Reading view

மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் ஏப்ரல் மாத கூடுகை சிறுகதை விவாதம்

எழுத்தாளர் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்’ சிறுகதையும் எழுத்தாளர் சுசித்ராவின் ‘ராம பாணம்’ குறுநாவலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நாராயணி அம்மா, கோமளா டீச்சர், வேலாயுதம் பெரியசாமி, நாராயணன் மெய்யப்பன், முகமது கபூர், கவிஞர் சிலம்பரசன், எழுத்தாளர்கள் பிரபாகரன், சித்ரன் ஆகியோர் பங்குபெற்றனர். எல்லோரும் கதைகளை வாசித்து வந்ததால் செறிவான உரையாடல் சாத்தியமானது. 






முதலில் அஜிதனின் ‘இந்திய ஆன்மிக அனுபவம்’ கதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுவாசிப்பிற்கு உட்படுத்த முடியாத அளவிற்கு அருவருப்பை மைய உணர்வாக கொண்டுள்ளதாக கூறினார்கள். அஜிதனின் கதைகளில் தொழிற்படும் துல்லியமான புற சித்தரிப்புகள் அவரது பலம். அருவருப்பான அனுபவத்தை மொழியில் நுணுக்கமாக விவரிப்பது சவாலானது. சிறுநீர் உப்பு படிவதை பற்றி அவர் எழுதிய சித்திரம் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. எதை இந்திய ஆன்மிக அனுபவம் என கூறுகிறார் என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் கூறுகிறார் என்பதும் இன்னொரு கேள்வி. தலைப்புதான் கதையை வலுவாக்குகிறது. வாமாச்சார மரபு அருவருப்பை ஆன்மிக பாதையாக முன்வைப்பதைப்பற்றி பேசினோம். லிங்கத்தை வெளியே விட்டபடி உறங்கிக்கிகொண்டிருக்கும் பைத்தியக்காரனை சிவனாக உருவகிக்க இடமுண்டு என்றொரு கருத்து வந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் பிங்கலன் தொழுநோயாளியையும் பள்ளிகொண்ட பெருமாளையும் ஒருவரென காணும் கணம் அவனுக்கு பெரும் தொந்திரவை அளித்தது. ஜெ எழுதிய ‘மலம்’ எனும் கதையும் ‘இந்திய ஆன்மீக அனுபவம்’  கதையுடன் பொருத்தி பார்க்கலாம்.  கும்பமேளா நிகழ்ந்த சூழலில் இன்று இந்த கதை எழுதப்படுவதில் ஒரு அரசியல் நிலைப்பாடும் உள்ளதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார். கும்பமேளாவில் வரும் பாபாக்களை பொது சமூகம் ஒவ்வாமையுடன் நடத்தவில்லை. மாறாக அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறது என்பதால் அத்தகைய அரசியல் நிலைப்பாடை வலிந்து இக்கதைக்கு அளிக்க வேண்டியதில்லை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வாசிக்கும்போது இந்த அரசியல் தூண்டுதல் பெரிய காரணியாக பார்க்கப் படாது. கும்பமேளா அளவிற்கு எல்லாம் செல்லாமல்  உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள், எச்சிலில் உருள்வது போன்ற சடங்குகளுடன் பொருத்திப் பார்க்கலாம். தினம் தினம் இந்த அருவருப்புடன் வாழ்ந்தபடி தான்  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நாட்களை கடக்கிறார்கள். எளிய மக்களின் ஆன்மிகமும் வாழ்வனுபவமும் இந்திய சூழலில் அருவருப்பை ஏற்றுக்கொள்ளவும் இயல்பாக கடந்து செல்லவும் வழிவகுக்கிறது. ஆகவே இந்த கதை மேலதிகமாக  எந்த அதிர்ச்சியும் அருவருப்பையும் கடத்தவில்லை எனும்  விமர்சனம்  எழுந்தது. எனினும் அருவருப்புடன் இயல்பாக இயைந்து வாழ பழகும் எல்லோருக்கும் அது ஆன்மிக அனுபவமாக பரிணாமம் கொள்வதில்லை. பொது உண்மையை தொடுவதை விட தனி உண்மையை காட்டி நின்று விடுகிறது என்பதே இந்த கதையின் எல்லை. இது சாமானிய மனிதனின் கதை அல்ல, ஒரு நவீன அறிவு ஜீவியின் சிக்கல். அழகும் அருவருப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அருவருப்பை வேறொன்றாக மாற்றி கற்பனை வழி கடந்து செல்லும் திறனுடையவனாக இருக்கிறான் கதைசொல்லி. தொடுகை தான் அவனை தொந்திரவு செய்யக்கூடியது. இருளில் அத்தகைய மாற்றம் சாத்தியமாகவில்லை. முதல்முறை நேருக்குநேர் மெய்யை  எதிர்கொள்கிறான். அது அவனது அகங்காரத்தை உடைக்கிறது. அவன் ஒரு தொடுகையை உணர்கிறான். ஆனால்  படுத்துக்கிடக்கும் பைத்தியகாரனைத் தவிர அருகே யாருமே இல்லை. அவனுக்குள் இருப்பவை எல்லாம் கரைந்தழிகின்றன. மீட்பவர்கள் பெண்கள் என்பதற்கு சிறப்பான கவனம் ஏதும் இருக்கிறதா என்று பேசப்பட்டது. 


    

இரண்டாவதாக விவாதிக்கப்பட்ட கதை சுசித்ரா எழுதிய ‘ராம பாணம்’ எனும் குறுநாவல். மீனாட்சிநாதன், சாம்பு மற்றும் ராமுடு ஆகிய மூவர் 1896 ஆம் ஆண்டு காவிரிக்கரையில் அமர்ந்து உரையாடுவதே கதை. ராமுடு தனது குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை தன்னிடம் சொன்ன திருவையாறு பஞ்ச நாத பிரம்மம் எனும் தியாகராஜரைப் பற்றிய கதையை சொல்கிறார்.  ராமுடு கதைசொல்லும்போது ‘அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க’ என்று   சொல்கிறார். 


ராமுடுவிற்கு அவரது குரு ராம நாமத்தை ஜபம் செய்ய  அளித்திருக்கிறார். ராமன் எனும் உருவம் மீது அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. “உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல.” மேலும் தனது குடும்பத்தினர் பகலில் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இரவில் காமக்களியில் ஈடுபடுவது எனும் கபடம் அவரை எரிச்சல் கொள்ள செய்கிறது.  ஆனால் அவரேதான் பெரும் உவகையோடு தனது குருநாதர் சொன்ன தியாகராஜர் ராம விக்கிரகத்தை காவேரியில் கண்டெடுத்த கதையை சொல்வது பாத்திர வார்ப்பிற்கு முரணாக பட்டது.  


தில்லைஸ்தானம் ராமுடுவிற்கு ஒருவித அடையாள சிக்கல். ராமய்யராகவும் இல்லை, ராமையா பிள்ளையாகவும் இல்லை. தாயிடமிருந்து பிரிந்து தந்தையிடம் வளர்கிறார். ஆனால் அங்கு ஏறத்தாழ அடிமை வாழ்க்கை தான் வாய்க்கிறது. ராமுடு தனது குருவாக கருதும் ராமாமிர்தம் பிள்ளை ஏறத்தாழ இதே போன்ற குடும்ப பின்புலம் கொண்டவர். எனினும் அவர் ‘பிள்ளையாக’ வளர்பவர். ராமுடுவிடம் பெண் அனுபவம் உண்டா என்றொரு கேள்விக்கு தாசிகள் எனது தாயர்கள் என்றொரு பதிலை அளிக்கிறார். காவேரியை அதன் நிறைவில்  கண்டவனுக்கு எந்த பெண்ணும் நிறைவை அளிக்க மாட்டாள் என்பதே அவரது பதிலாக உள்ளது.  இயற்கையே முழுமை. ஆகவே வழிபாட்டுக்குரியது. இயற்கையின் முழுமையை அறிந்தவனால் உலகியலில் அமைய முடியாது என்பதே கண்டுகொண்டவனின் சாபம் என்பதை ராமுடு உணர்த்துகிறார். உ வே சாவின் சீடனை போல வருகிறான் மீனாட்சிநாதன். சுவடிகளின் மீது பித்துக்கொண்டு அலைகிறான். சாம்பு நவீனமானவன். பட்டணத்தில் நவீன வரலாறு படிக்கிறான். ஒருவகையில் இவையிரண்டும் வரலாற்றின் இரண்டு பக்கங்கள் என சொல்லலாம். மீனாட்சிநாதன் காவேரிக்கரையை விரும்புகிறான். மீனாட்சி நாதனின் ஆய்வுகளை பழங்குப்பை என கருதும் சாம்பு பட்டனவாசத்தை விரும்புபவன். 


குறுநாவலை இரண்டு கதைகளாக பிரிக்கலாம். ராமுடு - மீனாட்சிநாதன்- சாம்புவின் பகுதி முதல் 7 அத்தியாயங்கள் வரை நீள்கிறது. அந்த பகுதியின் உச்சம் என்பது மீனாட்சிநாதன் நாகசூடாமணி சுவடியை கண்டெடுக்கும் தருணம். வீடு முழுக்க குவியலாக ஒழுங்கின்றி கிடக்கும் சுவடி கட்டிலிருந்து பூச்சி இட்ட துளை வழியாக தேடிய சுவடிகளை  பெரும் பரவசத்தோடு கண்டெடுப்பார்கள். 


