Reading view

நம்பிக்கை

பொழுதும் விடியும் பூவும் மலரும்

பொறுத்திருப்பாய் கண்ணா…

இது ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி. இது காட்டுகின்ற வாழ்க்கை நம்பிக்கை அசாத்தியமானது. கண்ணதாசன் பாடல் என்றே நினைக்கிறேன். கடவுள் அடிப்படையிலான அழகிய நம்பிக்கை இது. மனம் தளர்ந்திருக்கும் ஒரு நாயகனுக்கு நாயகி நம்பிக்கை தரும் பகுதி.

நாளைய உலகை நமக்கெனத் தர ஓர் நாயகன் இருக்கின்றான்… என்று அடுத்த பகுதி தொடங்குகிறது. அவன் நல்லவர் வாழும் இடங்களில் எல்லாம் காவல் இருக்கின்றான். இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்துபவள் ஒரு பெண். என் தாயிடமும் இம்மாதிரி அழுத்தமான நம்பிக்கை இருந்தது. ஆனால் என் காலத்தில் இந்த நம்பிக்கை பல காரணங்களால் இல்லாமல் ‍போயிற்று என்பது வருத்தத்திற்குரிய உண்மை. என் தாயிடமிருந்து இந்த நம்பிக்கை என் மனைவிக்கு வந்திருக்க வேண்டும். இப்படி வழிவழியாக வாழ்க்கையில் தொடரும் நம்பிக்கை இது. இந்த நம்பிக்கை அழுத்தமாக இருந்தால் வாழ்க்கையில் எதையும் ஜெயிக்கலாமே?

அந்தக் காலத்தில் அதிகமாகப் படிக்காவிட்டாலும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள். இப்போது அது இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறேன்.

  •  

பூரணச்சந்திரன் அறக்கட்டளை – மூன்றாம் நாள் பயிலரங்கம்

முதலில் தமிழ்க் கவிதை பற்றிப் பேரா. இராமசாமியின் உரை சிறப்புற அமைந்தது.

பிறகு இன்றைக்குத் தேவையான எழுத்து என்ற குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கிராமியன், பிஎச்இஎல் பொறியாளர் திரு. விவேக், திரு. விக்டர் ஆல்பர்ட் மூவரும் பிறரும் சிறந்த முறையில் பங்கேற்றனர்.

பிறகு சமகாலத் திரைப்படம் பற்றியும் அதை நோக்கும் விதம் பற்றியும் திரு. இராமசாமி சுவையாக எடுத்துரைத்தார். இடையில் மாணவர்கள் நேற்று எழுதிவந்த கவிதைகளையும் மதிப்பீடு செய்தார்.

மதிய உணவுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரிப் பேராசிரியர் ராமராஜ் மாணவர்களைத் திறம்பட நடிக்க வைத்துத் தம் நாடகத் திறனை வெளிப் படுத்தினார். அகஸ்ட் போவாலின் கருத்துகள் அடிப்படையில் (இன்விசிபிள் தியேட்டர்) அந்த நாடக ஆக்கம் அமைந்தது சிறப்பாகும்.

தேநீருக்குப் பிறகு நிறைவு விழா. முதல்வர் வர இயலாததால் தமிழ்த்துறைத் தலைவர் திரு. இராஜ்குமாரே மாணவர்களுக்குப் பரிமாற்ற முறையில் சான்றிதழ்களை வழங்கினார். திரு. சிவசெல்வன் நன்றிகூற மூன்றுநாள் படைப்பாக்க நிகழ்ச்சி நன்கு நடந்தேறியது.

மூன்று நாள் அமர்வுகளையும் சிறப்புற ஏற்பாடு செய்தவர் பேரா. சாம் கிதியோன். உணவு உட்பட, உட்காரும் இடங்கள், அறைகள் உட்பட கவனித்துக் கொண்டார். அவருக்குத் துணையாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உதவி செய்தனர். திரு. சாம் கிதியோனுக்கும் அவருக்குத் துணையாக அமைந்த பேராசிரியர்களுக்கும் தனிப்பட நமது நன்றிகள் உரியன.

  •