இவைகள் நவரத்தினங்கள் | வ. ரா.
கலைஞர்கள் இருவர். அவர்களை நான் இரட்டையர்கள் என்று கூப்பிடுவேன். அந்த இரட்டையர்கள் ‘மணிக்கொடி’க் காரியாலயத்தில், 1934ஆம் வருஷம் துவக்கத்தில், எனக்குத் தரிசனம் தந்தார்கள். அன்று முதல் அவர்களிடம் எனக்கு அலாதியான பிரேமையும் மதிப்பும் ஏற்பட்டன. அவர்கள்தான் கு.ப.ராஜகோபாலன், பிச்சமூர்த்தி என்று சொல்லவும் வேண்டுமா? நண்பர் ராஜகோபாலன் மறைந்துபோனார். என்ன கொடுமை! எவ்வளவு பொறுக்க முடியாத துக்கம்! ஆனால் ராஜகோபாலன், பத்து வருஷங்களுக்குள், தமிழ் இலக்கியத்துக்குச் செய்துவந்த தொண்டைப் பற்றி நினைத்தால் அது என்னைப் பிரமிக்கும்படி செய்கிறது.
சாதாரணமாக ராஜகோபாலன் ‘பேசாமடந்தை’யைப் போல இருப்பார். தனது கஷ்ட நிஷ்டூரங்களை யாரிடத்தும் வெளிப்படையாகச் சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு, அவ்வளவு மௌனத்தோடு அவர் இருப்பார். ஹிந்து சமாஜத்தில் காலத்தின் கொடுமையால் குவிந்து கிடக்கும் ஊழல்களையும் நவீன காலத்தில் மனித வர்க்கத்தில் நிறைந்து நிற்கும் அசுரத்தன்மைகளையும் பற்றி நான் அடிக்கடி நீண்ட காலம் அவருடன் பேசுவதுண்டு. பேச்சு முடிந்ததும் அவர் நீண்டதொரு பெருமூச்சு விடுவதைத்தான் நான் கண்டிருக்கிறேன். நான் சொன்னதை எவ்வளவு வரையில் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதே எனக்குத் தெரியாது.
ஆனால் இப்பொழுது தெரிகிறது. அப்பொழுதே சிறிதளவு தெரிந்தது என்று சொல்லுவேன். பேச்சை அதிகமாக விரும்பாத ராஜகோபாலன் வெகுதுரிதமாக எழுதத் துவங்கினார். அவர் எத்தனையோ பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறார். அவைகள் யாவற்றையும் அப்பொழுது படிக்க, எனக்கு வசதி இல்லாமல் போய்விட்டது. சிறுகதைகளை நூல் வடிவமாக அல்லயன்ஸ் கம்பெனியார் ஆக்கிய பின்னர் அவைகளைப் படிக்கும் பாக்கியம் பெற்றேன். திடுக்கிட்டுப் போனேன். இவைகள் நவரத்தினங்கள் என்ற முடிவு, தானாகவே என் மனத்தில் வந்து பதிந்துவிட்டது.
ஒரே மூச்சிலே இந்தக் கதைகளைப் படித்தேன். கொஞ்சமாவது அலுப்புத் தட்டவேண்டுமே, இல்லை. ஒரு கதையைப் படிக்கத் துவங்கியதும், மனம் குதூகலமடையும். எடுப்பு அவ்வளவு பிரம்மானந்தமாக இருக்கும். முடியும்பொழுது, கதை முடிந்துவிட்டதே என்று மனம் சங்கடப்படும். கதைகள் மொத்தம் இருபத்தொன்று. அவைகளில் எதை உயர்த்தி, எதைத் தாழ்த்தி என்று சொல்லுவது? எல்லாம் முதல் தரமான வார்ப்பட வேலைகளாக அமைந்திருக்கின்றன. சொத்தை, சோடை இல்லாமல் எழுதக்கூடிய ராஜகோபாலன் கலை நிபுணன் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளத்துடிப்பை இரண்டொரு சொற்களால், இரண்டொரு வாக்கியங்களால் சித்திரித்துக் காண்பிக்கக் கூடிய இணையில்லாத கலைஞன் ராஜகோபாலனைப் பற்றிச் சிறப்பாக இன்னதுதான் சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை. தமிழில் சிறுகதை எழுதியவர்களுள் ராஜகோபாலன்தான் தலைமை ஸ்தானம் வகிப்பார், நீண்ட காலம் வகிப்பார். இதுதான் என் மனத்தில் வெகு உறுதியாகத் தங்கி நிற்கிறது.
இந்தச் சிறுகதைகளுக்குள் ‘நூருன்னிஸா,’ ‘பண்ணைச் செங்கான்’, ‘தாய்’, ‘வீரம்மாளின் காளை’, ‘மின்னக்கலை’, ‘காதலே சாதல்’ - இவைகள் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டன. ராஜகோபாலன் எந்தப் போனாவால் இவைகளை எழுதினாரோ என்று ஆச்சரியப்பட்டேன். மிருதுவான பாஷையில், கம்பீரமான உணர்ச்சியை வளர்ப்பதில் ராஜகோபாலன் தனிப்பட்ட கலைஞன் என்று என்னையே நான் சமாதானப்படுத்திக்கொண்டேன்.
அல்லயன்ஸ் கம்பெனியின் சொந்தக்காரர் ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர் நீண்டகாலம் வாழ்ந்து, ராஜகோபாலன் போன்ற மேதாவிகளின் நூல்களைத் தமிழ் நாட்டாருக்குப் பயன்படுமாறு அடிக்கடி வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.
வ. ரா.