குறுநாவலின் இரண்டாம் கதை சரடான தியாகராஜருக்கு அவரது சகோதரர் ஜப்பேசருக்குமான உறவையும் முரனையும் இணைவையும் சித்தரிக்கும் பகுதிக்கு இந்த முதல் பகுதி தேவையற்ற சுமையாக உள்ளது என்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கதைப்படி ஜப்யேசன் சிலநொடிகள் முந்தி பிறந்த மூத்தவர். பஞ்சநாத பிரம்மமும் ஜப்யேசனும் இரட்டை பிறவிகள்.  ஜப்யேசன் அழுகுரலை கேட்டு பூமிக்கு வந்தவன் பஞ்சநாத பிரம்மம். பஞ்சநாத பிரம்மம் பற்றி அவரது தாயார் ‘யார் அழுதாலும் முன்னே சென்று நின்றுவிடுபவன்’ என கேலியாக குறிப்பிடுகிறார். தந்தை ஒருவருக்கு விக்கிரகமாகவும்  இன்னொருவருக்கும் தூபதீப மலராகவும்  ராமனை அறிமுகம் செய்கிறார். இருவரும் தங்களுக்கு மறுக்கப்பட்ட வடிவத்தில் ராமனை ஏந்தி கொள்கிறார்கள். முக்திக்கான வழியாக பிரவிருத்தி மார்க்கம் நிவிருத்தி மார்க்கம் என இரண்டு பாதைகள் உண்டு. பல்கி பெருகி அனுபவிப்பது ஒரு வழி, விலகி துறவு கொள்வது இன்னொரு வழி. ஜப்யேசன் திளைக்கும் வழியில் செல்பவன் என்றால் பஞ்சநாத பிரம்மம் துறவின் வழியில் செல்பவன். பொதுவாக விஷ்ணுவை திளைக்கும் மரபிற்கும் சிவனை ஒடுங்கும் மரபிற்கும் உரியவர்களாக வகைப்படுத்துவர். ஜப்யேசனை சிவனோடு இணை வைப்பது இங்கு பொருந்துமா என்றொரு கேள்வி உண்டு. எனினும் கதையின் தொடக்கத்தில் இருந்தே கறுப்பு - சிவப்பு என்றொரு இருமையை எழுத்தாளர் சுட்டுகிறார். இந்தியர்களுக்கு உரிய நிறமாக கறுப்பும் ஐரோப்பியர்களுக்கு உரிய நிறமாக சிவப்பும் முன்வைக்கப்படுகிறது. பெருமாள்- சிவன் இருமையை இதன் நீட்சியாக காணலாம். சிவனை ராஜசிக குணத்தின் பிரதிநிதியாக காண இடமுண்டு. சிவப்பும் ரஜோ இயல்பின் நிறம் தான். 


ராமாமிர்தம் பிள்ளை ஒன்றுவிட்ட சகோதரியான ராஜதாசி ரமாவாணியை ஜப்யேசன் ஏறெடுத்து பார்க்க வேண்டாம் என்பதை அறிவுறுத்த தூது செல்லும் இடத்தில் பஞ்சநாத பிரம்மத்தை சந்திக்கிறார். அவரது தூதும் அதற்கு ஜப்யேசன்பதிலும் என விரிகிறது. ஜப்யேசனும் பஞ்சநாத பிரம்மமும் ஒன்றின் இரு அம்சங்களாக தென்படுகிறார்கள். ரமாவாணி பஞ்சநாத பிரம்மத்தை காணும்போது ஜப்யேசன் இட்டுக்கொள்ளும் நெற்றிக்கண் போன்ற சிவப்பு குறியை நெற்றியில் காண்கிறாள். இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பது உணர்த்தப்படவில்லை. ஜப்யேசன் ராமன் விக்கிரகத்தை காவிரியில் வீசுகிறார். சகோதரர்கள் இருவரும் நீரில் குதிக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பின்பு ஒருவர் மட்டுமே விக்கிரகத்துடன் கரையேறுகிறார். ஏறியவர் விக்கிரகத்தை கையில் ஏந்தியபடி ஜப்யேசன் குரலில் பாடியபடி  வருகிறார். அங்கிருப்பது எவர், காவேரி எடுத்து கொண்டது எவரை என சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரையும் ராமபாணம் ஒன்றாக கோர்க்கிறது. பின்னர் அவர் தியாகபிரம்மம் என வழங்கப்படுகிறார்.  


ராமபாணம் எனும் உருவகமே குறுநாவலின் மைய இழை. ராம பாணம் என்பது அழிப்பதல்ல. அது கடவுளின் தொடுகை. ஒன்றை மற்றொன்றுடன் கோர்ப்பது, இணைப்பது, ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது. ஜெயமோகனின் ‘பிழை’ கதை இத்தகைய இறையாற்றலின் இருப்பு/ அல்லது தொடுகையை பற்றி பேசும் அபாரமான கதை. கொரோனா கால கதைகளில் ஜெயமோகன் தாயுமானவரை மையமாக கொண்டு எழுதிய கதைக்கும் ஜப்யேசர்- ரமாவாணி உறவு சித்தரிப்பிற்கும் தொடர்ச்சி இருப்பதாக ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது. 


இந்த கதையின் முக்கியமான சிக்கல் அதில் கையாளப்படும் படிம குவியல் காரணமாக உணர்வு ரீதியான விலக்கத்தை ஏற்படுத்தி படிமங்களை பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளும் அறிவு செயல்பாடாக கதை வாசிப்பு ஆகிறது என்பதே. மாறன்- ராமன் எனும் இருமை பேசப்படுகிறது. ஜப்யேசன்  மாறனாகவும் பஞ்சநாத பிரம்மம் ராமனாகவும் காண இடமுண்டு.  மனதின் மீது நித்தம் நிகழும் சமர் என வாலி - சுக்ரீவன் சமர் உருவகிக்கப்படுகிறது. பலவீனனான சுக்ரீவன் ராமனின் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவன் தியாகராஜராகவும் ஜப்யேசன் வாலியாகவும் சித்தரிக்கப்படுகிறான். இறுதியில் மல்லுக்கு அறைகூவல் விடுகிறான் ஜப்யேசன். நெற்றியில் சிவக்குறியுடன் சிவனுக்கு உவமிக்கப்படுகிறான் ஜப்யேசன். ராமாமிர்தம் பிள்ளை படகில் ஜப்யேசனுடன் செல்லும்போது தன்னை ராவணன் என கூறிக்கொள்கிறார். படகில் எனக்காக ஜப்யேசன் பாடுவார் என்று படகோட்டி சொல்லும்போது ‘குகனுக்கு இல்லாத ராமனா’ என்று ஒரு வரி வருகிறது. பஞ்சநாத பிரம்மம் ராமாமிர்தத்திடம் பேசும்போது தன்னை வீடணன் என்றும்  பலி சக்கரவர்த்தி என்றும் சொல்கிறார். ஜப்யேசன் ராமாமிர்தத்திடம் நாத வடிவில் தான் ராமனை அறிவதாகவும் ராமனின் உருவத்தின் மீது தனக்கு ஈடுபாடில்லை என்றும் சொல்கிறார். வலியை கலையாக்கும் சாதகனாக அவர் தென்படுகிறார். கலை கலைக்காக என்பதே அவர் கூற்று. பஞ்சநாத பிரம்மம் கலையை இறை அனுபவத்திற்கான வழியாக காண்கிறார். இப்படி தொடர் முரண்பாடுகளை உணர முடிகிறது. இரண்டாவது முக்கிய சிக்கல், குறுநாவல் பாத்திரங்களில் இருந்து தரிசனத்திற்கு செல்லாமல் தரிசனத்தை அடைந்த பிறகு பாத்திரங்களை அதற்கேற்றவாறு வளைக்க முற்படுகிறது. தியாகராஜரை நீக்கிவிட்டு இக்கதையை வாசித்தால் நல்லதோர் புனைவாக காண முடியும். ஆனால் தியாகராஜர் என்பது கதையிறுதியில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. தியாகராஜர் வாழ்க்கை சரிதத்தை அறிந்தவர்களுக்கு ஜப்யேசன் பாகவதர் அல்ல என்பது தெரியும். எனக்கு தெரிந்தவகையில் அவருக்கு தனது சகோதரரின் மீதிருக்கும் கோபம் என்பது அவரது ராம விக்கிரக பூஜை அரிசி பருப்புக்கு ஆகவில்லை என்பதுதான். இந்த கதையில் தியாகராஜர் ஒருபடி கீழாகவும்  ஜப்யேசன் ஒருபடி மேலாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஜெயமோகனின் பல கதைகளில் இந்த போக்கு காண கிடைக்கும். துறவுக்கு சத்வத்தை விட ரஜோ குணத்தை முதன்மைப் படுத்துவார். சத்வ குணமுடையவர் துறவியாவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ரஜோ குணமுடையவர் தன்னை, தனது தன்முனைப்பை வெற்றிகொண்ட பிறகே துறவின் பாதையில் பயணிக்க முடியும். ரஜோ குணத்தவரின் போராட்டம் எழுத்தாளர்களை ஈர்ப்பது இயல்பானதே. எனினும் சத்வ குணத்தை குறைத்து அல்லது அலுப்புடன் காட்டுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெண்முரசில் யுதிஷ்டிரன் பாத்திர வார்ப்பை உதாரணமாக கொள்ளலாம். சுசித்ராவின் இந்த கதையிலும் பஞ்சநாத பிரம்மத்தின் சித்தரிப்பு இத்தகையதே. பொது சமூகம் சத்வ குணத்தின் மீது காட்டும் மரியாதைக்கு எதிர்வினையாககூட கலைஞர்களின் எரிச்சலையும் உதாசீனத்தையும் பார்க்க முடியுமா என்றொரு எண்ணம் தோன்றியது. மாறன்- ராமன் கவித்துவமான இடமாக இருந்தாலும் வான்மீகிக்கு அளிக்கப்படுவது மரா எனும் சொல்தான். ஜப்யேசன் பாத்திரத்தின் வலிமைக்கு முன் தியாகராஜர் மிகவும் வலுவற்றவராக தெரிகிறார். தியாகராஜரை பக்திமானாகவும் கவியாகவும் காண இடமுண்டு. அவற்றை இருவேறு கூறுகளின் இணைவாக காண வேண்டுமா என்றொரு கேள்வியும் எழுந்தது. கபீர் தாஸரின் ஜீனி சதாரியா அருமையான பாடல். அப்பாடலில் முன்வைக்கப்படும் நெசவு எனும் படிமமும் நௌகா சரித்திரம் எனும் ஜெயதேவரின் பாடலில் இருந்து கோபிகைகள் ஆடையை கொண்டு படகின் ஓட்டையை அடைக்க முயலும் நெசவு எனும் சித்திரமும் இயைந்து வருகிறது. எனினும் ஜீனி சதாரியா பாடல் கதை நிகழும் கால சூழலுக்கு பொருத்தமானதா என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதை நியாயம் செய்வதற்கென மஸ்தானி என்றொரு பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. புறசித்தரிப்பில் சில இடங்கள் திரும்பத்திரும்ப வருவதாக தோன்றுகிறது என்றாலும் காவேரியை சித்தரித்த விதம் மிகச் சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டது. இந்த எல்லைகளை கடந்து வாசகருக்கு ஒரு காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் அனுபவத்தை கதை அளிக்கிறது. எல்லாவற்றையும் இணைக்கும் ராம பாணத்தால் கூட பெண்ணின் துயரை போக்க முடியவில்லை என்பது அபாரமான இடம். ராமனே தவறிய இடமல்லவா.      


