Reading view

ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்

காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள் வேகமாக நீந்துவதை கவனித்துக் கொண்டிருந்தது.

பட … பட … பட்… பட … சிறகடித்துக் கொண்டு ப்ராங்கி இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் வந்து நின்றது அந்த வெண்புறா. கண்கள் கூசுமளவிற்கு வெண்மை. ப்ராங்கி புறாவைக் கண்டது. புறாவின் பேரழகும் பளீர் வெண்மையும் ப்ராங்கியை வியப்பில் ஆழ்த்தியது. புறா மிகவும் தாகத்தோடு இருப்பது போலத் தெரிந்தது.. காரணம் தன் சிவந்த சிறிய அலகால் தண்ணீரை வேகவேகமாகப் பருகியது.

அதே நேரம் ப்ராங்கியின் குழந்தைகளில் இருவர் ப்ராங்கியிடம் நீந்தி வந்து “அம்மா, அந்தப் பறவை எங்களை அலகால் தீண்டிவிட்டது எங்களுக்கு வலிக்கிறது” என்று தங்களின் வால்பகுதியைக் காட்டி முறையிட்டன. காயத்தோடு வந்த தன் குழந்தைகளைக் கண்ட ப்ராங்கிக்கு கோபம் தலைக்கேறியது. துள்ளிக் குதித்து புறா நின்ற இடத்திற்குச் சென்றது.

“ஏய்… நீ யார்? எங்கிருந்து வருகிறாய். இந்த ஆற்றங்கரையில் இதுவரை உன்னை நான் கண்டதில்லை” என்று புறாவிடம் கேட்டது ப்ராங்கி.

“என் பெயர் டிப்லர், நானும் என்னுடைய தோழிகளும் பல மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் பந்தயப் பறவைகள். என் தோழிகள் சற்று தொலைவில் இளைப்பாறுகின்றார்கள். நான் தாகத்திற்குத் தண்ணீர் தேடி இங்கே வந்தேன்” என்றது டிப்லர் என்ற அந்த வெண்புறா.

“வந்தது சரி, நீர் பருகும்போது கவனமாக இருக்கக்கூடாதா? பார் … நீ உன் அலகால் என் குழந்தைகளைக் காயப்படுத்தி விட்டாய்” என்று அழுதுகொண்டிருந்த தன் குழந்தைகளைக் காட்டியது ப்ராங்கி.

“நான் நீர் அருந்தும்போது அவர்கள் குறுக்கே வந்துவிட்டார்கள்” என்றது டிப்லர் மிகச் சாதாரணமாக.

 “அவர்கள் விபரமறியாத சிறு பிள்ளைகள் நீதானே கவனமாக இருக்க வேண்டும்?” என்றது ப்ராங்கி.

 “அடடா ரொம்பப் பேசாதே நான் நீர் அருந்துகையில் எனக்கு இடைஞ்சலாக வந்தது அவர்களின் குற்றம்” என்று குரலை உயர்த்தியது டிப்லர்.

“கவனக் குறைவாக இருந்துவிட்டு மேலும் உன் தரப்பில் தவறில்லை எண்பது போலப் பேசுகிறாயே?”

“போதும் நிறுத்து. நானும் என் தோழிகளும். இது போல் பல நீர் நிலைகள் கண்டு கடந்து வந்தவர்கள். எனக்கு நீ கவனத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். நீயும் உன் பிள்ளைகளும் இந்த அழுக்கு சேற்றுப் பகுதியை விட்டால் வேறிடம் அறியாதவர்கள்.”

பதிலுக்கு பதில் பேசும் டிப்லரிடம் பேசிப் பயனில்லை என்றுணர்ந்தது ப்ராங்கி. தன் காயப்பட்ட குழந்தைகளை அழைத்து கரையோரம் இல்லாமல் தூரமாகச் சென்று விளையாடும்படி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர எண்ணியது.

“நாளை நானும் என் தோழிகளும் இங்கே வந்து நீராடிவிட்டு புறப்படுவோம். அப்போது நீயும் உன் பிள்ளைகளும் இன்றுபோல வந்து தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கட்டளையிட்டுச் சொன்னது டிப்லர்.

அமைதியாகச் சென்ற ப்ராங்கியை வீணாக வம்பிழுப்பதுபோல இருந்தது டிப்லரின் கட்டளை. ப்ராங்கி மௌனம் களைந்து, “நீங்கள் வந்து நீராடிவிட்டு செல்லுங்கள் அதற்காக நாங்கள் இருப்பது தொந்தரவு என்று எப்படி நீ சொல்லலாம்?” என்று படபட வென தன் ஆதங்கத்தைக் கொட்டியது.

“ஏய் … நாங்கள் ஒரு புதிய பந்தயத்திற்கு தயாராகிறோம். எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் முழு கவனத்துடன் நாங்கள் செயல்படவேண்டும். உனக்கு பந்தயம் என்றால் என்னவென்று தெரியுமா? எப்படித் தெரியும்? பறப்பதற்கு உன்னிடம் இறக்கைகள் இருந்தால்தானே நீ பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும்? உன் அழுக்கு நிறமெங்கே … என் வெண்மை நிறமெங்கே … என் அழகுக்கும் திறமைக்கும் நீ சிறிதும் இணை இல்லை. வழியை விடு … சொன்னதை கவனத்தில் கொள்” என்று சொல்லிவிட்டு பட படவென சிறகடித்துப் பறந்தது டிப்லர்.

அன்று முழுவதும் அமைதியற்ற மனநிலையில் திரிந்து கொண்டிருந்தது ப்ராங்கி. மாலை நேரம். சூரியன் தன் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தான். மௌனமாகக் கரையோரம் அமர்ந்திருந்தது ப்ராங்கி. முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. மீலு முதலை வசிக்கும் ஆற்றுப்பகுதியில்தான் ப்ராங்கியும் வசித்து வருகின்றது. தனது முதுகுச் சவாரிக்கு விலங்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மீலு சலனமில்லாமல் அமர்ந்திருக்கும் ப்ராங்கியைக் கண்டது.

