Reading view

இராட்சதர்களின் வீழ்ச்சி

            அயல்மொழி அலமாரி தொடரில் இரா.நடராசன் ஒரு முறை குறிப்பிட்டதிலிருந்து கென் ஃபாலெட்டின் (Ken Follett –  இவரை சிலர் கென் ஃபாலே என்றும் கூறுகிறார்கள்) ஃபால் ஆஃப் ஜெயண்ட்ஸ் (Fall of giants)  நாவலைத் தேடிக்கொண்டே இருந்தேன்.  சமீபத்தில்தான் கிடைத்தது.  20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை மூன்று பாகங்களாக எழுதத் திட்டமிட்டு ஃபாலெட் எழுதிய முதல் பாகம் இது. (இரண்டாவது பாகமும் இப்போது வந்துவிட்டது)  1913லிருந்து 1925 வரையில், அதாவது முதல் உலகப் போர் துவங்கும் சூழலிலிருந்து, அது முடிந்த பிறகான பின்விளைவுகள் ஏற்படுத்திய தாக்கம் வரை விறுவிறுப்பாகச் சொல்லும் 985 பக்க நாவல்.  லண்டனில் ஒரு பிரபுக் குடும்பம், வெல்ஷ் பகுதியின் ஒரு சுரங்கத் தொழிலாளியின் குடும்பம், ரஷ்யாவில் ஒரு எளிய தொழிலாளியின் குடும்பம், அமெரிக்காவில் ஒரு செனட்டரின் குடும்பம், ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா குடியேறிய ஒரு தாதாவின் குடும்பம், ஜெர்மனியின் ஒரு உயர்குடிக் குடும்பம் என ஆறு குடும்பங்களின் வாயிலாக உலகின் சரித்திர மாற்றங்களை விவரிக்கும் நாவல்.  ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களும் உலகப்போரின் போது ராணுவ சேவையில் ஈடுபட, குடும்பங்களின் கதை உலகநாடுகளின் கதையாக, உலகப்போரின் கதையாக உருமாறுகிறது.  103 கற்பனைப் பாத்திரங்களும், 23 உண்மைப் பாத்திரங்களும் உலவும் நாவல்.  லெனினும், டிராட்ஸ்கியும், உட்ரோ வில்சனும், சர்ச்சிலும், லாயிட் ஜார்ஜ்ஜும், ஜெர்மனியின் கெய்சரும் எடுக்கும் முடிவுகள் சாமான்ய மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கூறுகிறது இக்கதை.  நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான கர்சன் பிரபுகூட ஓரிரு இடங்களில் வந்து போகிறார்.  முதல் உலகப்போரின்போது அவர்தான் பிரபுக்கள்சபையின் சபாநாயகர்.

            வரலாற்றுப் புனைவு எழுதுவது கடினம்.  அதுவும் சமீபகால நிகழ்வுகளை வைத்து எழுதுவது மிகமிகக் கடினம்.  நம் இந்தியா போல் ஆவணங்கள் சரிவர இல்லாத நாடாக இருந்தாலும் ஏதாவது கற்பனையாக எழுதி ஒப்பேற்றலாம்.  ஆனால், சர்ச்சில் போன்ற, லெனின் போன்ற உலகத் தலைவர்களின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஆவணங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு வரியையும் கடுமையான ஆய்வுக்குப் பின்னரே எழுதமுடியும்.  ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சர்ச்சில் யாரைச் சந்தித்தார், என்ன பேசினார் என்பதற்கு ஆவணம் உள்ளது.  அந்த ஆவணத்தை வைத்துக்கொண்டு, அந்தப் பேச்சிற்கு தொடர்புடையது போல கதையில் ஒரு காட்சியை உருவாக்கவேண்டும். அதில் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நடமாட விடவேண்டும்.  சர்ச்சில் அந்த சந்தர்ப்பத்தில் பேசியவற்றிற்கு ஏற்றாற்போல் கற்பனைப் பாத்திரங்களைப் பேசவைக்க வேண்டும்.  இந்தப் பேச்சுக்கள் கதையை அடுத்த காட்சிக்கு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லவேண்டும்.  எத்தனை கடினமான படைப்புச் சவால் !! கென் ஃபாலெட் இதில் பெரிய வெற்றி பெற்றுள்ளார்.  நாவலை எழுதி முடித்ததும், கதைக்களமான நாடுகளின் எட்டு மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களிடம் பிரதியைக் கொடுத்து, வரலாற்றுத் தகவல்ரீதியாக தவறுகள் எதுவும் இல்லை என்று உறுதிசெய்துகொண்ட பின்னரே, அச்சுக்கு அனுப்பியதாக ஃபாலெட் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

        தலைவர்களின் பார்வையில் எழுதப்பட்டிருந்தால், இது ஒரு வறண்ட வரலாற்று நூலாக மாறியிருக்கும்.  சாமானிய மக்களின் கதையாக இது வளர்வதால், பிரமிப்பூட்டும் மக்கள் வரலாறாக மாறுகிறது.  பதிமூன்று வயதுச் சிறுவன் முதன்முதலாய் சுரங்கவேலைக்கு பூமிக்கு அடியில் நுழைவதில் துவங்கும்  நாவல், சுரங்கம், தொழிலாளர், அவர்கள் ஊர், வாழ்க்கைமுறை என்று முழுமையாய் அதைச் சுற்றிச்சுற்றி வருகிறது.  சின்னச்சின்ன விஷயங்களுக்கான அவர்களது போராட்டம், சோவியத் யூனியன் எழுச்சி அவர்களுக்கு ஏற்படுத்தும் நம்பிக்கை எல்லாம் நாம் இதுவரை எங்கும் படிக்காத விஷயங்கள்.  மறுபுறம் சோவியத் யூனியனின் கதை.  1905 எழுச்சியில் கொல்லப்பட்ட ஒரு போராளித் தாயின் இரு குழந்தைகள் ஜார் அரசின் ரயில்வே தொழிற்சாலையில் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இருவரில் ஒருவன் அமெரிக்கா சென்று அங்குள்ள ரஷ்ய தாதாவின் மாப்பிள்ளையாகிறான்.  மற்றவன் சிறிதுசிறிதாக உணர்வு பெற்று, லெனினின் நம்பிக்கைக்குரிய உதவியாளனாகிறான்.  ரஷ்யாவின் மாற்றம் இங்கிலாந்திலும் வந்துவிடுமோ என்று சர்ச்சில் போன்றோர் கலவரமடைகிறார்கள். இங்க்கிலாந்தில் சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் காரணமான ஆடைத் தயாரிப்புத் தோழிலில் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம்.  அவள் வழியே பெண் வாக்குரிமைக்கான போராட்டம், அது எப்படி வெற்றி பெற்றது என்பது நாவலில் மிக இயல்பாக வருகிறது.  ஜெர்மனியின் ஆதிக்கவெறியும், அதன் தோல்வியும், தோற்ற அதன் செல்வங்களை ஏகாதிபத்திய நாடுகள் பேராசையோடு பங்குபோட்டுக் கொள்வதும், ஜெர்மன் மக்கள் போருக்கு முன்னும், பின்னும் எப்போதும்போல் கஷ்டப்படுவதும் கதையோடு ஒட்டி வருகின்றன.