மீனாட்சி நாதன் சொல்லும்போது “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.” சுவடிகள் வழியாக பழையகாலம் தன்னை திரும்பி நோக்குவதை பற்றி சொல்கிறான். ராமனையும் அத்தகைய ஆழமான செதுக்காகவும் அது நம்மை திரும்பி நோக்காதா என பார்ப்பதாகவும் ராமுடு குறிப்பிடுகிறார். 

‘ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய’


‘எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.’ என்கிறார் ராமுடு.  வரலாறை மிஞ்சி நிற்கும் ஆழ்படிமம் ராமன். அதை சொல்லின் வழியாக மீட்டெடுக்க முடியும்  என்பதாக  பொருள்படுகிறது. ராமுடு தனது குரு தனக்கு அளித்த ராம நாமத்தை பற்றி குறிப்பிடும்போது “கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.” என சொல்லும்போது மேற்சொன்ன எண்ணம் வலுப்படுகிறது. 


மிக நல்ல குறுநாவலாக வந்திருக்க வேண்டியது, ஒன்றுக்கும் மேற்பட்ட மைய கேள்விகளை பின்தொடர்ந்து, சிதறியதால் அந்த உயரத்தை எட்ட தவறிவிட்டது என்பதே என் எண்ணம். 


  •  

தொகுதி 1, இதழ் 3 அந்தி [சிறுகதை] தன்யா 1859 சொற்கள் | வாசிக்க: 8 ந…

தொகுதி 1, இதழ் 3

அந்தி [சிறுகதை]

தன்யா

1859 சொற்கள் | வாசிக்க: 8 நிமிடங்கள்

இதழாசிரியர் குறிப்பு:

சென்ற இதழில் ‘அன்னையை சுவீகரித்தல்‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றது. அதில், அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்‘ என்ற கதையை ஒட்டி, மகள் அம்மாவை சுவீகரிப்பதைப் பற்றிய அந்தக் கதையின் பார்வை விவாதிக்கப்பட்டது.

அந்த விவாதத்திலிருந்து உத்வேகம் பெற்று தன்யா ‘அந்தி’ என்ற தன் முதல் சிறுகதையை எழுதியிருக்கிறார். அம்மாவை சுவீகரித்தல் என்பதையே, அதே கருவின் அமைப்பில், வேறொரு பார்வையோடு அணுகியிருக்கிறார். நல்ல கதையாக வந்துள்ளது. அதன் முற்றிலும் நேர்நிலையானப் பார்வை என்னை மலரச் செய்தது.

கன்னிமையை அன்னையிடமிருந்து மகள் சுவீகரிக்கிறாள், அல்லது அன்னையே அதை மகளுக்குக் கொடுக்கிறாள் என்ற பார்வை கதையில் வருகிறது. மேலும் அந்த பருவத்தின் அருமையும் சன்னமாக உணர்த்தப்படுகிறது. மருதாணியின் நிறமும் ஆழமும் அந்த அருமையான காலத்தை உணர்த்தும் படிமமாக கதையில் ஆர்பாட்டமில்லாமல் வருகிறது. ஒரு கட்டத்தில் மொத்த வாழ்வின் அருமையை உணர்த்தும் அளவுக்கு விரிகிறது.

ஒரு முன்னோடியின் கதையிலிருந்து தொடங்கி விவாதம் போல் இன்னொரு தளத்துக்குச் செல்லும் ஒரு கதை இயற்றப்படுவது மிகவும் படைப்பூக்கம் பொருந்திய ஒரு விஷயம். இந்த நிகழ்வு சுரபி தொடங்கப்பட்ட மிககுறுகிய காலத்தில் நடந்தேறியது நிறைவூட்டுகிறது.

சவிதா நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து கொஞ்சம் தாமதமாக வந்தாள். காலில் அணிந்த ஷூவில் சிவந்த மண் கரைகள். கறுத்து வியர்த்திருந்தாள். சென்று குளிக்கச் சொன்னேன். குளித்து முடித்து வழக்கம் போல துணியை சுருட்டி குளியலறையிலேயே போட்டிருந்தாள். சலிப்புடன் அதை எடுத்த போது கவனித்தேன். என் மகள் ருது அடைந்துவிட்டாள். தொண்டை அடைத்தது. அவளுக்கு அவ்வளவு வயதாகவில்லையே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த தெருவில் வசித்த பெரியம்மாவிற்கு அழைத்தேன். பூரித்துப் போனார். உடனே வீட்டிற்கு வந்து எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டார். சவிதாவிற்கு ஏற்கனவே கொஞ்சம் விபரங்களை கற்றுக்கொடுத்திருந்தாலும் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. உருட்டி விழித்து எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

நான்காவது நாள் சில சடங்குகள் செய்ய வேண்டும். விருந்து சமைக்கவேண்டும். என் அம்மா களி, புட்டு என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். சவிதாவிற்கு மெஹந்தி இட்டு விட ஒரு பெண்ணை பெரியம்மா ஏற்பாடு செய்திருந்தார். இரண்டு தாத்தா பாட்டிகளும் வந்த பின்னர் தான் சவிதா கொஞ்சம் முகம் மலர்ந்திருந்தாள். அவளுடைய தம்பி அவள் அறைக்குள் ஓடுவதும் அவள் விரட்ட கீச்சென்று கத்திக்கொண்டே வெளியே வருவதுமாக விளையாடிக்கொண்டிருந்தான். அவனோடு மட்டும் தான் மெல்லிய குரலில் அவள் இயல்பாக பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாள். வேறு யார் உள்ளே சென்றாலும் மீண்டும் அதே குழம்பிய பார்வை.

எனக்கு என் தம்பியின் பூனூல் கல்யாண நிகழ்வு ஞாபகம் வந்தது. எப்போதும் நினைவில் நிற்கும் சில நாட்காளில் அதுவும் ஒன்று. நான் கல்லூரி முடித்திருந்த சமயம். சென்னையில் இருந்த நாங்கள் அந்த நிகழ்வுக்காக மதுரை சென்றிருந்தோம். இரண்டு நாள் நிகழ்வு அது. அதற்கு முன்பு நான் பூனூல் கல்யாணம் பார்த்ததில்லை. முதல் நாள் பூர்வாங்கம். பந்த கால் நட்டு, மந்திரங்கள் சொல்லி ஒன்பது நாந்தி பிராமணர்களை முன்னோர்களாக பாவித்து உணவளித்து உபசரித்து அனுப்பினார்கள். இரவு முழுவதும் பயணம் செய்து வந்ததால் மதியம் தூக்கம் வந்தது.  ஆனால் அந்த மண்டபம் கொஞ்சம் பழையது. சிமெண்ட் தரையுடையது. வைகைப்பாலம் அருகில் இருந்தது. சுற்றிலும் கடைகள், சிறிய கோவில்கள்; சாலையில் மாடுகளும் குப்பைகளும் இருந்தன. மழைக்காலம் வேறு. அவ்வப்போது தூரல் இருந்தது. மிகவும் கசகசப்பாக உணர்ந்தேன். அம்மா, சித்தி, பாட்டி ஆகியோர் கீழே மண்டப கூடத்திலேயே படுத்து விட்டார்கள். எப்படித்தான் கூச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாடியில் அறைகள் இருந்தாலும் அங்கு சென்று நான் மட்டும் எப்படி உறங்குவது என்று யோசிப்பதற்குள் மாலை ஆகிவிட்டது.  

