Reading view

பிரபலங்களின் உளவியல் #2 – எர்னஸ்ட் ஹெமிங்வே

Ernest Hemingway

ஜூலை 2, 1961-ம் ஆண்டு.

அன்று வழக்கத்திற்கு மாறாக விடியும் முன்பே விழித்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.

மனைவி மேரியை ஒருமுறை பரிவுடன் பார்த்துவிட்டு, வீட்டின் அடித்தளத்தை நோக்கி சோர்வுடன் நடந்துசென்றார். அங்குதான் வேட்டையாடுவதற்காக அவர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவருக்கு மிகவும் பிடித்தமான கைத்துப்பாக்கி ஒன்று, முதல் வரிசையில் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது. நேராக அதனருகில் சென்றவர், இறுதியாக ஒருமுறை அதனைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

இந்நாள் வரை பறவைகளையும் விலங்குகளையும் மட்டுமே குறி பார்த்த அது, முதன் முறையாக முதலாளியின் தலையைக் குறி பார்த்தது.

சிறிது நேரத்தில் அங்கே கேட்ட பெருஞ்சத்தம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியை முற்றிலுமாக உருக்குலையச் செய்தது. முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, சத்தம் கேட்டு அவசர அவசரமாகக் கீழே வந்து பார்த்தபோது மூளைச் சிதறி பிணமாகக் கிடந்தார் உலகின் ஆகச் சிறந்த எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆம்! அவரது தந்தை கிளாரன்ஸ்போலவே தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் ஹெமிங்வே!

நோபல் பரிசு பெற்ற, உலகின் முக்கிய எழுத்தாளராக வலம் வந்த ஹெமிங்வே, தற்கொலை செய்துகொண்டது ஏன்? அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள் என்னென்ன?

பார்ப்போம்…

0

மூளை மடிப்புகளைப் போலவே ஹெமிங்வேயின் ஆரம்பகால வாழ்க்கை, பல சிக்கல்களைக் கொண்டது. அதற்குக் காரணம், அவருடைய பெற்றோர்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?

ஹெமிங்வே 1899-ம் ஆண்டு, அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் ஜூலை 21-ல் பிறந்தார். அவருடைய தந்தை, கிளாரன்ஸ். தாய், கிரேஸ்.

கிளாரன்ஸ் ஒரு மருத்துவர். மிகவும் கண்டிப்பு மிக்க தந்தையாகவே ஹெமிங்வேயிடம் இருந்திருக்கிறார். சிறு தவறு செய்தால்கூட அடி விழும். பொறுமை, கருணை, இரக்கம் போன்ற வார்த்தைகளுக்கு கிளாரன்ஸின் அகராதியில் இடமில்லை. அதனால், தந்தை கிளாரன்ஸைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார் ஹெமிங்வே. தந்தை மீதிருந்த பயம், விரைவிலேயே வெறுப்பாக மாறியது.

ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘ஹெமிங்வேவிற்கு தன்னுடைய தந்தையைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருக்கிறது’ என்கிறார்.

கிளாரன்ஸுக்கு மன அழுத்த நோய் இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு அது தீவிரமடைய, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனார் அவர்.

தந்தையின் தற்கொலை, ஹெமிங்வேயை நிறையவே பாதித்திருக்கிறது. சிறுவயதில் தனக்கு இருந்த தந்தையின் மீதான வெறுப்பு, அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு குற்றவுணர்ச்சியாக உருமாறியது.

‘தந்தையின் தற்கொலைக்குக் காரணம் நீ தான்…’ எனத் தாயான கிரேஸை வெளிப்படையாகவே பழித்தார் ஹெமிங்வே. இது ஒருவகையில், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பாதுகாப்புக் கவசமே.

புகழ்பெற்ற அவருடைய சிறுகதைகள் பலவற்றில், தற்கொலை செய்துகொள்ளும் தந்தை கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அவருடைய முக்கியமான நாவலான, For Whom The Bell Tolls (யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது)-ல் கூட, ராபர்ட்டின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.