        நாவலின் மிகப்பெரும் பலம் அது சாமானிய மக்களின் மனவோட்டத்தை துல்லியமாக, நேர்மையாகப் பதிவு செய்வதுதான்.  இங்கிலாந்தின் ஒரு பிரபுக் குலத்தில் பிறந்து, ஜெர்மனியின் ஒரு உயர்குடிப் பிரபுவை மணந்து, போரின் சீரழிவில்  இரவுவிடுதி ஒன்றில் (மாமனார், மாமியாருக்குத் தெரியாமல்) பியானோ வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் ஒரு சீமாட்டியும், இங்கிலாந்தின் சுரங்கங்களில் சொல்லமுடியாத அளவு துன்பத்தில் வேலை பார்த்து, உலகப் போரின்போது ராணுவத்தில் சேர்ந்து, ஜெர்மன் குண்டுகளுக்கு அஞ்சிப் பதுங்குகுழியில் ஒண்டிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை சுரங்கத் தொழிலாளியும் இங்கிலாந்து நாட்டவர் உலகையே ஆள கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற நினைப்போடு வாழும் முரணை மிக இயல்பாக, சரியாகக் காட்டும் இந்த நாவல் முடியும் இடம் மிக அழகானது.

        நாவலின் ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஒரு பிரபு வீட்டுப் பணிப்பெண்.  பிரபு எதிரில் வந்தால், அவள் சுவரை ஒட்டிக் கொண்டு,  தலைதாழ்த்தி நிலம் பார்த்து நிற்கவேண்டும்.  அவர் பேசினால்தான் பதில் கூறவேண்டும்.  இப்பெண் பெண்வாக்குரிமைப் போராட்டத்தில் சேர்கிறாள்.  பத்திரிகையில் பணியாற்றுகிறாள்.  தொழிலாளர்கட்சியின் முக்கியமான நிர்வாகியாகிறாள்.  பெண்கள் வாக்குரிமை பெறும்போது, தொழிலாளர்கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.  பாராளுமன்றத்தில் பிரபுக்கள்சபை உறுப்பினரான முன்னாள் எஜமானரை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பத்தில், தலை நிமிர்த்தி, அவருக்கு ஹலோ சொல்கிறாள்.  இவள் செல்வதற்கு  வழிவிட்டு சுவரோரமாக நிற்கிறார் அந்தப் பிரபு.  நம் செம்மலர் கதைகளில் வருவது போன்ற இந்த அற்புதமான காட்சியோடு முடிகிறது இந்த நாவல்.

        தி ஐ ஆஃப் தி நீடில் (the eye of the needle) துவங்கி,  புகழ்பெற்ற ஏராளமான நாவல்கள் எழுதியவர் கென் ஃபாலெட்.  அவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளன.  பெருமளவு பணமும், புகழும் சேர்த்தபின், இலக்கிய உலகில் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என்ற பேரவாவினால் அவர் இந்த மூன்று நாவல் தொடரினை எழுதத் திட்டமிட்டார் என்று கருதலாம்.   பணத்திற்கும், புகழுக்கும் மீறிய ஒரு ஆசை படைப்பாளனின் மனதில் வரும்போதுதான் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாகின்றன. அப்போது  ஒரு ஏகாதிபத்திய எழுத்தாளன் தன்னையறியாமல் மக்கள் எழுத்தாளனாகிறான்.  நம் தமிழ்கூறு நல்லுலகின் எழுத்தாளர்களும் இதுபோன்ற ஆசைகளை மனதில் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

பின்னி​ணைப்பு

ஆசிரியரின் பிற நூல்கள்

​கென் ஃபா​லெட் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்.  புத்தகப் பதிப்பாளராக இருந்தவர்.  பிரிட்டிஷ் ​தொழிலாளர் கட்சியின் தீவிர உறுப்பினர்.  ம​னைவி பார்பரா ​தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மூன்று மு​றை இருந்தவர்.  கார்டன் பிரவுன் மந்திரிச​பையில் கலாச்சாரத் து​றை அ​மைச்சராக இருந்தவர்.

