Reading view

’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்  

கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன
  •  

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

முன்னுரையில் முன்பு எழுதிய அனைவரையும் வாரிவிட்டாயிற்று, அப்ப என்ன செய்யலாம் 

எல்லார்க்கும்  தெரிந்த ஒரு நாவலை  கொத்து புரோட்டா போடலாம். சாண்டில்யன், அவரின் அனைவருக்கும் தெரிந்த நாவல் கடல்புறா, அது வெறும் சாகசம்தான்.  அதில் கை வைத்தால் ஆபத்து. 

பெஸ்ட் பொன்னியின் செல்வன் தான். 

வித்தியாசமாக எப்படி எழுதுவது. 

யார் எல்லாம் அதில் கெட்டவர்கள் ரவிதாசன், பழுவேட்டரையர்கள், சம்புவரையர்கள். 

யார் யார் எல்லாம் நல்லவர்கள் குந்தவை, வந்தியத்தேவன், அருண் மொழி வர்மன். 

பரோட்டாவின் முதல் படி, கெட்டவர்களை நல்லவர்களாவும், நல்லவர்களையும் கெட்டவர்களாவும் மாற்று. 

குந்தவை வில்லி. சீரியல் யுகம் அல்லவா, அனைத்து சீரியலிலும் பெண்கள்தானே அனைத்து வில்லத்தனத்தையும் செய்கின்றனர், அதனால் குந்தவை எதை செய்தாலும் நம்புவார்கள் பிரச்சினையில்லை. 

அருண்மொழி வர்மனை வில்லனாக்கினால், கெட்ட பெயர் கிடைக்கும். அதனால் அவனை விட்டு விடலாம்.

வந்தியத்தேவனை கொடுர வில்லனாக்கி விட்டால் பிரச்சினையில்லை. என்ன பொ.செ வாசகர்கள் கடுப்பாவார்கள். முன்னுரையில் அந்த வாசகர்கள் கண்ணாடியை கழட்டுங்கள், மனதை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், நாலு முறை நன்றாக மூச்சு விட்டு கொள்ளுங்கள், திறந்த மனதுடன் படியுங்கள், கதவு ஜன்னல் எல்லாம் திறந்து விட்டு படியுங்கள் என்று ஒர் டிஸ்கி போட்டால் போயிற்று.

பொன்னியின் செல்வனிலிருந்து சில சம்பவங்களை எடுத்துக் கொண்டு ரோஷமோன் அல்லது விருமாண்டி பாணியில் இன்னொரு கோணத்தில், கொஞ்சம் கோணலாக இருந்தாலும் பரவாயில்லை பார்த்து எழுதுவோம். 

அருண்மொழி வர்மன் தண்ணீரில் விழுந்து பிழைத்தான் அதனால் அவனுடைய பெயர் பொன்னியின் செல்வன்.

இது கல்கியின் புனைவு ஆச்சே

இருந்தாலும் கல்கி எழுதி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதால், அதையும் ஒரு ஆதாரமாக கொள்ளலாம். தப்பில்லை. சரி.

ஒரு திடுக்கிடும் திருப்பம் வேண்டுமே, சரி தள்ளி விட்டது குந்தவை. 

பயங்கர திருப்பமாக உள்ளதே. 

இன்னொரு திருப்பத்தையும் வைப்போம், விழுந்தது ஒரு குழந்தை, கிடைத்தது இன்னொரு குழந்தை. 

யாரும் கண்டுபிடிக்க மாட்டார்களா, 

அது எப்படி, அரண்மனையில் அரசனுக்கு ஏகப்பட்ட மனைவிகள், குழந்தைகள். எல்லார் முகத்தையும் நினைவில் வைக்க முடியுமா, கண்ணாடியை கழட்டி விட்டு படியுங்கள். இன்னொரு பகீர் திருப்பம் உள்ளது.

தண்ணீரில் மாறிய குழந்தை குந்தவையின் குழந்தை. 

வெய்ட். குந்தவை சிறு பெண்ணல்லவா எப்படி குழந்தை. 

குந்தி இல்லையா, குந்திக்கு துர்வாசர் கொடுத்த மந்திரம் ஓலை வழி குந்தவைக்கு கிடைத்தது. 

கரெக்ட் லாஜிக். 

இப்பதான் கண்ணாடி இல்லாமல் கண் தெரிகின்றது. 

அப்பா யாரு, 

குந்தவையின் கணவன்தான், 

யாரு வந்தியத்தேவனா, 

ஆமாம் அது குந்தவைக்கே தெரியாது. குந்தவையை ஆட்கொண்டது அவன்தான். 

ஆட்கொண்டது அப்படின்னா, 

யோவ் இது டீசன்டான சரித்திர கதை, அவ்வளவுதான் சொல்ல முடியும். போய் முன்னுரைய படி. அது மாதிரி கதைன்னு நினைச்சியா. முதல்ல இது உனக்கு எழுதின கதையேஇல்லை. பின்ன, கரிகாலனுக்கு எழுதினது.போனா போகுதுன்னு படிக்க சொன்னா, 

சாரி சாரி

பரோட்டாவின் அடுத்த படி

கரிகாலன கொன்னது ரவிதாசன் இல்லை. குந்தவையும் வந்தியத்தேவனும்

அப்ப ஏன் ரவிதாசனனின் சொத்துக்களைப் பறித்து விரட்டுனாங்க. 

அது வந்து ராஜராஜனுக்கு அவன பிடிக்கல, அண்ணன கொன்னிருந்தா அவன ராஜராஜன் கொன்னிருப்பானில்ல கொல்லலியே, அப்ப அவன் கொலைகாரன் இல்லையே. 

அப்ப குந்தவை கொன்னிருந்தா குந்தவைய கொன்னிருப்பான் அப்ப குந்தவையும் கொலைகாரி இல்லையே. 

ரவிதாசன் கொன்னிருந்தா அவனுக்கு ஏன் சோழ அரசுல பதவி கொடுத்தாங்க, பிரும்மராயர் பட்டம் பிராமணனுக்கு தான கொடுப்பாங்க, 

ஆமாம். 

ரவிதாசன் முதலாம் ஆதித்த சோழனின் வாரிசு அதனாலதான் பதவி கொடுத்தாங்க, 

அப்ப பிராமணன்னு சொன்னது 

அதுவும்தான் பஞ்சவன் பட்டம் இருந்த அரச குடும்பம், பிரம்மராயன் பட்டமிருந்தா பிராமணன். எது சவுகரியமோ அத எடுத்துக்குவோம். 

இது மாதிரி சரித்திர கதைகள்ல ஒற்றர்கள் எல்லாம் உண்டுதானே, 

இது என்ன வழக்கமான சரித்திர கதையா, இது ஒரு சிபிஐ ரிப்போர்ட், ஃஎப்.ஐ.ஆர் மாதிரி. அது எல்லாம் கிடையாது, ஆழ்வார்க்கடியானே ஒரு ஓரத்துல மரதடியில நின்னு துண்ட ஆட்றதோட சரி. டயலாக் எல்லாம் கிடையாது. 

இது என்ன ஒரு பைத்தியம் முருங்கை, முருக்கை எல்லாம் சொல்லுதே. 

இதுதான் கதையோட ஆப்த வாக்கியம்,முருங்கை முருக்கை இல்லாம கதையே இல்ல, முழுசா படி புரியும்

அப்ப ஆதித்த கரிகாலன காப்பத்துற மர்ம உருவம் எல்லாம்.  ,

யார் கண்ணாடிய போட சொன்னது, கண்ணாடிய கழட்டு முதல்ல. 

கண்ணாடிய கழட்டி பத்து பாரா ஆச்சு

அப்படியா சரி சரி, சரித்திரப்படி பாத்தா ஆதித்த கரிகாலன் கடம்பூர்ல சாகனும், அவன் பாட்டுக்கு வைர வியாபாரி வீட்டுல செத்து தொலைஞ்சா என்ன செய்ய, அதுதான் காப்பத்த வேண்டியதா போச்சு. 

இந்த நந்தினி பாத்திரம், 

அப்படியேவா வைக்க முடியும், நந்திபுரகுல விளக்கு. நந்தினி மாதிரி இல்ல. இது யார் தெரியுமா ராஜாதித்தயரோட காந்தர்வ மனைவிக்கு பிறந்த மகள், இவளுக்கு ஒரு மகள் நந்தாவிளக்கு, கடைசில எரியப் போகும் என்பதற்கான குறிப்பு, 

இதுல யார் நந்தினி, 

யாரா வேண்டுமானாலும் இருக்காலாம். கல்கியத்தான் கேக்கனும். 

