Reading view

சிவப்பு நிறச் செருப்பு

 

சிவப்பு நிறச் செருப்பு

உதயசங்கர்


ஒரு ஒற்றைச் செருப்பு. இடது கால் செருப்பு. குப்பைத்தொட்டியில் கிடந்தது. யார் போட்டார்கள் என்று தெரியவில்லை. அதன் வாரும் அறுந்திருந்தது. ரொம்பப் பழைய செருப்பு. குப்பை பொறுக்கும் ஜெயக்கொடி அதைப் பார்த்தாள். மங்கலான சிவப்பு நிறத்தில் ஒரு பக்கமாய் தேய்ந்திருந்தது.

ஜெயக்கொடி அதைக் கையில் எடுத்தாள். இன்னொரு செருப்பு கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். இல்லை. அந்தச் செருப்பு யாருக்கும் பயன்படாது. அவள் கால்களில் செருப்பு இல்லை. செருப்பில்லாமல்  பகல் முழுவதும் அலைந்து குப்பை பொறுக்குவாள். அப்போது தான் ஐம்பதோ அறுபதோ கிடைக்கும்.

போனவருடம் பள்ளிக்கூடத்துக்குப் போனாள். ஆனால் அப்பா இறந்தபிறகு அம்மாவுடன் குப்பை பொறுக்க வந்து விட்டாள். நிறம் மங்கிப்போன அந்தச் செருப்பைக் கையில் எடுத்துப் பார்த்தாள். தைத்துப் போடலாமா?

ஆனால் இன்னொரு செருப்பு இல்லையே!

சும்மா காலில் போட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.  இடது காலில் செருப்பைப் போட்டாள். என்ன மாயம்!

 வலது காலிலும் செருப்பு தோன்றியது. இரண்டு செருப்புகளும் புத்தம் புதிதாக இருந்தன. ஜெயக்கொடியால் நம்ப முடியவில்லை.  செருப்பைக்கழட்டினாள். மறுபடியும் பிய்ந்த ஒற்றைச் செருப்பாக மாறிவிட்டது. திரும்பப் போட்டாள்.

இரண்டு சிவப்பு நிற புத்தம் புதிய செருப்புகள் அவளுடைய கால்களில் ஒளிவீசின.

அம்மாவிடம் காட்டினால் எப்படி இருக்கும்? என்ரு ஜெயக்கொடி நினைத்தாள். அடுத்த கணம் ஜெயக்கொடி பறந்து கொண்டிருந்தாள். அம்மா இருந்த இடத்துக்குப் போய் இறங்கினாள்.

அம்மாவுக்கு ஆச்சரியம். அம்மாவிடம் நடந்ததைச் சொன்னாள்.

செருப்பு கிடைத்து என்ன பயன்? நீயும் தம்பியும் பள்ளிக்கூடம் போய் படிக்க வேண்டும்.. கல்வி தான் நம்மைக் காப்பாற்றும்.. இந்த மாயாஜாலம் எல்லாம் எதுக்கு? “ என்றாள் அம்மா.

அடுத்த நிமிடமே அரசுப்பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தாள். இப்போது புது யூனிபார்ம் போட்டிருந்தாள். அவளுடைய கால்களில் இருந்த சிவப்பு நிறச்சசெருப்பு யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

ஜெயக்கொடியின் தம்பியும் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்திருந்தான். அவர்கள் வீட்டுக்குப் போகும்போது குடிசை வீடு நல்ல காங்கிரீட் வீடாக மாறியிருந்தது. வீட்டில் டி.வி. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், என்று எல்லாப்பொருட்களும் இருந்தன.

ஜெயக்கொடிக்கும் அவளுடைய தம்பிக்கும் தனித்தனியே எழுத்து மேஜை மேஜை விளக்கு, ஒரு சிறிய நூலகம் என்று எல்லாம் இருந்தது.

ஜெயக்கொடிக்கு மகிழ்ச்சி.

காலையில் எழுந்து வெளியில் வந்தாள். அவளுடனே குப்பை பொறுக்கிய தேவமலர் கிழிந்த உடையுடன் குப்பை பொறுக்கப் போய்க் கொண்டிருந்தாள்.  முத்து மாமா ஓட்டை சைக்கிளில் பழைய பாத்திர மூட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பையன் செல்வம் மிட்டாய் கேட்டு அழுது கொண்டிருந்தான்.

இதை எல்லாம் பார்த்த ஜெயக்கொடிக்கு வருத்தமாக இருந்தது. அவள் சிவப்பு நிறச் செருப்பிடம் கேட்டாள்,

எல்லாவற்றையும் மாற்ற முடியாதா? “

இல்லை.. ஜெயக்கொடி.. இந்தச் செருப்பு யார் காலில் பொருந்துகிறதோ அவர்களிடம் மட்டும் தான் மாயாஜாலம் செய்யும்..என்று பேசியது சிவப்பு நிறச்செருப்பு.

ஒரு கணம் யோசித்தாள் ஜெயக்கொடி.

  எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.. அதற்கு உன்னால் மாயாஜாலம் செய்ய முடியுமா? “

 என்று கேட்டாள் சிவப்பு நிறச் செருப்பு ,

..“ சிந்திக்க வேண்டும்.. எல்லாரும் சிந்திக்க வேண்டும்.. ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தன என்று சிந்திக்க வேண்டும்..அதற்குக் கல்வி கற்க வேண்டும் என்று சொன்னது.

ஜெயக்கொடி தன்னுடைய காலில் இருந்து சிவப்பு நிறச் செருப்பைக் கழட்டினாள். மறுபடியும் பிய்ந்த செருப்பாக மாறியது. அவளும் பழைய ஜெயக்கொடியாக மாறினாள்.

ஆனால் இப்போது அவளுடைய மனதில் ஒரு உறுதி தோன்றியது. எப்படியாவது பள்ளிக்கூடம் போக வேண்டும். படிக்க வேண்டும். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

 ஜெயக்கொடியை வாழ்த்தி மறைந்தது சிவப்பு நிறச்செருப்பு.

நன்றி - கூட்டெழுத்து

 

  •