அவரது மற்ற நாவல்க​ளைப் பற்றிப் ​பேச​வே முடியாதபடி சமீபத்திய ​சென்சுரி ட்​ரைலாஜி நாவல்கள் அ​மைந்துவிட்டன.  இரண்டாவது பாகமான winter of the world ஸ்பானிய உள்நாட்டுப் ​போர், இரண்டாம் உலகப் ​போ​ரை விவரித்தது.  மூன்றாவது பாகமான edge of eternity இந்த ​செப்டம்பர் மாதம் தான் ​வெளியானது. சமீபகாலத்தில் இப்படி​யொரு அற்புதமான நாவல் வர​வேயில்​லை என்று ​சொல்லலாம்.  பனிப் ​போர் காலத்தில் ஆரம்பித்து ஒபாமா பதவி​யேற்​போடு முடிகிறது. ​பெர்லின் சுவர் கட்டப்படுவது, கியுபா ஏவுக​ணைப் பிரச்​னை, வியட்நாம் ​போர், வாட்டர்​​கேட் விவகாரம், ​சாலிடாரிடி இயக்கம், ​சோவியத் யூனியன் சிதறியது, ​பெர்லின் சுவர் இடிப்பு என்று 1960களுக்குப் பின்தான் எத்த​னை எத்த​னை நிகழ்வுகள். இத்த​னையயும் ​தொட்டுத் ​தொட்டுச் ​சென்றாலும், இந்த பாகத்தின் அடிநாதமாக இருப்பது கறுப்பின மக்களின் எழுச்சி, அவர்களுக்கு ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாக​வேனும் நன்​மை ​செய்​தே ஆக​வேண்டிய கட்டாயம்தான்.  மார்டின் லூதர் கிங் ஜூனியரின் எனக்​கொரு கனவு இருக்கிறது என்ற ​உ​ரை நாவலில் வரும் இடத்தில் நம் கண்ணில் கண்ணீர் வரும்.  அ​மைதியாகப் ​போராடிய அந்த மக்கள் சந்தித்த அடக்குமு​​றைகள் அத்த​னை ​கொடு​மை. ​போலீஸ் நாய்க​ளை விட்டு ​போராட்டக் காரர்க​ளைக் கடிக்க விடும் ​கொடு​மை​யெல்லாம் நடக்கும்.  க​டைசியில் ஒபாமா பதவி​யேற்பின் ​போது அந்தப் ​போராளிகள் வடிக்கும் ஆனந்தக் கண்ணீ​ரோடு நம் கண்ணீரும் கலக்கும்.

மற்​றொரு முக்கியமான விஷயம் 1960களுக்குப் பிறகான அ​மெரிக்க அதிபர்க​ளைப் பற்றிய ஃபா​லெட்டின் வார்த்​தைகள். ​கென்னடியிலிருந்து புஷ் வ​ரை பல​ரையும் திருடன், ​பொய்யன், ​கொ​லைகாரன் என்று பல இடங்களில் ​நேரடியாக​வே திட்டுவார். நம் ஊராக இருந்தால் ​கொடும்பாவி எரிப்பது, அவர் படத்​தை ​செருப்பு, விளக்குமாறு ​வைத்து அடிப்பது, த​டை ​செய்ய வழக்கு என்று ஒரு ​பெரிய ​கோஷ்டி கிளம்பியிருக்கும். 

ஒரு புறம் அரசியல் வரலாற்று நாவல்க​ளை எழுதிய அவர் மறுபுறம் 11, 12ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சர்ச் கட்டுவ​தை ​வைத்து அரு​மையாக இரு நாவல்கள் எழுதியிருக்கிறார்.  Pillars of the earth, world without end என்ற அந்த இரு நாவல்களில் சர்ச் கட்டுவ​தைப் பின்னணியாக ​வைத்து அன்​றைய இங்கிலாந்தின் நிலப்பிரபுத்துவ சமூகம் எளிய மக்க​ளை எப்படி​யெல்லாம் ​கொடு​மைப்படுத்தியது என்ப​தை இங்கிலாந்தின் வரலாறு, சர்ச்சின் வரலாறு ஆகியவற்​றோடு இ​ணைத்து எழுதியிருப்பார்.  இந்த நாவல்களில் அவர் வர்ணிக்கும் சர்ச் ஸ்​பெயினின் விட்​டோரியா நகரில் உள்ள சான்டா மரியா சர்ச். பில்லர்ஸ் ஆஃப் தி எர்த்தின் ஸ்பானிய ​மொழி​பெயர்ப்பு ​வெளியான முதல் மாதத்தில் 2,75,000 பிரதிகள் விற்றது.  இ​தைவிட ஆச்சரியமான ஒரு தகவல் இருக்கிறது.  அந்த ஊர் மக்கள் அந்த சர்ச் வாசலில் ​கென் ஃபா​​லெட்டிற்று ஆளுயர ​வெண்கலச் சி​லை ​வைத்திருக்கிறார்கள்.  ​கென் ஃபா​லெட் தன் சி​லை​யைத் தா​னே திறந்து ​வைத்தார்.  எந்த ஒரு எழுத்தாளனுக்கும் உலகில் இதுவ​ரை கி​டைத்திராத மரியா​தை இது.  ஆனால், இந்த மரியா​தைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்பதில் சந்​தேக​​மே இல்​லை. 

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

  •  

கதை நிஜமான கதை

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு குட்டி நாடு.  ஏராளமான கனிமவளம் கொண்டது. அங்கு ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி.  அவருக்கு எதிரணியில் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மற்றொரு வருங்கால சர்வாதிகாரி.  அவரை ஆட்சியில் அமரவைத்து, கனிமவளங்களை மொத்தமாகச் சுரண்டத் திட்டமிடும் ஒரு பன்னாட்டு ஏகபோகநிறுவனம். தானே ஒரு ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி, தனது ஆளை ஆட்சிக்குக் கொண்டுவந்தால், காலாகாலத்தில் சுரண்டலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் அந்த நிறுவனம் ஒரு கூலி ராணுவப் படையை (mercenary army) ஏற்பாடு செய்கிறது.  கோடிக்கணக்கில் செலவு செய்து புரட்சியும் நடக்கிறது.  கூலிராணுவப்படையின் தளபதி கடைசியில்[i] இரு சர்வாதிகாரிகளையும் கொன்றுவிட்டு, சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு மிதவாத மக்கள் தலைவரை அதிபராக்கிவிடுகிறார்  .கைக்காசைச் செலவழித்த நிறுவனம் செய்வதறியாது திகைத்துநிற்க சுபம் !