“ஏய் ப்ராங்கி … எப்பவும் மகிழ்ச்சியா துள்ளிக் குதிச்சிட்டிருப்ப… இப்ப என்ன … முகத்தை உம்முன்னு வச்சிருக்க? உன் குழந்தைகள் எல்லோரும் நலம்தானே?” என்று ப்ராங்கியின் மௌனத்தை விசாரித்தது மீலு.

“என் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் மீலு …” என்று கூறிவிட்டு சற்றுநேர மௌனத்திற்குப் பின் “ஏன் மீலு, நான் ரொம்ப அசிங்கமா, விகாரமா இருக்கேன் இல்ல?” என்று கேட்டது. விட்டால் கண்ணீர் விட்டு அழுதுவிடும் அளவிற்கு ப்ராங்கி தனக்குள் சோகத்தைப் பொத்தி வைத்திருந்ததைப் புரிந்துகொண்டது மீலு. ப்ராங்கி கேட்ட கேள்விக்கு என்ன பதில்சொல்வதென்று தடுமாறியது, காரணம் ப்ராங்கி எப்போதும் போலத்தான் இப்போதும் இருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மன உளைச்சல் என்றறிய முற்பட்டு, “நீ ஒண்ணும் அப்படி இல்ல … சரி நான் கேட்பதற்கு பதில் சொல்”

“என்ன?” என்று சோகம் மாறாமல் வினவியது ப்ராங்கி.

“திடீர்னு உனக்கு ஏன் இந்த மனக்குழப்பம்?” என்று கேட்டது மீலு.

சிறிய மௌனத்திற்குப் பிறகு அன்றையதினம் காலைப் பொழுதில் ஆற்றங்கரைக்கு புதுவரவாக வந்த வெண்புறாவான டிப்லரைச் சந்தித்த கதையைச் சொல்லத் தொடங்கியது ப்ராங்கி. “இன்று காலை வரை எனக்கு இந்த குழப்பம் இல்ல மீலு. அந்த டிப்லர்தான் அவள் மிகவும் அழகானவள் என்றும், பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசு வாங்குவாள் என்றும் சொல்லி, நான் அழகில்லாதவள் என்றும் போட்டி பந்தயங்களில் பங்கெடுக்கும் திறனற்றவளேன்றும் சொன்னாள்.  யோசித்தேன், டிப்லர் சொல்வதும் உண்மைதானே. அவள் எவ்வளவு வெண்மையாக இருக்கிறாள் தெரியுமா? அப்படியே நிலாவில இருந்து இறங்கி நேரே இந்தக் கரைக்கு வந்தவள் மாதிரி இருந்தாள். என்னைப்பார் சேறும் சகதியோடும் செடி கொடிகள் மண்டிய இந்த ஆற்றோரம் வாழ்ந்து கொண்டு இருப்பதால் என் புறத்தோலும் ஏறக்குறைய அந்த அழுக்கு நிறத்திலேயே இருக்கிறது. மேலும் அவள் அளவுக்கு உயர உயரப் போகவோ பல மணிநேரங்கள் தொடர்ந்து பறக்கவோ என்னிடம் இறக்கைகள் கிடையாது. இருந்தால்தானே பந்தயங்களில் பங்கெடுக்க முடியும்?” என்று கூறி புன்னகை மறந்த தன் பார்வையை மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் மீது செலுத்தியது.

ப்ராங்கி சொன்னவற்றை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மீலு பதில் பேசத் தொடங்கியது. “ப்ராங்கி, இப்பொ நான் எது சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை உனக்குப் புரியாது, மாறாக தற்காலிகமாக உனக்கு ஆறுதல் சொல்வது போலத்தான் தோன்றும். உன் மனமும் அமைதி கொள்ளாது. ஆனால், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல். டிப்லர் நாளை இங்கே வருவாளா?”

“ஆமாம். அவள் ஒரு பந்தயத்திற்காகப் பறந்து வந்தவள் நீர் அருந்துவதற்காகக் காலையில் இங்கே வந்தாள். இந்த இடத்தில தண்ணீர் நிறைய இருப்பதைக் கண்டுவிட்டு தன் தோழிகளோடு நாளை மீண்டும் இங்கே நீராட வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறாள்.”

“சரி … உனக்கும் டிப்லருக்கும் எப்படி பேச்சு தொடங்கியது, என்னென்ன பேசினீர்கள் என்பதை தொடக்கத்திலிருந்து சொல்வாயா?” என்று கேட்டது மீலு.

“உன்னிடம் சொல்லாமலா … சொல்கிறேன் கேள்” என்று தொடங்கிய ப்ராங்கி காலையில் தனக்கும் டிப்லருக்கும் இடையில் நடந்த உரையாடல், குழந்தைகளுக்கு டிப்லரால் ஏற்பட்ட காயம், தனது கோபம், கொந்தளிப்பு, ஆதங்கம், டிப்லர் குறையாகச் சொன்ன தன் அழகு, நிறம், தன் இருப்பிடம் மற்றும் டிப்லரின் பந்தயம், தோழிகள், டிப்லரின் கட்டளை என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தது. நிறைவாக, “ஏன் மீலு, சேற்றுப் பகுதியில் வாழ்வது கேவலமா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டது ப்ராங்கி.

“அப்படியொன்றும் இல்லை. இயற்கையில் எல்லா இடங்களும் சமம்தான். மேலே பறந்து களிக்கும் டிப்லர் போன்றோரின் பார்வையில் வேண்டுமானால் பேதங்கள் இருக்கலாம். உயிர்கள் வாழும் இடங்களில் பேதங்கள் இல்லை.”

“ம்… நீ சொல்லிவிட்டாய். கேட்டுக்கொண்டிருந்த என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை” என்று ப்ராங்கி சொன்னபோது அதன் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

“அழாதே ப்ராங்கி. நாளை டிப்லர் வரட்டும். பேசுவோம்” என்ற மீலு தனது முதுகுச் சவாரிக்கு பயணிகள் யாரும் வருகிறார்களா என்று பாதையைப் பார்த்தது. ப்ராங்கி தன் தலைப்பிரட்டைகளை உணவு உண்ண அழைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் அதிகாலையில் சொன்னதுபோல தன் தோழிகளுடன் ஆற்றங்கரைக்கு நீராட வந்தது டிப்லர். டிப்லரும் அதன் தோழிகளும் நீர்நிலையின் அருகில் வரிசையாக நின்று நீராட ஆயத்தமானார்கள். இதற்காகவே காத்திருந்த மீலு அங்கே வந்து, “வாருங்கள் விருந்தாளிகளே, … நீங்களெல்லாம் யார் … உங்களை நான் இதுவரை கண்டதில்லையே?” என்றது.

