Reading view

வைகறை வாசகன் பதிவுகள் – கனிவான கலங்கரை விளக்கம்

டாக்டர் சங்கர சரவணன் குறித்து எழுதுகையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை. எனக்கும், பல நூறு மாணவர்களுக்கும் வாழ்வளித்த ஆசிரியர் அவர். நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது, சுட்டிவிகடனுடன் தரப்பட்ட இணைப்பிதழில் பல்வேறு பல்சுவை, பொது அறிவுக்குறிப்புகள் வரிசை கட்டிநின்றன. அவை எனக்கிருந்த மிகக்குறைந்த வாசிப்பிற்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. 90% செய்திகளை முதன்முறையாக அப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்கிற அளவுக்கு நிலைமை. ஆசிரியரான என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாள் கோடை விடுமுறையில் என்னை ஓயாமல் அந்த ‘கையளவு களஞ்சியத்தை’ படிக்க வைத்தார். மீண்டும், மீண்டும் கேள்விகள் கேட்டு பயிற்றுவித்தார். இத்தனை வதைகளுக்கும் விதை போட்ட அந்த நூலின் ஆசிரியரை தேடினேன், ‘டாக்டர் சங்கர சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  முதலில் கடுமையான கோபம் இருந்தாலும், அந்நூல் என்னைப் புடம் போட்டது. அறிவுத்தாகத்தை வளர்த்தெடுத்தது. சுட்டி விகடனின் ‘சுட்டி குவிஸ் விஸ்’ போட்டிகளில் இருமுறை அரையிறுதி போகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. வேறெந்த தயாரிப்பும் இல்லாமல், ஒரே ஒரு கையளவு களஞ்சியத்தைக் கொண்டு வாள் சுழற்றி தோற்றுத் திரும்பினோம். 

காலங்கள் உருண்டோடின. குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனாக முதல் முறை மோசமான முறையில் தோற்றுப்போய் இருந்தேன். துவண்டு போய், திக்கற்று அமர்ந்திருந்த காலம். என்னுடைய ஏதோவொரு கட்டுரையை படித்துவிட்டு டாக்டர் சங்கர சரவணன் சார் என்னோடு பேச விரும்புவதாக சொன்னார்கள். தமிழிலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த எனக்கு உற்ற ஆசிரியராக அவரே இருப்பார் என்று அதிகாரிகள் வழி சொன்னார்கள். அவரின் உதவி நாடி சென்றேன். என்னைப்பற்றி ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டார். வினாடி வினா வல்லுநரான இவர் நம்மை கேள்விகளால் துளைக்கப்போகிறார் என்று அஞ்சினேன். அதற்கு மாறாக, அப்படியே அரவணைத்துக் கொண்டார்.

ராணிப்பேட்டையில் ஆராய்ச்சி அலுவலராக இருந்த அவர், காலையில் எனக்கு மட்டும் தனியாக தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுப்பார். பின்தங்கியிருந்த என்னை கைதூக்கி விடுவதற்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளும் 6:30 மணிக்கு காலையில் வகுப்பெடுப்பார். சில மாதங்கள் இப்படியே சென்றது. பின்னர் அவருடைய பொதுவான தமிழ் வகுப்புகளில் என்னை மாணவனாக இணைத்துக்கொண்டார். ஒருநாள் கூட கட்டணம் என்று ஒரு ரூபாயை கூட அவர் கேட்டதில்லை. கைம்மாறு கருதாத கடப்பாடு என்பதன் உண்மைப்பொருளை அவரிடமே கண்டேன். 

உடல்நலம் குன்றி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில்லாமல் நேரடியாக கேட்டதையும், நினைவில் இருந்ததைக் கொண்டும் தேர்வை அணுகினேன். தமிழ் விருப்பப்பாடம் முதல் தாளினை இயன்றவரை எழுதி முடித்திருந்தேன். 50 மதிப்பெண்களுக்கான பதில்களை தரமுடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிய வெவ்வேறு பதில்கள் தவறானவை என்பதை பிறரோடு நிகழ்த்திய உரையாடலில் புரிந்துகொண்ட போது  அழுதுகொண்டே தேர்வை எழுத வேண்டாமென தோன்றியது. சரியாக சார் அழைத்தார். என்னுடைய மனநிலையைப் புரிந்து கொண்டார். சற்றுகூட கடுமை காட்டாமல், நான் தவறாக எழுதிய பதில்களையும் சரியென நம்பவைத்து இறுதிக்கோட்டை தொட்டுவிட்டு வா என ஊக்கப்படுத்தினார். அவர் அன்றைக்கு பேசிய அந்த அரைமணி நேரம் என் வாழ்வின் திருப்புமுனை. இன்றைக்கு நான் ஆட்சிப்பணியில் இருப்பதற்கு முழு முதன்மையான காரணம் அவரன்றி வேறு யாருமில்லை. 