தாய் கிரேஸுடனும் அவருக்கு எப்போதுமே இணக்கம் இருந்ததில்லை. ஹெமிங்வேயின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமாகிய ஜான் டோஸ் பாஸ்சோஸ், ஹெமிங்வேக்கும் அவர் தாய்க்கும் இருந்த உறவை இப்படிச் சொல்லியிருக்கிறார்.

‘தன்னுடைய தாயை உண்மையில் வெறுத்த, நான் அறிந்த ஒரே மனிதன் என்றால் அது ஹெமிங்வே மட்டும்தான்…’

தந்தை கண்டிப்பானவர், அதனால் பிடிக்கவில்லை சரி. தாயை ஏன் வெறுக்க வேண்டும்? அதற்குப் பல காரணங்களை முன் வைக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கிரேஸ் எப்போதும் ஹெமிங்வேயைச் சுதந்திரமாக விட்டது இல்லை. இயல்பிலேயே ஆதிக்க குணம் கொண்டவர் கிரேஸ். அவர் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும்.

அக்காலத்தில் விக்டோரியா நாட்டின் வழக்கப்படி, ஆண் சிறுவர்களுக்குப் பெண்களைப்போல உடையணிவது வழக்கம். ஹெமிங்வே அதை வெறுத்தார். ஆனால்‌ கிரேஸ், ஹெமிங்வேவைக் கட்டாயப்படுத்தி அப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்திருக்கிறார். மேலும் அவர் அணிவித்த ஆடைகளோ‌ மிகுந்த பெண்மைத்தன்மை கொண்டதாக இருந்திருக்கின்றன. இதுபற்றி தாயிடம் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஹெமிங்வேக்கு நன்கு தெரியும். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அமைதியாகி விடுவார் ஹெமிங்வே.

ஐந்து வயது முதல், பதின்ம வயது தொடக்கம் வரையிலான காலகட்டம்தான் பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். அப்போதுதான் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒருநிலைப்படும். இந்த நேரத்தில்தான் ஏகப்பட்ட உளவியல் சார்ந்த குழப்பங்கள் அவர்களுக்குள் உண்டாகும். அதைத் தீர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்களிடம் இருக்கிறது.

ஆனால், ஹெமிங்வேக்கு இந்தக் காலகட்டம்தான் பிரச்னையாகவே அமைந்தது. பெற்றோர்கள் மூலம் அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாமே, பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தன.

எனில், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பிரச்னைகள்தான் ஹெமிங்வேயின் தற்கொலைக்குக் காரணமா?

அதுவும் ஒரு காரணமே தவிர, அதுதான் காரணம் என்றில்லை.

0

ஹெமிங்வேயின் தந்தை, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா? அவர் மட்டுமல்ல, ஹெமிங்வேயின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். (ஹெமிங்வேயையும் அவரது தந்தையையும் சேர்த்து).

மற்ற மூன்று பேருடைய விவரங்கள்:

1. லெய்செஸ்டர்: ஹெமிங்வேயின் இளைய சகோதரர். இவரும் ஓர் எழுத்தாளரே. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 67 வயதில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்துபோனார்

2. உர்சுலா: ஹெமிங்வேயின் சகோதரிகளுள் ஒருவர்‌. புற்றுநோயாளியான இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 64 வயதில் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறந்துபோனார்.

3. மார்காக்ஸ்: ஹெமிங்வேயின் பேத்தி. இவர் ஒரு நடிகை. தன்னுடைய 42 வயதில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் – மன அழுத்தம். தேர்வு செய்த வழி – அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டது.

இப்படி ஹெமிங்வேயின் குடும்ப மரபணுக்களிலேயே வாடகைக்குக் குடியிருந்திருக்கிறது ‘தற்கொலை’. ஆக, ஹெமிங்வேயின் தற்கொலைக்கு மரபியல் சார்ந்த விஷயங்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

சரி, ஹெமிங்வேக்கு இருந்த நேரடி உளவியல் பிரச்னைகளைப் பற்றி பார்ப்போம்.