“என் பெயர் டிப்லர். நாங்கள் பந்தயப் பறவைகள்” என்றது டிப்லர்.

“சரி சரி… என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”

“நாங்கள் நீராட வந்திருக்கிறோம். நீராடிவிட்டு புதிய பந்தயத்திற்கு புறப்படப் போகிறோம்.”

“மகிழ்ச்சி… உங்கள் பந்தயம் சுகமாக இருக்கட்டும். ஆனால், இங்கே நீங்கள் நீராடுவதற்கு முன் எங்கள் ராணியாரிடம் அனுமதி பெற வேண்டும் பெற்றுவிட்டீர்களா?” என்று கேட்டது மீலு.

“ராணியா… யார் அது? அனுமதி பெறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாதே” என்றது டிப்லர்.

“கொஞ்சம் பொறுங்கள் எங்கள் ராணியார் இங்கேதான் இருக்கின்றார் நான் அழைக்கிறேன்” என்று கூறி “ப்ராங்கி மகாராணியாரே, கொஞ்சம் வெளியே வாருங்கள்” என்று உரக்கச் சொன்னது மீலு.

இதனைச் செவிகளில் வாங்கிய ப்ராங்கி வியப்புடன் தன் இருப்பிடத்திலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. டிப்லர் மற்றும் அவளின் தோழிகளையும் மீலுவையும் கண்டு அப்படியே நின்றது ப்ராங்கி.

மீலு தொடர்ந்தது, “மகாராணி, இவர்கள் இங்கே நீராடவேண்டுமாம் நீங்கள் அனுமதிப்பீர்களா?”

மீலுவின் இந்தக் கேள்வியால் குழப்பமடைந்தது ப்ரங்கி. தான் ராணியுமில்லை தன்னுடைய அனுமதியும் தேவையில்லை இருந்தாலும் மீலு ஏன் இப்படிக் கேட்கிறான் என்று ஒரு கணம் யோசித்தது, சரி இதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று புரிந்துகொண்ட ப்ராங்கி, “அதை நீ கேட்டால் போதுமா? நீராட வந்தவர்களல்லவா என்னிடம் கேட்க வேண்டும்!” என்றது.

டிப்லரும் குழப்பம் கொண்டது. மீலுவிடம், “இவர்தான் உங்கள் ராணியா? நான் நேற்று இவர்களிடம் பேசினேன் ஆனால், அப்போது அவர்கள் இதைச் சொல்லவில்லையே” என்றது.

“எங்கள் ராணியார் தற்பெருமையை விரும்ப மாட்டார்கள். நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்” என்றது மீலு.

ப்ராங்கியிடம் தயங்கித் தயங்கி வந்தது டிப்லர். “வணக்கம் ராணியே” என்று தலை வணங்கியது “மன்னிக்க வேண்டும், நேற்று நான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். இப்போது நாங்கள் இங்கே நீராட அனுமதி தருவீர்களா?” என்று கேட்டது.

“யாரையும் உதாசீனப்படுத்தும் பழக்கம் எனக்கில்லை. நீங்கள் நீராடி விட்டுச் செல்லலாம்” என்று சுருக்கமாகப் பதில் சொன்னது ப்ராங்கி.

டிப்லரும் தோழிகளும் நீராடிவிட்டு, மீலு மற்றும் ப்ராங்கி இருவரிடமும் புறப்படும் முன் விடை பெற்றார்கள். அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்கள் மீலு மற்றும் ப்ராங்கி.

புறப்பட்ட சில நொடிகளில் தங்களின் சிறகுகளால் காற்றை உந்தித்தள்ளி மேலே மேலே பறந்து கொண்டிருந்தார்கள் டிப்லர் மற்றும் குழுவினர். டிப்லரின் சிறகுகள் அசைந்தாலும் சிந்தனை அசையாமல் நேற்றைய நிகழ்வை அசைபோட்டது “நேற்று நான் இத்தனை பேசியதற்கு என்னை அந்த ஆற்றில் நீராடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம் ஆனால், ப்ராங்கி அப்படிச் சொல்லவில்லை. பார்வைக்கு எளிமையாக இருந்தாள் ப்ராங்கி என்று என்னவெல்லாம் பேசிவிட்டேன். இனியொரு முறை யாரிடமும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே பறந்தது டிப்லர்.

டிப்லர் குழுவினர் சென்ற பிறகு மீலுவிடம் கேட்டது ப்ராங்கி “ஏய்.. மீலு, ஏன் என்னை ராணி என்று அவர்களிடம் சொன்னாய்?”

“நேற்று நீ அழுது கொண்டிருந்தாய், இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். இந்த மகிழ்ச்சியை உன்னிடம் பார்க்கத்தான் அப்படிச் சொன்னேன்” என்றது மீலு.

“ஆனால், நீ சொன்னதில் உண்மை இல்லையே?”

“உண்மை இல்லை என்பது உனக்கும் எனக்கும் தெரியும், டிப்லருக்குத் தெரியாது. திரும்பிச் செல்லும்போது டிப்லர் ஒரு பாடம் படித்திருக்கும்” என்றது மீலு.

“அது என்ன?”

“நேற்று உன்னை உதாசீனப் படுத்திப் பேசிய அதே டிப்லர் இன்று உன்னை மதித்துப் பேசினாள். டிப்லருக்கு நீ யார் என்பது அவசியமில்லை அவளுடைய மதிப்பு உயர்ந்தது என்று உன்னிடம் காட்டவேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்தது. இன்று நீயும் மதிப்பில் உயர்ந்தவள் என்று தெரிந்தபோது உன்னிடம் பணிந்து பேசினாள்” என்றது மீலு.

“நானும் ஒன்றைப் புரிந்துகொண்டேன் மீலு”.

“அது என்ன?”

