Reading view

பொம்மலாட்டம் – சிறார் கதை

நேற்று(நவம்பர் 08) தினமலர் பட்டம் மாணவர் இதழில் வெளியான என் சிறார் கதை.

பொம்மலாட்டம்

லதா பரபரப்பாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது ஜியோமெட்ரி உபகரணங்கள் வைத்திருக்கும் சிறு பெட்டியைத் திறந்து சரி பார்த்துக் கொண்டாள். அவள் தன் பள்ளிப் பையைத் திறந்து திறந்து மூடுவதைக் கண்ட அவள் அம்மா செல்வி,  சற்று கோபமானார்.

“தினமும் முந்தின நாள் நைட்டே ஸ்கூல் பேக்ல எல்லாம் பாத்து எடுத்து வச்சுருன்னு சொன்னா கேக்கறயா? காலைலதான் எடுத்து வைப்பியா? ஸ்கூலுக்கு லேட் ஆகுது, வேன் வந்துரும் சீக்கிரமா கிளம்பு” என்றார்.

பதற்றமான லதா “இதோ நான் கிளம்பிட்டேன்மா. நீங்க ரிப்பன்ல கங்கு போட்டு விட்டுட்டா போதும்.” என்றபடியே அம்மாவிடம் சென்றாள்.

அப்போதும் அவள் பார்வை அவ்வப்போது பையைத் தொட்டுத் தொட்டு மீண்டது. செல்வி அவளது ரிப்பனை அழகாய் முடிந்துவிட்டதும், பள்ளிப் பையை முதுகில் ஏற்றிக் கொண்டு, உணவுக் கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள். அம்மாவுக்கு கையசைத்துவிட்டு, பள்ளி வேனில் சென்று ஏறிக் கொண்டாள்.

பள்ளிக்குச் சென்றதும் முதல் வேலையாக தன் ஜியோமெட்ரி பாக்சைத் திறந்து அதிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கீழே வைத்தாள். அதன் அடியில் பெட்டியின் அளவுக்கே ஒரு வழவழப்பான காகிதம் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காகிதத்தைத் தூக்கியதும், அடியில் முழுதாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து வேறு எங்கு வைக்கலாம் என சிறிது நேரம் யோசித்தாள்.

அதற்குள்ளாக காலைப் பிரார்த்தனை மணி அடிக்கவும், மீண்டும் பணத்தை அங்கேயே வைத்து, அதே போல பெட்டியை அடுக்கி மூடினாள். அதை அப்படியே பைக்குள் தள்ளி, ஜிப்பை மூடி விட்டு, மற்ற மாணவியருடன் இணைந்து மைதானத்திற்குச் சென்றாள்.

தன் வகுப்புக்கான வரிசையில் சென்று நின்ற லதா, சரியாக தனக்கு முன்னால் ரெஜினா நிற்பதைக் கண்டாள். எல்லாம் சென்ற வார வெள்ளிக்கிழமை அன்று ரெஜினாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்றதில் ஆரம்பித்தது. கேக் வெட்டிய பிறகு, லதாவையும், கதீராவையும் மட்டும் தன் அறைக்கு அழைத்துப் போனாள்.

“டொட்டடொய்ங்…” என்று ஒலியெழுப்பியபடி அவள் தனது அலமாரியில் இருந்து எடுத்துக் காட்டியது ஒரு அழகிய டெடி பியர் கரடி பொம்மை.

“எங்க மாமா எனக்காக வாங்கித் தந்த பிறந்த நாள் பரிசு, எப்படி இருக்கு?”

கண்கள் விரிய அந்த பொம்மையைப் பார்த்து இருவரும் “சூப்பரா இருக்குடி. எஞ்சாய்” என்று சொல்லி பூரித்தார்கள். அந்த நேரத்தில் கலப்படமில்லா மகிழ்ச்சியுடம் சிரித்து விளையாடினாலும் தனக்கும் அதே போல ஒரு பொம்மை வேண்டும் என்ற எண்ணத்தை லதாவால் தவிர்க்கவே முடியவில்லை. மெல்லமாக அதைத் தொட்டுப் பார்த்தாள். பஞ்சுப் பொதி போல மிருதுவாக இருந்தது. அதன் விலை ஆயிரம் ரூபாயைத் தொடும் என்றாள் ரெஜினா.

நிச்சயமாக அம்மாவோ அப்பாவோ இவ்வளவு விலையுள்ள பொம்மையை விளையாட வாங்கிக் கொடுக்க மாட்டார்கள் என்று லதாவுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் கேட்டு, திட்டு வாங்க வேண்டாம் என்று ஆசையை அடக்கிக் கொண்டு வளைய வந்தாள்.

