Reading view

பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா

த்ரிஷாவையும் நயன் தாரா போன்றோரை அழைப்பதை கிண்டல் செய்தது அந்தக் காலம்.துரை முருகனாரையும் நக்கீரன் கோபாலையும் அழைப்பதை எண்ணிக் கூனிக் குறுகுவது இக்காலம். நடிகைகளைக் கொண்டாடுவதில் நேர்மை இருக்கிறது.பதவியில் இருக்கும் தலைவரை வரவழைப்பதில் டிரம்ப் தனம் இருக்கிறது. இது டிரம்ப்பிஸ்தான்.உண்டியலும் அதிகாரமும் அமெரிக்கா.இலாவணமும் அரசியலும் தமிழர் தேசி? இன்றைய தேதியில் மாற்று சந்திப்புகள், மாபெரும் ஒருங்கிணைப்புகள், … Continue reading

  •  

‘பாரதி யார்’ @ பாஸ்டன்

பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்!அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!!டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும். மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது? அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு … Continue reading

  •  

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்

இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

  •  

‘Everything everywhere all at once’ திரைப்படம் – அபத்தங்களால் ஆன வாழ்வு குறித்த வெளிச்சம்.

‘Everything everywhere all at once’ – திரைப்படம் குறித்துப் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்தது. நண்பர் ஒருவர் instagram -ல் அப்படத்தில் இருந்து காட்சி ஒன்றை பதிந்திருந்தார். அதன் சாகசம், கற்பனைத்தெறிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக, இசையோடு கூடிய அபத்தமான நிகழ்வுகள் கட்டிப்போட்டன. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பெருமளவில் இப்படம் கவனம் ஈர்த்திருக்கிறது என்று தெரிந்ததும், கடந்த வாரம் திரைப்படத்தைக் கண்டு பேறு பெற்றோம்.

Mild Spoilers ahead

மார்வெல் காமிக்ஸ் அடிப்படையிலான படங்களின் ரசிகர்களுக்கு Multiverse என்பது புதிதில்லை. ஆனால், சூப்பர் ஹீரோக்கள் இல்லாமல் எளிய மனிதர்கள் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு இடையே எண்ணியபடி தாவி குதிக்க ஆரம்பித்தால் என்னாகும்? அது தான் இப்படத்தின் மைய இழை.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ஈவ்லின் (மிச்செல் யோஹ்), அவரின் கணவர், மகள் ஆகியோர் சலவை செய்யும் கடையொன்றை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள்.
வாழ்க்கை ஒரே மாதிரி எல்லா நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நம் அன்றாட உலகை இக்குடும்பத்தினர் பிரதிபலிக்கிறார்கள். என்ன செய்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்கிற வினா வாழ்க்கையை அரித்துக் கொல்கிறது. ஏற்பிற்கும், அன்பிற்கும், கனிவிற்குமான நேரமே இல்லாதது கண்முன் விரிகிறது. வருவாய் துறை அதிகாரியிடம் கணக்கு, வழக்குகளைக் காட்டுவதற்காகக் கணவனும், மனைவியும் லிஃப்ட்டில் ஏறுகிறார்கள். அங்கே தான் வாழ்க்கை திசை மாறுகிறது.

வேறொரு பிரபஞ்சத்தின் மக்கள் ஈவ்லினின் உதவியை நாடுகிறார்கள்? எதற்காக? ஈவ்லினிற்கு என்னவென்று புரிவதற்குள் பெரும் களேபரங்கள் வரி அலுவலகத்தில் நிகழ்கிறது. வேற்றுலகில் ஈவ்லினின் வாழ்க்கைகள் கண்முன் தோன்றுகின்றன. ஒரே கணத்தில் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு வாழ்க்கைகளுக்கு எகிறி குதிக்க முடிகிறது. இதனால், நிகழ்காலத்தை மாற்ற முடிகிறதா?

நம் காலத்தின் நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை குறித்த அபத்த நகைச்சுவையாக இப்படத்தை ஒரு தளத்தில் அணுகலாம். உடைந்து போயிருக்கும் சக மனிதர்களின் கதைகளை நிதானித்துப் பார்க்க வைக்கும் மென்மையான விவரிப்பாகவும் புலப்படலாம். நிராகரிப்பும், வஞ்சனையும், துரோகமும் நிறைக்கின்றன. மிக நெருங்கிய உறவின் வெம்மை, மனப்போராட்டங்கள், அங்கீகரிப்புக்கான ஏக்கங்கள் எதுவும் புரியாத நம் வாழ்க்கை ஏன் இப்படியாகிப் போனது?