“டிப்லரின் மதிப்பைக் காண்பிக்கத்தான் அவள் என்னை உதாசீனப் படுத்தியிருக்கிறாள். அப்படியானால் உண்மையில் என்னிடம் ஒரு குறையுமில்லை. இது புரியாமல் நேற்று முழுவதும் அழுதுகொண்டே என் பொழுதை வீணாக்கிவிட்டேன்” என்று சிரித்தது ப்ராங்கி.

[email protected]

The post ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார்.  ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய கைத்தடி மட்டும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது.  ஆச்சியிடம் அதைக் கொடுப்பதற்காக கைத்தடியை எடுத்துக்கொண்டு நான் சென்றேன்.  எப்போதும் அவர் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு ஓடிச்சென்று பார்த்தேன். ஆனால் அங்கு அவர் இல்லை.  பின்னர் வைக்கோல் வைத்திருக்கும் களத்திற்குச் சென்றேன். அங்கும் ஆச்சி இல்லை.  தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்று […]

Source

  •  

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான். பின்பு பல் துலக்கி, குளித்து முடித்து, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “சீக்கிரம் சாப்பிட்டு முடி அருள். இந்த இட்லியைச் சாப்பிட்டதும் வேகமாகப் பள்ளிக்குப் போகணும்” என்றார் அருளின் அம்மா. ஆனால் அருள் ஒவ்வொரு வாயாக மெதுவாக மென்று தின்று கொண்டிருந்தான்.  “பள்ளிக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு […]

Source

  •  

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ் விதையை யார் இங்கே வைத்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அமீரா. அமீராவின் அம்மாவும், தாத்தா முஹமதும் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.  அமீரா கையில் வைத்திருந்த ஆலிவ் விதையைப் பார்த்ததும், “இதுக்காகவா எழுந்தவுடன் ‘அம்மா, அம்மா’ என்று ஓடிவந்தாய்?” என்று கேட்டார் […]

Source

  •  

சின்னஞ்சிறு பெண்

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில்  வெளிவந்துள்ளது. மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் இதனைச் சிறார் வாசிக்கக் கூடிய எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

சிறுவர்களைக் கவரும் விதமாக மிக அழகான அட்டைப் படத்துடனும் சிறப்பான வடிவமைப்புடனும் சென்னை வானம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 13+ வாசிக்க ஏற்ற நாவல்.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

The post சின்னஞ்சிறு பெண் first appeared on சுட்டி உலகம்.

  •  

தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்

அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை பொருட்கள் செய்வதும், கட்டிடங்களுக்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதும் அவரது தொழில். அதற்காக மாஞ்சோலை மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அருகே ஒரு அடர்ந்த வனப் பகுதியை இருந்தது. அந்த மலைக் குன்றில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள் இருந்தன. அக்கம் பக்கத்தில் […]

Source

  •  

சூசனாவுக்கு என்ன நடந்தது?

 

சூசனாவுக்கு என்ன நடந்தது?

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

ஒரு நாள் சின்னு நாய்க்குட்டிக்கும் நாய்க்குட்டி பூனைக்குட்டிக்கும்  பூனைக்குட்டி காக்காவுக்கும் காக்கா கல்யாணிப்பசுவுக்கும் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது,

 கதைப்பாட்டி! கதைப்பாட்டி! ” என்று அழைத்தபடி சூசனா என்ற ஆட்டுக்குட்டி ஓடி வந்தது. நல்ல உச்சிப்பொழுது. கதைப்பாட்டி துள்ளி எழுந்தார்.

“ என்னாச்சு சூசனா..” என்று கதைப்பாட்டி பரபரப்புடன் கேட்டார். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும் சூசனாவைச் சுற்றி நின்றார்கள். சூசனா மூச்சிரைத்தபடி,

“ நான் சிங்கத்தின் வாயிலிருந்து கஷ்டப்பட்டு தப்பித்து வருகிறேன்..”

என்றது.

“” நீ எப்படி சிங்கத்தின் வாயில் போய் விழப்போனே? “ என்று பூனைக்குட்டி கேட்டது.

“ நானாய் போய் விழலை.. ஆல்பெர்ட் எல்லா ஆடுகளையும் ஆற்றங்கரையில் மேய்ப்பதற்காகக் கொண்டு போனான்.. நான் ஆற்றில் தவறி விழுந்து விட்டேன்.. ஆல்பெர்ட் கவனிக்கவில்லை..”

“ பிறகு? “ கசுமலா காக்காவுக்குப் பரபரப்பை அடக்கமுடியவில்லை.

“ முதலில் மூழ்கி எழுந்தபோது ஒரு உழக்கு கிடைத்தது.. இரண்டாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு தொரட்டி கிடைத்தது. மூன்றாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு கொட்டு கிடைத்தது. நான்காவது தடவை மூழ்கி எழுந்தபோது ஒரு நீர்க்கோழி கிடைத்தது.

அப்படியே ஆற்றின் அக்கரைக்குப் போய் விட்டேன். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் ஒரு குகைக்குள் போய் விட்டேன். குளிரைப் போக்குவதற்காக தீ மூட்டிக் காய்ந்து கொண்டிருக்கும் போது வெளியிலிருந்து ஒரு சத்தம்.

“ உள்ளே யாரு? “

“ அப்புறம் ? “ என்று நாய்க்குட்டி கேட்டது.

“ யார் வெளியே? ” என்று நானும் கேட்டேன்.

அப்போது சிங்கம் வெளியிலிருந்து முழங்கியது,

“ நான் சிங்கராஜா..”

நான் சொன்னேன்,

“ அப்படியா.. நான் சூசனா ராணி..”

“ எங்கே உன்னுடைய கையைக் காட்டு..” என்று சிங்கம் வெளியிலிருந்து கேட்டது. நான் தொரட்டியை நீட்டினேன்.

“ உன் வயிறைக் காட்டு..”  என்ரது சிங்கம். நான் கொட்டை வெளியில் காட்டினேன்.

“ உன் குரலைக் கேட்கட்டும்..” என்றது சிங்கம். நான் நீர்க்கோழியின் கழுத்தைப் பிடித்து இறுக்கினேன்.

அது “ க்வா க்வா க்வா க்வா..” என்று அலறியது.

