பொன்மாலைப் பொழுது

(இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது) முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன், மே 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்ற இருக்கிறார்.

ஒன்பது தளங்களில் லட்சக்கணக்காக நூல்களுடன் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் செயல்படுகிறது. தமிழ் நூல்கள், குழந்தைகள் நூல்கள், ஆங்கில நூல்கள் என அனைத்தும் தனித்தனிப் பிரிவுகளாக உள்ளன. சொந்தமாகத் தங்களுடைய நூல்களை எடுத்துவந்து படிப்பதற்கென்றும் இங்கே இடம் உள்ளது. பார்வைச் சவால் கொண்டோருக்கான பிரிவு இந்நூலகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. இவர்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பிரெய்லி நூல்களும், குறுந்தட்டுகளும் இப்பிரிவில் உள்ளன. மேலும் இந்நூலகம் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது.
நூலகத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும்பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நூலகம் நடத்துகிறது. வார இறுதி நாள்களில் நடத்தப்படும் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சி அதில் ஒன்று. துறைசார் வல்லுநர்கள், கலைஞர்கள் ஒரு தலைப்பில் உரையாற்றுவார்கள். மே 17 ஆம் தேதி, முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.
எழுத்துலா, எழுத்துருப் பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றின் வழியாக முத்து நெடுமாறன், இளம் தலைமுறையினர் எழுத்துருத் துறையில் அதிகம் பங்கெடுக்க ஊக்கமளித்து வருகிறார். எழுத்துருத் துறை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக எழுத்துருவின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் உரையாற்றப் போகிறார்.
மே 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கருத்தரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
The post பொன்மாலைப் பொழுது appeared first on செல்லினம்.