0

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மார்ட்டின் எனும் மனநல மருத்துவர், ‘Ernest Hemingway: A Psychological Autopsy of a Suicide’ என்ற தலைப்பில் நீண்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், ஹெமிங்வேக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன.

ஹெமிங்வே, பைபோலார் டிசார்டர் (Bipolar Disorder) எனப்படும் மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார் மார்டின்.

இந்நோய் உள்ளவர்கள், சில சமயம் மன எழுச்சியாலும் சில சமயம் மனச் சோர்வாலும் பாதிக்கப்படுவர்.

எழுச்சியின்போது எல்லா விஷயங்களையும் அதிவேகமாக அவர்களால் செய்ய முடியும். உலகம் வண்ணமயமாகத் தெரியும். எந்நேரமும் அதீத ஆற்றலுடன் சோர்வே அடையாமல் வேலை செய்வர். தூக்கத்தைத் தூக்கித் தூர வைத்துவிடுவர். ரிஸ்க் எடுப்பதெல்லாம் இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று. இதற்கு அப்படியே நேர் எதிரானது மனச் சோர்வின் நிலை.

ஹெமிங்வே இரண்டு வகையாலும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

மன எழுச்சியின்போது, நேரம் காலம் பார்க்காமல் எழுதித் தள்ளியிருக்கிறார். ஹெமிங்வேயின் முதல் நாவலான ‘The Sun Also Rises’, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எழுதப்பட்டதுதான். 1924-ல் மட்டும் ஏழு சிறுகதைகளை அடுத்தடுத்து எழுதியிருக்கிறார் ஹெமிங்வே.

ஆனால், மனச் சோர்வின்போது அவரால் அப்படி இயங்க முடியவில்லை. தற்கொலை எண்ணம் மட்டுமே அவருடைய மூளை முழுக்கப் பரவியிருந்தது.

‘நான் மாபெரும் ரத்தம் தோய்ந்த வெறுமையையும் ஒன்றுமில்லாததையும் உணர்கிறேன். இனி எப்போதும் என்னால் எழுத முடியாது, சண்டையிட முடியாது, சாப்பிட முடியாது. இது என் மரணத்திற்கான ஆரம்பம்…’

மனச் சோர்வில் இருந்தபோது தன்னுடைய நண்பர் பாஸ்சோஸிடம், ஹெமிங்வே சொன்ன வார்த்தைகள் இவை.

இவருடைய மனநோய் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள் சிலர், ‘அவர் சில நேரம் நன்றாகப் பேசுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். சில நேரங்களில் பேசுவதே இல்லை. திடீரெனச் சிரிப்பார். திடீரென வெடித்து அழுவார். அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள்‌, அவரைப் பாடாய் படுத்தின…’ என்கின்றனர்.

இதனாலேயே ஹெமிங்வேயால் யாருடனும் நீண்ட நாட்களுக்கு நட்பு பாராட்ட முடிந்ததில்லை. திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வியுற்றார். மேரி, அவருடைய நான்காவது மனைவி.

மேலும், ஹெமிங்வேக்கு மற்ற எல்லா மேற்கத்திய எழுத்தாளர்கள் போலவும் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் இருந்தது. இது அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியது.

ஹெமிங்வேவுக்கு எத்தனை முறை விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி, ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு மரணத்துடன் ‘கபடி’ விளையாடியிருக்கிறார். மனைவியுடனான ஆப்பிரிக்கப் பயணத்தின்போது அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி, அதில் அவர் உயிர் பிழைத்தது அப்போதைய முன்னணிப் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக வெளியானது.

காளைச் சண்டையிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபாடு கொண்ட ஹெமிங்வே, உடல் முழுக்கப் பல வீரத் தழும்புகளைப் பரிசாக வாங்கியுள்ளார். முக்கியமாகத் தலைப்பகுதியில் (ஹெமிங்வேயின் நெற்றியில் மினி இட்லி ஸைசில் இருக்கும் தழும்பைத் தேடிப் பார்க்கவும்).