      மேற்படி 10-20 வரிக்கதை மிக நுட்பமாக எழுதப்பட்ட, பிரும்மாண்டமான நாவலான ‘தி டாக்ஸ் ஆஃப் வார் ( the dogs of war) என்ற நாவலின் மிக மோசமான சுருக்கம். தி டாக்ஸ் ஆஃப் வார் என்பது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய வரி. இந்த நாவலை எழுதியவர் தனது 27ஆவது வயதில் ‘டே ஆஃப் தி ஜகால்’ என்ற நாவலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்ற ஃபிரடெரிக் ஃபார்சித்.  டே ஆஃப் தி ஜகால் எட்வர்ட் ஃபாக்சின் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் திரைப்படமாகவும் வந்து சரித்திரம் படைத்தது. மேற்படி தி டாக்ஸ் ஆஃப் வாரும்கூட ஓரளவு மூலக்கதை சிதையாது, திடைப்படமாக வந்தது.  கூலி ராணுவப்படைத் தளபதியாக கிறிஸ்டோபர் வாக்கன் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருந்தார்.

      ஃபார்சித் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் அங்குலம் அங்குலமாக நுணுக்கமாக எழுதுபவர்.  டே ஆஃப் தி ஜகாலில் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்முறை பற்றி விவரிப்பது அற்புதம்.  1970களில் அவர் சொல்லும் சட்ட ஓட்டைகளை பல வருடங்கள் ஆராய்ந்து 2003ல் தான் பிரிட்டிஷ் அரசு சரிசெய்தது.  அதுபோலவே ராஜீவ்காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மனிதவெடிகுண்டு முறை அவரது தி நெகொஷியேட்டர் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

      இந்த நாவலை எழுத ஃபிரடெரிக் ஃபார்சித் உலகெங்கும் உள்ள தலைசிறந்த கூலிராணுவப்படை தளபதிகளைச் சந்தித்து, தாம் ஒரு நாட்டில் ராணுவப் புரட்சிக்கு ஏற்பாடு செய்துவருவதாகக் கூறி, பேச்சுவார்த்தைகள் நடத்தி, விஷயங்களைச் சேகரித்தார். கூலிராணுவத்தினரைத் தொடர்ந்து கண்காணித்து வரும் சி.ஐ.ஏ, கே.ஜி.பி, மொஸாத், எம்.ஐ.6 போன்ற உளவு நிறுவனங்கள் ஃபார்சித்தை தீவிரவாதி பட்டியலில் வைத்துக் கண்காணித்தன.  தி டாக்ஸ் ஆஃப் வார் நாவல் வெளிவந்ததும், சே! இதற்குத்தானா என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. கூலிராணுவப்படையை உருவாக்கி ஒரு நாட்டில் திடீர்புரட்சியை (coup)  ஏற்படுத்துவது எப்படி ( நம் ஊர் சமையல் குறிப்பு புத்தகம் போல!) என்பதை விளக்கமாக விவரிக்கும் ஹவ் டு ஸ்டேஜ் அ மிலிட்டரி கூப் என்ற நூலின் ஆசிரியர் கென் கானர் தி டாக்ஸ் ஆஃப் வார் நாவலைத்தான் கூலிராணுவப்படைகளுக்கு பாடநூலாகப் பரிந்துரை செய்கிறார்!

      அதன்பிறகு ஃபார்சித் இரண்டாம் உலகப்போர்க்குற்ற நீதிமன்றத்திலிருந்து தப்பி தலைமறைவாக வாழும் நாஜிதளபதிகள் பற்றிய நாவலான ‘தி ஒடிஸ்ஸா ஃபைல்’, வளைகுடா போர் பற்றிய நாவலான ஃபிஸ்ட் ஆஃப் காட், சோவியத் யூனியன் சிதறுண்ட பின், அங்கு எழுந்த மாஃபியா அட்டகாசம் பற்றிய தி ஐகான், பனிப்போர் கால நாவலான தி டெவில்ஸ் ஆல்டர்னேடிவ் (பனிப்போர் காலத்திய நாவல்களில் அமெரிக்காவுடனான ஒரு சிக்கலில் ரஷ்யா ஜெயிப்பது மாதிரி முடியும் ஒரே நாவல் இதுதான்) என்று பல நாவல்கள் எழுதி ஏராளமான ரசிகர்களின் ஆதர்ச எழுத்தாளரானார்.  நம் கட்டுரை அதைப் பற்றியல்ல.

      எத்தனை நாவல் வந்தாலும் டாக்ஸ் ஆஃப் வாரின் தாக்கம் குறையவில்லை. ஒரு படைப்பாளனின் கூற்று பொய்யாகலாமா? கம்பனின் கூற்றை மெய்ப்பிக்க சரஸ்வதிதேவி கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாய் வந்த கதை போல,  தி டாக்ஸ் ஆஃப் வாரை உண்மையாக்க ஒரு பெரிய இடத்துப் பிள்ளை முடிவு செய்தார்.

      நாவலில் கூறப்படும் ஆப்பிரிக்கநாடு என்று விமர்சகர்கள் சந்தேகிக்கும் ஈக்வடோரியல் கயானா உண்மையாகவே கனிமவளம் நிறைந்த நாடு.  மேற்சொன்ன பெரிய இடத்துப் பிள்ளையின் பன்னாட்டு நிறுவனம் அதை விழுங்க ஆசை கொண்டது.  அந்தநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் ஒரு டுபாக்கூர் கம்பெனி அங்கு துவங்கப் பட்டது  கம்பெனிக்கு வந்துசெல்லும் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டன.  கூலிராணுவப்படை ஏற்பாடுகள் முடிந்தன.  திடீரென இந்தப்படை அந்தநாட்டில் நுழைந்து, அதிபரைக் கொன்று, கம்பெனிக்கு வேண்டப்பட்ட பொம்மையை அதிபர் நாற்காலியில் உட்கார்த்திவிட்டால், நாடே கம்பெனி கையில் ! கம்பெனி நாள் நட்சத்திரம் பார்த்துக் குறித்த சுபயோக சுபதினத்தில் 64 கூலிராணுவப்படையினர் ஜிம்பாப்வேயின் ஹாராரே விமானநிலையத்தில் விமானத்தில் ஏறியபோதே, எப்படியோ விஷயம் கசிந்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, ஈக்வடோரியல் கயானா ஆகிய மூன்று நாடுகளின் உளவு மற்றும் கமாண்டோ கூட்டுப்படை 64 பேரையும் சிறு சிராய்ப்புகூட இல்லாமல் கைது செய்தது.