இது எல்லாம் அந்த மர்ம உருவத்துக்கு எப்படி தெரியும், 

அது எப்படி தெரியாம  போகும், அந்த உருவம் தான் கண்டராதித்தர் இது வழக்கமான சரித்திர கதை இல்லன்னு எத்தன தடவ சொல்றது. 

ஒரே குழப்பமா இருக்கே, கதைய ஒரு தடவை முழுசா சொல்

குந்தவைக்கு பத்து வயசு இருக்கும் போது அவளுடைய வயத்துல சங்கு ரேகை இருப்பதால் அவள் ஆழ்வார்ன்னு அழைக்கபடுறா, தன் அண்ணன அரசனாக்க சூர்ய மந்திரத்தை ஜபிச்சு ஒரு  வருஷம் சண்டி விரதம் எடுத்து மறைவா போய்ட்டு குழந்தைய பெத்துக்குறா. அந்த் குழந்தைக்கு அப்பா ஆதி சோழ வம்ச இளவரசன்னு குந்தவை நினைச்சுக்குறா, 

அப்ப அவளுக்கு என்ன வயசு இருக்கும்? 

வருஷ கணக்கு போட்டா பன்னிரெண்டு, பன்னென்டு வயசுல குழந்தையா? கதை ஓடும் போது அது எல்லாம் பாக்க கூடாது. 

ஓகே. 

நல்லவேளையா அதே சமயம் குந்தவை அம்மாவுக்கும் குழந்தை பிறக்குது. அது மட்டு பிறக்கலன்னா கதையே நடந்திருக்காது. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் கண்டராதித்தர் காணம போறார், ஆனா அவர் காணம போகல, எல்லா இடத்துக்கும் வர்றார், போறார், எல்லாம் அவருக்குதான் தெரியும். அப்படி மாறு வேஷத்துல வர்றது கண்டராதித்தர்ன்னும் எல்லார்க்கும் தெரியும். இருந்தாலும் அவர் காணமல் போனவர்தான்.  அவருக்கு அவருக்கும் ஒரு குழந்தை பிறக்குது மதுராந்தகன். அந்த குழந்தையும் கொஞ்ச நாள்ல காணோம் அதனால் அதைப் பத்தி கவலை இல்ல. சுந்தர சோழர் குடும்பத்தோட  படகுல போகும் போது தம்பிய தண்ணில தள்ளி விட்டுட்டு  தன் பையன தண்ணியில இருந்து எடுத்து இதுதான் தம்பி பொன்னியின் செல்வன்னு சொல்றா குந்தவை. ஆனா யாருக்கும் அது தெரியாது, குழந்தை முகத்தை பாத்த கூட கண்டு பிடிக்க முடியாது. 

எப்படி, 

ஏன்னா குழந்தையை வளர்க்றதே குந்தவைதானே. அப்பா அம்மா பாக்கவே மாட்டாங்க, பாத்தாலும் அடையாளம் தெரியாது. 

கதைதான பரவாயில்லை. 

பன்னிரெண்டு வருஷம் கழிச்சு வீரபாண்டியன் மரணம். சம்புவரையர், மணிமேகலை, கந்தன்மாறன், பார்ந்திபேந்திரன், மலையமான் எல்லாம் துணைநடிகர்கள் மாதிரி ஒரு ஓரமா வந்து போறாங்க. ட்விஸ்ட். வீரபாண்டியனை கொன்னது குந்தவை,அதை  பழுவேட்டரையர் கண்டு பிடிச்சி, அருண்மொழிக்கு பதிலா  கண்டாரதித்தன் பையன அரசனாக்குனா விட்டுறேன்னு சொல்றார். குந்தவை ஒத்துக்குறா. ஆனா கண்டராத்தர் பையன் யார்ன்னு பாத்தா அது கண்டராதித்தர் பையன் இல்லை.  அந்த குழந்தையும் மாறியிருக்கு, யார்ன்னு கேட்டா பழுவேட்டையர் பதில் சொல்லாமல் எங்கயோ போய்ட்றாரு.

உண்மையான மதுராந்தகன் என்ன ஆனான்?

யாருக்கு தெரியும்? இல்ல யாருக்கு தேவை? ஆனா, அந்த  கண்டாராதித்தன் பையன் கண்டாராதித்தன் பையனே இல்லை, அது ஒரு டூப்பு. அது கண்டராதித்தர் குழந்தை இல்லை, செம்பியன் மாதேவி குழந்தையும் இல்லை. கண்டராதித்தருக்கு குழந்தையே இல்லை, செம்பியன் மாதேவி கர்பமே ஆகலை.  டூப்பு குழந்தையா பிறந்து, பின்னாடி காணமல் போகி  மாறி வந்த பையன் யாருன்னா அது சுந்தர சோழனோட பையன், அப்ப அருண்மொழி வர்மன், குந்தவையோட பையன். குந்தவை சுந்தர சோழன் பையனுக்கு பதிலா தன் பையன மாத்தினா, அந்த பையன பழுவேட்டரையர் கண்டுபிடிச்சி மதுராந்தகனுக்கு பதிலா மாத்திட்டாரு.  தெளிவா இருக்கு இல்ல

ஓரளவுக்கு இருக்கு, மேல மேல 

இது எல்லாமே காணமல் போய், எல்லார் கூடயும் பேசிட்டு இருக்குற கண்டராதித்தருக்கு தெரியும். அவர் ஒரு சித்தர் ஆனா எல்லார் கண்ணுக்கும் தெரிவார். கதை அவ்வளவுதான். அதுக்கு அப்புறம் ஒன்னு ரெண்டு பக்கம் எல்லாரும் என்ன் ஆனாங்கன்னு ஒரு குட்டி மான்டேஜ். கடைசி ஐம்பது பக்கம், குந்தவையோட வாக்கு மூலம். 

அப்ப இந்த சங்கதரான்னா என்ன, 

அது சங்கு இருக்குற மாளிகை. 

அதுக்கும் புத்தக தலைப்புக்கும் என்ன சம்பந்தம், 

கதைல வருது இல்ல. 

கதைக்கு அதுக்கும் என்ன சம்பந்தம், 

அது சரித்திர உண்மை. எல்லார்க்கும் தெரிய வேண்டாமா, 

சரி சரி.

அடுத்த நாவல் என்ன

ராஜேந்திரன் இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சிகிட்டு அப்பா கட்டுன பெரியகோவிலுக்கு போகாம, தானே ஒரு கோவில் கட்டி கும்புட்டான்னு எழுத வேண்டியதுதான். முடிஞ்சா ராஜேந்திரன் ராஜராஜன் பையனில்ல தம்பி அப்பிடின்னு சேர்த்துக்கலாம். 

படுதிராபையான ஒரு கதையை இதுவரை படித்தது இல்லை. படிக்கும் போது நேர்ந்த கடுப்புதான் மேலே. முன்னுரையில் பல எழுத்தாளர்களை மட்டம் தட்டுவது போல எழுதியிருப்பதே முதல் கடுப்பு, அவ்வளவு மட்டம் தட்டுபவர் எழுதியிருக்க வேண்டியது சிக்கவீர ராஜேந்திரன் மாதிரியான நாவல். இதுவல்ல.  நாவலில் நம்பகத்தன்மை என்பது கடுகளவும் இல்லை, கற்பனை என்றாலும் தர்க்கத்தில் அடங்க வேண்டும்.  சாண்டில்யன் சரித்திர கதைகள் என்பது ஃபேண்டசி டைப். பாகுபலி மாதிரி, அவரை கிண்டலடித்து விட்டு இவர் எழுதியிருப்பது, சுத்த அரைவேக்காட்டு நாவல். பன்னிரெண்டு வயது பெண், யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று கொள்வது எல்லாம் படிக்கும் போது எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் என்றுதான் தோன்றுகின்றது. பன்னிரெண்டு வயதிலேயே ஆள் மாறாட்டம், கொலை. 

கரிகாலன் கொலையில் பல அரச குடும்பத்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம், ஏன் குந்தவை, அருண்மொழியே செய்திருப்பார்கள் என்று கூட கற்பனை செய்யலாம். அவர்கள் செய்தார்கள், செய்யவில்லை என்பதற்கு எவ்வித சான்றுமில்லை. பதவி என்பது எதையும் செய்ய வைக்கும். அதை எழுதுவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இது வரை எழுதியவர்கள் எல்லாம் முட்டாள்கள், தான் எழுதியது தான் 100 லாஜிக்கலான தியரி, நடந்திருக்க கூடும், படித்தவர்கள் எல்லாம் இதுதான் உண்மை, குந்தவையை சிறையில் அடைக்க வேண்டும், முடிந்தால் மரண தண்டனை தர வேண்டும் என்று அவரிடம் வந்து வேதனைப்படுவதாக எழுதுவது எல்லாம் ஓவர். அந்தளவிற்கு ஒர்த் இல்லை. 