இப்படி மாதத்திற்கு ஒருமுறை தவணை முறையில் தலையில் அடிபட்டதால், அவருடைய நினைவாற்றலில் சிக்கல் முளைத்தது. இதனால் எழுதுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார் ஹெமிங்வே.

தற்கொலைக்குச் சில மாதங்கள் முன்புதான், அமெரிக்காவின் புகழ்பெற்ற மயோ க்ளினிக் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹெமிங்வே. ஆனால், எவ்வளவு நாட்கள்தான் மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

தற்கொலை ஒரு நிழலைப்போல வாழ்நாள் முழுவதும் ஹெமிங்வேயைப் பின்தொடர்ந்திருக்கிறது. காலம் முழுக்க அவருடன் கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட அது, இறுதியாக அன்றைய விடியற்காலைப் பொழுதில் வென்றுவிட்டது.

0

சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள், குடும்பத்தில் பிணைந்திருந்த தற்கொலைகள், குடிப்பழக்கம், தலையில் பலமுறை அடிபட்டது என இவையெல்லாம் சேர்ந்தே ஹெமிங்வேயின் உயிரைக் குடித்திருந்தன.

இறுதி வரையில் ஹெமிங்வேயின் மனைவி மேரி, ‘ஹெமிங்வே தற்கொலை செய்து கொள்ளவில்லை. துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது நடந்த விபத்தில்தான் இறந்தார்…’ என்றே நம்பி வந்தார்.

ஆனால் ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்தால், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

‘The Old Man and The Sea (கடலும் கிழவனும்)’ போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப்போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது.

ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் ரெனால்ட்ஸ், ‘ஹெமிங்வே ஆழமான கிணறு போன்றவர். அதில் குதித்துவிட்டால் மேலே ஏறி வருவது சிரமம்’ என்கிறார்.

உண்மை தான்.

(தொடரும்)

The post பிரபலங்களின் உளவியல் #2 – எர்னஸ்ட் ஹெமிங்வே appeared first on கிழக்கு டுடே.

  •  

பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின்

கலை என்பது மனதின் வெளிப்பாடு. ஒருவரின் உள்ளார்ந்த உணர்வுகளை, அனுபவங்களை, சிந்தனைகளைப் படைப்பாற்றலாக மாற்றும் சக்தி கலைக்கே இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பலர், தங்களது நேர்த்தியான படைப்புகள் மூலம் இன்றும் நினைவில் நிற்கின்றனர். ஆனால் அந்தப் படைப்புகளின் பின்புலத்தில் பலரும் எதிர்கொண்டுள்ள தனித்துவமான உண்மை ஒன்று இருக்கிறது – அது உளவியல் தொடர்பான சிக்கல்கள். மன அழுத்தம், மனச்சிதைவு, பதற்ற நோய், இருதுருவ நோய் போன்ற பலவிதமான உளவியல் பிரச்னைகள் அவர்களின் வாழ்விலும் கலைப்பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தொடர், அக்கலைஞர்களின் வாழ்வையும், அவர்கள் சந்தித்த உளவியல் சார்ந்த பிரச்னைகளையும், அந்தப் பிரச்னை அவர்களது கலை உருவாக்கத்தில் எந்த வகையில் பிரதிபலித்தன என்பது பற்றியும் ஆராயப்போகிறது.

பிரபலங்களின் வாழ்க்கை வெளியுலகிற்கு ஜொலிப்பாக, பிரமிப்பாக, ஏக்கமூட்டும் ஒன்றாகத் தெரிந்தாலும் அந்த மாய ஒளிக்குமிழிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரிந்தால் அதிர்ச்சியே மிஞ்சும். திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் என உலகம் மதிக்கும் பல பிரபலங்கள் தீவிர உளவியல் பிரச்னைகளுடன் போராடியவர்களே.

