதியவர் சுஜாதா மட்டுமே. இவ்வகைக்கதைகள் தமிழில் இல்லாததற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யானத் தூக்கம், நினைவுத்திரைகள் பின்னோக்கிச் செல்வது, சமயலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு, என்றும் மாறாத காதல், இது போதும் என்கிற பொன் செய் மனோபாவத்தால்தான் முக்கியமான இவ்வகைக் கதைகள் தமிழில் வரவில்லை என்கிறார் சுஜாதா. தமிழின் ஒரே விஞ்ஞான எழுத்தாளரான சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் கதை எவ்வளவு ? விஞ்ஞானம் எவ்வளவு ? என்ற ஆய்வு இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. நண்பர் இரா. நடராசன் மனம் வைப்பாரா?
மைக்கேல் கிரைட்டனின் படைப்புகள் பற்றி வந்துள்ள நூல்கள்
The science of Michael crichton by Kevin R.Grazier
இது மிக முக்கியமான நூல். மைக்கேல் கிரைட்டனின் முக்கிய நாவல்கள் அனைத்தும் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 1) The andromeda strain, 2) Virtual reality and man-machine interface in disclosure and the terminal man, 3)Shock to the system, 4)Neanderthals and werdols, 5)Primate behaviour and misbehaviour in Michael Crichton’s congo, 6)crichton’s travel in time. 7)Artificial life in Michael Crichton’s prey, 8)Be afraid. Be very afraid : Michael Crichton’s state of fear, 9) Science comes second in next என்று ஒவ்வொரு நாவலிலும் உள்ள விஞ்ஞான, கற்பனை கலவை பற்றி பெரிய விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலேயே அவர் எத்தனை பெரிய விஞ்ஞான எழுத்தாளர் என்பது தெரியும்.
இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.