டாக்டர் சங்கர சரவணன் சாரோடு வெவ்வேறு காலங்களில், பணிகளில் அருகே இருந்து கற்றுக்கொள்ளும் பேறு கிடைத்திருக்கிறது. ‘பிரமிப்பு’ என்பது கூட போதுமான சொல் அன்று. விகடன் இயர் புக்கை எந்த பொருட்பலனும் எதிர்பாராமல் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று ஒற்றை மனிதராக பல ஆண்டுகள் இயற்றி அளித்தார். உறக்கமின்றி, இற்றைப்படுத்தி மிக நேர்த்தியாக, மாணவர்களின் தேடலுக்கு தீனி போடும் வண்ணம் அப்படைப்புகள் இருக்கும். இளைஞர், மூத்தோர் பட்டாளம் உடன் இவரே தனி மனித இராணுவம் போல பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை வரைவார். போட்டித்தேர்வு சார்ந்து தேர்வு பாகுபாடு இன்றி  பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார். உலகத்து செல்வமெல்லாம் தமிழிற்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் பணிகள் தமிழ் அறிவியக்க வரலாற்றில் தன்னேரில்லா பக்கங்கள். உருவான பல்வேறு நூல்களின் மொழியாக்கம், செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரின் பங்கு அளப்பரியது. தமிழ்மொழியின் பழமைக்கும், நவீனத்துக்கும் என்று இரண்டுக்கும் ஈடுகொடுத்து அவரளவிற்கு கற்றறிந்தவர்கள் இல்லை என்றே துணிந்து எழுதுவேன். கால்நடை மருத்துவராக இருப்பது தாஜ்மகாலின் முதல் கதவு போலத்தான். உள்ளே செல்ல செல்ல அவரின் ஆளுமை பரந்து, விரிந்து கொண்டே சென்று ஆச்சரியப்படுத்தும். 

டாக்டர் சங்கர சரவணன் சாரிடம் எனக்கும், பலருக்கும் நெருக்கத்தை தருவது அவரின் பாகுபாடுகளற்று பழகும் பண்பு. மேலும், நம்மை கனிவாக, நேர்மையாக ஆற்றுப்படுத்தும் ஆளுமை. உழைப்பிற்கும், வாசிப்பிற்கும், அறிவு ஊக்கம் மிக்க ஆக்கங்களுக்கு அஞ்சாத ஆள்வினை உடைமை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளின் மீது பெரும்பற்று கொண்ட வைகறை வாசகர். 

சாரின் இணையர் உஷா அம்மா என்னைப்போல் பலருக்கு இன்னொரு அம்மா. சாரின் பொருள் நாடா அறவாழ்விற்கு அருந்துணை. எனக்குத் தெரிந்து போட்டித்தேர்விற்குத் தயாராகும் மாணவருக்காக வீட்டின் மேல்பகுதியை ‘எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்து படிக்கட்டும்’ எனச்சொல்கிற உஷா அம்மாவின் ஒப்புரவிற்கு இணையுண்டா? மாணவர்களுக்காக தன் நேரம் அனைத்தையும் தரும் டாக்டர் சங்கர சரவணன் சாரிற்கு அம்மாவை விட உற்ற துணை யாருமில்லை.

பல்வேறு பார்வைகளை ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ காலத்தில் வைகைறைப்பொழுதில் எழுதிய அவரின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ 2k kids-ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது. ஒரே மூச்சில் படித்தல் ஒரு சுவை. எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொரு கட்டுரையும் சுருக்கமும், நெருக்கமும் மிக்கவை. போலியான பிம்பங்கள், முகமூடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தது, தன்னை பீடித்தது என்று அனைத்தையும் அள்ளித்தருகிறார். 

தன்வரலாற்று பக்கங்களாக சில கட்டுரைகள் அமைகின்றன. அவற்றில் மென்மையான நகைச்சுவையும், சமயங்களில் அழவைக்கும் சோகமும் இழையோடுகிறது. வயது வந்தோருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையை குறுக்கெழுத்துக்காக தந்தையிடம் கேட்டறிந்ததை சொல்லும் கட்டுரை ஒரு சான்று. அதுவரை குலுங்க, குலுங்க சிரிக்கும் நம்மை ஒரே வரியில் சோகமயமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சத்தியம் செய்து சில செய்திகளை சொல்கிறார். கீர்த்தி சுரேஷின் அன்னை குறித்து தேடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் வரும் ‘சின்ன c ஆ, பெரிய C ஆ’ ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு இந்நூலில் சார் நிகழ்த்தும் ‘C’ மாயத்தை நீங்கள் படித்துதான் பரவசமடைய முடியும். 