சிலர் அந்தப் பாதிப்புகளைத் திறமையாகச் சமாளித்தும், சிலர் அதனால் தங்களது வாழ்க்கையை‌ முழுமையாகத் தொலைத்தும் இருக்கிறார்கள்.

வின்சென்ட் வான் கோ, எர்னஸ்ட் ஹெமிங்வே, எட்வர்ட் முங்க், வேர்ஜினியா வூல்ஃப் போன்ற பிரபலங்களின் வாழ்க்கை இதற்கு உதாரணம்.

உண்மையில், உளவியல் சிக்கல்கள் என்பது யாருக்கும் வரக்கூடியதே. அது சாதாரண நபர்களுக்கும் பிரபலங்களுக்கும் வேறுபாடில்லாமல் தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் கலைஞர்களுக்கு, உணர்வுகளை வெளிக்கொணர்வதற்கான செம்மையான திறமை இருப்பதால், அவர்களுடைய மனநிலை கலைப்படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. உளவியல் சிக்கல்கள் அவர்களின் படைப்புகளில் உயிர்பெற்று, உலகத்தைக் கவரும் படைப்புகளாக மாறுகிறது.

புதியதுபோலத் தோன்றினாலும், ‘கலையும் உளவியலும்’ ஓர் பழைய தேடல். நெடுங்காலமாகவே இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் தமிழில் இதுபோன்ற ஒரு முயற்சி புதிதாக இருக்கலாம்.

இத்தொடரில் வரப்போகும் பிரபலங்கள் பற்றிய உளவியல் பிரச்னைகள், பல்வேறு புத்தகங்களிலிருந்தும், பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்தும் பெறப்பட்டவை. ஆதாரப்பூர்வமான தகவல்கள் கொண்டு எழுதப்பட்டவை. எங்கேயும் மிகைப்படுத்துதலுக்கு இடமில்லை. என்னுடைய ஒரே நோக்கம், இருக்கும் தகவல்களை சுவாரஸ்யமாகத் தருவது மட்டுமே!

அதேநேரம், ஒவ்வொரு பிரபலங்களையும் தேடிப்பிடித்து அவர்களுக்கு இருந்த உளவியல் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இத்தொடரின் நோக்கம் அல்ல.

எனில் இத்தொடரின் நோக்கம்தான் என்ன?

மனநலம், கலைக்கிடையிலான ஆழமான தொடர்பை இன்னும் சற்று விரிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே இத்தொடரின் நோக்கம்.

ஆரம்பிக்கும் முன்…

‘கலை’, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி என்றால், ‘உளவியல்’ அதன் உள் அடுக்குகளை ஆராயும் அறிவியல்!

இதைப் புரிந்துகொண்டாலே போதும், இந்தப் பயணத்தில் நீங்களும் எளிதில் என்னுடன் ஒட்டிக் கொள்ளலாம்.

இனி, பிரபலங்களின் உளவியலுக்குள்…

0

இவ்வளவு பெரிய கப்பலா? இதில் எப்படிப் பயணம் செய்யப் போகிறேன்?‌ அதுவும் இரண்டு ஆண்டுகள்! அடிக்கடி வரும் தலைச்சுற்றலை என்ன செய்வது? அதைக்கூடச் சமாளித்து விடலாம். அந்த வயிற்றுவலியை நினைத்தால்தான்…!

இல்லை. நான் கப்பலேறப் போவதில்லை.

நான் என்ன ஏறுவது? அவர்களே என்னைத் தகுதி நீக்கம் செய்து விடுவார்கள். என்னைப்போன்ற ஒரு நோஞ்சானைக் கப்பலில் சேர்த்துக் கொள்வார்களா என்ன?

ஒருவேளை சேர்த்துக்கொண்டால்?

சார்லஸ் டார்வினுக்கு பதற்றம் அதிகமானது. இதயம் படபடத்தது. உடலெங்கும் வியர்வை முத்துக்கள் முளைத்தன.