மாறுபட்ட கோணம் அவசியம், ஆசிரியரின் உரிமை. ஆனால் இந்த நாவல் அதை சொன்ன விதம் தலைவேதனை. ராஜராஜனை கெட்டவனாக்க முடியாது, குந்தவை - ராஜராஜன், குந்தவை - ராஜேந்திரன் பந்தம் என்பது வாசகர்கள் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. குந்தவையை மட்டும் கெட்டவளாக காட்ட இறங்கி,   இறுதிப் பகுதியில் வாசர்களை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே வளவளவென்று எழுதி தள்ளியிருக்கின்றார். பல புத்தகங்களை படித்திருப்பார் போல, தகவல்களை எல்லாம் எங்காவது கொட்ட வேண்டும் என்று கொட்டி தள்ளிவிட்டார். சோழ குல சடங்குகளி புரசமரத்தின் பங்கு, அவர்கள் பயன்படுத்தும் சங்கு, இன்றைய மலேசியா அன்றைய கடாரத்திற்கும் சோழ தேசத்திற்குமான தொடர்பு, இன்றும் அங்கு கிடைக்கும் சோழ குல மிச்சங்கள், அடிகள், பிரான், ஆழ்வார் என்று பெண்கள் அழைக்கப்படுதல் என்று சில சரித்திர ஜிகினாக்களை தூவி அலங்கரிக்கப்பட்ட பழைய பிரியாணி. 

முருங்கை, முருக்கை என்பதை வைத்து கொண்டு பக்கத்தை கொன்றிருக்கின்றார். அதே போன்று அரச குடும்பத்து கிளைகளும், அவர்கள் கை விடப்படுவது, வேட்டையாடப்படுவதும் எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள், அதை எல்லாம் எப்படி கையாண்டிருக்கின்றார் என்று படித்தால் கொட்டாவிதான் வருகின்றது. 

இது போன்ற சஸ்பென்ஸ் டைப் நாவல்களில், வாசகனுக்கு கொஞ்சம் இடம் வேண்டும். அவனின் புத்திசாலித்தனத்திற்கு கொஞ்சம் தீனி வேண்டும். சம்பந்தமேயில்லாமல் சம்பவங்களை கொண்டுவந்து, இறுதிப்பகுதியில் அவனை முட்டாளாக்கினால் எரிச்சல்தான் வரும். இது அப்படித்தான் இருக்கின்றது. நாவலின் முடிச்சுகளை போடுவது ஒரு கலை என்றால், அதை வாசகனுக்கும் கொஞ்ச கொஞ்சமாக அதை அவிழ்த்து இறுதியில் ஒரு சின்ன திருப்பத்துடம் முடிக்க வேண்டும், அப்போதுதான் சுவாரஸ்யம். நாவல் முடிவதற்கு பத்து பக்கம் வரை இழுத்துவிட்டு, கடைசி பத்து பக்கம்  குற்றவாளி  வந்து ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி அனைத்தையும் ஒப்பிப்பது எல்லாம் அமெச்சூர்கள் செய்வது. எப்படி முடிப்பது என்று தெரியாமல், ஆசிரியரே வந்து பேசி சரிசெய்வது, நீ என்ன செய்தாய் தெரியுமா என்று ஒரு  பாத்திரம் வந்து பேசுவது. இது எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக். துப்பறியும் கதைகிளிலாவது ஒன்றிரண்டு பக்கம் இருக்கும்,  இதில் வரிசையாக வந்து பக்கம் பக்கமாக வாக்குமூலம் தருகின்றார்கள், க்ளைமாக்ஸ் முடிந்த பின்னரும் க்ளைமாக்ஸ் சரி முடிந்தது என்று பார்த்தால் மறுபடியும். 

பழுவேட்டையரையர் குந்தைவையிடம்  வந்து நீ என்ன செய்தாய் தெரியுமா என்று முடிக்கின்றார், குந்தவை நான் என்ன செய்தேன் தெரியுமா என்று முடித்து இறக்கின்றாள், குந்தவையின் வேலைக்காரி வந்து குந்தவை என்ன செய்தாள் தெரியுமா என்று ஆரம்பித்து முடிக்கும் முன்னரே, வந்தியத்தேவன், அவள் செய்ததை விடு நான் என்ன செய்தேன் தெரியுமா என்று ஒரு பத்து பக்கம். ஒரு வழியாக முடிந்தது என்றால், அருண்மொழி வர்மன் கடல் கடந்து சென்று கொடுத்த வாக்குமூலத்தை ராஜேந்திரன் பார்க்கின்றார். அடுத்த நாவலில், ராஜேந்திரன் கொளுத்திய ஓலைசுவடிகளை குலோத்துங்க சோழன் படிக்கலாம், இல்லை அவன் தெலுங்கன் இல்லையா, சரி ஆசிரியர் நினைத்தால் அவன் வீரபாண்டியனின் கொள்ளு பேரன் என்று இன்னொரு நாவல் எழுதிவிடலாம்.

முன்னுரையில் முன்முடிவுகளுடன் படிப்பவர்களுக்கு அல்ல என்கின்றார், அப்படி என்றால் பொ.செ நாவலின் சில அம்சங்களை இதில் சேர்த்திருக்கவே கூடாது. மணிமேகலைக்கு என்ன சரித்திர ஆதாரம் இருக்கின்றது.

சரித்திர நாவல்களில் எதை கற்பனை செய்யலாம் என்ற தெளிவு வேண்டும். உரையாடல்களை கற்பனைதான் செய்ய முடியும், சில சம்பவங்களை சரித்திர உண்மைகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்து கொள்ளலாம். சில புதிய பாத்திரங்களை சேர்க்கலாம். ஆனால் ஒருவனின் அப்பனை மாற்றுவதற்கு எல்லாம் இந்த நாவலாசிரியர்களுக்கு எவன் உரிமை தந்தது. சுந்தர சோழனின் மகன் ராஜராஜன் அவ்வளவுதான். இதுதான் சரித்திர உண்மை. ராஜராஜன் பிறந்த ஆண்டு, மாதம், நட்சத்திரம் அனைத்தயும் கல்வெட்டுகள் என்று பல சான்றுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டுள்ளனர்.  இதை கற்பனை உரிமை என்ற பெயரில் மாற்றுவது என்பது வக்கிரம், ஆபாசம். இதை ஒரு சாதனையாக, பெருமையாக பேசிக் கொள்வது அதைவிட வக்கிரம். உண்மையை கண்டுபிடித்து மக்களுக்கு சொல்வது எல்லாம் சரித்திர பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆதரங்கள் அடிப்படையில் செய்யவேண்டியது, விட்டத்தை பார்த்து கற்பனையில் அடித்துவிட்டு அதைப் பற்றி பெருமிதம் கொள்ளவும் ஒரு அசட்டு துணிச்சல் வேண்டும். இது கற்பனை நாவல் என்ற வகையில் விட்டு விடலாம் என்றாலும், அந்த முன்னுரையில் தென்படும் அசட்டு துணிச்சல்தான் இவ்வளவு எழுத வைத்துவிட்டது. 

முன்னுரையில், "சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் ஆதித்த கரிகாலன் கொலைதான், பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்த பகுதிக்குள் சங்கதாரா என்னும் தோணியில் சென்றுவிட்டு பத்திரமாக திரும்பி வந்துள்ளேன்" என்கின்றர். அவர் வந்துவிட்டார், அதை பிடித்து சென்ற வாசகர்கள்தான் சொற்களின் மழையில் சிக்கி, தர்க்க மீறல்களில் தடுக்கி விழுந்து, பயங்கர திருப்பங்களில் உருண்டு, கடைசி பக்கங்களில் வரும் வாக்குமூல மழையில் நனைந்து சிக்கி, சின்னாபின்னமாகி வரவேண்டியுள்ளது. 

எதற்கு படித்தோம் என்று நொந்து கொண்ட நாவல், நன்மையே, இனி இவரின் மற்ற நாவல் பக்கம் போகமலிருப்பேன். நல்லவேளை காசு கொடுத்து வாங்கவில்லை, வாங்கிய எவருக்கோ  என் ஆழ்ந்த நன்றிகள். 