தாத்தா வீடும் மதுரையில் தான் இருந்தது. சூர்யா நகர் தாண்டிச் செல்லவேண்டும். அன்று என் நினைவெல்லாம் வீட்டில் தான் இருந்தது. தாத்தா நிமோனியா முத்திய நிலையில் இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. பேசும் சக்தியை கிட்டத்தட்ட முழுமையாக இழந்திருந்தார். அவரது ஒல்லியான தேகம் மேலும் மெலிந்திருந்தது. எனவே அதற்கு முந்தைய மாதம் தான் அவரை எங்கள் சென்னை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தோம். மதுரை வீட்டை பராமரிப்பு செய்து வாடகைக்கு விட ஏற்பாடாகியிருந்தது. இனி அந்த வீட்டிற்கு சென்று தங்க முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சித்திரைத் திருவிழா சமயத்தில் அழகர் வைகை நோக்கிச் செல்லும் வழியில் தான் எங்கள் வீடு. அதைப்பார்க்க காலை மூன்று மணிக்கு எழுப்பி முகம் கழுவ வைத்து தவளை சத்தத்திற்கு நடுவே டார்ச் விளக்கொளியில் தெருவின் முகப்பிற்கு அழைத்துச் செல்வார். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் ஒரே திட்டம்தான் வைத்திருப்பார். ‘’நாளைக்கு மீனாட்சி கோவில் போகலாம். அடுத்த நாள் அழகர் கோவில்”. ஒருமுறை நான் வேறு எங்காவது போகலாம் என்று சொன்னதிற்கு மிகவும் யோசித்து திருமலை நாயகர் மகாலை கண்டுபிடித்தார். பத்தாவது படிக்கும் சமயத்தில் இருந்து தேர்வு, வகுப்பு என்று காரணம் சொல்லி  மதுரைக்கு வருவதை தவிர்ப்பேன். அப்போது சலித்திருந்தாலும் ஏனோ மனம் அவற்றை இனிமையான நாட்களாக உருவகித்துக்கொள்கிறது. 

தாத்தா மண்டபத்தின் ஒரு அறையில் படுத்திருந்தார். இந்த பூனூல் கல்யாணமே அவர் காணும் கடைசி மங்கல நிகழ்வு என்று அவருக்கு தோன்றியிருக்கலாம். ஒரு நல்ல நிகழ்வை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர் முகத்தில் இருந்தது. எனவே ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து வந்தோம். அவரது ஒடுங்கிய கன்ன எலும்பின் வளைவுகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த என்னை ’’கிளம்பு, மழை வர மாதிரி இருக்கு. அதுக்குள்ள கோவில் போயிட்டு வரலாம்’’ என்று அம்மா அவசரப்படுத்தினார். 

மாலை நானும், அப்பாவும், அம்மாவும் மட்டும் மீனாட்சி கோவிலுக்கு சென்று வந்தோம். அந்த வயதில் மீனாட்சி என் தோழியாக இருந்தாள். அவளோடு என் எல்லா ஆசைகளையும் பகிர்ந்து கொள்வேன். சுந்தரேஸ்வரரை அவள் காதலனாக அன்றி என்னால் பார்க்கமுடிந்ததில்லை. அவளுடைய மூக்குத்தி போலவே நானும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மீண்டும்  அவளை கோவிலில் பார்த்தபோது தொற்றிக்கொண்டது. என் அம்மாவின் மூக்குத்தியையும் எதிரில் வந்த அத்தனை பெண்களின் விதவிதமான மூக்குத்திகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன்.  ’’உனக்கு செட் ஆகாது டி’’ என்று சொன்ன என் பள்ளித்தோழியின் நினைவு வந்து முகம் தொங்கிப்போய் பொற்றாமரைக்குளத்தில் அமர்திருந்தேன். ‘’முகத்த ஏண்டி இப்டி வெச்சிருக்க?” என்று அம்மா கேட்க “ஒன்னுமில்ல போ” என்று முகம் சுளித்தேன். அப்பா,’’என்னமா, எதாச்சும் வேணுமா?” என்று கேட்க ”நான் மூக்கு குத்திக்கவா?” என்று கேட்டு என் முகத்தை கொஞ்சம் சரியாக பார்த்துவிட்டுச் சொல் என்பது போல இரண்டு பக்கமும் லேசாக திருப்பிக் காட்டி உதடுகளை மூடி புன்னகைத்தேன். ”உனக்கு புடிக்கும் நா குதிக்கோமா. வலிக்குமே. அது பாதுக்கோ” என்றார். அம்மா ”குத்திட்டு புடிக்கலனு சொன்னா அப்புறம் மூக்குல வடு இருந்துடே இருக்கும்.அவசரப்படாத” என்று மேலும் குழப்பினார். ஒட்டிக்கொள்ளும் மூக்குத்தி இருக்கிறதா என்ற சிந்தனை பிறந்தபோது மழை பெரிய சொட்டுகளாக நாங்கள் அமர்ந்திருந்த கற்படிகளில் விழத்தொடங்கியது. நீண்ட ஊசிகள் துளைத்த உடலாக கரிய குளத்தில் நீர் தெறித்தது.  ஆட்டோ பிடித்து மீண்டும் மண்டபம் வந்து சேரும் போது புழுக்கம் மேலும் அதிகமானது.

இரவு மண்டபத்தில் உணவருந்திவிட்டு உறவினர்கள் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அமர்ந்து கேட்டுகொண்டிருந்தேன். அப்போது என் பாட்டி உள்ளே தாத்தா படுத்திருந்த அறையிலிருந்து அழைத்தார். தூக்கம் கால்களை துவளச் செய்தது. அங்கு பாட்டி ஒரு கிண்ணத்தில் நிரம்ப மருதாணி அரைத்து வைத்திருந்தார். அது எங்கள் வீட்டின் முன்பகுதியில் வராண்டாவில் இருக்கும் மருதாணி மரத்தில் இருந்து எடுத்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பாட்டியிடம் சிரித்துப்பேசி கொஞ்சம் பறித்துச்செல்வது வழக்கம். எல்லா விடுமுறையும் அந்த மருதாணிக் கறையுடன் தான் சென்னை திரும்புவேன். சென்னையில் பள்ளிக்கு மருதானிக் கைகளுடன் செல்வது கூச்சமாக இருக்கும். ஆனால் அனைவரும் என் கைகளை பார்ப்பது தெரிந்து சில நாட்கள் என்னுள்ளிலிருந்து அபிநய மொழி அளவில்லாது பொழியும்.

பாட்டி வலது கையின் கட்டை விரலிலிருந்து தொடங்கி மூன்று விரல்களால் அதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து இடக்கையில் நகக்கூம்புகளைச் சுற்றி குப்பிகளாக அமைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் “வா” என்று மட்டும் சொன்னார். சென்று அவர் முன் அமர்ந்தேன். மருதாணியின் மனம் என் தூக்கத்தை கலைத்துவிட்டது. பாட்டியின் குப்பியிட்ட சுண்டுவிரலின் நுனியில் தெரிந்த ஆரஞ்சு நிறம் ரகசியம் வெளிப்படும் பதற்றத்தை  அளித்தது. பாட்டி என் இடது உள்ளங்கையை காட்டச் சொல்லி அதன் மத்தியில் பெரிய உருண்டையை எடுத்து வைத்து வட்டமாக பரப்பினார். ஜில்லென்று அதன் குளிர்ச்சி என் கண்களை சுருங்கச் செய்தது. உள்ளங்கையின் விளிம்புகளில் எட்டு புள்ளிகளாலான வெளிவட்டத்தை அமைத்தார். விரல் குப்பிகளே எனக்கு மிகவும் பிடித்தமானவை. சரியான அளவு மருதாணியை எடுத்து கொஞ்சம் பந்து போல உருட்டி  விரலின் மேல் நுனியில் இருந்து அதை கவிழ்த்து எல்லாப் பக்கமும் சரியான அளவில் பரப்பி எல்லா விரலிலும் ஒரே அளவு நீட்டத்தில் நிறுத்த வேண்டும். பாட்டியின் கை மிக இயல்பாக அதைச் செய்தது. நான் விரல்களை விரித்து குப்பியின் அனைத்து பக்கங்களையும் பார்க்க முயற்சித்தேன். என் உள்ளங்கையை ஒரு விரல் மீது மறு விரல் படாமல் விரைத்தது போல வைத்துக் கொண்டிருந்ததில் மனிக்கட்டில் இருந்து கட்டைவிரலுக்குச் செல்லும் எலும்பு வலிக்க ஆரம்பித்திருந்தது. பாட்டி எனது இருகைகளையும் அலங்கரித்து முடித்ததும் நான் எழுந்தேன். ‘’கால்லையும் போட்டுக்கோயேன், நலுங்கு மாதிரி வெச்சு விடறேன், இனிமே நாம எப்போ இங்க வருவோமோ தெரியலயே” என்றார். ஆம், இதுவே கடைசி முறை என்று தோன்றியது. மருதாணியை அள்ளி உடல் முழுக்க பூசிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ’’சரி’’ என்று எனது இடது காலை முன் நீட்டினேன். கைகள் என் பாவாடை மீது படுவது போல் இருந்ததால் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் மடக்கி விரல்களை விரித்து நின்றிருந்தேன். தூக்கமின்மையால் கண்கள் துருத்தியிருக்க, அறையின் வாசற்கதவை வெறித்துப் பார்த்திருந்தேன். வேகமாய் உள்ளே நுழைந்த அம்மா, ஒரு கணம் திகைத்து நின்று “என்னடி…ஓ! காலிலேயும் மருதாணியா? எப்படி தூங்குவே?” என்றார். “அதெல்லாம் தூங்குவேன்” என்று சிணுங்கினேன். “இன்னிக்கி ஒரு நாள் தான, அப்றம் எவ்ளோ அழகா இருக்கும். விடு” என்று பாட்டி சொல்ல, என்னவோ செய் என்று பார்வையால் கூறிவிட்டு நாளைய நிகழ்வுக்கு தேவையான பொருட்கள், உடைகள் ஆகிவற்றை சரிபார்க்கத் துவங்கினார். பாட்டி ”முடிஞ்சுது” என்று சொல்லி தண்ணீர் இருக்கும் குவளையில் வலது கையை முக்கி கழுவிக்கொண்டார். அவரது வலது கை விரல்கள் அனைத்திலும் நல்ல கரை படிந்திருந்தது. ஆனால் அவை கச்சிதமாக இல்லாமல் அப்பியது போல படிந்திருந்தது. எப்போதும் இடக்கையில் மட்டுமே அவர் சரியாக இட்டுக்கொள்ள முடிந்தது. அது சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு குற்றவுணர்வைத் தரும். என்றாவது ஒரு நாள் அவருக்கு இரு கைகளிலும் சரியாக அலங்கரித்துவிட  வேண்டும். 

