இந்தியக் கவிதையியல் - 3: அலங்காரக் கொள்கையும் ரீதிக்கொள்கையும், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா
பகுதி I: இலக்கண வளர்ச்சி
அத்யாயம் 3: அலங்காரக் கொள்கையும் ரீதிக்கொள்கையும்
பாரதீய நாட்டிய சாத்திரத்தில் நடனத்தின் பகுதியாகவே கவிதை இலக்கண அடிப்படைகள் வெளிப்பட்டன. அவை தனித்தன்மையான இடத்தைப் பெறவே இல்லை. இவ்வாறிருக்கும் நிலையில் தற்போது கிடைக்கும் அணியிலக்கண நூல்களில் பாமகரின் காவ்யலங்காரமும் தண்டியின் காவ்யாதர்சமும் தான் பழைமையானவை. பரதருக்கும், பாமகர், தண்டி ஆகிய இருவருக்குமிடையே நான்கைந்து நூற்றாண்டுகள் கடந்து சென்றுவிட்டன. இந்தக் காலகட்டத்தில் இலக்கணம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என உறுதியாக அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனாலும் ஆராய்ச்சி நடைபெற்றிருக்கவும், நூல்கள் தோன்றியிருக்கவும் வேண்டுமென்று கூறுவதற்கு கவிஞர்கள் இலக்கணத்தைக் கருத்தில் கொண்டு படைப்புகளை அவ்வப்போது உருவாக்கியிருப்பதே சான்று. கிறித்துயுக ஆரம்பத்தில் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திப் பகுதிகளை எழுதியவர்கள் சொல்லணிகளையும் பொருளணிகளையும் திட்டவட்டமாக பயன்படுத்தியிருப்பது தெரியவருகிறது. ருத்ரதாமனின் கிர்நார் மெய்க்கீர்த்தியில் [கி.பி.150] வெளிப்படை [ஸ்புட], இனிமை[மதுரம்] உள்ளிட்ட குணப் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. *1.