படிக்கலாமா வேண்டாமா என்பதை இனி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  •  

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

பள்ளி, கல்லூரி படிக்கும் போது 90களின் இறுதிப்பகுதியில் அடிக்கடி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்கும். காரணம் ஜாதிக்கலவரங்கள். எங்கள் பகுதிக்கு அருகில் சில சென்சிட்டிவான பகுதிகள் உண்டு. அந்த கலவரங்களைப் பற்றிதான் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தற்காலத்தில் அடித்தக் கொள்ளும் இரண்டு சமூகங்கள் ஒரு காலத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தனர், ஒரு சமூகத்தவனுக்கு பிரச்சினை என்னும் போது இன்னொருவன் ஆயுதம் எடுத்தான், அவன் இன்று எப்படி மாறினான் என்று குமுறுகின்றார். தூர்வை, சூல் நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகளை காணலாம். 

நாவலின் ஆரம்பம் ஆங்கிலேயர்களின் குதிரைப்படை வீரர்களிடமிருந்து தப்பித்து ஒடும் மக்களிடம் ஆரம்பிக்கின்றது. வேயன்னா அக்கூட்டத்தின் தலைவர், அவரது மகன் அக்கூட்டத்திலிருந்து குதிரைக்காரனால் தூக்கி செல்லப்பட்டு, ஒரு ஆங்கிலேய அதிகாரியிடம்  ஒப்படைக்கப்பட்டு அங்கு வளர்கின்றான். மீதமிருக்கும் கூட்டம் பெரும்பச்சேரி என்னும்  ஊரைச் சேர்ந்த வையத்துரை என்னும் சிறுவனால் கொம்பூதி என்னும் கிராமத்தில் குடியமர்த்தப்படுகின்றார்கள். அவர்களின் தொழில் களவு. களவை தடுக்க வரும் ஆங்கிலேயர்களுக்கும் வேயன்னா கூட்டத்திற்குமான போர்தான் நாவல். இறுதியில் வேயன்னாவின் மகனே அவருக்கு எதிரில் நிறுத்தப்படும் போது என்னவாகின்றது என்பதோடு நாவல் முடிகின்றது.

காவல்கோட்டத்தை முதலில் படித்ததால் அந்த நாவலின் நினைவு வராமல் படிப்பது எளிதாக இல்லை. முதல் சில பகுதிகள் தாண்டிய பின்னரே, இந்த நாவல் மனதில் உருக்கொள்ள ஆரம்பிக்கின்றது. ஒரு களவு மிக விரிவாக சித்தரிக்கப்படுகின்றது, தங்க பெட்டியை களவாடுபவர்கள் கடைசியில் அதற்கு ஈடாக பெருவது உணவு தவசங்கள். இவர்கள் களவில் வாழ்பவன் எவனோ ஒருவன்.  திருடுவது என்பது ஒரு வகையான வேட்டையாடுதல் என்பது போலத்தான் நினைக்கின்றார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் அவர்களுக்கு இருப்பது பயம், அது மரியாதை என்று பரவலாக கொள்ளப்படுகின்றது. 

பெரும்பச்சேரி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை யூகித்து கொள்ளும்படி விட்டிருக்கின்றார். பெருநாழி என்னும் ஊரில் இருக்கும் நிலங்களில் அவர்கள் வேலை செய்துவருகின்றார்கள். அவர்களுக்காகவே கொம்பூதி மக்கள் பெருநாழியுடன் சண்டையில் இறங்குகின்றார்கள். இன்று எதிர் எதிராக நிற்பவர்கள் ஒரு காலத்தில் தோளோடு தோள் நின்றவர்கள், ஒரு வேளை அன்று அவர்கள் இருந்த பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்னவோ?

கொம்பூதி மக்களும் வேயன்னாவும் திருட்டு என்னும் ஒரு குற்றத்தை தவிர்த்து பார்த்தால், நேர்மையானவர்கள், வெள்ளந்தி மக்கள். கொடுத்த வாக்கை காக்க களவுக்கு செல்லாமல் பட்டினியாக கிடக்கின்றார்கள், கோவில் திருவிழாவிற்கு மாடு அணைய செல்கின்றார்கள் அதில் உயிர் போனாலும் அது கடவுள் காரியம் என்றே அவர்களுக்கு படுகின்றது, வீடு தீ பற்றி எரியும் போது தங்கள் உயிரை மதிக்காமல்  துணிச்சலாக உள்ளே இறங்கி சிக்கியவர்களை காக்கின்றார்கள். ஊருக்கு உள்ளே நுழைந்த காவலர்களை கொடுரமாக கொலையும் செய்கின்றார்கள். 

தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது, எப்படி சூழல் மாறுகின்றது என்பதை உணராமல் இருக்கும் ஒரு சமூகம் எப்படி பட்ட வீழ்ச்சியை சந்திக்கும், கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்றுதான் நினைக்க வைக்கின்றது. தங்களை ஏமாற்றி ஒருவன் பிழைக்கின்றான் என்பதைக் கூட உணராமல் இருப்பது வெள்ளந்திதனமல்ல. ஆனால் அப்படித்தான் இருந்துள்ளார்கள் என்றால் என்ன செய்ய

நாவலில் வரும் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவர்கள் ஒரு வேட்டை சமூகம் என்கின்றார். ஆதியில் அனைவரும் அப்படித்தானே, அதில் இவர்கள் மட்டும் எப்படி களவில் இறங்கினார்கள் என்பது அழுத்தமாக இல்லை. காவல்கோட்டத்தில் இருக்கும் அதே பிரச்சினைதான், அவர்கள் ஏன் கள்வர்களாக ஆனார்கள் என்பதைப் பற்றி சொல்லாமல், அது அவர்களின் தொழில் என்றே சொல்லும் போது களவை தடுக்க ஆங்கிலேயர்கள் எடுக்கும் முயற்சி நேர்மையானது என்றே தோன்றுகின்றது.  

களவை தடுக்க ஆங்கிலேயர்கள் கை கொண்ட முறைகள் மீதுதான் விமர்சனங்களை வைக்க முடியும். இரண்டு கிராமத்தவர்களை மோத விடுவது, வன்முறை மூலம் அடக்க முற்படுவது, இது எல்லாம் ஒரு முரட்டு சமூகத்தை அடக்குவதற்கு பதிலாக தூண்டுவதாகவே இருக்கின்றது. இறுதிப்பகுதியில்தான் அந்த கள்வர்கள் மீது பரிதாபம் தோன்றுகின்றது, அந்த வகையில் ஆசிரியருக்கு வெற்றிதான்.   நாவல் ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக போனாலும் பின்னால் விறுவிறுப்பாக செல்கின்றது, ஆனால் இன்னமும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்றே இறுதியில் தோன்ற வைக்கின்றது. சம்பவங்கள் எல்லாம் அழுத்தமாக இல்லாமல் மேம்போக்காக இருப்பது போன்றே தோன்றுகின்றது.

இந்த கிராமத்து நாவலில் சம்பந்தமேயில்லாத ஒரு கிளைக்கதை வஜ்ராயினி கதை, நாகமுனி, ஹசார் தினார், புதையல் என்று அது ஒரு பாட்டையில் போகின்றது. ஆசிரியர் எதை நினைத்து அதை எழுதினாரோ, என்னைப் பொறுத்தவரை அவர் நினைத்ததை வாசகனிடம் சேர்க்கவில்லை அல்லது எனக்கு அது சுத்தமாக புரியவில்லை. அது பாயசத்தில் விழுந்த கடுகு மாதிரி கிடக்கின்றது.  

ஜூனியர் விகடனில் தொடராக வந்த நாவல், அது சில இடங்களில் தெரிகின்றது. பாரதிராஜா, பாலா போன்றவர்கள் திரைப்படமாக எடுக்க நினைத்த நாவல், காரணம் தெரிந்ததுதான். 

தவறவிடக்கூடாத நாவல் என்று இல்லை, ஆனால் என் படித்தோம் என்று நொந்து கொள்ள வைக்காத நாவல். வாங்கியதற்கு வருத்தப்பட வைக்காது. கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள். 

  •  

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம். 

குடகும் பெரும்பாலும் தனித்தே இருந்து இருக்கின்றது. எந்த மன்னரும் அதை முழுவதும் தன் ஆளுமைக்கு கீழே கொண்டு வர  முடிந்ததில்லை. அவர்களது நிலப்பரப்பே அவர்களை பாதுகாத்து கொண்டு வந்துள்ளது. குடகை சுற்றி பல அரசுகள் இருந்தாலும், குடகர்கள் சுதந்திரமாகவே இருந்து வந்துள்ளனர். அப்படி இருந்த குடகு கடைசியில் ஆங்கிலேயர் கைவசம் சென்றது. குடகின் கடைசி மன்னர் சிக்க வீர ராஜேந்திரன். அவனது மோசமான ஆட்சியினால், அதைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து ஆட்சியை கைப்பற்றினர். அந்த சரிவைப் பற்றி பேசுவது இந்த நாவல்.