‘என்னை விட்டுவிடுங்கள். எங்கேயோ போகிறேன்’ எனப் பரிதவித்து, பிரிந்து போகத் துடிக்கும் உறவோடு எப்படி அன்பு பாராட்டுவது? முடிந்து போகும் வாழ்வில் நிலையாமை மட்டுமே உண்மை என்பது புரிந்தும், எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது? தகிப்பையும், புறக்கணிப்பையும், வெறுப்பையும் உமிழும் உலகினில் விரும்பியதை செய்ய நம்மால் முடியுமா?

இத்தனை கேள்விகளுக்கான தேடல்களையும், அறிவியல் புனைவு ஒன்றில் தத்துவ விசாரணைகள், தாய்-தந்தை-மகள் இடையேயான பாசப்போராட்டம் ஆகியவற்றோடு பிணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பும், இசையும் மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளிக்கின்றன. பல்வேறு ஹாலிவுட் படங்களை மென்மையாகக் கேலி செய்யும் காட்சிகளும் இப்படத்தில் உண்டு.

சண்டைக்காட்சிகளில் விலா நோக சிரிப்போம். பல்வேறு பிரபஞ்சங்களுக்குள் பாத்திரங்கள் பயணிப்பதால் சில நொடிகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பார்வைகள், போராட்டங்கள், அனுபவங்கள் திரையில் விரிகின்றன. அதனால் ஒரு கணத்தைத் தவறவிட்டாலும் கதையின் போக்கு குழப்பி விடும். கருந்துளையாக நம்மை உள் இழுக்கும் வாழ்க்கையைப் பேரன்போடு குறுக்கு விசாரணை செய்யும் இப்படத்தின் பெரும் பலம் அதன் நடிகர்கள்.

ஜாக்கி சான் நடிக்க வேண்டியதாக இருந்த நாயகியின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் கி ஹுய் குவான் நெகிழ வைக்கிறார். வரி அதிகாரியின் கடுமையும், ஏளனமும், எச்சரிப்பும் கலங்கடிக்கின்றன. Multiverse கதைகளின் சில புள்ளிகள் பூடகமாக இருக்கும். சமயங்களில் எளிய பார்வையாளர்களைக் குழப்பியடிக்கும். இத்திரைப்படம் தன்னுடைய நேர்த்தியான திரைக்கதை, மையமான ஒரு கதையைச் சுற்றிய துணைக்கதைகளால் அருமையாகப் புரியும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. இப்படம் ஒவ்வொரு மனிதரைப்பற்றிய ஒரே கதைகளைப் புறக்கணித்து, அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் பற்பல கதைகளின் மீது கவனம் குவித்திருக்கிறது. அரவணைத்துக் கொள்ளவும், முன்முடிவின்றி வாழ்வினை அணுகவும், பேரன்பை பரிமாறவும், இறுதியில் எதுவும் முக்கியமில்லை என்பதையும் வண்ணமயமாகச் சொல்லிச்செல்கிறது. மறக்காமல் திரையரங்குகளில் பாருங்கள்.

  •  

ஆப்பிள் பழமல்ல, பணம்

Apple Pay

மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு உதவும் செயலியான ஆப்பிள் பே, அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Apple Pay

கடந்த பத்து ஆண்டுகளாக மின்னணு பணப் பரிவர்த்தனை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கைகளிலும் இருக்கிறது. மீதி சில்லறைக்கு மிட்டாய் வாங்கியதெல்லாம் பலருக்கு மறந்தேவிட்டது எனலாம். அந்த அளவுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது. பல்வேறு நிறுவனங்களும் பணப்பரிவர்த்தனைக்காகச் செயலிகளைப் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனமும் தன் பங்குக்கு ஆப்பிள் பே (apple pay) செயலியை 2015ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல்வேறு நாடுகளில் இச்செயலி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வங்கி நிர்வாகங்களுடனும் தொடர்ச்சியாக உரையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2024ல் ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் வாலட்டின் துணைத் தலைவர் ஜெனிபர் பெய்லி அளித்த பேட்டியொன்றில், “ஆப்பிள் நிறுவனம் சிறந்த பயனர் அனுபவத்தைத் தர, மிகவும் ஆர்வமாக உழைத்துவருகிறது. ஆப்பிள் பே அறிமுகப்படுத்தப்பட்டபோது, சுமார் 3% வங்கி நிர்வாகங்கள் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டன. அந்த எண்ணிக்கை இப்போது 90% ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சந்தைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் ஆப்பிள் பே-ன் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார்.