ஆனால் இது ஓர் அரிய வாய்ப்பு‌! எல்லோருக்கும் கிடைத்து விடாதல்லவா?

என்ன செய்யலாம்?

குழப்பமான இந்த மனநிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் துடித்தார் டார்வின்.

நண்பர்கள் பலரிடமும் இதைப்பற்றிப் பேசினார். நீண்ட யோசனைக்குப் பிறகே தீர்க்கமான அந்த முடிவை எடுத்தார்.

‘புறப்படலாம்…’

1831. டிசம்பர் 27.

ஹெச்.எம்.எஸ். பீகிள் எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல், இங்கிலாந்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கப் போகும் பயணம் இதுவென்பது.

ஆம். பீகிள் அனுபவங்களைக் கொண்டுதான், ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘உயிரினங்களின் தோற்றம்’ புத்தகத்தை எழுதினார் டார்வின்.

இரண்டு ஆண்டுகள் என ஆரம்பித்து, மொத்தம் ஐந்து ஆண்டுகள் (1831-1836) நீடித்தது பீகிள் பயணம்.

ஆனால் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வினால் இத்தனை ஆண்டுகள் எப்படிக் கடலில் பயணம் செய்ய முடிந்தது? உண்மையில் டார்வினுக்குப் பதற்ற நோய் இருந்ததா?

விடை தெரிய டார்வினின் இளமைக் காலம் நோக்கிப் பயணிக்க வேண்டும்.

0

சார்லஸ் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரூஸ்பரி எனும் ஊரில் பிறந்தார். டார்வினின் தந்தை, ஒரு மருத்துவர்‌.

தந்தையின் தந்தையும் மருத்துவரே. வசதியான குடும்பத்தில் பிறந்த டார்வின், ஒன்பது வயதில் தாயைப் பறிகொடுக்கிறார். எனவே அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர்கள், உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே.

படிப்பில் சுமார் ரகம். விளையாட்டில் பூஜ்ஜியம். இசை? இரைச்சல். ஓவியமா? அப்படியென்றால்? இப்படித்தான் பள்ளிக்காலம் ஓடியது.

தந்தையின் ஆசைப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்கே ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைப்பார்த்த டார்வின், ‘ரத்தம் ரத்தம்…’ என அலறி அடித்துக்கொண்டே ஓடி விட்டார். அத்தோடு டார்வினின் மருத்துவப் படிப்புக்கு சுபம் போடப்பட்டது. ‘எனக்கு மனுசங்க ரத்தம் பாத்தாதான் பயம். மத்தபடி ஐ லவ் ஹண்ட்டிங்…’ எனக் கண்ணில் படும் விலங்குகளை எல்லாம் வேட்டையாடினார் டார்வின்.

வேட்டையாடிய விலங்குகளை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பதப்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

படிக்கும் வயதில் இப்படியெல்லாம் செய்தால் யார் தான் அவரை மதிப்பார்கள்? குடும்பத்தின் மத்தியில் ‘உதவாக்கரை’ என்ற இமேஜே டார்வினுக்கு இருந்தது.

ஆனால் உலகின் தலைசிறந்த இயற்கை ஆர்வலராகக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக் கொண்டிருந்தார் டார்வின். கிட்டத்தட்ட இந்த நேரத்தில்தான் டார்வினுக்கு பீகிள் பயண வாய்ப்பும் கிடைத்தது.

கடற்கரைத் தீவுகளை ஆய்வு செய்யவும், கடல்வழிப் போக்குவரத்து குறித்த முழுமையான பாதையைக் கண்டறியவும் ஆய்வுக் குழு ஒன்றை ஏற்பாடு செய்தது இங்கிலாந்து அரசு. அதாவது பல்வேறு துறைகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கப்பலில் அனுப்புவதுதான் திட்டம். அதில் டார்வினும் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பீகிளில் பயணம் செய்யத் தொடங்கியபோது டார்வினின் வயது என்ன தெரியுமா? வெறும் 22.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பயணத்தில் டார்வின் செய்த ஆராய்ச்சிகளெல்லாம் தனிக்கதை. இனி நம் கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