ஒரு அடி எடுத்து வைத்தேன். பாவாடை அசைந்து மருதாணியிட்ட கால் கட்டைவிரல் மேல் உரசிச் சென்று வந்தது. அங்கேயே நின்றுவிட்டு ”அம்மா!” என்று கத்தினேன். ‘’என்னை ரூமுக்கு கூடிட்டு போ. பாவாடை தடுக்குது” என்றேன். “திடீர்னு ஏண்டி இப்டி கத்துற? வா இங்க..” என்று என் அருகே வந்து என் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி விட்டார். ”எனக்கு வேலை இருக்குடி. அப்பாவை வேனா கூட்டிட்டு போகச் சொல்றேன்” என்று மண்டப ஹாலில் இருந்த அவரை உடனே அழைத்துவிட்டார். அப்பாவும் சட்டென்று வந்துவிட என் கோலத்தைப் பார்த்து கண்கள் விரிய சிரித்துவிட்டார். என் முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று தெரியாமல் விழித்து உதட்டைப் பிதுக்கினேன். அம்மா என் நிலைமையை எடுத்துக் கூற அப்பா என்னை மாடி அறைக்கு அழைத்துச் சென்றார். மண்டப ஹாலில் மாமா, மாமிகள் என்று பத்து பேர் வரை அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். என்னை பார்த்து அவர்கள் கண்கள் மினுங்க புன்னகைத்தது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. 

அப்பா பின்னாலிருந்து என் தோள்களையும் முதுகையும் லேசாக பிடித்துக் கொள்ள குறுகிய மாடிப்படிகளில் தடுமாறியபடி ஏறிச் சென்றேன். மூன்று அறைகள் இருந்தன. ”கடைசி ரூம்ல நாம தங்கிக்கலாம். மத்த ரெண்டு ரூமையும் சொந்தக்காரங்களுக்கு கொடுத்துட்டோம்”  என்று சொல்லிவிட்டு அப்பா அந்த அறையின் விளக்கைப் போட்டார். ஐந்து பேர் வரிசையாகப் படுக்கலாம். பாய்களும் போர்வைகளும் இருந்தன. ஆனால் மிகப் மிகப் பழையவை. சன்னல் திறந்திருந்தது. மூடினால் புழுக்கம் அதிகமாகும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு மின்விசிறி இருக்கும் இடத்தை குறிப்பார்த்து நின்றேன். அந்த இடத்தில் அப்பா பாய் விரித்து தலையணை போர்வை எல்லாம் வைத்து கால்களுக்கும் சில தலையணைகளை வசதிக்காக போட்டுக்கொடுத்தார். ஒரே சமயத்தில் மகாராணி போலவும் நோயுற்றவளைப் போலவும் உணர்ந்தேன். 

கீழே அமர முயற்சித்து கால்களைப் பின்னிய வேகத்தில் கொஞ்சம் தடுமாறி பொத்தென்று அமர்ந்துவிட்டேன்.  எலும்பில் வலி தெறித்தது. அதற்குள் அம்மா, சித்தி, சித்தப்பா, தம்பி எல்லோரும் படுக்க வந்துவிட்டனர். அனைவரும் பரபரப்பு தணிந்து படுக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. விளக்கை அணைக்கும் வரை அமர்ந்திருந்தேன். 

என் கால் முட்டிகளை தலையணையில் அழுத்தி ஒருக்களித்து படுக்க முயன்றேன். ஆனால் எப்படி படுத்தாலும் கால்களில் மருதாணி உரசிக் கொள்வது போல இருந்தது.  பாதங்களை தரையில் பதித்து கால்களை மலை போல் மடக்கிய நிலையிலேயே மெதுவாகச் சாய்ந்தேன். இத்தனை நேரமும் கைகள் விரித்தவாறே இருந்ததை உணர்ந்து கொஞ்சம் தளர்த்திய போது தோள்பட்டையில் இருந்து மணிக்கட்டு வரை ஓர் நரம்பு அதிர்ந்து மீண்டது. கண்கள் மூடிக்கொள்ள கண்மணிகள் உள்ளே உருண்டு சென்று செருகிக் கொண்டன. ஐந்து நிமிடம் இருக்கும். நான் மீண்டும் விழித்துக் கொண்டேன். என் உடலெங்கும் ரத்தம் உறிஞ்சப்படுவது உணர்ந்து உதறிக்கொள்ள முயன்றேன். என்னால் நகர முடியவில்லை. இருட்டில் யாருக்கும் தெரியாமல் மண்ணுக்கு அடியில் அமிழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஊனாக மட்டுமே என்னை உணர்ந்த போது திடுக்கிட்டு கண்களைத் திறந்தேன். நெஞ்சு விம்மி விம்மி அடங்கிக்கொண்டிருக்கும் போதே கைகளிலும் கால்களிலும் கொசுக்கள்  தொடர்ச்சியாகக் கடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். சுற்றிலும் அம்மா, சித்தி எல்லோரும் கைகளை காற்றில் வீசிக்கொண்டு அரைத்தூக்கதில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் எல்லோருக்கும் முழுவதுமாக தூக்கம் கலைந்து விட்டது. சித்தப்பா எழுந்து சன்னலை மூடினார். ஆனால் உள்ளே இருக்கும் கொசுக்கள் மூர்க்கமாக கடித்துக்கொண்டே இருந்தன. என்னால் சொரிந்து கொள்ள முடியவில்லை. என் மருதாணி அழிவதை நான் விரும்பவில்லை. அம்மாவும் சித்தியும் படிந்தவரை போதும் என்று எழுந்து கழுவிக்கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் கைகளில் மட்டும் வைத்துக்கொண்டு வந்து படுத்திருந்தனர். கழுவிய கைகளில் மெல்லிய கரை மட்டுமே இருந்தது. எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் இரண்டு மணி நேரமாவது வைத்துக்கொண்டு தான் கழுவுவேன் என்று  முணகினேன். கடிந்து கொள்ளும் நிலைக்குச் சென்ற அம்மாவின் முகம் சற்று தணிந்து,  கோகுல் சான்டால் பவுடரை எடுத்து என் கைகளிலும் கால்களிலும் தடவினார். ”கொஞ்ச நேரம் கழிச்சு கழுவிட்டு நிம்மதியா படு. எத்தன நேரம் இப்படியே கொசுக்கடியோட சொரியமுடியாம அண்ணாந்து படுத்திருப்பே? என்றவாறு மீண்டும் உறங்கச் சென்றார். பவுடர் சற்று ஆறுதலை அளித்தாலும் அந்த நெடி தும்மல் வரச் செய்தது. கைகளால் காற்றில் கொசுக்களை சிதறடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். மருதாணி வாசம் கொசுக்களை ஈர்க்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் தோன்றியது. மற்றவர்களை விட்டு என்னைத்தான் இப்போது அவை சூழ்ந்து கொண்டன. சிறிது நேரத்தில் என் கைகள் ஓய்ந்தன. அவை என் கைகளை கடிப்பதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மருதாணி மரமாக என்னை நினைத்துக் கொண்டு அதில் ஊரும் எரும்புகள் என அந்த கொசுக்களை உருவகித்துக்கொண்டேன். எங்கு கடிக்கும் என்ற அவதானிப்பும் கண்டுபிடிப்புகளும் ஓர் விளையாட்டாக மாறியது.  என் உடலின் ஒவ்வொரு அணுவையும் உணர்ந்து கொண்டிருந்தேன். விருந்துணவு உண்டு திளைத்த உயிர்களின்  ஓசையில்  அயர்ந்து தூங்கிப்போனேன்.