வழக்கமாக நாம் படிக்கும் சரித்திரக் கதைகள், ஒரு அரசனின் சாதனையை, பொற்கால ஆட்சியை போற்றுவதாக இருக்கும். அதுவும் பெரும்பாலும் கற்பனையாகவே இருக்கும். புலிகேசியை நரசிம்மன் வென்றான் என்ற ஒரு வரி ஒரு நாவலை உண்டாக்கலாம். கல்கி, சாண்டில்யன் வகுத்த வழியிலேதான் பெரும்பாலன சரித்திர கதைகள் வந்துள்ளன. விலக்குகள் சில பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், ரத்தம் ஒரே நிறம், டணாய்க்கன் கோட்டை போன்றவை. இந்த நாவல் சரித்திரம் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியும் பேசலாம் என்று காலத்தாலும், சூழ்நிலையாலும் வீழ்ந்த ஒருவனின் கதையைப் பேசுகின்றது.

குடகின் அரசு என்பது அங்கிருக்கும் குடகு மக்களால் அமைக்கப்படுவது. குடகின் அரசர்கள் லிங்கம் கட்டிக் கொண்ட சைவர்கள். லிங்காயத்துகள். ஆனால் அங்கு பெரும்பாலனவர்கள் குடகர்கள், குடகர்கள் ஆட்சி பொறுப்புக்கு வருவதில்லை. குடகர்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசானாக இருந்தது இல்லை என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம். குடகின் கடைசி சக்தி வாய்ந்த அரசன் தொட்ட வீர ராஜேந்திரன். அவரது காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சிமுறை இருந்து வந்துள்ளது. அவருக்குப் பின்னால் அவரது மகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணம், ஆனால் அதற்கு பதிலாக அவரது சகோதரன் லிங்கராஜன் ஆட்சிக்கு வருகின்றார், அதற்கு பின்னர் அவரது மகன் சிக்க வீர ராஜேந்திரன். பெரும்பாலான சம்பவங்களுக்கு சரித்திர ஆதாரங்கள் உண்டு. கதைக்காக சில  கற்பனை பாத்திரங்களும் உண்டு.

சமீபத்திய சரித்திரம் என்பதாலும், ஆங்கிலேயர்களின் அனைத்தையும் ஆவணப்படுத்தும் நடைமுறையாலும் பல சம்பவங்கள் சரித்திர பூர்வமானவை என்று நம்பலாம். 

ஹைதர் அலி, திப்பு சுல்தான் இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள் என்றே கற்று கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் மைசூர் மன்னரின் கீழ் பணியாற்றி, பின்னர் மைசூரை கைப்பற்றினார்கள். குடகின் மீது படையெடுத்து அங்கு பல அட்டூழியங்களை செய்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மைசூர் மன்னர்கள் சார்பாக நிற்பதாக உள்ளே வந்த ஆங்கிலேயர்கள், மைசூரை தங்கள் வசம் வைத்து கொண்டனர், பின்னர் உடையார் வம்சம் அதை பெற்றது. 

குடகில் நடந்தது கிட்டத்திட்ட அதே. ஆங்கிலேயர் உதவியுடன் தொட்ட வீர ராஜேந்திரன் ராஜ்ஜியத்தைப் பெற்றாலும்,ஆங்கிலேயர்கள் அங்கு அதிகாரம் செலுத்தவில்லை. நட்பாக இருந்து வந்துள்ளனர். சிக்க வீர ராஜேந்திரனின் மைத்துனன் சென்ன பசவன் ஆங்கிலேயர் உதவியை நாட, உள்ளே நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றி கொண்டனர். இதற்கு மிகவும் உதவியாக இருந்தது சிக்க வீர ராஜேந்திரன்தான். அவனது துர்நடத்தை மக்களிடமும், உறவினர்களிடமும், அதிகாரிகளிடமும், குடகர்களிடமும்  அவனிடமிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தை உண்டாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் குடகை கைப்பற்றி சிக்க வீரனை வேலூருக்கு நாடு கடத்துகின்றனர். பின்னர் அங்கிருந்து காசிக்கு அனுப்புகின்றனர். அங்கு அவன் மனைவி காலமாகின்றாள். சிக்க வீர ராஜனின் மகள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறி லண்டன் சென்று ஒரு ஆங்கிலேய கேப்டனை மணந்து கொள்கின்றாள். அந்த கேப்டன் இவர்களின் ராஜ குடும்பத்து நகைகளுடன் செல்லும் போது மாயமாகின்றான்.  புட்டவ்வா என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பெண்ணின் மகள் எடித் சாது, அவளது அத்தையால் வளர்க்கப்படுகின்றாள்.

நாவலில் வரும் பல கடிதங்கள் ஆவணப்படுத்தப்பட்ட கடிதங்களாக இருக்க வேண்டும், அந்த காலத்தில் ஆங்கிலேயர்களிடம் மக்களுக்கு எப்படி ஒரு மரியாதை வந்தது என்பதை அந்த கடிதங்கள் விளக்குகின்றன. மிக மரியாதையான மொழியில், தேன் தடவி எழுதப்பட்ட கடிதங்கள், அவர்கள் செய்வது எல்லாம் மக்களின் நன்மைக்கே என்று அனைவரையும் நம்ப வைத்திருக்கும். அதிகார கைப்பற்றலுடன், அவர்களின் மதமாற்ற வெறியும் நாவலில் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. விவாதத்திற்கு வரும் பாதிரியார், கேள்விகளை கேட்டுக் கொண்டே வரும் போது, அவரை பதில் கேள்வி கேட்கும் போது தடுமாறுகின்றார், கிறிஸ்துவத்தை கேள்வி கேட்க அவர்களது ஒரு நூலை முழுவதும் படித்தால் போதும், ஆனால் இந்து மதத்தை கேள்வி கேட்க எத்தனை நூல்களை படித்து தேற வேண்டும். ஒன்றுமில்லாமல் அரைகுறையாக உளறுவதும் இன்றும் தொடர்கின்றது.

இந்திய ஆட்சிமுறையில் பெண்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மகாபாரத காலத்திலிருந்து பெண்கள் ஆட்சியில் பங்கு வகித்தே வந்துள்ளனர். சமீபத்திய ஜமின்தார் காலம் வரை, பெண்களுக்கான பங்கு உண்டு. இதிலும் பல பெண்கள். தொட்ட வீரன் தன் மகளுக்கே ஆட்சியை தர எண்ணுகின்றான், லிங்கராஜனின் மகள் தேவம்மாவும் ஆட்சியை அடைய எண்ணுகின்றாள். சிக்க வீரனின் தொல்லை தாங்காமல், மந்திரிகள் அவனது மனைவியை ஆட்சி பொறுப்பை ஏற்க அழைக்கின்றனர், ஆங்கிலேயர்களும் சிக்க வீரனின் மகளை ஆட்சி பொறுப்பில் அமர்த்துவதாக கூறியே உள் நுழைகின்றனர். இறுதியில் அதுவும் நடக்காமல் அந்த பெண் லண்டனில் சென்று வாழ்கின்றாள்.

சிக்க வீர ராஜேந்திரம் மீது ஒரு பரிதாபத்தை உண்டாக்கிவிடுகின்றது. ஒரு காலகட்டத்தின் கடைசி திரி. காலம் மாறிக் கொண்டு வருவதை முன்னரே உணர்ந்து மாறுபவனே பிழைக்க முடியும். சிக்க வீரன் அந்த மாற்றத்தை உணராது தவறு மேல் தவறு செய்வதைப் பார்க்கும் போது ஒரு பரிதாபம் வருகின்றது. 

நாவலில் அதீதமான வர்ணனைகள், காடு மலை பற்றிய விவரிப்புகள் எல்லாம் கிடையாது. வெகு இயல்பாக ஒரு கதையை சொல்லும் நடை, இயல்பான உரையாடல்கள், சின்ன சின்ன விஷயங்கள்தான் இது மொழிபெயர்ப்பு என்பதை உணரச்செய்யும். சரித்திர பாத்திரங்களுடன் உண்மை பாத்திரங்களும் கலந்துதான் நாவல் படைக்கப்பட்டிருகின்றது. வழக்கமான சரித்திர கதைகளில் வரும் இரும்பு சலாகை மார்பு கொண்ட நாயகன் கிடையாது, வெகு இயல்பான பாத்திரங்களே. 