****

நேற்று மாலை சலவை இயந்திரத்தில் துணிகளை பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். குறிப்பாக அப்பாவின் சட்டை, பேண்ட் போன்றவற்றின் பாக்கெட்டுகளை நன்றாகப் பார்த்துவிட வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தார். ரூபாய் நோட்டுக்களோ, முக்கியமான குறிப்பெழுதிய தாள்களோ ஏதேனும் தென்பட்டால் அம்மாவிடம் தனியாக எடுத்துக் கொடுக்க வேண்டும்.

அப்படித்தான் நேற்றும் அந்த கருநீல நிற முழுக்கைச் சட்டையின் பையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சுருளாக இருப்பதைப் பார்த்தாள். எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு மீதித் துணிகளைப் போட்டு, இயந்திரத்தை ஓட விட்டாள். அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தாள்.

அந்த நேரம் பார்த்து அம்மா கடைக்குச் சென்றிருந்ததார். தனியே இருந்த லதாவின் மனத்தின் ஒரு மூலையில் ஒரு வெளிச்சம் தோன்றியது. இந்தப் பணத்தை நாமே எடுத்துக் கொண்டு, ரெஜினாவுடையதைப் போல அழகான டெடி பேர் பொம்மை ஒன்று வாங்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றி, நொடிக்கு நொடி வளர்ந்தது. அப்படித்தான் வீட்டுப்பாடம் செய்வதற்காக எடுத்துப் பரத்தியிருந்த புத்தகங்களுக்கு நடுவில் இருந்த ஜியோமெட்ரி பெட்டியின் அடியில் அந்த ரூபாய் நோட்டுக்கள் தஞ்சமடைந்தன.

***********

மதிய இடைவேளையின் போது அம்மா கட்டித் தந்திருந்த உணவை எடுத்து உண்ணும்போது மனம் உறுத்தியது. அம்மா, தினமும் அதிகாலையில் எழுந்து, ஒவ்வொரு வேளைக்குமாகப் பார்த்துப் பார்த்து சமைத்துத் தருகிறார். அப்பாவும் சமையலுக்கான உதவிகளைச் செய்வார். பிறகு அவருக்கும் தனக்குமான டப்பாக்களில் உணவுகளை அடைத்து வைப்பது என காலையில் பரபரப்பாக இருப்பார். லதாவுக்கான வேலை என்பது, காலையில் எழுந்து படிப்பதும், குளியல், சாப்பாடு என தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வதும் மட்டும்தான். மாலையில்தான் அவள் கொஞ்சம் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பாள்.

தனக்காகவே என அம்மாவும் அப்பாவும் செய்யும் வேலைகளின் பட்டியல் ஒவ்வொன்றாய்த் தோன்றி மறைந்தது. அப்பா அம்மாவிடம் கேட்டால், இப்போது இல்லாவிட்டாலும் காசு சேர்ந்த பிறகாவது வாங்கித் தருவார்கள். அதை விடுத்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து வந்தது தவறு என்று எண்ணினாள். அதை அப்பா எதற்காக வைத்திருந்தாரோ என்ற குற்ற உணர்வும் அவள் மனதில் எழுந்தது.

தான் செய்த செயல், அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. மதிய உணவை வேண்டா வெறுப்பாக விழுங்கி வைத்தாள்.

இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பொம்மையை வாங்கினாலும், அதனை பகிரங்கமாக வீட்டில் வைத்து விளையாட முடியாது. கதீராவையோ, மற்றவர்களையோ அழைத்துப் போய் பெருமையாகக் காட்ட முடியாது. அப்படியென்றால் அந்த பொம்மையின் பொருள்தான் என்ன? தான் செய்த ஒரு தவறின் சாட்சியம் என்பது தவிர அப்பொம்மை தனக்கு எந்த விதத்திலும் பயன் தர முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டாள் லதா.

மாலை பள்ளி வேனில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் லதா. முதல் வேலையாக அம்மாவிடம் சென்று பணம் எடுத்ததைச் சொல்லிவிட வேண்டும். என்ன இருந்தாலும் தான் அம்மா, அப்பாவின் செல்லம் இல்லையா? தங்கள் செல்லங்கள் தெரியாமல் செய்த தவறுகளை பொறுத்துக் கொள்வார்கள்தானே அம்மா, அப்பாக்கள்? அவள் மனம் அமைதி அடைந்தது.

+++++++++++

  •