Reading view
கல்லில் எழுந்த நாயகர்கள்- தாமரைக்கண்ணன் புதுச்சேரி
![]() |
தில்லை காளி கோவில்லுள்ள அரிகண்ட வீரர்- படம் வே. பார்த்திபன் |
தமிழ் பண்பாட்டில், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் நெடிது பேசப்பட்ட ஒரு மரபு நடுகல்லுக்கானது. கல்நாட்டும் மரபு தொல்பழங்காலத்திலிருந்து துவங்குகிறது. வீர கதை மரபு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. என் தலைவன் முன்பு வரவேண்டாம் பகைவர்களே அப்படி பகை நின்றவர்கள் எல்லாம் இப்போது நடுகற்களாகி நிற்கிறார்கள் என்கிறது படைச்செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று. ஆரம்ப காலத்தில் குத்துக்கற்களாக இருந்த இந்த ஈமச்சின்னங்கள் கற்களில் எழுத்துப்பொறிப்பு பெற்றன, பின்னர் இறந்த வீரனின் உருவத்தோடு வடிக்கப்பெற்றன. பல அடுக்கு சிற்பங்களாகவும் அழகியல் ரீதியாக இவை வளர்ச்சி பெற்றன.
அகழ் : நூல் அறிமுகங்கள்
நீங்களும் ஐன்ஸ்டீன்தான் – ஆதி. கமலேஷ் பிரகாஷ்
வைகறை வாசகன் பதிவுகள் – கனிவான கலங்கரை விளக்கம்
டாக்டர் சங்கர சரவணன் குறித்து எழுதுகையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை. எனக்கும், பல நூறு மாணவர்களுக்கும் வாழ்வளித்த ஆசிரியர் அவர். நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது, சுட்டிவிகடனுடன் தரப்பட்ட இணைப்பிதழில் பல்வேறு பல்சுவை, பொது அறிவுக்குறிப்புகள் வரிசை கட்டிநின்றன. அவை எனக்கிருந்த மிகக்குறைந்த வாசிப்பிற்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. 90% செய்திகளை முதன்முறையாக அப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்கிற அளவுக்கு நிலைமை. ஆசிரியரான என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாள் கோடை விடுமுறையில் என்னை ஓயாமல் அந்த ‘கையளவு களஞ்சியத்தை’ படிக்க வைத்தார். மீண்டும், மீண்டும் கேள்விகள் கேட்டு பயிற்றுவித்தார். இத்தனை வதைகளுக்கும் விதை போட்ட அந்த நூலின் ஆசிரியரை தேடினேன், ‘டாக்டர் சங்கர சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் கடுமையான கோபம் இருந்தாலும், அந்நூல் என்னைப் புடம் போட்டது. அறிவுத்தாகத்தை வளர்த்தெடுத்தது. சுட்டி விகடனின் ‘சுட்டி குவிஸ் விஸ்’ போட்டிகளில் இருமுறை அரையிறுதி போகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. வேறெந்த தயாரிப்பும் இல்லாமல், ஒரே ஒரு கையளவு களஞ்சியத்தைக் கொண்டு வாள் சுழற்றி தோற்றுத் திரும்பினோம்.

காலங்கள் உருண்டோடின. குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனாக முதல் முறை மோசமான முறையில் தோற்றுப்போய் இருந்தேன். துவண்டு போய், திக்கற்று அமர்ந்திருந்த காலம். என்னுடைய ஏதோவொரு கட்டுரையை படித்துவிட்டு டாக்டர் சங்கர சரவணன் சார் என்னோடு பேச விரும்புவதாக சொன்னார்கள். தமிழிலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த எனக்கு உற்ற ஆசிரியராக அவரே இருப்பார் என்று அதிகாரிகள் வழி சொன்னார்கள். அவரின் உதவி நாடி சென்றேன். என்னைப்பற்றி ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டார். வினாடி வினா வல்லுநரான இவர் நம்மை கேள்விகளால் துளைக்கப்போகிறார் என்று அஞ்சினேன். அதற்கு மாறாக, அப்படியே அரவணைத்துக் கொண்டார்.