மூன்று மணியளவில் தூக்கம் கொஞ்சம் கலைந்தது. நான் தூக்கத்தில் நன்றாக ஒருக்களித்து படுத்திருக்கிறேன். ஆனால் மருதாணி நன்றாக காய்ந்து பாளம் பாளமாக ஆகியிருந்ததால் கவலை இல்லை. அந்த இடுக்குகளில் தெரிந்த சிவந்த கங்கு போன்ற கரை என்னை குதூகலிக்கச் செய்தது. நன்றாகவே காய்ந்து உதிர்ந்த வெளிவட்டப் பொட்டொன்றை ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டேன். என் அப்பாவும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தார். என்னிடம் அசைவுகளைக் கண்டு ‘’கை கழுவிக்கிறியா மா? இங்க தான் பக்கத்துல பைப் இருக்கு” என்றார். எனக்கும் உடல் மிகச் சோர்வாக இருந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும் போலவும் இருந்தது. கழுவிக்கொண்டு வந்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தோன்றியது. சரி என்று எழுந்து கொண்டேன். அப்பா என்னை முந்தைய இரவு பிடித்துக்கொண்டதைப் போல  இப்போதும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நான் இயல்பாக நடப்பதை பார்த்துவிட்டு நிதானமடைந்தார். உடல் முழுவதும் வலித்தது. கண்களை பாதி திறந்தபடியே நடந்தேன். 

வராண்டாவில் இருந்து திறந்த மொட்டைமாடிக்கு சில படிகள் ஏறிச் சென்றோம். அங்குதான் குளியல் அறைகள், கை கழுவும் இடம் ஆகியவை இருந்தன. கோவில்களில் இருப்பது போல வரிசையாக நான்கைந்து குழாய்கள். அதில் முதலில் நான் இருகைகளையும் நீட்டி ஒன்றோடு ஒன்றை உரசிக் கழுவினேன். காய்ந்த திட்டுக்கள் நீரில் நனைந்து இளக குழாயை வேகமாகத் திறந்து அதில் கைகளைக் காட்டினேன். அவை பொருக்குகள் போல எடையற்று தண்ணீரில் மிதந்து சென்று மறைந்தன.  அடுத்து கால்களைக் கழுவ முயன்றேன்.   ஆனால் ஒரு காலை வைத்து இன்னொரு காலை சரியாக அழுத்தி உரச முடியவில்லை. சிரிய பல்பு வெளிச்சம் மட்டுமே இருந்தது. கண்களை சுருக்கி நான் துழாவிக்கொண்டிருக்கையில் அப்பா சட்டென்று “இரும்மா, நான் கழுவி விடறேன்” என்று குந்தி அமர்ந்து என் கால்களை ஒவ்வொன்றாக நீரில் காட்டி தேய்த்துக் கழுவினார். நான் ஒரு கையை எதிர்சுவரில் ஊன்றி மறு கையை அப்பாவின் தோள்களில் வைத்திருந்தேன். அப்பா எனக்கு சிறு வயதில் குளிக்கும் போது சோப்பு தேய்த்துவிட்டது நினைவு வந்தது.  என் கண்கள் கூசி நீர் நிரம்பியது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் நீரில் கரைந்து சிறு ஒடைகளாகி எங்கோ வழிந்து சென்றன.

அதிகாலை மீண்டும் சீக்கிரமாக எழுந்து குளித்து தயாராக வேண்டியிருந்தது. என் மருதாணியின் சிவப்பில் அவ்வப்போது நிலைமறந்து நின்றிருந்தேன். இளம் காலை ஒளியில் அவை பூத்த செம்பருத்திகள் போல் இருந்தன. விரல்களை குவித்தும் விரித்தும் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தேன். இரவு தூக்கம் போதாமையால் என் முகம் சற்றே வீங்கியிருந்தது. உடலில் வெப்பத்தை உணர்ந்தேன். நல்ல வெளிச்சம் வந்ததுமே கவனித்தேன். என் கைகள், குதிக்கால்கள் இரண்டும் முழுவதுமாக கொசுக்கடியில் சிவந்த திட்டுக்களாகி இருந்தன. இரண்டாம் நாள் நிகழ்வில் குருவின் உதவியுடன் தந்தை மகனுக்கு காயத்திரி மந்திரம் ஓதும் சடங்கு நடைப்பெற்றது.  அதன் பின்னர் சித்தியும் சித்தப்பாவும் தம்பியுடன் அமர்ந்து கொள்ள சில சடங்குகள் நடைப்பெற்றன. முந்தைய நாள் கரைத்து வைத்த நவதானியப் பாலிகைக் குவியலை குடும்பத்தில் உள்ள சுமங்லிப் பெண்கள் கைகளால் எடுத்து மண் குடுவைகளில் இட்டு வேண்டிக்கொண்டார்கள். தாத்தா, படுத்திருந்த அறையில் இருந்தே கூடத்தில் நடந்த நிகழ்வை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலை சென்னை கிளம்பும் முன்னர் அப்பா அம்மாவுடன் சேர்ந்து கடைசியாக தாத்தா வீட்டிற்குச் சென்றேன். பராமரிப்பு வேலை பெரும்பாலும் முடிந்திருந்தது. இளம் பச்சை நிற வண்ணம் வீட்டை அடையாளம் காண முடியாதபடி மாற்றியிருந்தது. மழை மேகங்கள் நீங்கி வானம் தெளிவடைந்திருந்தது. வீட்டின் உள்ளே பார்த்து முடித்து திரும்பும் போது அந்தி நெருங்கிக்கொண்டிருந்தது. வானம் முழுவதும் சிவந்திருந்தது. மருதாணி மரம் தீத்திவலையில் எரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

பெரியம்மா அழைத்துக்கொண்டே இருந்தார். சவிதாவிற்கு மெஹந்தி இட்ட பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும். ”ராத்திரி முழுக்க கழுவாதிங்க பாப்பா. அப்போதான் நல்லா கரையாகும்” என்று அவள் கூற சவிதா கைகளை அசைக்காமல்  மிகப் பொறுப்பாக தலையை ஆட்டினாள். கைகளைத் தொட வந்த தம்பியை கடிந்துகொண்டவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

~

ஆசிரியர் குறிப்பு:

தன்யா 1998-ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தகங்கள் வழியாக சீரிய இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து இந்திய, ரஸ்ய செவ்வியல் நாவல்களை வாசித்து வருகிறார். ‘அந்தி’ இவருடைய முதல் சிறுகதை. தன்யா நிதித்துறையில் பணியில் இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு எழுத்தாளர் அஜிதனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

  •  

தொகுதி 1, இதழ் 3 பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும் – ஒரு விவாதம்…

தொகுதி 1, இதழ் 3

பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும் – ஒரு விவாதம்

பெண் எழுத்தின் ஆழ்விசைகள் என்ன, 
தொடர்ச்சிகள் என்ன, என்ற என் தேடலை முன்னிட்டு ‘சுரபி’ இதழ் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக சென்றகால, சமகால பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் ஓர் அறிவுறுத்தும் தன்மை இருப்பதை கவனித்தேன். அதை புரிந்துகொள்ளும் நோக்குடன் ஆசிரியர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

அன்புள்ள ஜெ,

தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றாலும் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.

அவர்கள் நல்லுபதேசம் செய்கிறார்கள். குடிக்காதே என்கிறார்கள். அடிமை முறையை எதிர், பெண்களை ஒழுங்காக நடத்து, குழந்தைகளை அடிக்காதே என்றெல்லாம் கூறுகிறார்கள். அக்காத்தனமாகவும் அம்மாத்தனமாகவும் மாறி மாறி கொஞ்சியும் அதட்டியும் பேசுகிறார்கள். 

இவர்களில் சிலர் மரபுவாதிகள். சிலர் இலட்சியவாதிகள். பலர் நடைமுறைவாதிகள். மரபுவாதிகளாவது ஒரு மதிப்பீட்டின் பின்புலத்திலிருந்து பேசுகிறார்கள். நடைமுறைவாதிகள் சொல்வதெல்லாம் நடைமுறை சார்ந்து மட்டுமே. அத்தகைய அறிவுரைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர் அவ்வாறு அறிவுறுத்தத் தகுதி உள்ளவரா?

ஆனால் அத்தகைய அறிவுரை எழுத்துக்கு ஒரு இலட்சியத்தன்மை உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. “இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது,” என்று சிவசங்கரியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.

என் கேள்வி, ஒரு சூழலில் ஒரு வகையான எழுத்தாளராவது இப்படி ஓர் ஒழுக்கக்காப்பாளராக (moralist), அறிவுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது தேவை இருக்கிறதா? சூழலுக்கு இவர்களது பங்களிப்பு என்ன?

அன்புடன்,

சுசித்ரா

எழுத்தின் ஆழ்விசைகளை, வரலாற்றுத் தொடர்ச்சிகளை பற்றி ஜெயமோகன் தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடன் விவாதித்தே இந்தக் கேள்விகளை ஒட்டி என் சிந்தனைகள் கூர்மையடைந்துள்ளன . அவருக்கு என் நன்றி.

என் கடிதத்துக்கு ஜெயமோகன் எழுதிய பதிலை இங்கே வாசிக்கலாம்:

https://www.jeyamohan.in/212624/.

