Reading view

பைத்தியங்களின் நாடு



முன்பும் ஒரு நாடு இருந்தது.
பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என அழைத்தார்கள்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை பைத்தியங்கள் என அழைத்தால் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்கள் மீது கல்லெறிந்தனர்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை திருப்பித் தாக்கினால் அரசால் கொலை செய்யப்பட்டார்கள்.
பைத்தியங்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
பைத்தியமற்றவர்களுக்கு ஒரே ஒருநாள் மொத்தமாய் பைத்தியம் பிடித்தது.
பிறகு அந்த நாட்டில் பைத்தியங்களே இல்லாமல் போனார்கள்

  •  

நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 1



எனக்கு எல்லாம் தெரியும்
உனக்கு ஒன்றும் தெரியாது
என்பதே அது.
 
எளியவரின் இயலாமை
குறித்த ஏளனம் அது
 
பீடத்தில் அமர்ந்து
கீழ் இருப்பவரைப் பார்க்கும்
அலட்சியம் அது.
 
வாழ்வோடு போராடுகிறவர்களை
புழுக்களாய் நடத்தும்
அகங்காரம் அது

நானே முக்கியமானவன் 
என்னும் ஆணவம் அது

சர்வ வல்லமை படைத்த எனக்கு 
நீ சமமா என்னும் 
சனாதனம் அது
 
“நான் என்ன செய்கிறேன் என்று 
உனக்குத் தெரியுமா?”
என்னும் கேள்வியில்
அதிகாரத்தைத் தவிர
வேறொன்றும் இல்லை. 
 
கேட்டது 
நானாய் இருந்தாலும் 
நீங்களாய் இருந்தாலும் 
அரசனாயிருந்தாலும்
கடவுளாய் இருந்தாலும்


(பி.கு: இந்தக் கேள்வியோடு இன்னும் கவிதைகள் வரும்.)

  •  

கட்டித்தங்கம் டீச்சர்!


முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் மீண்டும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்.  

முதலில் ஒருவருக்கொருவர் தங்கள் தோற்றங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு அவை குறித்து பேசினார்கள். பின்னர் தங்களைப் பற்றி, தங்கள் குடும்பம் பற்றி, தங்கள் வேலை மற்றும் வியாபாரம் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி யார் பேசினாலும் மற்றவர்களுக்கு அது ஒட்டாமல் வெறும் தகவல்களாகவேத் தெரிந்தன.  

அந்த பள்ளியைப் பற்றியும், அதன் ஆசிரியர்கள் பற்றியும் யார் பேசினாலும்  எல்லோரும் ஆர்வமாய் கேட்டார்கள்.  ஒவ்வொருவரிடமிருந்தும் கதைகள் கொட்டி வந்தன. எல்லோரிடமும் அவ்வளவு நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்து இருந்தன. பள்ளியும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பொதுவாய் இருந்தனர்.  

அப்படித்தான் கட்டித்தங்கம் டீச்சர் பற்றி அன்று பேச்சு வந்தது. எல்லோருக்குள்ளும் இன்னும் தேவதையாய் இருந்தார். அவரது நடை, உடை, பாவனை, பாடம் நடத்தும் முறை, தங்களிடம் காட்டிய பரிவு என நேரம் தெரியாமல் பேசி மகிழ்ந்தார்கள்.  கட்டித் தங்கம் டீச்சரை ஒருமுறை பார்த்து வர ஆசைப்பட்டார்கள். அதற்கென ஒருநாளைக் குறித்துக் கொண்டார்கள்.  

சில மாதங்கள் கழித்து நரைத்த முடியும், தளர்ந்த உடலும், கண்ணாடிக்குள் கண்களும் கொண்ட வயதானவராய் தங்கள் கட்டித்தங்கம் டீச்சரைப் பார்த்தார்கள். தாங்கள் எந்த வருடம் படித்தோம் என்று சொன்னார்கள். தங்கள் பேரைச் சொன்னார்கள். தாங்கள் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதைச் சொன்னார்கள். எந்த  வரிசையில் உட்கார்ந்திருந்தோம் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். கட்டித்தங்கம் டீச்சரால் யாரையும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.  

வகுப்பில் கட்டித்தங்கம் டீச்சர் எடுத்த பாடங்கள் குறித்துச் சொன்னார்கள். லேசாய் அவர் புன்னகைத்தார். வகுப்பில் கொஞ்சம் கூட உட்காராமல் பாடம் நடத்துவது, போர்டில் பெரிது பெரிதாய் எழுதிப் போடுவது என தங்களிடமிருந்த காட்சிகளை தீட்ட ஆரம்பித்தனர். நினைவுக்கு வருவதாய் அவரது முகம் மலர்ந்தது.  நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பேனா வாங்கிக் கொடுக்கும் அவரது வழக்கத்தை நினைவு படுத்தினார்கள். ஆச்சரியத்துடனும் அன்போடும் தன் முன்னாள் மாணவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.  

கட்டித்தங்கம் டீச்சரைப் பார்த்தது, பேசியது குறித்தெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும், தங்கள் முகம் டீச்சருக்குத் தெரியவில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் கொண்டனர்.  

மரத்தின் கிளைகளும், இலைகளும், கனிகளும், மரத்தில் வந்து தங்கும் பறவைகளும் அதன் பாடல்களும் மண்ணிற்கு தெரிவதில்லை. அதற்குத் தெரிந்தது விதைகளும், வேர்களுமே.

  •