ராணிப்பேட்டையில் ஆராய்ச்சி அலுவலராக இருந்த அவர், காலையில் எனக்கு மட்டும் தனியாக தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுப்பார். பின்தங்கியிருந்த என்னை கைதூக்கி விடுவதற்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளும் 6:30 மணிக்கு காலையில் வகுப்பெடுப்பார். சில மாதங்கள் இப்படியே சென்றது. பின்னர் அவருடைய பொதுவான தமிழ் வகுப்புகளில் என்னை மாணவனாக இணைத்துக்கொண்டார். ஒருநாள் கூட கட்டணம் என்று ஒரு ரூபாயை கூட அவர் கேட்டதில்லை. கைம்மாறு கருதாத கடப்பாடு என்பதன் உண்மைப்பொருளை அவரிடமே கண்டேன்.
உடல்நலம் குன்றி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில்லாமல் நேரடியாக கேட்டதையும், நினைவில் இருந்ததைக் கொண்டும் தேர்வை அணுகினேன். தமிழ் விருப்பப்பாடம் முதல் தாளினை இயன்றவரை எழுதி முடித்திருந்தேன். 50 மதிப்பெண்களுக்கான பதில்களை தரமுடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிய வெவ்வேறு பதில்கள் தவறானவை என்பதை பிறரோடு நிகழ்த்திய உரையாடலில் புரிந்துகொண்ட போது அழுதுகொண்டே தேர்வை எழுத வேண்டாமென தோன்றியது. சரியாக சார் அழைத்தார். என்னுடைய மனநிலையைப் புரிந்து கொண்டார். சற்றுகூட கடுமை காட்டாமல், நான் தவறாக எழுதிய பதில்களையும் சரியென நம்பவைத்து இறுதிக்கோட்டை தொட்டுவிட்டு வா என ஊக்கப்படுத்தினார். அவர் அன்றைக்கு பேசிய அந்த அரைமணி நேரம் என் வாழ்வின் திருப்புமுனை. இன்றைக்கு நான் ஆட்சிப்பணியில் இருப்பதற்கு முழு முதன்மையான காரணம் அவரன்றி வேறு யாருமில்லை.
டாக்டர் சங்கர சரவணன் சாரோடு வெவ்வேறு காலங்களில், பணிகளில் அருகே இருந்து கற்றுக்கொள்ளும் பேறு கிடைத்திருக்கிறது. ‘பிரமிப்பு’ என்பது கூட போதுமான சொல் அன்று. விகடன் இயர் புக்கை எந்த பொருட்பலனும் எதிர்பாராமல் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று ஒற்றை மனிதராக பல ஆண்டுகள் இயற்றி அளித்தார். உறக்கமின்றி, இற்றைப்படுத்தி மிக நேர்த்தியாக, மாணவர்களின் தேடலுக்கு தீனி போடும் வண்ணம் அப்படைப்புகள் இருக்கும். இளைஞர், மூத்தோர் பட்டாளம் உடன் இவரே தனி மனித இராணுவம் போல பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை வரைவார். போட்டித்தேர்வு சார்ந்து தேர்வு பாகுபாடு இன்றி பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார். உலகத்து செல்வமெல்லாம் தமிழிற்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் பணிகள் தமிழ் அறிவியக்க வரலாற்றில் தன்னேரில்லா பக்கங்கள். உருவான பல்வேறு நூல்களின் மொழியாக்கம், செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரின் பங்கு அளப்பரியது. தமிழ்மொழியின் பழமைக்கும், நவீனத்துக்கும் என்று இரண்டுக்கும் ஈடுகொடுத்து அவரளவிற்கு கற்றறிந்தவர்கள் இல்லை என்றே துணிந்து எழுதுவேன். கால்நடை மருத்துவராக இருப்பது தாஜ்மகாலின் முதல் கதவு போலத்தான். உள்ளே செல்ல செல்ல அவரின் ஆளுமை பரந்து, விரிந்து கொண்டே சென்று ஆச்சரியப்படுத்தும்.

டாக்டர் சங்கர சரவணன் சாரிடம் எனக்கும், பலருக்கும் நெருக்கத்தை தருவது அவரின் பாகுபாடுகளற்று பழகும் பண்பு. மேலும், நம்மை கனிவாக, நேர்மையாக ஆற்றுப்படுத்தும் ஆளுமை. உழைப்பிற்கும், வாசிப்பிற்கும், அறிவு ஊக்கம் மிக்க ஆக்கங்களுக்கு அஞ்சாத ஆள்வினை உடைமை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளின் மீது பெரும்பற்று கொண்ட வைகறை வாசகர்.
சாரின் இணையர் உஷா அம்மா என்னைப்போல் பலருக்கு இன்னொரு அம்மா. சாரின் பொருள் நாடா அறவாழ்விற்கு அருந்துணை. எனக்குத் தெரிந்து போட்டித்தேர்விற்குத் தயாராகும் மாணவருக்காக வீட்டின் மேல்பகுதியை ‘எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்து படிக்கட்டும்’ எனச்சொல்கிற உஷா அம்மாவின் ஒப்புரவிற்கு இணையுண்டா? மாணவர்களுக்காக தன் நேரம் அனைத்தையும் தரும் டாக்டர் சங்கர சரவணன் சாரிற்கு அம்மாவை விட உற்ற துணை யாருமில்லை.
பல்வேறு பார்வைகளை ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ காலத்தில் வைகைறைப்பொழுதில் எழுதிய அவரின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ 2k kids-ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது. ஒரே மூச்சில் படித்தல் ஒரு சுவை. எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொரு கட்டுரையும் சுருக்கமும், நெருக்கமும் மிக்கவை. போலியான பிம்பங்கள், முகமூடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தது, தன்னை பீடித்தது என்று அனைத்தையும் அள்ளித்தருகிறார்.