0

1997இல், ‘Journal of the American Medical Association (JAMA)’ வெளியிட்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில் டார்வினுக்கு இருந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

‘பேனிக் அட்டாக் (Panic Attack)’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பதற்றம், குழப்பம், நெஞ்சு படபடப்பு, நடுக்கம் எனச் சொல்லாமல் கொள்ளாமல் சுனாமிபோலத் திடீரென ஒருசேர வரும். சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த அட்டாக், உயிர் பிரியும் பயத்தைக் கொடுத்துவிடும். ‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா…’ என இதனால் பாதிக்கப்படுவோர் நடுங்குவர்‌. இந்த ‘அட்டாக்’குகள் தொடர்ந்து வந்தால் அதுவே பேனிக் டிசார்டர் (Panic Disorder) எனப்படும்.

டார்வினுக்கு இந்த பேனிக் டிசார்டரோடு சேர்ந்து அகோராபோபியா (Agoraphobia) எனும் ‘அச்சம்’ சார்ந்த நோயும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அகோராபோபியாவும் பதற்ற நோயின் ஒரு வகைமைதான். அதாவது கடினமான அல்லது இறுக்கமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியாமல் போனால் உருவாகும் அதீத பயம்.

இதனாலேயே இந்நோயால் பாதிக்கப்படுவோர் வெளியே செல்வதற்கு அஞ்சுவார்கள். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டார்கள்.

கூட்டத்தைக் கண்டால் பயம், தனியாக இருந்தால் பயம், லிஃப்ட் ஏறினால் பயம், லிஃப்ட் இறங்கினால் பயம்…(தெனாலி கமல் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

டார்வின், தன்னுடைய மருத்துவப் பிரச்சினைகளைச் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார்‌. அன்றாடம் அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை ஒரு டைரியில் எழுதி வைப்பது அவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே அவருக்கிருந்த பிரச்னைகள் குறித்த ஆதாரமாக இப்போது இருக்கிறது.

உதாரணத்திற்குச் சில வரிகள்:

‘என்னுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என்னுடைய தலை அடிக்கடி சுற்றிச் சுழல்கிறது…’

‘என்னால் உடலையும் மனதையும் என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இரண்டுமே நான் சொல்வதைக் கேட்க மறுக்கின்றன…’

டார்வின் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஜோசப் ஹூக்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘தொடர்ச்சியான தாக்குதல்கள், என் வாழ்க்கையில் தாங்க முடியாத தொந்தரவாக இருக்கின்றன. என்னுடைய எல்லா வேலைகளையும் இவை நிறுத்துகின்றன…’

இதன் மூலம் டார்வினுக்கு இருந்த பதற்ற நோயின் தீவிரம் குறித்து அறிய முடிகிறது. இதில் ‘தாக்குதல்கள்’ என பேனிக் அட்டாக்கைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆசானாக இருந்தவர் பேராசிரியர் ஹென்ஸ்லோ‌ (John Stevens Henslow). சொல்லப்போனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் பீகிள் பயணத்தையே மேற்கொண்டார் டார்வின். ஹென்ஸ்லோவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த டார்வின், ‘எனக்குச் சமீப காலமாக உடல்நிலை சரியில்லை. இதயத் துடிப்பு அதிகமாக இருக்கிறது. அடிக்கடி வயிறு வலியும் உண்டாகிறது…’ எனக் கடிதம் எழுதியிருக்கிறார். இதையே காரணமாக வைத்து, புவியியல் துறையில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவப் பொறுப்பு ஒன்றையும் நிராகரித்திருக்கிறார் டார்வின்.

0

1859ஆம் ஆண்டு, தன்னுடைய கோட்பாடுகளை எல்லாம் தொகுத்து ‘The Origin of Species’ புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். அதுவரை, ‘கடவுள்தான் எல்லா உயிரினங்களையும் படைத்தார்…’ என்று நம்பி வந்த மக்களுக்கு அப்புத்தகம் அதிர்ச்சி குண்டை வீசியது.