‘கலைச்சொல்லாக்கம்’ குறித்த  ஏழு கட்டுரைகள் தமிழால் முடியும் என்பதை ஆழமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், தெளிவோடும் எடுத்து வைக்கும் கட்டுரைகள். ‘Mutation’ என்பதற்கு இணையான கலைச்சொல்லை கண்டடைய கந்த சஷ்டி கவசம், தாவரவியல் நூல்கள், நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை விரைவு என வைகறை வாசகன் நிகழ்த்தும் தேடல் நெகிழவைக்கிறது. ஆலங்குடி வங்கனாரும், ஆண்டன்  செக்காவும் ஜெர்மனியில் ஜோதிகா, அதிதி ராவை சந்தித்த கதை இந்நூலில் நமக்காக காத்திருக்கிறது. 

இந்நூலில் தோல்வியில் துவண்டு, நைந்து போகிறவர்களை கரைசேர்க்கும் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்கள் அணிவகுக்கின்றன. இலக்கிய படைப்பாளிகள் குறித்து வெவ்வேறு சிந்தனைச் சிதறல்களை அள்ளி வழங்கும் ஆசிரியரிடம் குறுங்குழு மனப்பான்மையோ, தூய்மைவாத கண்ணாடியோ இல்லாமல் இருப்பது நிறைவளிக்கிறது. 

அம்மா குறித்த பதிவுகள் ஆன்மாவில் இருந்து எழுதப்பட்டவை. மகளிர் உரிமைத்தொகை ஆனது உரியவருக்கு சென்று சேர வேண்டும், தகுதியில்லாதவர்கள் பயன்பெற்றுவிடக்கூடாது, விடுபட்டுப்போனவர்களின் குறைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று சங்கர சரவணன் சாரின் அம்மா காட்டும் அக்கறை அம்மாக்களுக்கே உரியது. சமயங்களில் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் வண்ணம் சில பதிவுகள் நின்றுவிடுகின்றன.

திருக்குறள் குறித்து நூலில் வழங்கிவருபவை கண்மூடித்தனமான வழிபாட்டுப் பரணிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, மாறிவரும் அறிவுக்கு அழுத்தம் தராமல், மாறாத மெய்யறிவுக்கு அதிக அழுத்தம் தந்து இலக்கியல், இயங்கியல் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதியதால் தான் குறள் காலம், இடம் ஆகிய பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக இருக்கிறது என்கிற வா.செ. குழந்தைசாமியை கருத்தை நினைவுக்கூர்வது ஒரு சான்று. திருக்குறளில் நேர்நிலை இயல், இருத்தல் இயல், பின்நவீனத்துவம், பெண் விடுதலை, மரண தண்டனை, நிர்வாகத்தில் ரகசிய காப்பு ஆகியவை பல்சுவைக்கதம்பம் மட்டுமல்ல, பன்முகப்பார்வையும், புதுமை நோக்கும் கொண்டவை. 


இந்நூலின் ஆகப்பெரிய வெற்றி என்பது, “எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது பார்!” என்கிற பெருமிதப் பூச்சு எங்கும் இல்லவே இல்லை. ‘அன்புத்தோழமையே! உன்னோடு பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுவைகூட்டி பரிமாற சங்கதிகள் உண்டு. மனதோடு உரையாட நூல்கள் சில கண்டேன். பிடித்திருந்தால் சேர்ந்து தேடுவோம். கண்டடைவதை எனக்கும் தெரிவிக்கவும். அறிவுக்கடல் எங்கும் அன்போடு மூழ்கி முத்தெடுப்போம்’ என்கிற நெருக்கமும், பிணக்கமும், அறிவினை விரிவு செய்யும் பொதுமை நோக்கும் மிளிர்கிறது. வைகறை வாசகனின் பதிவுகள் விடியல்களை நமக்களிக்கும் அறிவுப் பெருவிருந்து. 

வைகறை வாசகன் பதிவுகள் 

விகடன் பிரசுரம் 

முதல் பதிப்பு 

பக்கங்கள் : 352

விலை : 375 ரூபாய்  

  •