கூலிப்படையினருக்கு தலா ஆயிரம் டாலர்கள்தான் கூலி பேசியிருந்தார்களாம்.  வேலை முடிந்து புதுஅதிபர் வந்ததும் அவரது மெய்க்காவலாளர் பதவி – மாதம் 10000 டாலர் சம்பளம் என்று ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.  கடைசியில் எல்லோரும் சிறையில்.  விசாரணையில் கூலிப்படையின் தளபதி சைமன் மான் தங்களை வேலைக்கு அமர்த்தியவர் பெயரைச் சொன்னதும் ஆப்ரிக்கக்கண்டமே அதிர்ந்தது.  தென் ஆப்ரிக்காவில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரையும் கைது செய்து இழுத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். வழக்கின் முடிவில் கூலிப்படையின் தலைவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை. மற்றவர்களுக்கு ஓராண்டு சிறைவாசம்.  ஏற்பாடு செய்தவரின் அம்மா உலகளாவிய செல்வாக்கு உடையவர். அவர் தலையீட்டால் பிள்ளைக்கு 30 லட்சம் ராண்ட் அபராதமும், மூன்றாண்டு சிறைத்தண்டனையும்.  அதுவும் அவரது நன்னடத்தைக்காக (!) தள்ளுபடி செய்யப்பட்டது.

      தி டாக்ஸ் ஆஃப் வாரைப் படித்து, அதே நாட்டில், அதே போல ராணுவப்புரட்சி ஏற்படுத்தி, நாட்டையே பிடிக்க நினைத்த அந்தப் பெரிய இடத்துப் பிள்ளை ஸர். மார்க் தாட்சர்.  அவரது அம்மா இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் திருமதி. மார்க்கரெட் தாட்சர். இதன் முழுவிபரங்கள் பிபிசி செய்தித்தொகுப்பாக வந்தன.  இன்றும் நாம் இணையத்தில் இதன் விபரங்களைக் காணலாம். நூறுசத லாபம் என்றால் ஏகாதிபத்தியம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று மார்க்ஸ் கூறியது எத்தனை சத்தியமான வார்த்தைகள் !

      நம் ஊர் அரசியல்வாதிகள், வாரிசுகள், தொழிலதிபர்கள் இது போன்ற ஆங்கில நாவல்களெல்லாம் அதிகம் படிக்காமல் இருப்பதும் ஒருவகையில் நன்மைதான் போலும் !    


பின்னி​ணைப்பு

இந்த மார்க் தாட்சரின் ​ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கம்​பெனியுல் முதலீடு ​செய்தவர்களில் முக்கியமானவர் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்.  அவ​ரைப் பற்றிய தனிக் கட்டு​ரை ஒன்று பின்னால் இருக்கிறது.

ப​டைப்புகளின் பட்டியல்

The Afghan  9/11 தாக்குதலுக்குப் பின் நடக்கும் க​தை. க​தையில் பின்​லேடனும் ஒரு பாத்திரமாக வருவார்.

Avenger ​  ​போஸ்னியப் ​போர் பற்றிய க​தை. ​போஸ்னியப் ​போ​ரையும், வியட்நாம் ​போ​ரையும் பற்றி மாற்றி மாற்றிச் ​சொல்லிச் ​செல்லும் இந்தக் க​தை 2001 ​செப்டம்பர் 10ம் ​தேதி அற்புதமாக முடியும்.

The Cobra

The Day of the Jackal – தி​ரைப்படமாக வந்தது.  இந்த நாவலுக்காக அவர் எட்கர் ஆலன் ​போ பரி​சைப் ​பெற்றார். இக்க​தையின் ​மோசமான தழுவலான ஆகஸ்ட் 1 என்ற ம​​லையாளத் தி​ரைப்படம் ​வெற்றிகரமாக ஓடியது.  மம்முட்டியும், ​கேப்டன் ராஜூவும் பிரமாதமாக நடித்த படம் இது.  பின்னர் , இதன் அடுத்த பாகமாக ஆகஸ்ட் 15 என்ற படம் கூட வந்ததாக ஞாபகம்.

The Deceiver   பனிப் ​போ​​ரை மிகமிக நுட்பமாகக் காட்டிய க​தை.

The Dogs of War  தி​​ரைப்படமாக வந்தது.

The Fist of God  சதாம் உ​சேன் முக்கிய பாத்திரமாக வரும் இந்த நாவல்       வ​​ளைகுடா ​போர் பற்றிய அரு​மையான பதிவு.  எனக்குத் ​தெரிந்து ஒ​ரே பதிவு என்றுகூடச் ​சொல்லலாம். 

The Fourth Protocol   தி​ரைப்படமாக வந்தது

Icon

The Kill List

The Negotiator

The Odessa File   தி​ரைப்படமாக வந்தது. நாஜி ​ஜெர்மனி பற்றி, உலகப் ​போர் முடிந்தபின் பல முக்கியமான நாஜி அதிகாரிகள் எப்படி ​போர்க்குற்ற விசாரண​கைளிலிருந்து தப்பி, ​வேறு ​பெயர் அ​டையாளங்க​ளோடு, ​வெவ்​வேறு இடங்களில் ​செல்வாக்காக வாழ்ந்தார்கள் என்ப​தைச் ​சொல்லும் க​தை.

The Phantom of Manhattan

The Shepherd, பிரிட்டிஷ் ​போர் விமானி​யைக் கதாநாயகனாக ​வைத்து எழுதிய குறுநாவல். பிரடரிக் ஃபார்சித் ​போர் விமானியாகப் பணியாற்றியவர். நா​மே ​போர் விமானத்​தை ஓட்டுவது ​போன்ற அனுபவத்​தைத் தருவார் – சுஜாதாவின் பதினான்கு நாட்கள் நாவ​லைப் ​போல.

இ​வை தவிர no comebacks, the avenger என இரு சிறுக​தைத் ​தொகுப்புகளும் உண்டு.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

  •  

அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரட்டும் !

      உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது.  அதற்கு முன்னால்  நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை.  அதன் பெயர் புசானன் மேஜை.  இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது.  ‘அதில் உட்காருங்கள்.  அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர்.  அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு.  எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை.  மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.