சிங்கம் பயந்து ஒரே ஓட்டமாய் ஓடி விட்டது. நான் அந்த நேரத்தில் ஆற்றின் இக்கரைக்கு நீந்தி வந்தேன். மூச்சிரைத்துக் கொண்ட சூசனாவை சின்னு கட்டிப்பிடித்தாள். நாய்க்குட்டி சின்னுவைக் கட்டிப்பிடித்தது. நாய்க்குட்டியை பூனைக்குட்டி கட்டிப்பிடித்தது.

பிறகு எல்லாரும் வட்டமாக நின்று ரிங்கா ரிங்கா ரோசஸ் பாடி விளையாடினார்கள்.

நன்றி - புக் டே

  •  

கசுமலா காக்காவின் கவலை


கசுமலா காக்காவின் கவலை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



    ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,

“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..

      கதைப்பாட்டி காக்கா கவலையோடு கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,

“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “ என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப் பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.

கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,

“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி சிறகுகளடித்து பறந்தது.

கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள் பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே குரலில்,

“ ஏன் காக்கா இப்படி கரையுது கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.

“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”

“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.

“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும் சொன்னது.

அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னார்,

“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்.. அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னாள்.

கசுமலா காக்கா அதைச் செய்தது. சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி. தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.

தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின் வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.

கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!

நன்றி - புக் டே 



 


  •  

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

 

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



    சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி விளையாடும் இடத்திற்கு வந்து சும்மா விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது நீலகண்டன் நரிக்கு வழக்கமாகி விட்டது.. மெஹெர்பா கோழி பற்றிய எண்ணம் எப்போதும் மனதில் உண்டு. அவளைக் கொன்று சாப்பிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்? அதுதான் கவலை.

 

அப்படியே கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்த இடத்திற்கு வந்து சென்று கல்யாணியுடன் நட்பாகி விட்டது..  எல்லா பழைய கதைகளையும் சொல்லும்.. கல்யாணிப்பசு புல் சாப்பிட எங்கு சென்றாலும், அது நரியைத் தன் முதுகில் சுமந்து செல்லும்.

அதைப் பார்த்த கதைப்பாட்டி சொன்னாள்:

 

" கல்யாணி வேண்டாம்.. அது ஒரு குள்ளநரி, அது ஏமாற்றிவிடும்..."

 

கல்யாணப் பசுவின் காதில் குள்ளநரி சொன்னது.

 

" கதைப்பாட்டிக்கு வயதாகி விட்டதல்லவா.. அதனால் அதையும் இதையும் சொல்லும்..”

 

கல்யாணிப்பசுவும் அப்படி நினைத்தாள், ஒருவேளை நீலகண்டன் நரி சொல்வது சரியாக இருக்கலாம். குள்ளநரி ஒரு சாது என்று நினைத்தாள்.

 

அப்படி ஒரு நாள் அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். கல்யாணிப்பசு புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது. குள்ளநரி ஒரு காட்டுக் கோழியைக் கொன்று சாப்பிட்டது. நரிக்கு வயிறு நிரம்பி விட்டது.. உடனே குள்ளநரி திரும்பிப் போகலாம் என்று ரகளை செய்தது.. புல் சாப்பிட்டுக் கொண்டிருந்த் கல்யாணிக்கு பாதி வயிறு கூட நிரம்பவில்லை.. நரிக்கு கோபம் வந்தது.

 

இந்தப் பசுவின் அகங்காரத்தை இன்றுடன் முடிவுக்குக் செய்ய வேண்டும்..

     

குள்ளநரி சொன்னது.

 

" எனக்கு சாப்பிட்ட பிறகு ஊளையிடணும்..."

     

கல்யாணிப்பசு பயந்து விட்டது.-

     

"ஐயோ, வேண்டாம், குள்ளநரி,"

     

கல்யாணிப்பசு பணிவுடன் கெஞ்சினாள் –

     

" ஊளையிட்டால், சிங்கம் வரும், இல்லையா? ஒரே அடியில் என்னைக் கொன்று உடனே சாப்பிட்டு விடுமே?"

     

குள்ளநரி, அதைக் கேட்காதது போல நடித்தது. பிறகு பெரும் ஊளையிட்டது.. உடனே, காடதிர சிங்கத்தின் கர்ஜனை கேட்டது., நரியைத் தூக்கிக்கொண்டு பசு, ஆற்றில் நீந்தத் தொடங்கியது. இருப்பினும், நரி செய்த சதியை நினைத்து கல்யாணிப்பசுவுக்குக் கோபம் வந்தது.

    ஆற்றின் முக்கால்வாசி தூரம் நீந்திச் சென்றதும், பசு,

 

 "எனக்குக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது, உன் உடல் முழுவதும் காட்டுக் கோழியின் நாற்றம் வீசுகிறது"   என்றது.

 

நரி பயத்தில் கத்தியது.

 

 " ஐயோ, பசுத்தாயே, நான் மூழ்கிச் செத்துப் போய் விடுவேனே..”

     

கல்யாணிப்பசு அதைக் கேட்காதது போல, வசதியாக ஆற்றில் முங்கி எழுந்தது. நரி ஆற்றில் விழுந்து நிறைய தண்ணீரைக் குடித்தது. கடைசியில், கதைப்பாட்டி  சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சேர்ந்து வீசிய கயிற்றைக் கடித்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தது.

     

கரைக்கு ஏறிய நரிக்கு கதைப்பாட்டி கம்பினால் ஒரு அடி கொடுத்தார்.  பூனைக்குட்டி அதன் வாலைக் கடித்தது. நரி காட்டுக்குள் ஒரே ஓட்டம் ஓடியது. அதைப் பார்த்து, மெஹெர்பா கோழி

     " கொக்கொ கொக்கொ கொக்கொ” என்று பாடி ஆடியது.

நன்றி - புக் டே

 

 

  •  

ஒரு நாள்

 

ஒரு நாள்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



     

ஒரு நாள், சின்னு ஒரு அழகான, வண்ணமயமான சட்டையில் ஓடி வந்தாள். விளையாடத் தயாராக இருந்த நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் பார்த்து சின்னு,

 "அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு மண்ணில் விளையாடக் கூடாதுன்னு சொன்னாங்க"

என்றாள். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் அதிர்ச்சியடைந்தன. இருவரும் ஒரே குரலில்

 " ஏன் அப்படி?" என்று கேட்டனர்.