நமது கற்பனைப்படி அரசன் நினைத்தால் எதுவும் செய்யலாம், இருண்ட நிலவறைகளில் பொன்னும் மணியும் கொட்டி கிடக்கும், கை தட்டினால் நூறு பேர் வருவார்கள். இந்த நாவலைப் படித்தால் அது எல்லாம் மறையும், அரசனுக்கு கடன் தரவும் செட்டியார்கள் தேவை (கட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஆங்கிலேயர்கலை எதிர்க்க பலரிடம் கடன் வாங்கினார் என்று எங்கோ படித்த நினைவு), அரசாங்கத்தின் செலவு தனி, அரசனின் செலவு தனி. ராணி வாசத்தின் செலவுக்கு அரசு குறிப்பிட்ட அளவே பணம் தரும், அதிகம் போனால் நகையை விற்க வேண்டியதுதான், அரசனாக இருந்தாலும் பெரியவர்கள் பேச்சுக்கு காது கொடுத்து கேட்கத்தான் வேண்டும், மந்திரிகளிடம் முறைத்து கொண்டாலும், அவர்கள் மீது கோவப்பட்டாலும் ஆட்சி நடத்த அவர்களின் தயவு தேவை. இது எல்லாம் சரித்திர நாவகளில் புதிதான விஷயம் இல்லையா?

தமிழில் ஹேமா ஆனந்த தீர்த்தனால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிறப்பான மொழி பெயர்ப்பு. விலை..., விலையை கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 32, சரியாகத்தான் உள்ளது முப்பத்திரண்டு ரூபாய். மிகப்பழைய பதிப்பு, இப்போது எங்காவது கிடைத்தால் உடனே வாங்கி வைத்து கொள்ளுங்கள். 

முன்னுரையில் கன்னட இலக்கியத்தின் வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

நாவலின் பிற்சேர்க்கை சுவாரஸ்யமானது, மாஸ்தி ஐயங்கார் அவரது நண்பருடன் இந்த நாவலைப்பற்றி விவாதித்துள்ளார், அந்த நண்பர் லண்டன் சென்ற போது அவர் மைசூரைப் பற்றி பேசுவதை கேட்ட ஒருவர் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் சிக்க வீர ராஜேந்திரனின் வாரிசு. நண்பரிடம் பல ஆவணங்களை காட்டியிருக்கின்றார் அவர். அவர் கூறியது "அனைத்தும் சரியாக நடந்திருந்தால் குடகு என்னுடையதாக இருந்திருக்கும்". 

ஜெயமோகனின் மதிப்புரை இன்னமும் பல விஷயங்களை விளக்குகின்றது. 

எழுத்தாளர் வா.மணிகண்டனின் மதிப்புரை


  •  

சார்த்தா - எஸ்.எல்.பைரப்பா

பருவா, ஆவரணா நூல்களின் ஆசிரியர் பைரப்பாவின் மற்றொரு நாவல் சார்த்தா. பைரப்பாவின் ஒவ்வொரு நாவலுக்கு பின்னாலும் அவரின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. பருவா நாவலுக்காக மகாபாரத நிகழ்ச்சிகள் நடந்த இடங்களுக்கு எல்லாம் நேரில் சென்று பார்த்திருக்கின்றார், ஆவரணாவிற்காக அவர் படித்த நூல்களின் வரிசை மிகப் பெரியது. ஒவ்வொரு நூலையும் ஆராயந்து எழுதும் பைரப்பா, இந்த முறை பருவா - ஆவரணா காலகட்டத்திற்கு இடைப்பட்ட ஒரு காலத்தை நாவலுக்கான காலமாக எடுத்துக் கொண்டுள்ளார். 

வடபகுதிகளில் யார் யார் ஆண்டார்கள், அவர்களின் வம்ச வரிசை எல்லாம் நமக்கு சரித்திரப் பாடத்தில் பரிட்சைக்கு மட்டும் படிப்பதால் மறந்து போகின்றது. அசோகர், சந்திரகுப்தர், சாளுக்கியர்கள், பாடலிபுத்திரம், ஹர்ஷர், பிம்பிசாரர், கன்யாகுப்தம் என்று சில பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அந்த காலகட்டத்தை பற்றிய புத்தகம். இப்புத்தகம் அசோகரின் காலத்திற்கு பின்னால், புத்தமத எழுச்சி காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆதி சங்கராச்சாரியர் காலத்தில் நடக்கின்றது. 

ஆதி சங்கரரின் காலம் ஒரு சிக்கலான காலகட்டம். தமிழர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொண்டு நிம்மதியாக இருந்த காலம். விந்திய மலைக்கு வடக்கே, நிலையற்ற அரசுகள். புத்த, சமண மதங்களின் எழுச்சி. அவர்களின் சில தத்துவங்கள் மக்களிடையே உண்டாக்கிய செயலற்றதன்மை. புத்த, சமண மதத்தவர்கள் தங்கள் மதத்தை வெகு தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த காலம், அவர்களுக்கு வணிகர்களின் ஆதரவும் இருந்தது, வடமேற்கில் எழுந்த அரேபியர்களின் மதமாற்ற தீவிரம். இதற்கு நடுவே சிக்கி சுழலும் ஒருவனின் கதைதான் இது. 

சார்த்தா. சார்த்தா என்றால் வணிக குழு. அன்றைய வணிகம் என்பது ஒரு படை கிளம்பல் போல. பல நாடுகளை தாண்ட வேண்டும். நாட்டை தாண்டும் போது சுங்கம் தர வேண்டும், கள்வர்களை சமாளிக்க வேண்டும், உணவு வேண்டும். அப்படி என்றால் அந்த குழு என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டியிருக்கும்? அவர்கள் விற்க வேண்டிய பொருட்கள், அதை ஏற்றி இறக்க ஆட்கள், சுங்கம் போன்ற வழி செலவுக்கான பணம், அங்கு கிடைக்கும் பொருட்களை வாங்க பணம், அனைவருக்கான உணவு தானியங்கள், மாமிச தேவைக்கான பிராணிகள், இவற்றை எல்லாம் கொண்டு செல்ல வண்டிகள், வண்டிகளுக்கு ஏதாவது ஆனால் சரி செய்ய அதற்கான ஆட்கள், வழிகாட்டிகள், இவையனைத்தையும் பாதுகாக்க படை வீரர்கள், ஆய்தங்களை சரி செய்ய ஆட்கள். 

ஒரு காலத்தில் இந்த சார்த்தாக்கள் பாரதம் முழுக்க சென்று கொண்டிருந்தன. வடமேற்கு காந்தாரம் தாண்டியும் சென்று கொண்டிருந்தன. அரேபியர்களின் எழுச்சிக்கு பின்னால் தடைபட்டன. எப்படி ஒரு சார்த்தா செயல்படுகின்றது என்பது ரகசியம். அதன் உள்வட்ட நுணுக்கங்கள் வெளியே தெரிவதில்லை. வியாபார ரகசியம். அந்த ரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டி ஒரு சார்த்தாவுடன் இணையும் நாகபட்டன் என்னும் பிராமணனின் பயணம்தான் இந்த நாவல்.

தலைப்பிற்கேற்ப சார்த்தாவுடன் ஆரம்பிக்கும் நாவல், மிக விரைவில் சார்த்தாவை விட்டு வேறு பக்கம் நகர்கின்றது. சார்த்தா என்பது படிப்பவனை நாவலின் உள்ளே இழுக்க வைக்கப்பட்ட கொக்கி அவ்வளவே. இது முழுக்க சார்த்தாக்களை பற்றிய நாவல் இல்லை. இது நம் பாரத தேசத்தின் பல தத்துவங்களை பற்றிய நாவல். 

நாகபட்டனை சார்த்தாவுடன் சேர்ந்து அதன் ரகசியங்களை அறிய அனுப்பும் அரசனின் துரோகத்தால் நாகபட்டனின் மனம் தடுமாறுகின்றது. மதுராவிற்கு வரும் நாகபட்டனின் வழி விதவிதமாக போகின்றது. நாடக நடிகனாகும் அவன், யோகமார்க்கத்தின் வழி சென்று, தாந்திரீகனாகி, புத்தமதத்தின் தத்துவங்களால் கொஞ்சம் குழம்பி, நாளந்தா சென்று சேர்கின்றான். இதுவரை வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் கற்பனை, இதன் பின்னால் குமரில பட்டர், மண்டனமிஸ்ரர், ஆதி சங்கரர் ஆகிய பெரியவர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். அவர்களின் கதைகள் வழி, பல தத்துவங்கள் விவாதிக்கப்படுகின்றன. இதை ஒருவகை சரித்திர நாவல் என்றுதான் சொல்ல வேண்டும். 