      வாலஸ் மெல்ல அமர்கிறார்.  எதிரே பிரும்மாண்டமான மேஜை.  அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு.  அதிபரின் குடும்பப் படங்கள்.  ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள்.  விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது.  மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.

      பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள்.  எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி.  அருகே இரண்டு  சாதா கறுப்பு தொலைபேசிகள்.  அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.

      நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ்.  அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது.  பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார்.  இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு.  அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள்.  ஒரு கடற்போர் சித்திரம்.  அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி.  அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம்.  இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.

      நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி.  அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள்.  வெளியே பாதுகாவலர்கள்.  நிற்கும் அறை.  அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம்.  அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.

      ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்?  அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம்.  அந்த நாள் 1963 செப்டம்பர் 16.

      அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது.  இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார்.  பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள்.  ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார்.  நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !

      மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது.  தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ்.  ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ;  கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).

      நேரம் முடிந்துவிட்டது.  அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ்.  உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும்   நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி.  ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!

      நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ்.  டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது  கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது.  வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.

      நாவல் வெளியாகிவிட்டது.  வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது.  கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ்.  பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த  நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.

      பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார்.  அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,

      ஒரு தட்டில்

      பழங்களும், பிரார்த்தனைகளும்

      வைக்கப்பட்டன.

      பழத்தைத் தின்றார் கடவுள்.

      பழுக்கட்டும் என்று

      விட்டு வைத்தார்

      பிரார்த்தனைகளை.

என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது.  ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !

பின்னி​ணைப்பு

இது ஒரு நாள் சம்பவமல்ல.  பத்து நாட்கள் இது​போல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வ​ரை ​கென்னடி ஓய்​வெடுக்கும் ​போது அவரது அலுவலக அ​றையில் இது ​போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.

இர்விங் வாலஸின் பு​னைவுக​ளைப் ​போல​வே அவரது கட்டு​ரை நூல்களும் மிகமிக முக்கியமான​வை.  இக்க​ட்டு​ரை அவரது சண்​டே ​ஜெண்டில்​மேன் என்ற கட்டு​ரைத் ​தொகுப்பிலிருக்கிறது – ஆம், ​வே​றெரு கட்டு​ரையில் நாம் ஏற்கன​வே பார்த்தது ​போல அவர் ஞாயிற்றுக்கிழ​மைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்பு அது.  1965ல் ​வெளிவந்த இந்தத் ​தொகுப்பில் அவர் அ​மெரிக்கா ​தொடர்பாக எழுதிய​வை, ​வெளிநாடு ​சென்று பார்த்த​தை எழுதிய​வை என இரு ​பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார்.  இந்தக் கட்டு​ரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகா​கோவின் புகழ் ​பெற்ற எவர்​​லே விடுதி​யை நடத்திய ​இரு பெண்கள் பற்றிய கட்டு​ரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.

இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னு​ரை மிகமிக முக்கியமானது.  புகழ்​பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உ​ழைப்​பைப் ​போகிற​போக்கில் ​சொல்வார்.  பத்திரி​கைகளில் ​வே​லை பார்த்துக் ​கொண்டு முதலாளி ​சொன்ன​தை எழுதிக் ​கொண்​டே ஞாயிற்றுக்கிழ​மைகளில் அவர் எழுதிய கட்டு​ரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் ​பெற்றுவிடவில்​லை.  அவரது புகழ் ​பெற்ற ப​டைப்புகளின் எண்ணிக்​கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட ப​டைப்புகளும் உண்டு. அவர் ​சொல்வ​தை அப்படி​யே தருகி​றேன் – பாருங்கள்.

என் பதி​னேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளு​மைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டா​ரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீ​ரோஸ் ஆஃப் டு​டே என்று ஒரு நூல் எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பதி​​​னெட்டாவது வயதில் மக்களின் ​பொதுவான மூடநம்பிக்​கைக​ளை ​வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பத்​தொன்பதாம் வயதில் ​ஹோண்டூராஸ் காடுகளில் நான் ​மேற்​கொண்ட சாகசப் பயணம் பற்றி ​​மை அட்​வென்சர் டி​ரெய்ல் என்று ஒன்று எழுதி​னேன்.  நிராகரிப்பு.  ​டேனியல் ​டெஃ​போவின் வாழ்க்​கை வரலாற்​றை தி சண்​டே ​ஜென்டில்​மேன் ( அதுதான் ஒரிஜினல் ​போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது.  இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்​கை வரலாற்​றை ​ரோமன் ஹாலி​டே என்று ஆரம்பித்து பாதி எழுதி நா​னே நிறுத்திவிட்​டேன்.  அப்​போது பல பத்திரி​கைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டு​ரைக​ளை திருத்தி எழுதி புத்தகமாகத் ​தொகுத்​தேன்.  அது பிரசுரமாகவில்​லை.  இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நி​னைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் ​மெய்ன் காம்ஃப் ​என்று ஒன்​றை எழுதி​னேன்.  நிராகரிப்புதான்.   இருபத்தி​யேழாவது வயதில் நான் ​பத்திரி​கை வாழ்வில் பேட்டி கண்ட ஆளு​மைக​ளைப் பற்றி வித் ​​தெயர் ​பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல்.  பிறகு ​கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்தி​லே​யே அ​ரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் ​தோல்விதான். முப்பத்தி​யேழாவது வயதில் பத்திரி​​கை ​வே​லை​யை விட்டுவிட்டு சீரியஸாக முழு​நேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதிய​போதுதான் முதல் புத்தகம் வந்தது.

பிரசுரமாகாத இந்த நூல்க​ளை யாராவது ​தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்​றேனும் ஒரு நாள் அ​வை பிரசுரமாகும் என்ற நம்பிக்​கை எனக்கு இருக்கிறது.

எப்படி எழுத​வேண்டும் என்ப​தை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சி​யோடு எழுத​​வேண்டும் என்ப​தையும் நாம் இர்விங் வாலஸிடம் ​சேர்த்துக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

  •  

சோதனைக்குழாயில் டைனாசோர் !