தன்வரலாற்று பக்கங்களாக சில கட்டுரைகள் அமைகின்றன. அவற்றில் மென்மையான நகைச்சுவையும், சமயங்களில் அழவைக்கும் சோகமும் இழையோடுகிறது. வயது வந்தோருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையை குறுக்கெழுத்துக்காக தந்தையிடம் கேட்டறிந்ததை சொல்லும் கட்டுரை ஒரு சான்று. அதுவரை குலுங்க, குலுங்க சிரிக்கும் நம்மை ஒரே வரியில் சோகமயமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சத்தியம் செய்து சில செய்திகளை சொல்கிறார். கீர்த்தி சுரேஷின் அன்னை குறித்து தேடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் வரும் ‘சின்ன c ஆ, பெரிய C ஆ’ ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு இந்நூலில் சார் நிகழ்த்தும் ‘C’ மாயத்தை நீங்கள் படித்துதான் பரவசமடைய முடியும்.
‘கலைச்சொல்லாக்கம்’ குறித்த ஏழு கட்டுரைகள் தமிழால் முடியும் என்பதை ஆழமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், தெளிவோடும் எடுத்து வைக்கும் கட்டுரைகள். ‘Mutation’ என்பதற்கு இணையான கலைச்சொல்லை கண்டடைய கந்த சஷ்டி கவசம், தாவரவியல் நூல்கள், நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை விரைவு என வைகறை வாசகன் நிகழ்த்தும் தேடல் நெகிழவைக்கிறது. ஆலங்குடி வங்கனாரும், ஆண்டன் செக்காவும் ஜெர்மனியில் ஜோதிகா, அதிதி ராவை சந்தித்த கதை இந்நூலில் நமக்காக காத்திருக்கிறது.
இந்நூலில் தோல்வியில் துவண்டு, நைந்து போகிறவர்களை கரைசேர்க்கும் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்கள் அணிவகுக்கின்றன. இலக்கிய படைப்பாளிகள் குறித்து வெவ்வேறு சிந்தனைச் சிதறல்களை அள்ளி வழங்கும் ஆசிரியரிடம் குறுங்குழு மனப்பான்மையோ, தூய்மைவாத கண்ணாடியோ இல்லாமல் இருப்பது நிறைவளிக்கிறது.
அம்மா குறித்த பதிவுகள் ஆன்மாவில் இருந்து எழுதப்பட்டவை. மகளிர் உரிமைத்தொகை ஆனது உரியவருக்கு சென்று சேர வேண்டும், தகுதியில்லாதவர்கள் பயன்பெற்றுவிடக்கூடாது, விடுபட்டுப்போனவர்களின் குறைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று சங்கர சரவணன் சாரின் அம்மா காட்டும் அக்கறை அம்மாக்களுக்கே உரியது. சமயங்களில் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் வண்ணம் சில பதிவுகள் நின்றுவிடுகின்றன.
திருக்குறள் குறித்து நூலில் வழங்கிவருபவை கண்மூடித்தனமான வழிபாட்டுப் பரணிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, மாறிவரும் அறிவுக்கு அழுத்தம் தராமல், மாறாத மெய்யறிவுக்கு அதிக அழுத்தம் தந்து இலக்கியல், இயங்கியல் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதியதால் தான் குறள் காலம், இடம் ஆகிய பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக இருக்கிறது என்கிற வா.செ. குழந்தைசாமியை கருத்தை நினைவுக்கூர்வது ஒரு சான்று. திருக்குறளில் நேர்நிலை இயல், இருத்தல் இயல், பின்நவீனத்துவம், பெண் விடுதலை, மரண தண்டனை, நிர்வாகத்தில் ரகசிய காப்பு ஆகியவை பல்சுவைக்கதம்பம் மட்டுமல்ல, பன்முகப்பார்வையும், புதுமை நோக்கும் கொண்டவை.

