Reading view

எலியும் கல்யாணிப்பசுவும்

 

எலியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.

கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!

நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம், நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி கடித்தது.

கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி எழுந்து எலியின் பின்னால் ஓடியது.

எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில் போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப் பார்த்தது.

இந்த சத்தம் கேட்டு சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது. பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.

பசு மறுபடியும் சுவரில் முட்டியது. பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி கிடைத்தது.  வேதனையில் கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது. 

இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து விட்டது.

நன்றி - புக் டே


 

  •  

கசுமலா காக்காவின் கவலை


கசுமலா காக்காவின் கவலை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



    ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,

“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..

      கதைப்பாட்டி காக்கா கவலையோடு கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,

“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “ என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப் பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.

கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,

“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி சிறகுகளடித்து பறந்தது.

கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள் பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே குரலில்,

“ ஏன் காக்கா இப்படி கரையுது கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.

“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”

“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.

“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும் சொன்னது.

அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னார்,

“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்.. அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னாள்.

கசுமலா காக்கா அதைச் செய்தது. சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி. தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.

தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின் வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.

கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!

நன்றி - புக் டே 



 


  •  

காக்காவும் கொக்கும்

 

காக்காவும் கொக்கும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,

“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா.. இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”

கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை. கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி ‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘ பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக் கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.

காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது. பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம் மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச் சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச் சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,

“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை? “

“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.

அதைக் கேட்ட காக்காவின் கண்கள் கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

  •