இணையத்தில் சமீபத்தில் கிடைத்த ஒரு ரத்தினம் The science of Michael Crichton என்ற மின்னூல்.  அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பத்துபேர் சேர்ந்து, மைக்கேல் கிரைட்டனின் விஞ்ஞான நாவல்களில் எத்தனை சதம்  விஞ்ஞானம் எத்தனை சதம் கதை என்று மிகக் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து எழுதிய நூல். பத்து கட்டுரைகள். 184 பக்கங்கள்.

      நூலைப்படித்தும், என்னையறியாமல் அப்படியே அவரது ஜுராசிக் பார்க் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் படமாக வந்து இன்றும் ஏதேனும் ஒரு சானலில்   நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே ஜுராசிக் பார்க்தான்.  ஒரு காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞான நாவலாக என்னைக் கவர்ந்த அதே ஜுராசிக் பார்க்.     அதில் விஞ்ஞானம் மிகவும் குறைவு,கதைதான் அதிகம் என்று 27 ஆண்டுகள் எம்பிரியானிக் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ள டாக்டர் சான்டி பெக்கர் 40 பக்கத்திற்கு கட்டுரை எழுதிய பிறகு, கிரைட்டனின் தீவிர ரசிகன் என்றபோதிலும், அதை ஏற்பதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஆனாலும் மறுவாசிப்பில் மைக்கேல் கிரைட்டன் என்னை வேறுவிதமாக ஈர்த்தார்.

      6’9” உயர உருவத்தின் காரணமாக இருந்த கூச்சசுபாவத்தால் யாரிடமும் பேசிப் பழகாத தனிமை விரும்பியான கிரைட்டன் இயல்பாகவே ஒரு படைப்புமனம் கொண்டவராக இருந்தார்.  தொழிலால் மருத்துவர் என்றாலும் ஒருகட்டத்தில் முழுநேர எழுத்தாளரானார்.  திரைப்பட இயக்குனரானார்.  சக மருத்துவரான, சகஎழுத்தாளரான ராபின் குக் எழுதிய கோமா என்ற மருத்துவ திகில் படத்தை இயக்கினார்.  19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் கொள்ளையை வைத்து, தான் எழுதிய தி கிரேட் டிரைன் ராபரி என்ற நாவலை அதே பெயரில் படமாக எடுத்தார். இதில் சீன் கானரி நடித்திருக்கிறார். ஜுராசிக் பார்க்கில் கிழவர் ஹாமாண்ட் பாத்திரத்தில் அற்புதமாக  நடித்தவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் கிரைட்டன்.  அதிலும் வெற்றிதான்.  1994ல் அமெரிக்காவின் டாப் திரைப்படமாக ஜுராசிக் பார்க்கும், டாப் தொலைக்காட்சி தொடராக ஈ.ஆர் தொடரும், டாப் நாவலாக டிஸ்குளோசர் நாவலும் வெகுகாலத்திற்கு இருந்தன.  மூன்றுமே கிரைட்டனின் படைப்புகள்.  இவரைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் இந்த சாதனையை இன்றுவரை செய்யவில்லை. ஆனாலும் அடிப்படையில் மருத்துவரான அவரது மனம் விஞ்ஞானப் புனைகதைகளில்தான் இருந்தது.

அவர் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஆய்வுகளை,  மாற்றங்களை வைத்துத் தன் நாவல்களைப் புனைந்தார்.  அவர் தமது நாவல்களில் கூறும் அறிவியல் ஆய்வுகளுக்கு, போக்குகளுக்குத் தரும் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருக்கும். செயற்கையாக டைனாசோர்களை உருவாக்கும் ஜுராசிக் பார்க்காக இருக்கட்டும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளின் சில அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் லாஸ்ட் வேர்ல்ட்டாக் இருக்கட்டும், ( இதைத்தான் ஸ்பீல்பெர்க் டைனாசோரின் தாய்ப்பாசத்தைக் காட்டும் ஆங்கில அன்னை ஓர் ஆலயமாகக் கெடுத்தார்),காலயந்திரப் பயணத்தையும், 13ம் நூற்றாண்டு ஐரோப்பா வரலாற்றையும் அற்புதமாக இணைத்து எழுதிய ‘டைம்லைன்’, மனிதர்களைப் போல் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த மனிதக்குரங்கினை மையமாக வைத்து எழுதிய காங்கோ ( இது இதே பெயரில் திரைப்படமாகவும் வந்தது. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு சானலில் அது ஓடிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது இன்று மனிதக்குரங்குக​ளை ​​வைத்து வந்துள்ள பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் தி​ரைப்பட வரி​சைக்கு இந்த காங்​கோதான் முன்​னோடி) புவி வெப்பமயம் என்பதே ஒரு ஏகாதிபத்திய சதிதான் என்ற கருத்தில் ஏகப்பட்ட வ​​ரைபடங்கள், புள்ளிவிபரங்க​ளோடு எழுதப்பட்டு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான தி ஸ்டேட் ஆஃப் ஃபியர், என எல்லா நாவல்களுமே வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான தகவல்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு எழுதப்பட்டவை.  அவரவர் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்ற, 25,30 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உள்ள அறிஞர்கள் ( இவர்களும் கிரைட்டனின் தீவிர ரசிகர்கள்தான்)  கிரைட்டனின் நாவல்களை வரிவரியாக ஆராய்ந்து மேற்கூறிய நூலை எழுதிய பிறகுதான் கிரைட்டனின் நாவல்களில் 20 சதம்தான் விஞ்ஞானம், 80 சதம் கதைதான் என்று தெரிகிறது.    நம்  நாட்டில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மாயக்கலவையான வசீகரஎழுத்து.