வேறு எந்த நாட்டானுக்கும் இல்லாத ஒரு பிரச்சினை இந்தியனுக்கு உண்டு. தத்துவக் குழப்பம். பாரதத்தின் பாரம்பர்ய தத்துவங்களே ஏராளம். அனைத்திற்கும் மூலமாக இருப்பன வேதங்கள், வேதங்களை விளக்கும் வேதாந்தங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள். வேதங்கள் சொல்வது என்ன என்பதை பலவகையில் பலர் புரிந்து கொண்டு விளக்குகின்றனர். வேதங்களில் கூறப்பட்ட கர்மங்களே முக்கியம் என்பவர்கள் ஒரு பக்கம், வேதங்கள் கூறுவது யோகத்தைப் பற்றியும் முடிவில் கிடைக்கும் ஞானத்தை பற்றியும் என்று ஒரு பக்கம், எல்லாத்தையும் விட்டு அவனை சரணடையுங்கள் என்று ஒரு பக்கம், த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம். ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் உபாசனை செய்பவர்கள், சக்தியை மட்டுமே வழிபடுபவர்கள், தாந்த்ரீகர்கள். இது போதாது என்று இதிலிருந்து கிளைத்து வேறு பக்கம் சென்ற புத்தம், சமணம். நாத்திகம். இதன் நடுவே நாகபட்டன் சிக்கி அலைகின்றான். எது அவனுக்கான வழி என்பது அவனுக்கே தெரிவதில்லை. அனைத்தையும் தொட்டு பார்த்து இறுதியில் ஒரு தெளிவை அடைகின்றான். 

நாவல் வழி அவர் பல தத்துவங்களைப் அறிமுகம் செய்கின்றார். தியானம். தியானம் செய்வது என்பது ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டது. மெடிடேஷன் பண்றேன். சொல்லும் போதே ஒரு யோகி களை தோன்றுகின்றது அல்லவா. உணரவேண்டிய பல விஷயங்களை, புரிந்து கொண்டதாக நினைத்து ஒரு தனி உலகத்தில் வாழ்கின்றனர். சிலர் அதில் வெற்றியடைந்திருக்கலாம், ஆனால் வெற்றி அடைந்தவர்கள் அதிகமாக வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்பதால், பெருமை பாடும் பலரை நம்புவதில்லை. தியானம் பற்றிய அறிமுகம். அதோபோன்று யோகசாதகம். யோகம் என்பது எளிதான் விஷயமல்ல, அதற்கும் சில பின் விளைவுகள் உண்டு, அனைவருக்கும் அது கூடி வருமா? யோகத்தில் இலக்கு என்ன, அதை அடையும் செல்லும் போது வழியில்கிடைக்கும் சக்திகளையே ஒரு சாதனை என்று எண்ண தொடங்கும் போது பெரிய சக்திகள் கிடைக்காமல் போகலாம். தாந்த்ரீகம், எதுவும் தவறில்லை, எதுவும் விலக்கமில்லை, என்று பல சக்திகளை எளிதாக பெற வைக்கின்றது. பெளத்தம். அனைவரையும் துறவிகளாக்க விரும்பும் பெளத்த மத துறவிகள். இறுதியாக வருவது, பாரதத்தில்  ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய சங்கரரின் தத்துவம். 

பைரப்பா தத்துவங்களை அதிகம் திணிக்கவில்லை, பெரிய விவாதங்களுக்குள்ளும் செல்லவில்லை. வாசகனுக்கு ஒரு சிறிய ஆசை காட்டுகின்றார். இது எல்லாம் இருக்கு பாரேன் என்று. உண்மையில் பல தத்துவ விளக்கங்கள் எல்லாம் எனக்கு முழுவதும் புரியவில்லை. இந்த ஒரு நாவல் அனைத்தையும் புரிய வைக்கவும் நினைக்கவில்லை. நம்முடைய தேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது, முன்னோர்கள் எப்படி எல்லாம் சிந்தித்தனர் என்று ஒரு சிறிய அறிமுகத்தை செய்கின்றார். என்ன இது என்று யோசிப்பவர்கள் மேற்கொண்டு போகலாம்.

மதமாற்றத்தை பற்றி வரும் பகுதிகள் பல இன்றைய மதமாற்ற ஏஜண்டுகளை நினைவுபடுத்தாமல் இருக்காது. பெளத்தமும், சமணமும் நமது புராணங்களிலிருந்து எடுத்துக் கொண்ட கதைகளைப் போல, இன்று ஹிந்து மதத்திலிருந்து பல விஷயங்கள் திருடப்படுகின்றன. கிரிவலம், பூஜை, ஜெபம், வேதம், ஆராதனை என்று ஆரம்பித்து அமாவாசை தர்பணம் வரை செல்கின்றது. 

இறுதிப்பகுதிகள், அரேபியர்கள் அன்றைய மூலஸ்தானை, இன்றைய முல்தான் நகரை கைப்பற்றும் நிகழ்ச்சியுடன் முடிகின்றது. பாரதத்தின் அடுத்த ஆக்கிரமிப்பாளர்கள் கையில் போவதை பார்ப்பதுடன் நாகபட்டன் ஒரு வழியாக தன் தேடல்களை விட்டு அமர்கின்றான்.

குறைவான பாத்திரங்கள் நாகபட்டன், சந்திரிகை, ஜெயசிம்மர்,சிற்பி போன்ற பாத்திரங்களுடன் சங்கரர், மண்டனமிஸ்ரர் அவரது மனைவி, அவரின் குரு குமரில பட்டர்.  குமரில பட்டர் தன் தவறுக்கு பிராயச்சித்தமாக நெருப்பில் இறங்கியது, ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்றது, ஆதிசங்கரர் பரகாயப் பிரவேசம் செய்தது, முலஸ்தானத்தை அரேபியர்கள் கைப்பற்றியது, அங்கிருந்த ஹிந்துக்களை மதம்மற்றியது போன்ற உண்மை சம்பவங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

சரித்திரமும், தத்துவமும் கலந்த ஒரு நல்ல நாவல். படியுங்கள்.
  •  

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.

நாற்பதுகள். இரண்டாம் உலகப்போரின் காலம். சுதந்திர போரின் உச்சக்கட்டம். உலகப்போர்களின் காலத்தை இன்று நாம் ஓரளவிற்கு கொரானா காலத்தில் உணர முடிகின்றது. அந்த நாற்பதுகளில் நடக்கின்றது இந்த நாவலின் கதை.

ராமோஜிராவ், மதறாஸ் மாகாண, பிரிட்டீஷ் அரசின் ஊழியன். அவனது மனைவி ரத்னா பாய். இவர்களின் வாழ்வின் அனுபவங்கள்தான் நாவல் முழுவதும். ராமோஜி ஏ.ஆர்.பி வார்டனாவது, அவனது சினிமா அனுபவங்கள், இருவரும் டெல்லி சென்ற அனுபவம், கும்பகோணம் சென்ற அனுபவம், யுந்த கால அரசாங்கத்தின் வேலை என்று சென்று கொண்டே இருக்கின்றது. இதன் நடுவே ஏகப்பட்ட தகவல்களைக்  கொட்டியிருகின்றார்.

சென்னைநகர் வீதிகளின் பங்கர்கள், கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட வீடுகள், குறைவான வெளிச்சத்தில் வாழும் குடும்பங்கள், விறகு முதல் அரிசி வரை ரேஷன், ஊருக்கு சென்றாலும் ரேஷன் கார்டை கொண்டு செல்ல வேண்டிய நிலை, டீ யை மக்களிடம் கொண்டு சேர்க்க போராடும் டீ போர்ட், சென்னை முதல் டெல்லி வரையிலான ரயில் பயணத்தில் என்ன என்ன ஊர்கள் வரும், எங்கு என்ன கிடைக்கும், என்று பலவித தகவல்கள். 

விதவிதமான மனிதர்கள். வரலாற்றிலிருந்து வந்தவர்கள், நாம் கேள்விப்பட்டவர்களின் சாயல் கொண்டவர்கள் என்று பலரை உலவ விட்டிருக்கின்றார். தெலக்ஸ் புவனா என்ற பெயரில் வரும் சினிமா நடிகை, காளிங்க ரத்னம் என்னும் நடிகர், கழுதை வளர்க்கும் ஆர்ட் டைரக்டர், ரயிலில் வரும் பிராமண பாட்டி, கங்கா - கோபு, கானோஜி ஆங்க்ரே, அருணாச்சல கவிராயர் என்று பல சுவாரஸ்யமான பாத்திரங்கள். 