ஆரம்பகால பெண் எழுத்தாளர்கள் பெண்களின் ஒழுக்கத்தை வலியுறுத்தி எழுதியதன் வரலாற்றுச், சமூகக் காரணிகளை அவதானித்துச் சொல்கிறது அவர் பதில். இந்தச் சுட்டியில் உள்ள பெண் எழுத்தாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளும் மிக முக்கியமான ஆவணம்.

அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக நான் எழுதிய பதிலை இங்கே பிரசுரிக்கிறேன். இந்த விவாதம் வழியாக என் சிந்தனையில் இரண்டு புதிய திரிகள் கிளைத்துத் திரண்டு வந்துள்ளன. இவற்றை வரும் இதழ்களில் மேலும் விரித்து எழுத எண்ணம் உள்ளது.

~

அன்புள்ள ஜெ,

உங்கள் பதிலுக்கு நன்றி. எப்போதும் போல, தொடங்கிய இடத்திலிருந்து பிடித்து மேலேச் செல்ல சில சிந்தனைக் கயிறுகளை அடையாளம் காட்டியுள்ளீர்கள். இதை ஒட்டி என் சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளும் வகையில் சில குறிப்புகளை எழுதுகிறேன்.

தமிழில் இலக்கியம் படைத்தவர்களில் பெண்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கேள்வியிலிருந்தே இந்த விவாதம் எனக்குள் தொடங்கியது. அதிலிருந்து, சரி இலக்கியம் என்று வேண்டாம், பெண்களின் சுய வெளிப்பாடு எழுத்தில் எவ்வாறெல்லாம் நிகழ்ந்துள்ளது என்ற கேள்விக்குள் சென்றேன். நவீன யுகம் தொடங்கி இந்த நூற்றி இருபத்தைந்து வருடங்களில் பெண்கள் தங்களை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார்கள்? அதற்கான வரலாற்று, சமூகக் காரணங்கள் என்ன? அதை விட முக்கியமாக ஆன்மீகக் காரணங்கள் என்ன? இவ்வாறு என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் தங்களுடைய ‘ஆழ்நதியைத் தேடி’ என்ற நூல் ஒரு வகையில் துணையாக இருந்தது என்று இத்தருணத்தில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். 

இதன் தொடர்ச்சியாகவே பெண்கள் ஒழுக்கம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதியதைப் பற்றிய கேள்வி எழுந்தது. உங்கள் பதிலில் நீங்கள் பெண்களுக்கான ஒழுக்கத்தைப் பற்றி எழுதிய ஆரம்பக்கால பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் கூறியிருந்தீர்கள். ஆம், அதுவே தொடக்கம். அதற்கான வரலாற்றுச், சமூகக் காரணிகளை நீங்கள் ஆராய்ந்து எழுதியிருந்தது பல திசைகளில் சிந்தனைகளை கிளர்த்தியது.  

ஆனால் பல பெண் எழுத்தாளர்கள் அங்கிருந்து தொடங்கி, மொத்த சமூகத்துக்கும் ஒழுக்கங்களை கற்பிக்கும் இடத்தில் தங்களை வைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதையும் காண்கிறேன். அல்லது அவர்களுடைய செயல்பாடுகளால் அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். ஆங்கிலத்தில் ஹாரியெட் பீச்சர் ஸ்டோவ் போல. மலையாலத்தில் நீங்கள் குறிப்பிடும் சுகதகுமாரி போல. கன்னடத்தில் சரஸ்வதி பாய் ராஜ்வடே என்ற ஆரம்பக்கால பெண் எழுத்தாளர் உடுப்பி மடத்தின் தீர்த்தர்களை விமர்சித்து, அவர்கள் தங்கள் நடத்தையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி கதை எழுதியிருக்கிறார். 

இங்கே ‘ஒழுக்கம்’ என்பதை அதன் சாதாரண அர்த்தமான ‘morality’ என்பதைத்தாண்டி, ‘சமூகத்தில் தனிநபர் ஒழுகவேண்டியது எப்படி, சமூகம் தனிநபரை நோக்கி ஒழுகவேண்டியது எப்படி’ என்ற பொது அர்த்தம் நோக்கிக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன். சிவசங்கரி போன்றவர்கள் எழுதிய அன்றாட ஒழுக்க புகுட்டல்களிலிருந்து, அம்பை போன்றவர்கள் எழுதிய பெண்ணிய வலியுறுத்தல்களிலிருந்து, சுகதகுமாரி போன்றவர்கள் எழுதிய இலட்சியவாத அறிவுறுத்தல்கள் வரை இந்த நிறமாலையில் வெவ்வேறு வண்ணங்களை காண முடிகிறது.  

பெண் எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் ஏன் இந்த நூறு வருட வரலாற்றில் ‘வெறும்’ எழுத்தாளர்களை விட ‘எழுத்தாளர் – சமூகசெயல்பாட்டாளர்’களே அதிகமாகக் காணப்படுகிறார்கள்? இது வரலாற்றின் பரிணாமமாக விளைந்த ஒரு நிகழ்வு மட்டும் தானா? இல்லை அதை விட ஆழமான காரணங்கள் ஏதும் உள்ளதா? இந்தக் கேள்வியை பரிசீலிக்கிறேன்.

ஒழுக்கம் வலியுறுத்தும் எழுத்து தமிழுக்குப் புதியது அல்ல. குறளை அதன் பறந்துபட்ட அர்த்தத்தில் ஓர் ஒழுக்கநூலாக வாசிக்கலாம். அவை ஒரு உலகுநோக்கின், மதிப்பீட்டின் பின்னணியில் விரிவாக தொகுக்கப்பட்டவை. ஆனால் அவ்வையாரின் தனிப்பாடல்களில் வெளிப்படும் இந்தச் ‘செயல்பாட்டு’ அம்சமும், விமர்சனமும், வேறுவகையாக உள்ளது.

“அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ- வற்றன்
மரமனையானுக்கு இந்த மானை வகுத்த
பிரமனை யான் காணப்பெறின்”

இந்த ஆவேசத்தின் முகங்களென இந்நூறுவருடத்தில் வெளிப்பட்ட பெண் எழுத்தாளர்களை காணலாம் அல்லவா?

ஆகவே தான் இவர்களை மொத்தமாக ‘முற்போக்கு’ என்றோ, ஒரு கருத்தியல் சார்ந்து செயல்பட்டவர்கள் என்றோ வகுத்திவிட முடியாது என்று தான் நினைக்கிறேன். ஒன்று, இந்த குரலுக்கு ஓர் ஆழ்தொடர்ச்சி இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. மேலும், நீங்கள் சொல்வது போல், பொருட்படுத்தத் தக்க எழுத்தாளர்களை தனித்தனியாகத் தான் ஆராய வேண்டியுள்ளது. அவர்களை ‘அடுக்களை எழுத்தாளர்கள்’ என்றோ ‘பெண்ணிய எழுத்தாளர்கள்’ என்று வகுப்பது எளிமைப்படுத்தும் பிழை என்ற எண்ணமே இன்று உள்ளது. 

இது முதல் சிந்தனைத் திரி. 

*

இரண்டாவது திரி நீங்கள் குறிப்பிடும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்குகிறது. இந்தியச் சூழலில் பெண்கள் பொதுவெளிக்கு வந்து பேசவும் எழுதவும் முற்பட்டது 1900-ங்களின் தொடக்கத்தில்தான் என்ற உங்கள் அவதானிப்பிலிருந்து. 

இந்த யுகமாற்றத்தின் தருணம் என் உள்ளத்துக்கு மிக அணுக்கமான ஒன்று. நினைக்க நினைக்கக் கிளர்ச்சியூட்டக்கூடியது. ஒரு மாபெரும் வெடிப்பின் கணம் அது. ஒரு வகையில் ஒரு பிக் பாங்க். இந்தியப் பெண்கள் வீட்டை விட்டுக் கிளம்பி வெளிக் உலகுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்த முதற்காலம். மானுட வரலாற்றில் இதற்கு முன் எந்த யுகத்திலாவது இந்த அளவுக்கு பெண்கள் புற உலகை அறிந்திருக்கிறார்களா? 

சென்ற யுகங்களில் மனிதர்கள் அனைவருக்கும் எல்லைக்குட்பட்ட வாழ்க்கை தான், உண்மை. ஆனால் பெண்களின் வாழ்க்கை உடலை, உணவைத் தாண்டி வெளியேற வழியே இல்லாமல் இருந்தது. அந்த நிலை தீர்ந்தது. இங்கே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நான் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தியம் இல்லை. அதைச் சாத்தியமாக்கியது வீட்டிலிருந்து வெளி நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த பெண் முன்னோடிகள் தான். அந்த முன்னோடிகள் வீட்டிலிருந்து வெளியில் அடி எடுத்து வைத்த நிகழ்வு சமீப வரலாற்றின் முக்கியமான படிமங்களில் ஒன்று என்ற எண்ணம் எனக்கு உள்ளது. 