‘உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு மூதாதையர் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வெவ்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றன…’ என்கிற அறிவியல் கோட்பாட்டை மதவாதிகள் எதிர்த்தனர்.

‘படைப்புக் கொள்கை’ ஒருபக்கம், ‘பரிணாமக் கொள்கை’ ஒருபக்கம் என இரண்டு அணிகள் உருவாகின. படைப்புக் கொள்கைவாதிகள், பல்வேறு வகைகளில் டார்வினுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார்கள். எல்லா விமர்சனங்களையும் எதிர்கொண்டார் டார்வின், சிறிது பதற்றத்துடன்!

டார்வின் தன்னுடைய இறுதி நாட்களை, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு சிறிய கிராமத்தில்தான் கழித்தார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய மனைவியே அவருக்கு உறுதுணையாக இருந்தார். தனிமை விரும்பியான அவர், என்றுமே கூட்டத்தோடு கலந்ததில்லை. கடைசி வரையில் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தார்.

உயிரினங்களின் தோற்றம் பற்றி உலகுக்குச் சொன்ன டார்வின், ஏப்ரல் 19 1882இல் மறைந்தார். ஐசக் நியூட்டனின் சமாதிக்குச் சில அடி தூரத்தில் டார்வினின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

0

2025இல் இருக்கிறோம். இன்றும் மனப்பிறழ்வுக்குச் சாமியாரிடம் போகும் கூட்டம்தான் இங்கே அதிகம். எனில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மூடநம்பிக்கைகளுக்குள் மூங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்த காலம் அது.

‘உலகை உருவாக்கியவர் கடவுள்…’ என்கிற எண்ணம்தான் அப்போது எல்லோரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்க எவ்வளவு மன தைரியம் வேண்டியிருக்கும்?

ஆம்…அதை‌ வெளியிட டார்வின் தயங்கினார்தான். பல வருடங்களாக அவருடைய கோட்பாடுகள் பூட்டிய பெட்டிக்குள் பதுங்கிக்கொண்டுதான் இருந்தன. இருந்தும் இப்பேர்ப்பட்ட ஒரு கருத்தைப் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வின்தானே உலகிற்கு அழுத்தமாக எடுத்துரைத்தார்?

சரி, விஷயத்திற்கு வருவோம். பதற்ற நோயும், அச்ச நோயும் கொண்ட ஒருவனால் இதெல்லாம் சாத்தியம் தானா?

இதுதான் டார்வினின் உளவியல் பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது எனக்குத் தோன்றியது.

பீகிள் பயணத்தின்போது பல்வேறு உடல் உபாதைகளை அனுபவத்தார் டார்வின். ஆனால் அவையெல்லாம் கடலுக்குள் செல்லும் யாருக்கும் ஏற்படக்கூடியதே. வயிறு வலி, தலைச்சுற்றல் போன்ற பயண ஒவ்வாமைதான் டார்வினுக்கு இருந்திருக்கிறதே தவிர பதற்ற நோய் பற்றிய விரிவான குறிப்புகள் ஏதும் இல்லை. அவையெல்லாம் பீகிள் பயணம் முடிந்த பிறகே டார்வினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, டார்வினின் ஒப்பற்ற வாழ்க்கையைப் படித்தபோது அவருக்கு இருந்ததாகச் சொல்லப்படும் பதற்ற நோய் குறித்து எவ்விதமான முடிவுக்கும் என்னால் வரமுடியவில்லை.

உலகமே எதிர்க்கும் எனத் தெரிந்தும் தன்னுடைய ஆய்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி மாபெரும் புரட்சி செய்த டார்வினை ‘பதற்ற நோயாளி’ என்று என்னால் சுருக்கிவிட முடியவில்லை.

அடுத்த வாரம், வேறொரு பிரபலத்தை ஆராயலாம்.

(தொடரும்)

The post பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின் appeared first on கிழக்கு டுடே.

  •