 "நான் கல்யாணவீட்டுக்குப் போகணும். அதுதான் நல்ல உடை உடுத்திட்டு வந்தேன்"

என்றாள் சின்னு.

     

நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவைச் சுற்றி நடந்து அவளுடைய ஆடைகளைப் பரிசோதித்தன. அது சரி தான். சிவப்பு பூக்கள் கொண்ட வெள்ளை உடை. அழகான உடை.. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

     

நாய்க்குட்டிக்கும் பூனைக்குட்டிக்கும் உடைகள் இல்லை. அப்போது மெஹெர்பா  கோழி வந்து சொன்னது.

"வீட்டுக்குப் போ, சின்னு. நீ இவர்களோட விளையாடுனா அழுக்காகிடுவ."

     

சின்னு சோகமாக அங்கேயே நின்றாள். கதைப்பாட்டியும் சொன்னார்.

 

"அம்முக்குட்டி, கல்யாணம் முடிஞ்சு வா, அப்புறம் விளையாடலாம்."

     

நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் இரண்டு கால்களில் எழுந்து நின்று,

 

" நாங்களும் கல்யாணத்துக்கு வருவோம் " என்றன..

     

"ஐயோடா!" என்று கசுமலா காக்கா ஏளனம் செய்தது..

     

புல்லைத் தின்றுகொண்டிருந்த கல்யாணிப்பசு கூட அதைக் கேட்டுச் சிரித்தது. நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சோகமாக இருந்தன.

 

 "சின்னு திருமணத்திற்கு எங்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை, கதைப்பாட்டி?"

 

என்று அவை கேட்டன.

     

"நம் அனைவருக்கும் இருப்பதற்கும் வாழ்வதற்கும் ஒவ்வொரு இடங்கள் உள்ளன அங்கேயே இருப்பது நல்லது." என்று கதைப்பாட்டி சொன்னார். அதைக் கேட்ட, நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் அப்படியே நின்று விட்டன.

 

" விலங்குகளுக்குக் காடும், மனிதர்களுக்கு, நாடும் இருக்கின்றன " என்றார் கதைப்பாட்டி.

     

"நான் கல்யாணத்துக்குப் போகணும்"

     

என்று நாய்க்குட்டி பிடிவாதம் பிடித்தது.  அப்போது, பிரகாசமான வெயிலில், மழை பெய்யத் தொடங்கியது. கதைப்பாட்டி அதை நாய்க்குட்டிக்குக் காட்டி,

 

"பார், இது நரிக்குக் கலியாணம் நடக்குது.. அது தான், மழையும் வெயிலும் சேர்ந்து வருது நீங்க எல்லாரும், நீலகண்டன் நரியோட கல்யாணத்துக்குப் போங்க." 

என்று கதைப்பாட்டி சமாதானப்படுத்தினார்

     

"ஐயோ, நான் மாட்டேன்!" என்று கூறிவிட்டு மெஹெர்பா ஓரே ஓட்டம்........!


நன்றி - புக் டே

 

 

 

  •  

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

 

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

உதயசங்கர்




குழந்தைமை என்பதே மனிதனோ விலங்குகளோ பறவைகளோ மூளையின் செயல்பாடுகளான அறிவும் மனமும் உருப்பெரும்போது நிகழும் அற்புதங்கள். அனுபவங்களின் வழியே கிடைக்கும் உணர்வுகள் திரண்டு அறிவாக மாறுகிறது. ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடென்பது வெகுளித்தனமாகவும், கவித்துவமாகவும் அபத்தமாகவும் அர்த்தமில்லாததாகவும் தர்க்கமில்லாதாதாகவும் முக்கியத்துவமில்லாததாகவும் இருக்கும் நிலையையே நாம் குழந்தைமை என்கிறோம். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தீவிர ஒருமை நிலையில் தான் குழந்தைமை தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளின் சொல்லும் நடவடிக்கைகளும் கணநேரத்தரிசனங்களைத் தரும். அவற்றைப் பார்ப்பதற்கோ உணர்வதற்கோ அறிவதற்கோ நேரமில்லாத பெரியவர்கள் அலட்சியப்படுத்திக் கடந்து போய்விடுவார்கள். கவிஞர்களும், எழுத்தாளர்களுமே அந்தக் கணநேரத்தரிசனங்களைக் கவிதைகளாக, கதைகளாக மாற்றுகிறார்கள். அப்படி கணநேரத்தரிசனங்களின் தொகுப்பு தான் கவிஞர். சலோனியா லியோ கமலத்தின் கவிதைகள்.

பொதுவாக சிறார் இலக்கியத்தை மூன்று வகைமைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளே எழுதுகிற குழந்தைப்படைப்புகள், குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுகிற படைப்புகள், குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற படைப்புகள் என்று சொல்லலாம். இதில் மூன்றாவது வகையான குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற இலக்கியப்படைப்புகளை கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, என்று தொடங்கி தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் வரை நீளும். இதில் குழந்தைகளை மையப்படுத்தி நவீன கவிதைகளை எழுதுபவர்களாக, பழ.புகழேந்தி, முகுந்த்நாகராஜன், அ.வெண்ணிலா, ந.பெரியசாமி, ஆகியோரை முக்கியமானவர்களாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்தச் சிறப்பான கவிதைத்தொகுப்பின் மூலமாக சலோனியா லியோ கமலமும் இணைகிறார்.

குழந்தைகள் எதையும் திட்டமிடுவதில்லை. ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதில்லை. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இருப்பதில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். அதில் சமாதானமடைகிறார்கள். வெற்றிடங்களை வேறொன்றால் நிரப்புகிறார்கள். அந்தக் குழந்தையின் மனதை கவிஞர் துல்லியமாக வரைகிறார்.

கங்காரு படம் வரைந்த

அனாதைக் குழந்தை ஒன்று

கங்காருவின் பையில்

தனது உருவத்தை வரைந்து

மகிழ்கிறது.