ஆப்பிள் பே ஏறக்குறைய 90 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் உள்ள நாடுகளில் சிலவற்றில், உள்ளூர் வங்கிகள் இச்செயலியில் தங்கள் வங்கிகளை இணைப்பதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன. ஆப்பிள் பே அமெரிக்காவில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்தாலும், போர்ட்டோ ரிக்கோவில் உள்ள மக்கள், பெரிய அமெரிக்க வங்கிகளின் கணக்குகள் மூலம் மட்டுமே ஆப்பிள் பேவை அணுகும் நிலை இருந்தது. இதுவரை எந்த உள்ளூர் வங்கியும் இந்தச் சேவைக்கான ஆதரவை வழங்கவில்லை.

அமெரிக்காவின் புகழ் பெற்ற உள்ளூர் வங்கிகளுள் ஒன்றான பாங்கோ பாப்புலர் வங்கி இப்போது ஆப்பிள் பே செயலிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன்மூலம் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் பணப்பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இனிமேல் அம்மக்கள் ஆப்பிள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

அதோடு ஆப்பிள் பே செயலியின் “டேப் டு புரோவிஷன்” அம்சமும் ஹாங்காங், மக்காவ் மற்றும் மங்கோலியாவில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் வாலட் பயன்பாட்டில் தேவையான கடன் அட்டைகளைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

ஆப்பிள் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மதிப்புள்ள செய்தியைத்தான் கொடுத்திருக்கிறது ஆப்பிள்.

  • மு.‌இசக்கிமுத்து

The post ஆப்பிள் பழமல்ல, பணம் appeared first on செல்லினம்.

  •  

தீதும் நன்றும் பிறர்தர வாரா

அண்ணாகண்ணன்

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலரும் சுமார் 50 லட்சம் செலவு செய்து, பல்வேறு அபாயகரமான வழிகளில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். கடன் வாங்கியும் பலர் அங்கே சென்றிருக்கிறார்கள். இவ்வளவு தொகை புரட்ட முடிந்த இவர்கள், இந்தியாவிலேயே எவ்வளவோ தொழில்கள் செய்திருக்கலாம். பானி பூரி, இட்லி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை என்று சாலையோரங்களில் கடை போட்டு, மிகக் குறைவான முதலீட்டில் தொழில் செய்து இங்கே கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். பேராசைப் பட்டு, குறுக்கு வழியில் சென்றால் என்ன நடக்கும் என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை ஏற்கத்தான் வேண்டும்.

அமெரிக்கா இவர்களை நல்ல முறையில் திருப்பி அனுப்பவில்லை. மனிதாபிமானம் குறித்து எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் கூறும் அமெரிக்கா, அதே அடிப்படையில் தானும் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இந்த மரியாதை தான் அளிக்க முடியும் என அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இவர்களுக்கு மட்டுமில்லை. இது போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து, அமெரிக்க அரசை ஏமாற்றி வாழ்ந்துவிட முடியும் என நம்பி எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் இதுவே பதில். இனியாவது இத்தகையோர் பாடம் கற்பார்களா என்பதே கேள்வி.

இப்போது இந்திய அரசு, ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். வெவ்வேறு முதலீடுகளில் செய்யக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை, சில பயிற்சிகளையும் அளிக்கிறது. இது தொடர்பான விளம்பரங்கள், நாளிதழ்களில் அடிக்கடி வருகின்றன. ஆனால், இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும். பயிற்சி அளிப்பதோடு, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு தொழில் செய்து முன்னேறியவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்து, விரிவாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். புதிய தொழில்முனைவோருக்காகத் தனிச் செயலி, இணையத்தளம், யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை, சிறந்த பொருள்களை அரசே விளம்பரப்படுத்தலாம். இந்தப் பொருள் தேவையா? இந்தச் சேவை தேவையா? இவர்களை அணுகுங்கள் என வாடிக்கையாளருடன் இணைக்கலாம்.

இந்தியச் சந்தையைக் குறிவைத்து, அயல்நாட்டு நிறுவனங்கன் பலவும் இங்கே வருகின்றன. ஆனால், இந்தியர்களோ வெளிநாட்டைத் தேடிச் செல்கிறார்கள். எனில், இந்தியாவின் மதிப்பை இந்தியர்கள் பலர் இன்னும் உணரவில்லை. அவர்கள் அதை உணரும்போது, இந்தச் சிக்கல் தீரும். இந்தியாவும் இதனால் வளம் பெறும்.

#us #usa #america #india #indians #illegalimmigration

  •  

காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளுமா?