இந்நூலின் ஆகப்பெரிய வெற்றி என்பது, “எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது பார்!” என்கிற பெருமிதப் பூச்சு எங்கும் இல்லவே இல்லை. ‘அன்புத்தோழமையே! உன்னோடு பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுவைகூட்டி பரிமாற சங்கதிகள் உண்டு. மனதோடு உரையாட நூல்கள் சில கண்டேன். பிடித்திருந்தால் சேர்ந்து தேடுவோம். கண்டடைவதை எனக்கும் தெரிவிக்கவும். அறிவுக்கடல் எங்கும் அன்போடு மூழ்கி முத்தெடுப்போம்’ என்கிற நெருக்கமும், பிணக்கமும், அறிவினை விரிவு செய்யும் பொதுமை நோக்கும் மிளிர்கிறது. வைகறை வாசகனின் பதிவுகள் விடியல்களை நமக்களிக்கும் அறிவுப் பெருவிருந்து.
வைகறை வாசகன் பதிவுகள்
விகடன் பிரசுரம்
முதல் பதிப்பு
பக்கங்கள் : 352
விலை : 375 ரூபாய்

டாடா குழுமத்திடம் இருந்து தன்னம்பிக்கை தரும் கதைகள்
கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார்.

டாடா சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய் செலவில் பெரிய ஏரி ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது.

ரத்தன் டாடா ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது.
ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர் ஸெர்ஸேஸ் தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள்.

கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா தன்னுடைய மனைவி மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள் தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது.
ஏர் இந்தியாவை டாடா நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது.

IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு.
இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள் வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.
டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ் என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார்.
வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது.

இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார்.
13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,
” ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது. முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும்.
எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது.
தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.
சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”

உறுதி நாயகர்கள் யார்? – என்.சிவகுரு
அம்மையின் கதை: தாமரைக்கண்ணன் புதுச்சேரி
கல்லா லெறியப் பிரம்பாலடிக்க இக்காசினியில்
அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொர் அன்னைபிதா
இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவே
காளமேகம் பின்னாளில் வசை பாடும் முன்னரே அடியார் ஒருவரை தனது அன்னையாக வரித்துக்கொண்டார் சிவபெருமான். அண்டம் முழுதும் பிறப்பித்தவர் ஆயினும் தனக்கும் அம்மை ஒருத்தி வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். தன்னை தரிசிக்க கயிலை வந்த காரைக்காலம்மையை 'நம்மைப் பேணும் அம்மை காண் இவள்' என்று ஈசன் உமையிடம் சொல்வதாக பெரியபுராணம் உரைக்கிறது. உலகின் தந்தை, உலகன்னையிடம் இதோ வரும் இந்த பெண்மணி என் தாய் என்கிறார்.
என்ன நடக்கிறது இந்திய எல்லைகளில்? – செல்வராஜ்
அம்பை மணிவண்ணின் சிற்பக்கலை : நூல் அறிமுகம் 1 - கடலூர் சீனு
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நிலத்தில் 2000த்தில் கோயிலை நோக்கிய பக்தர்களின் இணைப்பில் ஒரு பெரிய எழுச்சி நிகழ்ந்தது. பொருளாதார மாற்றம், இணைய தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த வேலை வாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் அன்றாடம் தாண்டியும் பயணிக்க முடிந்தது.
பெருவாரியான மக்கள் ஒரு பண்பாட்டில் எதை கைகொண்டாலும் உடன் நிகழ்வாக அந்த பண்பாட்டில் கணிசமான சாரமான பகுதி ஒன்று புறக்கணிக்கப்படும் நிலையும் நிகழும். அதுவே இம்முறையும் நிகழ்ந்தது. கோயில் புனர் நிர்மானங்கள் என்ற பெயரில் கோயிலின் பண்பாட்டு தடங்கள் பல அது என்ன என்றே தெரியாத ஆட்களால் சிதைக்கப்பட்டன. முக்கிய கோயில்களில் அளவுக்கு மீறிய மக்கள் வருகையை கட்டுப்படுத்த கோயில் வழிபாட்டு முறைமையை மீறி எங்கெங்கும் தடுப்பு கம்பி வேலிகள், கோயில் மதில் உள்ளேயே உணவு கடைகள், கழிப்பறைகள் எல்லாம் முளைத்தன.