தாய்மைக்கான ஏக்கத்தை குழந்தையின் வரைதலின் மூலம் நிரப்பிக்கொள்கிறது. பெரியவர்கள் எதையும் பயன் நோக்கில் தான் அணுகுகிறார்கள். ஆனால் குழந்தைகள் வெகுளியாய் எல்லாவற்றின் மீதும் அன்பாய் இருக்கிறார்கள்.

‘ ச்சீ போ ‘ என நான் துரத்திவிடும்

காக்கையிடம்

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா எனச்

சொல்லி அனுப்புகிறது குழந்தை.

அனைத்தையும் அழகாகப்பார்க்கும் குழந்தைகளிடம் பெரியவர்கள் தானே பேதங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

குழந்தைகளின் விரல்களால்

வரையப்படும்போது

பூக்கூடையும் மீன்கூடையும்

ஒரே மணத்தைப் பெற்று விடுகிறது.

 

குழந்தைகளின் விளையாட்டில் பொம்மைகளும் ஒன்று தான் சோப்பும் ஒன்று தான். பொம்மைகளைக் குளிப்பாட்டுவதைப் போலச் சோப்பையும் குளிப்பாட்டுகிறார்கள். சோப்பு கரையக் கரைய அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இத்தகைய அவதானிப்புகளைக் கண்டடைய முடியும்.

குளியல் சோப்புகளைக்

குளிப்பாட்டி

குளிப்பாட்டி

மகிழ்ச்சியில்

கரைந்து போகின்றன

குழந்தைகள்.

 

எப்போதுமே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இல்லாமையை அவர்கள் வார்த்தைகளால், செயல்களால், பாவனைகளால் மாற்றி இருப்பதாக நினைக்கிறார்கள். தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் இருப்பதை நினைத்து திருப்தியடைகிறார்கள்.

குருவிக்கூட்டை

குருவி வீடு என்றும்

எலிப்பொந்தை

எலி வீடு என்றும்

சிங்கக்குகையை

சிங்கவீடு என்றும்

எறும்புப்புற்றை

எறும்பு வீடு என்றும்

சொல்லி மகிழ்கின்றன

தெருவோரம் படுத்துறங்கும்

திக்கற்ற குழந்தைகள்.

 

இந்த உலகினைப் படைக்கும் வல்லமை மிக்கதாய் கடவுளைக் கற்பனை செய்த மனிதன் இத்தனை கடவுள்களையும் மதங்களையும் படைத்திருக்கிறான். ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது தெரியுமா?

அம்மாவின் இடுப்பில்

இருக்கும் குழந்தை

பல்லக்கில் வலம் வரும்

தெய்வங்களைப்

பெரிது படுத்துவதே

இல்லை.

 

உண்மையான தெய்வம் அருகில் இருக்கும்போது எதற்காக பொம்மைகளை வணங்க வேண்டும்?

வெறுப்பு, பகை, விரோதம், குரோதம், மனமாச்சரியங்களைப் போற்றிப்பாதுகாப்பது பெரியவர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒரே கணத்தில் வெறுப்பின் இடத்தில் அன்பை கொண்டு வந்து வைப்பார்கள். பகையை நேசமாக மாற்றி விடுவார்கள். காய் விடும்போதே பழத்துக்கான விரல்களையும் சேர்த்தே வைத்திருப்பார்கள்.

பேய்களின் கொம்புகளை

எரேசர் கொண்டு

அழித்து விட்டு

பென்சில்களால்

இறக்கைகள் வரைந்து

பேய்களை

தேவதைகளாக்கி விடுகின்றன

குழந்தைகள்

மிகச்சுலபமாக.

 

என்று எழுதும் கவிஞரின் மனது குழந்தையின் மனது தானே. அதனால் இத்தனை அழகாகக் கவிதைகளை எழுத முடிகிறது.

குழந்தையைத் தூங்க வைத்து விட்டு

எப்போதும்போல்

விழித்திருக்கிரது நிலவு

இயற்கையும் கூட தாய்மையின் குணங்களைக் கொண்டிருப்பதாக அதுவும் குழந்தைகளின் பார்வையில் சொல்லும் போது கூடுதல் அழகு பெறுகிறது.

இப்படி அனிச்சம் தொகுப்பு முழுவதும் புதிய தரிசனங்கள், கண்டடைதல்கள் உணர்வுகள், காட்சிகள், படிமங்கள் நிறைந்திருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல சின்னஞ்சிறு கவிதைகள் குழந்தைகளைப் பற்றிய நம்முடைய புரிதல்களை மேன்மையுறச் செய்கின்றன.

இன்னும் நிறைய எழுதுங்கள். 

குழந்தைகளின் மெசையாவாக இந்த உலகத்துக்கு நிறையச் சொல்லுங்கள்


( அனிச்சம்பூ நூலுக்கு எழுதிய முன்னுரை )


 

 

  •  

வண்ண வண்ணக்கதைகள் சிறகடிக்கும் வானம்.

 

வண்ண வண்ணக்கதைகள் சிறகடிக்கும் வானம்.

உதயசங்கர்



சிறார் இலக்கியம் இலக்கிய வானில் சிறகுகள் விரித்து பறக்கத் தொடங்கியிருக்கிற காலமிது. இதுவரை சொல்லப்பட கதைகளையே மறுபிரதியோ, மலிவான பிரதியோ எடுத்து இதுதான் சிறார் இலக்கியம் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்த காலத்தில் புதிய காற்றென பல எழுத்தாளர்கள் புதிய கதைகளை எழுத வந்தார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளுக்குச் சொந்தக்காரர் ஞா.கலையரசி. தன்னுடைய தனித்துவமான கதைகளால் சிறார்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.

அவருடைய சூரியனைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதை சமகாலச் சூழலியலைப் பேசுகின்றன. பழங்காலக் கதையை சமகாலத்துக்கேற்ப மறுவாசிப்பு செய்து அவசியமான வழிகாட்டுதலைச் செய்கின்றன. எது அழகு? எது உயர்வு? என்பதைக் குறித்து விவாதிக்கின்றன. உருவத்தில் சிறியதாயினும் செய்யும் காரியத்தில் பெரியதாவதைக் குறித்துப் பேசுகின்றன. தனக்குக் கிடைத்த சிறப்பை மற்றவர்களுக்கும் பகிர்வதைப் பற்றிப் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதீதபுனைவையும் சமகால அறிவியலையும்  இணைத்துப் பேசுகின்றன. கானுயிர் நலன் குறித்து, வலசை வரும் பறவைகளின் சரணாலயம் அழிவதைக் குறித்துப் பேசுகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் வானவில்லின் வண்ணங்களைப் போல குழந்தைகளின் மனதில் பல உணர்வுகளைத் தூண்டும். அவை ஆனந்தம் தரும். அறிவூட்டும். ஆற்றுப்படுத்தும். நம்பிக்கையளிக்கும். குதூகலப்படுத்தும்.