அண்ணாகண்ணன்

காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு, பலரையும் அதிரச் செய்துள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமெரிக்கா தானாக வந்து தலையைக் கொடுக்கிறது. புதிய எதிரிகளைச் சம்பாதிக்கிறது. இதன் மூலம் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய இராஜ தந்திர வெற்றி கிட்டியுள்ளது. மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலின் இறையாண்மை குறித்து நான்கு வாரங்களில் அறிவிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். பெரும்பாலும் இஸ்ரேலின் நிலைப்பாட்டை அவர் ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.

எகிப்தும் ஜோர்டானும் மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். இதே அடிப்படையில் 20 இலட்சம் பாலஸ்தீனியர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா? அல்லது, பாலஸ்தீனத்திலேயே அவர்களைத் தங்க வைத்து, பாலஸ்தீனத்தைத் தன் 51ஆவது மாகாணமாக அறிவிக்குமா? பாலஸ்தீனப் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்ப்பவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் டிரம்ப்பின் காசா அறிவிப்பு, ஒரு பொறி. சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள், இதில் சிக்கும் வாய்ப்பு உண்டு. காசாவில் அமெரிக்கப் படைகள் இறங்கினால், எதிரி நாடுகள் தாக்கும். இவை இரண்டு அணிகளாகப் பிரியும். உலகப் போர் மூளும். இதைச் சாக்காக வைத்து, இந்த நாடுகளை அழிக்க, அமெரிக்கா முயலும். ஆனால், இவை அனைத்தும் அணு ஆயுத நாடுகள் என்பதால், படுநாசம் உண்டாகும்.

வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியில், பாலஸ்தீனியர்கள் சிக்கக் கூடாது. நிலத்தைக் காக்கும் போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்து விடக் கூடாது. பிறகு, ஒரு நினைவுச் சின்னம் வைத்துக் கதையை முடித்துவிடுவார்கள். போரினால் இவ்வளவு காலம் அவதியுற்றவர்கள், சுமூகத் தீர்வு ஏற்படும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேலைப் போலவே பாலஸ்தீனமும் இராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பாலஸ்தீனத் தலைவர்கள், சீன அதிபரைச் சந்தித்து, தங்கள் நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்குச் சீனாவிடம் குத்தகைக்கு விடுவதாக ஓர் ஒப்பந்தம் போட்டால், சரியான காய் நகர்த்தலாக இருக்கும். அப்போது சட்டப்படி சீனா, காசாவில் கால் வைக்கும். அதன் பிறகு அமெரிக்கா, அங்கே எளிதில் நுழைய முடியாது.

#gaza #westbank #palastine #israel #us #usa #trump #china

  •  

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுரிமைகள்

அண்ணாகண்ணன்

அமெரிக்க அதிபராக டிரம்ப், அடித்து ஆடத் தொடங்கிவிட்டார்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது. காரணம், அமெரிக்கா அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியைச் சேமிக்க. வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா இனிப் பங்கேற்காது. காரணம், நிதிச் சிக்கனம். டாலரில் வர்த்தகம் செய்யாத நாடுகளுக்கு 100 சதம் கூடுதல் வரி என எச்சரித்துள்ளார். இதன் மூலம் டாலரின் முக்கியத்துவத்தை இழக்காமல், தன்னைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, அமெரிக்காவைப் பொருள்களின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து, பெட்ரோலிய இறக்குமதியைக் குறைக்கவும் திட்டம் வைத்துள்ளார்.

பனாமா கால்வாயில் அமெரிக்கக் கப்பல்களுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அதன் நிர்வாக உரிமையை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அவரது முன்னுரிமையாக இருக்கிறது. நிச்சயமாக டிரம்ப், அயல் பணி ஒப்படைப்பிலும் கை வைக்க வாய்ப்பு இருக்கிறது.

டிரம்பின் அடுத்த முன்னுரிமை, அமெரிக்கப் பெருமிதம். செவ்வாய்க் கோளில் அமெரிக்கக் கொடி பறக்கும் என்பதும் மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்வதும் இதையே குறிக்கிறது. அமெரிக்கக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்கர் என்னும் அடையாளத்தை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் பெற முடியாது என்பதைச் சுட்டவே. அமெரிக்கப் பொருள்களை வாங்குங்கள் என அவர் பரப்புரை செய்தால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார். அமெரிக்கப் பொருளாதாரமும் வளரும். அமெரிக்கப் பெருமிதமும் உயரும்.

புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும்போது அதிரடி அறிவிப்புகள் வருவது இயல்பே. ஆரம்ப ஆரவாரங்களைக் கடந்து, அனைவரது நன்மையையும் அவர் கருத்தில் கொண்டால், புதிய சகாப்தம் படைப்பார்.

  •