முதலில் வரும் தசாபதி, காளிங்கரத்னம் என்று வந்தவுடன், சும்மா பெயர் மாற்றி வைத்து எழுதும் ஸ்பூஃப் நாவல் என்றுதான் நினைத்தேன். இல்லை. ஒவ்வொரு பாத்திரத்தையும் அழுத்தமாக பதியும்படி சித்தரத்துள்ளார். நடுவே, மோகமுள் பாத்திரங்கள் முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வருகின்றன. சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது.

விஷ்ணுபுரம் மாதிரி, தற்போது நடக்கும் அனைத்தும் ஏற்கனவே நடந்தது என்பது மாதிரி, ராமோஜி, ராமோஜி ஆங்க்ரே என்ற பெயரில் கானோஜி ஆங்க்ரேயின் பிரதான தளபதியாக வருகின்றார், பின்னார் வெறும் ராமோஜியாக ஆனந்த ரங்கம் பிள்ளைக்கு உதவியாக வந்து, அருணாச்சல கவிராயரை சந்திக்கின்றார். விட்டால் அக்பரை சந்தித்த ராமோஜி, ராமனுஜரை சந்தித்த ராமோஜி எல்லாம் வருவார்கள் போல.

நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் உணவு. ராமோஜி தினமும் என்னென்ன உண்டான் என்று தெளிவாக இருக்கின்றது. உணவில் முக்கியம் எதை எதோடு சாப்பிடுவது என்று ஒன்று உள்ளது. அரிசி உப்புமா என்றால் அதற்கு கத்திரிக்கா கொத்ஸு சுகம், இட்டிலிக்கு சட்னி சாம்பார், ஆலு பரோட்டாவிற்கு தயிர் ஊறுகாய் என்று விதவிதமான உணவுகள். நல்ல உணவு ரசிகர் போல.

கூடவே, சங்கீதம். அதைப்பற்றியும் ஏகப்பட்ட விஷயங்கள்.

நாவல் முழுவதையும் ஒரு மெல்லிய புன்னகையுடன் மட்டுமே படிக்க முடியும். வெகு இயல்பான நகைச்சுவை, வலிந்து புகுத்தியது ஏதுமில்லை, அங்கங்கு மெல்லிய நுண்ணுர்வை தொடும் சம்பவங்கள் என்று ஒர் ஃபீல் குட் நாவல். 

அவரது மற்றொரு நாவல் அரசூர் வம்சம், அதை படித்து விட்டு, இதையும் படித்தால் இரண்டையும் ஒருவரா எழுதினார் என்று தோன்றுகின்றது. நாவலில் எப்படி காலத்தை ஒரு பாத்திரமாக்கலாம் என்று காட்டியுள்ளார் முருகன். பாத்திரங்கள், சம்பவங்கள் அந்த காலத்தை விட்டு நகர்ந்தால் ஒன்றுமில்லாமல் போகும். 

கண்டிப்பாக படியுங்கள். கிண்டிலில் கிடைக்கின்றது.




  •  

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

ஆண்டி - மாரி - இருவரின் சிறார் பருவம், கிராமத்து சிறார்களின்  உற்சாகமான விளையாட்டுகளால் நிரம்பியுள்ளது, கபடி, காக்கா குஞ்சு, கோலி போன்ற விளையாட்டுகள், காடு மேடுகளில் திரிதல், வேட்டையாடுதல். அதைவிட, சிறுவர்களின் "அடித்துவிடும்" விளையாட்டு. அவரவர் கற்பனையில் தோன்றுவதை பிறருடன் பகிர்வதும், அடுத்தவர் கற்பனைகளை பொய்யென்று தெரிந்தாலும் நம்புவது எல்லாம் தற்கால குழந்தைகளுக்கு கிடைக்குமா தெரியவில்லை. அதிகமாக கற்று கொண்டுவிடுகின்றனர்.

கணவன் - மனைவி உறவு முறை, கணவனை என்ன இவனே, அவனே என்று அழைப்பது என்பது எல்லாம் புதிதாக இருக்கின்றது. கணவன் மனைவி இருவரும் அவரவர் வேலையை பகிர்ந்து கொள்வது, கணவன் இறந்த பின்னால் திருமணம் செய்து கொள்வது, விரும்பியவனை திருமணம் செய்து கொள்வது என்று அவர்கள் சுதந்திரமாகவே இருந்திருக்கின்றனர். இன்று தமிழகத்தில் பேசிவரும் பல திருகல் பேச்சுகளை தெரிந்தோ தெரியாமலோ அங்கங்கு உடைத்துள்ளார். கதை நடக்கும் கிராமத்தில் ஒரு ஜாதியினர் மட்டுமே வாழ்கின்றனர். ஆண்டி குடும்பன், ஊர்க்குடும்பன் என்றே பல இடங்களில் வருகின்றது. அனைவரும் நிலபுலம் உள்ள சம்சாரிகளாக இருக்கின்றனர், பெருமாள் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு போகின்றார்கள், அதே சமயம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையையும் மறைப்பதில்லை. ஒரு ஜாதியினர் மட்டும்  வாழும் ஊரில் மெதுவாக மற்றவர்களும் வந்து வேர் பிடிக்கின்றனர். அவர்களுக்கு பின்னாலும் பெரிய கதை.

அப்படி ஊருக்குள் வரும் ஒரு குடும்பம் நாடர் குடும்பம். நாடார்கள் தங்கள் ஒற்றுமையின் மூலம் முன்னேறியவர்கள். கொற்கை, ஆழி சூல் உலகு நாவல்களிலும் நாடார்களின் வியாபார முன்னேற்றம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும், சமூகத்தில் அவர்களின் இடம் கேள்விக்குறியதாக இருந்தது. அதை முறியடிக்க அவர்களின் பணம் அவர்களுக்கு பயன்படவில்லை, மதம் மாற்றமும் பயன்படவில்லை. மிக மெதுவாக நடந்த சமூக மாற்றமும், கல்வியும் மட்டுமே அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தை தந்துள்ளது. அதற்கான அவர்களின் போராடம் நெடியதாக இருந்துள்ளது. 

சிவகாசியில் நாடர்களுக்கு எதிரான கலவரம், கலவரம் என்பதை விட அவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்றுதான் சொல்ல வேண்டும். அதைப் பற்றி எல்லாம் எந்த பாடமும் நமக்கு சொல்லித்தரப்படவில்லை.  அந்த கலவரமும், கழுகுமலை கோவில் நுழைவு கலவரமும் மிக விரிவாக சொல்லப்படுகின்றது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்திருப்பதால், அனைத்தும் விரிவாக ஆவணப்படுத்த பட்டிருக்க வேண்டும். அதனால் நாவலில் வரும் தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை என்றுதான் நம்பவேண்டும். (இதுவரை யாரும் எதுவும் சொன்னதாக தெரியவில்லை). ஆனால் அதுவே கொஞ்சம் ஆயாசத்தையும் தருகின்றது. மிக அதிகமான பக்கங்களில் மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் வருவது பொன்ற பிரமையை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஆசிரியர் இடதுசாரி பார்வை கொண்டவர் போல, அங்கங்கு மெலிதான ஒரு பக்க சார்பு தெரிகின்றது. மதமாற்றம் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கவனமாக எழுதப்பட்டுள்ளது. நடுநடுவே விவிலியம், புராணம் என்று வருவது எனக்கு நாவலின் சீரான நடையை குலைப்பது போல தோன்றுகின்றது. 

இது பல நாவல்களின், சிறுகதைகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். ஊரை கொள்ளையர்களிடமிருந்து காக்க கொள்ளைக்காரனாக மாறும் ஒருவனின் கதை, ஒரு நல்ல வைத்தியரின் கதை, ஊருக்குள் திரியும் விதவிதமான மனிதர்களின் கதைகள், என்று கதைகளின் கொத்து.

உள்ளே ஏகப்பட்ட சொலவடைகள். பெரும்பாலும் உரையாடல்களால் நாவல் நகர்த்தபடுகின்றது. மகாமனுசன், ரோசாப்பூ மனுசன், என்று அரசியல் தலைவர்களுக்கு பெயர்கள். ஆசிரியர் நினைப்பதை உள்ளே சொருகிவிடலாம். உரையாடல்களில் அது ஒரு வசதி. 

நாவலின் முக்கிய கருவாக ஆசிரியர் நினைத்தது சிவகாசி கலவரமாக இருந்திருக்க வேண்டும். அதுதான் நாவலின் சரிபாதி இடத்தை பிடித்திருக்கின்றது. சில இடங்களை தாண்ட பொறுமை வேண்டும், தாண்டி படித்தால் ஒருபுதிய வரலாற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது. கிண்டிலில் வாங்குவது நல்லது.

  •