மனிதகுலத்திற்கு குழந்தைகளின் மகிழ்ச்சியைத் தவிர வேறு என்ன வேண்டும்?

இந்தக் கதைகள் குழந்தைகளிடம் மகிழ்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துமென்று சொல்லி முடிக்கலாம்.

( சூரியனைத்தேடி சிறார் நூலுக்கு எழுதிய முன்னுரை )

  •  

இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் ராஜா ராணி கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்தானே? ஆம் என்றால் ஒரு ஹை ஃபைவ் கொடுங்கள்.  என்னது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் வீர தீர சாகசங்கள் நிறைந்த ராஜா கதையைவிட 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் இம்சை அரசரனின் கதைதான் உங்களுக்கும் அதிகம் பிடிக்குமா? அப்படி என்றால் இன்னொரு ஹை ஃபைவ் கொடுங்கள். மாயக் கண்ணாடி, அண்டாமழை, சூரியனின் கோபம், சுண்டெலியின் சிரிப்பு ஆகிய நூல்களின் வரிசையில் இதோ இன்னொரு புத்தகத்தைத் தந்துள்ளார் நமது உதயசங்கர் தாத்தா (எழுத்தாளர் உதயசங்கர்). தினம் […]
  •  

வரலாறு உங்களுக்கு வேப்பங்காயா? – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் பிடித்த பாடம் என்று ஒன்று இருந்தால், பிடிக்காத பாடம் என்றும் ஒன்று இருக்கும்தானே. அப்படி எனது பள்ளி நாட்களில் பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறுதான். வரலாறு பாடத்திலுள்ள வருடங்களும், வாயில் நுழையாத பெயர்களும் என்னை அதிகம் அச்சமூட்டின. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், நான் என் அம்மாவிடம் “அப்பாடா! இனிமேல் வரலாற்றை படிக்க தேவையில்லை. எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று கூறி மகிழ்ந்தேன். ஆனால் நான் வளர்ந்து […]
  •  

தமிழ்ச் சிறார் இலக்கியமும் சூழலியலும் (Eco-Criticism on Tamil Children Literature) – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் “கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில்(டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்), ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு: அது ரேச்சல் கார்சன் எழுதிய ‘மெளன வசந்தம்’. இப்புத்தகம் 1962 ஆம் ஆண்டு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் பிரதிகள் விற்றன. இந்தப் புத்தகம்தான் உலகிலுள்ள உயிரிங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பதை முதன்முதலில் எடுத்துச் சொன்னது.” (ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் […]
  •  

இலண்டனில் தமிழ்ப் பிள்ளைகள் வாசிக்கும் புத்தகங்கள் : சிறு பட்டியல்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இலண்டன் ரெட்டிங் பகுதியிலுள்ள எர்லி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைத்து ஒரு கதை சொல்லல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான அரங்கம், சரியான நேரத்தில் தொடக்கம், பெற்றோர்-குழந்தைகள் விளையாடும் அளவிற்கு இடம் என ஏற்பாடும் மிகவும் திருப்தியாக அமைந்தது. நிகழ்வினைத் தொடங்குவதற்கு முன்பு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் தாங்கள் சமீபத்தில் வாசித்த புத்தகங்களின் பெயர்களை எழுதி ஸ்டிக்கி நோட்ஸ் மூலம் ஒட்டுங்கள் என்று கூறியிருந்தேன். முதலில் சற்றே தயங்கினாலும், ஒரு தொடக்கம் கிடைத்தப் பிறகு குழந்தைகள் ஏகப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்தார்கள். அந்தப் […]
  •  

நூல் அறிமுகம் : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கடந்த சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி 2024) மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா? : தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடல். ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை வரலாற்று ஆசிரியருமான – மிச்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்களும் எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளருமான யமுனா ராஜேந்திரன் அவர்களும் விவாதித்தனர். […]
  •  

நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் வரும் சனி மாலை 3 மணிக்கு Trinity Centre, London E12 6SG மண்டபத்தில்…. நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் : நோக்கமும் அதன் பாதையும் நிகழ்வு விவரங்கள்…. லண்டன் விம்பம் நடத்தும் இரு நிகழ்வுகள் ——————————————————————— நிகழ்வு 1- தமிழ் சினிமா இன்றைய காலத்தை பிரதிபலிக்கிறதா? : தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடலும் கேள்வி பதிலும். ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை […]
  •  

ஈனி மீனி மைனி மோ – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் Eeny, meeny, miny, moe, Catch a tiger by its toe. If you want to let it go, Eeny, meeny, miny, moe. ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால் குழந்தைகள் உடனே பாடும் பாடலில் Inky Pinky Ponky போன்றே Eeny, meeny, miny, moe பாடலும் பிரபலமானது. இதுபோன்ற வாய்மொழிப் பாடல்களும் விளையாட்டுகளும் பெரியவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் இவை முறையான […]
  •  

இங்கிலாந்தின் சிறுவர் நாடோடிக் கதைகள் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் Folklore (நாட்டுப்புறவியல்) என்பது – வாய்மொழிக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், கிண்டல் கேலி நகைச்சுவை சொலவடைகள் என வாய்மொழியாகப் பல தலைமுறைகள் கடந்து மக்கள் மத்தியில் இருந்துவரும் விசயங்களைக் குறிக்கும் சொல். Folk என்பது மக்களிடையே புகழ்பெற்ற பழமையான பொருட்களை அல்லது கதைகளைக் குறிக்கிறது. Lore என்பது ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள் அல்லது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. இரண்டையும் இணைத்து புதிய சொல்லை 1846ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் வில்லியம் தாம்ஸ் என்பவர் […]
  •