தாகூரின் புகழ்பெற்ற நாவல் ஒன்றின் பெயர் ‘வீடும் வெளியும்’. நவீன யுகத்தின் ஆதாரமான மோதலை இந்த நாவல் ஒரு படிமம் போல் சித்தரித்தது. கணவன் நிகிலுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் மனைவி விமலாவின் வாழ்க்கைக்குள் நிகிலின் நண்பன் சந்தீப் நுழைகிறான். நிகில், சந்தீப், இருவருமே சுதந்திரப்போராட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள். நிகில் மிதவாதி, மரபுவாதி. மாறாக சந்தீப் தீவிரமான, நேரடியான ஆக்கிரமிப்புகளில் நம்பிக்கை உள்ளவன். அவன் தீவிரத்துக்கு ஆட்பட்டு விமலா மெல்ல மெல்ல ‘வீட்டின்’ பாதுகாப்பிலிருந்து ‘வெளி’க்குச் செல்லத் தொடங்குகிறாள். சந்தீப்பின் செயல்பாடுகளுக்காக தன் வீட்டிலிருந்தே பணம் திருடிக் கொடுக்கிறாள். அந்தச் செயலின் கள்ளத்தனம் அவளை மிகுந்த குற்றவுணர்வுக்கும் அசௌகரியத்துக்கும் ஆளாக்குகிறது. வீட்டிலிருந்து விலகிவிட்டது போலத் தோன்றுகிரது. வெளியிலும் தனக்கு இடம் இல்லை என்று தெரிகிறது. இந்தியா நவீன யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் அதில் உண்டான குழப்பங்களை உணர்த்தும் வகையில் இந்த நாவலின் கதையை தாகூர் உத்தேசித்தார் என்று சொல்லப்படுவதுண்டு. 

ஆனால் இது இந்தியப்பெண்ணின் கதையும் கூட அல்லவா? நவீன யுகத்தில் வெளியுலகம் பெண்ணை அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த அழைப்பு தன் பொறையின் இழப்பு என்ற உணர்வும் அவளை விட்டு அகலாது இருந்தது. இந்தியாவை பொறுத்தவரையிலாவது, இந்த நூறாண்டு வரலாற்றில் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட முதன்மையான சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது. பெண் எழுத்தில் ஒரு பெரும் பகுதியை, அது இந்த வீடு x வெளி முரணை எப்படிக் கையாண்டது என்பதைக் கொண்டு வகுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு தூரம் வெளியே செல்லலாம்? என்பதே ஆதாரக் கேள்வியாக இருந்தது. இந்த விவாதத்தில் வீடு, வெளி, இரண்டையும் நேரடியாக வீடும் வெளியும் என்று பொருள் எடுக்காமல் அதன் பறந்துபட்ட அர்த்தத்தில் அகம், புறம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வெளிக்குள், அல்லது புறத்துக்குள் நுழைந்த  ஆரம்பகால பெண் எழுத்தாளர்கள் பெண் தன்னை புறத்துக்குத் தக்கவாறு எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ந்து வெளிப்படுத்தினார்கள். மெல்ல மெல்ல, இரண்டாம் கட்டமாக, புறம் தன்னை பெண்ணுக்கு ஏற்றவாறு எவ்வாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள். 

இந்த இரண்டாம் நிலை மாற்றம் தான் இந்த யுகத்தின் தனித்தன்மை என்று நினைக்கிறேன். நம் மரபில் எழுதிய பெண் கவிஞர்களோ, காப்பிய கதாநாயகிகளோ, ‘புறத்துக்கு’ வந்த ‘அகப்படிமங்கள்’ தான். அவர்கள் தங்களுக்கேற்ப ‘புறம்’ மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கவில்லை. காரைக்கால் அம்மைய்யார் அகத்தை விட்டு புறப்பட்ட போது தனக்கான இடத்தைச் சுடலையில் அமைத்துக்கொண்டார்கள். மணிமேகலையின் இடம் மகாயான பௌத்தத்தின் நகர்வுகள் வழியாக வெளிப்பாடு கண்டது. இவர்களை அசாதாரண தனி மனிதர்கள் என்று கொள்ளலாம். ஆனால் இன்று பெண்கள் ஒரு வகுப்பாக புறத்தின் பகுதியாகவும், புறத்தை தங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளவர்களாகவும் மாறிவிட்டனர். இந்த கொடுத்தல்வாங்கலையே தங்கள் எழுத்து மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

சமூக அளவில் மட்டும் அல்ல, உளவியல் ரீதியாகவும் புறத்தில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்ற வகையில் எழுதியுள்ளார்கள். தமிழில் சூடாமணி மற்றும் அம்பையின் கதைகள் நல்ல உதாரணம். சூடாமணியின் ‘செந்திரு ஆகிறாள்’ என்ற கதையோ, ‘நான்காவது ஆசிரமம்’ என்ற கதையோ, பெண்ணின் அகம் அடைய விரும்பும் நிலைகளைப் பற்றிப் பேசுபவை. ஆனால் மறைமுகமாக அதற்கு புறம் எவ்வாறு உருமாற வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துபவை. 

ஒவ்வொரு தலைமுறையும், வீட்டை மேலும் சற்று துறந்து, வெளிக்குள் மேலும் சற்று சென்றார்கள். ஒவ்வொரு தலைமுறையும் வெளியை மேலும் சற்று வீடு போல் மாற்ற முயற்சித்தார்கள்.

இன்று பெண்ணுக்கு வெளியின் பல பகுதிகள் வீடு அளவுக்கே பாதுகாப்பாக உள்ளன. வீட்டுக்குள் வெளி வரத் தொடங்கிவிட்டது. வீடும் வெளியும் அத்தனை பிரிந்த நிலைகளாக இல்லை. இன்று பெண்ணெழுத்தில் வீடும் வெளியும் என்னவாக பொருள்படுகின்றன என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. இந்த கோணத்தில் இன்றைய எழுத்தை ஒட்டி ஒரு வாசிப்பை நிகழ்த்தலாம்.

*

இந்த விஷயங்களுக்கும் படைப்பிலக்கியத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். பெண்களை சமூகத்துக்கேற்ப தயர் படுத்துவதும் சரி, சமூகத்தை பெண்களுக்கு ஏற்ப மாற்றி வடிப்பதைப் பற்றியும் சரி – இந்த விஷயங்கள் தமிழைப் பொறுத்தவரையிலாவது மிகச் சாதாரணமான வெகுஜன எழுத்தின் பகுதியாகத் தான் எழுதப்பட்டுள்ளது. 

இதன் உள்ளோட்டங்களை ஆராய்ந்த படைப்புகள் தமிழில் வெகு குறைவு – அதை எழுதியவர்களும் ஆண் எழுத்தாளர்களே. அதாவது, பெண்ணுக்குத், தன் ஆழ்மனதில், வீடும் வெளியும் என்னவென்று பொருள்படுகிறது? ஏன் வெளியை அடைய நினைக்கிறாள்? வெளியில் வீட்டின் எந்த அம்சத்தை விரும்புகிறாள்? வீடே அற்ற வெளியை பெண்ணால் எதிர்கொள்ள முடியுமா? வீடு, வெளி – இரண்டுக்குமான அல்டிமேட் மீனிங் என்பது என்ன? – இந்தக் கேள்விகளை ஒட்டி ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலையோ, உங்கள் ‘கன்யாகுமரி’ நாவலையோ வாசிக்கலாம். 

ஆனால் இந்த நகர்வின் வரலாறே ஒரு படைப்பிலக்கியவாதிக்கு நல்ல கச்சா பொருள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு யுகத்துப் பெண்களின் மனதுக்குள் புகுந்து பார்க்க ஒரு நல்ல வாசலாக அமைகிறது. 

நவீனம் தோன்றியபோது ஒவ்வொரு இனக்குழுவும், மதக்குழுவும் தங்கள் இடத்துக்காகப் போறாடினர். புதிதாக உருவாகி வந்த நவீன புறவுலகில் தங்களுக்கான இடத்தை பெயர்த்து எடுத்துக் கொண்டனர். பெண்கள் அவ்வாறு செய்யவில்லை. ‘பெண்கள் கட்சி’ என்று ஒன்று இல்லை. தத்தம் ஆண்களின் உலகின் பகுதியாகவே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். நூறு வருடங்களில் இந்த நிலை மாறவில்லை. ‘பெண் விடுதலை’ என்பதே இங்கே அளவுக்குட்பட்ட ஒன்றாகத்தான் வகுக்கப்பட்டுள்ளது – அந்த அளவு என்ன, எதுவரை, என்பது தான் ஒவ்வொரு தலைமுறையும் விவாதிப்பது. அப்படியென்றால் பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திர நாட்டம் உள்ளதா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

ஒருவேளை இன்றைக்கு எழுதும் ஒரு பெண் எழுத்தாளர் – அல்லது நாளைக்கு எழுதப்போகிறவர் – இந்தக் கேள்விகளை நேர்மையாக எழுப்பி ஆராய முடியும். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அதற்கு முன்னால் அவர் வீடு, வெளி – இரண்டிலிருந்துமே அந்தரங்கமாக விலக்கம்கொண்டிருக்க வேண்டும். அந்த விலக்கத்திலிருந்து தான் நல்ல இலக்கியம் உருவாகும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

சுசித்ரா

  •  

விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்

புனைவு வனம் எழுத்தாளர் கணேஷ் ராம் உடன் ‘தெப்பம்’ குறுநாவல் குறித்த உரையாடல்: சொல்வனம்.காம்: ஆசிரியரை சந்திப்போம் சொல்வனம்.காம்: புனைவு வனம்: எழுத்தாளர் ஷங்கர் பிரதாப் உடன் சந்திப்பு: ‘உயிர்வளி’ குறித்த உரையாடல் எழுத்தாளர் பாலாஜி ராஜு – Writer Balaji Raju Short Stories: Review and "விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்"
  •