விஞ்ஞானக்கதையில் விஞ்ஞானத்தின் சதவிகிதம் குறைந்தால் என்ன?   கிரைட்டன் கதைகளில் அறிவியல் அடிப்படையில் கதை எழுதினாலும், அதையும்தாண்டி, கதையின் ஆதாரமாக அறிவியலின் நோக்கத்தை வைத்திருப்பது  இந்த மறுவாசிப்பில் தெரிந்த்து.  ஜுராசிக் பார்க்கில் கேயாஸ் கொள்கை பேசும் பேராசிரியர் டாக்டர் மால்கம் கிரைட்டன்தான். மால்கமின் குரலில் கிரைட்டன் அறிவியல் ஆராய்ச்சிகள் யாரால் செய்யப்படவேண்டும், ஆராய்ச்சிகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம், ஆராய்ச்சிகளுக்கு யார் செலவு செய்வது, ஆராய்ச்சிகளின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவா? சாதாரண மக்களின் நல்வாழ்விற்காகவா ? என்றெல்லாம் பேசுகிறார்.  ஜெனிடிக் இஞ்சினீயரிங், பரிணாமத் தத்துவம் என்றெல்லாம் போகும் கதையில் நடுநடுவே, மால்கம் குரலில்  கிரைட்டன்  ‘லேசர், டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், போலியோ சொட்டு மருந்து,ஹோலோகிராம்,கணினி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இவை எல்லாமே தனியார் ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. அரசுப் பல்கலைக்கழகங்களில் புதிய ஆய்வுகளுக்கு எவ்வித ஊக்குவிப்பும் கிடையாது,’  ‘இத்தனை முன்னேற்றத்திற்குப் பிறகும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள் வந்தபின்னும் கூட 1930களிலிருந்து இன்று வரை வீட்டுவேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் குறையவே இல்லை’, விஞ்ஞானிகள் தங்களை இயற்கையை வென்றவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் படகு செய்யலாம். ஆனால் கடலைச் செய்யமுடியாது.  அவர்களால் விமானத்தைச் செய்ய முடியலாம். ஆனால் காற்றைச் செய்யமுடியாது, என்றெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார். அவரது கோபம் விஞ்ஞானத்தின் மீதல்ல.  விஞ்ஞானத்தின் வர்த்தகமயத்தின் மீதுதான்.  அவரது நாவல்களில் விஞ்ஞானிகள் தீராத அறிவியல்தாகத்தோடு, அந்த  முயற்சியில் எத்தகைய இடையூறு வந்தாலும் ஏற்கத் தயாரானவர்களாக இருக்க, அவர்கள் ஆய்வு நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் லாபத்திற்காக எத்தகைய மோசமான செயலையும் செய்பவர்களாக  கவனமாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிவியல் புனைகதைகளை வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள், விண்வெளிப் பயணம் என்பதைத் தாண்டி முதலாளித்துவ உலகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கடும்விமர்சனமாகத் தனது  நாவல்களை எழுதியவர் என்பதால் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு  ஜொலிப்பவர்   கிரைட்டன். 

எது படித்தாலும் தமிழ்ச்சூழலில் என்ன நிலமை என்று யோசிக்கும் என் மனம் இப்போதும் அதேபோல் யோசித்தது.  விஞ்ஞானக்கதைகளை ஓரளவு எழுதியவர் சுஜாதா மட்டுமே. இவ்வகைக்கதைகள் தமிழில் இல்லாததற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யானத் தூக்கம், நினைவுத்திரைகள் பின்னோக்கிச் செல்வது, சமயலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு, என்றும் மாறாத காதல், இது போதும் என்கிற பொன் செய் மனோபாவத்தால்தான் முக்கியமான இவ்வகைக் கதைகள் தமிழில் வரவில்லை என்கிறார் சுஜாதா.  தமிழின் ஒரே விஞ்ஞான எழுத்தாளரான சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் கதை எவ்வளவு ? விஞ்ஞானம் எவ்வளவு ? என்ற ஆய்வு இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.  நண்பர் இரா. நடராசன் மனம் வைப்பாரா?

பின்னி​ணைப்பு

ப​டைப்புகள் பட்டியல்

Airframe

The Andromeda Strain   தி​ரைப்படமாக வந்தது

Binary

A Case of Need

Congo (novel)  தி​ரைப்படமாக வந்தது

Dealing: or the Berkeley-to-Boston Forty-Brick Lost-Bag Blues

Disclosure   தி​ரைப்படமாக வந்தது

Drug of Choice

Easy Go

Eaters of the Dead  தி​ரைப்படமாக வந்தது

Grave Descend

The Great Train Robbery  தி​ரைப்படமாக வந்தது

Jurassic Park (novel)  தி​ரைப்படமாக வந்தது

The Lost World (Crichton novel) தி​ரைப்படமாக வந்தது

        Micro

Next

Odds On

Pirate Latitudes

Prey

Rising Sun   தி​ரைப்படமாக வந்தது

Scratch One

Sphere   தி​ரைப்படமாக வந்தது

State of Fear

The Terminal Man

Timeline   தி​ரைப்படமாக வந்தது

The Venom Business

Zero Cool

Nonfiction

Electronic Life

Five Patients

Jasper Johns

Travels

​மைக்​கேல் கி​ரைட்டனின் ப​டைப்புகள் பற்றி வந்துள்ள நூல்கள்

The science of Michael crichton by Kevin R.Grazier

இது மிக முக்கியமான நூல். ​மைக்​கேல் கி​ரைட்டனின் முக்கிய நாவல்கள் அ​னைத்தும் பற்றி எழுதப்பட்ட கட்டு​ரைகளின் ​தொகுப்பு. 1) The andromeda strain, 2) Virtual reality and man-machine interface in disclosure and the terminal man, 3)Shock to the system, 4)Neanderthals and werdols, 5)Primate behaviour and misbehaviour in Michael Crichton’s congo, 6)crichton’s travel in time. 7)Artificial life in Michael Crichton’s prey, 8)Be afraid. Be very afraid : Michael Crichton’s state of fear, 9) Science comes second in next என்று ஒவ்​வொரு நாவலிலும் உள்ள விஞ்ஞான, கற்ப​னை கல​வை பற்றி ​பெரிய விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் இந்தக் கட்டு​ரைகளின் த​லைப்புக​ளைப் பார்த்தா​லே​யே அவர் எத்த​னை ​பெரிய விஞ்ஞான ​எழுத்தாளர் என்பது ​தெரியும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

  •